உடனடிச்செய்திகள்
Showing posts with label பெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு!. Show all posts
Showing posts with label பெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு!. Show all posts

Thursday, March 19, 2020

மறுபக்கம் மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினரான மர்மம்! பெ. மணியரசன்


மறுபக்கம்

மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
மாநிலங்களவை உறுப்பினரான மர்மம்!

ஐயா பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து, கடந்த 17.11.2019 அன்று பணி ஓய்வு பெற்றவர் ரஞ்சன் கோகாய். அவர் இப்பொழுது நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 12 நியமன உறுப்பினர்களில் ஒருவராக மோடி ஆட்சியால் அமர்த்தப்பட்டுள்ளார்.


மாநிலங்களவை உறுப்பினராகிட மகிழ்வுடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார் கோகோய்!



மோகன் பகவத் – மோடி ஆட்சி ரஞ்சன் கோகோய்க்கு வழங்கியுள்ள பரிசளிப்பாக இந்த நியமனத்தைப் புரிந்து கொள்ளலாம். இதன் வழியே, தங்களுக்கு ஆதரவாக – தங்கள் ஆட்சிக்கு ஆதரவாக தீர்ப்புகளை வழங்கினால், அவருக்கு “வெகுமானம்” உண்டு என இப்போதிருக்கும் நீதிபதிகளுக்கும் “ஆசை”காட்டியுள்ளது மோடி ஆட்சி!



பாபர் மசூதி இருந்த இடம் அப்பள்ளி வாசலை இடித்தவர்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது, சம்மு காசுமீருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருந்த சிறப்புரிமைப் பரிவுகளான 370 மற்றும் 35A ஆகியவற்றை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டபோது அவற்றை உடனடியாக விசாரிக்காமல் காலவரம்பற்று தள்ளி வைத்து உதவியது, இரபேல் விமான ஊழல் அம்பலமான போது அதுகுறித்து விசாரிக்கத் தேவையில்லை என ஆணையிட்டது முதலிய “அரசமைப்புச் சட்டப் பணிகள்” பலவற்றைச் செய்தவர் ரஞ்சன்.



உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திய அரசமைப்புச் சட்டப்படி இந்திய அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்டவர்கள் அல்லர். அவர்கள் மீது இந்திய ஆட்சி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றித்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.



உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் தனிப் பொறுப்பும் தன்னாட்சியும் கொண்டவை; உயர் மதிப்புமிக்கவை!



இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளைக் காப்பாற்றும் அதிகாரம் படைத்தவை உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும். இப்பணியில், இந்திய அரசு நிர்வாகத்துடன் – தேவைப்பட்டால் மோத வேண்டிய கடமையும் – இந்திய அரசைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும் இவ்வரு நீதிமன்றங்களுக்கும் உண்டு.



ஆனால், ரஞ்சன் கோகோய் புது விளக்கம் தருகிறார். நேற்று (17.03.2020) அசாம் தலைநகர் குவாகாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நாடாளுமன்றமும் நீதித்துறையும் ஒரு புள்ளியில் இணைய வேண்டிய தேவையுள்ளது” எனக் கூறியுள்ளார்.



ஆனால் இதே நீதிபதி ரஞ்சன் கோகோய், கடந்த 12.01.2018 அன்று புதுதில்லியில் சக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேசுவர், மதன் பி. லோகுர், குரியன் சோசப் ஆகியோருடன் இணைந்து, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் செய்தியாளர்களிடம் செவ்வி கொடுக்கும்போது கூறியதை இப்போது நினைவு கூரலாம்.



“உச்ச நீதிமன்ற அதிகாரத்தை இந்திய அரசு ஆக்கிரமிப்பதை உணர்கிறோம். உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள அரசியல் வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், தங்களின் விருப்பத்திற்குரிய நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகளை உருவாக்குகின்றனர். நாங்கள் வெளிப்படையாக இக்கருத்தை செய்தியாளர்களிடம் சொல்வதற்குக் காரணம், இந்தத் தேசத்திற்கு நாங்கள் செலுத்த வேண்டிய நன்றிக் கடன் ஆகும்”.



மேற்கண்ட உச்ச நீதிமன்ற நான்கு நீதிபதிகளும் முதல் முதலாக செய்தியாளர்களைச் சந்தித்து, தங்களின் விமர்சனங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்ட நேரம் மிக முகாமையானது.



குசராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த அமித்சா, சொராபுதீன் இணையரைப் போலி மோதலைச் சித்தரித்துக் கொலை செய்யக் காவல்துறையினரைத் தூண்டினார் என்ற வழக்கில் கைதாகி சிறை சென்று, அவர் பிணையில் வெளியில் இருந்த காலம்! அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி லோயா, “சாலை விபத்தில்” கொல்லப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்ட அமர்வில் விசாரிக்கப்பட்ட காலத்தில்தான் நான்கு நீதிபதிகளும் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.



மோகன் பகவத் – மோடி பாசிச ஆட்சியில் அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. இக்காலத்தில் ரஞ்சன் கோகோய் – மாநிலங்களவை உறுப்பினராக அமர்த்தப்படுகிறார். அவரும் அதை எதிர்ப்பார்த்திருந்தது போல் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறார்.



தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒரு கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.



இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் இருக்கிறது. இந்நீதிமன்றங்களின் அதிகாரம் இந்திய அரசு நிர்வாகத்துக்குக் கட்டுப்படாத தன்னாட்சி அதிகாரம். எனவே, உயர் நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்வுக்குப் பின் அரசு மற்றும் தனியார் பதவி எதையும் ஏற்கத் தடை விதித்து, சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு ஈடாக, இந்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்குக் கூடுதலான சம்பளமும், ஓய்வுக் காலப் பலன்களும் அளிக்கலாம்!



பணியில் இருந்தபோது, 2019 மார்ச்சு மாதம் நடந்த ஒரு வழக்கில், “பணி ஓய்வுக்குப் பிறகு நீதிபதிகள் பதவிகள் பெறுவது நீதித்துறை சுதந்திரத்தின் மீதான வடு (Scar)” எனப் பேசியவரும் இதே ரஞ்சன் கோகாய்தான்! இப்போது, அவரே நீதித்துறை தன்னாட்சியின் மீது வடுவை ஏற்படுத்தியிருக்கிறார்.



ரஞ்சன் கோகோய் – அவருக்குக் கீழ் பணியாற்றிய பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற புகார் மனு புதையுண்டு போனதும் இந்நேரத்தில் நினைவுக்கு வருகிறது!


தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



Friday, February 28, 2020

தில்லி வன்முறைகளை பா.ச.க.வினர் தமிழ்நாட்டிலும் கட்டவிழ்த்துவிடும் அபாயமுள்ளது! தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!


தில்லி வன்முறைகளை பா.ச.க.வினர்

தமிழ்நாட்டிலும் கட்டவிழ்த்துவிடும் அபாயமுள்ளது!
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


தில்லியில் கடந்த 23.02.2020 முதல் நடந்து கொண்டிருக்கும் மதப்படுகொலைகளும், மதக் கலவரங்களும், வீடுகள் – கடைகள் கொளுத்தப்படுவதும், தமிழ்நாட்டிலும் தொடங்கி விடுமோ என்ற அச்சம் பெருமளவுக்கு ஏற்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், மக்கள் தொகைப் பதிவேடு, என்.ஆர்.சி. ஆகியவற்றில் இந்தியாவில் குடியுரிமைப் பதிவில் முதல் தடவையாக மதத்தை அடிப்படையாக்கி செயல்படுத்த உள்ளார்கள். பா.ச.க ஆட்சியினரின் இவ்வாறான இசுலாமிய எதிர்ப்பு - ஆரியத்துவா மதத் தீவிரவாதம் (இந்துத்துவா) ஆகியவற்றைக் கண்டித்து, அனைத்திந்தியா முழுவதும் இசுலாமிய மக்களும், இந்து சனநாயகவாதிகளும் சனநாயக வழியில் பெருந்திரள் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர்.

சனநாயக அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி ஆட்சி, மக்களின் மாற்றுக் குரலுக்கு செவி கொடுத்து இணக்கமான தீர்வு காண முயற்சி எடுக்காமல், அரசதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் போராட்டங்களை வன்முறை மூலம் முறியடிக்கும் சட்ட விரோதச் செயல்களில் இறங்கியுள்ளது.

இதன் தொடக்கமாக, இசுலாமிய மக்கள் அறவழியில் நடத்தும் காத்திருப்புப் போராட்டக் களங்களில் பா.ச.க.வினர் எதிர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். கடந்த 23.02.2020 முதல் தில்லியில் பா.ச.க.வினரின் தூண்டுதலால் நடந்த வன்முறைகளில் சற்றொப்ப 40 பேர் கொல்லப்பட்டார்கள். இருநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

இந்த வன்முறையைத் தொடங்கி வைக்கும் வகையில் பா.ச.க.வின் நடுவண் அமைச்சர் அனுராக் தாக்குர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என ஏற்கெனவே தில்லிப் பொதுக்கூட்டத்தில் பேசினார். பா.ச.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான பர்வேஷ் வர்மா, “சாகின்பாக் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கொல்ல வேண்டும், முசுலிம் பெண்களை பாலியல் வன்முறை செய்ய வேண்டும்” என்று வெளிப்படையாகப் பேசினார். பா.ச.க.வின் தில்லி பகுதித் தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா, “சாகின்பாக் போராட்டக்காரர்களை வெளியேற்ற கெடு விதிக்கிறேன். அதற்குள் வெளியேற்றவில்லையென்றால், நாங்கள் மோதுவோம்! காவல்துறைக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம்” என்று வலைத்தளங்களில் எழுதினார். பா.ச.க. நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பேசியோர் “துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்” என்ற முழக்கத்தைப் பொது முழக்கமாக்கினர்.

எனவே, பா.ச.க. தலைவர்கள் வெளிப்படையாகவே இந்த மதப்படுகொலைகளை – வன்முறைகளைத் தூண்டிவிட்டுள்ளனர். உண்மையான இந்தக் குற்றவாளிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை.

இந்த வன்முறையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு ஆணையிடுமாறு வேண்டுகோள் வைத்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் வழக்குத் தொடுத்தார்கள். அந்த வழக்கை, 26.02.2020 அன்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதி முரளிதர், மேற்கண்ட மூன்று பேர் மீதும் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கேட்டு, கடுமையாக விமர்சித்தார். அந்த விசாரணையின்போதே, இந்திய அரசின் முதன்மை வழக்கறிஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) மேற்படி நீதிபதியின் அணுகுமுறையைக் கடுமையாக எதிர்த்தார்.

மேற்படி வன்முறைகளைத் தடுக்க – கட்டுப்படுத்த – குற்றங்களின் மீது தில்லி காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை மறுநாள் (27.02.2020) அறிக்கையாகக் கேட்டிருந்தார். இன்று விசாரணை தொடர இருந்தது. இதற்குத் தண்டனையாக, பா.ச.க. ஆட்சி 26.02.2020 அன்று இரவு மேற்படி நீதிபதி முரளிதர் அவர்களை தில்லியிலிருந்து பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்துள்ளது மோடி ஆட்சி! இந்தப் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி துணை போயுள்ளார்.

செர்மனியில் 1930களில் இட்லர் ஆட்சி நீதித்துறை, காவல்துறை, படைத்துறை அனைத்தையும் தன் கட்சியின் வன்முறைத் தொண்டர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுபோல், தன் கட்சிக்காரர்களின் வன்முறைகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாதபடி தடை போட்டுள்ளது மோடி ஆட்சி. நீதிபதிகள் சட்டப்படி செயல்பட முடியாத பேராபத்து ஏற்பட்டுள்ளது.

அதே 26.02.2020 அன்று, தில்லி வன்முறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.கே. கவுல், ஜோசப் ஆகியோர் தில்லி வன்முறைகளை கண்டனம் செய்யும் தொனியிலும், காவல்துறையின் செயல்பாடுகளின் மீது அதிருப்தி தெரிவிக்கும் வகையிலும் பேசியதற்காக இந்திய அரசின் முதன்மை வழக்கறிஞர் துஷார் மேத்தா, “இப்படியெல்லாம் நீங்கள் பேசக்கூடாது” என்று எச்சரித்தார். குறிப்பாக, தில்லி வன்முறைகளை “துரதிர்ஷ்டமான (Unfortunate) நிகழ்வுகள்” என்று மேற்படி நீதிபதிகள் கூறியபோது, இந்த சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதிகளுக்குக் கட்டளையிடும் தொனியில் துஷார் மேத்தா கூறினார்.

தில்லி மத வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மை எண்ணிக்கையில் முசுலிம்களும், சிறுபான்மை எண்ணிக்கையில் இந்துக்களும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமான இந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், நாட்டின் தலைமையமைச்சர் நரேந்திர மோடியும் ஆவர். உள்துறை அமைச்சர் அமித்சா இந்த வன்முறைகளை ஏன் கண்டிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அமித்சா கண்டித்தால் அவரை, “நம்பிக்கைத் துரோகி” என்று தில்லி வன்முறையாளர்கள் சாடுவார்கள் அல்லவா?

தமிழ்நாட்டிற்கும் ஆபத்து
------------------------------------------
தில்லி வன்முறையைத் தமிழ்நாட்டில் அரங்கேற்றுவோம் என்று மறைமுகமாகவும், நேர்முகமாகவும் பா.ச.க.வின் தலைமைப் பொறுப்புகளில் உள்ள எச். இராசா உள்ளிட்ட சிலர் பொது மேடைகளில் பேசி வருகிறார்கள்; சமூக வலைத்தளங்களில் சவால் விட்டு எழுதுகிறார்கள். ஏற்கெனவே இவர்கள் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு இந்து மத நிகழ்வுகளை வன்முறைக் கலவரங்களாக மாற்றியவர்கள்.

நாளைக்கு (28.02.2020) பா.ச.க.வினர் தமிழ்நாடு முழுவதும் நடத்தவுள்ள பேரணிகளின் மூலம் தமிழ்நாட்டின் எந்தெந்த பகுதிகளில் – என்னென்ன வழிகளில் வன்முறைகள் அரங்கேறுமோ என்று தமிழ்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டில் அமைதியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9025162216, பகிரி : 7667077075
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, January 18, 2020

துக்ளக் விழாவா? சனநாயகத்தைத் தூக்கிலிடும் விழாவா? பெ. மணியரசன் அறிக்கை!



துக்ளக் விழாவா? சனநாயகத்தைத்

தூக்கிலிடும் விழாவா?

ஐயா பெ. மணியரசன்

தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

ஆர்.எஸ்.எஸ். சார்பு ஏடான “துக்ளக்”கின் ஐம்பதாம் ஆண்டு விழா 14.1.2020 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

ஆரிய அதிகார பீடத்தின் ஆணவக் குரலாக, தமிழ்நாட்டில் துக்ளக் இதழ் வந்து கொண்டுள்ளது.

இவ்விழாவில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் காணொலி உரை காட்டப்பட்டது. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயடு, நடிகர் இரசினிகாந்த் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழ்நாட்டு அரசியலுக்கான ஆர்.எஸ்.எஸ். வேலைத் திட்டத்தை முன்வைத்தார்.

மக்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் நாட்டை முன்னோக்கி இழுத்துச் செல்வோராகச் செயல்பட வேண்டும் என்றார் மோடி! இதன் பொருள், பா.ச.க. அரசின் எதேச்சாதிகார – வர்ணாசிரமவாதச் சட்டங்களை மற்ற கட்சிகளும் மக்களும் எதிர்த்தால் அவர்களை எதிர்த்து வீதிக்கு வந்து அவர்களை முறியடிக்க வேண்டும் என்பதாகும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம். தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து சனநாயக வழியில் போராடும் மாணவர்கள், மக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்துகிறது பா.ச.க. அவர்களின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துகிறது.

காசுமீர் உரிமைப் பறிப்பு, முத்தலாக் தடைச் சட்டம், மாநில அரசுகள் வணிக வரி விதிக்கும் உரிமைப் பறிப்பு (ஜி.எஸ்.டி.), ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதியில் கைவைத்து மேல்சாதியினர்க்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது போன்ற உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளைத் தனது அரசின் “சாதனை”களாக அந்தக் காணொலியில் மோடி முழங்கியுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருந்த இத்தனை உரிமைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்துவிட்டதைச் “சாதனை”களாகக் கூறிய மோடி, இந்திய அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் மக்களுக்குத் தலைவணங்குகிறேன் என்று அதே காணொலியில் கூறியுள்ளார். இதன் பொருள் என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோதே, நடுவண் அரசில் மிகையான அதிகாரக் குவிப்புகள் வைத்து, ஒற்றை ஆட்சித் தன்மை மேலோங்கியுள்ள கூட்டாட்சியாக அமைத்தார்கள் என்று உலக அரசமைப்புச் சட்டங்களை அலசி ஆராய்ந்த பேராசிரியர் கே.சி. வியர் கூறினார்.

கொஞ்ச நஞ்சமிருந்த மாநில அதிகாரங்களையும் அன்றாடம் பறித்து வருகிறது மோகன் பகவத் – மோடி ஆட்சி! திரௌபதியின் சேலையை உரிந்த துச்சாதனன் போல், சனநாயக உரிமைகளையும் மாநில உரிமைகளையும் அன்றாடம் பறித்து வருகிறது பா.ச.க. ஆட்சி!

அவர்களால் அம்மணமாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தைப் பாராட்டி ஆராதிக்கும் பக்தர்களாக இந்திய நாட்டு மக்கள் மாற வேண்டும் என்பது மோடியின் எதிர்பார்ப்பு. அதனை சூசகமாகச் சொல்லத்தான் மேற்கண்ட துகிலுரியும் காட்சிகளை வர்ணித்துளளார் மோடி!

இனியும் துகிலுரியப்படும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உச்சி மோந்து உயர்த்திப் பிடிக்கும் மக்களுக்குத் தலைவணங்குவதாக மோடி கூறியுள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் “தலைவணங்கும்” தத்துவத்தில், அரசமைப்புச் சட்டத்தில் மிச்சம் மீதியுள்ள மக்கள் உரிமைகள், மாநில உரிமைகள், தேர்தல் சனநாயகம் போன்றவற்றைக் காலி செய்யும் உத்தி அடங்கி இருக்கிறது.

நடிகர் இரசினிகாந்தும், துணிச்சல் பெற்று, தி.மு.க.வையும் காங்கிரசையும் தாக்கிப் பேசியுள்ளார். கையில் “முரசொலி” வைத்திருப்பவர் தி.மு.க.காரர்; ”துக்ளக்” வைத்திருப்பவர் அறிவாளி என்று வர்ணாசிரம பாணியில் தரப் பிரிப்பு செய்துள்ளார்.

துக்ளக் ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி தமிழ்நாட்டில் பா.ச.க.வும் காங்கிரசும் மட்டும்தான் இருக்க வேண்டும். காங்கிரசுக் கட்சியோ இப்போது தி.மு.க. போலவே மாறிவிட்டது. அதனால் தமிழ்நாட்டில் மாற்று அரசைக் கொண்டு வருவதற்கான ஒரே கட்சி பா.ச.க. மட்டுமே என்று பேசியுள்ளார்.

பிறப்பு அடிப்படையில் – மேல், கீழ் பேசும் வர்ணாசிரம – சனாதனத்தைத் தனது தத்துவமாகக் கொண்டுள்ள துக்ளக் ஏட்டின் ஆசிரியர் குருமூர்த்தி, தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மரபணு (DNA) பாரததேசத்திற்கு எதிரானது என்றும், அப் பல்கலைக்கழகத்தை மூடிவிடலாம் என்றும் அவ்விழாவில் பேசியுள்ளார்.

வார இதழ் ஒன்றின் பொன்விழாவாகவா அந்நிகழ்வு நடந்துள்ளது? ஒட்டுமொத்த இந்தியாவின் சனநாயக உரிமைகளைப் பறிக்கும் உள்நோக்கத்துடன் தலைமை அமைச்சரின் காணொலி உரை, இரசினிகாந்தின் வெளிப்படையான ஆர்.எஸ்.எஸ். பாணி உரை, தமிழ்நாட்டில் பா.ச.க. ஆட்சிக்கும், சவகர்லால் நேரு பல்கலைக்கழக மூடலுக்கும் ஆன குருமூர்த்தியின் உரை ஆகிய ஆரியத்துவா திட்டங்களின் பரப்புரை மாநாடாக அவ்விழா நடந்துள்ளது.

இந்த ஆரியத்துவா வேலைத் திட்டங்கள் அரங்கேற வழிவிடப் போகிறோமா? அவற்றை வழி மறிக்கப் போகிறோமா? இந்த வினாவை ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் கேட்டுக் கொண்டு விடை சொல்லுங்கள்; விழிப்புணர்வு கொள்ளுங்கள்; ஒல்லும் வகையில் எல்லாம் செயல்படுங்கள்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9025162216, பகிரி : 7667077075
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, January 7, 2020

ஜே.என்.யு. வன்முறை : துணை வேந்தர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்! பெ. மணியரசன் கண்டனம்!



ஜே.என்.யு. வன்முறை :

துணை வேந்தர் உள்ளிட்ட
அனைவரையும் கைது செய்ய வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!


ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யினர் 5.1.2020 இரவு தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்திய வன்முறை வெறியாட்டம், மோடி அரசு – இந்தியாவில் இட்லரின் பாசிச ஆட்சியை நிலைநிறுத்தும் வேலையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

நேரு பல்கலைக்கழகத்தின் வாயில்கள் மற்றும் சுற்றுச்சுவரைச் சுற்றி பல நாட்களாகக் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முகமூடி அணிந்து கொண்டு, ஏ.பி.வி.பி. வன்முறையாளர்கள் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களையும், பேராசிரியர்களையும் தாக்கிப் படுகாயப்படுத்திப் பல மணி நேரம் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

அப்பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிசே கோஷைத் தேடிப் பிடித்துத் தாக்கியுள்ளனர். அம்மாணவியின் முகம் அடையாளம் தெரியாத அளவிற்குப் படுகாயப்படுத்தப் பட்டுள்ளது.

அதேபோல், இந்துத்துவா அரசியலை ஏற்காத பேராசிரியர்களையும், தேடித்தேடி தாக்கியுள்ளனர். தாக்கப்பட்டவர்களில் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் அனைவர்க்கும் முதலுதவி செய்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி விட்டனர். இதை அம்மருத்துவமனையில் பணிபுரியும் அலுவலர்கள் சிலரே ஏடுகளுக்குத் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சனநாயக வழியில் போராடிய தில்லி ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழக மாணவர்களை, அலிகர் முசுலிம் பல்கலைக்கழக மாணவர்களை அண்மையில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கினர். நேரு பல்கலையில் காவல்துறையினரின் கண்காணிப்பில் ஏ.பி.வி.பி.யின் முகமூடி வன்முறையாளர்கள் தாக்கியுள்ளனர். காவல்துறையினர் குவிந்திருந்த வாயில் வழியாகத் தான் முகமூடி வன்முறைக் கும்பல் சாவகாசமாக வெளியேறியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மீரட்டில் காவல்துறையினர் அப்பாவிகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்றவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு போனபோது அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துத் திருப்பி அனுப்பினர். அதில் இரண்டு பேர் இறந்து போனார்கள். உ.பி.யில் பா.ச.க.வின் யோகி ஆதித்தியநாத் ஆட்சி நடக்கிறது.

அசாமில் பா.ச.க.வின் சர்வானானந்தா கோனோவால் ஆட்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தவர்களை சுட்டுக் கொன்றது. அங்கும் காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. பா.ச.க. அரசுகளின் அழுத்தத்தின் பேரில்தான் இம்மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மோகன் பகவத் – மோடி அரசின் இந்துத்துவா கலகத் திட்டம் – ஒரே பாணியில் இருப்பதை நேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் அடையாளம் காட்டுகிறது.

நேரு பல்கலைக்கழக மாணவர்களையும், பேராசிரியர்களையும் படுகாயப்படுத்தித் தப்பித்த வன்முறைக் கும்பலில் உள்ள அனைவரையும் தளைப்படுத்தவும், இத்தாக்குதலுக்கு உடந்தையாகச் செயல்பட்ட அப்பல்கலைக்கழகத் துணை வேந்தர் எம். ஜகதீஷ் குமாரையும் கைது செய்து, பதவி நீக்கம் செய்யவும், இவ்வன்முறைச் சதியில் பங்கு கொண்ட – துணை நின்ற அனைவரையும் சிறையில் அடைக்கவும், ஒருங்கிணைந்த மக்கள் எழுச்சி அனைத்திந்திய அளவில் தேவை!

பா.ச.க.வினர் தமிழ்நாட்டில் அதே பாணி இந்துத்துவா கலகங்களை நடத்தாமல் தடுக்கத் தமிழ் மக்கள் கட்சி வேறுபாடு இன்றி, விழிப்பாய் இருக்க வேண்டும். பா.ச.க.வை விலக்கி வைக்க வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, November 10, 2019

அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது! பெ. மணியரசன் அறிக்கை!



அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்
தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


அரசியல் ஆக்கப்பட்ட ஆன்மிக வழக்கான அயோத்தி வழக்கில், இன்று (09.11.2019) – உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் வழங்கிய தீர்ப்பு, முற்றிலும் ஏமாற்றமளிக்கிறது.
சர்ச்சைக்குரிய 1,500 சதுர கெஜம் முழுவதும் இராமர் கோயிலுக்கு உரியது என்றும், அதற்கு அருகிலே உள்ள 67 ஏக்கர் திடலில் ஐந்து ஏக்கர் நிலத்தை இந்திய அரசு மசூதிக்காக ஒதுக்கித் தர வேண்டும் அல்லது அயோத்தி நகருக்குள் முசுலிம்கள் விரும்பும் ஒரு பகுதியில் 5 ஏக்கர் நிலம் மசூதிக்காக உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கித் தர வேண்டும், மூன்று மாதத்திற்குள் இராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை நடுவண் அரசு நிறுவ வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010இல், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரித்து, இந்துக்களுக்கு இரண்டு பங்கும், முசுலிம்களுக்கு ஒரு பங்கும் கொடுத்து அளித்த தீர்ப்பே நடுநிலை தவறியது என்று அப்போது பேசப்பட்டது. ஆனால், அலகாபாத் தீர்ப்பைவிட பின்தங்கியதாகவும், தரவுகளையும், சாட்சியங்களையும் முதன்மைப்படுத்தாமல் ஒருசார் மத நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டதாகவும் இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.
தீர்ப்புரையின் செயலாக்கப் பகுதியில் (முடிவுரையில்), 796ஆம் பத்தியில் “நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியாது” என்று சரியாகச் சொன்ன உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில் “நம்பிக்கையை”த்தான் கூடுதலாகக் கொண்டிருக்கிறது.
தீர்ப்பின் 798ஆம் பத்தியில் 1949 திசம்பர் 22 / 23 நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் இந்துக் கடவுளான இராமர் சிலையை வலுவந்தமாக வைத்தது குற்றச்செயல் என்று கூறும் இத்தீர்ப்பு, அந்த நாளிலிருந்து இந்துக்கள் அங்கு வழிபாடு நடத்தி வருகிறார்கள் என்றுகூறி, அதையொரு அனுபோகப் பாத்தியதையாகக் கருதுகிறது. அதேவேளை, அங்கு அதன்பிறகு முசுலிம்கள் வழிபாடு நடத்தவில்லை என்றும் தெரிவிக்கிறது. இந்த பதிவு (Observation) எதற்காகக் கூறப்படுகிறது?
“அனுபோகப் பாத்தியதை இல்லை” என்ற பொருளில்தான் கூறப்படுகிறது. அதேபோல், 1857க்கு முன் அந்தக் கட்டடத்தில் முசுலிம்கள் தொழுகை நடத்தினார்கள் என்பதற்கு சான்று இல்லை என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது. இந்துக்கள் 1857க்கு முன் அந்த இடத்தில் வழிபாடு நடத்தினார்களா, இல்லையா என்பது பற்றி இத்தீர்ப்பு எதுவும் கூறவில்லை! உண்மையில், இதற்கும் சான்றில்லை!
1934இல் மசூதிக்குள் அத்துமீறிய இந்துக்களில் ஒரு சாராரையும், 1949இல் மசூதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து இராமர் மற்றும் சீதை படிமங்கள் வைக்கப்பட்டதையும், 1992 திசம்பர் 6-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் சட்டத்தை மீறிய செயல் என்று கண்டிக்கும் இத்தீர்ப்பு, அவ்வாறான அத்துமீறல்களையே “இந்துக்களின் நம்பிக்கை”க்கான அழுத்தமாக எடுத்துக் கொள்கிறது. ஆனால், “நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கவில்லை, அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகிறோம்” என்று சொல்கின்ற இந்தத் தீர்ப்பு, ஐயத்திற்கு இடமின்றி எந்த வரலாற்றுத் தரவையும் அகழ்வாராய்ச்சித் தரவையும் சுட்டிக்காட்டவில்லை!
இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பற்றது என்றும், அனைத்து மக்களுக்கும் சமத்துவம் வழங்குகிறது என்றும், அதுவே நமது வழிகாட்டும் நெறி என்றும் புகழ்ந்து பேசும் தீர்ப்புரை – ஒரு சாரார் கூறும் மதநம்பிக்கை என்ற வாதத்தை மட்டுமே அடிச்சரடாகக் கொண்டு இத்தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது.
சொத்துரிமை குறித்த குடிமையியல் வழக்குதான் இது என்று சொல்லிக் கொள்ளும் இத்தீர்ப்பு, அதற்கான அடிப்படைச் சான்றுகள் இன்றி ஒரு தரப்புக்கு முழுசொத்துரிமையையும் வழங்கியிருக்கிறது. மத நம்பிக்கை அடிப்படையிலும், அரசதிகாரம் மற்றும் பெரும்பான்மை என்ற அளவுகோல் வைத்தும், இத்தீர்ப்பு வழங்கப்பட்டதா என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கு எழுவது இயல்பே!
ஏற்கெனவே மதுரா, ஆக்ரா போன்ற பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகள் இந்துக் கோயில்களை இடித்துக் கட்டப்பட்டது என்றும், அவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் ஆரிய இந்துத்துவா அமைப்புகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இப்போது வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இந்துத்துவா வகுப்புவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் அபாயமிருக்கிறது.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

பாரத ரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு! பெ. மணியரசன்



பாரத ரத்தினா

சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


விநாயக தாமோதர சாவர்க்கரின் “இந்துத்துவா”கொள்கை பக்தியினால் உருவானதன்று. வி.டி. சாவர்க்கர் பகுத்தறிவாளர்; அறிவியலுக்குப் புறம்பான பக்திக் கதைகளை, மூட நம்பிக்கைகளை ஏற்காதவர்!
பின்னர் எதற்காக, இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட “இந்துத்துவா”அரசியலை முன்னெடுத்தார்? இனக்கொள்கைக்காக; ஆரிய இனக் கொள்கைக்காக!
ஆரிய பிராமணமேலாதிக்கம் இந்து சமூகத்தில் நிலவ வேண்டும் என்பதற்காக! ஆரிய பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக உள்ள இசுலாமிர்களை எதிர்ப்பதற்காக! சாவர்க்கர் பிராமணர்.
சந்திரநாத் பாசு என்ற வங்காளியால் முதல் முதல் கட்டமைக்கப்பட்ட சொற்கோவை “இந்துத்துவா”என்கின்றனர் ஆய்வாளர்கள். அச்சொற்கோவையைத் தனது ஆரிய பிராமண மேலாதிக்கவாத அரசியலுக்கான தத்துவச் சொல் ஆக்கினார் சாவர்க்கர்.
இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் இந்துக் கடவுள்களை வழிபடும் கோடிக்கணக்கான பெரும்பான்மை மக்களை இந்துமத அடையாளத்தை முதன்மைப்படுத்தி ஈர்த்துக் கொள்ளும் வசதி “இந்துத்துவா”கோட்பாட்டில் இருக்கிறது. ஆரிய சாணக்கிய உத்திதான் சாவர்க்கரின் இந்துத்துவா உத்தி! அதில் இந்து பக்தி இல்லை!
அந்தமான் சிறையிலிருந்து 1921இல் விடுதலையாகி சொந்த மாநிலத்தில் (மராட்டியம்) இரத்தினகிரியில் வசித்தார். "இந்து மகாசபா" என்ற மதவாத அமைப்பில் சேர்ந்தார். 1923இல் தனது “இந்துத்துவா”நூலை வெளியிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925 இல் தொடங்கப்பட்டது. இது தனியாகவும் இந்து மகாசபா தனியாகவும் செயல்பட்டன.
சாவர்க்கர் புகழ் பரப்புவதேன்?
-----------------------------------------------
ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர்கள் தொடங்கிய “சனசங்கம்”என்ற அரசியல் கட்சியோ, அதன் மறு பிறப்பான பா.ச.க.வோ சாவர்க்கரை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. இந்திய ஆட்சியை 1998இல் பிடித்தபின் சாவர்க்கர் புகழ்பேசத் தொடங்கியது பா.ச.க.! சாவர்க்கர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் வானூர்தி நிலையத்திற்கு “வீரசாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்” என்று 2002இல் பா.ச.க. ஆட்சி பெயர் சூட்டியது.

பின்னர், சாவர்க்கரின் இந்துத்துவா கோட்பாட்டை பிரபலப்படுத்தினர் பா.ச.க.வினர். இப்பொழுது சாவர்க்கருக்குப் “பாரத இரத்தினா” விருது வழங்க வேண்டும் என்கிறார், பா.ச.க.வின் உள்துறை அமைச்சர் அமித்சா. இந்திய வரலாற்றை சாவர்க்கர் பார்வையில் புதிதாக எழுத வேண்டும் என்கிறார் அவர்.
பா.ச.க. சாவர்க்கர் பக்கம் அதிகமாகச் சாய்வதேன்? ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ அனுமான் முழக்கங்களும் வழிபாடும் மட்டுமே இந்துக்களை ஈர்க்கப் போதுமான தாக இல்லை.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இன அரசியல் முன்னுக்கு வருகிறது. மாநில கட்சிகள் அதிகமாகி விட்டன. இன அரசியலுக்கு ஈர்ப்பு அதிகம். இந்துத்துவா பேசும் சிவசேனை கூட மராத்திய இனப்பெருமை பேசுகிறது. “பசுமாட்டு வட்டாரம்”என்று அழைக்கப் படும் இந்தி மாநிலங்களுக்குத் தனித்தேசிய இனம் கூற முடியவில்லை. மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட போது மொழி - தேசிய இனம் ஆகியவற்றின்படி பெரும்பாலான மாநிலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பசுமாட்டு வட்டாரத்தில் உத்தரப்பிரதேசம் (வடக்கு மண்டலம்), மத்தியப் பிரதேசம் (நடு மண்டலம்) என்று திசையை அடையாள மாகக் கொண்டு மாநிலங்கள் உருவாக்கப் பட்டன.
இந்து மதம் என்பதையே ஓர் இனமாக சித்தரிக்க இந்துத்துவா என்ற சொற்கோவையைப் பயன்படுத்து கின்றன ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்.
இந்து என்பதை ஒரு தேசமாக - தேசிய இனமாக 1937 வாக்கில் பேசியவர் சாவர்க்கர்.
ஆமதாபாத்தில் 1937ஆம் ஆண்டு நடந்த இந்து மகா சபையின் 19ஆவது பேரவையில் தலைமை உரை ஆற்றிய போது சாவர்க்கர் பின்வருமாறு பேசினார் :
"இந்தியாவில் இரு தேசங்கள் அருகருகே வாழ் கின்றன. சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் பலர் இந்தியா ஏற்கனவே ஒரே தேசமாக உருக்கி ஓட்ட வைக்கப்பட்டது என்று கருதுகிறார்கள்; அல்லது அவ்வாறு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒட்ட வைக்க முடியும் என்று கருதுகிறார்கள். இவையெல்லாம் நல்ல நோக்கம் தான். ஆனால் இவையெல்லாம் சிந்தனையுள்ள நண்பர்களின் பொய்க் கனவுகள். அவர்கள் (நம்மைப் பார்த்து) வகுப்புவாத அமைப்புகள் என்கின்றனர். ஆனால் பருண்மையான உண்மை என்ன? அவர்கள் கூறும் வகுப்புவாதங்கள் என்பவை - இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையில் பல நூறு ஆண்டுகளாக வரலாறு வழங்கிய பண்பாடு - மதம் - தேசம் தொடர்பான பகைமை!
மகிழ்ச்சி அளிக்காத இந்த உண்மைகளை நாம் துணிச்சலாக சந்திக்க வேண்டும். இன்று இந்தியாவை ஒற்றைத் தன்மை உள்ள ஒரே உறுப்புகளைக் கொண்ட தேசம் என்று உணர முடியாது. முதன்மையாக இது இரண்டு தேசம் - இந்து தேசம், முஸ்லிம் தேசம்!
(V.D. Savarkar, Samagra Savarkar Wangmaya, Hindu Rashtra Darshan, Volume 6, Maharashtra prantik Hindu sabha, Poona 1963, page 296).
இந்தியாவை இரண்டு தேசம் என்று முதன் முதலில் பேசியது முஸ்லிம் லீக்கோ, முகமது அலி ஜின்னாவோ அல்ல - சாவர்க்கர் தான்! 1940இல்தான் முகம்மது அலி ஜின்னா இருதேசக் கோட்பாடு பேசுகிறார்.
மதம் வேறு இனம் வேறு
----------------------------------------
இந்து - முசுலிம் என்ற மத அடிப்படையில் இந்தியாவை இரு தேசங்களாகப் பார்த்தது சமூக அறிவியல்படி தவறு என்பதை வரலாறு மெய்ப்பித்து விட்டது. தேசிய இன அடிப்படையில் - பாக்கித்தானிலிருந்து வங்காள தேசம் பிரிந்து விட்டது. மேற்குப் பாக்கித்தானிலும் சிந்து மாநிலம், பக்தூன் மாநிலம் ஆகியவற்றில் தனிநாட்டுக் கோரிக்கை மக்கள் கோரிக்கையாக வளர்ந்துள்ளது.

இந்தியாவில் பஞ்சாப், அசாம், நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசிய இனங்கள் தனிநாடு கேட்டுப் போராடுகின்றன. வெளிப்படையாக விடுதலைப் போராட்டம் நடத்தாத மாநிலங்களில் கூட தெலுங்கு தேசம், மகாராட்டிரம் (பெருந்தேசம்), வங்காளிதேசம், கன்னடதேசம், தமிழ்நாடு (தமிழ்த்தேசம்) என்ற சொந்த தேசிய இன உணர்வுகள்தான் மேலோங்கி உள்ளன.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு, மராட்டிய மாநிலத்தில் மக்கள் தலைராக உள்ளவர் தேசியவாதக் காங்கிரசின் தலைவர் சரத்பவார். அவர் மராட்டிய மாநில முதலமைச்சராக இருந்தபோது கூட்டுறவுத் துறையில் ஊழல் செய்து விட்டார் என்று நடுவண் அரசின் அமலாக்கத்துறை, இப்போது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், அது தொடர்பாக பவாரை விசாரிக்கப் போவதாகவும் அறிவித்தது.
அச்செய்தி வெளியானவுடன், 25.09.2019 அன்று மும்பையில் சரத்பவார் செய்தியாளர்களைச் சந்தித்து, “வீரசிவாஜியின் சித்தாந்தத்தின் வழிவந்த மராத்தியன் எவனும் தில்லிக்குத் தலைவணங்க மாட்டான். நானே நேரில் மும்பை அமலாக்கத்துறை அலுவலகம் சென்று “என்னை விசாரியுங்கள்”என்று கேட்கப் போகிறேன்”என்றுகூறி, அவ்வாறு செல்லும் நாளையும் குறிப்பிட்டார். இச்செய்தி 26.09.2019 அன்று ஏடுகளில் வெளியானது. மறுநாளே (27.09.2019) மும்பை மாநகரக் காவல் ஆணையர் சரத்பவாரை அவரது வீட்டில் சந்தித்து அவ்வாறு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
சாவர்க்கர் பிறந்த மராட்டியத்தில்தான் சரத்பவார் பிறந்தார். அது ஆரிய மூளை; இது மண்ணின் மகன் மூளை! இது தில்லி வேறு - மராட்டியம் வேறு என்று இயற்கையாகச் சிந்திக்கிறது. தில்லியில் இப்போது இருப்பது மோடியின் இந்துத்துவா அரசுதான்! சரத்பவார் தாமும் இந்து என்பதால் தமது மராத்தி இனப் பெருமிதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.
சரத்பவார் ஊழல் செய்தாரா - இல்லையா என்பது குறித்து இங்கு விவாதம் செய்யவில்லை. இந்தியத் தேசியம் பேசுவோரிடையே உள்ள இயற்கையான இன முரண்பாடுகளை எடுத்துக்காட்டவே இந்த நிகழ்வு இங்கு சுட்டப்பட்டது.
இந்தியா ஒரு தேசமன்று - இருதேசமன்று - பல தேசங்களைக் கொண்ட துணைக் கண்டம்!
“பாரத ரத்தினா”
------------------------
வி.டி. சாவர்க்கருக்குப் பாரத ரத்தினா விருது வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்சா கோரிக்கை வைக்கிறார். சாவர்க்கரின் ஆய்வைப் பின்பற்றி இந்தியாவின் வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும் என்கிறார்.

அப்படி என்ன வரலாற்று ஆய்வை சாவர்க்கர் நிகழ்த்தி விட்டார்? வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் பட்டாளத்தில் இருந்த இந்து முசுலிம் வீரர்கள் இணைந்து, 1857-இல் உத்தரப்பிரதேச மண்டலத்தில் வெள்ளைப் படை அதிகாரிகளை எதிர்த்துப் ஆயுதப் போர் நடத்தினர். அதை ஆங்கிலேயர் சிப்பாயக் கலகம் என்றனர்; காலனி ஆதிக்க எதிர்ப்பாளர்கள் விடுதலைப் போர் என்றனர். இலண்டனில் வசித்த கம்யூனிசதத் தத்துவத் தலைவர் காரல் மார்க்ஸ் “சிப்பாய்க் கலகத்தை”19ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்றார்.
வெள்ளை அரசிடம் நான்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையான பிறகு இந்து மகாசபையில் சேர்ந்து இந்து மதவாதக் கட்டுரைகள் எழுதிய சாவர்க்கர் 20ஆம் நூற்றாண்டில் மேற்படி “சிப்பாய்க் கலகத்தை”இந்திய விடுதலைப் போர் என்று எழுதினாராம்! அந்த வரலாற்று அறிவின் வெளிச் சத்தில் இந்தியாவின் புதிய வரலாற்றை - இந்துத்துவா பரப்புரைக்கு ஏற்ப எழுத வேண்டும் என்கிறார் அமித்சா! இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று சிப்பாய்ப் புரட்சியை - முதல் முதலாகக் கண்டு பிடித்தவரே சாவர்க்கர் தாம் என்பது போல் அமித்சா அளக்கிறார்.
ஆங்கிலேயர் ஆக்கியவை
-----------------------------------------
இந்தியா, இந்து மதம் என்பவையெல்லாம் வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய பெயர்கள்! இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா என்ற பெயரிலோ, பாரதம் என்ற பெயரிலோ ஒரு நாடு இருந்ததே இல்லை. நூற்ற மைப்பது ஆண்டுகளுக்கு முன் இந்து மதம் என்ற பெயரில் ஒரு மதமும் இருந்ததில்லை.

இந்தியா என்ற பெயரில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பு - ஒரு நாடு - பிரித்தானியப் பீரங்கிகளின் வல்லுறவால் பிறந்தது. பெற்றவர்கள்தாம் தங்கள் பிள்ளைக்கு இந்தியா என்று பெயர்ச் சூட்டினார்கள். இந்த நிலப்பரப்பில் தனித்தனியே ஆட்சி நடத்திய பல்வேறு இனங்களைச் சேர்ந்த அரசர்களையும் படைத் தலைவர்களையும் வீரர்களையும் சுட்டுக் கொன்றும் தூக்கிலிட்டுக் கொன்றும் அவர்களின் புதைகுழிகளின் மேல் இந்தியா என்ற பெயரில் புதிய ஆட்சியை நிறுவினர். சிந்து ஆற்றை அடையாளமாக வைத்து மேற்கத்திய வணிகர்கள் உருவாக்கிய இந்தியா என்ற பெயரை அந்த நாட்டிற்குச் சூட்டினர்.
இந்திய மொழி எதிலும் அதற்கு முன் இந்தியா என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. புராணக் கதை ஒன்று, சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் பிறந்த பரதன் என்பவன் அரசனாகி, வடநாட்டில் ஒரு பகுதியை ஆண்டான் என்று கூறுகிறது. அந்தப் “பரதன்”ஆட்சிக்கும் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஓர் ஆற்றில், ஒரு துறையில் குளித்த தொடர்பு கூட (ஸ்நானப் பிராப்தி கூட) கிடையாது. தமிழர்களைப் போன்றே பல்வேறு இனத்தவர்களுக்கும் அந்தப் பரதனுடன் எந்தத் தொடர்பும் கிடையாது.
ஆணாகிய அந்தப் பரதனைத்தான் பெண்ணாக மாற்றி அனைத்திந்திய வலதுசாரிகளும், இடதுசாரிகளும் “பாரத மாதா”பசனை பாடுகின்றனர்! இதில் காவியும் சிவப்பும் அண்ணன் தம்பிகள்! அக்காள் தங்கைகள்!
இந்து மதம்
------------------
இந்து மதத்தைத் தோற்றுவித்த ஒரு குரு யாரும் இல்லை. இந்து மதத்திற்கென்று தலைமை பீடம் எங்கும் இல்லை. பல்வேறு சமயப் பிரிவுகளின தொகுப்பின் பெயர் இந்து மதம். கடவுள் உண்டு என்பவரும், இல்லை என்பவரும் சம உரிமையோடு இந்து மதத்தில் இருக்கலாம். கடவுள் மறுப்புக் கோட்பாடான உலகாய்தம் இந்து மதக் கோட்பாடுகளில் ஒன்றுதான்!

ஆரிய பிராமணர்கள் உருவாக்கிய வர்ணாசிரமம் - சாதிப் பிரிவுகள் - சாதி ஆதிக்கம் போன்றவை இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகள் என்று கூறும் இந்து மத மூல நூல் எதுவும் தமிழில் இல்லை. பகவத் கீதை என்பது கிறித்துவர்களுக்கு பைபிள் போல - இசுலாமியர்களுக்குக் குரான் போல இந்துக்களின் தவிர்க்க முடியாத தலைமை நூல் அன்று. தமிழ்ச் சைவர்கள் பகவத் கீதையை ஏற்க மாட்டார்கள். தமிழ் வைணவர்களும் பகவத் கீதையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. தமிழ் வைணவர் களுக்கு ஆழ்வார்கள் பாசுரங்கள்தாம் இன்றியமை யாதவை! தமிழ் வைணவர்களின் கடவுள் பெருமாள் - திருமால்!
பகவத் கீதையை வியாசர் எழுதவில்லை; கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் ஆரிய பிராமண ஆதிக்க வாதிகளால் எழுதப்பட்டு அது மகாபாரதத்தில் இடைச் செருகலாக சேர்க்கப்பட்டது என்று இராகுல சாங்கிருத்தியாயன் உள்ளிட்ட பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கிறித்துவம், இசுலாம் என்பவை மதத்தின் பெயரே தவிர, இனத்தின் பெயர் அன்று. அதேபோல், இந்து என்பது மதத்தின் பெயரே தவிர, இனத்தின் பெயர் அன்று; தேசத்தின் பெயர் அன்று!
ஆரிய பிராமண ஆதிக்கவாதிகள் மெய்யான கடவுள் நம்பிக்கையாளர்கள் அல்லர்! அவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கும் தங்களின் பொருள் சுரண்டலுக்கும் கடவுளைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்! கடவுளைப் பயன்படுத்தித் தூக்கி எறியும் ஆதிக்க வெறியர்கள்! நுகர்வு வெறியர்கள்! எந்த மோசடிக்கும் அஞ்சாதவர்கள்!
மதம் என்பது மொழி கடந்து, இனம் கடந்து, நாடு கடந்து பரவும் ஒரு கருத்தியல் தத்துவம்! அப்படித்தான் பௌத்தம், கிறித்துவம், இசுலாம் போன்ற மதங்கள் பல நாடுகளில் பரவியுள்ளன. இந்துக் கடவுள்களை - வர்ணசாதி சிறைக்குள் அடைத்தவர்கள் ஆரிய பிராமண மேலாதிக்கவாதிகள்! இந்து மதம் மற்ற மொழி - இன - நாட்டு மக்களிடம் பரவாமல் முள்வேலி போட்டு தடுத்தவை ஆரிய பிராமணியத்தின் கர்ம - தர்ம - தண்ட கோட்பாடுகள்!
எதையெடுத்தாலும் உலகு, உலகம் என்று நீதி நெறிகள் சொன்ன தமிழர்களின் ஆசீவகம், சிவநெறி, திருமால் நெறி ஆகியவை வெளியில் பரவாமல் தடுத்தது - ஆரிய பிராமண வேதமத ஆக்கிரமிப்பு!
பிறப்பு அடிப்படையில் சாதிப் புனிதம் - சாதி உயர்வு - சாதித் தீண்டாமை - சாதி இழிவு ஆகியவற்றைக் கற்பித்து நிலைநாட்டிய ஆரிய - பிராமண வர்ணசாதிக் கோட்பாடுகளின் ஆன்மிக - அரசியல் பெயர்தான் சாவர்க்கரின் இந்துத்துவா! இந்துக்களின் புனிதக் கனவான்களாக - மண்ணுலகக் கடவுள்களாக (பூசுரர்களாக)ப் பிராமணர்களைக் கற்பித்து அவர்களின் எசமானத்து வத்தை நிரந்தரப்படுத்துவதுதான் சாவர்க்கரின் - ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. பரிவாரங்களின் இந்துத் துவா அரசியல்!
வீரசாவர்க்கரின் ‘வீரம்’
------------------------------------
இலண்டனில் படிக்கும்போது ஒரு வெள்ளை அதிகாரியைத் தாக்கிய வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட வி.டி. சாவர்க்கரை இந்தியாவுக்குக் கப்பலில் அழைத்து வரும்போது, வழியில் பிரஞ்சுத் துறைமுகத்தில் கப்பலில் இருந்து தப்பித்தார் சாவர்க்கர். பிரஞ்சு அதிகாரிகள் அவரைத் தளைப்படுத்தி ஆங்கிலேய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அந்தமான் சிறையில் 1911-இல் அடைக்கப்பட்டார் சாவர்க்கர். அவர் 30.08.1911 அன்று சிறை அதிகாரிகளுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி, கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்யும்படியும், விடுதலை செய்தால் வெள்ளைக்கார அரசுக்கு விசுவாசமாக நடந்து கொள் வேன், அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதி அளித்தார். வெள்ளை அரசு அவரின் கருணை மனுவை ஏற்க மறுத்தது.
அதன்பிறகு 14.11.1913இல் இரண்டாவது மன்னிப்புக் கடிதம் எழுதினார். “ஊதாரியாக ஊர் சுற்றிவிட்டுத் திரும்பிய மகனைப் போல் (Prodigal) என் பெற்றோராகிய அரசின் கதவைத் தட்டுகிறேன்”என்று அக்கடிதத்தில் கூறியிருந்தார். “என்னை விடுவித்தால், இந்திய மக்கள் பலரிடம் பிரித்தானிய ஆட்சி மீது நம்பிக்கை உருவாகும்”என்றும் எழுதியிருந்தார். இந்த மன்னிப்புக் கடிதத்தை ஏற்க மறுத்தது பிரித்தானிய அரசு.
மூன்றாவது மன்னிப்புக் கடிதத்தை 1917ஆம் ஆண்டு எழுதி அனுப்பினார் “வீர”சாவர்க்கர்! அக்கடிதத்தையும் ஏற்க மறுத்தது ஆங்கிலேய ஆட்சி. நான்காவது கருணை மனுவை 30.03.1920 அன்று பிரித்தானிய ஆட்சியாளர் களுக்கு அனுப்பினார் சாவர்க்கர். வழக்கம்போல் தனது கடந்தகால அரசியல் நடவடிக்கைகளுக்காக வருத்தம் தெரிவித்தும், அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறியிருந்தார்.
திலகர், காந்தி, பட்டேல் போன்ற தலைவர்கள் சாவர்க்கர் உள்ளிட்ட அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி வந்தனர்.
இந்நிலையில், நான்காவது மன்னிப்புக் கடிதத்தை ஏற்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் சாவர்க்கரை விடுதலை செய்தனர். காந்தியை சுட்டுக் கொல்வதற்கு நாதுராம் கோட்சேயைத் தயார்ப்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டில் 1949-இல் சிறைப்படுத்தப்பட்டார் சாவர்க்கர். ஐயமறக் குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை என்று கூறி - சாவர்க்கரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இப்போது சாவர்க்கரின் இந்துத்துவாவை ஏற்றுக் கொண்டோரில் பலர் கோட்சேயைத் தியாகி என்று கொண்டாடுகிறார்கள்! காந்தி நினைவு நாளில் காந்தி பொம்மையைச் செய்து துப்பாக்கியால் சுடுகிறார்கள்.
பா.ச.க. ஆட்சி சாவர்க்கருக்கு “பாரத ரத்தினா” விருது கொடுக்க முனைகிறது. அதை அடுத்து, “பாரத ரத்தினா”விருது கோட்சேவுக்குக் கிடைக்கலாம்!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2019 நவம்பர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது).

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT