உடனடிச்செய்திகள்

Monday, November 29, 2010

பெரியாருக்கு பின் பெரியார் - தோழர் பெ. மணியரசன் கட்டுரை!

பெரியாருக்கு பின் பெரியார் - தோழர் பெ. மணியரசன் கட்டுரை!

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் முனைவர் த. செயராமன் எழுதிவரும் “இனவியல் : ஆரியர் - திராவிடர் - தமிழர்” என்ற ஆய்வுக் கட்டுரைத் தொடரும், ம.செந்தமிழன் எழுதிவரும் “திராவிடம்” குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் வாசகர்களின் கவனத்தைக் கூடுதலாக ஈர்த்துள்ளன.

இவ்விருவரின் கட்டுரைகளைப் பலர் உற்சாகத்தோடு வரவேற்கிறார்கள். அதே வேளை இவற்றால் பெரியாரியல் தோழர்கள் சிலர் வருத்தமும் எரிச்சலும் அடைந்துள்ளனர்.

தமிழர் கண்ணோட்டம் எப்பொழுதுமே மாற்றுக் கருத்துகளுடனும் எதிர்க் கருத்துகளுடனும் திறனாய்வு அடிப்படையில் தர்க்கம் புரிந்து வருகிறது; இவ்வாறான தர்க்கமும் தத்துவப் போராட்டமும் வாசகர்களுக்கு அரசியல், பொருளியல், பண்பியல் துறைகளில் கருத்துத் தெளிவு வழங்கியுள்ளன. எமது கருத்தியல் வளர்ச்சிக்கும் துணை புரிந்துள்ளன.

திராவிடம் குறித்து இவ்விருவரும் எழுதி வரும் கட்டுரைகளில் உள்ள சாரமான கருத்துகள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கு ஏற்புடையவைதாம்.

இத்திறனாய்வுகள் இறுதியில் பெரியாரை மறுப்பதில்தான் போய் முடியும் என்று மேலே குறிப்பிட்ட பெரியாரியல் தோழர்கள் சிலர் கருதுகிறார்கள்.

இத்தருணத்தில், பெரியாரைத் த.தே.பொ.க. எப்படிப் பார்க்கிறது, என்பதைத் தெளிவுபடுத்தி விடுவது மிகவும் தேவையான ஒன்று.

பெரியாரை முற்றிலும் மறுக்கும் நிலைபாட்டை த.தே.பொ.க. ஒருபோதும் எடுக்கவில்லை. அதே வேளை பெரியாரின் கருத்துகள் அனைத்தையும் ஏற்கும் நிலைபாட்டையும் த.தே.பொ.க. எடுக்கவில்லை.

பெரியாரின் பார்ப்பன ஆதிக்க ஒழிப்புக் கருத்துகள் மதிப்பு மிக்கவை. சாதி ஒழிப்பு, பெண்விடுதலை போன்றவற்றில் அவருடைய கருத்துகள் சாரத்தில் முற்போக்கானவை. தமிழ்நாடு விடுதலை குறித்து அவர் அவ்வப்போது வெளிப்படுத்திய கருத்துகள் தமிழ்த் தேச விடுதலைக் கருத்துகளுக்குத் துணை செய்பவை.

அவரது கடவுள் மறுப்புப் பரப்புரைகளும் மூட நம்பக்கை எதிர்ப்புப் போராட்டங்களும் தமிழ்நாட்டில் பரந்துபட்ட மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. பெருந்திரளான மக்களிடம் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டு சேர்த்தன.

கணிசமான மக்கள் சக்தியைத் திரட்டியிருந்த அவர், அரசுப் பதவிக்கு ஆசைப்படாமல் சமூக-அரசியல் பணியாற்றியது அரிய செயல். அதே வேளை பெரியாரிடமிருந்து நாம் மாறுபடும் நிலைபாடுகள் பல இருக்கின்றன.

பெரியாரின் இனக் கொள்கை

ஆரிய இன ஆதிக்கத்தை எதிர்ப்பதிலிருந்து பெரியாரது இன அரசியல் உருவாகிறது. எதிரியின் இனத்தை அடையாளப் படுத்தி எதிர்த்த அவர் தமக்குரிய இனத்தைச் சரியாக அடையாளம் காணவில்லை.

தமது களப் பணிக்கான இனத்தை, ஒரு சமயம் “திராவிடர்” என்றும் இன்னொரு சமயம் “தமிழர்” என்றும் மாற்றி மாற்றி அடையாளப்படுத்தினார். திராவிடர் என்று ஓர் இனம் வரலாற்றில் இருந்ததே இல்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்து வந்த மண்ணுக்குரிய மக்களை - அயல் மண்ணிலிருந்து வந்த ஆரியர், சொல்லத் தெரியாமல் சொல்லி அழைத்த பெயர் “திராவிட” என்பதாகும். தமிழம் என்பதுதான் திரமிள, திராவிட என்று ஆரியரால் திரித்து ஒலிக்கப்பட்டது என்பார் பாவாணர்.

அவ்வாறு உருவான திராவிடர் என்ற சொல் பின்னர் தமிழரிலிருந்து பிரிந்து சென்ற மற்றவர்களையும், ஒரு கட்டத்துக்குப் பிறகு தென்னாட்டுப் பார்ப்பனர் களையும் குறிக்கப் பயன்பட்ட சொல்லாயிற்று.

கால்டுவெல் தவறாக அடையாளப்படுத்திய திராவிடர் என்ற சொல்லை தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரைக் குறிக்கப் பயன்படுத்தினார் பெரியார்.

திராவிடர் என்றால் அதற்குள் பார்ப்பனர் வர மாட்டார்; தமிழர் என்றால் அதற்குள் பார்ப்பனர் வந்துவிடுவர் என்று அவராகவே ஒரு போடு போட்டார். அதற்கான வரலாற்றுச் சான்று எதையும் அவர் காட்டவில்லை. இப்பொழுது முனைவர் த. செயராமன் திராவிடர் என்ற சொல் ஒரு கட்டத்தில் தென்னாட்டுப் பார்ப்பனர்களை மட்டுமே குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதைச் சான்றுகளுடன் நிறுவி விட்டார்.

பெரியார் தழுவி நின்ற தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் தங்களை ஒரு போதும் திராவிடர் என்று கூறிக் கொண்டதில்லை. திராவிடர் என்ற கொச்சைச் சொல்லை தமிழர் மீது மட்டுமே பெரியார் திணித்தார்.

இன அரசியல் நடத்திய பெரியார் தமக்கு இனப்பற்றோ மொழிப்பற்றோ கிடையாது என்று கூறிக் கொண்டார். இக்கூற்று தன்முரண்பாடாகும். தமிழரின் இயற்கையான முகத்தில் செயற்கையான திராவிட முகமூடியை மாட்டி விட்டார். இவ்வாறான பெரியாரின் இனக்குழப்பங்கள் தமிழின உணர்ச்சி முழுமையாக வளர்ச்சி பெறுவதில் தடங்கல்களை ஏற்படுத்தின.

தேசியம்

தேசம், தேசியம் ஆகியவற்றைக் கோட்பாட்டு அளவில் கடுமையாக எதிர்த்தார் பெரியார்.

 “நாம் மாத்திரம் அல்லாமல் பல மேல்நாட்டு அறிஞர்களும் தேசியத்தின் தன்மையைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜான்சன் என்ற ஒரு மேதாவி தேசியம் (தேசாபிமானம்) என்பது வடிகட்டின அயோக்கியத்தனம் என்று - அதாவது “பிழைப்புக்கு வழியில்லாதவர்களின், கடைசியான இழி பிழைப்புக்கு மார்க்கமானது’ என்று கூறியிருக்கிறார்”

 - பெரியார் ஈ. வெ.ரா. சிந்தனைகள் - பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, முதல் பதிப்பு vol-1 பக். 380

“நான் இந்திய சுயராஜ்யம், இந்திய தேசாபிமானம் என்பதைப் பற்றி மாத்திரம் பேசுவதாக நினைத்து விடாதீர்கள். உலகத்திலுள்ள எல்லா தேசங்களின் தேசாபிமானங்களையும் சுய ராஜ்ஜியங்களையும் கண்டும், தெரிந்தும் தான் பேசுகிறேனே யொழிய கிணற்றுத் தவளையாக இருந்தோ, வயிற்றுச் சோற்றுச் சுயநல தேச பக்தனாக இருந்தோ நான் பேசவில்லை.

... ... ... ... ...

“இனியும் யாருக்காவது இவற்றில் சந்தேகங்கள் இருக்கு மானால் இன்றைய அபிசீனியா - இத்தாலி யுத்த மேகங்களையும் இடியையும் மின்னலையும் பார்த்தால் கண்ணாடியில் முகம் தெரிவது போல் விளங்கும்”

 - மேற்படி நூல் பக். 384,385

ஆக்கிரமிப்புப் போர் தொடங்கிய இத்தாலியையும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி விடுதலை முழக்கமெழுப்பிய அபிசீனியா (எத்தியோப்பியா)வையும் சமதட்டில் வைத்துப் பெரியார் சாடுவதில் இருந்தே “தேசியம்” பற்றிய அவரின் புரிதலிலுள்ள வெறுமை புலப்பட்டு விட்டது. தேசப் பற்று என்பதையே பிழைப்புக்கு வழியில்லாதவர்களின் கடைசியான இழிபிழைப்பு என்று கொச்சைப்படுத்தும் அவரது சொற்களில் பணக்கார வர்க்க உளவியல் மட்டுமே பளிச்சிடுகிறது. தேசியம் பற்றிய அவரது இப்பார்வை ஒழுங்கு மறுப்புவாதமாகவும் ஏகாதிபத்தியவாதத்திற்கு அனுகூலமானதாகவும், இன்றைய உலகமயச் சூறையாடலுக்கு ஏற்றதாகவும் உள்ளது.

சில நேரங்களில் அவர், “வர்ணாசிரமம் இல்லாத தனி நாடு கன்னியாகுமரி மாவட்டம் அளவுக்குக் கிடைத்தால் கூட போதும், சென்னை மாவட்ட அளவுக்குக் கிடைத்தால் கூட போதும்” என்றார்.

1938ல் “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று குரல் கொடுத்தவர் அவர். விடுதலை ஏட்டின் முகப்பில் தமிழ் நாடு தமிழர்க்கே” என்ற முழக்கத்தைத் தம் இறுதிக் காலம் வரை பொறித்து வந்தார். ஆனால் கன்னியாகுமரி மாவட்ட அளவிற்கு வர்ணாசிரம தர்மம் இல்லாத தனி நாடு கிடைத்தால் போதும் என்று சொல்லியது தமிழ்த் தேசியம் பற்றிய புரிதலின்மையைக் குறிக்கிறது. தேசம், தேசியம் பற்றிய சமூக அறிவியல் பார்வை அவரிடம் இல்லாததால் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வந்தார்.

மொழிவாரி மாநிலங்கள்

மேற்கண்ட தேசமறுப்புப் பார்வை இருந்ததால், மொழிவாரி மாநிலம் கோரிய போராட்டத்தை முதலில் பெரியார் எதிர்த்தார். “தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பது, தமிழரசு, தமிழராட்சி, தமிழ் மாகாணம் என்று பேசப்படுவன எல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.” - பெரியார், விடுதலை 11.1.1947

“மொழி மாகாணங்கள் பிரிவதிலுள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டியுள்ளோம். மீண்டும் கூறுகிறோம். மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர் கலந்து கொள்ள வேண்டாம்” - பெரியார், விடுதலை 21.4.1947

பிறகு 1950களின் தொடக்கத்தில் மொழிவாரி மாநிலத்தை ஆதரித்தார் பெரியார். அது மட்டுமின்றி கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆகியவற்றை இணைத்து தட்சிணப்பிரதேசம் என்ற பெயரில் ஒரு மாநிலம் அமைக்கத் தில்லி அரசு முயன்றபோது அதை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார் பெரியார்.

தேசியம், தேசிய இனம் குறித்த சரியான பார்வை இல்லாததால் மொழிவாரி மாநில அமைப்பில் முன்னுக்குப் பின் முரணான நிலைபாடுகளை எடுத்தார்.

1956 நவம்பர் 1ல் மொழி அடிப்படையில் தமிழக எல்லைகள் இறுதி செய்யப்பட்ட பின் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து மலையாளிகளையும் கன்னடர்களையும் வெளியேற்ற வேண்டும் என்றும் அறிக்கை கொடுத்தார்.

மொழி

மொழி குறித்த பெரியாரின் பார்வை மொழியியல் அறிவியலுக்கு முரணானது. ஆங்கிலத்தைப் பகுத்தறிவு மொழி என்றும் அறிவியல் மொழி என்றும் கருதி அதைப் பயிற்று மொழியாகவும் வீட்டு மொழியாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றார். தமிழ் மொழி தாய்ப்பால் போன்றது. ஆங்கிலம் புட்டிப்பால் போன்றது என்று கூறிய தமிழ் அறிஞர்களைத் “தாய்ப்பால் பைத்தியங்கள்” என்று சாடினார்.

 “தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.

.... தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டமென்ன? வேற்று மொழியை ஏற்றுக் கொள்வதால் உனக்குப் பாதகமென்ன?

... “1. தொல்காப்பியன் ஆரியக் கூலி ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கண மாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி.”

 “2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பகுத்தறிவைப் பற்றிக் கவலைப் படாமல் நீதி கூறும் முறையில் மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

 “3.கம்பன் இன்றைய அரசியல் வாதிகள், தேச பக்தர்கள் போல் அவர் படித்த தமிழறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனர்களுக்கு ஆதரவாய்ப் பயன்படுத்தித் தமிழரை இழிவு படுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகி ஆவான். முழுப் பொய்யன்”

 - தந்தை பெரியார் “தமிழும் தமிழரும்” பக்.1,5,6,7. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, மூன்றாம் பதிப்பு, 1997 (ஆகஸ்ட்)

பெரியாரின் மேற்கண்ட வரையறுப்புகள் அனைத்தும் பிழையானவை. பெரியாரியலில் நன்கு தகுதி பெற்ற முனைவர் க.நெடுஞ்செழியன் போன்ற ஆய்வாளர்களே தொல்காப்பியர் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் பெரியார் கூறியவற்றை மறுப்பர். தொல்காப்பியரும் திருவள்ளுவரும் ஆரியத்திற்கு எதிரான தமிழர் அறம், பண்பு ஆகியவற்றை நிலை நாட்டியவர்கள் ஆவர். தொல்காப்பியம் தமிழ் இலக்கணத்தின் அரண். இவ்விருவரையும் ஆரியத்தின் காவலர்கள் என்றும் தொல்காப்பியரைத் துரோகி என்றும் பெரியார் இழிவுபடுத்தியதுதான் தமிழ்த் துரோகம். கம்பர் எடுத்துக் கொண்ட பாடுபொருளை எதிர்க்கலாம். அதற்காக அவரை கூலி வாங்கிப் பிழைக்கும் தமிழ்த் துரோகி என்றும் முழுப் பொய்யன் என்றும் கூறுவது தமிழ்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று இழிவாகக் கருதும் அவரின் மனநிலையின் இன்னொரு பகுதியாகும்.

தமிழின் மொழி வளர்ச்சிக்கும் சொல் வளர்ச்சிக்கும் கம்பரின் இராமாயணச் செய்யுள்கள் துணை புரிந்துள்ளன. பெரிய புராணம் என்பது தமிழர் சமூக வரலாற்றின் பதிவாகவும் உள்ளது. இவை வலியுறுத்தும் கடவுட் கொள்கைகளையும் மதிப்பீடுகளையும் மறுப்பது தவறன்று. ஆனால் 1940களில் பெரியார் திருக்குறள் மாநாடு நடத்தியிருக்கிறார் என்பதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும் கம்ப இராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் எரித்துவிட்டால் அவற்றின் வழியாகக் கிடைக்கக் கூடிய மொழி மற்றும் வரலாற்றுச் செய்திகள் எப்படிக் கிடைக்கும்?

 அரிஸ்டாட்டிலை நவீன ஐரோப்பா தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. அந்தக் காலத்திலேயே அவர் அரிய கருத்துகளைச் சொன்னார் என்ற அளவில் பாராட்டுக்குரியவரே. ஆனால் அவர் காலத்தில் விற்று வாங்கப்பட்ட “அடிமைகள்” என்றென்றும் நிரந்தரமாக இருக்கப்போகும் ஒரு சமூகப் பிரிவினர் என்று கருதினார். “பேரறிவு மிக்க முடியாட்சியில் - பிரபுக்களின் அரசாங்கம்” என்பதுதான் அவர் கோட்பாடு. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று பேசிய திருவள்ளுவரையே பெரியார் புறக்கணிப்பது சமூகப் பரிணாம வளர்ச்சியைக் கருத்தில் கொண்ட யாரும் ஏற்க முடியாத ஒன்று.

புகழ் பெற்ற உலகக் கல்வியாளர்களும், மொழியியல் அறிஞர்களும் தாய் மொழிக் கல்வியையே வலியுறுத்துகின்றனர். கல்வி உளவியல், குழந்தை உளவியல் ஆகிய அனைத்திற்கும் எதிரான மொழிக் கொள்கையை பெரியார் கொண்டிருந்தார். ஆங்கில மொழியைக் கல்வி மொழியாகவும் வீட்டு மொழியாகவும் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் - மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தியது பெரும் தவறாகும்.

உலகில் மூத்த செம்மொழிகளுக்கெல்லாம் முந்திய முதற்பெரும் செம்மொழி தமிழ். அதை மிகத் துச்சமாகக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியது வரலாற்று உண்மைக்கு எதிராகப் பழி தூற்றும் செயலாகும்.

1938லும் அதன் பிறகு அவ்வப்போதும் தாம் இந்தித் திணிப்பை எதிர்த்தது, தமிழ் ஆதரவுக்காக அன்று, சமஸ்கிருதமயப்பட்ட வர்ணாசிரமத் தன்மையுள்ள இந்தி மொழியை எதிர்ப்பதற்காகவும் ஆங்கிலத்தை நிலைநாட்டுவதற்காகவும் தான் என்று பெரியாரே கூறியுள்ளார். 1965ல் மாணவர்கள் தொடங்கி வைத்து, மாபெரும் மக்கள் எழுச்சியாக நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்தது மட்டுமின்றி “காலித்தனம்” என்று கொச்சைப்படுத்தினார். அப்போது இந்தித் திணிப்பு ஏதும் இல்லை என்றும் அரசியலுக்காக தி.மு.க தூண்டிவிடும் போராட்டம் என்றும் கூறினார். பெரியாரின் இந்த நிலைபாடு அவரின் அன்றைய தி.மு.க. எதிர்ப்பிற்கும், காங்கிரஸ் ஆதரவிற்கும் ஏற்ற அரசியல் நிலைபாடாகும். சாரத்தில் அது தமிழ்க் காப்புப் போராட்டத்தை எதிர்த்த செயலாகும்.

மரபு

ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அவ் வரலாற்றில் காணும் சிறப்புக் கூறுகளை அந்தந்தத் தேசிய இனமும் தனது மரபுப் பெருமிதமாகக் கருதுகிறது. அவ்வாறான மரபுப் பெருமிதங்களை நிகழ்கால மக்களுக்கு ஊட்டி, உற்சாகப்படுத்தி புதிய சிறப்புகளைப் படைப்பதற்கு அந்தந்தத் தேசிய இனம் தன் மக்களை ஊக்கப்படுத்துகிறது. இந்த உலகு தழுவிய முற்போக்குப் பார்வையைப் பெரியார் எதிர்த்தார்.

காரல் மார்க்சும் எங்கெல்சும் தங்களின் செர்மானியப் பெரு மிதத்தைப் போற்றினார்கள். மார்க்சு தமது தாய்மொழியான செர்மன் மொழியில் ’மூலதனம்’ நூலை எழுதினார். அதன் முதல் பாகத்தை வெளியிடும் போது, தமது மேதைமையை ‘செர்மானிய மேதைமை’ என்று குறிப்பிட்டுப் பெருமிதப்பட்டார். அப்போது எங்கெல்சுக்கு எழுதிய மடலில் மார்க்சு கூறினார் :

“எனது நூல் போன்ற ஒரு படைப்பில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ள செய்திகளில் குறைகள் இருந்தே தீரும். எனினும் இந்நூலில் கூறப்பட்டுள்ளவற்றில் காணப்படும் இயைபுச் சீர்மை, விவரங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக் காட்டும் அதன் கட்டமைப்பு ஆகியவை செர்மானிய மேதைமைக்குக் கிடைத்த வெற்றியாகும்.... இந்த மேதைமை தனி மனிதனுக்குச் சொந்தமான தன்று. அது தேசத்துக்குச் சொந்தமானது.” (Karl Marks, Fredrick Engels Collected works Vol. 42, Moscow, PP.231, 232.)

 பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்தை வலியுறுத்திய காரல் மார்க்சு தமது செர்மானிய தேசியப் பெருமிதத்தில் பூரிப்பெய்துகிறார். இன அரசியலை முதன்மைப் படுத்திய பெரியாரோ தமிழினத்தின் மரபுப் பெருமையைக் கொச்சைப் படுத்துவதில் பூரிப்பெய்தினார். தமிழர்களின் வேரை மறுத்தார். எல்லா இன வரலாற்றிலும் முற் போக்குக் கூறுகளும் இருக்கும் - பிற்போக்குக் கூறுகளும் இருக்கும். பிற்போக்குக் கூறுகளைக் கைவிட்டு முற்போக்குக் கூறுகளை வளர்த் தெடுப்பது சமூக மாறுதல் வேண்டு வோரின் கடமையாகும்.

 தமிழ் மன்னர்கள் அனைவரும் பார்ப்பனர்களின் காலில் விழுந்து வணங்கி அவர்களின் கட்டளைக்கேற்ப செயல்பட்டனர் என்று பொத்தாம் பொதுவாகப் பெரியார் சாடுவது பிழையான வரலாற்றுப் பார்வை.

 இராசராச சோழனின் சிறந்த வரலாற்றுப் பங்களிப்புகளையும், தஞ்சைப் பெரிய கோயிலின் பொறியியல் சிறப்பையும், கலை மேன்மையையும் இன்று மறுதலிக்கும் தோழர்கள் பலருக்குப் பெரியாரின் வரலாற்று மறுப்புப் பார்வையே வழிகாட்டியாக உள்ளது.

மகா பீட்டர் என்ற முதலாம் ஜார் பேரரசனை லெனின் பாராட்டினார். அந்த ஜார் மன்னன் மேற்கு ஐரோப்பாவின் நவீன கால நாகரிக வளர்ச்சியைக் கட்டாயப்படுத்தி இரசியாவில் விரைந்து பரப்பினான் என்பதற்காகப் பாராட்டினார். மன்னர்களையும் இலக்கியப் படைப்பாளிகளையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் வைத்து மதிப்பிட வேண்டும். ஒரு சென்டி மீட்டராவது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த எந்த அளவுக்குப் பாடுபட்டார்கள் என்பதை அளவுகோலாக வைத்து அவர்களைத் திறனாய்வு செய்ய வேண்டும்.

பண்டையப் பெருமிதங்களிலிருந்து ஐரோப்பிய மறு மலர்ச்சி ஊக்கம் பெற்றதை எங்கெல்சு பின்வருமாறு கூறுகிறார்.

  “ரோமாபுரியின் இடிபாடுகளுக்கிடையே இருந்து தோண்டியெடுக்கப்பட்ட பண்டையச் சிற்பங்களும், பைசாந்தியப் பேரரசு வீழ்ந்த பிறகு, அங்கிருந்து காப்பாற்றப் பட்ட கையெழுத்துச் சுவடிகளும் மேற்கு நாடுகளைத் திகைப்பில் ஆழ்த்தின. அவை ஒரு புதிய உலகத்தை வெளிப்படுத்தின. அதன் ஒளி பொங்கும் வடிவங்களின் முன்னே, மத்திய காலத்தின் கொடுமை மிகு “பேய்கள்” மறைந்தொழிந்தன. கலைகளின் மலர்ச்சியில் கற்பனைக்கும் எட்டாத சிகரங்களை இத்தாலி எட்டிப் பிடித்தது. செவ்வியல் சிறப்புள்ள பண்டைக் காலத்தின் மறுவடிவம் போல் அது இருந்தது. அந்தச் சிகரத்தை அதன் பின்னர் அது எட்டவே இல்லை.

“இத்தாலி, பிரான்சு, செர்மனி ஆகியவற்றில் ஒரு புதிய இலக்கியம் உருப்பெற்றது. இதைச் சற்றே பின்தொடர்ந்து ஆங்கில, ஸ்பானிய மொழிகளில் செவ்வியல் இலக்கிய சகாப்தங்கள் தோன்றின.” - நூல்: இயற்கையின் இயக்கவியல் - எங்கெல்சு, முன்னுரை.

கிரேக்கம் வாழ்ந்த வரலாற்றின் இடிபாடுகளிலிருந்து ஐரோப்பாவில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது என்கிறார் எங்கெல்சு. சிந்துவெளி அகழ்வாராய்ச்சி வெளிப்படுத்திய தமிழரின் நகர நாகரிகத்தை அறிந்து உலகம் வியக்கிறது. என்றைக்காவது பெரியார் அதை வியந்து பாராட்டித் தமிழினத்திற்குப் புதிய உந்து விசை அளித்ததுண்டா? இல்லை.

அரசியல்

சமூகச் சீர்திருத்தப் போராட்டங்கள், தமிழ்நாடு விடுதலை உள்ளிட்ட அரசியலுக்கான போராட்டங்கள், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்குத் திரட்டுதல் போன்ற சமூக, அரசியல் நடவடிக்கைகளில் அன்றாடம் ஈடுபட்ட பெரியார், தமது இயக்கம் அரசியல் இயக்கம் அன்று என்று கூறிக் கொண்டது பொருத்தமில்லாதது. தேர்தலில் நிற்பது மட்டும்தான் அரசியல் என்று ஆகாது. அரசு குறித்துப் பேசும் அனைத்தும் அரசியலே.

நீதிக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தி.மு.க என இக்கட்சிகள் அனைத்துக்கும் ஒவ்வொரு காலத்தில் அரசியல் ஆதரவு, தேர்தல் வாக்குத் திரட்டல் ஆகியவற்றில் ஈடுபட்டவரே பெரியார். தமது இயக்கம் அரசியல் இயக்கம் அன்று என்று அவர் கூறியதை அவருக்குப் பிறகான பெரியாரியல் இயக்கங்கள் தங்கள் வசதிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையைக் கைவிட்டோ அல்லது கண்டுகொள்ளாமலோ நடந்துகொள்ளும் தங்களின் சந்தர்ப்பவாதத்தை மூடி மறைக்க, ‘பெரியாரின் வழியில் அரசியலற்ற சமூக இயக்கம்’ என்ற பதாகையை அவை தூக்கிப் பிடிக்கின்றன.

கருத்தியல்

இனம், தேசிய இனம், தேசம் குறித்த சமூக அறிவியல் வரையறைகளைப் புறக்கணித்ததால், இவை சார்ந்த கருத்தியல் எதையும் பெரியாரால் உருவாக்க முடியவில்லை. இவை குறித்த நிராகரிப்புக் கருத்துகளை மட்டுமே கொண்டிருந்தார்.

 பெரியாரின் தாய்மொழி கன்னடம் என்பதற்காக நாம் அவரை அயலாராகக் கருதவில்லை. 300 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்து, தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு, தமிழைக் கல்விமொழியாகவும், அலுவல் மொழியாகவும் ஏற்றுக் கொண்டு வீட்டில் தெலுங்கு, கன்னடம், உருது போன்ற மொழிகளைப் பேசும் மக்களையும் இவர்களை ஒத்த மற்றவர்களையும் நாம் அயலாராகக் கருதவில்லை. அவர்களுக்கு எல்லா உரிமைகளும் தமிழ்நாட்டில் உண்டு என்பதே நமது நிலைபாடு. ஆனால் யாராக இருந்தாலும் தமிழ்த் தேசியத்தை மறுப்பதை நாம் ஏற்க முடியாது.

இன அடிப்படையிலும் அவர் எடுத்த சில நிலைபாடுகள் அடிப்படையிலும் பெரியாரை முற்றிலுமாக நிராகரித்தவர்களின் கூற்றை மறுக்கும் நோக்கில் அவரைத் “தமிழ்த் தேசியத்தின் தந்தை” என்று ஏற்கெனவே நாம் குறிப்பிட்டிருந்தோம். 1938ல் தமிழ்நாடு தமிழர்க்கே என்று முழக்கம் கொடுத்தது, 1947 ஆகஸ்ட் 15 தமிழர்களுக்கான விடுதலை நாள் இல்லை என்று கூறியது, 1960ல் தமிழ்நாடு விடுதலை கோரி இந்திய வரைபட எரிப்புப் போராட்டம் நடத்தியது, 1973இல் சுதந்திரத் தமிழ்நாடு கோரி மாநாடும் போராட்டமும் நடத்தத் திட்டமிட்டது போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பெரியாரைத் ‘தமிழ்த் தேசியத்தின் தந்தை’ என்றோம்.

தேசிய மறுப்பு, இன மறுப்பு, தமிழ் மொழி மறுப்பு கருத்துகளையும் அவர் இடையிடையே உறுதியாகக் கூறி வந்துள்ளார். இன்றையப் பெரியாரியல் அமைப்புகள் இவ்வாறான இன, மொழி மறுப்புக் கருத்துகளை ஏந்திக் கொண்டு, இப்பொழுது வளர்ந்து வரும் தமிழ்த் தேசியத்திற்கு இடையூறு விளைவிக்கின்றன. எனவே, மேலே கூறிய எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்து, பெரியாரை நாம் முற்றிலும் நிராகரிக்கக் கூடாது என்றும், அவரது பங்களிப்புக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்றும் முடிவுக்கு வரும் அதே வேளை அவரைத் தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று கூறுவது மிகைக் கூற்று என்றும் பிழையானது என்றும் கருதுகிறோம்.

இன்றைய காலகட்டம் தமிழ்த் தேசியக் கருத்தியல் கூர்மையடைந்து வரும் காலகட்டமாகும். தேர்தலைப் புறக்கணித்து, தமிழ்த் தேச விடுதலையை முதன்மைப்படுத்தும் தமிழ்த் தேசியம் ஒரு புரட்சிகர அரசியலாகும். இந்த நிலையில் இன்றையத் தமிழ்த் தேசியத்திற்கு பெரியாரின் சிந்தனைகள் உரைகல் அன்று. அவரின் சிந்தனைகளுள் தமிழ்த் தேசியத்தை ஊக்கப்படுத்தும் கருத்துகளும் இருக்கின்றன என்பதே உண்மை.

பெரியார் சிந்தனைகளில் கழிக்க வேண்டியவற்றைக் கழித்து வளர்க்க வேண்டியவற்றை வளர்த்து அவற்றை இன்றையத் தமிழ்த் தேசியப் புரட்சி சிந்தனைக்கு ஏற்பப் பொருத்தப்படுத்தினால் அது தமிழினத்திற்கும் பயன்தரும் பெரியாரியலுக்கும் பயன்தரும். பெரியாரியல் தோழர்கள் இது பற்றி சிந்திப்பார்களாக!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, November 23, 2010

PRESS RELEASE[24.11.2010]: மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு தடை நீங்கியது!

மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்புக்கு தடை நீங்கியது!
மதுரை, 24.11.2010.
 
மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்த ஈகி முத்துக்குமாருக்கு தஞ்சை செங்கிப்பட்டியில் சிலை ஒன்றை நிறுவ, கடந்த சூலை மாதம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி விழா நடத்தியது. மாவீரன் முத்துக்குமாரின் சிலையை இளந்தமிழர் இயக்கம் வடிவமைத்து வழங்கியது. இந்நிகழ்வின் போது, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல்துறை, மாவீரன் முத்துக்குமாருக்கு சிலை வைக்க அனுமதியளிக்கவில்லை.

இதையடுத்து சிலையை நிறுவ த.தே.பொ.க. சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த அவ்வழக்கில், மாவீரன் முத்துக்குமார் சிலையை நிறுவுவதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிலையை நிறுவக் கூடாது என அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை, த.தே.பொ.க. சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் முறியடித்தார்.

இன்று பிற்பகலில் இவ்வாணை கிடைத்ததும், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதோடு, விரைவில் சிலை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வெற்றி த.தே.பொ.க. மற்றும் இளந்தமிழர் இயக்கத் தோழர்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல, இன உணர்வாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

 

Monday, October 4, 2010

இராசராசன் சமாதியைக் கண்டறிய அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் - பெ.மணியரசன்

இராசராசன் சமாதியைக் கண்டறிய அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்
தமிழக முதல்வருக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை
04.10.2010, தஞ்சை

தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 03.10.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அயோத்தித் தீர்ப்பில் "17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது, ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து தென்னகத்தையே கட்டி ஆண்ட மாமன்னன் இராசராசன் மறைந்த விதத்தையோ, அவனுக்கான நினைவுத் தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது" என்று கூறி வேதனைப் பட்டுள்ளார்.

ஆட்சி அதிகாரம் அற்ற ஒரு தமிழ்க் குடிமகன் ஆற்றாமையால் வேதனைப் படுவது போல் கருணாநிதி கவலை தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத் தொல்லியல் துறையைத் தம் கையில் வைத்துள்ள அவர் மாமன்னன் இராசராசன் நினைவிடம் (சமாதி) எங்குள்ளது என்பதைக் கண்டறிய அத்துறையின் மூலம் ஆய்வு மேற்கொண்டிருக்க வேண்டும். இதுவரை அவர் அதைச் செய்ய வில்லை. இனிமேலாவது அதற்கான அகழ்வாராய்ச்சிக்கு முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கெனவே இந்தியத் தொல்லியல் துறையின் ஆண்டறிக்கையில் இராசராசன் சமாதி கும்பகோணம் அருகே உள்ள உடையா;ரில் இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கல்வெட்டாய்வாளர் குடந்தை சேதுராமன் அங்கு சென்று, குளக்கரையில் உள்ள கல்வெட்டைப் படித்து, உடையா;ரில், திரு. பக்கிரிசாமி அவர்களுக்குச் சொந்தமாக உள்ள நிலத்தில் மண்ணுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் லிங்கத்திற்கு அடியில் இராசராசன் சமாதி இருக்கிறது என உறுதிபடக் கூறினார்.

ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், உடையா;ரில் சேதுராமன் குறிப்பிடும் இடத்தில் இராசராசன் சமாதி இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதனை மேலும் உறுதி செய்து கொள்ள அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

இராசராசன் காலத்தில் அரசு நிர்வாக அரண்மனை தஞ்சையிலும், அரச குடும்ப அரண்மனை கும்பகோணத்திற்கருகே உள்ள பழையாறையிலும் இருந்தன. அந்தப் பழையாறைக்குப் பக்கத்தில் உள்ள ஊர்தான் அவர் சமாதி இருப்பதாகக் கூறப்படும் உடையா;ர்.

இராசராசன் மனைவி பஞ்சவன்மாதேவியின் சமாதி உள்ள பள்ளிப்படைக்கோயில் உடையா;ருக்குப் பக்கத்தில் உள்ள பட்டீசுவரத்தில் இப்பொழுதும் உள்ளது.

தமிழக முதல்வர் உடனடியாக உடையா;ரில் அகழ்வாராய்ச்சி செய்ய ஆணையிட்டு இராசராசன் சமாதி இருப்பதைப் பற்றி உறுதி செய்ய வேண்டும். அத்துடன் பழையாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய ஆணையிட வேண்டும். அடுத்து, உடையா;ரில் இராசராசன் பெயரில் மிகப் பெரிய நினைவு மாளிகை எழுப்பி, அதன் ஒரு பகுதியை சோழர் காலத்தின் அருங்காட்சியகமாக்க வேண்டும்.

சோழர் காலத்திற்குரிய எல்லாக் கருவிகளையும் செப்புத் திருமேனிகளையும் இதரப் பொருட்களையும் அந்த அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்.

மேற்கண்ட ஆய்வுப் பணிகளையும் இராசராசன் நினைவகம் எழுப்பும் பணியையும் தமிழக முதல்வர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

நாள்: 04.10.2010
இடம்: தஞ்சை

Saturday, August 28, 2010

தஞ்சை பெரிய கோவிலுக்குள் ஆழ்குழாய் கிணறு வெட்டத் தடை!

தஞ்சை, 28.08.2010.
ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு ஆபத்து உண்டாக்கும் வேலையில் இந்தியத் தொல்லியல் துறையும், இந்து அறநிலையத் துறையும் இறங்கியுள்ளன. 

தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக்; கோபுரம் அருகே 400 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு தோண்டினார்கள். பெரிய கோயில் கிணறு வற்றி விட்டது என்றும், பு+சைக்குத் தேவையான தண்ணீர் எடுக்க ஆகம விதிகளின் படி அந்த இடத்தில் தோண்டுவதாகவும் சொன்னார்கள். அவ்வாறு தோண்டுவது காலப் போக்கில் பெரிய கோயில் கட்டுமானத்திற்கு ஆபத்தை உண்டாக்கும்.

நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு ஆழ்குழாய்க்கு அடியில் குளம் போன்ற பெரிய பள்ளம் உருவாகிவிடும். அவ்வாறு வெற்றிடம் உருவானால் பாறை இல்லாத அப்பகுதியின் கீழ் அடுக்கில் உள்ள மணல் அந்தப் பள்ளத்தில் இறங்க, அதனால் அதற்கு மேலே உள்ள களிமண் அடுக்கு கீழே இறங்க அருகிலுள்ள கோபுர அடித்தளமும் கீழே இறங்கும். இதனால் கோபுரச் சுவர்களில் விரிசலும் வெடிப்பும் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று கட்டடக் கலை வல்லுநர்கள் கூறினார்கள்.

ஏற்கெனவே இதுபோன்ற பாதிப்பால்தான் திருவரங்கக் கோபரச் சுவரிலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவரிலும் விரிசல்கள் ஏற்பட்டன என்றும் அவ்வல்லுநர்கள் கூறினார்கள். அண்மையில் ஆந்திரப் பரதேசம் திருக்காளத்தி கோயில் கோபுரம் சரிந்து மண்மேடானதும் கவனத்திற்குரியது.   

இச் செய்தி அறிந்ததும் 18.08.2010 முற்பகலில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு தலைவர் திரு. அய்யனாபுரம் சி.முருகேசன், ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன், பொருளாளர் தோழர் பழ. இராசேந்திரன், செயற்குழு உறுப்பனர்கள் திருவாளர்கள் சாமி கரிகாலன், திருக்குறள் மாரிமுத்து, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் இரா.சு. முனியாண்டி, பொதுக்குழு உறுப்பனர் தோழர் தெ. காசிநாதன், தமிழக இளைஞர் முன்னணி நகரச் செயலாளர் தோழர் செந்திரல், த.தே.பொ.க. தோழர் இராமதாசு ஆகியோர் பெரிய கோயிலுக்குச் சென்று ஆழ்குழாய் தோண்டுவதைப் பார்த்தனர்.  

உடனடியாக அறநிலையத்துறை, தொல்லியல் துறை, மாவட்ட ஆட்சியர் ஆகிய அதிகாரிகளுக்கு விண்ணப்பம் கொடுத்து ஆழ்குழாய் கிணறு தோண்டுவதைத் தடுத்து நிறுத்தும்படி கோரினர்.  அவர்கள் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதைத் தடுத்து நிறுத்த மறுத்துவிட்டார்கள்.  அதன் பறகு அதைத் தடுக்கும்; படி தமிழக முதல்வரைக் கோரும் வேண்டுகோள் அடங்கிய சுவரொட்டிகள் உரிமை மீட்புக் குழு சார்பல் தஞ்சை நகரெங்கும் ஒட்டப்பட்டன. 19.08.2010 அன்று ஊடகங்களில் இச் செய்தி வந்தது.

அதன் பறகும் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நிறுத்தவில்லை.  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பல் அதன் தலைவர் திரு.சி.முருகேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அவ்வழக்கை மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய் மற்றும் வழக்கறிஞர் அருணாசலம் ஆகியோர் நடத்தினர்.  வழக்கை அனுபமதிப்பது குறித்து 26.08.2010 அன்று முதல் நிலை விசாரணை நடந்தது.  வழக்கறிஞர் லஜபதி ராய் வாதத்தைக் கேட்டதும் உயர்நீதி மன்றம் வழக்கை ஏற்றுக் கொண்டு தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் போடப்படும் ஆழ்குழாய்க் கிணறு வேலையை உடனே நிறுத்தும் படியும், வேறு பணி எதுவும் அது தொடர்பாக செய்யக் கூடாது என்றும் இடைக்காலத் தடை விதித்து ஆணையிட்டது. 

தஞ்சைப் பெரிய கோயில் என்ற தமிழர் வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட உரிமை மீட்புக் குழுவைப் பலரும் பாராட்டினர். 

Friday, August 27, 2010

காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு - த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு!

த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

ஈரோடு, 27.08.2010.

கடந்த 2009 ஆம் ஆண்டு திசம்பரில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதற்காக தோழர்கள் இயக்குநர் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோர் மீது பிரிவினை தடைசட்டத்தி்ன் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு கைதாயினர்.

அவர்களை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் திரண்டு நின்று உணர்ச்சிப் பிழம்பாக வரவேற்பளித்தனர்.

அந்த நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அணியைச் சேர்ந்த சிலர், காங்கிரஸ் கொடி கட்டிய மகிழுந்தில் கூட்டத்தினருக்கு இடையே நுழைந்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அந்த மகிழுந்துகளை அடித்து நொறுக்கினர்.

இப்பிரச்சினை தொடர்பாக த.தே.பொ.க. ஈரோடு நகரச் செயலாளர் தோழர் வெ.இளங்கோவன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர் தோழர் மோகன்ராசு, சாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த புலிப்பாண்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் இன்று(27.08.2010), தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நம் தோழர்கள் மீது குற்றச்சாட்டு ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கப் படாததால், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் மற்றும் அவரது இளம் வழக்கறிஞர்கள் கட்டணம் ஏதுமின்றி முன்னிலையாகி வலுவாக வழக்காடினர்.

Wednesday, August 11, 2010

தி.மு.க. குண்டர்களை கைது செய் - பெ.மணியரசன் கண்டன அறிக்கை!

தி.மு.க. குண்டர்களை கைது செய்!

த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை!

சென்னை, 11.08.2010.

செம்மொழி மாநாட்டை விமர்சித்து கட்டுரை வந்துள்ள தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் மாத இதழின் விளம்பரச் சுவரொட்டிகளை 10.08.2010 அன்று இரவு 11 மணியளவில் சென்னை கண்ணம்மாபேட்டை பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் க.அருணபாரதி, கௌரி பாலா, நாகராசு ஆகியோரை தி.மு.க.வைச் சேர்ந்த குண்டர்கள் 6 பேர் கடுமையாக தாக்கி அவர்கள் கொண்டு சென்ற மிதிவண்டியையும் சேதப்படுத்தியுள்ளார்கள்.

மாற்று கருத்துகளை சகித்துக் கொள்ள முடியாத தி.மு.க.வின் ஏதேச்சாதிகார வன்முறைகளின் தொடர் நிகழ்வுகளில் ஒன்றாக இத்தாக்குதல் நடந்துள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அவா;களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.

தி.மு.க.வினரின் இந்த வன்முறையைக் கண்டித்து கண்டன இயக்கம் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தோழமையுடன்,

பெ.மணியரசன்,

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல்!

சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல்!
சென்னை, 11.08.2010.

சென்னை தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழின் தலைமை அலுவலகம் இயங்கி வருகின்றது. நேற்றிரவு(10.08.2010) அவ்விதழின் சுவரொட்டியை ஒட்டச் சென்ற இதழ் பணியாளர்கள் 2 பேர் மற்றும் அவர்களுடன் சென்ற இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், இதழின் ஆசிரியர் குழு உறுப்பினருமான க.அருணபாரதி ஆகியோர் மீது தி.மு.க. குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

“செம்மொழி மாநாடு செய்தது என்ன?” என்ற தலைப்பில் செம்மொழி மாநாடு குறித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரும், அவ்விதழின் ஆசிரியருமான திரு. பெ.மணியரசன் எழுதிய கட்டுரை, ”இந்தியாவே வெளியேறு” என்ற தலைப்பில் காசுமீர் மக்களின் போராட்டத்தை விவரித்து, க.அருணபாரதி எழுதிய கட்டுரை உள்ளிட்ட கட்டுரைகளின் தலைப்புகள் அவ்விளம்பர சுவரொட்டியில் இருந்தன.

10.08.2010 அன்று இரவு பத்திரிக்கை அலுவலகம் இயங்கி வந்த சாலையில், சுமார் 10.45 மணியளவில் இவ்விளம்பர சுவரொட்டியை இதழின் பணியாளர்கள் திரு. பாலா, திரு. நாகராஜ் ஆகியோர் ஒட்டிக் கொண்டிருக்க, திரு. அருணபாரதி உடன் சென்றிருந்தார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த சிலர், அவ்விளம்பர சுவரொட்டியை ஒட்டக் கூடாது என தகராறு செய்தனர். “செம்மொழி மாநாடு செய்தது என்ன?” என்ற தலைப்பை படித்து விட்டு ஒருவர், “எங்க தலைவன் மாநாடு நடத்துறார்.. நீங்க யாருடா கேள்வி கேட்க... உங்க வீட்டுல கலர் டி.வி. இருக்கா? இந்தியாவையே வெளியே போக சொல்றியா...” என்றபடி நாகராஜை தாக்க வந்தார். அதனை தடுக்க சென்ற அருணபாரதி, பாலா ஆகியோரை முதுகிலும், கழுத்திலும் அடித்தது அந்த கும்பல்.

சுவரொட்டி ஒட்டுவதற்காக தோழர்கள் கொண்டு சென்றிருந்த மிதிவண்டியை அக்கும்பல் வெறி கொண்டு தூக்கிக் கடாசியது. குடிபோதையில் இருந்த அந்தக் கும்பலில் ஒருவன் நிதானமிழந்து, அங்கு சாலையோரம் குழி வெட்டிக் கொண்டு பணிபுரிந்து கொண்டிருந்தவரிடம் மண்வெட்டியை பிடுங்கி நாகராஜை வெட்ட வந்தார். அருணபாரதி அதனை தடுத்த பின், சுவரொட்டிகளை அங்கேயே கிழித்தெறிந்து, பத்திரிக்கை அலுவலகம் நோக்கி அக்கும்பல் சென்றது. அலுவலகம் அந்நேரத்தில் மூடப்பட்டிருந்தது.

தி.மு.க. குண்டர்களின் இத்தாக்குதலை எதிர் கொண்ட தோழர்கள், இச்சம்பவம் நிகழ்ந்தவுடன், இரவு 11.30 மணியளவில் மாம்பலம் R1 காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர். இதழாசிரியர் பெ.மணியரசன், காவல் ஆய்வாளரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டார். புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Sunday, August 8, 2010

NEWS: ஒரு கிலோ அரிசி ரூ.100! அதிர்ச்சித் தகவல்!



ஒரு கிலோ அரிசி ரூ.100! அதிர்ச்சித் தகவல்!

(குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழில் வந்த செய்தி...)

கிலோ அரிசி நூறு ரூபாயை ஓரிரு மாதங்களில் எட்டிவிடும். தமிழகத்திலும் பட்டினிச் சாவு நடக்கும்’’என்ற அதிர்ச்சித் தகவலைச் சொன்னார் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.

கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு ரேஷனில் விற்கும் நிலையில்,இதை நம்ப முடியாமல், ‘எப்படி?’ என்று கேட்டோம்.

‘‘இந்தாண்டும் குறுவை சாகு படி, டெல்டா பகுதி விவசாயிகளுக்கு கேள்விக்குறியாகிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும்.இப்போதைக்குத் தமிழகத்தின் நெல் பற்றாக்குறையை வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசியால் சமாளித்து வருகிறோம். விரைவில் ஆந்திராவிலும் பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப் போகிறார்கள். அதையடுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி வரத்து நின்றுவிடும்.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தொடர்ந்து,பல மாநிலங்களில் கிலோ மூன்று ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.அதையடுத்து, வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அரிசி வரத்தும் நின்றுவிடும். தமிழகத்தில் இதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும். ஏற்கெனவே ஆன்-லைன் வர்த்தகத்தால் தரமான அரிசி கிலோ 50ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெளிமாநில அரிசி வரத்தும் குறைந்தால் அரிசி விலை இரட்டிப்பாகும். ஒரு ரூபாய் அரிசி ஒரு குடும்பத்துக்கு மாதம் முழுவதுக்கும் நிச்சயம் போதாது. அப்படியொரு நிலை வரும்போது,சாதாரண நடுத்தரக் குடும்பங்களின் நிலையை சற்று யோசித்துப் பாருங்கள்’’என்று நமது அதிர்ச்சியைக் கூட்டினார், கி.வெ.

மேட்டூரிலிருந்து காவிரியில் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாததை அடுத்து தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. கர்நாடக அரசு தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரை தரவேண்டும் என காவிரி நீர் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

2007-ல் இறுதித் தீர்ப்பும் வழங்கப்பட்டது. 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்,இன்றுவரை நடுவர் மன்ற ஆணை நிறைவேற்றப்படாமலும், தமிழகத்துக்குத் தேவையான நியாயமான நீரைப் பெறுவதிலும் தமிழக அரசு முனைப்புக் காட்டாமல் உள்ளது. இதன் காரணத்தால், தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளின் 16லட்சம் ஏக்கர் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.மேட்டூரிலிருந்து காவிரியில் ஜூன் மாதத்தில் திறந்துவிட வேண்டிய நீர் திறந்துவிடப்படாததால் இந்தப் பகுதிகளில் குறைந்தபட்சம், 3 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.



இயற்கை வேளாண் விவசாயி பாமயனிடம் பேசினோம். ‘‘தமிழகம் உணவுத் தற்சார்பை இழந்துவிட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் விவசாய உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. இதனால், ஒரு குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் உணவுப் பாதுகாப்பு அற்ற சூழல் உருவாகும். மொத்தத்தில் ஒட்டுமொத்த நாடும் உணவுப் பாதுகாப்பு அற்ற சூழலை நோக்கிப் போகும். பிறகென்ன? பட்டினிச் சாவுகள் அரங்கேறும்’’ என்று வேதனையுடன் தெரிவித்தார், பாமயன்.






தமிழக உழவர் முன்னணி செயல் தலைவர் மா.கோ தேவராசன், ‘‘25.8 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பகுதிகளில் 14 லட்சம் ஏக்கர் மட்டும்தான் தற்போது விவசாயத்துக்குப் பயன்படுகிறது. காவிரி நீரைப் பெறாததால் குறைந்தபட்சம் 2.88 லட்சம் டன் நெல் உற்பத்தி இழப்பு உறுதியாகியுள்ளது. அடுத்ததாக சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டால் இந்தப் பாதிப்பு இரட்டிப்பாகும்.

தொடர் மின்தடையால் நிலத்தடி நீர் கிடைக்கும் பகுதிகளிலும் அதைப் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. இதன் காரணங்களால் ஒரு போகம் கூட விவசாயம் செய்ய முடியாத நிலையில் உழவர்கள் உள்ளனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நூறு நாள் வேலைத் திட்டம் போன்றவை மறைமுகமாக விவசாயத் தொழிலை கடுமையாகப் பாதித்து வருகின்றன. இதுவரைக்கும் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளான பெரிய கட்சிகள் எதுவுமே கர்நாடகாவிடம் தமிழகத்துக்கு நியாயமான பங்கு நீரைக் கோரவில்லை.



காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளம், கர்நாடக அரசுகள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காவிரி மன்ற இடைக்கால ஆணை நடைமுறையில் உள்ளதால், கர்நாடக அரசு தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. நீரைத் தரவேண்டும். ஜூலை வரை கர்நாடகம் தரவேண்டிய 64.87 டி.எம்.சி. நீரையும், ஆகஸ்டில் 54.72 டி.எம்.சி. நீரையும், அக்டோபரில் தரவேண்டிய 30.17 டி.எம்.சி. நீரையும் இதுவரை தமிழக அரசு கோரவில்லை என்பதுதான் யதார்த்தம்!

தமிழக ஆளும்கட்சியும்,எதிர்க்கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதைக் கைவிட்டு,இடைக்கால ஆணையின்படி நீரைப் பெற முயற்சிகள் மேற்கொண்டால் தமிழகத்தை மிகப் பெரிய அபாயத்திலிருந்து காப்பாற்ற முடியும்’’ என்றார்.

லாபம் இல்லை!

கிரியேட் அமைப்பு சார்பில் அண்மையில் நடைபெற்ற இயற்கை விவசாய நெல் குறித்த கருத்தரங்கத்தில், ‘‘பிற விளைபொருள்களோடு ஒப்பிடுகையில் இன்றைய காலகட்டத்தில் நெல் ஒரு லாபகரமான பயிராக இல்லை. மாற்றுப் பயிர்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் நெல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, நன்செய் நிலங்கள் தொழிற்சாலைகளுக்கும், வீட்டு மனைகளுக்கும் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் 1950-ம் ஆண்டுகளில் நெல் பயிரிடப்பட்ட பரப்பு 76லட்சம் ஏக்கர். தற்போது 54 லட்சம் ஏக்கராகக் குறைந்து விட்டது. சராசரியாக நெல் சாகுபடி பரப்பளவில் ஏறத்தாழ 22 லட்சம் ஏக்கர் குறைந்துவிட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஏறுமுகத்தில் அரிசி விலை!

தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபனிடம் கடந்த 5ஆண்டுகளில் அரிசி விலையேற்றம் எப்படி உள்ளது என்று கேட்டோம்.

‘‘நடுத்தர மக்கள் அதிகமாக வாங்கும் முதல் தர பொன்னி அரிசி 2006-ல் கிலோ 18ரூபாய்க்கும், 2007-ல் இரண்டு ரூபாய் விலையேறி 20 ரூபாய்க்கும், 2008-ல் 22-க்கும், 2009-ல் 28 ரூபாய்க்கும் விற்கபட்டது. இதே அரிசி இந்தாண்டு ஷனவரியில் கிலோவுக்கு பத்து ரூபாய் ஏறி(!) 38 ரூபாய்க்கும் விற்கப்பட்டது’’ என்றார் அவர்.

படங்கள்: ம.செந்தில்நாதன், வே.வெற்றிவேல்

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் இதழ், 08.08.2010

Thursday, August 5, 2010

தமிழகத்தை நெருங்குகிறது உணவுப்பஞ்சம் - தமிழக உழவர் முன்னணி எச்சரிக்கை!

தமிழகத்தை நெருங்குகிறது உணவுப்பஞ்சம்
தமிழக உழவர் முன்னணி எச்சரிக்கை!
சிதம்பரம், 05.08.2010.

தமிழகத்தை உணவுப்பஞ்சம் நெருங்குவதற்குள் நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் பேசினார். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக உழவர் முன்னணி சார்பில் இன்று (05.08.2010) காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

தமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்றுக் கொண்டிருக்கும் இந்திய, தமிழக அரசுகளைக் கண்டித்து நடந்த இவ்வாப்பாட்டத்திற்கு தமிழக உழவா முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.




ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய, தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன் பேசியதாவது:

திராவிட நல்லிணக்கம் பேசி, காவிரி உரிமையை தமிழக முதலமைச்சர் கருணாநிதி கைகழுவிவிடுகிறார். இதுவரை கர்நாடக முதலமைச்சர்கள் தான் கர்நாடகாவில் மழை பொழிந்து அணை நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவோம் என்று சொல்லி வந்துள்ளனர். ஆனால் இப்போது கோவையில் அண்மையில் பேசிய முதல்வர் கருணாநிதி கர்நாடகத்தில் போதிய மழை பொழிந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று பேசினார். இது கர்நாடகத்தின் குரலை எதிரொலிப்பதாகும்.
இடைக்காலத் தீர்ப்பு செயலில் இருப்பதாக தமிழக உழவர் முன்னணி கடந்த 3 ஆண்டுகளாக, இறுதித் தீர்ப்பு வந்ததிலிருந்து சொல்லி வந்தது. ஆனால், இப்போது தான் இதை கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கால தாமதம் காவிரி பாசனப் பகுதியின் குறுவை சாகுபடியை கொன்று விட்டது.

இதே போக்கு நீடித்தால் உழவர்கள் வேளாண்மையை விட்டு ஒதுங்குவதோடு தமிழகத்தில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வரும். அதனால், இப்போதே நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாட்டு உழவர்களின் குரலை எதிரொலித்த இவ்வார்ப்பாட்டத்தில், திரளான உழவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Saturday, July 31, 2010

காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!


காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து தமிழக உழவர் முன்னணி சார்பில் 05.08.2010 அன்று சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, தமிழக உழவர் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காவிரி ஆற்றுநீர் உரிமைப் பிரச்சினை காவிரி பாயும் பகுதியின் உழவர் பிரச்சினை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினையாகும்.

1924-ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்தை மீறி கர்நாடகம் காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்ட, வழக்கம் போல் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் இந்திய அரசு இதிலும் கர்நாடகத்திற்கே துணை நின்றது. தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுத்ததோடு இந்திய அரசைப் பாதுகாக்கும் பணியை செம்மையாக செய்து வருகின்றன.

வேளாண்மையில் ஈடுபட்டுள்ள உழவர்களாகிய நாமும் கட்சிகளாக பிரிந்து லாவணியில் பங்கெடுத்து காவிரி உரிமையை இழந்துக் கொண்டிருக்கிறோம். குறுவை சாகுபடியை இழந்தோம்; சம்பாவுக்கும் நீரின்றி தவித்தோம். பின் புழுதி ஒட்டி நேரடி விதைப்புக்கு மாறினோம். தமிழக வேளாண் வல்லுனர்களும் காவிரி உரிமையைப் பெறுவதற்கு பதிலாக மாற்று பயிர் சாகுபடி செய்யுங்கள்; மரம் வளருங்கள்; சொட்டு நீர் பாசனம் செய்யுங்கள் என்று இலவச ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சில அரசியல் கட்சிகள் நதிகளை இணைப்போம்! நதிகளை தேசியமயமாக்குவோம்! என போகாத ஊருக்கு வழி காட்டுகின்றன.

பாகிஸ்தானும், பங்களாதேசும் ஆற்றுநீரை உரிமையுடன் இந்திய அரசிடமிருந்து பெறுவது போல் காவிரி நீரை தமிழகமும் பெற வேண்டும் என்ற சிந்தனை அற்றவர்களாக உழவர்களாகிய நாம் இருக்கிறோம்.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி ஜூலை வரை வரவேண்டிய நீரை தமிழகம் மாதந்தோறும் கேட்டுப்பெற்றிருந்தால் குறுவைக்க ஜன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்திருக்கலாம். இதைவிடுத்து, ஆடிப்பெருக்குக்காக அணையை திறப்பதாக தமிழக முதல்வர் அறிவிப்பது ஒரு அரசியல் நாடகம். இதை நம்பி உழவர்கள் வேளாண்மையில் ஈடுபடுவது சூதாட்டத்திற்கு ஒப்பானது.

ஆகவே தமிழக உழவர்களே! இன்னும் காலம் கடந்து விடவில்லை. கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் நாம் சிந்தித்தால் காவிரி உரிமையை மீட்டெடுக்க முடியும். காவிரியில் நமது உரிமையை இழப்பது வேளாண்மையை மட்டும் பாதிக்காது. தமிழகத்து தொழில், வணிகம், குடிநீர் தேவை ஆகியவற்றையும் பாதிக்கும். ஆகவே ஒட்டுமொத்த தமிழர்களும் ஓருடம்பாய் வீறுகொண்டு எழுவோம்! காவிரி உரிமை மீட்போம்!

தமிழக அரசே! காவிரி நீர் தராத கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் நிறுத்து! காவிரி நீர் தராத கர்நாடகத்தின் மீது பொருளாதார தடைவிதி! என்று கோரிக்கைகளை முன்வைத்தும், நடுநிலை தவறிய இந்திய அரசு, தமிழகத்தில் வரிவசூல் செய்வதை நிறுத்த வேண்டும், நரிமணம் பெட்ரோல், இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்ற தமிழகத்து கனிம வளங்களை இந்திய அரசு கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 05.08.2010 அன்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழக உழவர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

இவ்வார்ப்பட்டத்தில் திரளான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டு இனஉரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும்.

Tuesday, July 13, 2010

PRESS NEWS:: தமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்தின் புறக்காவல் படையாக மாற்றுகிறார் கருணாநிதி - பெ.மணியரசன் கண்டனம்!

இயக்குநர் சீமான் கைதுக்குக் கண்டனம்
தமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்தின்
புறக்காவல் படையாக மாற்றுகிறார் கருணாநிதி

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்!
 
 
நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் அவர்களைத் தமிழக அரசு சிறைப்படுத்திய செயல் கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் பாசிசச் செயல் மட்டுமில்லை, தமிழ் இன எதிர்ப்புச் செயலுமாகும். தமிழக அரசின் இந்த பாசிச - தமிழின எதிர்ப்புச் செயல்களைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

 07.07.2010 அன்று கோடியக்கரைக்கும் தோப்புத்துறைக்கும் இடையே இரு படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் வழக்கம்போல் அடித்துத் துன்புறுத்தினர். செல்லப்பன் என்ற மீனவரை அடித்தே கொன்றனர். மீன்கள், மீன் வலைகள், உணவுப்பொருட்கள் முதலிய அனைத்தையும் கடலில் வீசினர். ஒரு படகில் இருந்த மீனவர்களின் உடைகளைக் களைந்து கடலில் வீசிவிட்டு அவர்களை அம்மணமாக அனுப்பினர்.

 

 எல்லைதாண்டி வந்து சென்னைக்கு அருகே அடிக்கடி மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்களைத் தமிழகக்காவல் துறை இப்படித் துன்புறுத்துவதில்லை. கண்ணியமாக கைது செய்து பின்னர் விடுதலை செய்கிறார்கள்.

 

  தமிழக மீனவரை இனப்படுகொலை செய்வதையும், சிங்களரின் இதர அட்டூழியங்களையும் கண்டித்துப் பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. கண்டன அறிக்கைகள் வெளியிட்டன.

 

 மேற்கண்ட சிங்கள இனவெறியாட்டத்தைக் கண்டித்து 10.07.2010 அன்று சென்னையில் நாம் தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொன்று கொண்டிருந்தால் தமிழகத்தில் சிங்களர்கள் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள் என்று கூறியதாகக் குற்றம்சாட்டி அவர் மீது தமிழக அரசு வழக்குப் போட்டு அவரைத் தளைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளது. தமிழக அரசின் இச்செயல் கருத்துரிமையை மறுக்கும் பாசிசச் செயல்மட்டுமில்லை, தமிழர் எதிர்ப்புச் செயலுமாகும்.

 

 10.07.2010 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் துரை முருகன் சில சிறு சிறு அமைப்பினர்;, இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலும் பேசி வருகிறார்கள். இவர்கள் பேச்சுரிமை என்பதன் கீழ் ஒளிந்து கொள்கிறார்கள். இனி இவர்களை விடமாட்டோம். தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றி ஒடுக்குவோம்  என்று கூறினார்.

 

 சீமான் அவர்களும் தமிழ் அமைப்புகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத் தமிழர் உரிமைகளுக்காகவும் கொடுக்கும் குரல் எந்த சட்டம் ஒழுங்குச் சீர்குலைவையும் ஏற்படுத்தவில்லை. இலட்சக்கணக்கான மக்களைக் கூட்டி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தித் தமிழ், தமிழர் பெருமைகளைப் பேசிய ஓசை காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே தமிழர் கடல் பகுதியில் தமிழக மீனவரைச் சிங்களர் அடித்துக் கொல்வதும் அதைக் கண்டித்தோரை கருணாநிதி சிறையில் அடைப்பதும்  இட்லரின்  பாசிச நாடகத்தைத்தான் நினைவு+ட்டுகிறது.

 


 1933-

ஆம் ஆண்டு செர்மனியின் ஆட்சித்தலைவராக இருந்த இட்லர், அவ்வாண்டின் மே நாள் விழாவை இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களைக் திரட்டி நடத்திவிட்டு, விடிவதற்குள் தொழிற்சங்கங்களைத் தடைசெய்ய ஆணையிட்டு, தொழிற்சங்கத் தலைவர்களைப் பிடித்து சிறையில் அடைத்தார். செம்மொழி மாநாடு நடத்தியவுடன் தமிழ் இனஉரிமை அமைப்புகள் மீது அடக்குமுறை ஏவப் புதிய சட்டம் கொண்டு வருவோம் என்று உறுமுவதும் சீமானைச் சிறையிலடைத்ததும் இட்லரைத்தான் நினைவூட்டுகின்றன.

 

 தமிழ்நாட்டுக் காவல்துறையை சிங்கள இராணுவத்தின் புறக்காவல்; படையாகக் (Out Post) கருணாநிதி மாற்றி வருவதையே  அவரது அணுகுமுறைகளும் அடக்குமுறைகளும் காட்டுகின்றன. இந்த முயற்சியில்  அவர் தோல்வியைத்தான் தழுவுவார். மேலும் மேலும் அவர் தமிழ் மக்களிடம் தனிமைப்படுவார்.

 

 வரலாற்றின்  படிப்பிணைகளை ஏற்று, கலைஞர் கருணாநிதி அவர்கள், தமது தமிழின ஒடுக்குமுறைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும், தோழர் சீமானையும், அவருடன் சிறைப்படுத்தப்பட்ட தோழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

 
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
 
| Thanjavur, 13.07.2010 ||
 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT