உடனடிச்செய்திகள்

Friday, January 31, 2020

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு சரிபாதி இடம் - முதல் கட்ட வெற்றி! பெ. மணியரசன் அறிக்கை!


தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில்
தமிழுக்கு சரிபாதி இடம் - முதல் கட்ட வெற்றி!


தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு

ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!



தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கைத் தமிழில் மட்டுமே நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் வழக்குத் தொடுத்திருந்தோம். மற்றும் சிலரும் வழக்குத் தொடுத்திருந்தார்கள்.


தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பிலும், வீரத்தமிழர் முன்னணி சார்பிலும் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் முத்துக்கிருஷ்ணன், “சிகரம்” செந்தில்நாதன் ஆகியோரும், வழக்கறிஞர் திருமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய், அழகுமணி ஆகியோரும், கரூர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்களும் வாதிட்டார்கள். இளம் வழக்கறிஞர்கள் ராஜீவ் ரூபஸ், மது ஆகியோரும் இவ்வழக்குப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.


இன்று (31.01.2020) காலை இவ்வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, இரவீந்திரன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். கடந்த 29.01.2020 அன்று நம் மூத்த வழக்கறிஞர்கள் நடத்திய தருக்கத்தின்போது, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை கூடுதலாக ஒரு பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரம், கலசம் ஆகிய ஐந்து இடங்களில் தமிழ் மற்றும் சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கும் சமமான இடம் அளிக்கப்படும் என்றும், தமிழ் மந்திரங்களும, சமற்கிருத மந்திரங்களும் சம அளவில் ஓதப்படும் என்றும் தெரிவித்திருந்தது.


இந்த உறுதிமொழியை ஏற்று, இந்து அறநிலையத்துறை இக்குடமுழுக்கை செயல்படுத்த வேண்டுமென்றும், இருமொழிச் சமத்துவம் உறுதியாகக் கடைபிடிக்கப்பட வேண்டுமென்றும், இத்தீர்ப்பை முழுமையாக செயல்படுத்தியது பற்றிய அறிக்கையை குடமுழுக்கு முடிந்த ஒரு வாரத்தில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அரசு தாக்கல் செய்ய வேண்டுமென்றும் இன்றைய தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.


அந்த வகையில் இந்தத் தீர்ப்பு, தமிழுக்குக் கிடைத்த முதல் வெற்றி; அயல் ஆதிக்க மொழியான சமற்கிருதத்திற்குக் கிடைத்த முதல் தோல்வி என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு இத்தீர்ப்பை வரவேற்கிறது!


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி, உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழுக்கு உரிய இடம், குடமுழுக்கு நிகழ்ச்சி முழுவதிலும் கிடைப்பதை உறுதி செய்ய சமயச் சான்றோர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறன். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் சமயச் சான்றோர்கள் சிலரை அக்குழுவில் இணைத்துக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.


இந்த முதல் கட்ட வெற்றிக்குக் காரணமானவர்கள் – ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் ஆவார்கள். தமிழ்நாட்டில் பா.ச.க. தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழ்க் குடமுழுக்கை ஆதரித்து அறிக்கை வெளியிட்டன. தமிழ் அறிஞர்களும், தமிழ் படைப்பாளிகளும், தமிழ் உணர்வாளர்களும் பல்வேறு வடிவங்களில் தமிழ்க் குடமுழுக்கிற்கு ஆதரவுக்குரல் எழுப்பினார்கள். தமிழ் வழிபாட்டுரிமைக்கு தமிழ்நாடு உள்பட உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் குரல் கொடுத்தார்கள். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவின் உறுப்பு அமைப்புகளும், உணர்வாளர்களும் உறுதியாக இக்கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார்கள்.


தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமென்று கடந்த 22.01.2020 அன்று தஞ்சையில் மாபெரும் மாநாடு நடந்தது. அதில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் – ஆன்மிகம் சார்ந்த பெரியவர்களும், மக்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டார்கள்.


ஒட்டுமொத்தத் தமிழினமும் கொடுத்த குரலுக்கும், எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் இந்த முதல் கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது என்பதால், தமிழ்க் குடமுழுக்குக்காக 01.02.2020 அன்று தஞ்சையில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுவது என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.


தமிழர் ஆன்மிகத்தில் தமிழ் மொழி உரிமையை மீட்பதற்கான நம்முடைய முயற்சிகள் மேலும் தொடர வேண்டும். தமிழ்நாடு முழுவதிலுமுள்ள இந்துக் கோயில்கள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் அயல்மொழியான சமற்கிருதத்தை வெளியேற்றி நம்முடைய தாய்மொழியான தமிழை அரங்கேற்றுவதற்கான சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றிட வலியுறுத்தவும், இத்திசையில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் கருத்தைத் திரட்டவும் தொடர்ந்து இயங்கிட உறுதியேற்போம்!


தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் தமிழை நிலைநாட்டப் போராடிய, ஒத்துழைத்த, துணை நின்ற, குரல் கொடுத்த அனைவருக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு, சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/thanjaikovilurimai
ஊடகம் : www.kannottam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

Monday, January 20, 2020

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கை முற்றிலும் தமிழ்வழியில் நடத்த வேண்டும்! அமைச்சர் பாண்டியரசன் கருத்துக்கு எதிர்வினை! பெ. மணியரசன் அறிக்கை!


தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கை

முற்றிலும் தமிழ்வழியில் நடத்த வேண்டும்!

அமைச்சர் பாண்டியரசன் கருத்துக்கு எதிர்வினை!


தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!


வருகின்ற 2020 பிப்ரவரி 5ஆம் நாள் நடைபெறவுள்ள தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கை தமிழ்வழியில் நடத்திட தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்து, 22.01.2020 அன்று தஞ்சை – காவேரி திருமண மண்டபத்தில் முழுநாள் சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டை வரவேற்றும் வாழ்த்தியும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களும், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அவ்வறிக்கையில், தமிழ்நாடு அரசுக்கு மேற்படி குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்திட கோரிக்கையும் வைத்துள்ளார்கள். மேனாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. வி.வி. சாமிநாதன் அவர்கள் தமிழ்வழிக் குடமுழுக்குக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

பல்வேறு ஆன்மிக அமைப்புகளைச் சேர்ந்த பெருமக்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்வழியில் நடத்திட கேட்டுக் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிக்கைக்கு செய்தியாளர்களிடம் எதிர்வினையாற்றிய தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ம.பா. பாண்டியராசன் அவர்கள், தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு சமற்கிருதத்திலும் நடக்கும் – தமிழிலும் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.

சமற்கிருதத்தை முற்றிலுமாகத் தவிர்த்து, தமிழ்வழியில் மட்டும் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்பதுதான் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவின் கோரிக்கையாகும். இது தமிழ்க் கூறும் நல்லுலகில் உள்ள தமிழர் ஆன்மிகச் சிந்தனையாளர்கள், தமிழர் ஆன்மிக மரபு போற்றும் பெருமக்கள் அனைவரின் கோரிக்கையும் ஆகும்!

காலங்காலமாக தமிழ்நாட்டில் சிவநெறி மற்றும் திருமால் நெறி கோயில்களில் தமிழில்தான் கருவறை அர்ச்சனைகளும், வழிபாடுகளும் நடந்திருக்கின்றன. இந்த மரபை இடைமறித்து மாற்றி சமற்கிருதத்தை ஒரு சாரார் திருக்கோயில்களில் திணித்தார்கள். அந்த ஆக்கிரமிப்பை நீக்கித் தமிழ் வழிபாட்டு அர்ச்சனையும், குடமுழுக்கும் நடைபெற வேண்டும் என்பதுதான் இப்போதுள்ள கோரிக்கை!

இந்தக் கோரிக்கை, தமிழ்நாடு அரசின் ஆணைகளுக்கு இசைவானதே! தமிழில் கருவறையில் அர்ச்சனை மந்திரங்களைச் சொல்லி வழிபாடு நடத்த தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை ஆணையிட்டிருக்கிறது. அதற்கான தமிழ் அர்ச்சனை மந்திரங்களையும் நூலாக வெளியிட்டிருக்கிறது. தமிழில் அர்ச்சனை செய்வதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சான்றிதழும் வழங்கியிருக்கிறது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் (2015) இந்து சமயம் ஒற்றைத் தெய்வ வழிபாட்டை, ஒற்றை மொழி வழிபாட்டைக் கொண்டதல்ல, பல்வேறு வகையறா (Denomination) கோயில்களும், வழிபாடுகளும் இருக்கின்றன. அந்தந்த வகையறாக் கோயிலின் மரபுப்படி அர்ச்சகர்களை அமர்த்திக் கொள்ளவும், அர்ச்சனை மொழியைத் தேர்வு செய்து கொள்ளவும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார்கள்.

எனவே, தமிழ்நாடு அரசு தனது அரசாணைகளுக்கு இசையவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்பவும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கை சிறிதும் சமற்கிருதக் கலப்பின்றி தமிழ்வழியில் நடத்திட முடிவெடுத்து செயல்படுத்திட வேண்டுமென்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு

பேச : 9486927540, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/thanjaikovilurimai
ஊடகம் : www.kannottam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

Saturday, January 18, 2020

துக்ளக் விழாவா? சனநாயகத்தைத் தூக்கிலிடும் விழாவா? பெ. மணியரசன் அறிக்கை!



துக்ளக் விழாவா? சனநாயகத்தைத்

தூக்கிலிடும் விழாவா?

ஐயா பெ. மணியரசன்

தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

ஆர்.எஸ்.எஸ். சார்பு ஏடான “துக்ளக்”கின் ஐம்பதாம் ஆண்டு விழா 14.1.2020 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

ஆரிய அதிகார பீடத்தின் ஆணவக் குரலாக, தமிழ்நாட்டில் துக்ளக் இதழ் வந்து கொண்டுள்ளது.

இவ்விழாவில் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் காணொலி உரை காட்டப்பட்டது. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயடு, நடிகர் இரசினிகாந்த் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழ்நாட்டு அரசியலுக்கான ஆர்.எஸ்.எஸ். வேலைத் திட்டத்தை முன்வைத்தார்.

மக்கள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் நாட்டை முன்னோக்கி இழுத்துச் செல்வோராகச் செயல்பட வேண்டும் என்றார் மோடி! இதன் பொருள், பா.ச.க. அரசின் எதேச்சாதிகார – வர்ணாசிரமவாதச் சட்டங்களை மற்ற கட்சிகளும் மக்களும் எதிர்த்தால் அவர்களை எதிர்த்து வீதிக்கு வந்து அவர்களை முறியடிக்க வேண்டும் என்பதாகும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம். தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து சனநாயக வழியில் போராடும் மாணவர்கள், மக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்துகிறது பா.ச.க. அவர்களின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்துகிறது.

காசுமீர் உரிமைப் பறிப்பு, முத்தலாக் தடைச் சட்டம், மாநில அரசுகள் வணிக வரி விதிக்கும் உரிமைப் பறிப்பு (ஜி.எஸ்.டி.), ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதியில் கைவைத்து மேல்சாதியினர்க்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது போன்ற உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளைத் தனது அரசின் “சாதனை”களாக அந்தக் காணொலியில் மோடி முழங்கியுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருந்த இத்தனை உரிமைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்துவிட்டதைச் “சாதனை”களாகக் கூறிய மோடி, இந்திய அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் மக்களுக்குத் தலைவணங்குகிறேன் என்று அதே காணொலியில் கூறியுள்ளார். இதன் பொருள் என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோதே, நடுவண் அரசில் மிகையான அதிகாரக் குவிப்புகள் வைத்து, ஒற்றை ஆட்சித் தன்மை மேலோங்கியுள்ள கூட்டாட்சியாக அமைத்தார்கள் என்று உலக அரசமைப்புச் சட்டங்களை அலசி ஆராய்ந்த பேராசிரியர் கே.சி. வியர் கூறினார்.

கொஞ்ச நஞ்சமிருந்த மாநில அதிகாரங்களையும் அன்றாடம் பறித்து வருகிறது மோகன் பகவத் – மோடி ஆட்சி! திரௌபதியின் சேலையை உரிந்த துச்சாதனன் போல், சனநாயக உரிமைகளையும் மாநில உரிமைகளையும் அன்றாடம் பறித்து வருகிறது பா.ச.க. ஆட்சி!

அவர்களால் அம்மணமாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தைப் பாராட்டி ஆராதிக்கும் பக்தர்களாக இந்திய நாட்டு மக்கள் மாற வேண்டும் என்பது மோடியின் எதிர்பார்ப்பு. அதனை சூசகமாகச் சொல்லத்தான் மேற்கண்ட துகிலுரியும் காட்சிகளை வர்ணித்துளளார் மோடி!

இனியும் துகிலுரியப்படும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உச்சி மோந்து உயர்த்திப் பிடிக்கும் மக்களுக்குத் தலைவணங்குவதாக மோடி கூறியுள்ளார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் “தலைவணங்கும்” தத்துவத்தில், அரசமைப்புச் சட்டத்தில் மிச்சம் மீதியுள்ள மக்கள் உரிமைகள், மாநில உரிமைகள், தேர்தல் சனநாயகம் போன்றவற்றைக் காலி செய்யும் உத்தி அடங்கி இருக்கிறது.

நடிகர் இரசினிகாந்தும், துணிச்சல் பெற்று, தி.மு.க.வையும் காங்கிரசையும் தாக்கிப் பேசியுள்ளார். கையில் “முரசொலி” வைத்திருப்பவர் தி.மு.க.காரர்; ”துக்ளக்” வைத்திருப்பவர் அறிவாளி என்று வர்ணாசிரம பாணியில் தரப் பிரிப்பு செய்துள்ளார்.

துக்ளக் ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி தமிழ்நாட்டில் பா.ச.க.வும் காங்கிரசும் மட்டும்தான் இருக்க வேண்டும். காங்கிரசுக் கட்சியோ இப்போது தி.மு.க. போலவே மாறிவிட்டது. அதனால் தமிழ்நாட்டில் மாற்று அரசைக் கொண்டு வருவதற்கான ஒரே கட்சி பா.ச.க. மட்டுமே என்று பேசியுள்ளார்.

பிறப்பு அடிப்படையில் – மேல், கீழ் பேசும் வர்ணாசிரம – சனாதனத்தைத் தனது தத்துவமாகக் கொண்டுள்ள துக்ளக் ஏட்டின் ஆசிரியர் குருமூர்த்தி, தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மரபணு (DNA) பாரததேசத்திற்கு எதிரானது என்றும், அப் பல்கலைக்கழகத்தை மூடிவிடலாம் என்றும் அவ்விழாவில் பேசியுள்ளார்.

வார இதழ் ஒன்றின் பொன்விழாவாகவா அந்நிகழ்வு நடந்துள்ளது? ஒட்டுமொத்த இந்தியாவின் சனநாயக உரிமைகளைப் பறிக்கும் உள்நோக்கத்துடன் தலைமை அமைச்சரின் காணொலி உரை, இரசினிகாந்தின் வெளிப்படையான ஆர்.எஸ்.எஸ். பாணி உரை, தமிழ்நாட்டில் பா.ச.க. ஆட்சிக்கும், சவகர்லால் நேரு பல்கலைக்கழக மூடலுக்கும் ஆன குருமூர்த்தியின் உரை ஆகிய ஆரியத்துவா திட்டங்களின் பரப்புரை மாநாடாக அவ்விழா நடந்துள்ளது.

இந்த ஆரியத்துவா வேலைத் திட்டங்கள் அரங்கேற வழிவிடப் போகிறோமா? அவற்றை வழி மறிக்கப் போகிறோமா? இந்த வினாவை ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் கேட்டுக் கொண்டு விடை சொல்லுங்கள்; விழிப்புணர்வு கொள்ளுங்கள்; ஒல்லும் வகையில் எல்லாம் செயல்படுங்கள்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9025162216, பகிரி : 7667077075
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, January 13, 2020

மாநில உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரான ஊடகப் பதிவுச் சட்டத்தை திரும்பப் பெறு! கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


மாநில உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரானஊடகப் பதிவுச் சட்டத்தை திரும்பப் பெறு!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


அதிகாரக் குவிப்பு, கருத்துரிமைப் பறிப்பு ஆகிய நோக்கில் மிகக் கடுமையான சட்ட வரைவு ஒன்றை “அச்சு ஊடகம் மற்றும் வெளியீடுகள் பதிவுச் சட்ட வரைவு – 2019” (Registration of Press and Periodicals Bill – 2019) என்ற பெயரில், மோடி அரசு முன்வைத்திருக்கிறது.

வெள்ளையராட்சியில் 1867இல் பிறப்பிக்கப்பட்டு பெரிதும் வெறுத்து ஒதுக்கப்படும் நடப்பிலுள்ள “புத்தகங்கள் பதிவு சட்டம் – 1867”-ஐவிட மிக மோசமான சட்டமாக இச்சட்ட வரைவு அமைந்திருக்கிறது.

ஏடுகள், இதழ்கள், வெளியீடுகள் போன்றவற்றை பதிவு செய்யும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவு செய்வதற்கு மாறாக, முற்றிலும் இந்திய அரசின் கைகளில் கருத்துரிமைப் பறிப்பு அதிகாரத்தை நிரந்தரமாக வழங்கும் நோக்கோடு இப்புதிய சட்ட வரைவு அமைந்திருக்கிறது.

இது தொடர்பாக இந்திய அரசு அமர்த்தும் அச்சு ஊடகத் தலைமைப் பதிவாளர் (Press Registrar General) அச்சு ஊடகம் மட்டுமின்றி, காட்சி ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்கள் மீதும் வல்லாதிக்கம் செய்பவராக மாற்றப்படுகிறார். (இச்சட்ட வரைவு 5(3)).

ஒரு ஊடகத்தின் உரிமையாளர், ஆசிரியர், ஆசிரியர் குழு, அச்சகத்தார், மின்னணு ஊடகத்தில் பதிவேற்றிப் பரப்புவோர் ஆகிய அனைவரும் தலைமைப் பதிவாளரின் சர்வாதிகாரத்தின் கீழ் ஆட்டிவைக்கப்படும் வகையில் விரிந்த அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. ஒரு ஊடகம் தொடர்பான எந்தவித தகவல்களையும் எப்போது வேண்டுமானாலும் ஆணையிட்டுப் பெறலாம், எந்த ஊடக நிலையத்தையும் எப்போது வேண்டுமானாலும் உள்நுழைந்து ஆய்வு செய்யலாம், பொருத்தமானது என்று தான் கருதும் எந்த ஆவணத்தையும் கொண்டு வரச் சொல்லி வலியுறுத்தலாம், இவற்றில் அவருக்கு மனநிறைவு ஏற்படாவிட்டால் பதிவு செய்ய மறுக்கலாம் என்ற கட்டற்ற அதிகாரம் தலைமைப் பதிவாளருக்கு வழங்கப்படுகிறது (பிரிவு 5 மற்றும் 6).

தலைமைப் பதிவாளருக்குக் கீழே மாநிலங்களில் பதிவு அலுவலர்கள் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் மீது மாநில அரசுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது!

இவ்வாறு அனைத்து அதிகாரமும் உள்ள தலைமைப் பதிவாளர் தற்சார்பான அதிகாரம் கொண்டவரும் அல்லர். இறுதிக்கும் இறுதியாக, இந்தத் தலைமைப் பதிவாளர் இந்திய அரசு அவ்வப்போது மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளுக்கும், வழிகாட்டல்களுக்கும் கேள்வி முறையின்றி கட்டுப்பட்டவர் என்றும், இம்முடிவுகள் குறித்து முரண்பாடு வந்தால், இந்திய அரசின் முடிவே இறுதியானது என்றும் முற்றதிகாரமும் இந்திய அரசுக்கு வழங்கப்படுகிறது (பிரிவு 19).

இந்திரா காந்தி ஆட்சியில் அவசரநிலைக் காலத்தில் கிடைத்த சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்தி, ஊடகங்களுக்கு முன் தணிக்கை முறை வந்தது. ஆனால், இப்போது முன்வைக்கப்படும் சட்டத்தின் மூலம் மோடி ஆட்சியில் முன் தணிக்கை அதிகாரம் நிரந்தரமாக வழங்கப்படுகிறது. இவ்வாறான முன் தணிக்கைக்கு அச்சு ஊடகங்கள் மட்டுமின்றி, அனைத்து வகை மின்னணு ஊடகங்களும் உட்படுத்தப்படும் என சர்வாதிகாரம் விரிவாக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து, எந்த முணுமுணுப்பும் வெளியில் வரக் கூடாது என்பதற்காக அனைத்து வகை தகவல் தொடர்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டதையும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடக்கும் இடங்களிலெல்லாம் இணையச் சேவை உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டிருப்பதைப் போல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு வேட்டை நடந்தபோது தூத்துக்குடி – நெல்லை – கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையத் தகவல்கள் முடக்கப்பட்டதைப் போல இனி தாங்கள் விரும்பாத தகவல்கள் பரவுவதை தடுத்து நிறுத்தவும் தங்களது ஒரு தரப்புத் தகவல் மட்டுமே பரப்பப்படவும் அரசுக்கு வாய்ப்பளிக்க இச்சட்டத்தின் மூலம் நிரந்தர ஏற்பாடு செய்யப்படுகிறது.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்படி (UAPA) தண்டிக்கப்பட்டவர்களும், அரசின் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களும் எந்த வகை ஊடகமும் நடத்த முடியாது என இச்சட்டம் தடை போடுகிறது (பிரிவு 4 மற்றும் 11).

ஏற்கெனவே, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் பயங்கரவாத அல்லது பிரிவினைவாத கருத்துகள் என்று கருதப்படுபவை அச்சு ஊடகத்திலோ, காட்சி ஊடகத்திலோ, பேச்சிலோ, கலை வடிவிலோ, பிற எந்த வடிவிலோ பரப்புவது தண்டனைக்குரிய குற்றச் செயல் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டப்படி தண்டனை அனுபவித்துவிட்டு, வெளியில் வந்த பின்னும் அவர்களது கருத்துரிமைக்கு தடை போடப்படுகிறது. இரட்டைத் தாழ்ப்பாள் போல இந்தச் சட்டம் மயான அமைதிக்கு வலுசேர்க்கும் சட்டமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அதைவிட, “அரசின் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள்” என்று மிக தொளதொளப்பானப் பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது அரசு விரும்பாத எந்தத் தகவலும் பரவுவதை குற்றச் செயலாக வரையறுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. அரசின் பாதுகாப்புக்கு எதிரான செயல்பாடுகள் என்னென்ன என்ற எந்த வரையறுப்பும் இல்லாமல், எந்த எதிர்ப்பையும் அரசின் பாதுகாப்புக்கு எதிரான குற்றமாக வரையறுத்து ஊடக உரிமையை மறுக்கும் ஆபத்து இதில் உள்ளது.

அவசரநிலைக் காலத்தில், தனக்கு எதிராக கருத்துக் கூறிய அனைவருமே நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என வரையறுத்து, இந்திரா காந்தி ஆட்சி சிறையில் தள்ளியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற வலுவான ஊடகங்களே முடக்கப்பட்டன. இப்போது மோடி ஆட்சியில் எல்லா வகை எதிர்க் கருத்துகளும் “இந்திய எதிர்ப்பு” (Anti Indian) என தூற்றப்படுவதும், கொடும் அடக்குமுறைகளை சந்திப்பதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

இச்சட்ட வரைவு நிறைவேறிவிட்டால், இந்த அச்சுறுத்தல்கள் நிரந்தரமாக்கப்படும்.

வெள்ளையர் ஆட்சி தொடங்கி இப்போது செயலில் உள்ள ஏடுகள் பதிவு சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது நீண்டகாலம் நீடிக்கும் கோரிக்கையாகும். ஆனால், அதைச் செய்வதாக இப்போது பிறப்பிக்கப்படும் சட்டம் அதைவிட பன்மடங்கு மோசமானது.

இப்புதிய சட்டத்தை கருத்துரிமையில் அக்கறையுள்ள எந்தவொருவரும் ஏற்க முடியாது!

எனவே, மாநில உரிமையைப் பறித்து, கருத்துரிமையை முற்றிலும் முடக்கும் “அச்சு ஊடகம் மற்றும் வெளியீடுகள் பதிவுச் சட்ட வரைவு – 2019”-ஐ முழுவதுமாக இந்திய அரசு கைவிட வேண்டும் என்றும், ஊடகப் பதிவு அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, January 7, 2020

ஜே.என்.யு. வன்முறை : துணை வேந்தர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்! பெ. மணியரசன் கண்டனம்!



ஜே.என்.யு. வன்முறை :

துணை வேந்தர் உள்ளிட்ட
அனைவரையும் கைது செய்ய வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!


ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யினர் 5.1.2020 இரவு தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்திய வன்முறை வெறியாட்டம், மோடி அரசு – இந்தியாவில் இட்லரின் பாசிச ஆட்சியை நிலைநிறுத்தும் வேலையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

நேரு பல்கலைக்கழகத்தின் வாயில்கள் மற்றும் சுற்றுச்சுவரைச் சுற்றி பல நாட்களாகக் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முகமூடி அணிந்து கொண்டு, ஏ.பி.வி.பி. வன்முறையாளர்கள் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களையும், பேராசிரியர்களையும் தாக்கிப் படுகாயப்படுத்திப் பல மணி நேரம் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

அப்பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிசே கோஷைத் தேடிப் பிடித்துத் தாக்கியுள்ளனர். அம்மாணவியின் முகம் அடையாளம் தெரியாத அளவிற்குப் படுகாயப்படுத்தப் பட்டுள்ளது.

அதேபோல், இந்துத்துவா அரசியலை ஏற்காத பேராசிரியர்களையும், தேடித்தேடி தாக்கியுள்ளனர். தாக்கப்பட்டவர்களில் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் அனைவர்க்கும் முதலுதவி செய்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி விட்டனர். இதை அம்மருத்துவமனையில் பணிபுரியும் அலுவலர்கள் சிலரே ஏடுகளுக்குத் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சனநாயக வழியில் போராடிய தில்லி ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழக மாணவர்களை, அலிகர் முசுலிம் பல்கலைக்கழக மாணவர்களை அண்மையில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கினர். நேரு பல்கலையில் காவல்துறையினரின் கண்காணிப்பில் ஏ.பி.வி.பி.யின் முகமூடி வன்முறையாளர்கள் தாக்கியுள்ளனர். காவல்துறையினர் குவிந்திருந்த வாயில் வழியாகத் தான் முகமூடி வன்முறைக் கும்பல் சாவகாசமாக வெளியேறியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மீரட்டில் காவல்துறையினர் அப்பாவிகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்றவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு போனபோது அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துத் திருப்பி அனுப்பினர். அதில் இரண்டு பேர் இறந்து போனார்கள். உ.பி.யில் பா.ச.க.வின் யோகி ஆதித்தியநாத் ஆட்சி நடக்கிறது.

அசாமில் பா.ச.க.வின் சர்வானானந்தா கோனோவால் ஆட்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தவர்களை சுட்டுக் கொன்றது. அங்கும் காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. பா.ச.க. அரசுகளின் அழுத்தத்தின் பேரில்தான் இம்மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மோகன் பகவத் – மோடி அரசின் இந்துத்துவா கலகத் திட்டம் – ஒரே பாணியில் இருப்பதை நேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் அடையாளம் காட்டுகிறது.

நேரு பல்கலைக்கழக மாணவர்களையும், பேராசிரியர்களையும் படுகாயப்படுத்தித் தப்பித்த வன்முறைக் கும்பலில் உள்ள அனைவரையும் தளைப்படுத்தவும், இத்தாக்குதலுக்கு உடந்தையாகச் செயல்பட்ட அப்பல்கலைக்கழகத் துணை வேந்தர் எம். ஜகதீஷ் குமாரையும் கைது செய்து, பதவி நீக்கம் செய்யவும், இவ்வன்முறைச் சதியில் பங்கு கொண்ட – துணை நின்ற அனைவரையும் சிறையில் அடைக்கவும், ஒருங்கிணைந்த மக்கள் எழுச்சி அனைத்திந்திய அளவில் தேவை!

பா.ச.க.வினர் தமிழ்நாட்டில் அதே பாணி இந்துத்துவா கலகங்களை நடத்தாமல் தடுக்கத் தமிழ் மக்கள் கட்சி வேறுபாடு இன்றி, விழிப்பாய் இருக்க வேண்டும். பா.ச.க.வை விலக்கி வைக்க வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT