உடனடிச்செய்திகள்

Thursday, October 31, 2019

தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை!



தமிழர்களின் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்துள்ள
மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை
முற்றுகையிடப்பட்ட வழக்கிலிருந்து
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் விடுதலை!

தமிழ்நாட்டின் தொழில், வணிகம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வெளிமாநிலத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதை எதிர்த்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழர்களின் பாரம்பரிய நகைத் தொழிலை ஆக்கிரமித்துள்ள மலையாள ஆலுக்காஸ் நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கடந்த 09.03.2011 அன்று தஞ்சையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி) நடத்தியது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அப்போதைய தஞ்சை மாவட்டச் செயலாளரும், தற்போதைய தலைமைச் செயற்குழு உறுப்பினருமான தோழர் பழ. இராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற அப்போராட்டத்தில், பெண்களும் ஆண்களுமான நூற்றுக்கணக்கானோர் எழுச்சியுடன் பங்கேற்றனர்.
திடீரென நடத்தாமல், ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டு - பரப்புரை நடத்தி, திட்டமிட்ட முறையில் நடைபெற்ற இப்போராட்டத்தின் போது, தஞ்சை ஆலுக்காஸ் நகை மாளிகைக்கு குறிப்பிடத்தக்க எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றாலும், போராட்டத் தோழர்கள் 120 பேர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 147, 143, 188 மற்றும் தனியார் சொத்து அழிப்பு மற்றும் சேதப் பிரிவு - 3(1) ஆகிய பிரிவுகளின்கீழ் பிணையில் வர முடியாதபடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, 120 தோழர்களும் திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் பிணையில் வெளி வந்தனர்.
தஞ்சை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், பேரியக்கப் பொறுப்பாளர்கள் பழ. இராசேந்திரன், இராசு. முனியாண்டி, இலெ. இராமசாமி, செந்திறல், தெ. காசிநாதன், ஆ. அண்ணாதுரை உள்ளிட்டோர் போராட்டக் குழுவினர் சார்பில் வழக்கை எதிர்கொண்டு, நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றனர். பேரியக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான தோழர் இரெ. சிவராசு வழக்கைத் திறம்பட நடத்தி வாதாடினார்.
இந்நிலையில், இவ்வழக்கில் இன்று (31.10.2019) பிற்பகலில் தீர்ப்பளித்த நீதிபதி கருணாநிதி வழக்கின் குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்படாததால் வழக்கிலிருந்து அனைவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
விடுதலையான தோழர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் கைப்பேசி வழியே வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.
தமிழின உரிமைக்காக சிறை சென்றதோடு - வழக்கை எதிர்கொண்டு விடுதலையான தோழர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, October 29, 2019

யோகா கல்வி என்ற பெயரால் பள்ளிகளை ஆரியமயமாக்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! கி. வெங்கட்ராமன் அறிக்கை!


யோகா கல்வி என்ற பெயரால்
பள்ளிகளை ஆரியமயமாக்குவதை
தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

கல்வியாளர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பா.ச.க. அரசின் “தேசியக் கல்விக் கொள்கை”யின் பரிந்துரை களை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முந்திக் கொண்டு ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது.

ஐந்தாம் வகுப்பு - எட்டாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, மாணவர்கள் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளை மூடுவது, ஒரு மேனிலைப் பள்ளிக்கு அருகில் சில கிலோ மீட்டர்கள் தொலைவு வரையிலுள்ள தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளிகளை இணைப்பது என அடுத்தடுத்து கல்வி உரிமையின் மீதான தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

தமிழ்வழிக் கல்வி புறக்கணிப்பு, எளிய மக்களின் கல்வி உரிமை பறிப்பு, தேர்வு முறையை தண்டனை முறையாக இறுக்குவது என பிற்போக்கு திசையில் இந்திய அரசின் ஆணையை கூச்சமின்றி செயல்படுத்துகிறது.

இந்த வரிசையில், “யோகா மற்றும் ஒழுக்கக் கல்வி” என்ற பெயரால் ஆரியத்துவ ஆதிக்கத்திற்கு கதவு திறந்து விட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த 25.10.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மும்பையில் செயல்பட்டு வரும் “கைவல்ய தம்மா யோகா ஆய்வு நிலையம்” என்ற நிறுவனத்தோடு “புரிந்துணர்வு” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.

இந்த “கைவல்ய தம்மா யோகா நிலையம்” மும்பை அருகிலுள்ள லோனாவாலா குன்றில், தலைமையிடம் அமைத்து செயல்பட்டு வருகிறது. சுவாமி குவலயா நந்தா என்பவர் 1924இல் நிறுவி விரிவாக்கிய இந்த யோகா நிறுவனம், இப்போது ஓ.பி. திவாரி என்பவர் தலைமையில் நடந்து வருகிறது.

யோகம், மூச்சுப் பயிற்சி ஆகியவை மனித உடல் நலத்திற்கு எவ்வாறு துணை புரிகின்றன என்பதை ஆய்வுக் கூட ஆராய்ச்சியின் வழியாக மெய்ப்பித்து இந்த யோகக் கலையை இந்நிறுவனம் கற்பித்து வந்தாலும், இது வெறும் உடல் பயிற்சியாக நடப்பதில்லை. இப்பயிற்சிகள் அனைத்தையும் வேதங்கள், உபநிசத்துகள், சங்கரரின் மாயாவாதம் ஆகியவற்றோடு இணைத்தே வழங்கு கிறார்கள். அதையே ஒழுக்கக் கல்வி என்பதாக, செங்கோட்டையனும் மெச்சிக் கொள்கிறார்.

தமிழிசைப் பண்கள் “இராகங்கள்” எனப் பெயர் மாற்றப்பட்டு, கர்நாடக சங்கீதம் என ஆரியமயமானதைப் போல், நுணுக்கமும் விரிவும் உயர்வும் உள்ள சிற்பக் கலையின் செயல்பாடு தமிழர்களின் தனித்தன்மை யானதாக எங்கும் பரவி இருந்தாலும், “சிற்ப சாத்திரம்” என்பது வடமொழியில் இருப்பதைப் போல, தமிழர் களின் சதிராட்டம் “பரத நாட்டியம்” என்ற பெயரால் ஆரியமயமானதைப் போல - பண்டைத் தமிழர்களின் ஓகம்தான் ஆரியத்தால் களவாடப்பட்டு “யோகம்” என்ற பெயரால் மீண்டும் வருகிறது. என்பதை அறிஞர்கள் பலரும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

அகத்தியர், திருமூலர், போகர், புலிப்பாணி, ஔவையார் என்று அடுத்தடுத்த சான்றோர்களால் தமிழ் மண்ணில் வளர்த்தெடுக்கப்பட்ட ஓகக்கலையும், அதனூடான மூச்சுப் பயிற்சி, தியானம் உள்ளிட்ட உடலுக்கும் உள்ளத்திற்குமான பயிற்சிகள் அறிவியல் வழிப்பட்டவை.

“அண்டமே பிண்டம்” என்ற திருமூலரின் திருமந்திரம் கூறும் அறிவியல், நவீன அறிவியலாளர்களாலும் வியந்து பார்க்கக்கூடிய ஒன்றாகும். தமிழர்களின் ஐம்பூதக் கோட்பாடு, இயற்கையின் இயக்கத்திலும் உடலின் இயக்கத்திலும் கிட்டத்தட்ட ஒரே தன்மையில் செயல் படுவதை வேறு எந்த அறிவியலும் சொன்னதில்லை!

சூழலியல் சிக்கல்களும், அது சார்ந்த நோய்களும், பெருகி வரும் இக்காலத்தில் தமிழர்களின் பண்டை அறிவியல் உலக அறிஞர்களின் மீள் பார்வைக்கு சென்று கொண்டிருக்கிறது.

ஔவையாரின் “விநாயகர் அகவல்” குண்டலினி ஓகம் என்ற ஓகக்கலைக்கு விளக்க நூலாகவே கொள்ளப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார், ஓகம், மூச்சுப் பயிற்சி, உணவுப்பழக்கம் உள்ளிட்ட பல அறிவியல் நடவடிக்கைகளை பரந்துபட்ட மக்களிடம் பரப்பியிருக்கிறார்.

தமிழர்களின் மரபான ஓகக்கலை இயற்கையோடு இயைந்து வாழ்கிற மக்கள் அறிவியலையும், உயிர்மநேயம் என்ற அறவொழுக்கத்தையும் ஒன்றிணைத்துக் கூறுகிறது.

மனித சமத்துவத்தோடும் உயிர்ம நேயத்தோடும், அதற்கு அடிப்படையான தமிழ் மொழியோடும் அது வளர்த்த தமிழ் மரபோடும் வளர்ந்திருக்கிற தமிழர் ஓகக் கலையைத்தான் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் கற்பிக்க வேண்டும். இப்போது, “கைவல்ய தம்மா யோகா” நிறுவனத்தோடு தமிழ்நாடு அரசு செய்திருக்கிற ஒப்பந்தம், பள்ளிச் சிறார்களை ஆரியமயமாக்குவதற்கும், அரசு செலவில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக் களங்களை உருவாக்கு வதற்கு மட்டுமே பயன்படும்.

ஏற்கெனவே, பெரியவர்களாலும் அரசியல் கட்சி களாலும் சாதி முகாம்களாக பிரிந்து வரும் பள்ளி மாணவர்களை சமத்துவ நோக்கில் திருப்புவதற்கு மாறாக, யோகா - ஒழுக்கக் கல்வி என்ற பெயரால் இப்போது கொண்டு வரும் ஆரியக்கல்வி நிரந்தரமாக சாதி முகாம்களாக பிரித்துவிடும். தமிழ் மரபு அறுந்த ஆரிய அடிமைகளாக நிலைப்படுத்தும்.

எனவே, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை “கைவல்ய தம்மா யோகா ஆய்வு” நிலையத்தோடு செய்து கொண்டிருக்கிற ஒப்பந்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் யோகா - மூச்சப்பயிற்சி மற்றும் ஒழுக்கக் கல்விக்கு தமிழ் மரபு வல்லுநர்களையும், சான்றோர்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, October 25, 2019

காசுமீர் மனித உரிமைப் போராளி பேராசிரியர் கிலானிக்கு வீரவணக்கம்! கி. வெங்கட்ராமன் இறங்கல் அறிக்கை!


காசுமீர் மனித உரிமைப் போராளி

பேராசிரியர் கிலானிக்கு வீரவணக்கம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


சில வாரங்களுக்கு முன்பு, தில்லி மாநகர வீதிகளில் காசுமீரி தேசிய இன உரிமை முழக்கமெழுப்பி என்னோடு கைகோத்து நடந்த பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி அவர்கள், நேற்று (24.10.2019) இரவு மாரடைப்பால் திடீரென்று காலமானார் என்ற பேரிடியான செய்தி வந்து அதிர்ச்சியூட்டியது.

தில்லி பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்றில், அரபி மொழி பேராசிரியராக பணியாற்றி வந்த எஸ்.ஏ.ஆர். கிலானி அநீதியான முறையில் 2006 - நாடாளமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டார். ஒவ்வொரு நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறி தத்தளித்த அவரது குடும்பம், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் அவர் விடுதலை ஆனவுடன்தான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.

ஐயத்திற்கு இடமின்றி அவர் மீதான குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், சட்ட நெறிக்கு மாறாக கிலானியின் மீது “சந்தேகத்தின் நிழல் படர்ந்தே இருக்கிறது” என்று கருத்துரை கூறியதால், அவர் மீண்டும் பணி வாய்ப்புப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

காசுமீரி மனித உரிமைக்காக மட்டுமின்றி, இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு தேசிய இன மக்கள், தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினர் ஆகியோரின் மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து இயங்கியவர் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி.

அவரது திடீர் மறைவு, காசுமீரி மக்களுக்கு மட்டுமின்றி மனித உரிமை விழையும் அனைவருக்கும் பேரிழப்பாகும்!

மனித உரிமைப் போராளி பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, October 22, 2019

“வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!” சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு மனிதச் சுவர் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு!


“வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!” சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு மனிதச் சுவர் போராட்டம்! 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சை பேரியக்க அலுவலகத்தில் நேற்று (21.10.2019), பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் க. அருணபாரதி, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, க. முருகன், இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி, தை. செயபால், மு. தமிழ்மணி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1 :

“வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!” சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு மனிதச் சுவர் போராட்டம்!

தமிழ்நாட்டிலேயே தமிழர்களின் வேலை வாய்ப்பு, தொழில், வணிகம், கல்வி ஆகிய வாழ்வுரிமைகள் கிடைக்காமல் செய்து வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளி மாநிலத்தவரும் பறித்துக் கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கானோர் வெளி மாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள்.

இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல்., நெய்வேலி, படைக்கலத் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள், வருமான வரி, ஜி.எஸ்.டி. வரி, கணக்காயர் அலுவலகம், அஞ்சலகம், வங்கிகள் போன்ற பல்வேறு அலுவலகங்கள், ஓ.என்.ஜி.சி. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் போன்றவற்றில் 100க்கு 90 விழுக்காடும், சிலவற்றில் 100 விழுக்காடும் வட இந்தியர்களையும், வெளி மாநிலத்தவர்களையுமே இந்திய அரசு வேலையில் சேர்க்கிறது.

இவ்வேலைகளுக்கான தேர்வுகள் தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையில் திட்டமிட்டு நயவஞ்சகமாகவும், ஊழல் நிறைந்ததாகவும் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் எல்லா துறைக்கும் தேவையான கல்வி கற்று வேலை இல்லாமல் பதிவு செய்திருப்போர் 90 இலட்சம் பேர் என்று அரசுப் பதிவுகள் கூறுகின்றன. வெளியார் குவிகின்ற இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் வேலையற்ற அகதிகளாக - அயலாரை அண்டிப் பிழைக்கும் அடிமைகளாக மாறக்கூடிய ஆபத்து ஏற்படும்.

மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை கர்நாடகம், மகாராட்டிரம், குசராத், ஆந்திரம், தெலுங்கானா போன்ற பல மாநிலங்கள் செயல்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இதேபோன்று சட்டத்தை இயற்றுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், தமிழ்நாடு அரசு அனைத்து இந்தியாவில் இருந்தும் வந்து தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத் தேர்வை எழுதுமாறு தொடர்ந்து அழைத்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள நடுவண் அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டுமென்ற பேரியக்கத்தின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. தனியார் துறையிலும் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை உறுதி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.

இந்நிலையில், மண்ணின் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், வெள்ளம் போல் வந்து குவியும் வெளி மாநிலத்தவரைத் தடுக்கவும் – “வெளி மாநிலத்தவர்களே திரும்பிப் போங்கள்” என்று வேண்டுகோள் முழங்கி – சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையத்தில் வரும் 20.12.2019 அன்று காலை 10 மணிக்கு – மனிதச் சுவர் அமைத்து அறப்போராட்டம் நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு ஒருமனதாக முடிவு செய்கிறது.

தமிழ் மக்கள் அனைவரும் தமிழர் வாழ்வுரிமைக் காக்கும் இந்த அறப்போராட்டத்தில் அணிதிரளுமாறு அன்புடன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அழைக்கிறது!

தீர்மானம் – 2

தமிழர் வரலாற்றை சிதைக்கும் தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியரசனைப் பதவி நீக்கம் செய்க!

தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசன் கீழடி தமிழர் நாகரிகத்தை “பாரத நாகரிகம்” என்று கூறி, தமிழர் வரலாற்றைத் திரிக்கும் கருத்துகளை அண்மையில் கூறினார். இது தமிழர் வரலாற்றை மறைக்கும் செயலாகும்!

ஏற்கெனவே மதுரையில் தமிழன்னை சிலை எழுப்புவதற்கான பன்னாட்டு ஏல அறிக்கை வெளியிட்டதில், சங்ககாலத் தமிழ்ப் பண்பாடு என்பது வேதகால பிராமணப் பண்பாடு கலந்தது என்றும், அதையும் பிரதிபலிக்கும் வகையில் தமிழன்னை சிலை அமைய வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.

தமிழன்னை பெயரில் சமற்கிருத மாதா சிலை எழுப்பும் திட்டத்தை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மதுரையில் நடத்திய கண்டனப் போராட்டத்தின் விளைவாக தமிழன்னை சிலையில் நடைபெறவிருந்த திரிபு வேலையை தடுத்து நிறுத்தினோம்.

நடப்பாண்டு பன்னிரெண்டாம் வகுப்பின் புதிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தில், தமிழ் மொழி கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும், சமற்கிருதம் கி.மு. 20ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் தவறாக எழுதிய கட்டுரை இடம் பெற்றிருந்தது. இக்கட்டுரையிலும் சங்ககாலத் தமிழர் பண்பாடு என்பது, வேதகால பிராமணப் பண்பாடும், இந்துப் பண்பாடும் கலந்திருந்தது என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கட்டுரையாசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டுக்கு 2015ஆம் ஆண்டு, பா.ச.க. அரசு “பத்மசிறீ” விருது கொடுத்து சிறப்பித்தது. இதுவரை இல்லாத வரையில் தமிழர்களின் சங்ககாலப் பண்பாட்டை வேத பிராமணப் பண்பாட்டுடன் இணைந்தது என்ற கூற்றை திரும்பத் திரும்ப சொல்வது அண்மையில்தான் அதிகரித்துள்ளது.

கீழடி நாகரிகத்தை பாரத நாகரிகம் என்பதும், திராவிட நாகரிகம் என்பதும் தமிழர் வரலாற்றையும் தனித்தன்மையுள்ள பெருமிதங்களையும் மறைத்து ஆரியத்துவப் பண்பாட்டிற்கு கீழ்ப்பட்டதாக மாற்றும் கொடுஞ்செயலாகும்!

தமிழ்த்துறைக்கென்று உள்ள அமைச்சர் பாண்டியராசன் கீழடி நாகரிகத்தை பாரத நாகரிகம் என்று குறிப்பிட்டது வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழை மறைக்க – தமிழர் நாகரிகத்தை மறைக்கக் கூறிய கருத்தாகும்! எனவே, தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசனை அப்பதவியிலிருந்து நீக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 3

ஏழு தமிழர் விடுதலை தீர்மானத்தை தமிழ்நாடு அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்!

இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018 செப்டம்பர் 9ஆம் நாள் – பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட்பயஸ், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன், செயக்குமார் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் அறிக்கையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஓராண்டு கடந்தும் அவ்வறிக்கையை ஏற்று கையொப்பமிடாமல் வேண்டுமென்றே கிடப்பில் போட்டுள்ளார்.

அண்மையில் “இந்து” ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியில், மேற்படி அறிக்கையை ஆளுநர் ஏற்கவில்லை என்றும், கையொப்பமிட முடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஆளுநர் கூறிவிட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1)–இன்படி தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பொருளில், மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை அப்படியே ஏற்று செயல்படுவது ஆளுநரின் சட்டப்படியான கடமையாகும். இதுகுறித்து, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக வந்துள்ளன. 1999இல் நளினியின் சாவுத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்து அப்போதுள்ள தி.மு.க. அமைச்சரவை அளித்த பரிந்துரையை ஏற்க மறுத்தார் அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி.

அதுமட்டுமின்றி, இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் ஆளுநர் மாநில அரசின் பரிந்துரையை மறுப்பதற்கோ அல்லது தானே சொந்தமாக குற்றஞ்சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டுமென்று ஆணையிடுவதற்கோ ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தீர்ப்பளித்தார்கள். அதன்பின்னர், மாநில அரசின் பரிந்துரைப்படி நளினியின் சாவுத் தண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இராசீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்வது பற்றி நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட ஆயம் விசாரித்து, கடந்த 2018 ஆகத்தில் அளித்த தீர்ப்பிலும் ஏழு தமிழர்களை விடுதலை செய்கின்ற அதிகாரம் 161-இன் கீழ் தங்கு தடையின்றி மாநில அரசுக்கு இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்ட விரோதமாகச் செயல்படுகிறார். அவர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மோடி அரசு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக – இனப்பாகுபாடு காட்டி ஏழு தமிழர்களுக்கு நீதி வழங்க மறுத்து வருவதால், அதே நிலைபாட்டை எடுத்துள்ள பன்வாரிலால் புரோகித்தை ஆதரிக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஆளுநர் பதில் அளிக்கவில்லை என்று கூறி ஒதுங்கிக் கொள்வது தனது சட்டக்கடமையை நிறைவேற்ற மறுக்கும் செயல் மட்டுமல்ல, ஆளுநரின் சட்ட விரோதச் செயலுக்குத் துணை போகும் செயலும் ஆகும்.

மாநில அரசு அனுப்பும் பரிந்துரை / அறிக்கை ஆகியவற்றிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது அல்லது மறுப்பது என்பதை வெளிப்படுத்த சட்டத்தில் காலவரம்பு கோரப்படவில்லை. எனவே, அவர் இறுதிவரை ஒரு அறிக்கையை அல்லது பரிந்துரையை கிடப்பில் போட்டு சாகடித்து விடலாம் என்று புரிந்து கொள்வதோ வாதம் செய்வதோ மிகமிகத் தவறானது. ஆளுநரின் விருப்பத் தேர்வு என்பது சட்டத்திற்கு உட்பட்டுத்தான் அமைய வேண்டும். தமது சொந்த விருப்பு வெறுப்புக்கேற்ப பாகுபாடு காட்டி முடிவெடுக்க ஆளுநருக்கு சட்ட அனுமதி இல்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் பலவற்றில் ஆளுநரின் விருப்பத் தேர்வுக்குள்ள வரம்புகள் கூறப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாடு அரசு ஓராண்டுக்கு மேல் அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்க வேண்டும். அத்துடன், மறுபடியும் ஏழு தமிழர் விடுதலையை அமைச்சரவையின் தீர்மானமாக்கி ஆளுநரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். அதற்கும் ஆளுநர் செயல்பட மறுத்தால், அவர் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 4

தமிழ்நாடு அமைந்த நவம்பர் – 1 விழாவை அனைத்து மாவட்டங்களிலும் அரசு கொண்டாட வேண்டும்!

கடந்த 1956 நவம்பர் 1 அன்று, தமிழர்களின் தாயகமாக “தமிழ்நாடு” மாநிலம் அமைக்கப்பட்டது. அப்போது, அண்டை மாநிலங்களிடம் ஏராளமான தமிழ்நாட்டின் பகுதிகளை இழந்துள்ளோம். அத்துயரம் ஒருபக்கம் இருந்தாலும், தமிழர்களுக்கான மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்டதை வரவேற்கிறோம். அதற்கான “தமிழ்நாடு நாள்” விழாவை தமிழ்நாடு அரசு நடத்தும் என அண்மையில் அறிவித்துள்ளது.

அவ்விழாவை தமிழ் அறிஞர்களின் உரைகள், கவிதைகள், பல்வேறு கலைஞர்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பாக எல்லா மாவட்டத்திலும் தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும். அவ்விழாக்களில் தமிழ்நாடு எல்லைகளை மீட்கப் போராடிய பெருமக்களையும், அவர்தம் குடும்பத்தினரையும் அழைத்து, அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும். அவர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தித் தர வேண்டும் என்றும், எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, October 19, 2019

இந்தியதேச வரலாறு இல்லை! இந்திய தேசங்களின் வரலாறே இருக்கிறது! பெ. மணியரசன் கண்டனம்!


இந்தியதேச வரலாறு இல்லை!
இந்திய தேசங்களின் வரலாறே இருக்கிறது!

அரசமைப்புக்கு எதிரான அமித்சாவின்
‘புதிய வரலாறு’ பேச்சுக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கண்டனம்!

வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் 17.10.2019 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா, “இந்திய வரலாற்றை ஆங்கிலேயர்கள் பார்வையில் எழுதியிருக்கிறார்கள். அதை இந்தியப் பார்வையில் திருத்தி எழுத வேண்டும்” என்றும், “அவ்வாறு நாம் திருத்தி எழுதுவதற்கு யாரும் தடை போட முடியாது” என்றும் பேசியுள்ளார்.

எத்தனையோ சட்டங்களை நீக்கியும் மாற்றியும் எதேச்சதிகாரம் செய்து கொண்டிருக்கும் பா.ச.க. ஆட்சியாளர்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்தையே முழுமையாக மாற்றி எழுதத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக இந்திய வரலாற்றை திருத்தி எழுத முன்மொழிந்துள்ளார் அமித்சா.
திருத்தி எழுதப்படும் இந்திய வரலாற்றின் “ஞானகுரு”வாக விநாயக தாமோதர சாவர்க்கரை அடையாளம் காட்டியுள்ளார் அமித்சா. சாவர்க்கர்தான் 1923இல் முதன் முதலாக “இந்துத்துவா” என்ற சொல்லைக் கட்டமைத்து, இன்றைய ஆரிய பிராமணிய வகுப்புவாத அரசியலுக்கு வழிகாட்டியவர்.

மேலும் அமித்சா, இந்திய வரலாற்றில் வாழ்ந்த சிறப்புமிக்க மன்னர்களின் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது சாணக்கியரை வழிகாட்டி ஆசானாகக் கொண்டு அமைக்கப்பட்ட மௌரியப் பேரரசு, புரோகிதர்களின் பொற்காலமாக விளங்கிய குப்தர்கள் ஆட்சி, தமிழ்நாட்டின் மீது படையெடுத்துப் பிடித்து ஆட்சி செய்த தெலுங்கு கன்னட விஜயநகரத் தளபதிகளின் ஆட்சி, பிராமண குருவின் உபதேசப்படி செயல்பட்ட மராட்டிய சிவாஜி ஆட்சி ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் தமிழர்களின் சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சி பற்றி குறிப்பிடவில்லை. ஏன்? இமயத்தில் கொடியேற்றி வாழ்ந்தவர்கள் என்பதற்காக அவர்களை சேர்க்கவில்லையா? ஆரியத்துவாவின் அடிமைகளாக இல்லாமல் தமிழர்களின் அறிவு, வீரம், அறம் ஆகியவற்றோடு ஆட்சி செய்தார்கள் என்பதற்காக சேர்த்துக் கொள்ளவில்லையா?

கடந்த 2014இல் தமிழ்ப் பேரரசன் இராசேந்திரசோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவை மோடி அரசு கொண்டாடி உலகத்திலேயே மிகப்பெரிய கடற்படையை வைத்திருந்தவன் இராசேந்திர சோழன் என்று பாராட்டியது. அதெல்லாம் அவ்வப்போது அவர்களின் திட்டத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் தற்காலிகச் சொற்களா?

இந்தியா முழுவதையும் ஒரே தேசம் – ஒரே மதம் – ஒரே பண்பாடு - ஆனால் இரண்டு மொழி (இந்தி – சமற்கிருதம்) என்று மாற்றியமைத்திட செயல்படும் ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. பரிவாரங்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தனித்தாயக ஆட்சியையும், வளர்ச்சி பெற்ற பல தாய்மொழிகளையும், பண்பாடுகளையும் இனங்களுக்கிடையே இருக்க வேண்டிய சமத்துவத்தையும் கொண்டுள்ள பல்வேறு தேசிய இனங்களைத் தகர்த்துத் தரைமட்டமாக்கி - ஒற்றை ஆரிய தேசத்தை உருவாக்க எல்லா முனையிலும் செயல்படுகின்றன.

இந்த வெறிச்செயலில் பல்வேறு தேசிய இனங்களின் எஞ்சியிருக்கும் உயிரையும் பறிக்கும் வேலைதான் சாவர்க்கர் காட்டிய வழியின்படி ஒற்றை முகம் கொண்ட இந்திய வரலாற்றை வடிவமைக்கும் திட்டம்.

ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க.வின் இந்த “புதிய வரலாறு” எழுதும் திட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால், கண்டனம் செய்தால் மட்டும் போதாது! சமூக அறிவியல்படியான இந்தியாவின் உண்மை வரலாற்றை ஒவ்வொரு தேசிய இனத்தவரும் வெளிப்படையாகப் பேச வேண்டும். இந்தியா என்ற சொல்லும், நிர்வாகக் கட்டமைப்பும் பிரித்தானிய பீரங்கிகளால் உருவாக்கப்பட்டவை. இன்றைய வடிவில் இந்தியா என்ற பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாடு இருந்ததே இல்லை! இந்தியத்தேச வரலாறு என்று எதுவுமில்லை. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தேசங்களின் வரலாறுதான் இருக்கிறது என்பதை ஓங்கிச் சொல்வதுடன், அந்தந்த தேசிய இனமும் தனது சரியான புதிய இன வரலாற்றை எழுத வேண்டும்!

இந்தியாவின் பன்மையைக் குறிக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை “அரசுகளின் ஒன்றியம்” எனக் குறிப்பிடுகிறது; இந்தியாவை தேசம் (Nation) என்று கூறவில்லை. அரசமைப்புச் சட்டத்தையே முற்றிலும் கவிழ்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள பா.ச.க ஆட்சியாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைளைத் தடுக்க - இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களும், சனநாயக ஆற்றல்களும் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, October 18, 2019

ஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


ஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

இராசீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளிகளாக 28 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்க மறுப்பதாக செய்திகள் வருகின்றன.

எழுத்து வடிவில் இல்லையென்றாலும், வாய் மொழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் புரோகித் தன்னுடைய இந்த முடிவைத் தெரிவித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆளுநர் புரோகித்தின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டக்கவிழ்ப்பு மட்டுமின்றி ஆரியத்துவ இந்தியாவில் தமிழர்களுக்கு சட்டத்தின் ஆட்சி மறுக்கப்படுகிறது என்பதையே காட்டுகிறது.

உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் கடந்த 2015 திசம்பர் 2 அன்று, அளித்த தீர்ப்பில் தமிழ்நாடு அரசு தண்டனைக் குறைப்பு குறித்து முடிவு செய்வதற்கும், அதனை ஆளுநர் வழியாக செயல்படுத்துவதற்கும் எந்த சட்டத்தடையும் இல்லை என அறிவித்தது. அதனடிப் படையிலேயே, தமிழ்நாடு அமைச்சரவை ஏழு தமிழருக்கும் தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் முடிவு செய்தது.

அரசமைப்பு சட்ட உறுப்பு 161-இன் கீழ் கூறப்படும் தண்டனைக் குறைப்பு அதிகாரம், ஆளுநரின் விருப்பார்ந்த அதிகாரம் அல்ல - மாநில அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம், அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டவர் ஆளுநர்.

அரசமைப்பு உறுப்பு 163 (1) – ஆளுநருக்கு துணை செய்யவும், ஆலோசனை வழங்கவும் மாநிலத்தில் ஒரு அமைச்சரவை இருக்கும் என்று கூறுகிறது. இதன் பொருள் என்ன என்பது குறித்து சிக்கல்கள் எழுந்தபோது, ஆளுநரின் அதிகார வரம்பு குறித்து உச்ச நீதிமன்றம் பலமுறை தெளிவுபடக் கூறியிருக்கிறது.

குறிப்பாக, ஷாம்சர் சிங் – எதிர் - பஞ்சாப் மாநில அரசு (Shamsher Singh vs State Of Punjab) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.என்.ரே தலைமையில் அமைந்த ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம், பல கோணங்களில் ஆய்வு செய்து தெளிவுபடக் கூறியிருக்கிறது (1974 AIR 2192).

அரசமைப்புச் சட்டம் சார்ந்த விவாதங்களில் மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டப்படும் இத்தீர்ப்பு, “இந்திய அரசமைப்புச் சட்டமானது மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை யும், இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநரும் இணை அதிகார மையங்களாக செயல்பட அனுமதிக்கவில்லை. பிரித்தானிய அரசமைப்பில் மகாராணிக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ தகுநிலைதான் ஒன்றிய அரசைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவருக்கும், மாநில அரசாங்கத்தைப் பொறுத்த அளவில் ஆளுநருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. மாநில அரசாங்கம் என்பது சாரத்தில் மாநில அமைச்சரவையைத்தான் குறிக்கும். ஆளுநர் என்பவர் அமைச்சரவை யின் சுருக்கெழுத்து வடிவம். மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். குறிப்பாக, நிர்வாகம் தொடர்பான செய்திகளில் குடியரசுத் தலைவருக்கோ அல்லது ஆளுநருக்கோ தனிப்பட்ட விருப்பார்ந்த அதிகாரம் எதுவுமில்லை” என்று உறுதிபடக் கூறுகிறது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1) – ஆளுநருக்கு ஆலோசனை வழங்க ஓர் அமைச்சரவை இருக்கும் என்று கூறும்போது, (வரைவு அரசமைப்பில் 143) வரைவுக்குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் இதைத் தெளிவுபடக் கூறுகிறார். “ஆளுநரின் விருப்பார்ந்த அதிகாரம் (Discretionary power) என்பது தனிநபர் என்ற வகையில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறிப்பதல்ல. மாறாக, மாநில அமைச்சரவையின் முடிவைக் குறிப்பது ஆகும்” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

யு.என். ராவ் – எதிர் - இந்திரா காந்தி என்ற வழக்கிலும், இந்த நிலை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னால், சஞ்சீவி நாயுடு - எதிர் – சென்னை மாநில அரசு என்ற வழக்கிலும் “ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்” என்ற நிலை உறுதியாகத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

நளினியின் கருணை மனுவை 1999இல் தமிழ்நாடு ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, தமிழ்நாடு அமைச்சரவையின் கருத்துக் கேட்காமல் தன்னிச்சையாக நிராகரித்தபோது நளினி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். அவ்வழக்கில் 25.11.1999 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், “அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1)-இன்படி மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் படியே செயல்பட வேண்டும். தன்னிச்சையாக செயல்படுவதற்கு அவருக்கு அதிகாரமில்லை” என்று தெளிவுற விளக்கமளித்து, “ஆளுநருக்கு தனிப்பட்ட விருப்பதிகாரம் ஏதுமில்லை” எனத் தீர்ப்புரைத்தது.

இவ்வாறான சட்ட நிலைமைகள் தெளிவாக இருக்கும்போது, ஆளுநர் புரோகித் 2018 செப்டம்பர் 9 நாளிட்ட தமிழ்நாடு அமைச்சரவை முடிவை ஏற்க மறுத்து, ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் ஆணையில் கையொப்பமிட முடியாது என்று கூறுவது பச்சையான சட்டப் படுகொலையாகும்.

காவிரி, முல்லைப்பெரியாறு, மீனவர் வாழ்வுரிமை ஆகிய எந்தச் சிக்கலாக இருந்தாலும் இந்தியாவின் பிற பகுதிகளில் செயல்படும் சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் செயல்படுவதில்லை என்ற இன ஒதுக்கலை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். ஏழு தமிழர் விடுதலை தொடர்பாகவும் தமிழர்களுக்கு எதிரான இந்த இன ஒதுக்கல் செயல்படுகிறது என்பதையே ஆளுநர் புரோகித்தின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு ஆளுநரின் இந்த அடாவடிச் செயல், தமிழர்களின் அடிப்படை உரிமைக்கும் - தங்கள் அமைச்சரவையின் தன்மானத்திற்கும் விடப்பட்ட சவால் என்று புரிந்து கொண்டு, உரிய அரசியல் அழுத்தம் கொடுத்து பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை விரைந்து செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, October 17, 2019

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது போட்ட வழக்கைக் கைவிடுக! பெ. மணியரசன் வேண்டுகோள்!


நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்
மீது போட்ட வழக்கைக் கைவிடுக!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் 12.10.2019 அன்று சொற்பொழிவாற்றும் போது, முன்னாள் தலைமை அமைச்சர் இராசீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை ஆதரித்துப் பேசியது சரியல்ல; அவ்வாறான பேச்சை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

சீமானின் இந்தப் பேச்சைக் கண்டனம் செய்வதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அந்தப் பேச்சை வைத்துக் கொண்டு, அவர் மீது தேசத் துரோக வழக்குப் போட வேண்டும்; அவரைச் சிறையில் அடைக்க வேண்டும்; அவர் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று பா.ச.க. – காங்கிரசு கட்சியினரும், திராவிடவாதத்தை ஆதரிக்கும் தனிநபர் சிலரும் கோருவது அவர்களின் மன வன்மத்தையே காட்டுகிறது.

இராசீவ்காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது, அவர் ஈழத்திற்கு அனுப்பிய இந்தியப் படை, தமிழர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிராகத்தான் போர் நடத்தியது. ஆயிரக்கணக்கானத் தமிழர்களைக் கொன்றது; தமிழ்ப்பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டது. ஆயிரக்கணக்கான தமிழர்களைத் தடுப்புக் காவலில் வைத்தது.

சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை 2008 – 2009இல் அன்றாடம் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்தபோது, இந்திய அரசு அப்போருக்கு எல்லா வகையிலும் துணை செய்தது. போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் 18 பேர் தீக்குளித்து மாண்டார்கள். போர் நிறுத்தம் கோரியவர்களை பல்லாயிரக்கணக்கில் சிறையில் அடைத்தனர். பலர் பொடாச் சட்டத்திலும் குண்டர் சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டனர்.

ஈழத்தமிழ்ப் பொது மக்கள் – ஒன்றரை இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் போராட்டம், குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரைத் தடுத்து நிறுத்திட இந்திய அரசு மறுத்ததால், அதன் மீது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ் மக்கள் அனைவருக்கும் சினம் கொண்டனர்.

அந்தச் சினம் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் தொடரத்தான் செய்கிறது. அதற்காக 1991 மே 21-இல் நடந்த இராசீவ்காந்தி கொலையை - அந்தக் கொலையை யார் செய்திருந்தாலும் நாம் ஆதரிக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஆயுதப் போராட்டங்களோ – தலைவர்களையும் தனி நபர்களையும் கொலை செய்யும் தீவிரவாதச் செயல்களோ சரியான பாதை அல்ல என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு!

மேற்படி பேச்சுக்காக காங்கிரசுக்காரர்கள் கொடுத்த புகாரை ஏற்று, தமிழ்நாடு காவல்துறை சீமான் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 153ஏ மற்றும் 504 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது சரியல்ல. எந்த சமூகப் பிரிவுக்கும் எதிராக வெறுப்பு அல்லது வன்முறையைத் தூண்டும் பேச்சை சீமான் பேசவில்லை. எனவே, இ.த.ச. 153ஏ பொருந்தாது. இப்பேச்சால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே, இ.த.ச. 504 பிரிவும் பொருந்தாது.

கடந்த சில நாட்களாக – இச்சிக்கலை பூதமாகப் பெரிதுபடுத்தி தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க பா.ச.க.வினரும், காங்கிரசாரும் முனைகின்றனர். தமிழ்நாடு அரசு கவனமாகச் செயல்பட வேண்டும்.

காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றது சரி என்று கூறி, கோட்சேயை தலைவர் என்றும், ஈகி என்றும் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் மீது எந்த நடவடிக்கையும் இந்திய அரசு எடுக்கவில்லை. வடமாநில அரசுகளும் எடுக்கவில்லை. இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவர்களின் ஒளிப்படங்கள் “தியாகிகளாக” அமிர்தசரஸ் பொற்கோயிலில் பொறிக்கப் பட்டுள்ளன. இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் பா.ச.க.வினரும், காங்கிரசாரும் ஒரு தேர்தல் கூட்டத்தில் ஆவேசத்தில் பேசிய பேச்சுக்காக சீமானை சிறையில் தள்ள வேண்டுமென்றும், அவர் கட்சியை தடை செய்ய வேண்டுமென்றும் கூக்குரலிடுவது திட்டமிட்ட தமிழினத் துரோகச் செயலாகவே கருத வேண்டியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரசுக்காரர்கள் கொடுத்த புகாரை வைத்து தமிழ்நாடு தேர்தல் ஆணையத் தலைமை அலுவலர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு விவரங்கள் கோரி கடிதம் அனுப்பியது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பலியாவது போல் இருக்கிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதிவு செய்த வழக்கைக் கைவிடுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, October 16, 2019

“அசுரன்” இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பெ. மணியரசன் நேரில் சென்று பாராட்டு!


அசுரன்” இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு
ஐயா பெ. மணியரசன் நேரில் சென்று பாராட்டு!

தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ள சாதிய கொடுமைகளை வெளிப்படுத்தியதோடு, தமிழராய் ஒருங்கிணைந்து இதை எதிர்கொள்ள வேண்டியதையும் உணர்த்தி, மிகச்சிறப்பாக வெளிவந்துள்ள “அசுரன்” திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் வெற்றிமாறன் அவர்களையும், அவர்தம் குழுவினரையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் இன்று (15.10.2019) பிற்பகல் - நேரில் சந்தித்துப் பாராட்டு தெரிவித்தார்.

சந்திப்பின்போது, ஐயா மணியரசன் அவர்கள் தான் எழுதிய “சாதியும் தமிழ்த்தேசியமும்”, “வெண்மணி தீ வெளிச்சத்தில்”, தோழர் இலட்சுமி அம்மாள் எழுதிய “இலட்சுமி எனும் பயணி” உள்ளிட்ட நூல்களை இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு வழங்கினார்.

“அசுரன்” படத்தில் நடித்துள்ள நடிகர்களையும், உடன் பணியாற்றிய திரைக் கலைஞர்களையும் பாராட்டிய ஐயா மணியரசன் அவர்கள், தொடர்ந்து இதுபோன்ற கலைப்படைப்புகளை வழங்க வேண்டுமென இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அன்போடு கேட்டுக் கொண்டார்.

இயக்குநர் தங்கவேலவன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர், பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு தோழர்கள் வெற்றித்தமிழன், வி. கோவேந்தன், தோழர்கள் தமிழ்ச்செல்வன், கவியரசன், ஊடகவியலாளர் சிவசங்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, October 15, 2019

எரியும் வினாக்கள் எதிர்கொள்ளும் விடைகள் பா.ச.க. செய்தித்தொடர்பாளராக அமைச்சர் பாண்டியராசன்! பெ. மணியரசன்


எரியும் வினாக்கள்
எதிர்கொள்ளும் விடைகள் :

பா.ச.க. செய்தித்தொடர்பாளராக
அமைச்சர் பாண்டியராசன்!

ஐயா பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


வினா : நரேந்திரமோடியும் சீனக்குடியரசுத் தலைவர் சி சின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசிய நிகழ்வு, தமிழ்நாட்டில் கூறப்பட்ட மோடி எதிர்ப்புக் கதைகளைத் துடைத்தெறிந்துவிட்டது என்று தமிழ்த்துறை அமைச்சர் கே. பாண்டியராசன் கூறுகிறார். அது உண்மையா?

“இந்து” ஆங்கில நாளேட்டில் இன்று (14.10.2019) வந்துள்ள அமைச்சர் கே. பாண்டியராசன் செவ்வி அவ்வாறுதான் கூறுகிறது. இவ்வளவு ஆவேசமாக அ.தி.மு.க. அரசின் தமிழ்த்துறை அமைச்சர் தமிழர்களின் மோடி எதிர்ப்புணர்வைச் சாடுவது ஏன்? தமிழ்நாட்டு பா.ச.க. தலைவர்களுடன் போட்டி போட்டு மோடி – அமித்சா கவனத்தை ஈர்க்கிறாரோ?

அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தில் “பகவத் கீதை”யைப் பாடமாக வைத்தது சரியா என்று “இந்து” செய்தியாளர் டென்னிஸ் எஸ். சேசுதாசன் கேட்டதற்கு, “அரிஸ்டாட்டில், தாவோ, கன்பூசியஸ் ஆகியோரின் தத்துவங்கள் போன்றதுதான் பகவத் கீதை! இதைப் பாடமாக வைத்ததை ஏன் எதிர்க்க வேண்டும்? பகவத் கீதையை எதிர்ப்பது முழுக்க முழுக்க அரசியல்! திருக்குறளையும் பாடத்திட்டத்தில் சேர்க்குமாறு உயர்கல்வித் துறை அமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளேன்” என்றார்.

முந்திக் கொண்டு பகவத் கீதையைப் பொறியியல் பல்கலையில் பாடமாக்கத் துணை நின்ற தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசன் – தமிழுக்கும் பிச்சை போடுகிறேன் என்பதுபோல் திருக்குறளை வைக்கவும் பரிந்துரைத்திருக்கிறேன் என்கிறார்.

மதுரையில் தமிழன்னை சிலையை சமற்கிருத மாதா வடிவில் செய்ய திட்டம் அறிவித்தது, +2 ஆங்கில மொழிப் பாட நூலில் தமிழ்மொழி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலும், சமற்கிருதம் கி.மு. 2000-லும் தோன்றியவை என்றும் சங்க காலத்திலேயே தமிழ்ப் பண்பாட்டில் வேத பிராமண இந்துப் பண்பாடு கலந்துவிட்டது என்றும் கூறும் பாடத்தைச் சேர்த்தது போன்றவற்றின் பின்னணியில் பாண்டியராசன் இருக்கிறாரோ என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது.

மேற்படி செய்தியாளர் “மோடியே திரும்பிப் போங்கள்” என்ற முழக்கம் (#GoBackModi) சமூக வலைத்தளங்களில் முன்னோடியாய் வந்திருப்பது எப்படி எனக் கேட்டதற்கு, “இதெல்லாம் பாகிஸ்தான் சதி வேலை” என்று பா.ச.க. பாணியில் விடையளித்துள்ளார்.

பாண்டியராசனின் அரசியல் தொடக்கம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. என்கின்றனர் அவரை அறிந்தோர். அ.தி.மு.க. தலைமைதான் இதுபற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT