உடனடிச்செய்திகள்

Monday, March 26, 2012

வெளியார் சுரண்ட தமிழ்நாடென்ன வேட்டைக் காடா? – நா.வைகறை

வெளியார் சுரண்ட தமிழ்நாடென்ன வேட்டைக் காடா? – நா.வைகறை

 

"வெளிமாநிலத்தவர் சுரண்டுவதற்கு தமிழ்நாடு என்ன வேட்டைக்காடா?" என தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை கேள்வி எழுப்பினார். வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கக் கூடாது என வலியுறுத்தி தமிழகமெங்கும் இன்று(26.03.2012) தமிழக இளைஞர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 

அதன் ஒருபகுதியாக, தஞ்சை மேரி முனையிலிருந்து காலை 10.30 மணியளவில் தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு தலைமையில், பேரணியாகத் திரண்ட இளைஞர்கள், நகரின்  முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைந்தனர்.  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர்  குழ.பால்ராசு பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணியின் முடிவில், த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, துணைச் செயலாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

 

நிறைவில், சிறப்புரையாற்றிய தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழா நா.வைகறை, "இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவி செய்து நம் தமிழ் மக்களை ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்துள்ளது. அதே போன்று, தமிழ்நாட்டிலும் தமிழர்களை அகதிகளாக்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்களை திட்டமிட்டுக் குவித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. இப்போக்கு நீடித்தால், தமிழகத்தில் நாம் திறந்தவெளிச் சிறைச்சாலையில் கிடக்க நேரிடும்.

 

வழிப்பறி,  கொலை, கொள்ளை, கற்பழிப்பு என வெளி மாநிலத்தவர்களால் நடக்கும் சீர்கெடுகளுக்கு எதிராக  காவல்துறை எடுக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளை நாம் வரவேற்கும் அதே வேளையில், வெளியார்களுக்கு இங்கு கட்டுப்பாடுகள் தேவை என்பதை உரத்துக் கூறுகிறோம். வெளியாருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கி அவர்களை இங்கேயே நிரந்தரமாக்க் குடியமர்த்துவது நமக்கு மேலும் சிக்கல்களைத் தான் ஏற்படுத்தும்.  

 

இந்தியா பல தேசிய இனத் தாயகங்களைக் கொண்டிருப்பதால் தான், 1956ஆம் ஆண்டு மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. அத்தாயகத் தனித்தன்மையை இந்திய அரசு மதிக்காமல், தேசிய இனத் தாயகங்களை அழித்தொழிக்கும் நோக்கில் தான் வெளியாரைத் திட்டமிட்டு இங்கு குவிக்கின்றது. இதே நிலை நீடித்தால் தமிழர்களின் தாயகம் நாளை என்னவாக இருக்கும்? இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 காசுமீரிகளுக்கும், 371 பிரிவு அசாம், மணிப்புரா உள்ளிட்ட வேறு பல மாநிலத்தவர்களுக்கும் சலுகைகள் வழங்குகின்றன. இம்மாநிலங்களில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்கத் தடை விதிக்கப்பட்டு, அத்தாயகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் என்ன நிலை? தமிழர்களின் கையில் தான் இன்று தமிழ்நாடு இருக்கிறதா? வெளி மாநிலத்தவர்கள் சுரண்டிக் கொழுக்கத் தமிழ்நாடென்ன திறந்த வீடா?" என்று ஆவேசமாகப் பேசினார்.  

 

கோவையில் 20 தோழர்கள் கைது

கோவை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11 மணியளவில் த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கர் தலைமையில் பேரணியாகச் செல்ல முயன்ற தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் 20 பேரை காவல்துறை கைது செய்தது. த.இ.மு. செயலாளர் தோழர் இராஜேசுக்குமார், செயலாளர் தோழர் பிரை.சுரேஷ், கிளைச் செயலாளர் தோழர் இரா.கண்ணன், த.இ.மு. அமைப்பாளர்கள் தோழர் வே.திருவள்ளுவன், தோழர் ம.தளவாய்சாமி உள்ளிட்ட தோழர்கள் கைதாயினர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட தோழர்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

 

சிதம்பரம்

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தோழர் பா.பிரபாகரன்(த.தே.பொ.க.) ஆகியோர் விளக்கவுரை  நிகழ்த்தினர்.

 

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் தமிழ்க்கனல் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை வாக்காளர் அட்டை வழங்கல் பொறுப்பு அதிகாரி ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு தோழர்களால் நேரில் கொடுக்கப்பட்டது.

 

குடந்தை

த.இ.மு. செயலாளர் தோழர் ச.கணேசன் தலைமையில், குடந்தை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் காலை 10 மணியளவில் தொடங்கியப் பேரணியை தோழர் பெ.பூங்குன்றன்(த.தே.பொ.க.) துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். கோட்டச்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்த பேரணியை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முடித்து வைத்து விளக்கவுரை நிகழ்த்தினார்.

 

ஒசூர்

ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் காலை 10 மணியளவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.இ.மு அமைப்பாளர் தோழர் பி.சுப்ரமணியன் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர்கோ.மாரிமுத்து, தோழர் இராசு.நடவரசன் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர்.

 

திருச்சி

திருச்சி தொடர் வண்டி நிலையம் அருகிலுள்ள காதிகிராப்ட் முன்பு காலை 10 மணியளவில் நடந்த, ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமை தாங்கினார். பாவலர் முவ.பரணர், தோழர்கள் இரெ.சு.மணி, இனியன், ஆத்மநாதன், வே.பூ.ராமராஜ், சூர்யா, சத்யா, வே.க.இலட்சுமணன் ஆகியோர் பங்கேற்றனர். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்கிய விமர்சகர் வீ.ந.சோமசுந்தரம் உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்தினர். தோழர் மு.தியாகராஜன் நன்றி நவின்றார்.

 

கீரனூர்

கீரனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பகல் 1 மணியளவில், குன்றாண்டார் கோவில் ஒன்றிய த.தே.பொ.க செயலாளர் தோழர் சி.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்ற கோரிக்கைப் பேரணியை, தோழர்.குளத்தூர் கிள்ளிவளவன் தொடங்கி வைத்தார். பொறியாளர் அகன்(பாவாணர் மன்றம்) பேரணியை நிறைவு செய்து பேசினார். தோழர்.இலெ.திருப்பதி நன்றி நவின்றார்.



Sunday, March 25, 2012

நாளை(26.03.2012) வெளிமாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்காதே என வலியுறுத்தி தமிழகமெங்கும் த.இ.மு. போராட்டங்கள்!

வெளிமாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்காதே!

தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

 

தமிழகம் மிக வேகமாக வெளியார் மயமாகி வருகிறது. உலகமயம் என்பதே வெளியார் மயம் தான்! தமிழகத் தொழில், வணிகம் ஆகியவற்றை ஏற்கெனவே மார்வாரி, குசராத்தி சேட்டுகளும் மலையாளிகளும் கைப்பற்றி மேலாதிக்கம் செய்கின்றனர்.

 

கடந்த சில ஆண்குளாக அயல் மாநிலத்தவர் அன்றாடம் ஆயிரம் ஆயிரமாய் வந்து குவிகின்றனர். இவர்கள், தமிழர்களுக்குரிய தொழில், வணிகம், வேலை, கல்வி, உணவுப் பொருள்கள், தண்ணீர், மின்சாரம், இருப்பிடம் உள்ளிட்ட அனைத்தையும் உறிஞ்சிக் கொள்கின்றனர்.

 

இதனால் தமிழர்கள் தொழில், வணிக வாய்ப்புகளை இழக்கின்றனர். வேலையின்மை, வறுமை, சொந்த மண்ணில் அதிகாரமின்மை, உணவு, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவற்றில் பற்றாக்குறை எனத் தவிக்கின்றனர். எந்த வகை வரைமுறையும் இல்லாமல் வரம்பும் இல்லாமல் திமுதிமு என்று வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் குடியேற அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களால் கொள்ளை, கொலை, பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் அதிகரித்து விட்டன. பிற மாநிலத்தவரால் பல்வேறு சமூக, பண்பாட்டுத் தீங்குகளும் உருவாகின்றன.

 

ஒரு தேசிய இனத் தாயகத்தின் மக்கள் தொகையில் பிற இனத்தவர் பத்து விழுக்காட்டிற்கு மேல் இருந்தால் அத்தேசிய இனமக்கள் எல்லாவகை உரிமை இழப்புகளுக்கும் வாழ்வுரிமை மறுப்பிற்கும் உள்ளாவார்கள்.

 

தமிழகத்தில் வெளியார் குவியும் வேகம் இதே போக்கில் தொடர்ந்தால், இன்னும் பதினைந்து ஆண்டுகளில் தமிழ் மக்களின் எண்ணிக்கைக்குச் சமமாக அயல் இனத்தார் இங்கு நிரம்பி விடுவர். அதன் பிறகு, தமிழகம் தமிழர் தாயகமாக இருக்காது. கலப்பினத் தாயகமாக மாறும்.

 

வெளி இனத்தார் தங்கு தடையின்றி மிகை எண்ணிக்கையில் குடியேற அனுமதிப்பதால் 1956 நவம்பர் 1இல் மொழிவழி தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்டதன் நோக்கம் தகர்க்கப்படுகிறது. எனவே, 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளியாரை வெளியேற்ற வேண்டியது கட்டாயத் தேவை ஆகும். மராட்டியம், அசாம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெளியாரை வெளியேற்றும் போராட்டங்களும் கோரிக்கைகளும் எழுந்ததை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

இப்பொழுது, உடனடிச் செயலாக வெளிமாநிலத்தவர்க்கு புதிதாக குடும்ப அட்டையோ, வாக்காளர் அடையாள அட்டையோ வழங்கக் கூடாது என்று தமிழக இளைஞர் முன்னணி போராட்டம் நடத்துகிறது.

26.03.2012 திங்கள் அன்று தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம், பேரணி என பல்வேறு வடிவங்களில் பரப்புரைகள் நடக்கின்றன. இந்நிகழ்வுகளில் திரளான தமிழ் இளைஞர்களும், பொது மக்களும், ஊடகவியலாளர்களும் பங்கு கொள்ள வேண்டுகிறேன்.

 

 

 

தஞ்சை

தஞ்சை மேரி முனையிலிருந்து காலை 10 மணியளவில் துவங்கும், கோரிக்கைப் பேரணி முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைகின்றது. தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர்  குழ.பால்ராசு பேரணியைத் தொடங்கி வைக்க, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழா நா.வைகறை பேரணியை முடித்து வைத்துப் பேசுகிறார்.

 

கோவை

கோவை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11 மணியளவில் துவங்கும், த.இ.மு. கோரிக்கைப் பேரணி முக்கிய வீதிகளின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சென்றடைகிறது. த.இ.மு. செயலாளர் தோழர் இராஜேசுக்குமார் தலைமையில் நடக்கும் இந்நிகழ்வில், த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கர், செயலாள தோழர் பிரை.சுரேஷ், கிளைச் செயலாளர் தோழர் இரா.கண்ணன், த.இ.மு. அமைப்பாளர்கள் தோழர் வே.திருவள்ளுவன், தோழர் ம.தளவாய்சாமி உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர்.

 

குடந்தை

த.இ.மு. செயலாளர் தோழர் ச.கணேசன் தலைமையில், குடந்தை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் காலை 10 மணியளவில் தொடங்கும் பேரணியை தோழர் பெ.பூங்குன்றன்(த.தே.பொ.க.) துவக்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். கோட்டச்சியர் அலுவலகத்தில் நிறைவடையும் பேரணியை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முடித்து வைத்துப் பேசுகிறார்.

 

சிதம்பரம்

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, தோழர் பா.பிரபாகரன்(த.தே.பொ.க.) ஆகியோர் விளக்கவுரை  நிகழ்த்துகின்றனர்.

 

ஒசூர்

ஒசூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் காலை 10 மணியளவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.இ.மு அமைப்பாளர் தோழர் பி.சுப்ரமணியன் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, தோழர் இராசு.நவரசன் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர்.

 

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் தமிழ்க்கனல் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்படுகின்றது.

 

திருச்சி

திருச்சி தொடர் வண்டி நிலையம் அருகிலுள்ள காதிகிராப்ட் முன்பு காலை 10 மணியளவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமை தாங்குகிறார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, இலக்கிய விமர்சகர் வீ.ந.சோமசுந்தரம் உள்ளிட்டோர் விளக்கவுரை நிகழ்த்துகின்றனர். தோழர் மு.தியாகராஜன் நன்றி நவில்கிறார்.

 

கீரனூர்

கீரனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பகல் 1 மணியளவில், குன்றாண்டார் கோவில் ஒன்றிய த.தே.பொ.க செயலாளர் தோழர் சி.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெறும் கோரிக்கைப் பேரணியை, தோழர்.குளத்தூர் கிள்ளிவளவன் தொடங்கி வைக்கிறார்.  பொறியாளர் அகன்(பாவாணர் மன்றம்) பேரணியை நிறைவு செய்து பேசுகிறார். தோழர்.இலெ.திருப்பதி நன்றி நவில்கிறார்.

 

•••

 

மேற்கண்ட நிகழ்வுகளில், தமிழ் உணர்வாளர்களும், மனித நேயர்களும், பத்திரிக்கையாளர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

 

 

தோழமையுள்ள,

நா.வைகறை

பொதுச் செயலாளர்,

தமிழக இளைஞர் முன்னணி

நாள்   :  25.03.2012

இடம்  :  தஞ்சை





Tuesday, March 20, 2012

வெள்ளியன்று(23.03.2012) நெல்லையில் கூடுவோம் - த.தே.பொ.க. போராட்ட அழைப்பு!

கூடங்குளம் அணு உலை திறப்புக்கு எதிராக நெல்லையில் கூடுவோம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அழைப்பு!

 

தமிழினப்பேரழிவுத் திட்டமான கூடங்குளம் அணு உலையைத் திறக்க அனுமதிப்ப தென்று முதலமைச்சர் செயலலிதா தலைமையில் 19.3.2012 அன்று கூடிய தமிழக அமைச்சரவை முடிவு செய்து, அணு உலையை திறந்துள்ளது இந்த அணு உலைக் கெதிராக மக்களைத் திரட்டி அமைதி வழிப் போராட்டம் நடத்தி வரும் அணு சக்திக் கெதிரான போராட்டக் குழு உறுப்பினர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

 

கூடங்குளம் பகுதியில் 5000 க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். கிராமம் கிராமமாக வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் வேட்டை என்ற பெயரால் கொடும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த மக்கள் பகை, அடக்கு முறை நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

     அமெரிக்கா, சப்பான், செர்மனி, இத்தாலி ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அணு உலைகளை மூட முடிவு செய்துள்ள நிலையில், உலகின் சிறந்த அறிவியலாளர்கள் பலரும் அணு உலைகள் பாதுகாப்பற்றவை என்று கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்திய அரசின் விருப்பத்திற்கு இசைய கூடங்குளம் அணு உலையை திறக்க அணுமதிப்பது என தமிழக அரசு எடுத்துள்ள முடிவு ஒரு தலைச் சார்பானது. மக்களுக்கு எதிரானது.

 

அமைதி வழியில் போராட்டத்தை நடத்தி வரும் போராட்டக் குழுவினரைப் பொய் வழக்குகளில் கைது செய்வதும் காவல் துறையினரைக் குவித்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களை கைது செய்வதும், வேட்டையாடுவதும் அப்பட்டமான சனநாயக விரோத நடவடிக்கையாகும்.

 

கூடங்குளம் அணு உலையை திறப்பது என்ற தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்குழுவினரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப் பெற வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்தி போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக 23.3.2012 வெள்ளி அன்று திருநெல்வேலி தொடங்கி இடிந்தகரை செல்லும் போராட்டப் பயணத்தை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இப்போராட்டப் பயணத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பது என முடிவு செய்துள்ளது.

 

கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளான த.தே.பொ.க. தோழர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்பார்கள். 23.3.2012. அன்று காலை 9.00 மணிக்கு பாளையங்கோட்டை திடலில் தொடங்கும் இப்போராட்டப் பயணத்தில் தமிழின உணர்வாளர்களும் மனித நேயர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  

 தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


| நாள் : 20.03.2012 | இடம்: சென்னை-17



கூடங்குளம் மக்கள் மீது அடக்குமுறை - த.தே.பொ.க. கடும் கண்டனம்!

கூடங்குளம் மக்கள் மீது அடக்குமுறை


தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

  

தமிழினப்பேரழிவுத் திட்டமான கூடங்குளம் அணு உலையைத் திறக்க அனுமதிப்ப தென்று முதலமைச்சர் செயலலிதா தலைமையில் 19.3.2012 அன்று கூடிய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த அணு உலைக்கெதிராக மக்களைத் திரட்டி அமைதி வழிப் போராட்டம் நடத்தி வரும் அணு சக்திக்கெதிரான போராட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 9 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. கூடங்குளம் பகுதியில் 5000 க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழக அரசின் இந்த மக்கள் பகை, அடக்கு முறை நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

கூடங்குளம் அணு உலை பாதுகாப்புக் குறித்து போராட்டக் குழுவின் சார்பில் முன் வைக்கப்பட்ட வினாக்கள் எதற்கும்  இந்திய அரசின் வல்லுநர் குழுவோ, தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழுவோ போதுமான விளக்கம் அளிக்கவில்லை. முனைவர் இனியன் தலைமையில் அணு சக்திக் கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் உள்ளிட்டோரைக்கொண்டு தமிழக அரசு நியமித்த வல்லுநர்குழு போராட்டக்குழுவின் சார்பிலான அறிவியலாளர்களையோ, உயிர் அச்சத்தில் போராடிக்கொண்டிருக்கிற பொதுமக்களையோ சந்திக்க மறுத்து விட்டது. ஓரிரு மணி நேரம் அணு உலையை பார்வையிட்டப்பிறகு எல்லாம் சிறப்பாக இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. என்று அறிக்கை அளித்து விட்டது.

 

       அமெரிக்கா, சப்பான், செர்மனி, இத்தாலி ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அணு உலைகளை மூட முடிவு செய்துள்ள நிலையில், உலகின் சிறந்த அறிவியலாளர்கள் பலரும் அணு உலைகள் பாதுகாப்பற்றவை என்று கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்திய அரசின் விருப்பத்திற்கு இசைய கூடங்குளம் அணு உலையை திறக்க அணுமதிப்பது என தமிழக அரசு எடுத்துள்ள முடிவு ஒரு தலைச் சார்பானது. மக்களுக்கு எதிரானது.

 

அமைதி வழியில் போராட்டத்தை நடத்தி வரும் போராட்டக் குழுவினரைப் பொய் வழக்குகளில் கைது செய்வதும் காவல் துறையினரைக் குவித்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களை அச்சுறுத்துவதும் அப்பட்டமான சனநாயக விரோத நடவடிக்கையாகும். தமிழக அரசின் இச்செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

கூடங்குளம் அணு உலையை திறப்பது என்ற தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்குழுவினரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப் பெற வேண்டு மென்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.


தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


| நாள் 20.03.2012 | இடம் சென்னை | 



Monday, March 19, 2012

அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முன் வந்திருப்பதில் வரவேற்க ஒன்றுமில்லை - த.தே.பொ.க.

"அமெரிக்கத்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முன் வந்திருப்பதில் வரவேற்க ஒன்றுமில்லை" 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிவிப்பு

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்ற பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பில் மகிழ்வதற்கு ஒன்றுமில்லை.

இந்திய நாடாளுமன்ற மக்கள் அவையில் 19.03.2012 அன்று உரையாற்றிய மன்மோகன்சிங் "அமெரிக்கா முன்வைத்துள்ள வரைவுத் தீர்மான அறிக்கை நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் அத்தீர்மானத்தை ஆதரிக்க விரும்புகிறோம்" என்றார்.

நடந்துள்ளப் போர்குற்றங்கள் மீது விசாரணை நடத்த சார்பற்ற சர்வதேச விசாரணைக் குழுவை ஐ.நா. நியமிக்க வேண்டும் என்ற திருத்தத்தோடு அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் அறிவித்திருந்தால் நாம் வரவேற்றிருக்கலாம். அமெரிக்கத் தீர்மானம் என்ன கோருகிறது?

ஈழத்தமிழர்க்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து இராசபட்சே குழுவினர் மீது பன்னாட்டுக் குற்றவியல் விசாரணை எதையும் அமெரிக்கத்தீர்மானம் கோரவில்லை. இராசபட்சே நியமித்த 'பெற்றப் படிப்பினைகள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம்' கொடுத்துள்ள அறிக்கை மீது இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறது. அதாவது ஈழத்தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போர்க்குற்றம் செய்த இலங்கை ஆட்சியாளர்களே தமக்கெதிராக விசாரணை நடத்தி, தங்களையே தண்டித்துக் கொள்ள வேண்டும். என்று கோருகிற தீர்மானம் அது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இராசபட்சே குழுவினரை நிறுத்துவதற்கான எந்த வாய்ப்பும் அதில் இல்லை. தமிழர் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான தொடக்க நிலை முயற்சி எதையும் அத்தீர்மானம் கோடிட்டுக்காட்டக் கூட இல்லை.

ஆயினும், மனித உரிமை விசாரணை மற்றும் நடவடிக்கைகளில் ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிவுரையையும், நுட்ப உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசையும், அந்நடவடிக்கைகள் குறித்து தகவல் அறிக்கையை ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 22 ஆவது அமர்வில் அளிக்க வேண்டுமென்று மனித உரிமை ஆணையரையும் கேட்டுக்கொள்ளும் பகுதி அவ்வரைவுத் தீர்மானத்தில் முதலில் இடம்பெற்றது.

ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் அடுத்தக் கட்ட விசாரணைக்கு இது முதல் படியாக அமையும் என்று மிகையாக மதிப்பிட்ட சிலர் இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று கோரினர். ஐ.நா. மனித உரிமை ஆணையரின் மேற்பார்வையில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டுமென்ற அந்த பலவீனமான நிபந்தனையும் கூட இப்போது அமெரிக்க வரைவிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக அறிகிறோம்.

அதாவது ஏற்கெனவே அமெரிக்கா முன்வைத்த சொத்தையான தீர்மானத்தை இன்னும் பலவீனப் படுத்தியதற்குப் பிறகே அத்தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக இந்தியா முடிவுவெடுத்துள்ளது. இதனால் தொகை தொகையாகக் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஒரு சிறு ஞாயமும் கிடைத்துவிடப் போவதில்லை. கொடும் போர்க் குற்றவாளியான, இனக்கொலையாளி இராசபட்சே சர்வதேச சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கே வழி கோலப்பட்டுள்ளது.

'ஐ.நா. மனித உரிமை ஆணையர் மேற்பார்வை' என்ற நிபந்தனை நீக்கப்பட்டு விட்டப் பிறகு முன்னர் இருந்ததாக நம்பப்பட்ட சிறிய சர்வதேச தலையீட்டு வாய்ப்பும் கைநழுவிவிட்டது.

இனப்படுகொலைக்குத் தலைமை தாங்கி வழி நடத்திய இராசபட்சே உள்ளிட்ட முதன்மைக் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கும் தீர்மானம் என்பதாலேயே இந்தியா அத்தீர்மானத்தை ஆதரிக்க முன் வந்துள்ளது. இதன் வழியாக தனது தமிழினப் பகைத் திட்டத்தை திறமையான சூழ்ச்சியின் மூலம் இந்திய அரசு மறைத்துக் கொண்டுள்ளது.

எனவே அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரவேற்பதற்கு ஒன்றுமில்லை என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கருதுகிறது. இந்திய அரசின் இந்த இனப்பகை சூழ்ச்சித் திட்டத்தை புரிந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து விழிப்புடன் போராட முன் வருமாறு தமிழர்களைத் த.தே.பொ.க. அழைக்கிறது.

நாள் : 19.03.2012 . இடம்: சென்னை

தோழமையுடன்,

பெ.மணியரசன்,

தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


கி.வெங்கட்ராமன் 

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


Monday, March 12, 2012

சி.பி.எம் நடத்தியது இராசபட்சே ஆதரவு ஆர்ப்பாட்டம் - த.தே.பொ.க. கண்டனம்!

சி.பி.எம் நடத்தியது இராசபட்சே ஆதரவு ஆர்ப்பாட்டம்!: 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்!

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சென்னையிலுள்ள இலங்கை தூதரத்துக்கு முன்னால் 5. 3.2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பைப் பார்த்து தமிழினப் பகைக் கட்சியான சி.பி.எம். திருந்திவிட்டதோ என எண்ணி சிலர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் சி.பி.எம். கட்சி திருந்தவே திருந்தாது என்பதை அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் பேட்டியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் நேர்காணலும் தெளிவாக்கிவிட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளரிடம் பேசிய ஜி.இராமகிருஷ்ணன் கூறியது வருமாறு:

" கற்ற பாடங்கள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம் சில பரிந்துரைகளை செய்துள்ளது. அந்த பரிந்துரைகளில் சிலவற்றைக் கூட இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. அந்த ஆணையத்தின் அனைத்துப் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். அதனை இந்தியா வலியுறுத்த வேண்டும்" ( தீக்கதிர் 6.3.2012.)

இராசபட்சே அரசு அமைத்த விசாரணை ஆணையம் போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையிலேயே செயல்பட்டு ஒருதலைச் சார்பான அறிக்கை அளித்ததை உலகெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் எடுத்துக்காட்டிக் கண்டிக்கின்றன.

ஐ.நா பொதுச்செயலாளர் நியமித்த வல்லுநர் குழு இலங்கையில் அனைத்து மட்ட நீதி மன்றங்களும் பிற துறைகளும் சிங்கள இனவாதத்தில் மூழ்கிஉள்ளதால் அந்நாட்டுக்குள் நடக்கிற எந்த விசாரணையும் தமிழர்களுக்கு இன வழிப்பட்ட நீதியைப் பெற்றுத்தராது. என பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துரைத்து விட்டது எனவேதான் ஐ.நா பொதுச்செயலாளர் இராசபட்சே குழுவினரின் போர்க்குற்றங்களை விசாரிக்க சார்பற்ற சர்வதேச ஆணையம் ஒன்றை அமைத்து உணமைகளை கண்டறிந்து தொடர்புடையவர்களை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பரிந்துரைத்தது அக்குழு.

ஜி.இராமகிருஷ்ணன் கொஞ்சம் பூசி மெழுகிக்கூறுவதை தேங்காய் உடைத்தாற்போல் தெளிவாக டி.கே. ரெங்கராஜன் கூறிவிட்டார். மாலை மலர் நாளேட்டிற்கு 5.3.2102 அன்று டி.கே ரெங்கராஜன்  அளித்த நேர்காணலில் " இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை இலங்கை அரசுதான் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

குற்றவாளியே தன் குற்றங்களை விசாரித்து தனக்கு தண்டணை வழங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறுகிற விசித்திரவாதம் இது. உண்மையில் இக்கூற்றின் மூலம் இராசபட்சே போர்க்குற்றவாளியல்ல என்று கூறவருகிறது சி.பி.எம். எங்கேயோ, வாச்சாத்திலோ, சிதம்பரத்திலோ, உள்ளூர் காவல்துறையினர் மனித உரிமைக்கு எதிராக குற்றச்செயலில் ஈடு படும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பது போல் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை வைக்கிறது.

உள்ளூர் அளவில் அரசு அதிகாரிகள் செய்கிற அட்டூழியங்களுக்கு ஆட்சித் தலைமையில் உள்ளவர்கள் நேரடி பொறுப்பாளியல்லர். எனவே அவர்கள் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கோருவதி பொருளுண்டு. ஆனால் இலங்கையில் அந்நாட்டின் குடியரசுத்தலைவர் இராசபட்சேவே தலைமை தாங்கி படையனுப்பி இன அழிப்பு போர் நடத்தி ஒன்றறை இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளார். இதை உலகமே புரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் டி.கே. ரெங்கராஜன் குழுவினருக்கும் மட்டும் இது புரிய வில்லையா?. இல்லை. அவர்கள் புரிந்தே இராசபட்சேவை காப்பாற்ற நாடகமாடு கிறார்கள்.

செய்தியாளர்களின் அடுத்தக் கேள்வி " பன்னாட்டு விசாரணையை ஏன் எதிர்க்கிறீர்கள்?"

அதற்கு, டி.கே ரெங்கராஜன் அளித்த விடை " இலங்கை இறையாண்மையுள்ள நாடு இந்தியாவின் நட்பு நாடு என்பதாகும்"

தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசால் கருப்பின மக்கள் இன ஒடுக்குமுறைக்கு ஆளானபோது இதே சி.பி.எம். கட்சி ஐ.நாவின் தலையீட்டை, உலக நாட்டுகளின் தலையீட்டைக் கோரியது. அப்போது அது இறையாண்மையுள்ள தென்னாப்பிரிக்க நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனையாக சி.பி.எம்.க்கு தெரியவில்லை.

சிலீ நாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணியோடு ஆட்சி அமைத்த ஆலண்டே, அந்நாட்டின் படைத்தளபதியான பினோச்சேயால் படுகொலை செய்யப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதை தொடர்ந்து கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கவாதிகளும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். கேள்வி முறையின்றி சிறைப்படுத்தப்பட்டனர். சிலீயில் நடந்த மனித உரிமை மீறலுக்காக பினோச்சேயை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று உலக முழுவதுமிருந்த முற்போக்காளர்கள் கோரினார்கள். சி.பி.எம் கட்சி இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கங்கள் நடத்தியது. அப்போது அது சிலீயில் உள்நாட்டு பிரச்சினையாக சி.பி.எம் முக்கு படவில்லை. சிலீ நாட்டின் இறையாண்மைக்கு எதிராக வெளியார் தலையீடு கூடாதென உபதேசிக்க வில்லை.

ஆனால் தமிழர் என்று வந்துவிட்டால் அப்போதுமட்டும் எங்கிருந்தோ இறையாண்மை வந்து குதிக்கிறது. சி.பி.எம் கட்சி உலக மாந்தர்களுக்கு முன்வைக்கும் மனித உரிமை தமிழர்களுக்கு மட்டும் கிடையாது போலும்.

" தேசிய இனங்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமென்ற மார்க்சியக் கொள்கையை சி.பி.எம். கட்சி கைவிட்டுவிட்டதா?" என்று அடுத்த ஒரு கேள்வியை செய்தியாளர்கள் கேட்டார்கள்.  "அதை வெளியிலிருந்து திணிக்கக் கூடாது" என்றார் டி.கே. ரெங்கராஜன் .

ஈழத் தமிழரின் விருப்பத்தை அறிய இலங்கையில் வாக்கெடுப்பு நடத்துவதை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு

"அதனை எதிர்க்கிறோம்" என்றார்.

ஈழத்தமிழர்களின் அரசியல் விழைவை அறிய அம்மக்களிடம் ஐ.நா. கருத்து வாக்கெடுப்பு நடத்துவதை மட்டுமல்ல இலங்கை அரசே நட்த்துவதைக் கூட எதிர்க்கிறது சி.பி.எம் கட்சி.

ஆனால் டி.கே. ரெங்கராஜனின் சி.பி. எம் கட்சி கிழக்கு திமோரில் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் ஐ.நா மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்திய போது ஓடோடிச் சென்று அதனை ஆதரித்தது. அப்போது வெளியிலிருந்து திணிக்கக் கூடாது என்று கூறவில்லை. இதிலும் உலகத்திற்கு என்றால் ஒரு ஞாயம் தமிழருக்கென்றால் ஒரு ஞாயம்.

இப்போது மட்டுமல்ல எப்போதுமே சி.பி.எம் கட்சி தமிழினத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.

சிங்கள அரசு நடத்திய திட்டமிட்ட இன அழிப்பு போர் குறித்து ஐ.நா பொதுச்செயலாளரின் மூவர் குழு அளித்த விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான போது அதை படித்த மனித நேயர்கள் அனைவரும் உலகெங்கும் கொந்தளித்தார்கள். அதை தொடர்ந்து வெளியான சேனல் 4 காட்சிகள் உலகின் மனச்சான்றயே உலுக்கின.

இச்சூழலில் சென்னையில் 30.7.2011 அன்று இலங்கைத் தமிழர் சம உரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு என்ற பெயரில் ஒப்புக்கு ஒப்பாரி வைக்கும் கூட்டம் ஒன்றை  சி.பி.எம். நட்த்தியது. அதில் அக்கட்சி இயற்றிய தீர்மானம் " கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர் " என்று கூறியது( தீக்கதிர் 31.7.2011)

ஒன்றறை இலட்சம் ஈழத்தமிழர்கள் சிங்கள அரசின் இனவெறிப்படை இனப் படுகொலை செய்யப்பட்டனர். அரசுப்படைதான் கூட்டங்கூட்டமாக தமிழர்களை கொன்று குவித்து அவர்களது வாழிடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு இடங்கள், ஆகிய அனைத்தையும் தரைமட்டமாக்கியது. ஐ,.நா. மன்றம் உள்ளிட்டு அனைவருமே ஏற்றுகொண்ட இந்த உணமையை மறைத்து " இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டன  என கதையளந்தது சி.பி.எம் கட்சி.

அம்மாநாட்டின் தீர்மானமும் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசே உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரியது. அம்மாநாட்டுத் தீர்மானத்திலோ தலைவர்களின் உரையிலோ ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானதைப்பற்றி ஒரு சொல் கூட இல்லை. ஆனால் இலங்கை அரசுப்படைகளுக்கு, விடுதலைப் புலிகளுக்கும் நடந்த மோதலில் இருதரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டதாக மட்டுமே கூறியது.

இந்த சி.பி. எம். கட்சி தமிழர்களுக்கு அழிவு நேரும் போதுதான்இவ்வாறு பேசுகிறதே தவிர சிங்களனுக்கு ஒரு சிக்கலென்றால் பதறி துடிக்கும் ஆனையிறவு போரின் போது அக்கட்சி வைத்த கோரிக்கையே இதற்குச் சான்று.

சிங்களப் படையிடமிருந்து ஆனையிறவு முகாமை 2000 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக மீட்டனர். பதறித்துடித்தது சி.பி. எம் கட்சி அடுத்து யாழ்ப்பாணத்தை மீட்க விடுதலைப் புலிகள் படையெடுக்கக் கூடாது என்றும் அவ்வாறு விடுதலைப்புலிகள் படையெடுத்தால் அதைத் தடுக்க இந்திய அரசு களமிறங்க வேண்டுமென்றும் அக்கட்சியின் அனைத்திந்தியத் தலைமை அறிக்கை வெளியிட்டது. அக்கட்சியின் தலைக்குழு உறுப்பினரும் அக்கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவருமான உமாநாத் "விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்தால் அதை முறியடிக்கும் வகையில் இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதங்களை இலவச மாகவே வழங்க வேண்டும் " என்று பதறித்துடித்து அறிக்கை வெளியிட்டார். அப்போது 16000 சிங்களப்படையினர் யாழில் இருந்தனர். சிங்களப் படையாட்களுக்கு ஆபத் தென்றால் துடிக்கின்ற சி.பி.எம் கட்சி அப்பாவித் தமிழர்கள், ஆயுதம் தறிக்காத குழந்தைகளும் பெண்களும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் போது இறை யாண்மை ஞாயம் பேசுகிறது.

இன்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இராசபட்சே கும்பலை இன அழிப்பு போர்க் குற்றம் குறித்து தீர்மானம் வரும் சூழலில் தமிழர்களிடையே எழுந்து வரும் இன உணர்ச்சி ஞாயப்போராட்டம் ஆகியவை சி.பி.எம் தலைமையை அதிர வைக்கிறது. தமிழர்களிடமிருந்து தனிமைப்பட்டுவிடுவோமோ அக்கட்சித் தலைமை அஞ்சுகிறது. அதே நேரத்தில் அக்கட்சி தமிழினப் பகைபோக்கையும், சிங்களப் பாசத்தையும் விட விரும்பவில்லை. அதற்கேற்ப தந்திரமாக நடித்து நயவஞ்சகம் செய்கிறது சி.பி.எம். தலைமை.

தனது கட்சிக்குள் கொஞ்சநஞ்சம் இருக்கிற இன உணர்வாளர்களையும், சனநாயக உணர்வாளர்களையும் திசை திருப்பும் உத்தியாகவே இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆனால் அதன் தமிழின பகைப் போக்கை அதனால் மறைக்க முடியவில்லை. டி.கே. ரெங்கராஜனின் நேர்காணல் அதனை அம்பலப்படுத்தி விட்டது.

உலகத்திற்கு சர்வதேசிய ஞாயம் பேசும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் நயவஞ்சக தமிழினப்பகைப்போக்கை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் இவர்கள் கட்சியினரும் உறுப்பு வகிக்கும் தமிழ்நாடு சட்ட மன்றமும் இராசபட்சே குழுவினருக்கு எதிராக பன்னாட்டு விசாரணை வேண்டுமென்று ஒருமித்தக் குரலில் வலியுறுத்தும் போது சி.பி.எம் கட்சியின் இத்திசை திருப்பல் ஆர்ப்பாட்டம் இனக்கொலையாளி இராசபட்சேயை பாதுகாக்கிற முயற்சியாகும்.

சி.பி.எம் கட்சியை தமிழினம் மன்னிக்காது. தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக உழைக்கும் மக்கள் தமிழினப்பகை கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சியை புறக்கணிக்க வேண்டும்.

நன்றி: பதிவு இணையம்

Saturday, March 10, 2012

"அய்நா மனிதவுரிமைக் கூட்டமும் அமெரிக்கத் தீர்மானமும்" - பெ.மணியரசன் அவர்களது உரை ஒளிப்படங்களுடன்

குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் குவைத்தில் நடைபெற்ற, "அய்நா மனிதவுரிமைக் கூட்டமும் அமெரிக்கத் தீர்மானமும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது தொலைபேசி வழி உரை ஒளிப்படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பதிவேற்றம்: மார்ச் - 9 - 2012

Friday, March 2, 2012

இராசபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் மார்ச் 6 உண்ணாப்போரில் த.தே.பொ.க. பங்கேற்பு!

இராசபக்சே கும்பலை போர்க்குற்றவாளியாக அறிவி எனக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் உண்ணாப்போராட்டத்தில் த.தே.பொ.க. பங்கேற்கிறது!

 

ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்த இராசபக்சே கும்பலை போர்க்குற்றவாளியாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி வருகிற 06.03.2012 செவ்வாய் அன்று சென்னையிலும், மாவட்டத் தலை நகரங்களிலும் உண்ணாப்போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்டு அனைத்து அமைப்பினரையும் அக்கட்சி அழைத்துள்ளது.

 

இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் அழைப்பை ஏற்று, மார்ச் 6 அன்று நடக்கும் உண்ணாப் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பதாக முடிவு செய்துள்ளது.

 

ஏற்கெனவே, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இராசபக்சே உள்ளிட்ட இலங்கை ஆட்சியாளர்களையும் படைத் தளபதிகளையும் நிறுத்தி விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் பல்வேறு தமிழின அமைப்புகளும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றன.

 

வடகிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்கள இராணுவம் முற்றிலும் அகற்ற வேண்டும், தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்வதற்காக வடகிழக்கிலும், புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், அரசியல் கைதிகளாக இலங்கைத் தீவில் அடைக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணம் அளித்து விடுதலை செய்ய வேண்டும், இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதிகளை தமிழர்களின் தாயகப் பகுதி எனவும், அங்கு தமிழர்களுக்குத் தனிஅரசு உரிமை உண்டெனவும் அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கம் நடத்துகிற அதே நேரத்தில், இந்த உண்ணாப்போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் கலந்து கொள்ளும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தங்கள் உண்மையுள்ள,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT