உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழகவேலைதமிழருக்கே. Show all posts
Showing posts with label தமிழகவேலைதமிழருக்கே. Show all posts

Wednesday, May 8, 2019

மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படவில்லையா? பொன். இராதாகிருட்டிணன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா? தோழர் பெ. மணியரசன் சவால்!

மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படவில்லையா? பொன். இராதாகிருட்டிணன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சவால்!
நடுவண் அரசின் இணை அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் 07.05.2019 அன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, “மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. என்றும் தமிழ்நாட்டில் சிலர் வேண்டுமென்றே வட மாநிலத்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக வருமான வரித்துறை, வங்கிகள், அஞ்சல் துறை, ரெயில்வே துறை, பிஎச்இஎல், நெய்வேலி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையம், ஆவடி, திருச்சி அரவங்காடு ஆகிய இடங்களில் உள்ள படைக்கலத் தொழிற்சாலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், வானூர்தி நிலையங்கள், துறை முகங்கள் உள்ளிட்ட 18 துறை சார்ந்த நடுவண் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்களைப் புறக்கணித்து வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு எடுத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள இவ்வேலைகளுக்காக நடத்தப்பட்ட அனைத்திந்தியத் தேர்வுகளில் இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தில்லு முல்லு செய்துள்ளார்கள். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது, வினாவும் விடையும் முன்கூட்டியே “விற்பனை செய்வது” போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்திக்காரர்கள் ஆவடி, திருச்சி படைக்கலத் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அஞ்சல் துறைப் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் தமிழ்ப்பாடத்தில், அரியானாவைச் சேர்ந்தவர்கள் மொத்த மதிப்பெண் 25க்கு 23 வாங்கிய அதிசயம் நடந்தது. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் வழக்குப் போட்டனர் உயர்நீதிமன்ற ஆணையின் பேரில் விசாரித்த சி.பி.ஐ காவல் துறையினர் மோசடியாகத் தேர்வு எழுதிய அரியானாக்காரர்களைக் கைது செய்தார்கள். அந்தத் தேர்வுமுடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

அண்மையில் தமிழ்நாட்டில் இரயில்வேத் துறையில் பழகுநர் பணிகளுக்கு நடந்த நேர்காணலிலும் அதன்பிறகு வேலைக்கு அமர்த்தப்பட்டோரிலும் 90 விழுக்காட்டிற்கு மேல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டு மாணவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டனர்.

இந்தத் 90 விழுக்காட்டு வெளிமாநிலத்தவர்களில் பத்து இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே மிகவும் அதிகம்.

எனவே தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு அலுவலகங்களில் மற்றும் நிறுவனங்களில் தமிழர்களைப் புறக்கணித்து மிகுதியாக வட இந்தியர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள் என்றும், இச்செயல் தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கை ஆகும் என்றும் நாங்கள் கூறும் குற்றச்சாட்டு வெறும் வதந்தி அல்ல; உண்மை நடப்பின் அடிப்படையில் கூறப்பட்டது.

இதுபற்றி நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணனுடன் பொது மேடையில் நேருக்கு நேர் நான் விவாதிக்கத் தயார்? பொன்னார் அவர்களே நீங்கள் தயாரா?

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

"தமிழனா…? தமிழ்நாட்டில் வேலை இல்லை! "நக்கீரன் வார ஏட்டில் ஐயா பெ. மணியரசன் அவர்களது பேட்டியுடன் செய்திக் கட்டுரை!

"தமிழனா…? தமிழ்நாட்டில் வேலை இல்லை! "நக்கீரன் வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களது பேட்டியுடன் செய்திக் கட்டுரை!
"தமிழனா…? தமிழ்நாட்டில் வேலை இல்லை!"என்ற தலைப்பில், 2019 மே 8 - 10 நாளிட்டு வெளிவந்துள்ள “நக்கீரன்” வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களது பேட்டியுடன் செய்திக்கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் முழு வடிவம் :

மத்திய அரசுத் துறைகளுக்கான தமிழக காலிப் பணியிடங்களில், தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்தப் பணியிடங்களில் வெளிமாநிலத்தவர்களே அதிகமாக பணியமர்த்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அது தொடர்பான செய்திகளும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்பின.

இந்நிலையில், திருச்சி பொன்மலையிலுள்ள ரயில்வே பணிமனையில் பழகுநர்களுக்கான காலிப்பணியிடங்களில் நிரப்பப்பட்ட 300 பணியாளர்கள் அனைவருமே வடமாநிலத்தவர்கள் என்ற செய்தி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்தப் பணி நியமனத்தைத் திரும்பப் பெற்று அதில் தமிழக இளைஞர்களை பணியமர்த்த வேண்டும். 18 பொதுத்துறைகளில் 90 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி பொன்மலை ரயில்வே வளாகத்தின் முன்பு மே 3 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டது தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தமிழ்த்தேசியப்பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களோடு பல்வேறு கட்சி இயக்கங்களைச் சேர்ந்த மெதாழிலாளர்கள். பெண்கள், குழந்தைகள் என 500 க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டனர்.

“தமிழக வேலை தமிழருக்கே” என்ற முழக்கத்துடன் அனைவரும் பொன்மலை பணிமனை வளாகத்தை நோக்கி பேரணியாக நடக்க முயன்றனர்.

அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை மறித்து நிறுத்த, அனைவரும் கொளுத்தும் வெயிலில் தரையில் படுத்துக் கொண்டனர். உடனடியாக 500 பேரையும் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்று மண்டபத்தில் அடைத்தது காவல்துறை.

திருச்சியில்தான் போராட்டம் என்றாலும், போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் பலரும் அதை சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கவனத்தை ஈர்த்தனர். 

#தமிழகவேலைதமிழருக்கே, #TamilnaduJobsForTamils ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தன.

இதை மராட்டியர்கள், “மராட்டியர்களின் வேலை மராட்டியர்களுக்கே” என தாங்களும் ட்ரெண்டாக்கி தமிழர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

திருச்சியில் நடைபெற்ற போராட்டம் இந்திய அளவில் பேசுபொருளாயிருக்கும் நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசனிடம் பேசியபோது, “தென்னக இரயில்வேயில் வேலைபழகுநர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருச்சி பொன்மலையில் 1765 பேரிடம் நேர்கானல் நடத்தியிருக்கிறார்கள். அதில் நியமிக்கப்பட்ட 325 பேரில் 300 பேர் வடமாநிலத்தவர்கள், 25 பேர் மலையாளிகள். அங்கு நிரந்தரப் பணியில் இருக்கும் 3 ஆயிரம் பேரில் 1500 பேர் வேற்று மாநிலத்தவர்கள்.

அதேபோல், தமிழ்நாட்டில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட்மாஸ்டர், போஸ்ட்மேன் என அஞ்சலகங்களில் 4452 காலிப்பணியிடங்களை நிரப்ப ஏப்ரல் 15 தான் கடைசித்தேதி வடமாநிலங்களில் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 5 தேதிதான் அறிவிப்பு வெளியாகிறது. தமிழக இளைஞர்கள் விண்ணப்பிக்கச் சென்றால் “கணினி சர்வர் வேலை செய்யவில்லை” என்கிறார்கள். இனி அத்தனை பணியிடங்களிலும் வடவர்களையே நியமிக்கப் போகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல்துறை பணிகளுக்கு தேர்வு நடந்தது. அதில் 25 மதிப்பெண்ணுக்கு தமிழ்மொழி பாடத்தில் கேள்விகள் இருந்தன. தமிழ்மொழியில் படித்த நம் இளைஞர்கள் 15, 20 மதிப்பெண் எடுக்க, ஹரியானாக்காரன் 23 மதிப்பெண் எடுத்திருந்தான். இந்தப் பிரச்சனையால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோல், அஞ்சல்துறை வேலை வாய்ப்பு விண்ணப்பத்தில் இல்லாத “அட்டஸ்ட்” காரணத்தைக் கூறி தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்களை நிராக்கரித்தார்கள்.

இத்தனை கொடுமைக்கு மத்தியில், தமிழக இளைஞர்களின் வேலைகளைப் பறிக்க ஓ.பி.எஸ். என்ற நல்ல மனிதர் 2016 இல் தனி சட்டத்திருத்தமே கொண்டுவந்தார். அதன்மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும் வேலைகளுக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ்காரனும் விண்ணப்பிக்கலாம்.

அதாவது, கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மாற்றி, “வேலைக்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றுக்கொண்டால் போதும்” என ஓ.பி.எஸ். முன்மொழிந்த இந்த சட்டத்திருத்தத்தால், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் பதவிகளுக்குக்கூட இந்திக்காரன் வரக்கூடிய வாய்ப்புள்ளது. இந்தச் சட்டத்திருத்தத்தை ரத்துசெய்யக்கோரி பலமுறை மனுக்கொடுத்தும் பயனில்லை.

மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில வேலைகளில் நூறு சதவீதமும், மத்திய அரசு வேலைகளில் 90 சதவீதமும் மண்ணின் மைந்தர்களுக்கே கிடைக்க சட்டம் இருக்கிறது. ஆனால், இங்குதான் 99 சதவீதம் வேலைகளை வடநாட்டவருக்கு தாரைவார்க்கிறோம். 

ஆப்பிரிக்காவில் கறுப்பர்களைச் செய்ததுபோல, தமிழர்களை சொந்த மண்ணிலேயே இன ஒதுக்கல் செய்கிறார்கள். இளைஞர்கள் களத்திற்கு வந்து போராடினால்தான் விடிவு பிறக்கும்” என்றார் ஆத்திரத்துடன்.

மாநிலத்தின் உரிமைகள், அந்தந்த மொழிபேசும் மக்களக்கு அவர்கள் மாநிலத்திலேயே வாழ்வாதாரம், வளர்ச்சி இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. தற்போது அந்த நோக்கம் சிதைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் – வேலைவாய்ப்பு அனைத்தும் பிற மாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் சூழல் எழுந்துள்ளது என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

தி.மு.க. உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளும் இதுகுறித்துப் பேச ஆரம்பித்திருப்பதால், மாற்றங்களை எதிர்ப்பார்க்கிறார்கள் இளைஞர்கள்”.

இவ்வாறு “நக்கீரன்” செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படிக்க : https://www.nakkheeran.in/…/tamilana-there-no-job-tamil-nadu 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, May 7, 2019

“முதலில் இந்திக்காரர்கள் வெளியேறட்டும்!” குமுதம் ரிப்போர்ட்டர் வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேட்டி!

“முதலில் இந்திக்காரர்கள் வெளியேறட்டும்!” குமுதம் ரிப்போர்ட்டர் வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேட்டி!
“முதலில் இந்திக்காரர்கள் வெளியேறட்டும்!” என 10.05.2019 நாளிட்டு வெளிவந்துள்ள “குமுதம் ரிப்போர்ட்டர்” வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவ்விதழில் வெளி வந்துள்ள பேட்டியின் முழு வடிவம் :

தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வரும் வடமாநிலத்தவர்களுக்கு எதிராக தமிழ்த்தேசிய அமைப்புகள் களம் இறங்கி உள்ளன. திருச்சி பொன்மலையில் உள்ள இரயில்வே பணிமனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசனிடம் பேசினோம்.

கேள்வி : தமிழகத்தில் இயங்கிவரும் இரயில்வே அலுவலகப் பணிகளுக்கு வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்படுவதாக சொல்லப்படுவது உண்மைதானா?

பெ.ம. : தமிழகத்தில் சாதாரணமாக நுழைந்த வடமாநிலத்தவர்கள் இன்று தமிழர்களுக்கான வேலை வாய்ப்புகளில் கைவைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதாவது இவர்கள் நேர்மையான வழியில் நுழைவதில்லை. இரயில்வே வாரியம் நடத்தும் தேர்வில் ஆளு மாறாட்டம் செய்து பணிக்குத் தேர்வாகிறார்கள். அதேநேரத்தில், அப்ரண்டீஸ்களுக்கு தேர்வு எதுவும் வைக்கப்படுவதில்லை. சான்றிதழ் சரி பார்த்தலுக்குப் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வில், வடமாநிலத்தவர்கள் எளிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அண்மையில் சென்னை, திருச்சி, கோவையில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பேர் அப்ரண்டீஸ்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிற 1725 பேரில் 1600 பேர் வடஇந்தியர்கள் தான்.

கேள்வி : இரயில்வே துறையில் மட்டும்தான் வட இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்?

பெ.ம. : சென்னையில் இயங்கி வரும் வருமானவரித் துறை அலுவலகத்தில் 100 சதவிகித வட இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதை எதிர்த்து அந்த அலுவலகத்திலேயே புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது வங்கிப் பணிகளிலும் வட மாநிலத்தவர்கள்தாக் அதிகம் தேர்வு செய்யப்படுகிறார்கள் இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

கேள்வி : மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் பங்கேற்று தகுதி அடிப்படையில் பணியிடங்களைக் கைப்பற்றுவது தவறா?

பெ.ம. : வட இந்தியர்கள் நியாயமான, நேர்மையான வழியில் நுழையாமல், குறுக்கு வழியைக் கடைப்பிடிப்பார்கள். வடமாநிலங்களில் கோச்சிங் சென்டர் என்ற பெயரில் தில்லுமுல்லு சென்டர்கள் இயங்கி வருகின்றன. அந்த சென்டர்களில் மத்திய அரசு பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் இடம்பெறும் கேள்விகளையும் விடைகளையும் முன்கூட்டியே கொடுத்து பயிற்சி வகுப்பு நடத்துகிறார்கள். இதுதவிர வட இந்தியர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்வில் ஆள் மாறாட்டத்தையும் கடைபிடிப்பார்கள்.

கேள்வி : நீங்கள் இப்படி சொல்வதற்கு ஏதுனும் ஆதாரம் இருக்கிறதா?

பெ.ம. : இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக அஞ்சல் இந்திய அளவிலான தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழை ஒரு பாடமாக்கி அதற்கு 25 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 23 மதிப்பெண்களை ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் எடுத்தார். தமிழை தாய்மொழியாகக் கொண்டவரே அதிகபட்சமாக 18 மதிப்பெண்கள் எடுக்கும் நிலையில், பிற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி 23 மதிப்பெண் எடுக்க முடியும்? இது அம்பலமாகி சம்பந்தப்பட்ட அரியானா மாநிலத்தவரை விசாரித்தால் அவருக்கு தமிழ் பேசவும் எழுதவும் தெரியவில்லை. இந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

அதே போன்று சமீபத்தில் தமிழக அஞ்சல் துறையில் காலியாக இருந்த 4,460 பணியிடங்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 15 என நிர்ணயிக்கப்பட்டியிருந்தது. ஆனால், இதே விளம்பரம் வட இந்தியாவில் மார்ச் 15 ஆம் தேதியே வெளியிடப்பட்டது. ஆன்லைனில் தமிழர்கள் விண்ணப்பித்தபோது சர்வர் வேலை செய்யவில்லை. இதுவெல்லாம் தமிழர்களுக்கு முட்டுக்கட்டை போடும் செயல்தானே!

கேள்வி : திராவிடக் கட்சிகள் இந்த பிரச்சனையாகக் கண்டுகொள்வதில்லையா?

பெ.ம. : தமிழகத்தில், மத்திய அரசுப் பணிகளில் வட இந்தியர்கள் ஆதிக்கம் வட இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவது குறித்து இப்போது ஸ்டாலின் பேசி வருகிறார். தேர்தலுக்குப் பிறகு இதே விவகாரத்தில் அவர் ஆர்வம் காட்டுவாரா என்பது சந்தேகம் தான்.

கேள்வி : வட இந்தியர்களுக்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

பெ.ம. : தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் வட இந்தியர்கள் ஆக்கிரமிப்பு சட்டரீதியாகதடை விதிக்கப்பட்டியிருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 1986 ஆம் ஆண்டு ஒரு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதன்படி மத்திய, மாநில அரசு துறைகள், தனியார் துறை என மூன்றிலும் கன்னடர்களுக்குத்தான் 90 சதவிகித வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டியிருக்கிறது. இதே போல் குசராத், மகாராசுடிரா, சத்தீசுகர், ஆகிய மாநிலஙகளிலும் சட்டம் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தான் மாநில அரசின் பணிகளிலும் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

கேள்வி : உங்கள் போராட்டத்துக்கு தமிழகத்தில் வரவேற்பு இருக்கிறதா?

பெ.ம. : வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவது குறித்து நாங்கள் சரியான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். அதனால் இளைஞர்கள் மட்டுமல்ல நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட தமிழ்த்தேசிய அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நாங்கள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். எதிர்காலத்தில் போராட்டங்கள் தீவிரம் அடையும்போது கண்டிப்பாக வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படும்.

கேள்வி : தமிழர்களிடம் சோம்பல் அதிகமாகிவிட்டதால், வேலை வாய்ப்புகளில் வட இந்தியர்கள் முந்துவதாக சொல்லப்படுவது உண்மையா?

பெ.ம. : அப்படிச் சொல்ல முடியாது நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் இலவச அரிசி உட்பட பல இலவசங்கள் வழங்கப்படுவதால் சிலர் சோம்பலாகி இருக்கலாம் அது தவறுதான் இது தொடர்பாகவும் நாங்கள் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறோம். இது வெறும் 10 சதவிகித அளவுதான் ஒட்டுமொத்த தமிழர்களும் சேர்ந்து இருக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. ஆனாலும் இதை ஒரு காரணமாக வைத்து வேலை வாய்ப்பில் வட இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தவறு.

கேள்வி : டெல்லி பல்கலைக்கழங்கத்தில் தமிழர்களால் டெல்லிவாசிகள் பாதிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறி இருக்கிறாரே?

பெ.ம. : தமிழகத்தில் உள்ள இந்திக்கரார்களை முதலில் அவர் வெளியேறச் சொல்லட்டும் அதற்குப் பிறகு தமிழர்களை கெஜ்ரிவால் வைத்துக்கொள்வதும் வெளியேற்றுவதும் அவர் விருப்பம் தமிழகத்தை விட்டு இந்திக்காரர்கள் வெளியேறினால் காலியாகும் பணியிடங்களை டெல்லியில் இருந்து அனுப்பப்படும் தமிழர்களுக்கு உடனடியாக வழங்கிவிடலாம். இதனால் கெஜ்ரிவாலின் ஆதங்கத்தைத் தீர்க்க முடியும்".

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT