உடனடிச்செய்திகள்
Showing posts with label சசிபெருமாள். Show all posts
Showing posts with label சசிபெருமாள். Show all posts

Friday, August 7, 2015

“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!” - தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை!

“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!”

மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் அவர்களின் உடலடக்கத்தின் போது, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை!
மதுஒழிப்புப் போராட்டக் களத்தில் உயிரீகம் செய்த ஐயா. சசிபெருமாள் அவர்களின், உடல் இன்று (07.08.2015) மாலை, சேலம் இளம்பிள்ளை அருகிலுள்ள அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில், அவரது இல்லத்தின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, அவரது உடல் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலிருந்து இன்று மதியம் சேலம் கொண்டு வரப்பட்டது. சேலம் மாநகரில் அவரது உடல் பேரணியாகக் கொண்டு செல்ல, தமிழகக் காவல்துறையினர் கடும் கெடுபிடிகள் செய்தனர். உடல் நல்லடக்க நிகழ்வின் போது, பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

அங்கு நடைபெற்ற இறுதி வணக்கக் கூட்டத்தை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ ஒருங்கிணைத்தார். தி.மு.க. பொருளாளர் திரு. மு.க.ஸ்டாலின், காங்கிரசுத் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, சி.பி.எம். செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், ம.தி.மு.க. பொருளாளர் டாக்டர் திரு. மாசிலாமணி, எஸ்.டி.பி.ஐ. பொதுச் செயலாளர் திரு. தெகலான் பாகவி, காந்தி பேரவைத் தலைவர் திரு. குமரி. ஆனந்தன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி – இயக்கங்களின் தலைவர்கள் இரங்கலுரையாற்றினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ. மணியரசன், ஈகி சசிபெருமாள் அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். இறுதி வணக்கக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

“மது ஒழிப்புப் போராளி ஐயா சசிபெருமாள் அவர்கள் நடத்திய மது ஒழிப்புப் போராட்டங்களின் போது, சென்னையில் அவரை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறேன். ஆனால், இன்று அவருடைய மண்ணில் இந்த மேடைக்கு அருகில், வெறும் உடலாக அவரைப் பார்க்கும் போது, நெஞ்சம் பதைக்கிறது.

மது ஒழிப்புப் போராட்டத்தில், தன்னுயிரை ஈந்திருக்கிறார். தன்னுயிரை ஈந்திருக்கிறார் என்பதைவிட, அவர் தமிழக அரசால் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை!
மது ஒழிப்புப் போராட்டத்தில் வீரமரணம் அடைந்த ஐயா சசிபெருமாள் அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரதிநிதியாக சசிபெருமாள் வாழ்ந்திருக்கிறார்.

அவர் உயிரோடு ஓடியாடி மதுவிலக்கு போராட்டம் நடத்தியபோது, இலட்சக்கணக்கான நெஞ்சங்களில் மது எதிர்ப்புணர்வை ஊட்டினார். ஆனால், இந்த மரணத்தின் மூலம் கோடிக்கணக்கான உள்ளங்களில் மது எதிர்ப்பு உணர்ச்சியை - முழு மதுவிலக்கு தமிழ்நாட்டில் வேண்டும் என்ற ஆவேசத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மரணத்திற்குப் பிறகு மகத்தான புது வாழ்வை ஐயா சசிபெருமாள் பெற்றிருக்கிறார்.

தமிழ்நாடு அரசு, முழு மதுவிலக்கை உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி, முன்னிலும் கூடுதல் வேகத்தோடு நாம் போராடுவோம் என்று ஈகி சசிபெருமாள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம்!

அரசாங்கத்தின் மதுக்கொள்கையை எதிர்த்துப் போராடும் அதேவேளை, ஐயா சசிபெருமாள் மீது ஆணையிட்டு குடிப்பழக்கம் உள்ளவர்கள் தங்களுடைய குடிப்பழக்கத்தை விட்டுவிடுகிறோம் என்று உறுதியேற்க வேண்டும்.

சசிபெருமாள் அவர்கள் மீது ஆணையிட்டு தனிநபர் ஒழுக்கம் - மது மறுப்பு போன்ற உயர் பண்புகளை நம்முடைய தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மீண்டும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறேன்”.

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் செலுத்த, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொது மக்களும், பல்வேறு அமைப்புத் தோழர்களும் திரண்டிருந்தனர்.

மது ஒழிப்புப் போராளி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!

Friday, July 31, 2015

ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம்! தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் உடனடியாக மதுவிலக்கை அறிவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!


ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம்! தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் உடனடியாக மதுவிலக்கை அறிவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்!


தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!



மதுவிலக்குப் போராளி சசிபெருமாள் அவர்கள், இன்று (31.07.2015) கன்னியாகுமரி மாவட்டத்தில், தொலைப்பேசி கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு, தமிழ்நாட்டில் முழு மதுவிலக்குக் கொண்டு வருமாறும், டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூடுமாறும், தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து முழக்கங்கள் எழுப்பிப் போராடியிருக்கிறார்.

சுற்றியுள்ள மக்கள், காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தெரிவித்தும், மிக மிக தாமதமாக காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் அங்கு வந்து, 5 மணி நேரம் கழித்து, அவரை கீழே இறக்கியிருக்கிறார்கள். மயங்கிய நிலையிலிருந்த சசிபெருமாளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, சசிபெருமாள் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

மக்கள் மீது அக்கறை கொண்டு மதுவிலக்குப் போராட்டம் நடத்தி வந்த ஈகி சசிபெருமாளின் இந்த மரணத்திற்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மனித உயிர்கள் மீது அக்கறையற்ற ஒரு நிர்வாகம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த அலட்சியத்தை, மதுவிலக்குப் போராளி சசிபெருமாள் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்ற அக்கறையின்றி இருந்த வன்நெஞ்சப் போக்கை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். மதுவிலக்குப் போராளி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சசிபெருமாள் சாவுக்குக் காரணமான தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், இனிமேலாவது மதுவிலக்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று வலியுறுத்தியும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில், தோழமை இயக்கங்களோடு கலந்து பேசி, அறவழியில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரும் கட்சித் தலைவர்கள், உடனடியாக கலந்து பேசி, சசிபெருமாள் மறைவுக்கு துயரம் வெளிப்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசைக் கண்டிப்பதுடன், அது உடனடியாக மதுவிலக்கை செயல்படுத்த வலியுறுத்தியும், தமிழ்நாடு தழுவிய முழுஅடைப்பு செய்ய, கலந்தாய்வு நடத்தி உடனடியாக முடிவெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT