உடனடிச்செய்திகள்
Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Saturday, September 25, 2021

சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்! ஐயா கி. வெங்கட்ராமன்,



சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்!

தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம். 


சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என நரேந்திர மோடி அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிடிவாதமாகக் கூறிவிட்டது. 

மராட்டிய மாநில அரசு மற்றும் சிலர் தொடுத்திருந்த வழக்கில் 23.09.2021இல் இவ்வாறு கூறிய இந்திய அரசு, “இந்தியாவில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட சாதிகள், துணை சாதிகள், சாதிக் குழுக்கள் இருக்கின்றன. இவற்றுள் பட்டியல் சமூகத்தினரைத் தவிர பிறரைக் கணக்கெடுப்பது நடைமுறை சாத்தியமற்றது. அதுமட்டுமின்றி, சாதியற்ற சமூகம் படைக்கும் இலட்சியத்திற்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பட்டியல் மாநில அரசுகளால் உருவாக்கப்படுவதாலும், கிட்டத்தட்ட ஒரே ஒலிப்புள்ள சாதிகள் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நிலைகளில் இருப்பதாலும், பட்டியல் சாதியினர் சிலர் மதம் மாறுவதால்  சமூகநிலை மாற்றங்கள் நிகழ்வதாலும் - இவ்வாறு கணக்கிடுவது சாத்தியமற்றது” என்று காரணம் கூறி இருக்கிறது. 

ஆனால், இந்தக் காரணங்கள் எதுவுமே ஏற்கத்தக்கதல்ல, சாதிவாரிக் கணக்கெடுப்பது சாத்தியமானதுதான் என்பதற்கான விளக்கமளித்து இந்திய அரசின் “தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமே” கூட கடந்த 2021 சனவரியில் அறிக்கை அளித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்தியது. 

வேடிக்கை என்னவென்றால், “இந்துத்துவ” பா.ச.க. மேற்கொண்ட இதே நிலைப்பாட்டைத்தான் “மதச்சார்பற்ற” காங்கிரசுக் ஆட்சியும் இதற்கு முன் மேற்கொண்டது. 

இந்திய நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மட்டுமின்றி, மன்மோகன் சிங் ஆட்சியின் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்ட காங்கிரசுத் தலைவர்கள் பலர் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தினர். அப்போது, அன்றைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஒரு சொல்லும் மாறாமல் பா.ச.க.வின் இதே மறுப்பைத்தான் நாடாளுமன்றததில் தெரிவித்தார். அது நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதன் விளைவாக, சாதிவாரிக் கணக்கெடுப்பையும் உள்ளடக்கிய “சமூக - பொருளியல் - சாதிவாரிக் கணக்கெடுப்பு” (Socio - Econmic - Caste Census) மேற்கொள்ள முடிவானது. அதற்கு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கி ஆய்வுக்குழுவை அமைத்தது. அதன் முடிவுகள் அரசிடம் முன்வைக்கப்பட்ட பின்பு, இந்திய ஆட்சியில் கட்சி மாற்றம் ஏற்பட்டது. 

நரேந்திர மோடி அரசு, இந்த ஆய்வறிக்கையில் சமூக, பொருளியல் விவரங்களை மட்டும் வெளியிட்டுவிட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்பு பகுதியை மீளாய்வு செய்ய அன்றைய நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பங்காரியா தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை நிறுவியது. அதன் ஆய்வுமுடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஆயினும், பங்காரியா குழுவின் ஆய்வறிக்கையை மேலாய்வு செய்த ஊரக மேம்பாட்டு நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையை 2016 ஆகத்து இறுதியில் மக்களவை தலைவரிடம் வழங்கியது. அதில், “சமூக, பொருளியல், சாதிவாரிக் கணக்கெடுப்பு 98.87 விழுக்காடு மிகச்சரியாக இருக்கிறது. காணப்படும் சிற்சில குறைபாடுகளை நாங்கள் பரிந்துரைத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நீக்கி விடலாம்” என்று கூறியது. 

உண்மை இவ்வாறிருக்க, 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என மோடி அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல! ஒருவேளை, மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்குமானால் ஏற்கெனவே செய்ததுபோல் தனியாக ஆய்வுக்குழு அமர்த்தி இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும். 

சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குறிப்பான சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்காக திட்டமிட முடியும். பல்வேறு படிநிலைகளில் ஏற்றத்தாழ்வாக உள்ள சாதிகளிடையே உள்ள உண்மையான சிக்கல்களை தீர்த்தால்தான், சாதிகளிடையே சமநிலையை உருவாக்க முடியும். அதுதான் சாதி ஒழிப்புக்கான முக்கியமான படிநிலையாகும்! 

ஆனால், 2010லிருந்தே பா.ச.க.வின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து வருகிறது. அதற்கான உண்மையான காரணம் - சாதி ஒழிப்பு நோக்கமோ, நடைமுறைச் சிக்கலோ அல்ல! பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் உண்மையான தொகை தெரியுமானால், இப்போதுள்ள 50 விழுக்காடு என்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீடிக்க முடியாது என்றும், ஆதிக்கசாதியினருக்கான 10 விழுக்காடும் அடிபட்டுப் போகும் என்றும் ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ். அஞ்சுகிறது. 

இன்னொருபுறம், தாராளமயப் பொருளியலின் சந்தை விதிகள் அனைத்துச் சாதியினருக்கும் சம வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருக்கிறது என்ற பொய்யும் அம்பலப்பட்டுவிடும் என்று தாராளமயவாதிகள் அஞ்சுகிறார்கள். 

மோடி அரசின் உள்நோக்கமுள்ள இந்த முடிவை தமிழ்நாட்டு மக்களும், இந்தியா முழுவதுமுள்ள சனநாயக ஆற்றல்களும் வலுவாக மறுக்க வேண்டும்! ஏற்கெனவே எடப்பாடி அரசு அறிவித்த தமிழ்நாடு அளவிலான சாதிவாரிக் கணக்கெடுப்பை தி.மு.க. அரசு விரைந்து முடிக்க வேண்டும்! இச்சிக்கலில் ஒத்த கருத்துள்ள பல்வேறு மாநில அரசுகளையும், கட்சிகளையும் ஒருங்கிணைத்து அனைத்திந்திய அளவிலான சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு மோடி அரசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும். தமிழர்கள் பா.ச.க. தலைமையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்! 

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2021 அக்டோபர் இதழின் ஆசிரியவுரையாக எழுதியது).


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, September 17, 2021

முதன் முதல் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா? ஐயா பெ.மணியரசன்



முதன் முதல் வகுப்புரிமையைச் செயல்படுத்திய 
சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்

வகுப்புரிமை இட ஒதுக்கீட்டுக்கான முதல் அரசாணை வெளியிடப்பட்டதன் நூற்றாண்டை தி.மு.க. ஆட்சி கொண்டாடுகிறது. 

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்று அதிகார வழிப் பெயர் கொண்ட நீதிக்கட்சி ஆட்சி, 1920 ஆம் ஆண்டு முதல் முதலாக நடத்தப்பட்ட சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது. 1921-ஆம் ஆண்டு அக்கட்சி ஆட்சியில், பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட ஆந்திர மண்டலத்தைச் சேர்ந்த ராமராயநிங்கார் முதலமைசராக இருந்த போது, அப்போது வேலை வாய்ப்பில் கோலோச்சிய பிராமண ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி பிராமணர் அல்லாதார்க்கும் உரிய வாய்ப்பளிக்க வகுப்புரிமை ஆணை (Communal G.O.) 16.9.1921 அன்று பிறப்பித்தார். அந்த அரசாணை எண் 613. (MRO Public ordinary Service GO 613). 

அதன் நூற்றாண்டைத்தான் 16.9.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். நூறாண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி சமூக நீதி உரிமைக்காக எடுத்த அந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் அந்த அரசாணை செயல்படுத்தப்படவில்லை என்ற உண்மையை முதல்வர் ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை. (முரசொலி -17.9.2021)

உண்மையில் வகுப்புரிமைக்குப் புதிய அரசாணை பிறபித்து, அதை முதல் முதல் செயல்படுத்தத் தொடங்கியது தமிழரான முதலமைச்சர் சுப்பராயன் ஆட்சியில்தான். தமிழரான அமைச்சர் முத்தையா முதலியார் தமது துறையில் அதை முதலில் செயல்படுத்தினார். இந்த உண்மையைச் சொல்லி இவர்களுக்குத் தனிச் சிறப்பான பாராட்டை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்க வேண்டும்.

1926-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ராமராயநிங்காரின் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் தோற்றுவிட்டது. 21 உறுப்பினர்கள் மட்டுமே நீதிக்கட்சியில் வென்றனர் ஆனால் தனிப்பெரும் கட்சியாய் வென்றிருந்த (காங்கிரசு) சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களில் வென்றிருந்தனர். ஆனால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டனர். அப்போது சென்னை மாகாண ஆளுநர், கட்சி சார்பற்ற சுயேச்சையான சுப்பராயன் (மோகன் குமாரமங்கலம்-பார்வதி தந்தையார்) அவர்களை ஆட்சி அமைக்க அழைத்தார். சுப்பராயன் அமைச்சரவையில் அவருடன் மற்றும் 4 பேர் அமைச்சர்கள். அவர்கள் முத்தையா முதலியார், ஏ.ரெங்கநாத முதலியார், ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார், எம்.ஆர்.சேதுரத்தினம் அய்யர். சுப்பராயன் அமைச்சரவைக்கு வலுச்சேர்க்க ஆளுநர் தனக்கு இருந்த அதிகாரப் படி 34 சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்தார். இவர்கள் சுப்பராயன் அமைச்சரவையை ஆதரித்தனர்.

நீதிகட்சி சுப்பராயன் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் வாக்கெடுப்பில் அது தோற்றுப்போனது.

முத்தையா முதலியார் காங்கிரசுக்காரர். ஆனால் அவர் பிராமண ஆதிக்க எதிர்ப்பாளர். 1916-இல் நீதிக்கட்சி அமைப்பதற்காக நடந்த பிராமணரல்லாதார் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர். எனவே காங்கிரசு சுயராஜ்ஜிய கட்சியின்  முடிவை மீறி, சுப்பராயன் அமைச்சரவையில் முத்தையா முதலியார் சேர்ந்தார்.

சுப்பராயன் அமைச்சரவை 4.11.1927-இல் செனை மாகாண சட்டமன்றத்தில் புதிய வகுப்புரிமை அரசாணை பிறப்பித்தது. G.O.M.S.No.1021.  இந்தப் புதிய ஆணையை 1928-இல் முத்தையா முதலியார் தமது துறையில் முதல் முதலாகச் செயல்படுத்தினார். (ராமராய நிங்கார் கொண்டுவந்த வகுப்பரிமை ஆணை செயல்பாட்டிற்கு வராமலே காலாவதி ஆகிவிட்டது.)

உண்மையில் வகுப்புரிமை வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டுமானால் சுப்பராயன்- முத்தையா முதலியார் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட அரசாணை எண் 1021 செயலுக்கு வந்ததைத்தான் கொண்டாட வேண்டும். 

அந்த சுப்பராயன் அமைச்சரவையை நீதிக்கட்சி ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சுப்பராயன் அமைச்சரவை 1927-இல் கொண்டு வந்த வகுப்பரிமை இடஒதுகீடு விவரம்: 

வேலை வாய்ப்பில்: வேலை வழங்கப்பட வேண்டிய இடங்கள் மொத்தம் 12 என்று கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த 12-இல்: பிராமணர் அல்லாத இந்துகளுக்கு 5 இடம்; பிராமணர்களுக்கு 2 இடம், முகமதியர்களுக்கு 2 இடம்; ஆங்கிலோ இந்தியர் உட்படக் கிறித்துவர்களுக்கு 2 இடம்; பட்டியல் வகுப்பார்க்கு 1 இடம்: (மொத்தம் 12 இடம்)

மொத்தம் எத்தனை இடங்கள் வேலைக்கு நிரப்பப்பட்டாலும் மேற்கண்ட விகிதத்தில் நிரப்ப வேண்டும் என்பதே ஆணை!

1948-இல் அப்போதைய காங்கிரசு முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் புதிதாகப் பின் தங்கிய வகுப்பார் என்று ஒரு பிரிவை உருவாக்கி, சுப்பராயன் ஆணையில் திருத்தம் கொண்டுவந்தார். மொத்தம் 12 இடங்கள் என்று இருந்ததை 14 இடங்கள் என்று உயர்த்தி – புதிதாக 2 இடங்களை பின் தங்கிய வகுப்பார்க்கு வழங்கினார் ஓமந்தூரார்.

சுப்பராயன் அமைச்சரவை செயல்படுத்தி – அதில் ஓமந்தூராரல் புதிய சேர்க்கை உருவாக்கப்பட்ட அதே அரசாணை 1021 (G.O.M.S. No. 1021)ஐத்தான் 1950-இல் உச்ச நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது.

வகுப்புரிமை பற்றிப் பேசும் போதெல்லாம் தி.க.வினரும் தி.மு.க.வினரும் பனகல் அரசர், நீதிக்கட்சி என்று பேசுகின்றனர். புதிய ஆணை போட்டு உண்மையில் செயல்படுத்திய முலமைச்சர் சுப்பராயன் பெயரை அவர்கள் சொல்வதே இல்லை. சுப்பராயன் திராவிடர் அல்லாதவர்; தமிழர் என்பதால் புறக்கணிப்பா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கடலூர் ஏ.சுப்பராயலு பெயர் இருக்கிறது. ஆனால் சுப்பராயன் பெயர் இல்லை. அவர் ஆட்சியில்  வகுப்புரிமை ஆணை புதிதாகப் போடப்பட்டு முதல் முதலாகச் செயல்படுத்தப்பட்ட செய்தியும் இல்லை.

சமூக நீதி உணர்வாளர்கள் வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொண்டு, சமூக நீதிக்கு, வகுப்புரிமைக்கு சுப்பராயன்-முத்தையா முதலியார், ஓமந்தூரார் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதே வேளை நீதிக்கட்சி வகுப்புரிமைக்காக எடுத்த முன்முயற்சியைப் பாராட்ட வேண்டும்!

அதே போல் 19 ஆம் நூற்றாண்டில் பிராமணர் அல்லாதார் இட ஒதுக்கீட்டிற்கு முன் மொழிவு வழங்கிய ஆங்கிலேய அதிகாரிகள் டபுள்யூ.ஆர்.கார்னிஷ் போன்றவர்களையும் நாம் நன்றியுடன் எண்ணிப்பார்க்க வேண்டும். “நாட்டின் முன்னேற்றம் தொடர்பான எந்தச் செய்தியையும் பார்பனக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்கக் கூடாது. அரசின் உண்மையானக் கொள்கை – அரசு அலுவலர்கள் எண்ணிக்கையில் பார்பனர்களுக்கு வரம்புகட்டுவதாகவும், பார்பனர் அல்லாத இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் அரசு அலுவலகங்களுக்குள் நுழைவதை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும். எந்த ஒரு சாதிக்கும் தனி முக்கியதுவம் கொடுப்பதாக இருக்க கூடாது.”

-Report on the Census of Madras Presidency 1871, Volume -1, Page 197 
(சான்று:) கி.வீரமணி ’வகுப்புரிமை வரலாறு’, மூன்றாம் பதிப்பு – 2000.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, September 13, 2021

இளையோரே எழுக! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அழைப்பு! ஐயா பெ. மணியரசன் கட்டுரை!


இளையோரே எழுக!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அழைப்பு!

விவேகானந்தர் சிக்காகோவில் உரை நிகழ்த்தியதன் 128-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் 12.9.2021 அன்று ஆற்றிய காணொலி உரையின் சுருக்கத்தை ஆங்கில இந்து நாளிதழ் (The Hindu 13.9.2021) வெளியிட்டிருந்தது.

“இப்போது, அரசியல் மற்றும் சமூகத்தில் நிலவும் எதேச்சாதிகாரம், மதவெறி போன்ற சீரழிவுகளை எதிர்த்து இளைஞர்கள் எழுக” என்று உணர்ச்சிமிகு உரையைத் தலைமை நீதிபதி ஆற்றி இருந்தார்.

தமிழ்நாட்டிலும் மீள் எழுச்சியை உருவாக்கத் தமிழ் இளையோர்க்கும் பொருந்துவதாக இவ்வுரை இருப்பதால், இதன் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது.

===================================
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===================================

சனநாயக உரிமைகள் என்று நம்மால் ஏற்கப்படுள்ளவை, இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலும், இருண்ட நெருக்கடி நிலைக் காலத்திலும் ஆயிரமாயிரம் இளையோர், ஆதிக்கப் பெரும் புள்ளிகளை எதிர்த்து வீதிகளில் போராடியதன் விளைவால் பெற்றவை! தேசத்திற்காக, சமூகத்தின் மகத்தான நன்மைகளுக்காக, அவர்களில் பலர் தங்கள் உயிரை ஈகம் (தியாகம்) செய்தார்கள். பெரும் வருவாய் தரும் பணிகளை இழந்தார்கள்.

நாட்டின் அமைதி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான பயணத்தில் ஏற்படும் தடங்கல்களைக் களைய இளைஞர்களை நம்புங்கள். தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ இழைக்கப்படும் அநீதிகளை இளையோர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று விவேகானந்தர் கூறினார். அவர்கள் தங்கள் இலட்சியங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் தன்னல மற்றவர்கள்; வீர தீரமானவர்கள்! தாங்கள் உண்மை என்று நம்பும் இலட்சியங்களுக்காக ஈகங்கள் செய்வார்கள். இப்படிப்பட்ட கள்ளம் கபடம் அற்ற மனங்கள் – தூய நெஞ்சங்கள் தாம் நமது நாட்டின் முதுகெலும்புகள்!

இளையோரே, சமூகத்தின் நடப்புகளை சவால்களை நீங்கள் அறிந்து கொள்வது கட்டாயத் தேவை! நினைவில்  நிறுத்துங்கள்; நாட்டில் ஏற்படும் எந்தப் பாதை மாற்றமும், எப்போதும் அதன் இளையோரிடம் வேர்கொள்கிறது. அவர்களின் பங்கேற்பால் நிகழ்கிறது. நீங்கள் பார்க்க விரும்பும் முழுநிறைவான தேசத்தையும் சமூகத்தையும் கட்டி எழுப்புவது உங்களுக்கான பணி!

சமத்துவக் கொள்கையுள்ள நமது அரசமைப்புச் சட்டத்தில் இணைந்துள்ள மதச் சார்பின்மைக் கொள்கை, இந்திய விடுதலைப் போராட்ட நெருப்பில் புடம் போடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே இந்தியாவிற்கான மருந்துச்சீட்டு போல் மதச்சார்பின்மையைப் பேசியவர் விவேகானந்தர். மதத்தின் மெய்யான சாரம் அனைவர்க்குமான பொது நன்மை, சகிப்புத்தன்மை ஆகியவையே என்று உறுதியாக நம்பினார். மூடநம்பிக்கைகளுக்கும், கெடுபிடிகளுக்கும் அப்பாற்பட்டதாக மதம் இருக்க வேண்டும். 

இந்தியா மீள் எழுச்சி கொள்ள, இளையோரிடையே விவேகானந்தர் கோட்பாடுகள் குறித்த உணர்வுகளை ஊட்ட வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Tuesday, September 7, 2021

திராவிடத் திணிப்பு: தமிழ்நாட்டைக் கலப்பின மாநிலமாக்கவே! - ஐயா பெ.மணியரசன்



திராவிடத் திணிப்பு: 
தமிழ்நாட்டைக் கலப்பின மாநிலமாக்கவே!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்  

பேராயர் இராபர்ட் கால்டுவெல், “திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்” ( A comparative Grammar of Dravidian or South Indian Family Languages) என்ற மொழியியல் நூல் எழுதியவர் என்பதைப் பலரும் அறிவர். ஆனால் அவர் சமற்கிருத வைதிக ஆரியப் புராணங்களைப் படித்து விட்டு, அவற்றைத் தொகுத்து “பாரதப் புராதனம்” என்ற நூலை எழுதியவர் என்பது பலருக்குத் தெரியாது. அதே கால்டுவெல் தொல்காப்பியம், மற்றும் சங்கத் தமிழ் நூல்கள் பலவற்றைப் படிக்காதவர் எனபதும் பலருக்குத் தெரியாது. அவர் சமற்கிருதம் கற்ற அளவிற்குத் தமிழ் கற்றதில்லை. அவர்தாம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதியவர்.

“திராவிட” என்ற மூல மொழியிலிருந்து (Proto Language) தமிழ் மொழி உருவானது என்று கற்பனைக் கயிறு திருத்தவர் தாம் காலடுவெல். அவருக்கு முன்பு ஆங்கிலேயே அதிகாரியாக இருந்து தமிழ் – ஆய்வு செய்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு (1777-1819) தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல. இவை தென்னிந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை; இவற்றின் தாய் தமிழ் மொழி என்று கூறினார். தென்னிந்திய மொழிக் குடும்பம் என்று நிலவியல் அடிப்படையில் இம்மொழிகளை வகைப்படுத்தினார். 

எல்லீசு இக்கருத்துகளை, 1816-ஆம் ஆண்டு வெளியான அலெக்சாண்டர் டங்கன் காம்பெல் எழுதி வெளியிட்ட தெலுங்கு மொழி இலக்கண நூலுக்கான முன்னுரையில் வெளியிட்டார்.

எல்லீசுக்கு முன்னோர்களான சர் வில்லியம் ஜோன்ஸ், தாமஸ் கோல் புரூக் போன்றவர்கள் தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தும் சமற்கிருத மொழிக் குடும்பதிலிருந்து பிறந்தவை என்று கூறி இருந்தனர். அதற்கு மாற்றாகக் ஆய்வுரை வழங்கிய எல்லீசை அவருக்குப் பின் 1850 களில் ஆய்வு செய்த கால்டுவெல் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழ் மொழிக்கு ஒரு மூலமொழி இருந்திருக்க வேண்டும்; அந்த மூல மொழி எது என்று தேடினேன்; சமற்கிருத  நூல்களான மனுதர்மத்திலும், குமாரில பட்டரின் தந்திரவார்த்திகாவிலும் கூறப்பட்ட “திராவிட” என்பதை எடுத்துக் கொண்டேன் என்கிறார்.

(Robert Caldvel: A comparative Grammar of the Dravidian or south Indian Family of Languages (ஆங்கிலம்) கவிதா சரண் பதிப்பகம், சென்னை (2008) பக்கம் 4,5). கால்டுவெல், தமது “கண்டுபிடிப்பிற்கு” அகச்சான்று – அதாவது தமிழ் மொழிச் சான்று எதுவும் காட்டவில்லை. ஆரிய சமற்கிருத நூலான மனுதர்மத்தில் சீரழிந்து  போன வடநாட்டு சமூகப் பிரிவினைக் குறிக்கும் பட்டியலில் உள்ள “திராவிட” என்ற சொல்லையும் தந்திர வார்த்திகாவில் உள்ள ஆந்திர  - திராவிட பாஷா என்ற சொல்லையும் எடுத்துக் கொண்டு கற்பனைக் கயிறு திரித்து திராவிட இனம் என்றும் திராவிட மொழி என்றும் பெயர் சூட்டிவிட்டார்.

கால்டுவெல் தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் இழிவு ஏற்படுத்தக் கூடிய வகையில் என்னென்ன தவறுகளைத் தமது ஒப்பிலக்கண நூலில் செய்துள்ளார் என்பதைப் பாவாணர் பட்டியல் இட்டுள்ளார். கால்டு வெல் தவறுகளைக் குறிப்பிட மிகவும் நாகரிமாக “கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ் சறுக்கல்கள்” என்று தலைப்பிட்டுள்ளார். (நூல்: தமிழ் வரலாறு, பக்கம் 26, 27)

1. சேர, சோழ, பாண்டியர்களை அரசர்கள் என்று அறியாமல், அந்தந்தப் பகுதி மக்களின் குடிப்பெயர் என்று கருதினார் கால்டுவெல்.
2. தமிழர் நாகரிகம் கொற்கையில் தொடங்கியது என்று கூறினார்.
3. தமிழரை (அவர்பாணியில் திராவிடரை) உயர் நாகரிகப்படுத்தியவர்கள் ஆரியர்கள் என்று கூறினார்.
ஆயிரத்திற்கு மேல் தமிழர்களுக்கு எண்ணத் தெரியாது. மருத்துவ நூல் தமிழில் இல்லை; மருத்துவர் இல்லை. வெளிநாட்டு வாணிகம் தமிழர்களுக்கு இல்லை. இலங்கையைத் தவிர வேறெந்த கடல் கடந்த நாட்டுடனும் தமிழர்களுக்குத் தொடர்பில்லை.
வானநூல் , கணியம், இலக்கணம் முதலியவை பற்றி தமிழர்களுக்குத் தெரியாது.
மனம், நினைவு, மனச்சான்று போன்றவற்றைக் குறிக்கத் தமிழில் சொற்கள் இல்லை,
4. தமிழ் நெடுங்கணக்கு (எழுத்து வகைகள்) சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியது; வடவெழுத்துகளுள் வேண்டியவற்றை மட்டும் தமிழர்கள் எடுத்துக் கொண்டனர்.
5. தமிழ்ப் பெயர்ச் சொல்லின் வேற்றுமை அமைப்பு முற்றிலும் சமற்கிருத வேற்றுமை அமைப்பைப் பின்பற்றியது.
6. தமிழில் சரியானபடி செயல்பாட்டு வினையே இல்லை.
7. அரசன், ஆயிரம், உலகம், கணியம், சேரன், சோழன், பாண்டியன், திரு, நாழி, மனம், மாதம் முதலியவை வட சொற்கள்.
மலையாளத்தை ஓரிடத்தில் தமிழின் கிளை மொழி (Oldest offshoot) என்கிறார். இன்னோர் இடத்தில் அது தமிழின் உடன் பிறப்பு மொழி (Sister dialect) என்கிறார்.

கால்டுவெல்லின் மேற்கண்ட ஏழு குறைபாடுகளும் உண்மைக்கு மாறானவை என்று பாவாணர் கூறுகிறார்.

இப்படிப்பட்ட கால்டுவெல்லைத்தான் தமிழர் வரலாற்று மீட்பின் தலைமைக் குருவாக தி.மு.க. கொண்டாடுகிறது. கி.மு, கி.பி என்பது போல் கா.மு., கா.பி. என்று கொண்டு வருகிறது தி.மு.க. ஆட்சி. கால்டுவெல்லுக்குப் பின் 150 ஆண்டுகளில் திராவிடத் தலைவர்கள் எழுதியவை, பேசியவை, இட ஒதுக்கீடு, மாநில சுயாட்சி, ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா, பணி ஓய்வு அதிகாரி பாலகிருட்டிணன் ஆகியோர் படைப்புகள் முதலியற்றைத் தொகுத்துத் “திராவிடக் களஞ்சியம்” என்ற தலைப்பில் நூல்களாகக் கொண்டு வரப் போவதாகத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2.9.2021 அன்று சட்டப் பேரவையிலும், ஊடகங்களிலும் அறிவித்தார்.

காலடுவெல் மொழியியல் ஆய்வில் செய்த அதிகப் பிரசங்கித்தனம், அவர் வெளிப்படுத்திக் கொண்ட அறியாமை ஆகியவற்றைத் திராவிடவாத சிந்தனையாளர்கள் எப்போதும் வெளிப்படுத்துவது இல்லை. காரணம், தமிழின மறைப்பு, தமிழ் மொழி மறைப்பு ஆகியவற்றுக்குத் தேவைப்படும் திராவிடத் திரை நெய்து கொடுத்தவர் கால்டுவெல். எல்லாவற்றுக்கும் மேலாக, பிறந்த இன மறப்பிற்கும் மறுப்பிற்கும் “திராவிட இனம்” என்ற மேலைநாட்டு மது தயாரித்துக் கொடுத்தவர் அவர்.

=======================================
தெலுங்கு, கன்னட, மலையாளிகள் ஏற்கிறார்களா?
=======================================

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், துளுவர், தமிழர் எல்லோரும் ஒரே மரபினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்  அந்த மரபினம் திராவிடர் என்றும் கால்டுவெல்லின் வரலாற்று வாரிசுகளாகப் பேசிவரும் திராவிடவாதிகளுக்கு நாம் விடுக்கும் அறைகூவல் (சவால்) இது தான்:

திராவிடம் என்ற பெயரில் ஓரினம், ஒரு மொழி, ஒரு தாயகம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்று தருவீர்களா? இதுவரை தந்ததுண்டா? இல்லை!

அடுத்து, தெலுங்கு, கன்னட, மலையாள தேசிய இனத்தவர்கள் தாங்களும் தமிழர்களும் திராவிட இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்களா? தாங்கள் திராவிடர் என்று ஒரு போதும் அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை.

நாமெல்லாம் ஓர் இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்ற உளவியல் உணர்ச்சி அவர்களிடம் உண்டா? இல்லை.

திராவிட இன அரசியல் பிதாமகர்களான பெரியார், அண்ணா ஆகியோரைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தங்கள் தலைவர்களாக ஏற்றதுண்டா? அல்லது அவ்விருவர் காலத்தில் அம்மாநில மக்கள் தி.க., தி.மு.க. கிளைகளைத் தொடங்கியதுண்டா? இல்லை. அம்மாநிலங்களில் இருந்த அல்லது இருக்கின்ற, தி.மு.க. கிளைகள் அங்கு வாழும் தமிழர்களால் தொடங்கப்பட்டவை!
பெரியார், அண்ணா காலத்திலும், இப்பொழுதும் ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் திராவிடக் கருத்தியலை வளர்க்க உழைத்ததுண்டா? இல்லை! அல்லது உழைத்தோம் பயனில்லை என்றால் பொருந்தாத திராவிடக் கோட்பாட்டை வைத்திருக்கிறோமே என்ற தன்திறனாய்வு உண்டா? இல்லை. 

1956-இல் மொழி வழி மாநிலமாகத் தமிழ்நாடு அமைந்த பிறகு பெரியார், திராவிட நாடு என்ற இலட்சியத்தைக் கைவிட்டு, தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தைக் கைக்கொண்டார் என்கிறீர்கள். அப்புறம் ஏன் திராவிடத்திற்கு இன்றும் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

ஒன்று “திராவிடர்க்கு” உண்மையாய் இருங்கள்; அல்லது தமிழர்க்கு உண்மையாய் இருங்கள்.

=============================
இனம் இயற்கையா? மனிதத் தேர்வா?
=============================

சாதி – மத மறுப்பு, கடவுள் – மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டது திராவிடர் இனம்; தமிழ் இனத்தை அப்படிச் சொல்ல முடியாது; எனவே இவற்றிற்குரிய திராவிட இனத்தை ஏற்கிறோம் என்று திராவிடவாதிகளில் ஒரு சாரார் கூறுகிறார்கள். மேலும் திராவிடர் என்பது மரபினம்; தமிழர் என்பது மரபினம் அன்று என்றும் கூறுகிறார்கள். 

இனம் (Race) என்பது இயற்கையின் படைப்பு. மனிதர்கள் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு அதில் இல்லை. எல்லா இனத்திலும் முற்போக்கு கருத்துகளும் உண்டு, பிற்போக்கு கருத்துகளும் உண்டு. அறிவியல் சார்ந்த கருத்துகளும் உண்டு; மூட நம்பிக்கைகளும் உண்டு. முற்போக்காக ஓர் இனத்தை முழுஅளவில் நாங்கள் படைத்துக் கொள்கிறோம் என்று யாராவது கூறினால் அது சமூக அறிவியல் அன்று.  மானிட வளர்ச்சிக் கோட்பாடும் அன்று.
தமிழர்களைப் பொறுத்தவரை, எமது மரபு இனமும் (Race), தேசிய இனமும் (Nationality) “தமிழர்” என்பதே.

==================================
திராவிடர்களின் தமிழர் பகை வன்முறைகள்
==================================
கர்நாடக, கேரள “திராவிட” மாநிலங்களில் கன்னடர்களும் மலையாளிகளும் தமிழர்களைத் தாக்குவது அதிகரித்து வருகிறது.

காவிரித் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் என, எது தீர்ப்புக் கொடுத்தாலும் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத்தராமல் கர்நாடகத்தில் அம்மாநில அரசும் பல தரப்புக் கன்னடர்களும் தடுத்துத் தேக்கிக் கொள்கிறார்கள்.

1991 டிசம்பரில் கர்நாடகத்தில் காலம் காலமாக வாழ்ந்து வரும் ஏரளமானத் தமிழர்களை கன்னட வெறியர்கள் இனப்படுகொலை செய்தார்கள். தமிழர்களின் வீடுகள், நிறுவனங்கள் சூறையாடப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன. இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் ஏதிலிகளாகத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் காவிரிச் சிக்கலை வைத்துத் தமிழர்களைத் தாக்குகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னும் தமிழர்களைத் தாக்கி, மண்டியிடச் செய்து, காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம் என்று முழக்கமிட வலியுறுத்தி அதைக் காணொலி ஆக்கிக் கன்னடர்கள் வெளியிட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி.என் நிறுவனத்தின் சொகுசுப் பேருந்துகளையும் இதரத் தமிழர்களின் சரக்குந்துகளையும் 200க்கும் மேற்பட்டவற்றை பெங்களூரில் கன்னடர்கள் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சற்றொப்ப இரண்டுமாதங்கள் தமிழக –கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஊர்தி போக்குவரத்துத் தடுக்கப்பட்டு மூடி கிடந்தது.

கர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பினாலும் கூட, தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட மறுக்கிறார்கள். வெள்ள காலங்களில் வெளியேறும் மிகை நீரும் மேட்டூர் அணைக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக 67.16 ஆ.மி.க. கொள்ளளவில் மேக்கேதாட்டில் அணைகட்டக் கர்நாடகம் முனைகிறது.

முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கின்ற நிலையில் அணை உடையப் போகிறது என்று கேரள சி.பி.எம்; காஙிகரசுக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் பீதி கிளப்பி, தமிழர்களுக்கு எதிரான இனவெறியைத் தூண்டிவிட்டன. 2011,2012 ஆண்டுகளில் தமிழ்நாட்டு எண் பொறித்த ஊர்திகளையும் தமிழர்களையும் தாக்கினார்கள் மலையாளிகள்! சென்னையைச் சேர்ந்த ஒரு தமிழன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிக் கொன்றார்கள். ஐயப்ப சாமி கோயிலுக்குப் போன தமிழர்களைத் தாக்கினார்கள். கேரள நச்சுக் கழிவுகளைத் திட்டமிட்டுத் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். தமிழ்நாட்டிற்குரிய கண்ணகி கோயில் நிலப்பகுதியை கேரளம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. கூடலூர் – பளியங்குடி வழியாகக் கண்ணகி கோயிலுக்குத் தமிழ்நாட்டு எல்லைகுள் தமிழ்நாடு அரசு சாலை அமைப்பதையும் தடுத்து வைத்திருகிறது கேரளம்.

தமிழ்நாட்டு அரசுப் பொறுப்பில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு, விலைக்கு மின்சாரம் தரமறுக்கிறது கேரள அரசு. மின்னாக்கியை (ஜெனரேட்டரை)ப் பயன்படுத்தித்தான் தமிழ்நாடு அவ்வளவு பெரிய அணையையும் அலுவலகங்களையும் பல பத்தாண்டுகளாக நிர்வகிக்கிறது.

ஆந்திரம், தமிழ்நாட்டிற்குரிய பாலாறு, தென்பெண்ணை ஆறுகளில் அணைகள் கட்டி சொட்டு நீரும் வராமல் தடுத்துவிட்டது. தமிழ்நாடு அரசு பணம் செலுத்தி சென்னைக் குடிநீருக்குக் கிருஷ்ணா ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டது. ஓர் ஆண்டில் கூட ஒப்பந்தப்படி 12 ஆ.மி.க. (T.M.C.) தண்ணீரை ஆந்திரம் சென்னைக்குத் திறந்துவிட்டதில்லை. பேருந்தில் பயணம் செய்த தமிழர்கள் 18 பேரை ஆந்திரக் காவல் துறையினர் கடத்திச் சென்று, அம்மணப்படுத்தி, கைகால்களைக் கட்டி, உறுப்புகளை அறுத்து, சித்திரவதை செய்து சுட்டுக்கொன்ற செய்தி அனைவருக்கும் தெரியும்.


====================
திராவிடத் தீவிரம்
====================
இன்னும் எத்தனை எத்தனையோ வன்கொடுமைகளைத் தமிழர்களுக்கு எதிராக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் அரங்கேற்றுகின்றன. அவர்களும் தமிழர்களும் ஒரே இனம் என்ற திராவிட இனக் கொள்கையைத் தி.க.வும் தி.மு.க.வும் கடைபிடித்து, தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தமிழினத் தற்காப்பு உணர்வற்ற ஏமாளிகள் ஆக்குகின்றன தமிழர் இழப்புகளுக்கு ஆளகிறார்கள்.

இப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதிலிருந்து திராவிட இனவாதத்தைத் தீவிரபடுத்தியுள்ளார். முதலமைச்சர் பதவி உறுதி மொழி ஏற்றவுடன் “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், திராவிட இனத்தவன்” என்று தன்னை வெளிபடுத்தினார். தமிழ்நாட்டு முன்னேற்றத்தைத் “திராவிட மாடல்” என்றார். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் போது அவருக்குத் “திராவிடச் சிறுத்தை”  என்று சிறப்பு அடைமொழி கொடுத்தார். இப்போது தமிழ்நூல்கள் தொகுப்பிற்குத் “திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டுகிறார்.

திராவிடர் கழகத்தை விஞ்சும் அளவிற்கு இப்போது மு.க.ஸ்டாலின் திராவிட இனத்திணிப்பில் தீவிரம் காட்டுவது ஏன்?

தமிழ்நாடு என்பது தமிழர்களுக்கான மொழிவழித் தேசிய இனத்தாயகம். அவ்வாறான தேசிய இனத் தாயக அடிப்படையில்தான் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், மராட்டியர்கள், குசராத்தியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர்கள் எனப் பல இனத்தவர்க்கும் தனித் தனி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதற்காக இம்மாநிலங்களில் பிற மொழி பேசும் மக்களும் பிற தேசிய இனமக்களும் வாழவே மாட்டார்கள், வாழவே கூடாது என்ற வரையறை எதுவும் இல்லை. 
    
வரலாற்றுப் போக்கில் பல்வேறு காரணங்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் வெளியிலிருந்து வந்து குடியேறிய மக்கள் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சம உரிமை உண்டு. ஆனால் அந்தச் சிறுபான்மையினர்க்காக, அம்மாநிலத்துக்குரிய வரலாற்று வழிப்பட்ட மண்ணின் மக்கள் தங்கள் இனப்பெயரை மறைத்துக் கொள்வது என்பதோ, தங்கள் தாய்மொழியை, முன் நிறுத்தக் கூடாது என்பதோ எந்த மாநிலத்திலும் இல்லை. மரபு வழியில் மண்ணுக்குரிய இனத்தின் பெயரை -  அதன் மாநிலத்திற்கு  வைக்கக் கூடாது என்றும் கூற முடியாது. 

அதே வேளை தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து அயல் இனத்தவர்கள் அன்றாடம் வந்து குவிந்து தமிழ்த் தேசிய இனத்தின் தாயகமான தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. மொழி வழி தேசிய இனத் தாயகமாகத் தமிழர்களுக்குத் தமிழ்நாடு வரையறுக்கப்பட்ட 1956 நவம்பர் 1க்கு பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய அனைவரும் அயலார் என்றும் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை எழுப்பிவருகிறது.   

தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, செளராட்டிரம் முதலிய மொழிகளைப் பேசும் மக்கள் பலநூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களை நாம் அயலாராகக் கருதவில்லை. மண்ணின் மக்களே. அதே வேளை தமிழே இங்கு கல்வி மொழி, ஆட்சி மொழி; தமிழர்களின் மரபுவழித் தாயகம் தமிழ்நாடு!

கர்நாடகத்தில் தமிழர் நிறுவனங்களில் கன்னடத்துடன் தமிழிலும் நிறுவனப் பெயர் எழுதபட்டிருந்தால் அப்பலகைகளை அடித்து உடைக்கிறார்கள் கன்னட வெறியர்கள். தமிழில் இசை நிகழ்ச்சி நடந்தால் மேடை ஏறித் தாக்குகிறார்கள்.  தமிழ்நாட்டில் அப்படியெல்லாம் நடப்பதில்லை. நடக்கக் கூடாது.

ஆனால் தமிழின அடையாளத்தையே மறைக்க தி.க.வும், தி.மு.க.வும் முனைவது சரியா? திராவிடத்திணிப்பு ஏன்?இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின்  திராவிடத் திணிப்பில் தீவிரம் காட்டுவது ஏன்?

ஐயா அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 175-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி அவர் நினைவைப் போற்றும் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் “தமிழன், திராவிடம்” என்ற இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது என்று முன்னுரை கொடுத்தார். திராவிடம் என்பதை அனைவர்க்கும் பொதுவான இனமாகவோ – பண்பாகவோ திணிப்பதை ஏற்க முடியாது.

அயோத்திதாசர் தொடக்கத்தில் திராவிட என்ற சொல்லைப் பயன்படித்தினார். பின்னர் அச்சொல்லைக் கைவிட்டு, தமிழன் என்பதையே பயன்படுத்தினார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (1881) தமிழர் என்று அனைவரையும் பதியச் சொன்னார். தமிழன் என்ற பெயரில் ஏடு நடத்தினார்.

அயோத்திதாசரைப் போற்றுவதைக் கூட ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஸ்டாலின், திராவிடத்தைத் திணிப்பது சரியன்று.

தமிழிக்கும் தமிழினத்திற்கும் பாடுபட்ட அயோத்திதாசர், மனோன்மணியம் சுந்தரனார் போன்றவர்கள் கூட திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். காரணம் அப்போது ஆட்சியாளர்களால் திராவிடர் என்ற சொல் பிரபலப்படுத்தப்பட்டிருந்ததாகும்.

“திராவிட” என்ற சொல் எப்போது பிரபலம் ஆனது. விசயநகரத் தெலுங்கு மன்னர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்த போது! அதிலும் குறிப்பாகத் தெலுங்கு பிராமணர்கள் “திராவிட” என்ற சொல்லைக் கூடுதலாகத் திணித்தார்கள். அப்பொழுதுதான் தாயுமானவர் முதல் முதலாகத் தமிழ் இலக்கியத்தில் “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

ஐரோப்பிய மொழியியல் ஆய்வாளர்கள், ஆரிய பிராமணர்கள் கொடுத்த “திராவிட” என்கிற இன – மொழிப் பெயரை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.
  
நம்முடைய தமிழ்ச்சான்றோர்களும்,  அறிஞர்களும் திராவிட, திராவிடர் என்ற சொற்களைப் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தினார்கள். தெலுங்கர்களின் – பிராமணர்களின் மேலாதிக்கச் செல்வாக்கால் – வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி நம் சான்றோர்கள் திராவிடத்தைப் பயன்படுத்தினார்கள்.

 ஆரிய-பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடினார் பெரியார்; ஆரிய ஆதிக்கத்தின் மீது அடி விழுந்தது. அந்த நன்றிக் கடனுக்காக, நம்முடைய பாவேந்தர் போன்றோர் தமிழையும் தமிழ் இனத்தவரையும்  பெரியார் இழிவு படுத்தியதையெல்லாம் தாங்கிக் கொண்டார்கள். பெரியார் தாசனாகப் பாவேந்தர் விளங்கினார். அதே வேளை தமிழுக்கு அமுதென்று பேர், தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடினார்.

தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழைப் படிக்காதே, ஆங்கிலத்தைப் படி என்று பெரியார் ஆவேசப் பரப்புரை செய்த போது கூடப் பாவேந்தர் “நூலைப்படி; சங்கத் தமிழ் நூலைப்படி; காலை இரவு பொருள்படும்படி சங்கத் தமிழ் நூலைப்படி” என்று பாடினார்.

தமது பாக்களில் திராவிடன், திராவிட நாடு என்று எழுதிய பாவேந்தர் பின்னர் மறுபதிப்புகளில் அவற்றைத் தமிழன், தமிழ்நாடு என்று மாற்றினார். இதுபற்றி பாவேந்தர் ஆய்வாளர் காலஞ்சென்ற முனைவர் இளவரசு அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்திதாசரும் பாவேந்தரும் “திராவிடர்” என்று முழுமையாகக் கடைசிவரைக் கூறவில்லை. அவர்கள் தமிழ், தமிழர் என்ற களத்தில்தான் செயல்பட்டார்கள். இந்த இடத்தில் இன்னொரு கருத்தையும் சொல்லிவிடுவது நல்லது. நம்முடைய அயோத்திதாசரும், பாவேந்தரும் “திராவிடர்” என்ற இனம் பற்றி மெய்யாகவே கூறியிருந்தாலும் அதை நீக்கிவிட்டுதான் நாம் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.   

இதுதான் தமிழ் அறிவுத் தேடல் மரபு. அயோத்திதாசரும் பாவேந்தரும் அந்த அறிவுத் தேடல் மரபை நமக்கு அடையாளம் காட்டியுள்ளார்கள்.

===============================
திராவிடத் திணிப்பு வேகம் பிடிப்பதேன்?
===============================

அண்மைக் காலமாகத் தமிழின உணர்ச்சி தமிழ்நாட்டு இளையோரிடமும் பெரியோரிடமும் வளர்ந்து வருகிறது. தமிழ்த் தேசியம் வளர்ந்து வருகிறது. இந்தத் தமிழின உணர்ச்சி வளர்ச்சி வேகத்தைத் தடுத்து மடைமாற்றத் திராவிட உணர்ச்சியை செயற்கையாகத் தூண்டுகிறார்கள்.

அடுத்து, தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்று இருப்பதைக் கலப்பு இன மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டம் கொண்டுள்ளார்கள்.

கலப்பின மாநிலம் என்பதை நேரடியாகச் சொன்னால் திராவிடக் கட்சிகளில் இருக்கின்ற தமிழர்களே அதை எதிர்ப்பார்கள் என்பதற்காக, ஆரிய எதிர்ப்புக்கு உரியது திராவிடமே என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். இந்த உத்தி ஏற்கெனவே பெரியாரால் சொல்லப்பட்டதுதான்.

ஆரிய-பிராமணப்-சமற்கிருத ஆதிக்க எதிர்ப்பை 2000 ஆண்டுகளாக தொடர்ந்து வள்ளலார் காலம் – மறைமலையடிகள் காலம் வரை கடைபிடித்து வந்தது தமிழினம். அதற்கான சான்றுகள் ஏராளம். அப்படி தமிழ் முன்னோர்களால் ஆரிய எதிர்ப்பிற்கு பக்குவப் படுத்தப்பட்ட மண்ணில்தான் பெரியாரின் ஆரிய எதிர்ப்பு வளர முடிந்தது அதே வேளை அவர் உரிமை கொண்டாடிய ஆந்திர, கர்நாடக, கேரள திராவிட மாநிலங்களில் ஆரிய பார்ப்பணிய சமற்கிருத எதிர்ப்பு வெகு மக்கள் இயக்கமாக உருவாகவில்லை.  

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்க திராவிடம் இனம் என்ற வரையறை தேவை என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் பார்ப்பனர்களை எதிர்க்கத் தமிழினம் பொருத்தமில்லை, திராவிட இனமே சரியானது என்று பெரியார் கூறினார். இதோ அவர் கூற்று:
“திராவிட சமுதாயம் என்று நம்மைக் கூறிக் கொள்ளவே கஷ்டமாயிருக்கும் போது, தமிழர் என்று எல்லோரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும்.  இங்கேயே பாருங்கள் கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாதுரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். எனவே திராவிட  சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம், நம் நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது” என்று ஒரு பொதுக் கூட்டத்தில்  பெரியார் பேசினார்.     (பெரியார் ஈ.வெ.ரா, சிந்தனைகள் -1, பதிப்பாசிரியர், வே.ஆனைமுத்து. 1974 பக் 543-550).

தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழரல்லாத மற்ற இனத்தவர்களுக்கும் உரிய பொதுச் சொல்லாகத்தான் பெரியார் திராவிடத்தைத் தேர்வு செய்தார். அதன்பிறகு தமிழர் என்றால் “என் தாய் மொழியும் தமிழ் என்று கூறிக் கொண்டு பார்ப்பனர்களும் வந்து சேர்ந்து கொள்வதைத் தடுக்கத் திராவிடர் என்ற இனப் பெயரைப் பயன்படுத்துகிறேன் என்று கூறினார்.

தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகிய மூன்று இனத்தார்க்கும் பொதுச் சொல் திராவிடர் என்று கால்டுவெல் பாணியைப் பின்பறிப் பெரியார் கூறினார்.

இப்போதும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இருக்கும் தமிழர் என்ற தனி அடையாளத்தை – தாயக உரிமையை நீக்க, தெலுங்கர், கன்னடர், மலையாளி போன்ற பிற இனங்களையும் இணைத்து, கலப்பின மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றவே முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட இனம் குறித்துத் தீவிரமாகப் பேசிவருகிறார்.

தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் முறையே ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக, கேரள மாநிலங்களில் தங்களின் இயற்கையான இனப்பெயரில் வாழ்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டும் தங்களின் இயற்கையான இனப்பெயரை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, திராவிடர் என்ற பெயரில் அடையாளப்பட வேண்டும் என்பதுதான் இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் திராவிட முனைப்பு. இதைப் புரிந்து கொண்டு தமிழர்கள் தங்களின் இனப்பெயரை, இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.
அதே வேளை, பல நூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழும் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்களைத் தமிழர்களாகிய நாம் அயலாராகக் கருதவில்லை, கருதக்கூடாது. சம உரிமை உள்ள மக்களாகவே கருதுகிறோம். அவர்களும் தமிழர்களின் இனப்பெயரை மாற்றும் “திராவிட” முயற்சிகளுக்கு ஆதரவளிக்கக்கூடாது. ஓர் இன மக்களுக்கு அந்த இன முன்னோர்கள்தான் இனப்பெயரை சூட்டுவர், கால்டுவெல் போன்ற வெளியார் தமிழர்களுக்கு இனப் பெயர் சூட்ட முடியாது. கால்டுவெல்லை பயன்படுத்தித் தமிழின அடையாளத்தை மறைத்தும் மறுத்தும் சூதாடுகின்ற திராவிட அரசியலை ஏற்க முடியாது.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Sunday, September 5, 2021

“திராவிடம்” என்பது ஆரிய அடிமைத்தனம் (முரசொலிக்கு எதிர்வினை) - ஐயா பெ.மணியரசன் அவர்கள் எதிர்வினை!



“திராவிடம்” என்பது ஆரிய அடிமைத்தனம்
(முரசொலிக்கு எதிர்வினை)

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  
ஐயா பெ.மணியரசன் அவர்கள் எதிர்வினை!

“தஞ்சாவூர்” என்பதும் “டேஞ்சூர்” என்பதும் ஒன்றுதான், அதனால் நாம் டேஞ்சூர் என்றே சொல்வோம் என்று யாராவது சொன்னால் அதை ஏற்போமா? மாட்டோம்! ஆனால் “தமிழர்” என்பதும் திராவிடர் என்பதும் ஒன்றுதான், எனவே திராவிடர் என்றே நம்மை சொல்லிக் கொள்வோம் என்று ஒரு சாரார் சொல்வதை ஏற்கலாமா? கூடாது.

“ ‘திராவிடம்’ என்றால் எரிகிறதா?” என்ற தலைப்பில் தி.மு.க.வின் அதிகார முறை ஏடான முரசொலி நாளிதழ் 2.9.2021 அன்று ஆசிரிய உரை எழுதியிருந்தது.

“தமிழ்த் தேசியப் பேரியக்கம் என்ற அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை என்பது தமிழ்நாட்டின் நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றை மட்டுமல்ல, மொழிப் புலமை அறியாத தன்மையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது,” என்று தனது வாதத்தை முரசொலி தொடங்குகிறது.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் 31.8.2021 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்த தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை அறிக்கையில், 

“சங்க இலக்கியங்கள் சந்தி பிரிக்கப்பட்டு எளிமைப் பதிப்புகளாகவும் திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலாகவும் அச்சிட்டுக் குறைந்த விலையில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வெளியீடு: இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை.

அந்த அறிவிப்பில் மேற்படி வாசகங்கள்தாம் இருந்தன. சங்கத் தமிழ் நூல்களைத் தொகுத்து, திராவிடக் களஞ்சியம் என்ற தலைப்பில் வெளியிடப் போகிறார்கள் என்று தான் பலரும் புரிந்து கொண்டோம்.

“திராவிடக் களஞ்சியம்” என்பதை எதிர்த்து நான் கொடுத்த அறிக்கையில் “சங்கத் தமிழ் நூல்கள் எதிலும் “திராவிட” என்ற சொல்லே கிடையாது. தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்களே இருக்கின்றன. வரலாற்று உண்மை இவ்வாறு இருக்க வலிந்து, சங்கத் தமிழ் நூல்களுக்குத் “திராவிடக் களஞ்சியம்” என்று தி.மு.க. ஆட்சி பெயர் சூட்டுவதற்கு ஓர் உள் நோக்கம் இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு, மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆனபிறகு கூடுதல் முனைப்புடன் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்திய நிகழ்வுகளை வரிசைப்படுத்தி இருந்தேன். 

“திராவிடம்” என்ற சொல்லைக் கால்டுவெல் சமற்கிருத நூல்களான மனு தர்மம், குமாரில பட்டரின் தந்திர வார்த்திகா ஆகியவற்றிலிந்து எடுத்ததாக அவரது ஒப்பிலக்கணத்தில் கூறுகிறார் என்றும் சுட்டியிருந்தேன். தென்னாட்டில் குடியேறிய ஆரிய பிராமணர்களைத்தான் திராவிடர் என்று அவர்கள் அழைத்துக் கொண்டார்கள் என்பதையும் சொல்லியிருந்தேன். வட சொல்லான திராவிடத்தை, தமிழ் இலக்கிய தொகுப்பிற்குத் தலைப்பாக்க வேண்டாம் என்றும் கேட்டிருந்தேன்.

“எங்கள் அடையாளம் தமிழ்” என்ற குறிச்சொல் பரப்புரை (ஹேஷ் டாக்) மற்றும் வலைத்தள பரப்புரை என திரளான தமிழர்களின் கண்டனத்தைத் தமிழ்நாடு அரசின் மேற்படி “களஞ்சிய” அறிவிப்பு சந்தித்தது.

இந்தப் பின்ணனியில்தான் முரசொலி ஆசிரியவுரை வந்தது.

எனது அறிக்கையில் “திராவிட என்பது வட சொல்” என்று எழுதியிருந்தேன். அதை மறுத்து முரசொலி எழுதியுள்ளது.

“திராவிட என்பதை வட சொல் என்பது வேர்ச் சொல் அறியாதவர் கூற்றாகத்தான் இருக்க முடியும். திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள், திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே என்று தான் நிறுவி உள்ளார். திராவிடம் என்பது தென் சொல்லே என்று நிறுவி உள்ளார்.”

“தமிழம் – தவிள – தவிட – என்று பிராகிருதத்தில் திரிந்த பின்பு, தமிலி, தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரவிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாகப் பண்டிதர் கிரையர்கள் கூறுவர். (கிரையர்சன் என்பது கிரையர்கள் என்று பிழையாக அச்சாகியுள்ளது.)  

“எங்ஙன மிருப்பினும் தமிழம் என்னும் சொல்லே “த்ரவிட” என்று திரிந்தது என்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை என்று எழுதியிருக்கிறார் பாவாணர்” என்று முரசொலி கூறுகிறது. பாவாணர் எந்த நூலில் இவ்வாறு எழுதியுள்ளார் என்ற குறிப்பை முரசொலி கொடுக்கவில்லை.

பாவாணர் தமது “தமிழ் வரலாறு” என்ற நூலில் கூறியதைத்தான் சிறிது மாற்றி வேறு பொருள் தரும்படி முரசொலி மேற்கோளாகப் போட்டுள்ளது.

பாவாணர் கூறுகிறார்:

“நாட்டுப் பெயர்களும் மொழிப் பெயர்களும் பண்டைக் காலத்தில் பெரும்பாலும் ‘அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கியதை நோக்கும் போது, தமிழ் என்னும் சொல்லும் சிறுபான்மை (அளவு) தமிழம் என்று வழங்கியதாகக் கருத இடம் ஏற்படுகின்றது. தமிழம், த்ரமில (ம்), த்ரமிள(ம்), த்ரமிட (ம்), த்ரவிட (ம்) என்னும் முறையே நோக்கின், தமிழ் என்பதன் திரிபே திரவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலை கீழாய் நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார். ஆயின் கிரையர்சன் இத்தவற்றைத் திருத்திவிட்டனர்.”

பாவாணர் தமிழ் வரலாறு, பக்கம் 32

தமிழர்களிடையே வழங்கப்பட்ட தமிழை வடவர் திரிபாகத் திரமிள, திராவிட என்று ஆக்கினர். ஆனால் கால்டுவெல் மிகத் தவறாக, திராவிட என்பதிலிருந்து தமிழ் வந்தது என்று கூறுகிறார் என்று பாவாணர் திறனாய்வு செய்தார். அத்துடன் மேலே காட்டப்பட்ட மேற்கோளுக்குக் கீழே தமிழ்நாட்டில் தவறிக்கூட, “திராவிட” என்ற சொல்லை உச்சரிக்கவில்லை – பயன்படுத்தவில்லை என்பதைத் தனிக் குறிப்பாக மேற்படி பக்கம் 32 இல் கூறியுள்ளார்.

“(4) திராவிடம் என்னும் வடிவம் தமிழ்நாட்டுலக வழக்கில் அருகியும் வழங்காமை. (தடிப்பெழுத்து வடிவம் பாவாணரே கொடுத்தது.)

இதன் பொருள் தமிழ்நாட்டில் எப்பொழுதாவது, மிக மிக அரிதாகக்கூட திராவிடம் என்ற சொல்லை பேச்சு, எழுத்து வழக்கில் (உலக வழக்கில்) பயன்படுத்தியதே இல்லை என்பதாகும்.

திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு ஆதரவாகப் பாவாணர் கருத்துகள் கூறியது போல் முரசொலி அவருடைய மேற்கோளைத் திரித்துப் பயன்படுத்துவது நீதியா?

நான் தொடக்கத்திலேயே சுட்டிக் காட்டியது போல் அயலாரான ஆங்கிலேயர் தஞ்சாவூரை –டேஞ்சூர் என்று கொச்சையாக உச்சரித்தால் அந்தக் கொச்சை வடிவத்தைக் கொண்டாடி மகிழ்வது அடிமை மனப்பான்மை இல்லையா? டேஞ்சூர் என்பது ஆங்கிலேய எசமானனுக்கான அடிமைத்தனம்; திராவிடம் என்பது ஆரிய எசமானனுக்கான அடிமைத்தனம். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, July 19, 2021

புதிய நாடாளுமன்றக் கட்டடம் தீவிரப்படும் தமிழின ஒடுக்குமுறை! ஐயா கி. வெங்கட்ராமன்!


புதிய நாடாளுமன்றக் கட்டடம் தீவிரப்படும் 
தமிழின ஒடுக்குமுறை!

தோழர் கி. வெங்கட்ராமன்,பொதுச்செயலாளர், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தமிழின ஒதுக்கலின் முதன்மைக் களமாக இந்திய நாடாளுமன்றமே விளங்குகிறது. தமிழ்நாட்டை இந்தியப் பேரரசின் காலனியாக அரசமைப்புச் சட்டம் ஒடுக்கி வைத்திருக்கிறது.

கூட்டாட்சியை விரிவாக்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்றாலும், தமிழின ஒதுக்கலை – காலனிய ஒடுக்குமுறையை நீக்கும் வகையில் திருத்தம் செய்ய முடியாதவாறு நாடாளுமன்றக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இப்போது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பெருமளவு உயர்த்துவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது செயலுக்கு வந்துவிட்டால், இப்போதிருப்பதை விட இன்னும் மோசமான நிலைக்குத் தமிழினப் புறக்கணிப்பு – ஒடுக்குமுறை தீவிரப்படும் ஆபத்திருக்கிறது! 

இதுகுறித்து, கவனம் கொள்ளாமலேயே கொரோனா புதிதாக பெரிய செலவில் நாடாளுமன்றக் கட்டடம், தலைமையமைச்சர் இல்லம் கட்டப்பட வேண்டுமா என்பதை மட்டுமே எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. ஊடகங்களோ, அக்கட்டட அமைப்புகளின் சிறப்புத் தன்மையைப் பற்றி விரிவாக விளக்கி வருகின்றன. ஆனால், தமிழின ஒடுக்குமுறை இதன் மூலம் தீவிரப்படப் போகின்றது என்ற உண்மை கவனத்திற்கு வராமலேயே போகிறது! 

இப்போது, நாடாளுமன்ற மக்களவையில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 543. இதனை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக்க வேண்டுமென்று 2019லேயே முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார். நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் ஒருமித்தக் கருத்தோடு நாடாளுமன்ற புதிய கட்டடம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதனடிப்படையில், 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2020 திசம்பரில் நடைபெற்றது. 2022 ஆகத்து 15 அன்று இந்திய சுதந்திரத்திற்கு 75ஆவது ஆண்டு வருகிறது. அன்றைய நாளில் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு இக்கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. இதை எதிர்த்து, தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

கொரோனா காலத்திற்காவது இப்பணிகளை நிறுத்த வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்தவருக்கு 1 இலட்சம் ரூபாய் தண்டத் தொகை விதித்து, தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் 888 உறுப்பினர் இருக்கைகளும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர் இருக்கைகளும் அமையும் வகையில் கட்டமைப்புகள் உருவாகின்றன. 

மறுபுறம், 2026இல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 848 என உயர்த்துவதற்கு முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் பெட்ரோலியத் துறை மற்றும் நகர்ப்புற வீட்டுவசதி வளர்ச்சித்துறை அமைச்சர் அர்திப் சிங் புரி மீண்டும் மீண்டும் இதனை வலியுறுத்திப் பேசி வருகிறார். 

இந்த 848 இடங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படப் போகின்றன என்பதில்தான் தமிழின ஒதுக்கலின் தீவிர சதித்திட்டம் இருக்கிறது. 

இப்போதுள்ள நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கான மக்களவை உறுப்பினர்கள் 39. புதுச்சேரிக்கு 1. ஆக மொத்தம் 40. மக்கள் தொகைக்கேற்ற பேராளர்கள் என்ற பெயரால், செயற்கையான முறையில் தமிழர்கள் நாடாளுமன்றத்தில் நிரந்தர சிறுபான்மையாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதனால், மக்களவையில் தி.மு.க. – அண்ணா தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரிதான வாய்ப்புகளில் ஒரே கருத்தில் பேசும்போது கூட நாடாளுமன்றம் அதைக் காதில்கூட போட்டுக் கொள்ளாத கொடுமையான புறக்கணிப்பைத்தான் நாம் பார்த்திருக்கிறோம்.

எடுத்துக்காட்டாக, காவிரிச் சிக்கலிலும், சிறுவன் பாலச்சந்திரன் கொலைச் செய்தி வந்ததையொட்டி ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்த விவாதம் நடந்தபோதும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் கண்டித்துப் பேசியபோதும்கூட மக்களவையில் ஒரு சிறு அசைவைக்கூட ஏற்படுத்த முடியவில்லை. 

ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் இனக்கொலையான கொடிய செய்தியைக்கூட காதுகொடுத்துக் கேட்பதற்கு முன்வராத காலி நாற்காலிகளைக் கொண்ட அவையாகத்தான் மக்களவை இருந்ததைப் பார்த்தோம். ஏனென்றால், மொத்தமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 543இல் தமிழ்நாட்டின் 39 என்பது மிகமிகச் சிறுபான்மை! 

தமிழ்மொழி, தமிழர் தாயகம், தமிழ்நாட்டு உரிமை ஆகியவை குறித்து நாடாளுமன்ற மக்களவையில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வருவதென்பது கனவிலும் நடக்க முடியாத செயல்! காரணம் – அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை. 

இருக்கிற 543 உறுப்பினர்களில் இந்தி மாநிலங்களான உத்திரப்பிரதேசம் (80), பீகார் (40), இராசஸ்தான் (25), மத்தியப்பிரதேசம் (29), ஜார்கண்ட் (14), அரியானா (10), தில்லி (7), உத்தரகண்ட் (5), சத்தீசுகர் (11), இமாச்சலப்பிரதேசம் (4) என மொத்தம் 225 உறுப்பினர்கள் இந்தி மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எந்த சட்டத்தையும் இயற்றிக் கொள்ளக்கூடிய இயல்பான பெரும்பான்மையில் இருக்கிறார்கள். இவர்கள் முயன்றால் அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெறுவது எளிது! இவ்வாறான வாய்ப்பு எந்தக் காலத்திலும் தமிழர்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது. 

மொழிவழி தேசிய இன மாநிலங்களாக 1956இல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலேயே ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டாட்சியாக இந்தியக் குடியரசு மாற்றப்பட்டிருந்தால், ஓரளவிற்காவது தமிழ்நாட்டின் உரிமைக் குரலை எழுப்புவதற்கு சிறு வாய்ப்பாவது கிடைத்திருக்கும். 

அப்போதும் ஒட்டுமொத்தத்தில் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையாகத்தான் தமிழினம் இருக்கும் என்றாலும், சம எண்ணிக்கை என்று வரும்போது இந்திக்காரர்களுக்கும், தமிழர்களுக்குமான எண்ணிக்கை சமநிலையாவது உறுதி செய்யப்பட்டிருக்கும். தேசிய இனத் தாயகமே மாநிலம் என்பதை கோட்பாட்டளவில் ஏற்றுக் கொண்ட மாநிலச் சீரமைப்புச் சட்டம், மாநிலங்களை உருவாக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 

பல்வேறுபட்ட தேசிய இனத் தாயகங்களுக்கு சம எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பது, நாடாளுமன்ற சமநிலையை ஓரளவுக்காவது பாதுகாத்துத் தரும் என்ற கொள்கை நிலை, இந்திய ஒன்றியத்துக்கு இருக்கவில்லை. 

இன்றைக்கும் நாடாளுமன்ற மக்களவையை மாநிலங்களுக்கு இணக்கமாக சீரமைக்க விரும்பும் சிந்தனையாளர்கள் அனைத்து தேசிய இனங்களுக்கும் சம எண்ணிக்கை என்பதற்குப் பதிலாக, அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கை என்பதாக வலியுறுத்துகிறார்கள். இந்தி மாநிலங்கள் அப்போதும் 10 இருக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சம எண்ணிக்கை என்றாலும் தமிழ்நாட்டைவிட அவர்கள் மட்டும் 10 மடங்கு இடம் பெற்று விடுவார்கள் என்ற எளிய அடிப்படையையே அவர்கள் கருத மறுக்கிறார்கள். 

உண்மையில், இனச் சமநிலையுள்ள கூட்டாட்சியாக இந்தியா இருக்க வேண்டுமென்றால், இறையாண்மையுள்ள தேசிய இனக் குடியரசுகளின் ஒன்றியமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்போதுதான், எந்தவொரு சிறிய தேசிய இனமும் புறக்கணிக்கப்படாமல் எந்த அடிப்படை முடிவும் ஒருமித்தக் கருத்தின் அடிப்படையில் (Consensus) நிறைவேற்றுவதற்கான ஏற்பாடு உறுதி செய்யப்படும்.

ஆனால், இந்தியா இதற்கு நேர் எதிர்த்திசையில் – மேலும் மேலும் இந்திய அரசி்டம் அதிகாரத்தைக் குவித்துக் கொள்ளும் போக்கில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. பா.ச.க.வின் நரேந்திர மோடி ஆட்சியில் அது கண்மண் தெரியாத வேகத்தில் அன்றாடம் நடந்து வருகிறது. 

அவ்வாறு மாநில அதிகாரம் குறுக்கப்பட்ட அரசமைப்பில் கூட, மற்ற தேசிய இன மாநிலங்களைவிட தமிழ்நாடு சட்ட வாய்ப்புகள் கூட மறுக்கப்பட்ட இன ஒதுக்கலுக்கு உள்ளான தாயகமாக இருக்கிறது. 

காவிரி, மீனவர் சிக்கல் போன்ற அனைத்திலும் இருக்கிற சட்டத்தில் பிற தேசிய இனங்களுக்கு இருக்கிற உரிமை கூட தமிழினத்திற்கு மறுக்கப்பட்டு, சட்டத்தின் ஆட்சியே மறுதலிக்கப்படும் நிகழ்வுகளைப் பார்த்து வருகிறோம். 

இந்த நிலையில், புதிய பெரிய நாடாளுமன்றக் கட்டடமும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என்பதும் முற்றிலும் தமிழினத்தை புறந்தள்ளி வைக்கக்கூடிய சதித்திட்டமாக உருவாகி வருகிறது. 

இந்திய ஆரியத்துவ ஆட்சியாளர்களின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் மிலன் வைஷ்ணவ், ஜே. ஹிண்ட்ஸ்டன் ஆகிய ஆய்வாளர்கள் வைக்கும் முன்மொழிவு (Hindustan Times, 03.03.2019 மற்றும் பிற ஏடுகள்) அர்திப் சிங் பூரியின் கருத்திற்கு ஒத்திசைவதாக இருக்கிறது. இவர்கள் இரண்டுவிதமான முன்மொழிவுகளை விவாதத்திற்கு வைக்கிறார்கள். 

இப்போது 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பல்வேறு மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளது. இதனை 2026ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப சீரமைப்பது என்று இவர்களது முதல் முன்மொழிவு கூறுகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு, அதில் கூறப்படும் மக்கள் தொகை பெருக்க விகிதத்திற்கேற்ப 2026இல் மக்கள் தொகை எவ்வாறு இருக்கும் எனக் கணக்கிடுகிறார்கள் (Projection). அதற்கேற்ப மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை முன்வைக்கப்படுகிறது. 

இதன்படி, தமிழ்நாடு இப்போதுள்ள 39 மக்களவை உறுப்பினர்களிலிருந்து 31 ஆகக் குறைத்துப் பெறும். ஆனால், உத்திரப்பிரதேசத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 80லிருந்து 91 ஆக உயரும். பீகாரின் உறுப்பினர் எண்ணிக்கை 40லிருந்து 50 ஆக உயரும். (காண்க : படம் – 1). இவ்வாறு, தமிழ்நாடு – கேரளா எண்ணிக்கை குறைந்தும், இந்தி மாநிலங்களின் எண்ணிக்கை உயர்ந்தும் இருக்கும். இப்போதுள்ளதைவிட கொடிய இனச் சமநிலை சீர்குலைவு ஏற்படும். 

 

ஆயினும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் தற்போதுள்ள உறுப்பினர் எண்ணிக்கை குறைவதை ஏற்க மாட்டார்கள் என்பதால், எல்லா மாநிலங்களின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையையும் உயர்த்தி இன்னொரு முன்மொழிவை இந்த ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். 

அதன்படி, மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543லிருந் 848 ஆக உயர்த்துகிறார்கள். (காண்க : படம் – 2). அதன்படி தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 39லிருந்து 49ஆக உயரும். அதேநேரம், உத்திரப்பிரதேசத்தின் 80 என்ற எண்ணிக்கை 143 ஆக உயரும். பீகாருக்கு 40லிருந்து 79 ஆக உயரும். மொத்தத்தில் 848 உறுப்பினர்களில் இந்தி மாநிலங்களுக்கு 408 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். கேரளாவுக்கு 20 என்பது அப்படியே நீடிக்கும். அவ்வளவுதான்!
 
அதாவது, தமிழ்நாடு, புதுவை மட்டுமின்றி தென் மாநிலங்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டுக் கூட நாடாளுமன்றத்தில் எந்தவகை சட்டத்தையும் இந்திய ஆட்சியாளர்களால் கொண்டு வர முடியும். அரசமைப்புச் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஏனெனில், இதே வகையான விகிதநிலை புதிதாக உருவாக்கப்படும் மாநிலங்களவையிலும் ஏற்படும். 

ஒவ்வொரு தேசிய இனத்தின் சமத்தகுநிலைக்கு மாற்றாக, மக்கள் தொகை எண்ணிக்கை என்பது புதிய நாடாளுமன்றத்திலும் தொடரும் சூழலில், மக்கள் தொகை வளர்ச்சி நிலை இன்னொரு பெரிய சிக்கலை தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்துகிறது. 

இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் உலகம் முழுவதும் நடந்து வருவதைப் போல, வேகம் குறைந்து காணப்பட்டாலும் தமிழ்நாடு, கேரளாவை ஒப்பிட இந்தி மாநிலங்களின் மக்கள் பிறப்பு விகிதம் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இதுகுறித்து, இந்திய அரசின் பொருளியல் ஆய்வறிக்கை 2018 – 2019 கூறுவது மிகப் பெரிய அபாய அறிவிப்பாக இருக்கிறது, (விரிவிற்குக் காண்க : Economic Survey 2018 – 2019, Volume 1 - Chapter 7). 

இதில் கூறப்படும் மக்கள் தொகைப் பெருக்கக் கணக்கீடு, இன்னும் 20 ஆண்டுகளில் தமிழ்நாடு மக்கள் தொகை சுருக்கத்தை (Decline in Population) சந்திக்கும் என்று கூறுகிறது. ஒரு பெண் தன் வாழ்நாளில் எவ்வளவு குழந்தைகளை பெற்றெடுத்துக் கொள்வார் (15லிருந்து 45 வயதிற்குள்) என்ற கணக்கீட்டின் அடிப்படையில் இது முன்வைக்கப்படுகிறது. இதற்கு மொத்தக் கருத்தரிக்கும் திறன் என்று (Total Fertility Rate – TFR) கூறுகிறார்கள். அதன்படி, இந்தியாவின் சராசரி கருத்தரிப்பு விகிதம் 2016இல் 2.3 என இருந்தது. 2021இல் 1.8 ஆகக் குறையும் என்று கூறுகிறார்கள். 

இன்னொருபுறம், பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் சமநிலை ஏற்பட்டு, மக்கள் தொகை அதேநிலையில் தொடர வேண்டுமானால், ஒரு பெண்ணின் கருத்தரிப்பு விகிதம் 2 குழந்தைகள் என்பதாக இருக்க வேண்டும் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். இது பல்வேறு மாநிலங்களுக்கு மாறுபட்ட நிலையில் இருக்கிறது. 

உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற இந்தி மாநிலங்களை ஒப்பிட தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு, மிக நீண்டகாலமாக மக்களிடையே செயலில் உள்ளதால் தமிழ்நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்தைவிட பீகாரின் மக்கள் தொகை்ப பெருக்கம் 2 மடங்காக இருக்கிறது, உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகியவற்றின் நிலையும் இதுதான்! 

 

இந்த அட்டவணையைக் (படம் – 3) கவனித்தால், 2031க்குப் பிறகு தமிழ்நாட்டில் மக்கள் தொகை சுருக்கம் (De-growth) ஏற்படவுள்ளது என்ற புதிய சிக்கலைப் புரிந்து கொள்ளலாம். மக்கள் தொகை சுருக்கம் இந்தியாவின் இனச் சமநிலையை மிகக் கொடுமையாக பாதிக்கும். குறிப்பாக, தமிழினப் புறக்கணிப்புக்கு இன்னும் கூடுதலான வாய்ப்புகளைத் திறந்துவிடும். அதுமட்டுமின்றி, வெளி மாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் குவிவதை விரைவுபடுத்தும். 

இதேபோன்ற சிக்கலை சந்தித்து வருவதால்தான், மிகக் கடுமையான குடும்பக் கட்டுப்பாடு செய்துவந்த சீனா மட்டுமின்றி, ஜப்பான், செர்மனி போன்ற வளர்ந்த நாடுகளும் கூடுதல் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை செய்யத் தொடங்கிவிட்டன. இதேபோன்ற தேவை தமிழ்நாட்டுக்கும் ஏற்படலாம். 

அப்போதும் பொருளியல் வளர்ச்சி மையங்களாக தமிழ்நாடும் பிற தென் மாநிலங்களும் இருக்கும். அரசியல் ஆதிக்க மையமாக வடஇந்தியாவின் இந்தி மண்டலம் இருக்கும். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மறுசீரமைப்பு இந்த அரசியல் ஆதிக்கத்தை இன்னும் வலுப்படுத்தத் துணை செய்யும்! 

தமிழ்த்தேசிய அரசியலின் தேவை அதிகரித்து வருகிறது! 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 


Friday, June 25, 2021

திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்க! - பெ. மணியரசன் வேண்டுகோள்!



திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு
சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் வேண்டுகோள்! 


திருச்சி நடுவண் சிறையில் சிறப்பு முகாம் ஒன்றை உருவாக்கி அதில் ஈழத்தமிழர்கள் 78 பேரை அடைத்து வைத்துள்ளார்கள். நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைக்காக அல்ல; ஈழத்தமிழராய்ப் பிறந்த “குற்றத்திற்காக”!

ஆம்! அப்படித்தான் சொல்ல வேண்டியுள்ளது. இந்த 78 பேரும் உரிய கடவுச்சீட்டு இல்லாமல் இலங்கையிலிருநது தமிழ்நாட்டிற்கு வந்த குற்றத்திற்காகவோ அல்லது சிறு சிறு குற்றங்களுக்காகவோ தளைப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தண்டனைக் காலத்தை முடித்தவர்கள். இவர்களில் பலர்க்குத் தமிழ்நாட்டில் குடும்பங்கள் இருக்கின்றன; உறவினர்கள் இருக்கின்றனர். அக்குடும்பங்களைச் சேர்ந்தோர் இந்திய அரசால் ஏதிலியராக (அகதிகளாக) ஏற்கப்பட்டவர்கள். 

சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை அக்குடும்பங்களிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும். வெளிநாடுகளுக்குப் போக வாய்ப்புள்ளோரையும் அவர்கள் பொறுப்பில் அனுப்பி வைக்கலாம். 

ஒருவர் இறந்துவிட்டார்

மேற்கண்ட வகைகளில் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, திருச்சி நடுவண் சிறை சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் கடந்த 17 நாட்களாக முகாமிலேயே ஒன்றாக அமர்ந்து முழக்கமெழுப்பிக் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களில் இலங்கை அக்கரைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவர்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி மாவட்ட அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி 24.06.2021 அன்று இறந்து விட்டார் என்ற துயரச் செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும் காத்திருப்புப் போராட்டம் நடத்தும் ஈழத்தமிழர்கள், தமிழ்நாடு அரசுத் தங்களை விடுதலை செய்ய வேண்டும், இல்லையெனில் கொன்றுவிட வேண்டும்; இந்த இரண்டில் ஒன்றைத் தமிழ்நாடு அரசு செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று கூறிக் கொண்டு போராடுகிறார்கள் 

அதுபோன்ற பெருந்துயரங்கள் ஏற்படுவதற்கு முன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அனைத்து ஈழத்தமிழர்களையும் விடுதலை செய்துவிட வேண்டும் என முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



"ஜி.எஸ்.டி. வரிமுறையின் இமாலயத் தோல்வி!" தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!



"ஜி.எஸ்.டி. வரிமுறையின் இமாலயத் தோல்வி!"

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!


பெரும் ஆரவாரத்தோடு இந்திய நாடாளுமன்ற நடுமண்டபத்தில் 30.06.2017 அன்று நள்ளிரவில் அறிவிக்கப்பட்டு 2017 சூலை 1 முதல் செயலுக்கு வந்த “சரக்கு மற்றும் சேவை வரி” (ஜி.எஸ்.டி.) என்ற புதிய வரிமுறை, எல்லா முனையிலும் தோல்வி அடைந்து விட்டது.

கூட்டுறவுக் கூட்டாட்சி முறைமைக்கு (Co-operative Federalism) மகத்தான எடுத்துக்காட்டு, ஒரே நாடு - ஒரே வரி - ஒரே சந்தை என்பதால் நுகர்வோர் வாங்கும் பொருட்களின் விலை குறையும், சேவைகளின் கட்டணம் குறையும், சிறுதொழில் வளர்ச்சிக்குப் புதிய ஊக்கம் கிடைக்கும், வரி ஏய்ப்பு இருக்காது என்று ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி கோபுரம் ஏறி கொக்கரித்தார். ஆனால், ஜி.எஸ்.டி. செயலுக்கு வந்து இந்த ஐந்தாண்டுகளிலேயே அத்தனை முனைகளிலும் படுதோல்வி அடைந்திருப்பதை 15ஆவது நிதி ஆணையமும், இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையும் கூட ஒத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. 

கடந்த 28.05.2021 அன்று நடைபெற்ற சரக்கு சேவை வரி மன்றத்தின் (ஜி.எஸ்.டி. கவுன்சில்) 43ஆவது கூட்டம், ஜி.எஸ்.டி. வரிமுறை நொறுங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சான்று கூறியது. 

பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு வணிகமுறை மரபுகள், வணிக வரலாறுகள் கொண்டுள்ள இந்தியத் துணைக் கண்டத்தில் சரக்கு சேவை வரி என்பது, சிறுதொழில் மற்றும் சிறு வணிக நிறுவனங்களை ஊக்கப் படுத்துவதற்கோ, விலை ஏற்றத்தைத் தவிர்ப்பதற்கோ, வரி ஏய்ப்பைத் தடுப்பற்கோ பயன்படாது. மாறாக, தேசிய இன ஒடுக்குமுறைக்கான வலுவான கருவியாக மட்டுமே செயல்படும் என்று இந்த வரிவிதிப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே நாம் எச்சரித்தோம். (விரிவிற்குக் காண்க : “தமிழ்நாட்டின் மீது பொருளியல் போர்”, கி. வெங்கட்ராமன், பன்மைவெளி வெளியீடு).

ஐந்தாண்டு கடைசியில் கணக்குப் பார்த்தால், ஜி.எஸ்.டி. வரி வசூல் எதிர்பார்த்ததைவிட 4 இலட்சம் கோடி ரூபாய் குறைவாக வந்திருக்கிறது. “இந்த வரி முறைமையைப் பற்றி ஆழமாக மீளாய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று பதினைந்தாவது நிதி ஆணையம் தனது இடைக்கால அறிக்கையில் எச்சரிக்கை செய்தது. 

காங்கிரசு ஆட்சிக் காலத்தில் முன்மொழியப்பட்டு, மோடி ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு மாநில அரசுகளை வளைத்து கடைசியாக தமிழ்நாடும் அந்த வலையில் வீழ்ந்ததற்குப் பிறகு சரக்கு சேவை வரி கொண்டு வரப்பட்டது. 

கூட்டுறவு கூட்டாட்சி அல்ல ஒற்றையாட்சியே
 
இதற்கு முன் இருந்திராத வகையில் 122ஆவது திருத்தம் என்ற ஒற்றைத் திருத்தத்தின் வழியாக ஒரே அடியில் அரசமைப்புச் சட்டத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டன. தேசிய இன மாநிலங்களுக்கு இருந்த அரைகுறை நிதி அதிகாரங்களும், முற்றிலும் பறிக்கப்பட்டு ஒற்றையாட்சி நிறுவப்படும் நிகழ்வாக அது அமைந்தது. 

கூட்டுறவு கூட்டாட்சி என்ற மயக்கும் முழக்கத்தின் கீழும், அந்தந்த மாநிலத்தில் இதுவரை வசூலான மாநில வரியைவிட ஆண்டுக்கு ஆண்டு 14% கூடுதல் வரித் தொகை இழப்பீடாக வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறியும் மாநில அரசுகள் இணங்க வைக்கப் பட்டன. 

ஐந்தாண்டு படிப்பினைகளைப் பார்த்தால், இது முற்றிலும் மோசடியான கண்கட்டு வித்தை என்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது. 

கூட்டுறவு கூட்டாட்சி என்ற கோட்பாட்டுக்கு சரக்கு சேவை வரி மன்றம் (ஜி.எஸ்.டி. கவுன்சில்) அமைக்கப் பட்டிருப்பதே மிகப்பெரிய சான்று என மோடி அரசு தம்பட்டம் அடித்தது. 

அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பு 279A, சரக்கு சேவை வரி மன்றம் பற்றி விரிவாகக் கூறுகிறது. மேல் தோற்றத்தில் பார்த்தால், மாநிலங்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டதுபோல் தெரியும். ஆனால், சரக்கு சேவை வரி மன்றத்தில் ஒன்றிய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் உள்ள வாக்குகளின் மதிப்பளவு (Weightage) பிரிக்கப்பட்டிருப்பதிலும், இந்த மன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்குத் தேவை யான குறைந்தபட்ச வாக்குகளின் மதிப்பளவும் வரையறுக்கப்பட்டதிலும்தான் நுட்பமான சூழ்ச்சி இருக்கிறது. 

சரக்கு சேவை வரி மன்றத்தில் ஒன்றிய அரசின் சார்பில் வாக்குரிமை உள்ள இரண்டு பேராளர்கள் இருப்பார்கள். அவர்களில் இந்திய நிதியமைச்சர் இந்த மன்றத்தின் தலைவராக இருப்பார். 28 மாநிலங்களின் பேராளர்களும், சட்டமன்றத்துடன் கூடிய மூன்று ஒன்றிய ஆட்சிப் பகுதிகளிலிருந்து 3 பேராளர்களும் இருப்பார்கள். 

அதாவது, மொத்தமுள்ள 33 உறுப்பினர்களில் 2 பேர் மட்டும் ஒன்றிய அரசின் பேராளர்களாக இருப்பார்கள். மற்ற 31 பேர் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளின் பேராளர்களாக இருப்பார்கள். தோற்றத்தில் பார்த்தால், மாநிலப் பேராளர்களுக்குத்தான் கூடுதல் வாய்ப்பு இருப்பது போலத் தெரியும். ஆனால், வாக்குகளின் மதிப்பளவு பிரிக்கப்பட்டிருப்பதில்தான் சூழ்ச்சியே இருக்கிறது. 

ஒன்றிய அரசின் சார்பில் இரண்டு பேராளர்கள்தான் என்றாலும், ஒன்றிய அரசின் வாக்கு மதிப்பு 33.3 விழுக்காடு ஆகும். மீதமுள்ள 66.7 விழுக்காடு மதிப்பு  வாக்கு என்பது 28 மாநிலங்களுக்கும், மூன்று ஒன்றியப் பிரதேசங்களுக்கும் சமமாகப் பிரித்தளிக்கப்பட்டுள்ளது, ஆனால், இந்த மன்றத்தில் எந்தத் தீர்மானம் எடுப்பதாக இருந்தாலும், அதற்கு குறைந்தளவு 75 விழுக்காடு மதிப்பளவு வாக்குகள் கிடைத்தாக வேண்டும். இல்லையென்றால், அத்தீர்மானம் நிறைவேறாது!

எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து 66.7 விழுக்காடு மதிப்பளவு. ஆனால், தீர்மானம் நிறைவேறுவதற்கோ 75 விழுக்காடு மதிப்பு தேவை! 

பல்வேறு கட்சிகள், கருத்தோட்டங்கள் உள்ள 31 மாநிலங்களும் ஒரே கருத்தில் உடன்படுவது அரிதிலும் அரிதானது. அப்படியே அனைத்து மாநிலங்களும் ஒரே ஒத்த கருத்தில் நிற்பதாக கற்பனையில் கருதிக் கொண்டாலும், அப்போதும் அவற்றின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 66.7 விழுக்காடு தான்! 

பெரும்பான்மை வாக்கு மதிப்பு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது போல தோற்றம் காட்டி, ஒன்றிய அரசு தனது கைகளில் இரத்து அதிகாரத்தை (VETO POWER) வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை நிலை! 

இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டிருக்கிற முறையே மாநிலங்களை செல்லாக் காசாக்குகிறது என இராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலப் பேராளர்கள் சரக்கு சேவை வரி மன்றக் கூட்டத்தில் அபாயக்குரல் எழுப்பினார்கள். 

“நீ அரிசி கொண்டு வா.. நான் உமி கொண்டு வருகிறேன்! இரண்டு பேரும் ஊதிஊதித் தின்னலாம்” என்றழைப்பதுபோல், வரி வருமானம் அதிகம் வழங்குகிற மாநிலமும், வரி வசூலில் எந்தத் திறமையுமற்று பின்தங்கியிருக்கிற மாநிலங்களும் சம வாக்கு மதிப்பு பெற்றிருப்பது வரித் திறனுள்ள மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாட்டை தண்டிப்பதாக இருக்கிறது. இந்த நிலைமையைக் குறிப்பிட்டுத்தான் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் இந்தக் கூட்டத்தில் தெளிவாக வாதம் செய்தார். 

சரக்கு சேவை வரி மன்றத்தின் கட்டமைப்பே இந்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு வாய்ப்பளிக்கிறது. அத்துடன், அதிகம் ஜி.எஸ்.டி. திரட்டித் தரும் மாநிலங்கள் தண்டிக்கப்படுவதற்கும் வழி கோலுகிறது. இதுவே கூட்டுறவு கூட்டாட்சி முறைமை என்று இதற்கு சொன்ன பளபளப்பான பரப்புரையை வீழ்த்திவிட்டது. 

இதுபோதாதென்று ஜி.எஸ்.டி. அமலாக்கக் குழு (GST Implementation Committee) என்ற பெயரால் முற்றிலும் அதிகாரிகளைக் கொண்ட குழுவை இடையிலேயே ஏற்படுத்தினார்கள். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் செய்யப்படும் முடிவுகளை முறையாக செயல்படுத்துவதற்கான குழுதான் இது என முதலில் கூறப்பட்டது. 

ஆனால், நடைமுறையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு மேலதிகாரம் படைத்ததாக இந்தக் குழு மாற்றப்பட்டு விட்டது. ஜி.எஸ்.டி. மன்றத்தைத் தவிர்த்து விட்டு, தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக் கூடியதாக இந்தக் குழு மாறியது. ஏனெனில், ஜி.எஸ்.டி. அமலாக்கக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் இந்திய நிதியமைச்சகம் தனித்தனி அறிவிப்புகளாக வெளியிடத் தொடங்கி விட்டது. 

சரக்கு சேவை வரி மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய செய்திகள் எல்லாம் இவ்வாறு தனித்தனியான அரசு அறிவிப்புகளாக வெளிவரத் தொடங்கியது. 

இதற்கு மேலும் இந்திய மறைமுக வரி வாரியமும், அதன் வரி ஆய்வு அமைப்பும் (Tax Research Unit) தன்னிச்சையான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் செயலுக்கு வந்தபிறகு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஒப்புக்காக ஒப்புதலுக்கென்று வைக்கப்படுகிறது. 

இதனால்தான், “ஜி.எஸ்.டி. கவுன்சில் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அமைப்பாக தாழ்த்தப்பட்டுவிட்டது” என தமிழ்நாடு நிதியமைச்சரும், பஞ்சாப் நிதியமைச்சரும் ஆவேசமாகக் குரலெழுப்பினார்கள். 

அரசமைப்புச் சட்ட உறுப்பு 279A, சரக்கு சேவை வரி மன்றத்திற்கு மாநிலப் பேராளர்களிலிருந்து ஒருவர் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறுகிறது. ஆனால், ஐந்தாண்டு ஆகியும் மாநிலப் பேராளர்களிடமிருந்து இவ்வாறு ஒரு துணைத் தலைவர் தேர்வு செய்யப்படவே இல்லை! இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாட்டாண்மையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் நடப்பதற்கான நடைமுறை ஏற்பாடு இது! 

மாநில அரசுகளுக்கு ஆண்டுதோறும் 2015 - 2016ஆம் ஆண்டின் வரி வருவாயை விட 14 விழுக்காடு கூடுதலாக வரி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியின்போதுதான் பெரும்பாலான மாநிலங்கள் ஜி.எஸ்.டி. வரி முறையை ஏற்றுக் கொண்டன. ஆனால், இந்த வரி விதிப்பு தொடங்கிய இரண்டாம் ஆண்டி லிருந்தே இழுபறி தொடங்கிவிட்டது. 

மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இயல்பான வரிப் பங்கையும் (State GST) முழுமையாகத் தராமல் இந்த 14 விழுக்காடு இழப்பீட்டையும் தராமல் இந்திய அரசு இழுத்தடிக்கத் தொடங்கியது. தமிழ்நாடு உள்ளிட்ட தொழில் வளர்ச்சியுள்ள பிற மாநில அரசுகளும் கொள்ளையாக வரியைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, இழப்பீட்டுத் தொகைக்காக கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலைமைக்கு வீழ்ந்தன. 

இதற்குமேல், சட்டப்படி வாக்குறுதி அளிக்கப்பட்ட 2021 - 2022 நிதி ஆண்டிற்கு இழப்பீட்டுத் தொகையோ, பங்குத் தொகையோ தர முடியாது என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கைவிரித்தார். 

“கொரோனா பெருந்தொற்று கடவுளின் செயல். இதில் வந்த வரி வசூல் வீழ்ச்சிக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. எனவே, பங்குத் தொகையும் தர முடியாது” என்று ஆண்டவனைக் காட்டி ஆணவப் பேச்சுப் பேசினார் நிர்மலா சீத்தாராமன்! வேண்டுமானால், மாநிலங்கள் கடன எழுப்பிக் கொள்ளட்டும் என்று கைகழுவி விட்டார். 

கடந்த மே 28ஆம் நாள் (2021) நடைபெற்ற 43ஆவது மன்றக் கூட்டத்தில், பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியதற்குப் பிறகு 1 இலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய அரசு கடன் எழுப்பி, அதனை மாநில அரசுகளுக்கு கடன் தொகையாக வழங்கும் என்றும், பின்னால் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய பங்கில் அது சரி செய்து கொள்ளப்படும் என்றும் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். பங்குத் தொகை பறிபோனது போனதுதான். கடன் தொகைக்கு தான் ஒப்புதல் வந்திருக்கிறது. 

இந்தச் சூழலில், 2022-டோடு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை நிறுத்தக்கூடாது, குறைந்தது மேலும் ஐந்தாண்டுக்காவது நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்து கின்றன. இந்திய அரசு அதற்கு செவிசாய்க்கும் வாய்ப்பு தெரியவே இல்லை! 

ஏனெனில், ஏற்கெனவே மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத் தொகையையோ, இழப்பீட்டுத் தொகையையோ தரவில்லை என்பது மட்டுமின்றி, மாநிலங்களுக்குத் தர வேண்டிய பங்குத் தொகையை குறைப்பதற்காக சூதான வழிமுறைகளில் இந்திய அரசு இறங்கிவிட்டது. 

122ஆவது சட்டத் திருத்தப்படி சரக்கு மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் வரித் தொகையில்தான் மாநிலங்களுக்குப் பங்கு பிரித்தளிக்கப்படும் எனக் கூறப்பட்டு விட்டது. இதைத் தவிர்ப்பதற்காக நேரடியாக சரக்கு மற்றும் சேவை ”வரி” (Tax) என்று அழைப்பதை மாற்றி, பல்வேறு சரக்கு சேவை வரிகளுக்கு தீர்வை (Cess) என்றும், மேல் வரி (Surcharge) என்றும் பெயர் மாற்றம் செய்து, இந்திய அரசு வசூலிக்கத் தொடங்கி விட்டது. 

இந்தத் தீர்வைக்கும், மேல் வரிக்கும் “வரி” (Tax) என்ற பெயர் இல்லாததால், அதில் மாநிலங்களுக்குப் பங்கு தர வேண்டியதில்லை என்ற கொல்லைப்புற வழியை மோடி அரசு தேர்ந்தெடுத்தது, 

மோடி தலைமையமைச்சராகப் பதவி ஏற்றதற்குப் முன்னால், 2013 - 2014 நிதியாண்டில் இவ்வாறு பல சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு இருந்த தீர்வை மற்றும் மேல் வரி என்பது 6% ஆக இருந்தது. ஜி.எஸ்.டி. செயலுக்கு வந்ததற்குப் பிறகு, இப்போது 2020 - 2021ஆம் நிதியாண்டில் தீர்வை மற்றும் மேல் வரி 19.9 விழுக்காடாக தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இந்தத் தொகை 5 இலட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்! 

மறைமுக வரியான ஜி.எஸ்.டி.யில் மட்டுமின்றி, மாநிலங்களுக்குப் பங்கு தர வேண்டிய நேர்முக வரியிலும் இதே வகையான சூதான நடைமுறையை இந்திய அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. 

கடந்த 14ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரை குறித்து விளக்கமளித்த இப்போதைய 15ஆவது நிதி ஆணையம், தனது இடைக்கால அறிக்கையில் இதனை தெளிவுபடுத்தியது. 

14ஆவது நிதி ஆணையம் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டை வரலாறு காணாத அளவில், 42 விழுக்காடாக உயர்த்தி விட்டது எனக் கூறப்பட்டது. ஆனால், மாநிலங்களுக்குப் பங்கு தர தேவையில்லாத தீர்வை மற்றும் மேல் வரியைக் கழித்து விட்டால், ஒட்டுமொத்த வரி வசூலில் மாநிலங்களின் பங்காகக் கிடைத்தது வெறும் 32.4 விழுக்காடு தான் என 15ஆவது நிதி ஆணையம் விளக்கியது. 

இவ்வாறு வரிக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு விட்டதால் தமிழ்நாடு ஆண்டுதோறும் 88 ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பங்கை இழந்து வருகிறது என்று சட்ட மன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் கூறியிருப்பது ஒரு எச்சரிக்கை அறிவிப்பாகும். 

ஜி.எஸ்.டி. வரி வருமானமும், நேரடி வரி வருமானமும் மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும் முறையே தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் வகையில் அமைந் திருக்கிறது. சிறிய மாநிலங்களை மட்டுமல்ல, இந்தி மாநிலங்களுக்கு அதிக ஒதுக்கீடு செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. 

எடுத்துக்காட்டாக, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், இராஜஸ்தான் ஆகிய இந்தி மாநிலங்கள் அளிக்கும் வரி வருவாய் இந்தியாவின் மொத்த வரி வருவாயில் 14.6 விழுக்காடு மட்டுமே ஆகும். ஆனால், அந்த மாநிலங்கள் பெறுகிற பங்குத் தொகையோ மொத்த வரி வருவாயில் 41.86 விழுக்காடு (2020 - 2021 ஒன்றிய பட்ஜெட் புள்ளி விவரங்கள்) ஆகும். அதேநேரம், தமிழ்நாடு பெறுகிற பங்குத் தொகை 4.189 விழுக்காடு மட்டுமே ஆகும். 

மக்கள் தொகை என்ற கணக்கின்படி பார்த்தாலும், மேற்சொன்ன இந்தி மாநிலங்களின் மக்கள் தொகை இந்திய நாட்டு மக்கள் தொகையில் 36.7 விழுக்காடு தான்! தமிழ்நாட்டு மக்கள் தொகையோ ஏறத்தாழ 6 விழுக்காடாகும். வரி வசூலில் முதல் வரிசை மாநிலம் தமிழ்நாடு என்பது சொல்லத் தேவையில்லை. 

வரி வசூலில் மிகப் பின்தங்கியிருக்கிற இந்தி மாநிலங்களுக்கு அவர்கள் வசூலிப்பதைவிட கிட்டத் தட்ட மூன்று மடங்கு வரிப் பங்கு அளிக்கப்படுகிற தென்றால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு வர வேண்டிய தொகையைப் பிடுங்கி இந்தி மாநிலங்களைக் கொழுக்க வைக்கிறார்கள் என்பதுதானே பொருள்! 

இது ஜி.எஸ்.டி. வந்ததற்குப் பிறகு மட்டுமல்ல, கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் அநீதிதான்! ஆயினும், இவ்வளவு மிகைத் தொகை அம்மாநிலங் களுக்கு ஒதுக்கப்பட்ட பின்னும் அவற்றையெல்லாம் ஊழலிலும், ஊதாரித்தனத்திலும் செலவு செய்து விட்டார்களே தவிர முன்னேறிய மாநிலங்கள் வரிசைக்கு வந்தபாடில்லை. 

வரி வசூலிலோ, தொழில் மற்றும் வேளாண்மை வளர்ச்சியிலோ எந்தப் பங்களிப்பும் செய்யாமல், உட்கார்ந்த இடத்தில் இவ்வளவு தொகை கிடைக்கும் போது, அவர்கள் ஏன் முன்னேற முயற்சி செய்யப் போகிறார்கள்? சாதிச் சண்டையிலும், மதச் சண்டை யிலும் குழந்தைகளை வல்லுறவு கொண்டுக் கொல்வ திலும் கூடுதல் கவனம் செலுத்திக் கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பார்கள். 

அதற்குத் தமிழ்நாடு பலியிடப்படுகிறது! 

இவை அனைத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் ஜி.எஸ்.டி. வரிக் கட்டமைப்பானது, ஒன்றிய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலுள்ள நம்பிக்கையை அச்சாணியாகக் கொண்டே செயல்படுகிறது. 

எல்லா நாடுகளிலும் ஒன்றிய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் இடையே வரிப் பங்கீட்டில் முரண்பாடு கள் எழுவது இயல்பு. ஆயினும், பல்வேறு நாடுகளில் அச்சிக்கல்கள் ஏதோவொரு வகையில் இணக்கமாகத் தீர்க்கப்படுகிறது. இவ்வாறு ஜி.எஸ்.டி. ஓரளவுக்கு வெற்றிகரமாக செயல்படும் நாடுகளை உற்று நோக்கினால் அவை பல தேசிய இனங்களைக் கொண்ட நாடுகள் அல்ல என்பது தெளிவாகும். 

இன்றைக்குள்ள நவீன பொருளியல் கோட்பாடுகளில் ஒரு முக்கியமான வளர்ச்சிப் போக்கு என்பது, “நடத்தைப் பொருளியல்” (The Behavioral Economics) என்ற புதிய போக்காகும். இந்த புதிய வகைப் பொருளியல் கோட்பாட்டிற்காக 2017ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலெ கூறுவது கவனிக்கத்தக்கது. 

“சந்தைப் பொருளியல் உறவில் பகுத்தறிவு வழிப் பட்ட முடிவுகளைவிட ஒரு தரப்பின் மீது இன்னொரு தரப்பு வைக்கிற நம்பிக்கையின் மீதுதான் (Trust) பொருளியல் உறவு கட்டப்படுகிறது” என பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் ரிச்சர்ட் தாலே விளக்கிக் கூறுகிறார். 

தனிநபர் ஊடாட்டமுள்ள சந்தையைவிட பல தேசிய இனங்களைக் கொண்ட கூட்டுச் சந்தையில் இரு தரப்பினருக்கு இடையே இந்த நம்பிக்கை மிக முக்கியமானது. 

ஆனால், அறிவிக்கும்போதே ஒற்றைச் சந்தை என்ற எக்காளத்தோடுதான் ஜி.எஸ்.டி வரி முறையே அறிவிக்கப் பட்டிருக்கிறது. மிக நெளிவு சுளிவான முதிர்ச்சியான சனநாயகப் பண்புள்ள பல தேசிய இன நாடுகளில் கூட கூட்டாட்சி முறை தோல்வி அடைந்து விட்டதைப் பார்க்கிறோம். 

மெய்நிலை இவ்வாறு இருக்க, ஒன்றிய அரசு மேலாதிக்கம் செய்யும் ஜி.எஸ்.டி. வரிமுறை பல்தேசிய இன நாடான இந்தியாவிற்குப் பொருந்தவே பொருந்தாது. இதைத்தான் ஒன்றிய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கைக் குலைவு எடுத்துக்காட்டுகிறது. 

நடந்து முடிந்த 43ஆவது சரக்கு சேவை வரி மன்றக் கூட்டம், இந்த உண்மையை ஐயத்திற்கு இடமின்றி புலப்படுத்திவிட்டது! 

ஜி.எஸ்.டி.யின் கூட்டுறவுக் கூட்டாட்சி முறை என்ற அடிப்படையான நம்பிக்கையே தகர்ந்துவிட்ட பிறகு, ஜி.எஸ்.டி. வரிமுறை நீடிப்பது ஆபத்தானது. 

விலைவாசியும் குறையவில்லை
 
ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்தும்போது, மோடி அரசு அளித்த இன்னொரு நம்பிக்கை “வரி மேல் வரி” என்ற பழைய முறையை நீக்கி, ஜி.எஸ்.டி. செயலுக்கு வரும்போது “விலைவாசி குறையும்” என்பதாகும். 

ஒரு பொருள் அல்லது சேவை உருவாகும் இடத்திலிருந்து பல கைகள் மாறி நுகர்வோரை அடையும்போது, இந்த சங்கிலித் தொடரில் முதலாமவர் செலுத்திய வரித்தொகை இரண்டாமவரிடம் கழித்துக் கொள்ளப்படும் என்ற முறை ஜி.எஸ்.டி.யில் உள்ளது. ஆயினும், நுகர்வோரை வந்தடையும்போது அதிகபட்ச சில்லறை விலையில் (MRP), அது பிரதிபலிக்கவில்லை. இதனை 15ஆவது நிதி ஆணையமே குற்றச்சாட்டாகக் குறிப்பிடுகிறது. “வரி மேல் வரி” இல்லை என்பதன் பலன், நுகர்வோருக்குக் கிடைக்கவில்லை. விலையேற்றம் தொடர்கிறது. 

இந்த வகையிலும் ஜி.எஸ்.டி. வரிமுறை தோல்வி அடைந்துவிட்டது! 

சிறுதொழில்களை அழித்த ஜி.எஸ்.டி.
 
ஜி.எஸ்.டி. வரி செயலுக்கு வந்தபிறகு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நொடித்து, மூடப்பட்டு வருவதை சென்னை, திருவள்ளூர், திருப்பூர், கோவை, மதுரை என்று திரும்பிய பக்கமெல்லாம் பார்க்கிறோம். 

பெரிய நிறுவனங்கள் பெரும் செலவு செய்து, விளம்பரங்கள் வழியே தங்களது  வணிக முத்திரையை (பிராண்ட்) மக்கள் மனங்களில் ஏற்றி விடுகின்றனர். மேலே குறிப்பிட்ட “நடத்தைப் பொருளியல்” விதிகளின்படி, விளம்பரங்களை நம்பும் நுகர்வோர் அந்தப் பொருட்களின் மீதும் - சேவைகளின் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர். அது அந்த நிறுவனங்களின் வணிகத்தைப் பெருமளவு உயர்த்துகிறது. 

அதே தரத்தில், அதே பொருளை உற்பத்தி செய்யக்கூடிய சிறுதொழில் முனைவோர் இவ்வாறு தங்கள் தயாரிப்புகளை விளம்பரங்களின் மூலம் நிலைநிறுத்த முடிவதில்லை. ஆனால், இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே சதவிகித ஜி.எஸ்.டி. தான்! இச்சூழலில், செலவு செய்து விளம்பரங்களின் மூலமாக சந்தையில் நிலைபெறும் பெரிய நிறுவனங்களிடம் தங்கள் சந்தையையும் விட்டுவிட்டு, சிறுதொழில் முனைவோர் வெளியேறும் சூழலே நிலவுகிறது. 

போராடி சந்தையில் நிற்க முனைகிற சிறுதொழில் முனைவோர் வேறு வழியில்லாமல் ஆள்குறைப்பு செய்கிறார்கள். முடிந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு தொழிலை ஓட்டுகிறார்கள். அதில் முடியாதவர்கள் தங்கள் தொழில் உற்பத்திக் கருவிகளை “காயலாங்கடைக்கு” விற்றுவிட்டு வெளியேறுகிறார்கள். 

மதுரையிலும், ஈரோட்டிலும் இன்னும் பல நகரங்களிலும் விசைத்தறி உரிமையாளர்கள் இவ்வாறு தங்களது விசைத்தறிகளை வந்தவிலைக்கு “காயலாங் கடைக்கு” விற்றுவிட்டு தொழிலிலிருந்து வெளியேறி யதைத் தமிழ்நாடு கண்டது. 

ஜி.எஸ்.டி. வரிக்கான பலவிதமான படிவங்களை இணையவழியில் நிரப்பி அனுப்புவதற்கே தொழில் நுட்பப் பணியாளர்களை கூடுதல் ஊதியம் கொடுத்து சிறுதொழில் முனைவோர் அமர்த்திக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதிகாரிகளிடம் விளக்கம் சொல்வதற்கே காலம் விரையமாகிறது. மன உளைச்சலும் ஏற்படுகிறது. ஜி.எஸ்.டி. வந்தபிறகு சிறுதொழில் முனை வோர் அன்றாடம் நெருப்பில் நடந்து செல்கிறார்கள். 

வரி ஏய்ப்பு தொடர்கிறது
 
ஜி.எஸ்.டி. வந்தவுடன் எல்லோரும் வரி வலையத் திற்குள் வந்துவிடுவார்கள், எல்லாம் தொழில்நுட்ப மயமாகி இருந்தால் வரி ஏய்ப்பும் இருக்காது - அதிகாரிகளின் ஊழலும் பெருமளவு குறையும் என்றார்கள். 

ஆனால், தயாரிப்பு மையங்களிலிருந்து, மொத்த வணிகத்திலிருந்து கீழ்நிலையில் வரையிலும் கணக்கில் வராத இணைப் பொருளாதாரம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை 2018 - 2019 ஆம் ஆண்டின் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (CAG Report) எடுத்துக்காட்டியது. ஜி.எஸ்.டி. வந்ததனால், வரி ஏய்ப்பு ஒன்றும் குறையவே இல்லை என்று அந்த அறிக்கை உறுதிபடக் கூறியது. 

ஊழல் அதிகாரிகளின் கடைக்கண் பார்வை இல்லாமல், இவ்வாறான கணக்கில் காட்டாத இணைப் பொருளா தாரம் நடக்கவே முடியாது. ஜி.எஸ்.டி. வந்ததற்குப் பிறகு வரி ஏய்ப்பும் குறையவில்லை; ஊழலும் குறையவில்லை! 

ஜி.எஸ்.டி.யைக் கைவிடுக!
 
எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்ட, தேசிய இனங்களை நசுக்கி ஒற்றை அதிகாரத்தை நிறுவுகிற ஜி.எஸ்.டி. வரிமுறையைக் கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது! 

2021 சூலை மாதம் நடைபெறவிருக்கிற சரக்கு சேவை வரி மன்றக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரியைக் கைவிடுவது, ஜி.எஸ்.டி. கவுன்சிலைக் கலைப்பது என்பதுதான் அந்த மன்றம் இந்திய அரசுக்கு முன்வைக்க வேண்டிய பரிந்துரையாக இருக்க வேண்டும்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT