உடனடிச்செய்திகள்
Showing posts with label பொதுக்குழு. Show all posts
Showing posts with label பொதுக்குழு. Show all posts

Monday, February 22, 2016

பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒரு வாரம் நடத்துகிறது தர்மபுரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தீர்மானம்!



பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம்  தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒரு வாரம் நடத்துகிறது தர்மபுரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தீர்மானம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் ஐந்தாவது கூட்டம், 2016 பிப்ரவரி 20 - 21 ஆகிய இரு நாட்கள் தர்மபுரியில் நடைபெற்றது. தர்மபுரி ரோட்டரி அரங்கில், பிப்ரவரி 20 அன்று காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேரியக்கக் கொடியை ஏற்றி வைத்து, பொதுக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் தர்மபுரி செயலாளர் தோழர் விசயன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர்கள் கோ. மாரிமுத்து, அ. ஆனந்தன், குழ. பால்ராசு, ரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் செம்பரிதி, கவித்துவன், இராசாரகுநாதன், ஈரோடு இராசையா, புளியங்குடி க. பாண்டியன், திருச்செந்தூர் தமிழ்மணி, சிதம்பரம் எல்லாளன், பெண்ணாடம் கனகசபை, மதுரை மேரி, கோவை இராசேந்திரன், குடந்தை தீந்தமிழன், தஞ்சை லெ. இராமசாமி, புதுக்குடி காமராசு, திருத்துறைப்பூண்டி சிவவடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்மையில் காலமான ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரு கராசிமா, தமிழறிஞர் தமிழண்ணல், ஐயா. தேவாரம் மு. தனராசு, முனைவர் கரு.அழ. குணசேகரன், பேரியக்க மூத்த உறுப்பினர் தோழர் காதாட்டிப்பட்டி கணேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர் தாயார் திருவாட்டி வைரத்தம்மாள் ஆகியோர் மறைவுக்கு, கூட்டத்தின் தொடக்கத்தில் இரங்கல் தெரிவித்து, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1
============
பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒரு வாரம் நடத்துகிறது
ஆர்.எஸ்.எஸ்ஸூம் அதன் அரசியல் பிரிவான பாரதிய சனதா கட்சியும் தங்களின் அரசியலுக்கு இதுவரை முதன்மைப்படுத்தி வந்த “இந்துத்துவா” முழக்கத்தை இப்போது பின்னுக்குத் தள்ளி “இந்தியத் தேசியம்” என்ற முழக்கத்தை முதன்மைப்படுத்துகின்றன.

இந்துத்துவா முழக்கத்தை முன்வைத்து, உ.பி. முசாபர் நகரில் முசுலிம் குடும்பங்களைத் தாக்கி அகதிகளாக வெளியேற்றினார்கள். மராட்டியத்தில் தபோல்கர், பன்சாரே, கர்நாடகத்தில் கல்புர்கி போன்ற மதச்சார்பற்ற பகுத்தறிவுச் சிந்தனையாளர்களைக் கொலை செய்தனர். உ.பி. தாத்ரியில் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்பதாகச் சொல்லி ஒரு முசுலிம் பெரியவரைக் கொன்றார்கள். அக்குடும்பத்தினரையே தாக்கினார்கள்.

இப்படிப்பட்ட இந்துத்துவா வெறியாட்டப் படுகொலைகள் மற்றும் கலவரங்களுக்குப் பிறகு, பா.ச.க.வின் செல்வாக்கு வளர்வதற்கு மாறாக சரிந்து வருவதை தில்லி, பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விகள் மூலம் உணர்ந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமை, இந்துத்துவா முழக்கத்தை சற்றுப் பின்னுக்குத் தள்ளி இந்தியத் தேசியம் - “தேசப்பற்று” என்ற முழக்கங்களை முன்னுக்கு வைத்து வருகிறது.

அப்சல் குரு நினைவேந்தல் நிகழ்வைப் பயன்படுத்திக் கலகம் விளைவித்து, மாற்றுக் கருத்துகளை ஒடுக்கி, இந்தியாவில் தங்களின் ஒற்றை மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. தலைமைகள் திட்டமிட்டுள்ளன.
அதன்படி அப்சல் குரு நினைவேந்தல் நிகழ்வில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், காஷ்மீர் விடுதலை கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. யார் எழுப்பினர் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதற்காக சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் மீது தேசத்துரோகம் (124A) மற்றும் அரசியல் சதிக்குற்றம் (120B) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளனர். கண்ணையா குமார், தாம் இம்முழக்கங்களை எழுப்பவில்லை என்று மறுக்கிறார். தில்லி காவல்துறை ஆணையர் பாசி கூட கண்ணையா இம்முழக்கங்களை எழுப்பினார் என்பதற்குச் சான்றுகள் இல்லை என்கிறார்.

அப்சல் குரு நினைவேந்தல் நிகழ்ந்த அன்றே, ஏ.பி.வி.பி. மாணவர்கள் நடுவண் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதில், பாகிஸ்தான் உள்ளிட்ட சர்வதே சதி இருக்கிறது என்றார். கடும் நடவடிக்கைத் தேவை என்றார்.

ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்து அனுப்பிய ஆட்களே மேற்கண்ட முழக்கங்களை எழுப்பினர் என்று ஜே.என்.யு. மாணவர்களும் பேராசிரியர்களும் கூறுகிறார்கள்.

அடுத்து ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. கலகக்காரர்கள் நீதிமன்றத்தைக் கலவரக் களமாக மாற்றினர். வழக்கறிஞர்கள் - வழக்கறிஞர் சீருடையில் இருந்தோர் என ஒரு கும்பல், 15.02.2016 அன்று பாட்டியாலா நீதிமன்றத்துக்குக் காவல்துறையினரால் கண்ணையா குமார் அழைத்து வரப்பட்டபோது அவரைத் தாக்கினர். அதனை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. மறுபடி 17.02.2016 அன்று பாட்டியாலா நீதிமன்றம் அழைத்துவரப்பட்டபோது முற்பகலில் நீதிமன்றத்திற்குள் வைத்து கண்ணையாவைத் தாக்கினர். உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்தியாவின் மிகுபுகழ் பெற்ற வழக்கறிஞர்கள் குழுவை அனுப்பி கண்காணிக்கச் சொன்னது. அதன்பின்னர் - பிற்பகலில் பாட்டியாலா நீதிமன்றத்திற்குள் நேர் நிறுத்தப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. குற்றக் கும்பல் கண்ணையா குமாரை மீண்டும் அடித்து நொறுக்கியது.
இந்த வன்முறை வெறியாட்டம் அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. பேச்சாளர்கள் ஊடகங்களில் இந்தியத்தேசியம் - தேசப்பற்று என்ற சொற்களை உச்சரித்து ஞாயப்படுத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமைகள் இந்த வன்முறைகளைக் கண்டிக்கவில்லை.

மேற்கண்ட நடப்புகளை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது, நடுவண் அரசதிகாரத்தைப் பயன்படுத்தி அடுத்த மக்களவைத் தேர்தலுக்குள் இந்தியா முழுவதிலும் இந்தியத் தேசியம் - இந்துத்துவா முழக்கங்களை போதை போல் உருவாக்கிக் கிளப்பி மக்களிடையே அதனடிப்படையில் வன்முறைக் கலகங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, பெரும்பகுதி மக்களைத் தம்பக்கம் திருப்பிக் கொள்வது என்றும் அவ்வாறு பெரும்பகுதி மக்களைத் தம்பக்கம் திரட்டிக் கொள்ள முடியவில்லை என்றால் ஓயாத கலவரங்களை நடத்தி மக்களவைத் தேர்தல் நடத்தாமல் தள்ளி வைப்பது என்றும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அவர்கள் முன்வைக்கும் இந்துத்துவா - இந்து மக்களிடையே நிலவும் வர்ணாசிரம மேலாதிக்கத்தை - பார்ப்பனிய ஆதிக்கத்தை நீக்கி இந்து மக்கள் அனைவரையும் சம உரிமை படைத்த சகோதரர்களாக மாற்றும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக வர்ணாசிரம மேலாதிக்கத்தை இக்காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்வதாகும். மக்களின் பேச்சு மொழியாக இல்லாத சமற்கிருதத்தைத் திணிப்பதிலிருந்தும் - நடுவண் அரசே சமற்கிருத வாரம் கடைபிடித்து, அதைப் பரப்புவதிலிருந்தும் அவர்களின் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்துக் கோயில்கள் அனைத்திலும் இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உரிமையை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து மக்களுக்கு மீட்டுத்தர ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. அதிகார பீடங்கள் முன்வரவில்லை. முன்வரப் போவதில்லை.

தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களில் தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் போன்ற தமிழ் மந்திரங்களைச் சொல்லியும் பாடியும் அர்ச்சனை செய்யலாம் என்ற தமிழ் மொழி உரிமைக்கு ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமைகள் முன்முயற்சி எடுக்கப் போவதில்லை. மாறாக அவ்வாறான தமிழர் முயற்சிகளைத் தடுக்கவே அவை முன்வரும்.
ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. தலைமைகள் இப்போது முன்னுக்குத் தள்ளியுள்ள இந்தியத் தேசியம் - தேசபக்தி என்பவை சாரத்தில் அவர்களின் இந்துத்துவா முழக்கத்தின் அரசியல் வடிவங்களே! இந்துத்துவா மதவாதம் இல்லையெனில் இந்தியத்தேசியம் என்பதற்கான வேறு எந்தப் போலிக் காரணமும் இல்லை!

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியா ஒரு தேசம் - இந்தியன் என்ற தேசிய இனம் - இந்தியத் தேசியம் என்பனவற்றை ஏற்கவில்லை. இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 1 - “இந்தியா என்பது அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் கூறுகிறது. இந்தியா ஒரு தேசம் என்று எந்த இடத்திலும அது கூறவில்லை. அடுத்து, இந்தியக் குடியுரிமை பற்றி அது பேசுகிறதே தவிர, “இந்தியன்” என்ற தேசிய இனம் பற்றி பேசவில்லை! இந்தியன் என்றொரு தேசிய இனம்(Nationality) இருப்பதாக அது கூறவும் இல்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழிபடுவதாகத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கூறிக் கொள்கிறார். இந்திய அரசமைப்புச் சட்டம் கூறாத இந்தியத் தேசியத்தை ஒரு வெறி முழக்கமாக அவர் தலைமை உருவாக்குவது ஏன்?
“இந்தியத் தேசியம் - தேசபக்தி” என்பதை ஒரு போதைபோல் ஏற்றி, வெறி உண்டாக்குவோர், தமிழர் - தமிழ்மொழி, தெலுங்கர், கன்னடர், மலையாளி, மராத்தி, வங்காளி, பஞ்சாபி, காஷ்மீரி, அசாமி போன்ற பல்வேறு தேசிய இனங்களின் இருப்பையும் வரலாற்றையும் அழிக்கிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. தலைமையோ அல்லது வேறு எந்தத் தலைமையோ இந்தியத் தேசிய வெறியைக் கிளப்பக் கிளப்ப, மேலே குறிப்பிட்ட - பல்வேறு தேசிய இனங்களின் மக்கள் - தங்கள் இன மொழி அடையாளங்களையும் வரலாற்றுப் பெருமிதங்களையும் தக்க வைத்துக் கொள்ள வீதிக்கு வருவார்கள்!

இந்தியத்தேசியம் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது? தமிழினப் பாதுகாப்பிற்கு என்ன செய்தது? காவிரி உரிமையைப் பாதுகாத்ததா? கடல் உரிமையை பாதுகாத்ததா? கச்சத்தீவை பாதுகாத்ததா? முல்லைப் பெரியாறு அணை உரிமைச் சிக்கலைத் தீர்த்து வைத்ததா? பாலாற்று உரிமையைப் பாதுகாத்ததா? அண்டை நாட்டில் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது தடுத்து நிறுத்தியதா? அந்த இனப்படுகொலையில் பங்கு கொண்டது.
கர்நாடகத்தில் கன்னட வெறியர்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது - தாக்கப்பட்ட போது (1991), கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது (2011), இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்தியதா? பேருந்தில் பயணம் செய்த 20 தமிழர்களை இழுத்துக் கொண்டுபோய் ஆந்திராவில் கட்டிவைத்து சுட்டுக் கொன்ற போது, ஆந்திராவின் மீது இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

தமிழ்நாட்டு பெட்ரோலியத்தை எரிவளியை நிலக்கரியை எடுத்து காலி செய்து, தனது கருவூலத்தை நிரப்பிக் கொள்கிறது இந்திய அரசு! வெள்ளைக்காரன் போட்ட வரிகளைவிட, ஆயிரம் மடங்கு கூடுதல் வரிகளைப் போட்டு, ஆண்டுக்கு 80,000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டு வரிப்பணத்தை அள்ளிக் கொண்டு போகிறது இந்திய அரசு!

என்ன ஞாயத்திற்காக தமிழர்கள், வர்ணாசிரம இந்துத்துவா தேசியமான இந்தியத் தேசியத்தை ஏற்க வேண்டும்?

உலகில் முதலில் தோன்றிய செம்மொழியான தமிழ் நம் மொழி! முதலில் தோன்றிய நாகரிக இனம் தமிழினம்! அரப்பா - மொகஞ்சோதாரோ நாகரிகம் தமிழர் நாகரிகம்! இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழினம் இப்போது தமிழ்நாட்டிற்குள் என்று சுருங்கிப் போய் உள்ளது. தமிழ்நாட்டிற்குள்ளும் வந்து தமிழ் மொழியை - தமிழர் இன அடையாளங்களை அழித்திட, இந்துத்துவா என்ற பெயரிலும், இந்தியத் தேசியம் என்ற பெயரிலும் வரும் அதிகாரக் கருத்தியலைத் தடுத்து தமிழினம் காப்போம்.

தமிழ் மக்களிடம் இச்செய்திகளை எடுத்துச் சொல்ல, 2016 - பிப்ரவரி 25லிருந்து மார்ச் 2ஆம் நாள் வரை, ஒரு வாரம் பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் நடத்துவதென தர்மபுரியில் இன்று (21.02.2016) கூடியுள்ள இப்பொதுக்குழு ஒருமனதாக முடிவு செய்கிறது.

தீர்மானம் - 2
============
கெயில் குழாய்களை விளை நிலங்கள் வழியாக எடுத்துச் செல்லும் திட்டத்தைக் கைவிடுக!

இந்திய எரிவளி ஆணையம் (கெயில்) கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கு குழாய்கள் வழியாக எரிவளி (எரிவாயு) எடுத்துச் செல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் வேளாண் விளை நிலங்களில் குழாய் பதிக்க முனைந்துள்ளது.

இத்திட்டம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருட்டிணகிரி ஆகிய ஏழு மாவட்ட உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ஒன்றாகும். கொச்சியிலிருந்து கோவை வரை கேரளத்தில் இத்திட்டத்திற்கான கெயில் குழாய்கள் சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவுக்கு, நெடுஞ்சாலை ஓரங்கள், தொடர்வண்டிப் பாதை ஓரங்கள் வழியாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்கள் வழியாக இக்குழாய்களை எடுத்துச் செல்ல வேண்டும் என இந்திய அரசின் கெயில் நிறுவனம் பிடிவாதம் பிடிப்பது இந்திய அரசின் தமிழினப்பகைப் போக்கையே எடுத்துக்காட்டுகிறது.
இது குறித்த வழக்கில், கடந்த 01.02.2016இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உழவர்களின் வாழ்வுரிமையை மட்டுமின்றி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாகவும் அமைந்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் அரசாங்க அதிகாரங்களை நடுவண் அரசுப் பட்டியல், மாநில அரசுப் பட்டியல், பொதுப் பட்டியல் என வகைப் பிரித்து வழங்கியிருக்கிறது. இதில் விளை நிலம் தொடர்பான அதிகாரம் முழுவதும் மாநில அதிகாரப் பட்டியலில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. மாநில அதிகாரப் பட்டியல் பிரிவு எண் 18இல், விளை நிலங்கள் குறித்த அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. வேளாண் நில உடைமையை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு என அரசமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது.

இந்நிலையில், கெயில் நிறுவனக் கோரிக்கையை ஏற்றும், தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்குப் போட்டத் தடையை நீக்கியும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விளை நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக எடுத்துச் செல்லும் வகையில் மாற்றியமைக்க வலியுறுத்தியுள்ளார்.

இதனை ஏற்று, ஏழு மாவட்டங்களின் விளை நிலங்கள் வழியாக கெயில் குழாய் எடுத்துச் செல்லும் திட்டத்தை கைவிட்டு, நெடுஞ்சாலை ஓரத்தில் குழாய்களை எடுத்துச் செல்லும் வகையில் மாற்றி அமைக்குமாறு கெயில் நிறுவனத்திற்கு இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்றும், ஏற்கெனவே விளை நிலங்களில் புதைக்கப்பட்டுள்ள கெயில் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு நடுவண் அரசை வலியுறுத்துகிறது.

உழவர்களின் கோரிக்கையை மதிக்காமல், கெயில் நிறுவனம் வேளாண் விளை நிலங்களில் குழாய்கள் பறிக்க முயன்றால், அதைத் தடுத்து நிறுத்த உழவர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் எச்சரிக்கிறது.

தீர்மானம் - 3
============
சனவரி 25-ஐ தமிழ் மொழி நாளாக கடைபிடிக்க வலியுறுத்தி பரப்புரை இயக்கம் 1965ஆம் ஆண்டு, இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரும் தமிழ்த் தேசிய எழுச்சியான இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, கடந்த 2016 சனவரி 24ஆம் நாள் மதுரையில், “மொழிப்போர்-50” மாநாட்டைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்தியது.

எழுச்சியோடு நடைபெற்ற அம்மாநாட்டில், மொழிப்போர் ஈகியர் நினைவைப் போற்றி சனவரி 25 அன்று நடத்தப்படும் வீரவணக்க நாளை தமிழ் மொழி நாள் என அறிவித்து கடைபிடிக்குமாறு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25 தொடங்கி ஒரு வாரம் முழுவதும், தமிழ் மொழி வாரமாக தமிழ்நாடு அரசு கடைபிடிக்க வேண்டும். ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதிமொழியாக தமிழ்மொழியை பயன்படுத்துவது குறித்து அவ்வாரம் முழுவதும் தொடர் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

சனவரி 25ஐ தமிழ் மொழி நாளாக கடைபிடிக்க வேண்டும், மொழிப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும், மொழிப்போர் ஈகியருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புவதுடன் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும், தமிழைத் தமிழ்நாட்டின் முழு ஆட்சிமொழி ஆக்க வேண்டும், தமிழ் வளர்ச்சித் துறைக்குக் குற்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழே அலுவல் மொழியாக வேண்டும், இந்திய ஒன்றிய அரசில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும், தமிழ்நாட்டில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், தமிழ்மொழியை அழிக்கும் முயற்சியாக ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகளை தமிழக அரசு பள்ளிகளில் தொடங்கியதைக் கைவிட வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக வேண்டும், போராடிய வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் ஆகிய 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத்தீர்மானங்களை விளக்கி, 2016 சூன் 15லிருந்து 21ஆம் நாள் வரை, தமிழ்நாடெங்கும் பரப்புரை இயக்கங்கள் நடத்துவதென இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

நாள் : 21.02.2016
இடம்: தர்மபுரி 
===================================== 
அறிக்கை வெளியீடு
===================================== 
தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம் 




===================================== 






நாள் : 21.02.2016
இடம்: தர்மபுரி 
===================================== 
அறிக்கை வெளியீடு
===================================== 
தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம் 
===================================== 




Monday, February 10, 2014

மார்ச்சு – 1 – காவிரி எழுச்சி மாநாடு: "தமிழினமே தஞ்சையில் திரள்க!" தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானம்!


மார்ச்சு – 1 – காவிரி எழுச்சி மாநாடு:
"தமிழினமே தஞ்சையில் திரள்க!"
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப்
பொதுக்குழுவில் தீர்மானம்!



தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னை கட்சித் தலைமையகத்தில் 09.02.2014 ஞாயிறு முழுநாள் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தோழர் உதயன், க.அருணபாரதி (சென்னை), குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், நா.வைகறை (தஞ்சை), அ.ஆனந்தன் (மதுரை), கோ.மாரிமுத்து (ஓசூர்), க.முருகன் (பெண்ணாடம்), மு.தமிழ்மணி (தூத்துக்குடி), க.பாண்டியன் (நெல்லை), விளவை இராசேந்திரன் (கோவை), கு.சிவப்பிரகாசம் (சிதம்பரம்), த.கவித்துவன் (திருச்சி) உள்ளிட்ட கட்சியின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இயற்கை வேளாண் அறிஞர் திரு. கோ.நம்மாழ்வார், பெரியார் பெருந்தொண்டர் தோழர் திருவாரூர் தங்கராசு, கல்பாக்கம் தமிழின உணர்வாளர் திரு. சு.முத்து ஆகியோர் மறைவுக்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. தஞ்சையில் மார்ச்சு 1 அன்று, நடைபெறும் 'காவிரி எழுச்சி மாநாட்'டை வெற்றிபெறச் செய்ய வேண்டும்

தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாகவும், காவிரி டெல்டா மாவட்டப் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமுமான காவிரி ஆற்று நீர் உரிமையை முடக்க கர்நாடகம், எல்லா சட்டங்களையும் மீறி இயங்கிக் கொண்டுள்ளது. கட்சிகள் கடந்து கன்னடர்கள் ஓரணியில் நிற்கின்றனர். இந்திய அரசு தனக்குப் பக்கமலமாக இருக்கிறது என்ற துணிச்சலில், புதிதாக 3 அணைகள் கட்டி  தமிழகத்திற்கு மழைக்காலத்தில் வடிந்து வரும் உபரித் தண்ணீரைக் கூட தடுப்பதற்கு அவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்க தமிழினம் ஒன்று திரள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வரும் 2014 மார்ச்சு 1 அன்று, தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், 'காவிரி எழுச்சி மாநாடு' நடைபெறுகின்றது. இம்மாநாட்டில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பதுடன், இம்மாநாட்டிற்குத் தமிழ் மக்களை பெருந்திரளாகத் திரட்டவும் முடிவெடுத்துள்ளது.

  1. காவிரி உற்பத்தியாகும் குடகு வனப்பகுதியில், மின்பாதை அமைப்பதற்காக 1 இலட்சம் மரங்களை வெட்டும் திட்டத்தை இந்திய அரசே கைவிடுக!
      காவிரி ஆறு உற்பத்தியாகும் கூடகு மலைப்பகுதியில், இந்திய அரசு மின்பகிர்மான நிறுவனம் (Power Grid corporation of India), கர்நாடகாவின் மைசூரிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு வரையில் 400 கிலோ வாட் மின்சாரம் எடுத்துச் செல்லும் மின்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் வழியே, சற்றொப்ப 55 கிலோ மீட்டர் வரை அமைக்கப்படும் இப்பாதை காரணமாக சற்றொப்ப 1 இலட்சம் மரங்கள் வெட்டப்படும் பேரபாயம் உள்ளது. தற்போது, 5 கிலோ மீட்டர் அளவில் மின் பாதை அமைக்கப்பட்டு சற்றொப்ப 2000 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. மரங்கள் வெட்டப்படுவதால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் சூழலியல் வெற்றிடமும், சூழலியல் சமன்பாட்டுச் சீர்குலைவும், ஏற்பட்டு காவிரி ஊற்று நீரைப் பெருமளவில் பாதிக்கும். குடகு, தமிழகம், கர்நாடகம் என காவிரி ஆற்றை முக்கிய நீராதாரமாகக் கொண்டு வாழும் 8 கோடி மக்களின் வாழ்வுரிமையையே இது மறைமுகமாகப் பறித்தெடுக்கும். மேலும், இவ்வனப்பகுதியையே நம்பி வாழும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். வனவிலங்குகளின் வாழ்வாதாரங்களை இழப்பது, ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டுள்ள வனவிலங்கு – மனிதர் மோதலைத் தீவிரப்படுத்தும். மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து, குடகு வாழ் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றனர். இப்போராட்டங்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. இத்திட்டத்தை இந்திய அரசு மின்பகிர்மான நிறுவனம் வேறு பாதையில் செயல்படுத்த வேண்டும். என வலியுறுத்துகிறது

  1. கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள் புதிதாக அணுஉலைகளைத் தொடங்காதே!

ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஒரே சவக்குழியாக இந்திய அரசால் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள், புதிதாக 2 அணுஉலைகளை இயக்க இந்திய அரசு அணுசக்தித்துறை முனைப்புடன் செயலாற்றி வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக  கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து சனநாயக வழியில் போராடி வரும் இடிந்தகரை மக்களின் கருத்துகளைப் புறக்கணித்துவிட்டு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இந்திய அரசு இயக்கி வருகின்றது. இந்நிலையில், புதிய அணுஉலைகளை அங்கு வேண்டுமென்றே திணிப்பது, மக்கள் போராட்டத்தை இழிவுபடுத்தும் எதேச்சாதிகாரப் போக்காகும். எனவே, மேலும் மேலும் இங்கு அணுஉலைகளைத் திணிக்கும் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இப்புதிய அணு உலைகளை நிறுவும் முயற்சிகளைக் கைவிட வேண்டுமெனவும் இந்திய அரசை வலியுறுத்துகிறது.  

  1. தமிழினப்  படுகொலையாளிகளான இராசபக்சே கும்பல் மீது தற்சார்பான பன்னாட்டு விசாரணை கோரி, மார்ச்சு 3 - ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில் இந்திய அரசு தனித்தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்!

ஈழத்தமிழர் இனச்சிக்கல் பன்னாட்டு அரங்கில் ஒரு முக்கியக் கட்டத்தை இப்போது அடைந்துள்ளது. நடந்து முடிந்த கொழும்பு காமன்வெல்த் மாநாட்டின் போது பிரித்தானியப் பிரதமர் கேமரோன் யாழ்ப்பாணத்திற்கும், ஈழத்தமிழர் வாழ்விடயங்களுக்கும் சென்று பார்த்தபோது அவருடன் சென்ற முதன்மை உலக ஊடகங்கள் வழியாக அங்கு தொடரும் இன அழிப்பு அவலம் உலகின் பார்வைக்கு வந்துள்ளது. இப்பின்னணியில் வரும் மார்ச்சு 3 அன்று நடைபெறவுள்ள ஐ.நா. மன்ற மனித உரிமைகள் அவைக் கூட்டம் கூடுதல் முகாமை பெறுகிறது. ஈழத்தமிழர் இனஅழிப்பை வெறும் போர்க்குற்றம் எனச் சுருக்கியும், இலங்கை  அரசக் கட்டமைப்பை பாதுகாக்கும் நோக்கிலும் 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் வட அமெரிக்கா முன்வைத்த சூழ்ச்சிகரமானத் தீர்மானங்களை, இந்திய அரசு ஆதரித்தது இப்போக்கு இனியும் தொடரக் கூடாது இராசபக்சே கும்பல் மீது இனப்படுகொலை குறித்த பன்னாட்டு விசாரணை – ஈழத்தமிழ் மக்களிடையே தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு ஆகிய இரட்டை முழக்கங்கள் ஒட்டுமொத்தத் தமிழர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது. எனவே, வரும் மார்ச்சு கூட்டத்தில் அமெரிக்கத் தீர்மானத்தைப் புறக்கணித்து, இனக்கொலையாளி இராசபக்சே கும்பல் மீது தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை வேண்டுமெனக் கோரி இந்திய அரசே தனித் தீர்மானத்தை முன்மொழிய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோருகிறது. வரும் பிப்ரவரி 20 அன்று சென்னையிலும், தமிழகத்தின் இதர மாவட்டத் தலைநகரங்களிலும் இக்கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில், தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென த.தே.பொ.க. அழைக்கிறது. 

  1. பி.ட்டி கத்தரிக்கு அனுமதி, நியூட்ரினோ திட்டத்துக்கு நிதி – இரண்டையும் கைவிட வேண்டும்

ஜம்முவில் கடந்த 3.02.2014 திங்கள் அன்று நடைபெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறுவித்துள்ளார், இவை பற்றி தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள் அறிவியல் அடிப்படையற்ற அச்சமூட்டும் முயற்சிகள் என்று பேசியுள்ளார். அவரது பேச்சு, மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கும் மரபீனி விதைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான அவதூறு அறிக்கையாக உள்ளதுமரபீனீ விதைகளை ஆய்வு செய்ய, காங்கிரசு உறுப்பினர்களையும் உள்ளடக்கி இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக்குழுவின் ஆய்வு அறிக்கை இவற்றுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனப் பரிந்துரைத்தது இந்த அறிக்கையை துச்சமாகாத் தூக்கி எறிந்துவிட்டு, அதில் எழுப்பப்பட்டுள்ள சிக்கல்களுக்கு விடைக்கூற முயலாமல் பி.ட்டி கத்தரிக்கும், பிற மரபீனி மாற்றப் பயிர்களுக்கும் தமது அரசு அனுமதி அளிக்கும் என்று பிரதமர் மன் மோகன் சிங் அறிவித்திருப்பது மக்கள் நலனிலும் சன நாயகத்திலும் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது

அதே போல் தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் மலைப் பகுதியைத் தோண்டி அங்கு நிறுவப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வகத்தற்கு 1450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக மன்மோகன் சிங் அறிவித்திருப்பதும் இன்னொரு மக்கள் பகை அறிவிப்பாகும். அப்பகுதி மக்களும், தமிழகத்திலும் கேரளத்திலும் சூழலியல் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் இந்நிலையம் குறித்து எழுப்பியுள்ள எதிர்ப்புகளை ஒரு சிறிதும் மதிக்காமல் செய்யப்பட்டுள்ள இந்த முடிவு ஒரு தலைப் பட்சமான திணிப்பாகும்

பிரதமர் மன்மோகன் சிங்கின் இவ்விரண்டு அறிவிப்புகளையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்திட்டங்களை கைவிட வேண்டுமென வற்புறுத்துகிறது.

இடம் : சென்னை-78.
நாள்  : 09.02.2014

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT