உடனடிச்செய்திகள்
Showing posts with label நா. வைகறை. Show all posts
Showing posts with label நா. வைகறை. Show all posts

Monday, February 12, 2018

தஞ்சை பெரிய கோவிலில் சி.சி.டி.வி. கேமரா ஊழல் அம்பலப்படுத்துகிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

தஞ்சை பெரிய கோவிலில் சி.சி.டி.வி. கேமரா ஊழல் அம்பலப்படுத்துகிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!


தஞ்சை பெரிய கோவிலில் சி.சி.டி.வி. வாங்கியதில் நடைபெற்றுள்ள ஊழலை தமிழ்த்தேசியப் பேரியக்கம் அம்பலப்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தி, 14.02.2018 நாளிட்ட “தமிழக அரசியல்” வார ஏட்டில் வெளியாகியுள்ளது.

அச்செய்தியில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை கூறியுள்ளதாவது :

“தஞ்சை பெரிய கோவில் பெருமைகளை நாம் சொல்லி யாரும் அறிய வேண்டியதில்லை. தமிழனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் அது தெரியும். உலகப் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கில் நம் மக்களும் வெளி நாட்டினரும் வந்து செல்கின்றனர். அது மட்டுமல்ல சமீப காரமாக புகழ்பெற்று வரும் பிரதோஷம், சிவன் ராத்திரி போன்ற விழாக்களு்கு ஒரே நாளில் கோவிலின் உள்ளே இலட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுகின்றனர். இந்நிலையில், இப்போது உள்ள பிரச்சினை என்னவென்றால் இங்கு பாதுகாப்பிற்காக வாங்கப்பட்ட சி.சி.டி.வி. கேமரா வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2013 – 2015 ஆம் ஆண்டுகளில் கோவில் பாதுகாப்பிற்காக இரண்டு கோடியே பத்து இலட்சத்திற்கு மைசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டு கேமரா மற்றும் மின் சாதன பொருட்களை வாங்கியுள்ளனர். அதில் பாதுகாப்பிற்கு சி.சி.டி.வி. கேமராக்கள் மொத்தம் 31 கேமராக்கள் வாங்கியிருக்கின்றனர்.

அப்போது இங்கு தொல்லியல் துறை பராமரிப்பாளராக இருந்த வாசுதேவன் என்பவருடைய மேற்பார்வையில்தான் அனைத்தும் நடந்துள்ளது. வாங்கிய அனைத்து பொட்ருகளுமே தரமானதாக இல்லாமல் இருந்துள்ளது. ஒவ்வொரு கேமராவிற்கும் தனித்தனியாக இணைப்புகள் கொடுக்காமல், மூன்று அல்லது நான்கு கேமராக்களுக்கு சேர்த்து ஒரு வை-பையோடு இணைப்பு செய்திருக்கிறார்கள். ஒரு வை-பை பழுதானால் மூன்று கேமராக்கள் இணைப்பு துண்டிக்கப்படும். அதேபோல் தான் மொத்த கேமரா இணைப்பும் எந்த பராமரிப்புமில்லாமல் மொத்தம் 31 கேமராக்களில் ஒரு கேமரா மட்டும்தான் ஒா்க் செய்கிறது. மற்ற மீது இருக்கும் 30 கேமராக்கள் பழுதாகி முடங்கிக் கிடக்கிறது. இங்கு இருக்கும் கேமராவின் அதிகபட்ச தொகை சிறிய கேமரா 1,500 பெரிய கேமரா 65,000 இருக்கும், பெரிய கேமரா கோவிலில் மொத்தம் பத்து இருக்கும். மீதி சிறிய கேமரா. அப்போது பார்த்துக் கொள்ளுங்கள், இதற்கு எவ்வளவு செலவாகி இருக்கும் எவ்வளவு ஏப்பம் விட்டு இருப்பார்கள் என்று.

ஒரு உலகப் புகழ்பெற்ற கோவிலில் இதுபோல் எந்த கேமராவும் வேலை செய்யவில்லை என்றால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் எப்படி கண்டு பிடிக்க முடியும்? ஏற்கெனவே பல கோவில்களில் ஆங்காங்கே விலை உயர்ந்த சிலைகள் பகலிலேயே காணாமல் போகிறது. இந்த 30 கேமராக்களும் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக வேலை செய்யவில்லையாம். இதில் என்ன நடந்தது, மொத்தம் எவ்வளவு செலவானது, யார் எவ்வளவு மோசடி செய்தனர், எவ்வளவு நாளாக கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் கண்டுபிடிக்க வேண்டும். இப்பிரச்சினையை சாதாரணமாக நினைக்காமல் முதல்வர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை வேண்டும்”.

இவ்வாறு தோழர் நா. வைகறை தனது பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு, உடனடியாக சி.சி.டி.வி. கேமரா ஊழல் குறித்து முறையாக விசாரித்து, தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Thursday, January 4, 2018

பட்டுக்கோட்டையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சேதப்படுத்திய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும்! அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்! தோழர் நா. வைகறை கோரிக்கை!

பட்டுக்கோட்டையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சேதப்படுத்திய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும்! அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை கோரிக்கை!
 பட்டுக்கோட்டை அருகில் ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்கள் வசித்து வரும் வீதியில், 60 வீடுகள் உள்ளன. கடந்த 2017 திசம்பர் 31 இரவு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், பகுதி இளைஞர்கள் ஒலிபெருக்கி வைத்து கொண்டாடியுள்ளனர்.



தெற்கு குடிகாடு பகுதியிலிருந்து சற்றொப்ப மூன்று கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள வடக்கு ஆம்பலாப்பட்டு பகுதியில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் சிலர், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு இரு சக்கர ஊர்திகளில் வந்துள்ளனர். அங்கு கட்டப்பட்டிருந்த பலூன்களை உடைத்துவிட்டு, சாதிப் பெயரை சொல்லி “உங்களுக்கு ஏண்டா புத்தாண்டு?” என்று, அங்கிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். கைகலப்பும் ஏற்பட்டது.
உடனே, அங்கிருந்து சென்ற வடக்கு ஆம்பலாப்பட்டு இளைஞர்கள் சிறிது நேரத்தில் ஊர்திகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கையில் இரும்புக் குழாய், உருட்டுக் கட்டைகள் எடுத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருவுக்கு வந்துள்ளனர். அவர்கள் தெரு விளக்கின் சுவிட்ச் பலகையை அடித்து நொறுக்கியதால், தெருவிலே இருட்டாகிவிட்டது. தெருவின், இரண்டு புறமும் உள்ள சற்றொப்ப 30 வீடுகளில் கண்ணாடி சன்னல்களை, ஒடுகளை, தொலைக்காட்சிப் பெட்டிகளை, நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர ஊர்திகள் முதலியவற்றை வெறி கொண்டு தாக்கியுள்ளனர்.


உயிருக்கு பயந்து கையில் குழந்தைகளுடன் இருட்டில் பெண்கள் ஓடி, பின்பக்கம் தோப்பில் ஒளிந்துள்ளனர். பூட்டிய வீடுகளின் முன்பு நின்று கொண்டு வந்தவர்கள் கூறிய ஆபாச வார்த்தைகள், கொலை வெறித் தாக்குதல்கள் – ஒடுக்கப்பட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
 புத்தாண்டு நாளுக்காக கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி, நாற்காலிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். சற்றொப்ப 15 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியுள்ளன.

 தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தோழர் மா. இராமதாசு ஆகிய நாங்கள் குழுவாகச் சென்று, இன்று (04.01.2017) காலை, ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளில் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட்டோம். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.

பாதிக்கப்பட்ட மக்களிடையே, குறிப்பாக பெண்களிடத்தில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் முதன்மையான பணி!


எனவே, வீடுகளைத் தாக்கிய அனைவர் மீதும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவர்களைக் கைது செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக, அரசு சார்பில் துயர் துடைப்பு நிதி வழங்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் மீது எந்தவித பொய் வழக்கும் போடக்கூடாது. அனைத்து சாதி மக்களையும் இணக்கப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
இன்னணம்,
நா. வைகறை
தஞ்சை மாவட்டச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT