Saturday, June 12, 2021
பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது! - பெ. மணியரசன் அறிக்கை!
Sunday, November 1, 2020
தமிழ்நாடு நாளில் புளியங்குடி காவல்துறையின் அடாவடிக்கு.. - தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
இன்று (01.11.2020) தமிழ்நாடு நாளில் தமிழர் தாயகம் காக்க வெளி மாநிலத்தவருக்கு எதிரான ஒத்துழையாமைப் போராட்டத்தை அறிவித்து, துண்டறிக்கைப் பரப்புரையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது.
இதை தென்காசி மாவட்டம் – கடையத்தில் நடத்துவதற்கு தனது சொந்த ஊரான புளியங்குடியிலிருந்து பேருந்தில் புறப்பட்டுச் சென்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. பாண்டியன் அவர்களை, பயங்கரவாதியை பிடிப்பது போல தென்காசி பேருந்து நிலையத்தில் சூழ்ந்து கொண்டு கடையம் பேருந்தில் ஏறவிடாமல் புளியங்குடிக்கே வலுக்கட்டாயமாக காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.
அதேநேரத்தில், தோழர் பாண்டியனின் துணைவியார் ஒரு திருமணம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்த நிலையில், பூட்டியிருந்த அவரது வீட்டில் வெளியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து, புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் தலைமையில் நான்கைந்து காவலர்கள் அத்துமீறி அவர் வீடு புகுந்து, வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒத்துழையாமைப் பரப்புரைத் துண்டறிக்கைகளை அள்ளிச் சென்றிருக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆளில்லாத வீட்டில் ஏன் நுழைகிறீர்கள் என்று கேட்டதற்கு, உங்களையும் கைது செய்து ஜீப்பில் ஏற்றுவேன் என்று ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மிரட்டியிருக்கிறார்.
வெளிப்படையாக அறிவித்துவிட்டு, அமைதியான முறையில் ஒத்துழையாமைப் பரப்புரை செய்யும் சட்டவழிப்பட்ட தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல், எந்த நீதிமன்ற ஆணையும் இல்லாமல் அத்துமீறி தோழர் க. பாண்டியன் வீடுபுகுந்த காவல்துறையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு அரசுக் காவல்துறை அப்பட்டமான சட்டமீறலில் ஈடுபட்ட ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மீதும், அவரோடு சென்ற காவலர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுத்து, மனித உரிமையையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு, ஒருபக்கம் மொழிவழி தேசிய இன மாநிலமாகத் தமிழ்நாடு உருவான நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாள் என அறிவித்துவிட்டு, மறுபுறம் தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க அரசமைப்புச்சட்டம் வழங்கியிருக்கிற கருத்துரிமைப்படி பரப்புரை செய்ய முயன்றவர்கள் மீது இவ்வாறான அடக்குமுறைகளையும், அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் ஏவிவிட்டிருப்பது தமிழ்நாடு அரசின் இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகிறது.
தமிழ்நாடு அரசு அளிக்கும் துணிச்சலில்தான் அலெக்ஸ்ராஜ் போன்ற கீழ்நிலை அதிகாரிகள் இவ்வளவு அத்துமீறி அப்பட்டமான சட்டமீறலில் ஈடுபடுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. அப்பட்டமான இச்சட்டமீறலை தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டிப்பதோடு, இதில் தொடர்புடையோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு நாளை அடக்குமுறை நாளாக்கி விட்டனர் ஆட்சியாளர்! பேரியக்கத் தோழர்கள் கைது! - பெ. மணியரசன் கண்டனம்!
இவ்வாண்டின் தமிழ்நாடு நாளை (01.11.2020) இருண்ட நாளாக மாற்றிவிட்டனர் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள். பா.ச.க., காங்கிரசு ஆளும் மாநிலங்களில் மண்ணின் மக்கள் வேலை உரிமைக்கான அரசாணைகள், சட்டங்கள் இயற்றி, தங்கள் மாநில மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கிறார்கள். அவ்வாறு சட்டமியற்றுமாறு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து துண்டறிக்கை கொடுத்தவர்களை அ.இ.அ.தி.மு.க. அரசு கைது செய்துள்ளது.
பலநாடுகள் இருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் – பிரித்தானிய வணிக வேட்டையாடிகள் வெடிமருந்து பீரங்கிகளுடன் வந்து அந்தந்த அரண்மனைகளைத் தகர்த்தும், அரசர்களைத் தூக்கில் போட்டும், சிறைப்பிடித்தும் இந்தியா என்ற ஒற்றை நிர்வாகக் கட்டமைப்புபை உருவாக்கினர்.
இந்த உண்மையை உணர்ந்து கொண்ட காங்கிரசுக் கட்சி, தனது விடுதலைப் போராட்ட காலத்தில் மொழி – இன மாநிலங்களாக இந்தியாவை பிரித்து கூட்டாட்சி நடத்தும் திட்டத்தை முன்வைத்தது. அதே போல் விடுதலைக்குபின் மொழி – இன மாநிலங்களை அமைத்தார்கள். அதற்குச் சட்டம் இயற்றினார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில், இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டுத் தமிழர்களைப் புறக்கணித்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே, 90 விழுக்காட்டிற்கு மேல் வேலையில் சேர்க்கிறார்கள். அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் வட நாட்டினரும் பிற வெளிமாநிலத்தவரும் வந்து தமிழ்நாட்டில் குவிகின்றனர். அமைப்புசாராப் பணிகளிலும் பெருமளவு வெளிமாநிலத்தவர்கள் வேலை பார்க்கிறார்கள்.
வெளியார் வெள்ளம் இதே அளவுக்குத் தமிழ்நாட்டில் அன்றாடம் புகுந்தால், பின்னர் தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக இருக்காது. இந்திக் காரர்களின் மாநிலமாகவோ – கலப்பின மண்டலமாகவோ மாறிவிடும்.
நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வெளிமாநிலத்தவர்கள் போய்த் தங்க அம்மாநிலங்களின் உள் அனுமதி (Inner Line Permit) வாங்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இவ்வாண்டு இச்சட்டத்தை மணிப்பூர் மாநிலத்திற்கும் இந்திய அரசு நீட்டித்துள்ளது. அதே சட்டம் தமிழ்நாட்டிற்கும் வேண்டும் என்கிறோம்.
மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இச்சட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த வலியுறுத்தியும், இச்சட்டங்கள் இயற்றப்படும் வரை வெளிமாநிலத்தவர்களைப் புறக்கணிக்கும் ஒத்துழையாமையைக் கடைபிடிக்குமாறும் மக்களிடம் வேண்டுகோள் வைக்கிறோம். அதன்படி, தனியார்துறையில் வெளிமாநிலத்தவரைச் சேர்க்காமல் தமிழர்களைச் சேர்க்கக் கேட்டுக் கொள்கிறோம்.
இக்கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கைகளைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் தமிழ்நாடு நாளில் (01.11.2020) தொடங்கி பத்து நாள் தொடர்ந்து மக்களிடம் கொடுத்து வேண்டுகோள் வைக்க முடிவு செய்தோம்.
இன்று (01.11.2020) வேண்டுகோள் துண்டறிக்கை கொடுத்தவர்களை தஞ்சாவூர், கும்பகோணம், செங்கிப்பட்டி, திருத்துறைப்பூண்டி, தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர், நெல்லை மாவட்டம் கடையம் ஆகிய ஊர்களில் கைது செய்து மண்டபங்களில் வைத்துள்ளார்கள்.
தென்காசி மாவட்டம் - புளியங்குடியில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. பாண்டியன் அவர்களின் இல்லத்திலிருந்த ஒத்துழையாமை இயக்கத் துண்டறிக்கைகளை காவல்துறையினர் அத்துமீறி எடுத்துச் சென்றுள்ளனர்.
சென்னை கே.கே. நகரில் எங்கள் தோழர்கள் துண்டறிக்கை கொடுத்த போது காவல் துறையினர் கூடவே சூழ்ந்து சென்று காணொலி (வீடியோ) எடுத்தார்கள். துண்டறிக்கையை வாங்கிய மக்களும் கடைக்காரர்களும் அச்சப்பட்டதால் – அத்துடன் துண்டறிகை கொடுப்பதை நிறுத்திக் கொண்டார்கள்.
திருச்சி, மதுரை, தருமபுரி, ஓசூர், சிதம்பரம், பெண்ணாடம், முருகன் குடி, கோவை போன்ற பல ஊர்களில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர்களுக்கு 31.10.2020திலிருந்து காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடியேற்றக் கூடாது என்று தடை அறிவிப்புகளை கொடுத்து நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். இன்றும் அந்நெருக்கடிகள் அங்கெல்லாம் தொடர்ந்தன.
தமிழ்நாடு அரசின் இந்தத் தடை விதிப்புகளும், கைதுகளும், நெருக்கடிகளும் தமிழர் வாழ்வுரிமையில் மண்ணை அள்ளிப் போடும் செயலாகும். மறுபக்கம் இத்தடைகளும் கைதுகளும் அரசமைப்புச் சட்டம் வழங்கும் கருத்துரிமைக்கு எதிரானவையாகும்!
தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் தமிழர் உரிமைகளுக்கு எதிரான இந்த அடக்கு முறைகளைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஒத்துழையாமைத் துண்டறிக்கைகள் வழங்கத் தடை போடக் கூடாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுத் கொள்கிறேன்.


