உடனடிச்செய்திகள்

Monday, November 30, 2020

சமற்கிருத செய்தித் திணிப்பு! ஆரியத்துவா ஆதிக்கம்! - ஐயா கி.வெங்கட்ராமன் கண்டனம்


சமற்கிருத செய்தித் திணிப்பு!
ஆரியத்துவா ஆதிக்கம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 

ஐயா கி.வெங்கட்ராமன் கண்டனம்

இந்திய அரசின் தமிழ்த் தொலைக்காட்சியான பொதிகைத் தொலைகாட்சி உள்ளிட்ட அனைத்து மாநில மொழி தொலைக்காட்சிகளும் அன்றாடம் காலை 7.15 முதல் 7.30 வரை சமற்கிருத செய்தி அறிக்கையை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும், ஒரு வேளை அந்த நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால் அடுத்த அரைமணி நேரத்திற்குள் 15 நிமிடத்தை சமற்கிருதச் செய்தி ஒளிபரப்பிற்காக ஒதுக்க வேண்டும் என்று இந்திய அரசின் பிரசார் பாரதி சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

அதுமட்டுமின்றி ஒவ்வொறு சனிக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் சமற்கிருத வாரந்திர செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்றும், அந்த குறிப்பிட்ட நேரம் வாய்க்கவில்லை என்றால் அந்த நாளுக்குள் நேரத்தை ஒதுக்கீடு செய்து அதனை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்றும் இந்த சுற்றறிக்கை கட்டளையிடுகிறது.

யாருக்கும் தாய்மொழி இல்லாத சமற்கிருதத்திற்கு நாள் தோறும் கால்மணிநேரம் செய்தி அறிக்கைக்காக ஒதுக்கீடு செய்தவதும் வாரந்தோறும் ஒளிபரப்புவதுமே மிகையானது.

இப்போது அது போதாதென்று ஒவ்வொறு நாளும் கால்மணிநேரம் தமிழ் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக சமற்கிருத செய்தியை ஒளிபரப்பவேண்டும் என்பது சமற்கிருதத் திணிப்பு மட்டுமின்றி தமிழ் நீக்கமும் ஆகும்.

இந்தியா ஆரியத்துவா நாடுதான் என்பதை சமற்கிருதத் திணிப்பின் மூலம் மோகன் பகவத் - மோடி அரசு நிலைநிறுத்த விரும்புகிறது.

ஏற்கெனவே பல துறைகளில் சமற்கிருதத்தையும் இந்தியையும் திணித்துவருவதன் தொடர் நடவடிக்கையாகவே இந்த சமற்கிருத திணிப்பு விளங்குகிறது. தமிழின ஒதுக்கலின் இன்னொறு நடவடிக்கையாகும் இது. தமிழினம் இதை ஒரு போதும் ஏற்காது.

இந்திய அரசின் செய்தி ஒளிபரப்பு துறை இந்த சமற்கிருதத் திணிப்பு சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



Sunday, November 29, 2020

"தில்லி முற்றுகை: மக்கள் போரின் மகத்துவம்!" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!

"தில்லி முற்றுகை:

மக்கள் போரின் மகத்துவம்!" 



தில்லியில் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் உழவர்கள் நடத்திகொண்டிருக்கும் தொடர் போராட்டம் பற்றி..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, November 28, 2020

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும்! - ஐயா பெ. மணியரசன் கோரிக்கை!



கரூர் பசுபதீசுவரர் கோயில்
குடமுழுக்கைத் தமிழ்வழியில்
நடத்த வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கோரிக்கை!

கரூர் பசுபதீசுவரர் கோயில் மற்றும் அவ்வளாகத்தில் உள்ள கருவூரார் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு 04.12.2020 காலை திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதாக திருப்பணிக் குழுவினர் அறிவித்துள்ளார்கள். கொரோனாவால் தள்ளிப்போன இக்குடமுழுக்கை இப்போது நடத்துவதை வரவேற்கிறோம்.
அதே வேளை தென்னாடுடைய சிவனார்க்கும், அம்மைக்கும், செந்தமிழில் திருவிசைப்பா பாடிய கருவூரார்க்கும் கருவறையிலும் கோபுரத்திலும் தமிழ் மந்திரங்கள் ஓதி இக்குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர்க்கும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்க்கும் குட முழுக்குத் திருப்பணிக் குழுவார்க்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் வேண்டுகோள் வைக்கிறேன்.
கடந்த 05.02.2020 அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் வேண்டுகோள் வைத்தோம். அத்துடன் மதுரை உயர்நீதிமன்றத்தில் இவ்வேண்டுகோளை செயல்படுத்த வலியுறுத்தி வழக்கும் தொடுத்தோம். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என் பெயரில் அவ்வழக்கு தொடுக்கப்பட்டது. இதே கோரிக்கைக்காக மற்ற நண்பர்களும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
மதுரை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்தப்படும் என்று உறுதியளித்தது. அதே போல் தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழிலும் நடந்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் தொடர்பாக நடந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், சமற்கிருத மொழியில்தான் கருவறையில் பூசை நடைபெற வேண்டும் என்று எந்த ஆகமும் கூறவில்லை எனத் தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அலுவல் மொழியாகத் தமிழ் இருக்கிறது. தமிழில் கருவறை அர்ச்சனை செய்வதற்குரிய தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அரசு அர்ச்சகர்களுக்கு தமிழ் வழிப் பூசைக்கான பயிற்சி கொடுத்துப் பட்டயமும் வழங்கியுள்ளது.
எனவே அருள் கூர்ந்து கரூர் பசுபதீசுவரர் – கருவூரார் கோயில் குடமுழுக்கையும் கருவறைப் பூசையையும் தகுதிமிக்கத் தமிழ் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு தமிழ் மந்திரங்களைச் சொல்லி தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


Friday, November 27, 2020

"மாவீரர் நாள் 2020" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!

"மாவீரர் நாள் 2020" 



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, November 20, 2020

"தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்குவோம்! எச். இராசாவுக்கு பதிலடி" “தமிழ் கேள்வி” இணைய ஊடகத்துக்கு, - ஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்..!

"தமிழர் கடைகளில் பொருட்கள் வாங்குவோம்!

எச். இராசாவுக்கு பதிலடி" 


“தமிழ் கேள்வி” இணைய ஊடகத்துக்கு,

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அவர்களின் நேர்காணல்..!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

"தமிழரசன் புகழை எவராலும் அழிக்க முடியாது!" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை!

"தமிழரசன் புகழை எவராலும் அழிக்க முடியாது!"


  தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் அவர்களின்  உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, November 19, 2020

"முதல்வரே கவர்னரிடம் அடித்துப்பேசுங்கள்! எழுவர் விடுதலையை உறுதிபடுத்துங்கள்!" -தூசு அம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் - ஐயா பெ. மணியரசன் நினைவேந்தல் உரை!

"முதல்வரே கவர்னரிடம் அடித்துப்பேசுங்கள்! எழுவர் விடுதலையை உறுதிபடுத்துங்கள்!"


தமிழ்த்தேசியப் போராளி தோழர் தமிழரசன் அவர்களின் தாயார் வீரத்தாய் பதூசு அம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில்  தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் நினைவேந்தல் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, November 17, 2020

உச்ச நீதிமன்றம் கண்டித்தும் பேரறிவாளன் விடுதலையை மறுத்தால் தமிழின வெறுப்பு - தமிழினத் துரோகம்! ஐயா பெ. மணியரசன்.


உச்ச நீதிமன்றம் கண்டித்தும்
பேரறிவாளன் விடுதலையை மறுத்தால்
தமிழின வெறுப்பு - தமிழினத் துரோகம்!

பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

நீட் தேர்வு நீக்கம், மருத்துவ மேற்படிப்பில் நடுவண் அரசுத் தொகுப்பிற்குக் கொடுக்கும் தமிழ்நாட்டு இடங்களில் இடஒதுக்கீடு போன்றவற்றில் உச்ச நீதிமன்றம் தங்கள் கைகளைக் கட்டிப் போட்டது; நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறிக் கொள்ளும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், ஏழு தமிழர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிப் பல ஆண்டுகள் ஆன பின்னும் செயல்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி, பரவலாகத் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.

அன்றையத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் 18.02.2014 அன்று அளித்த தீர்ப்பில், சிறையாளிகளின் தண்டனைக் குறைப்பு, விடுதலை ஆகியவற்றில் மாநில அரசுக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்கும் அதிகாரம் தங்கு தடையற்றது; நிபந்தனை இல்லாதது என்று கூறியது. அந்த அரசமைப்பு ஆயம் ஏழு தமிழர் விடுதலைக்கு அன்றைய முதலமைச்சர் செயலலிதா போட்ட ஆணையை எதிர்த்து அமைக்கப்பட்டது ஆகும்.

செயலலிதா நேரடியாகப் போட்ட விடுதலை ஆணையை செல்லாது என்று கூறிய நீதிபதி சதாசிவம் ஆயம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் மாநில அமைச்சரவை பரிந்துரை நிறைவேற்றி ஆளுநர் கையொப்பம் பெற்று, தனது மாநிலத்தில் உள்ள எந்தக் கைதிக்கும் தண்டனைக் குறைப்பு வழங்கலாம்; விடுதலை செய்யலாம் என்று தனது தீர்ப்பில் கூறியது.

உச்ச நீதிமன்றம் அவ்வாறு கதவு திறந்து விட்டும் அன்றைய முதல்வர் செயலலிதா தனது அமைச்சரவையில் ஏழு தமிழர் விடுதலைக்குப் பரிந்துரை நிறைவேற்றி ஆளுநர்க்கு அனுப்பவில்லை.

அதன்பிறகு, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட்டது. அது தண்டனைக் கைதிகள் விடுதலை பற்றி ஆய்வு செய்து 2015 ஆகத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த ஆயமும், அரசமைப்புச் சட்டக் கூறு 161-இன் கீழ், மாநில அரசு ஆளுநர் வழியாக எந்தக் கைதியையும் விடுதலை செய்யலாம்; நடுவண் அரசின் புலனாய்வுத்துறை நடத்திய வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்யலாம் என்று தனது தீர்ப்பில் கூறியது. அத்துடன் இதில் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 – மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரம் தங்கு தடையற்றது (Unfettered) என்றும் கூறியது.

2015 ஆகத்து மாதம் வந்த இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, ஏழு தமிழர்களை விடுதலை செய்ய அன்றைய முதலமைச்சர் செயலலிதா எதுவும் செய்யவில்லை.

இந்தப் பின்னணியில் தம்பி பேரறிவாளன் தன்னை விடுதலை செய்வதற்குரிய காரணங்களைக் கூறியும், தான் அப்பாவி என்பதற்கு, இராசீவ் கொலை வழக்கை விசாரித்த காவல் கண்காணிப்பாளர் தியாகராசன் பணி ஓய்வுக்குப் பின் – தான் செய்த தவறை வெளிப்படுத்தியதைச் சுட்டிக்காட்டியும், இவ்வழக்கின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கி தீர்ப்பு எழுதிய நீதிபதி கே.டி. தாமசு பணி ஓய்வுக்குப் பின், இராசீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பது – ஐயமற – தெள்ளத் தெளிவாக மெய்ப்பிக்கப்படவில்லை, எனவே அரசு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யலாம் என்று கூறி வந்ததையும் சுட்டிக்காட்டி – தன்னை விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு ஆளுநர்க்கு 2015 டிசம்பர் 30 அன்று விண்ணப்பித்தார்.

பேரறிவாளனின் இந்த மனுவைக் கிடப்பில் போட்டுவிட்டார் ஆளுநர். இந்த விண்ணப்பத்தின் மீது தமிழ்நாடு ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற ஆயங்களின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டியும் தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

பேரறிவாளனின் இந்த முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி நவீன் சின்கா, நீதிபதி கே.எம். சோசப் ஆகியோர் அமர்வு விசாரித்து, 06.09.2018 அன்று தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி, கைதிகளுக்குத் தண்டனைக் குறைப்பு – விடுதலை ஆகியவற்றை செயல்படுத்த மாநில அரசுக்குத் தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கிறது என்று அத்தீர்ப்பு கூறியது.

அதன்பிறகு, 09.09.2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது அமைச்சரவையைக் கூட்டி, மேற்படி இராசீவ் வழக்கில் 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யத் தீர்மானித்து, அப்பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, “ஆய்வு செய்வதாகக்” கூறிக் கொண்டு அமைச்சரவையின் பரிந்துரையைத் திட்டமிட்டுக் கிடப்பில் போட்டு விட்டார் ஆளுநர்.

தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடந்த 20.01.2020 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இவ்வளவு காலமாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல, அவர் என்ன செய்கிறார் என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு ஆணையிட்டது. கடந்த 03.11.2020 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேசுவரராவ் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்த்தோகி, ஏமந்த குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஆளுநர் தாமதம் செய்வதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

பன்னாட்டுச் சதி பற்றி விசாரணை இன்னும் முடியவில்லை; அதனால் இவர்களை விடுதலை செய்ய முடியாது என்று இந்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம். நடராசு கூறினார். உடனடியாக நீதிபதி நாகேசுவரராவ், “இவ்வழக்கில் சிறையில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். பன்னாட்டுச் சதி வழக்கில் இவர்களைச் சேர்க்க முடியாது. இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டுச் சதியைக் கண்டறிய முடியவில்லையா?” என்று கண்டனக் குரலில் கூறினார்.

ஆளுநர் விடுதலை செய்யக் கையொப்பமிடவில்லை என்றால், உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 –இன் கீழ் தானே முன்வந்து விடுதலை செய்யும் என்றார் நீதிபதி நாகேசுவரராவ். விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று எச்சரித்து வழக்கை 23.11.2020-க்குத் தள்ளி வைத்துள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கடும் எச்சரிக்கை மற்றும் கண்டிப்புக்குப் பின்னும் ஆளுநர் அமைதி காப்பதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைதி காப்பதும், அசைய மறுப்பதும் என்ன செய்தியை வெளிப்படுத்துகின்றன?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கத்தினால் கத்திக் கொள்ளட்டும். நான் மோடி – அமித்சாவின் கட்டளை இல்லாமல் அசையவே மாட்டேன் என்று ஆளுநர் பன்வாரிலால் வெளிப்படையாகச் சொல்லாமல் அனைவர்க்கும் உணர்த்துகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சரோ, கணக்குக் காட்ட - என் கடமையை முடித்து விட்டேன்; இதற்கு மேல் இதில் தலையிட்டு தில்லி ஆட்சியாளர்களின் எதிர்ப்பைத் தேடிக் கொள்ள நான் விரும்பவில்லை என்று எடப்பாடி சொல்லாமல் சொல்கிறாரா?

மோடி – அமித்சா – பன்வாரிலால் மூவருக்கும் தமிழினத்திற்கு எதிரான வெறுப்புணர்வு இருக்கிறது. பழிவாங்கும் உள்மன உந்துதல் இருக்கிறது. அதனால்தான் அரசமைப்புச் சட்டம் வழங்கும் நீதி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் வழிகாட்டல் – தமிழர்களுக்குப் பொருந்தாது; இன ஒதுக்கலுக்கு உள்ளாக வேண்டிய இனம் இது என்று அவர்கள் கருதலாம். ஆனால், எடப்பாடி அவர்களோடு ஒத்துப் போவது இனத்துரோகம் அல்லவா!

காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கேட்சேயை (நாதுராம் கோட்சேயின் தம்பியை) 14 ஆண்டுகளில் விடுதலை செய்தது மராட்டிய காங்கிரசு ஆட்சி! கோபால் கோட்சே மராட்டியர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உடனடியாக நேரில் சந்தித்து, முதல் கட்டமாக தம்பி பேரறிவாளனை விடுதலை செய்யக் கையெழுத்துப் பெற வேண்டும். ஆளுநர் பன்வாரிலால் கையெழுத்துப் போட மறுத்தால் அவருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக தமிழ்நாடு அரசு மனுப் போட்டு – நடவடிக்கை கோர வேண்டும்.

முதல் கட்டமாகப் பேரறிவாளனை விடுதலை செய்ய இதுபோன்ற அல்லது அதற்குரிய வேறு வழியைக் கையாண்டு தமிழ்நாடு முதல்வர் தீர்வு காண வேண்டும். அதன்பிறகு அதே வழியில் எஞ்சிய ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

வெளிப்படையாக – பேரறிவாளன் விடுதலைக்குக் கருத்துத் தெரிவித்தும், ஆளுநரின் இரண்டாண்டு தாமதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை என்றால், கட்சி கடந்து தமிழின உணர்வாளர்கள் – நடுநிலையாளர்கள் – மனித உரிமை ஆர்வலர்கள் என்ன கணிப்பார்கள் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


Sunday, November 15, 2020

“இந்துத்துவா இந்தியம் தமிழீழத்துக்குத் துணை வருமா?” கனடாவிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட இணையவழி சிறப்புக் கருத்தரங்கில் - ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் கருத்துரை!

“இந்துத்துவா இந்தியம்

தமிழீழத்துக்குத் துணை வருமா?”



அனைத்துலக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் 08.11.2020 அன்று கனடாவிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட இணையவழி சிறப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் கருத்துரை!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, November 14, 2020

ஓங்கி வரும் உள் மோதல்கள்-2 இந்துத்துவா பேசிய சிவசேனையின் இன அரசியல்! - ஐயா பெ. மணியரசன்,




ஓங்கி வரும் உள் மோதல்கள்-2

இந்துத்துவா பேசிய சிவசேனையின்
இன அரசியல்!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்

“ஒற்றை அதிகார பாசிசத்தை -  இந்தியாவின் உள் மோதல்கள் உடைக்கும்” என்ற தலைப்பில் 11.11.2020 அன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.”

இந்தியத் தேசியம் பேசுவோரிடையே உள்ள மோதல்களையும், இந்துத்துவா பேசுவோரிடையே உள்ள மோதல்களையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த உள் மோதல்களில் பெரும்பான்மையாய் உள்ளவை இன அடிப்படையிலான மோதல்களே!

இந்துத்துவா அரசியல் பேசுவதில் பாசகவும் சிவசேனையும் பங்காளிக் கட்சிகள். ஆனால் பாசக -  ஆரியத்துவா அடிப்படையிலும், சிவசேனை மராத்திய இன அடிப்படையிலும் செயல்படும் கட்சிகள். இப்போது, மராட்டிய முதலமைச்சர் பதவியில் சிக்கல் ஏற்பட்டு – பாசக – சிவசேனைக் கூட்டணி உடைந்து விட்டது. தேசியவாதக் காங்கிரசு – காங்கிரசுக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து – அக்கூட்டணி அமைச்சரவையின் முதலமைச்சராக சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே உள்ளார்.

பாசகவையும் தலைமை அமைச்சர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது சிவசேனை.

மும்பை அலிபாக்கைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்தவர் ரிபப்ளிக் தொலைக்காட்சி முதலாளி அருணாப் கோசுவாமி என்ற குற்றச்சாட்டில் வழக்குப் பதிவாகியுள்ளது. அவ்வழக்கில் அண்மையில் அருணாப் தளைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரைச் சிறையில் அடைத்தது உத்தவ் தாக்ரே அரசு.

அந்த ஆத்திரத்தில், உத்தவ் தாக்ரே மனைவி, மேற்படி அன்வய் நாயக்கிடம் நிலம் வாங்கிய போது குறைந்த விலை கொடுத்து  ஏமாற்றிவிட்டார். அதனால் அன்வய் தற்கொலை செய்து கொண்டார் என்று பாசகவின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிரீட் சோமையா குற்றம் சாட்டியுள்ளார்.

இக்குற்றச் சாட்டை மறுத்த சிவசேனையின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத் பாசக தலைமையை இன அடிப்படையில் கண்டனம் செய்தார்.

“பாசக ஒரு சேட்ஜி கட்சி, கிரீட் சோமையா ஒரு வணிகர். கட்டட வடிவமைப்பாளரின் மனைவி கணவனை இழந்து அழுது கொண்டிருக்கிறார். அவருக்கும் அவர்கள் மகளுக்கும் நீதி கிடைக்க பாசக எதுவும் பேசவில்லை. அந்த வழக்கைத் திசை திருப்பவே சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது” என்றார் ரெளத்.(தினமணி, 14.11.2020)

ஒட்டு  மொத்த பாசகவை சேட்ஜி கட்சி என்கிறார் சிவசேனை செய்தித் தொடர்பாளர். சேட்ஜி என்பது குசராத்தி வணிகர்களைக் குறிக்கும். மோடியும் அமித்சாவும் குசராத்தைச் சேர்ந்தவர்கள். மராத்தி X குசராத்தி இன முரண்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறார் சிவசேனைத் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர்.
கடந்த 2019 – இல், மராட்டிய மாநிலத்தின் தேசியவாதக் காங்கிரசுக் கட்சி நிறுவகத் தலைவர் சரத்பவார் மீது இந்திய அரசின் அமலாக்கத்துறை – ஊழல் விசாரணை நடத்தப் போவதாக  அறிவித்தது. அப்போது சரத்பவார் “வீர சிவாஜி மரபிலே வந்த மராட்டியன் ஒரு போதும் புது தில்லிக்குத் தலைவணங்க மாட்டான்” என்று செய்தியாளர்களிடம் கூறினார். இச்செய்தி ஏடுகளில் வந்தது.

இப்போது சிவசேனைத் தலைவர்களில் ஒருவர், அதே மராட்டியப் பெருமிதத்தோடு, குசராத்தி இனத்தைச் சேர்ந்த பாசக தலைவர்களைக் கண்டிக்கிறார்!

இந்தியத் தேசியத்தின் உள் மோதல்கள் ஒவ்வொரு வடிவில் வெளிவந்து கொண்டுள்ளன.
------------------------
=====================================================
“உச்ச நீதி மன்றத்தில் பாசக கொடியைப் பறக்க விடலாம்” – சிரிப்பு நடிகர் விமர்சனம்
==========================================
அருணாப் கோசுவாமி, தளைப்பட்ட பின் நேரடியாக மும்பை உயர்நீதிமன்றத்தில் பிணை மனு போட்டார்கள். கீழ்நீதி மன்றத்தை அணுகு மாறு கூறி, அது பிணை மனுவைத் தள்ளுபடி செய்தது.

மாவட்ட நீதி மன்றத்தில் பிணை மனு போட்டார்கள். ஆனால் அது விசாரிக்கும் முன்பாகவே உச்சநீதி மன்றத்திலும் பிணை மனு போட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்திரா முகர்ஜி ஆகியோர் அமர்வு உடனடியாகப் பிணை கொடுத்தது.

உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பைப் பலரும் விமர்சிக்கிறார்கள். ஓராண்டுக்கும் மேலாக காசுமீர் உரிமைப் பறிப்பு வழக்கை – அதில் சிறையில் உள்ளோர் பிணை வழக்கை – பீமா கொரேகான் – வழக்கில் – மோடியைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டினார்கள் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், மூத்த வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் போன்ற முதியவர்களின் பிணை மனுவைப் பல மாதங்களாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டு வைக்கும் உச்சநீதி மன்றம் பாசகவின் பரப்புரை வம்பர் அருணாப் கோசுவாமி பிணை மனுவை, கீழ் நீதிமன்றத்தில் அப்பிணை மனு விசாரணையில் இருக்கும் நிலையில் மரபுகளைக் கைவிட்டு, உடனடியாகப் பிணை வழங்கியதை பலரும் விமர்சிக்கின்றனர்.

இந்தித் திரைப்பட சிரிப்பு நடிகர் குணால் கம்ரா, காரசாரமாக விமர்சித்துவிட்டார். உச்சநீதிமன்றக் கட்டடத்தின் உச்சியில் பாசக கொடியை ஏற்றிவையுங்கள் என்று சுட்டுரையில் கூறிவிட்டார். அதே போல் நீதிபதி சந்திசூட்  பற்றியும் விமர்சித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடிகர் குணால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உள்ளார்கள். இந்திய அரசின் சட்டத்தலைவர் கே.கே.வேணுகோபால்  அவர்களும் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய தமது ஒப்புதலைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் குணால் கம்ரா – இந்தியத் தேசியத்தை ஏற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


Friday, November 13, 2020

"பேரறிவாளன் விடுதலைக்காக ஆளுரை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்!" - ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை!

"பேரறிவாளன் விடுதலைக்காக ஆளுரை
முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்!"



தமிழ்த்தேசிய பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, November 12, 2020

தொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான அனைத்திந்திய வேலை நிறுத்தம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு! - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


தொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான
அனைத்திந்திய வேலை நிறுத்தம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!



நரேந்திர மோடி அரசின் தொழிலாளர் பகைச் சட்டங்களை எதிர்த்தும், உழவர் பகைச் சட்டங்களை எதிர்த்தும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க 26.11.2020 அன்று நடைபெறும் அனைத்திந்திய பொது வேலை நிறுத்தத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரிக்கிறது. தமிழகத் தொழிற்சங்க முன்னணி இப்போராட்டத்தில் பங்கேற்கிறது!

நீண்டகாலப் போராட்டங்களின் விளைவாக தொழிலாளர்களுக்கு சில அரைகுறை உரிமைகளை வழங்கிவந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளுக்குள் கொண்டு வருவது என்ற பெயரால் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளித்துவந்த பல்வேறு விதிகளை, சூதான முறையில் கைவிட்டு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை (Labour Codes) மோடி அரசு பிறப்பித்திருக்கிறது.

இதுபோன்ற அடிப்படை மாறுதல்கள் செய்வதற்கு முன்னால் தொழிலாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் அமைப்புகள், அரசு ஆகிய முத்தரப்பினர் கூடி முடிவு செய்வதுதான் இதுவரையிலும் பழக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறான கூட்டுக் கூட்டம் எதுவும் நடைபெறாமலும், இந்த சட்டத் தொகுப்புகள் வரைவு நிலையில் இருந்தபோது, அதுகுறித்து தொழிற்சங்கங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அளித்த பல்வேறு கருத்துகளை முற்றிலும் புறக்கணித்தும், நாடாளுமன்றத்திலும் முறையான விவாதமின்றியும் அவசர அவசரமாக இச்சட்டத் தொகுப்புகளை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.

நரேந்திர மோடி அரசு அதனுடைய புதிய உத்தியை, அதாவது அரசமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு அதை அப்பட்டமாக மீறுவது என்ற மோசடியான உத்தியை இதிலும் செயல்படுத்தியிருக்கிறது.

தொழிலாளர் (Labour) என்பது அரசமைப்புச் சட்டப்படி இந்திய அரசுக்கும், தேசிய இன மாநில அரசுக்கும் இணை அதிகாரமுள்ள பொதுப்பட்டியலில் இருக்கிறது. ஆனால், இப்போது பிறப்பிக்கப்பட்டிருக்கிற சட்டத் தொகுப்புகள் பெரும்பாலான இடங்களில் “தொடர்புடைய அரசு” என்பதை இந்திய அரசு என்பதாகவே குறிப்பிடுகிறது. தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு இருந்த அரைகுறை அதிகாரங்களும் முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டன.

தொழிற்சாலை சட்டம் எட்டுமணி நேர வேலையை உறுதி செய்திருந்த நிலையை புதிய சட்டம் முற்றிலும் மாற்றுகிறது. பத்து மணி நேர வேலையை இயல்பாக்குவது, நிர்வாகங்கள் விரும்பினால் 12 மணி நேரம் வரை வேலை வாங்கலாம் என்பது தொழிலாளர் நிலையை 19ஆம் நூற்றாண்டிற்கு இழுத்துச் செல்கிறது.

இன்று பெரும்பாலான தொழிலகங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறை பரவலாக இருக்கிறது. இந்த முறையில் ஒப்பந்தக்காரர்கள் தொழிலாளர்களுக்கு ஊதியமோ, மற்ற பலன்களோ தரத் தவறினால் அதற்கான இறுதிப் பொறுப்பு முதன்மை நிர்வாகத்திற்கு (Principal Employer) இருந்தது.

ஆனால், மோடி அரசின் புதிய சட்டம் இந்த சட்டப் பாதுகாப்பை நீக்கி விட்டது. ஒப்பந்தக்காரர்கள் ஊதியத்தையோ வருங்கால வைப்பு நிதியையோ பணிக்கொடையையோ (கிராஜூட்டி) கொடுக்காமல் போனாலோ, நிலுவை வைத்தாலோ இனி முதன்மை நிர்வாகத்திடம் இதைக் கோர முடியாது.

“வரையறுத்த காலத்திற்கான பணி“ (Fixed Term Employment) என்ற பெயரால் எல்லா வேலைகளுக்கும் ஓராண்டு அல்லது ஈராண்டு மட்டுமே பணிக்காலமுள்ள தொழிலாளர்களை பரவலாக்குவதற்கு இச்சட்டம் வழி செய்கிறது. அடிபட்டால் முதலுதவி செய்வது, எந்திரங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய இடைவெளி, உணவு இடைவேளை இவற்றை வரையறுக்கும் எல்லா நல விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட எந்தப் பாதுகாப்புமற்ற நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்படுகிறார்கள்.

அமர்த்து துரத்து என்பது எல்லா நிலையிலும் நிலைப்படுத்தப்படுகிறது.

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியிலிருந்து பல தொழில்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் குறைந்தபட்ச தொழிலாளர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு விட்டது.

மறுபுறம், 100 தொழிலாளர்களும் அதற்கு மேல் இருக்கக்கூடிய நிறுவனங்களுக்கு இதுவரை பொருந்தி வந்த தொழில் உறவுச் சட்டங்கள், இனி 300 தொழிலாளிகளுக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்குத்தான் பொருந்தும் என்று மாற்றம் செய்திருப்பதன் வழியாக கிட்டத்தட்ட 90 விழுக்காடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் ஆட்சிக்குக் கட்டுப்படாத காட்டாட்சியில் விடப்படுகிறது.

இதுவரை ஒழுங்கமைக்கப்படாத தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wages) என்பது சட்டப் பாதுகாப்பையாவது வழங்கி வந்தது. அதையும் மாற்றி, குறைந்தபட்ச ஊதியத்திற்குக் கீழ் அடிமட்ட ஊதியம் (Floor Wages) என்ற புதிய வகையினத்தை நரேந்திர மோடியின் சட்டம் புகுத்துகிறது.

தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்படுவதை கடுமையான கட்டுத்திட்டங்களுக்கு உள்ளாக்கி நடைமுறையில் தொழிற்சங்கம் சேரும் உரிமை இல்லாமல் ஆக்கப்படுகிறது. தொழிலகத்திற்குள் தீர்க்க முடியாத சிக்கல்களை சமரசப் பேச்சின் மூலம் தீர்ப்பதற்கான தொழிலாளர் அதிகாரிகள் பொறியமைவு ஏற்கெனவே எந்த சட்ட வலுவும் இல்லாமல் இருக்கிறது. இப்போது, அது இன்னும் மேலும் சிதைக்கப்பட்டு தொழில் நிர்வாகங்களை எல்லா விதக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவித்து விடுகிறது.

கட்டடத் தொழிலாளர்கள், தானி ஓட்டுநர்கள், நெசவுத் தொழிலாளர்கள், வீட்டு வேலைப் பணியாளர்கள் போன்ற அமைப்புசாராத் தொழிலாளர் தொடர்பாக இருந்துவந்த நலவாரியங்கள் பெரும்பாலானவை செயலற்றதாக மாற்றப்படுகின்றன.

தொழிலாளர்கள் மீது இப்படிப்பட்ட தாக்குதல் என்றால், மறுபுறம் உழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றும் நோக்கோடு ஒப்பந்தப் பண்ணையச் சட்டம், விளைபொருள் விலைபெறும் சட்டம், தனியார் கொள்முதலுக்கு வழிவகுக்கும் சட்டம் போன்றவற்றின் மூலமாக பெருந்தாக்குதலை மோடி அரசு தொடுத்துள்ளது.

இவை அனைத்தையும் கண்டித்து உழைப்பாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அனைத்திந்திய தொழிற்சங்க அமைப்புகளும், தற்சார்பான தொழிற்சங்கக் கூட்டமைப்புகளும் வரும் 26.11.2020 இந்திய நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

இந்தப் பொதுவேலை நிறுத்தத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரிக்கிறது. பேரியக்கத்தின் வழிகாட்டுதலில் இயங்கும் தமிழகத் தொழிற்சங்க முன்னணி பங்கேற்கிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதி உழைப்பாளர்களும், பொது மக்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiya

 

பா.ச.க.வின் திட்டம் : அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவது தி.மு.க.வை எதிர்க்கட்சியாக்குவது! - ஐயா பெ. மணியரசன்,



பா.ச.க.வின் திட்டம் :
அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவது
தி.மு.க.வை எதிர்க்கட்சியாக்குவது!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தமிழ்நாட்டில், தி.மு.க. எதிர்ப்பை முதன்மைப்படுத்தி, அன்றாடம் தி.மு.க.வுக்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருகிறது பா.ச.க.
மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு, ஆரியத்துவா பா.ச.க.வுக்குத் திராவிடத் தி.மு.க. மீது அவ்வளவு வெறுப்பு என்று தோன்றும். ஆனால், பா.ச.க.வின் உண்மைத் திட்டம் தி.மு.க. ஒழிப்பல்ல; அ.தி.மு.க.வை ஓரங்கட்டுவதுதான்!
தமிழ்நாட்டு அரசியல், அ.இ.அ.தி.மு.க. எதிர் தி.மு.க. என்று இருமுனை முகாம்களாக இருப்பதை மாற்ற வேண்டும் என்பதே பா.ச.க.வின் உடனடித் திட்டம். இதைப் பா.ச.க. எதிர் தி.மு.க. என்று மாற்ற வேண்டும் என்பது அதன் போர் உத்தி!
எதிர்க்கட்சி என்ற நிலையில் தி.மு.க. இருக்க வேண்டும்; ஆளுங்கட்சியாகவோ அல்லது முதன்மை எதிர்க்கட்சியாகவோ அ.இ.அ.தி.மு.க. இருக்கக் கூடாது என்பதே பா.ச.க.வின் வேலைத் திட்டம். அ.இ.அ.தி.மு.க.வுக்கு வலிமையான தலைமை இல்லை என்பதால் அதை ஓரங்கட்ட முடியும் என்று பா.ச.க. கருதுகிறது.
இதற்காகத்தான் 24 மணி நேரமும் தி.மு.க. எதிர்ப்புப் பரப்புரை செய்கிறது பா.ச.க. தமிழ்நாட்டு மக்கள் 24 மணி நேரமும் முதலிடத்தில் வைத்துப் பா.ச.க.வையும் தி.மு.க.வையும் பேச வேண்டும். பா.ச.க. கதாநாயகன், தி.மு.க. வில்லன் என்பது போல் மக்களிடையே விவாதங்களைக் கிளப்ப வேண்டும். ஆரியத்துவா கையாளும் உளவியல் போர் முறை இது!
ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சொல்லிக் கொண்டே, எடப்பாடி தலைமையை இடது காலால் எத்தி விடுகிறார் பா.ச.க. தலைவர் எல். முருகன்!
“பா.ச.க. கைகாட்டும் நபர்தான் அடுத்த தமிழ்நாட்டு முதலமைச்சர்; பா.ச.க. பங்கேற்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்!”, “டிசம்பர் வாக்கில் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்!”.
இவையெல்லாம் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் எல். முருகன் பேசியவை!
எடப்பாடி – ஓ.பி.எஸ். தலைமை பா.ச.க.வின் அடாவடித்தனங்களுககு உரியவாறு எதிர்வினை ஆற்றாமல் பம்மிப் பதுங்குகிறது. ஏன்? பதவியைப் பயன்படுத்திப் பதுக்கி வைத்திருப்பது அவ்வளவு! மோடி ஏவிவிட்டால் தில்லியின் பல்வேறு துறையினர் அ.இ.அ.தி.மு.க. தலைவர்களின் - உறவினர்களின் – நண்பர்களின் வீடுகளும் அலுவலகங்களும் முற்றுகை இடப்படும்! ஆட்சிக்கும் ஆபத்து ஏற்படும்.
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால் ஆரியத்துவாவுக்கோ, பா.ச.க.வுக்கோ ஆபத்து ஒன்றுமில்லை. பழைய நட்புக் கழகம்; தி.மு.க.வின் - அதன் திராவிட ஊதுகுழல்களின் – திராவிடப் பரப்புரைகள், தமிழ்த்தேசிய வளர்ச்சியை – தமிழர் இன உணர்ச்சியைத் தடுக்கப் பயன்படும்; கூப்பிட்டால் கூட்டணிக்கு வந்துவிடும்; இந்தியத்தேசிய ஏகபோகத்தின் கையடக்கப் பதிப்பு தி.மு.க.; இவையெல்லாம் பா.ச.க.வின் கணிப்பு!
எனவே, தி.மு.க.விற்கு எதிர்வகை விளம்பரம் (Negative Propaganda) கொடுப்பதற்காக பா.ச.க.வினர் எந்நேரமும் தி.மு.க. எதிர்ப்புப் பேசுகின்றனர். அ.இ.அ.தி.மு.க.வை எளிதாகக் கலைத்துப் போடலாம் என்றும் கணக்குப் போட்டுள்ளார்கள்.
பா.ச.க. – ஆரியத்துவா பாசிசக் கட்சி! பா.ச.க. பாசிசத்தை எதிர்ப்பதற்குத் தி.மு.க. அணியை வலுப்படுத்த வேண்டும் என்று பலர் பேசுகின்றனர்.
வலிக்காமல் வாக்குச்சாவடி மூலம் பாசிசத்தை வீழ்த்திவிடலாம் என்பவர்களின் மனக் கணக்கு இது! நோகாமல் நொங்கெடுக்க நினைப்பவர்கள் இவர்கள்!
தமிழ்த்தேசியம் பேசுவோரிலும் ஒருசாரார் “வாக்குச்சாவடிப் புரட்சி”யில் பெரு நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
வாக்குச்சாவடி வேண்டாம் என்பது நமது வாதமல்ல; வாக்குச் சாவடியை முதன்மைப்படுத்தாதீர்கள்; வாக்குச்சாவடி மூலம் தமிழ்த்தேசியம் வெற்றி பெறும் என்று எண்ணாதீர்கள்!
“எந்த அடக்குமுறை வந்தாலும் எதிர்கொண்டு, ஆரியத்துவா பாசிசத்தை முறியடிக்க முன்னேறுவோம்; இலட்சக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் தமிழ்த்தேசிய உரமேற்றி எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் உளவியலை உருவாக்குவோம்” என்பவற்றைத் தமிழ்த்தேசியர்கள் முதற்பெரும் கடமையாக ஏற்க வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT