உடனடிச்செய்திகள்
Showing posts with label முல்லைப் பெரியாறு. Show all posts
Showing posts with label முல்லைப் பெரியாறு. Show all posts

Friday, August 24, 2018

வெள்ளப் பேரழிவு காலத்திலும் தமிழ்நாட்டுக்கு எதிராக கேரளா சதித்திட்டம் தீட்டுகிறது! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

வெள்ளப் பேரழிவு காலத்திலும் தமிழ்நாட்டுக்கு எதிராக கேரளா சதித்திட்டம் தீட்டுகிறது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
கேரளத்தில் பெருவெள்ளம் ஏற்படுத்தியுள்ள பேரழிவால், அதன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தைப் பயன்படுத்தி, முல்லைப் பெரியாறு அணையில் நீர்த் தேக்கும் உயரத்தை 142 அடியிலிருந்து 139 அடியாகக் குறைக்கவும், அவ்வணையில் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரத்தை புதியதொரு மேலாண்மைக் குழுவிடம் ஒப்படைக்கவும் கேரள அரசு குறுக்குவழியில் சிந்தித்து செயல்படுவது கண்டனத்திற்குரியது.

கேரளத்தைச் சேர்ந்த இரசல் இராய் என்பவர் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கும் உயரத்தைக் குறைத்தால்தான் கேரளம் வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று உள்நோக்கத்துடன் கூடிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதன் விசாரணையின் போக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தமிழ்நாட்டுத் தரப்பின் வாதத்தைக் கேட்பதற்கு முன்பாகவே, “தமிழ்நாடு அரசு மனச்சான்றுக்கு அஞ்சி நீர் மட்டத்தைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்ய வேண்டும்” என்று அறிவுரை கூறினார். அப்பொழுது காணொலி மூலம் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நான் கொடுத்த அறிக்கையில், “காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமையை வெட்டிக் குறைத்து – குறைப்பிரசவம் போல் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இப்போது முல்லைப் பெரியாறு அணை உரிமையிலும் கை வைக்கிறாரே!” என்று கவலை தெரிவித்திருந்தேன்.

அடுத்து, நடுவண் நீர்வளத்துறை தலைவர் யு.பி. சிங் தலைமையில் உச்ச நீதிமன்றம் அமைத்த குழு, 139.99 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை வழங்கியுள்ள செய்தி இன்று வந்துள்ளது. இதே யு.பி. சிங்தான், உச்ச நீதிமன்றத்தின் காவிரித் தீர்ப்பு கூறிய “ஒரு செயல்திட்டம்” என்பது “மேலாண்மை ஆணையத்தை” குறிக்காது என்று முதன் முதலில் “விளக்கம்” கூறியவர் என்பது கவனத்திற்குரியது! தமிழ்நாட்டிற்கெதிரான அதே மனநிலையில்தான் முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் உயரம் தொடர்பாகவும் அவர் சிந்தித்திருக்கிறார் என்பது தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் நிலவும் இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, கேரள அரசு நேற்று (23.08.2018) அபாண்டமான ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், கேரளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மனித உயிர்களும், பொருட்களும் சேதமானதற்கு முதன்மையான காரணம் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாடு அரசு திடீரென்று திறந்துவிட்ட பெரு வெள்ளம் தான் என்று கூறியுள்ளது.

அவர்களின் கூற்றுக்கு சான்றில்லை என்றாலும், அவர்கள் வாதத்தில் கூறியுள்ளதை ஏற்றுக் கொண்டால் கூட ஆகத்து 15 அன்று 9,000 கன அடி மட்டுமே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால், கேரளத்தின் வெள்ளப்பேரழிவு ஆகத்து 8ஆம் நாள் வாக்கிலேயே தொடங்கிவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் திறந்து விட்ட 9,000 கன அடி நீர் இடுக்கி அணைக்குச் சென்று, அதன் மதகுகள் வழியே வெளியேற வேண்டும். 70.5 ஆ.மி.க. (டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையின் வடிகாலுக்கு 9,000 கன அடி நீர் அபாயமான அளவா?

கர்நாடக அரசு முன் கூட்டியே தெரிவிக்காமல், திடீர் திடீரென்று 2 இலட்சம் கன அடி – இரண்டரை இலட்சம் கன அடி என்று காவிரியில் தண்ணீர் திறந்து விடுகிறது. அதற்காகக் கர்நாடக அரசைத் தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டவில்லை!

அடுத்ததாக, 21,450 கன அடி தண்ணீர் திறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இந்தத் தண்ணீர்தான் இவ்வளவு பேரழிவிற்குக் காரணமா? இடுக்கி அணை உட்பட 80 நீர்த் தேக்கங்களிலிருந்து கேரள அரசு தண்ணீர் திறந்துவிட்டிருக்கிறது. இந்த உண்மையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தக்கவாறு எடுத்துக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகத்து 16 அன்று, முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கும் உயரத்தை142 அடியிலிருந்து 139 அடியாகக் குறைக்க வலியுறுத்தி எழுதிய கடிதத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய விடை மடலில், இரண்டு துயரச் செய்திகளைக் குறிப்பிட்டிருந்தார்.

ஒன்று, அணைக்கு முன்பாக உள்ள நீர் வரத்துப் பகுதியில் நீர் வரும் அளவு எடுப்பதற்கு தமிழ்நாட்டு அதிகாரிகளை கேரள அரசு அனுமதிக்கவில்லை என்பது. இன்னொன்று, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அணைப் பகுதியில் ஏற்பட்ட மின் கசிவால் யானை ஒன்று இறந்ததை சாக்காக வைத்துக் கொண்டு, முல்லைப் பெரியாறு அணைக்கு அன்று துண்டித்த மின் இணைப்பை இன்றுவரை கொடுக்க மறுப்பது. இவ்வளவு பெரிய முல்லைப் பெரியாறு அணையில் அனைத்துப் பணிகளும் மின்னாக்கி (ஜெனரேட்டர்) மூலம்தான் செயல்படுகின்றன என்பது வேதனை அல்லவா!

மின் இணைப்புக் கட்டுமானத்திற்காக கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு 1 கோடியே 65 இலட்சம் ரூபாய் கொடுத்துவிட்ட நிலையிலும், மின் இணைப்பு கொடுக்க இதுவரை எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லியிருந்தார்.

இன்று (24.08.2018) உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் முல்லைப் பெரியாறு அணையின் எந்தப் பகுதியையும் செப்பனிட்டு வலுப்படுத்த கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல கேரள அரசு அனுமதி மறுக்கிறது என்ற உண்மையைக் கூறியுள்ளது.

அத்துடன், கேரள அரசு கெட்ட நோக்கத்துடன் சதித்திட்டம் தீட்டுவதுபோல் முல்லைப் பெரியாறு அணை திறப்பினால்தான் கேரளத்திற்கு இவ்வளவு பெரிய வெள்ளமும், இவ்வளவு பேரழிவும் ஏற்பட்டது என்று குற்றம்சாட்டுகிறது என்று தமிழ்நாடு அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் 2014இல் வழங்கிய தீர்ப்பில், முதல் கட்டமாக முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதனை மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் மூலம் மாற்றிவிடலாம் என்று கேரள அரசு முனைகிறது. இதில் வெற்றியடையா விட்டால், கேரள அரசு புதிய அரசமைப்பு ஆயம் கோரவும் கூடும்!

கேரள அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தக்க முறையில் எதிர்வினையாற்றி வருவது வரவேற்கத்தக்கது! அதேவேளை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நடைமுறையில் உள்ள இந்த வழக்கின் ஊடாக, முல்லைப் பெரியாறு அணையின் சிற்றணைப் பகுதியில் அணையை வலுப்படுத்துவதற்குரிய கட்டுமானப் பணிகளை செய்வதற்கு புதிய ஆணை ஒன்றைப் பெற்றாக வேண்டும். கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு மின் இணைப்பு (பணத்திற்குத்தான்) கொடுக்க வேண்டும் என்ற ஆணையையும் உச்ச நீதிமன்றத்தில் பெற வேண்டும்.

நடுவண் நீர்வளத்துறைத் தலைவரின் தலைமையில் புதிய கண்காணிப்புக் குழு அமைத்து, அது தண்ணீரைத் திறந்து மூடும் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ள கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்கக்கூடாது! 06.09.2018 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, தகுந்த வழக்கறிஞர்களை வைத்து, கேரளத்தின் சதித்திட்டங்களை முறியடிக்க தமிழ்நாடு அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

Friday, January 8, 2016

முல்லைப் பெரியாறு உரிமையை வலியுறுத்தி மலையாளக் கடைகளை முற்றுகையிட்டு மூடிய வழக்கில் தஞ்சை பேரியக்கத் தோழர்கள் விடுதலை!


முல்லைப் பெரியாறு உரிமையை வலியுறுத்தி மலையாளக் கடைகளை முற்றுகையிட்டு மூடிய வழக்கில் தஞ்சை பேரியக்கத் தோழர்கள் விடுதலை!
 
தஞ்சை மாவட்ட நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு! 
 

முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தும், கேரளா சென்ற தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தாக்கியும் அடாவடித்தனம் புரிந்த கேரளாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “மலையாளிகளே வெளியேறுங்கள்’’ என 2011ஆம் ஆண்டு திசம்பர் 7ஆம் நாள், தமிழகமெங்கும் மலையாள நிறுவனங்களை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி) எழுச்சியுடன் நடத்தியது.

சென்னை, குடந்தை, ஒசூர், கோவை ஆகிய இடங்களில் மலையாள ஆலுக்காஸ் உள்ளிட்ட மலையாள நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டு, பேரியக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தஞ்சையில் மலையாளக் கடைகளை முற்றுகையிட்ட தமிழ்த் தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி, தோழர்கள் ஆ. அண்ணாதுரை, ஆறுமுகம் ஆகிய தோழர்கள், திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், அவர்கள் பிணையில் விடுதலையாகி, தஞ்சை மாவட்ட - கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணையில் பங்கேற்றனர். இன்று காலை வழங்கப்பட்டத் தீர்ப்பில், தோழர்கள் அனைவரையும் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கில் விடுதலையான தோழர்களை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் நேரில் சென்று வாழ்த்தினார். தோழர்களுக்காக வழக்கில் நேர்நின்று வாதாடிய வழக்கறிஞர் மு. கரிகாலன், சிவராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

Thursday, June 26, 2014

குடந்தை மலையாள ஆலூக்காஸ் தாக்கப்பட்ட வழக்கு: குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!



முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து, கேரளாவில் தமிழர்களை தாக்கிய மளையாளிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 2011ஆம் ஆண்டு திசம்பர் மாதம், தமிழகமெங்கும் மலையாள நிறுவனங்களை முற்றுகையிட்டு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தியது.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 07-11-2011 அன்று நடைபெற்ற மளையாள நிறுவனம் ஜோஸ் ஆலுக்காஸ் மறியல் போராட்டத்தின் போது, அக்கடை அடித்து நொறுக்கப்பட்டதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாள தோழர் க.விடுதலைச்சுடர், தோழர்கள் ரவி (எ) செழியன், ம.முரளி, சிலம்பரசன், சம்புகன் ஆகியோரைக் காவல்துறை கைது செய்தது.

தோழர்கள் மீது பல கொடும்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை திருச்சி நடுவண் சிறையில் அடைத்தது. பின்னர், பிணையில் வெளிவந்த தோழர்கள் வழக்கை நடத்தி வந்தனர்.

கும்பகோணம் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைப்பெற்று வந்த இவ்வழக்கை, வழக்கறிஞர்கள் இரா.சங்கர் மற்றும் சி.சங்கர் ஆகியோரும், தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் த.தே.பொ.க வழக்கறிஞர் தோழர் கரிகாலன் ஆகியோரும் தோழர்களுகாக நேர்நின்று வாதாடினர். பின்னர், இவ்வழக்கு கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கின் தீர்ப்பை இன்று (26-06-2014) காலை வழங்கிய நீதிபதி வ. பத்பநாபன், வழக்கிலிருந்து தோழர்கள் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக அறிவித்தார்.

விடுதலையான தோழர்கள் அனைவருக்கும், நீதிமன்றத்தில் த.தே.பொ.க. சார்பில் வரவேற்பும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் வழக்கறிஞர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.

தோழர்களுக்கு நாமும் பாராட்டுத் தெரிவிப்போம்!

பேச: தோழர் விடுதலைச்சுடர், 9443704375

Thursday, May 8, 2014

“கேரள அரசு அடாவடித்தனம் செய்யாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும்!” - தோழர் பெ.மணியரசன் அறிக்கை



“கேரள அரசு அடாவடித்தனம் செய்யாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும்!” 
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் அறிக்கை!
 
நீண்ட நெடிய காலதாமதமானாலும் முல்லைப் பெரியாறு அணை உரிமையில் இன்று (07.05.2014) உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கியத் தீர்ப்பு, தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாக அமைந்துள்ளது. 

2006 பிப்ரவரி 27ஆம் நாள் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய வல்லுநர் குழுக்களின் அறிக்கையைப் பெற்று அணை வலுவாக இருக்கிறது என்றும், முதல் கட்டமாக தமிழக அரசு 142 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும், சிற்றணையில் சிறுசிறு செப்பனிடும் பணிகளை முடித்துக் கொண்டு முழு நீர்த்தேக்க அளவான 152 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பு, கேரளத்தைக் கட்டுப்படுத்தாது என்று கேரள சட்டமன்றம் புதிய மசோதா ஒன்றை இயற்றியது. அதற்கு ஆளுநர் ஒப்புதலும் கொடுக்கப்பட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசப்பட்டது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கேரளத்தின் இந்த அடாவடித் தனத்தை இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை. 

மேற்கண்ட அரசமைப்பு சட்டத்திற்கு முரணான, கேரளச் சட்டம் செல்லாது என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டித் தர வேண்டும் என்றும் தமிழக அரசு தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மறுவிசாரணைக்கு அனுப்பியது. மறுபடியும் நீதிபதி ஆனந்த் தலைமையில் வல்லுநர் குழு அமைத்து, அணையின் வலுத்தன்மை பற்றி அறிக்கை தருமாறு அந்த அரசியல் சாசன அமர்வு கோரியது. 

வழங்கப்பட்ட நீதியை செயல்படுத்த இத்தனை தடங்கல்களும், உச்சநீதிமன்றத்தின் தாமதங்களும் இருந்திருக்கின்றன. இவற்றைக் கணக்கில் கொண்டு, தமிழக அரசு இப்பொழுது வந்துள்ள தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, ஆணையிட வேண்டும். 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று, இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 136 அடிக்கு மேல் ஓரங்குலம் தண்ணீர் உயர்ந்தால் கூட, அது வெளியே வழிந்து செல்லும் அளவிற்கு, 16 வடிகால் மதகுகளும் உயரத் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளன. திறந்து கிடக்கும் வடிகால் மதகுகளை உடனடியாக இறக்கி மூடுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். 

அடுத்து, அணைப் பாதுகாப்புக்கு கேரளக் காவல்துறை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கேரள பாதுகாப்புத்துறையை விலக்கிக் கொள்ளச் செய்து, தமிழகக் காவல்துறை பொறுப்பில் அணைப் பாதுகாப்பை எடுத்துக் கொள்ள தமிழக அரசு ஆணையிட வேண்டும். 

கேரள அரசு, சட்டத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்டு, இப்பொழுது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும். மாறாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளத்தில் முழு அடைப்பு நடத்துவது, தமிழக கேரள இணக்கச் சூழ்நிலையைக் கெடுத்துவிடும். 2011இல் நடந்ததைப் போல, கேரளத்தில் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்படும் உருவானால், அது தமிழ்நாட்டில் எதிர்வினையை உருவாக்கி இருமாநிலங்களுக்கிடையே பதட்டச் சூழ்நிலையை உருவாக்கும் என்பதை இந்திய அரசு இந்தத் தடவையாவது உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

தோழமையுடன்,
பெ.மணியரசன்
தலைவர்,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,
சென்னை.

Tuesday, July 24, 2012

முல்லைப்பெரியாறு உச்சநீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு தமிழக அரசுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை

முல்லைப்பெரியாறு உச்சநீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு
தமிழக அரசுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு குறித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள ஆணை தமிழகத்திற்கு எதிரானது; ஒப்பந்தப்படி நடப்பில் உள்ள தமிழக அரசின் அணை பராமரிப்பு உரிமையை பறிக்கக்கூடியது. இதனை எதிர்த்து தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அணைப் பாதுகாப்பு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தங்களின்படி அவ்வணையின் பராமரிப்பு அதிகாரம் தமிழக அரசின் பொதுப்பணித்துறையைச் சார்ந்ததாகும். ஆனால் அணைப் பராமரிப்பு தொடர்பான அன்றாட பணிகள் உள்ளிட்ட எந்தப் பணியையும் செய்யவிடாமல் தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள அரசு சட்டவிரோதமாகத் தடுத்து வருகிறது. முல்லைப் பெரியாறு சிற்றணையில் வழக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் செய்யச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களையும், பணியாளர்களையும் கேரள காவல் துறையினர் மிரட்டி வெளியேற்றிவிட்டனர்.

நீதிபதி ஆனந்த் குழுவினர் அணையின் வலுகுறித்து ஆய்வு செய்வதற்காக தோண்டிய துளைகளை முழுமையாக அடைப்பதற்கு கூட விடாமல் கேரள அரசு தடுத்து விட்டது. அப்பணி அரை குறையாகவே நிறைவேறியுள்ளது.

அணைப் பாதுகாப்பு குறித்து கேரள அரசுக்கு உண்மையிலேயே அச்சம் இருக்குமானால் துளையை அடைக்கும் பணிகளையும், அணைப் பராமரிப்பு பணிகளையும் தடைச் செய்யாமல் அனுமதித்திருக்க வேண்டும். இப்பணிகளை கேரள அரசு அடாவடியாக தடுப்பதில் இருந்தே அணையின் வலுகுறித்து கேரளா தெரிவித்து வரும் அச்சம் இட்டுகட்டப்பட்டது, உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகும்.

இந்நிலையில் தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பணிகளை நடுவண் காவல் சேமப் படை (சி.ஆர்.பி.எப்) மூலம் மேற்கொள்ள இந்திய அரசை வலியுறுத்தி செயல்படுத்த வைத்திருக்க வேண்டும். மாறாக தேவையின்றி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. இதன்மீது 23.07.2012 அன்று ஆணைப் பிறப்பித்த நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான அரசமைப்புச் சட்ட ஆயம் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அனுமதித்தது. ஆனால் இப்பணிகளை கேரள அரசின் கண்காணிப்பு பொறியாளர், நடுவண் அரசின் நீர்வளத்துறை பொறியாளர் ஒருவர், தமிழக அரசின் பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் ஆகிய மூவர் கொண்ட குழுவின் மேற்பார்வையில் நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை அணையின் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள முடியாமல் தடுத்துவிடும். கேரள மேற்பார்வை பொறியாளர் ஒத்துழைக்கவில்லை என்றால் எந்தப்  பராமரிப்பு பணியையும் செய்ய முடியாது. இந்த வகையில் கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையானது அணைப் பராமரிப்பு பணிகள் தொடர்பில் ரத்து அதிகாரத்தை வழங்குகிறது. நிரந்தரமாக கேரள அரசின் தயவில் இப்பணிகள் விடப்படுகின்றன என்று பொருள்.
முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தில் அணையின் பராமரிப்பு உரிமை தமிழக பொதுப்பணித்துறைக்கு வழங்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற ஐவர் ஆயத்தின் இந்த ஆணை தமிழகத்தின் இந்த உரிமையைத் தட்டி பறிக்கிறது. கேரளாவின் ரத்து அதிகாரத்திற்கு உட்பட்டதாக இந்த உரிமையைத் தாழ்த்திவிட்டது.

முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத்துடிக்கும் கேரளத்தின் அடாவடிக்கே உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை உதவியாக அமையும்.

எனவே தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு அதிகாரத்தை தற்காத்து கொள்ள கீழ்வரும் சட்ட நடவடிக்கைகளையும், அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ள தமிழகத்தின் உரிமையை இந்த ஐந்து நீதிபதிகள் ஆயத்தின் ஆணை பறிப்பதோடு மட்டுமின்றி முல்லைப்பெரியாறு ஒப்பந்தத்தின் அடிப்படையையே மாற்றியமைத்துவிட்டது. இது இந்த ஐவர் ஆயத்தின் விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டதாகும். எனவே ஐவர் ஆயத்தின் இந்த ஆணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். 7நீதிபதிகள் அல்லது அதற்கு மேலும் எண்ணிக்கையில் நீதிபதிகள் கொண்ட இன்னும் விரிவான உச்சநீதிமன்ற ஆயம் (பெரிய பெஞ்ச்) இம்மேல்முறையீட்டை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக் அரசு முன்வைக்க வேண்டும்.

வல்லக்கடவு முதல் முல்லைப் பெரியாறு அணை வரை உள்ள பழையச் சாலையை புதுப்பிக்கலாம் என தமிழக அரசுக்கு ஐவர் ஆயத்தின் இவ்வாணை அனுமதி அளித்திருந்தாலும் நடைமுறையில் அதனை கேரள காவல்துறை அனுமதிக்காது என்பது தெளிவு. அன்றாடம் பல்வேறு சாக்குபோக்குகளை சொல்லி அது நிறைவேறாமல் பார்த்துகொள்ளும்.

இப்பணிகளை தடையின்றி நிறைவேற்ற வேண்டுமானால் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்து கேரள காவல் துறை நீக்கப்பட்டு அப்பணிகள் நடுவண் சேமப்படையிடம் (மத்திய ரிசர்வ் போலிஸ்) ஒப்படைக்கப்பட வேண்டும். எனவே அங்கு மத்திய ரிசர்வ் படையை நிறுத்துமாறு இந்திய அரசை தமிழக அரசு அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.

வல்லக்கடவு – முல்லைப்பெரியாறு அணை சாலை பழைய சாலையாகும். அதில் மண்டியுள்ள புதர்களையும், மரங்களையும் அப்புறப்படுத்தி சாலையை புதுப்பித்து கொள்வதற்கு நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை தமிழகம் பெற வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் இவ்வாணை நிபந்தனை போடுகிறது. மரங்களை அப்புறப்படுத்த கேரள வனத்துறை எதிர்ப்பு கிளப்பினால் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்படும். சாலைப் புதுப்பிக்கும் பணி நடைமுறையில் நிறைவேறாது. இந்த நிபந்தனையை எதிர்த்தும் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

மேற்கண்ட சட்டவகை, அரசியல்வழி நடவடிக்கைகளை மேற்கொண்டு முல்லைப் பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க விரைந்து செயல்படுமாறு தமிழக அரசைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 (கி.வெங்கட்ராமன்)
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம் : சிதம்பரம்

Tuesday, May 25, 2010

தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பாதையை முற்றுகையிடுவோம் - த.தே.பொ.க. அறிவிப்பு!

முல்லைப் பெரியாற்று நீரில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை மறுத்து கேரளம் செய்யும் அடாவடித்தனத்தைக் கண்டிக்கும் வகையில், தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பாதைகளை மறிக்கும் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கெடுப்பதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் தலைமையில் 28.05.2010 அன்று காலை பொள்ளாச்சி நடுப்புணி சாலையில் மறியல் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முல்லைபெரியாறு அணை வலுவாக உள்ளது, முதற்கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம். சிற்றணையில் சில பணிகள் செய்தபின் 152 அடி தேக்கலாம் என்று 27.2.2006 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.அத்தீர்ப்பைக் கிழித்தெறிவதற்குச் சமமாக அதை எதிர்த்து ஒரு சட்டத்தைக் கேரளம்15.3.2006 அன்று நிறைவேற்றியது.

கேரளச்சட்டத்தை எதிர்த்துத் தமிழகம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இதுவரை தீர்ப்புச் சொல்லாமல், அணை வலுவாக இருக்கிறதா என்று ஆராய புதிய குழுவை அமைத்துள்ளது. அக்குழுவி;ல் இடம் பெற முதலில்மறுத்த தி.மு.க ஆட்சி, பின்னர் தமிழகம் சார்பில் ஒருவரை இணைத்துள்ளது. அக்குழுவில் ஆள் போடுங்கள் என்று இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் இரு கடிதங்கள் எழுதி விட்டது என்கிறார் முதல்வர்கருணாநிதி. உச்சநீதி மன்றத்தீர்ப்பை நிறை வேற்றுமாறு இதுவரை ஒரு கடிதம் கூட இந்திய அரசு கேரள முதல்வருக்கு எழுத வில்லை.

வலுவாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டுப் புதியஅணை கட்டும் பணிகளை நடுவண் அரசின் ஒப்புதலுடன் கேரளம் தொடங்கி விட்டது.

இந்திய அரசின் முழு ஆதரவும் கேரளத்திற்கு இருப்பதால்இ மலையாளிகளின் இனவெறிச் செயல் மேலும் மேலும் தீவிரமடைகிறது. தமிழர்களைப் பகை இனமாகக் கருதி முல்லைப்பெரியாறு அணை உரிமை மட்டு மன்றிஇ மற்ற நீர் வரத்துகளையும் தடுக்கிறார்கள். அமராவதி ஆற்றிற்கு வரும் பாம்பாற்றில் அணைகட்டுகிறார்கள். பாம் பாற்றில் அணைக்கட்டுவதால் தமிழகத்திற்குப் பாதகமில்லை என்று முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் கூறினார்.; நெய்யாற்றங்கரை இடது கரைக் கால்வாயில் தண்ணீர் விட மறுக்கிறார்கள். செண்பக வல்லி அணை நீர்வரத்தை அதிகரிக்க தமிழகம் சிறிய தடுப்பணைக் கட்ட அனுமதி மறுக்கிறார்கள்.

அரிசி, பருப்பு, பால், முட்டை, காய்கறி இறைச்சி, மணல் முதலிய பல்வேறு பொருட்களை அன்றாடத் தேவைகளுக்கு கேரளம் தமிழ் நாட்டை சார்ந்துள்ளது என்ற உண்மையை மலையாளிகளுக்கு உரைக்கும் வகையில் உணர்த்த வேண்டும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் 12 சாலைகளில் பொருள் போக்குவரத்தைத் தடுக்க மறியல் நடத்துகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் அப்போராட்டத்தில் கலந்து கொள்கிறது.

உலகின் முதன் மொழியைப் பேசும் தமிழினமே வையகம் வியக்க வாழ்ந்து வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டு கிடக்கும் தமிழினமே!

கெஞ்சிக்கேட்டால் கிடைக்காது கிளர்ச்சி செய்யா விட்டால் நடக்காது நெஞ்சை நிமிர்த்தி வாருங்கள் நேருக்கு நேர் நின்று பார்த்திடுவோம்!

இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, April 28, 2010

முல்லைப் பெரியாறு: தமிழக அரசுக்கு த.தே.பொ.க. கடும் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணை
புதிய ஆய்வுக் குழுவைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது
தமிழக அரசு உரிமையைப் பலியிட்ட செயலாகும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தஞ்சையிலிருந்து 22.04.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளதால் அதில் முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீர் தேக்க ஆணையிடக் கோரித் தமிழக அரசும் உழவர்களும் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் தீர்ப்பளித்தது.

அணை வலுவாக உள்ளது என்று மண்ணியல் மற்றும் நீரியல் வல்லுநர் குழுக்கள் அளித்த பரிந்துரையை ஏற்று அணையில் தற்போதுள்ள 136 அடிக்குப் பதிலாக முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம்.
மண் அணையில் சிறு செப்பனிடும் பணிகளைச் செய்து முடித்தபின் முழுக் கொள்ளளவான 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று ஆணையிட்டது.

உச்சநீதி மன்றத் தீர்ப்பைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகக் கேரளம் இயற்றிய சட்டத்தை நீக்கக் கோரியும், தீர்ப்பை செயல்படுத்தும்படி கேரள அரசுக்கு ஆணையிடக் கோரியும் தமிழக அரசு தொடுத்த வழக்கிற்கு உரிய தீர்ப்பை வழங்காமல் உச்ச நீதி மன்றம் 18.2.2010 அன்று, அணையின் வலுத்தன்மையை ஆய்வு செய்து பரிந்துரைக்க புதிய ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அக்குழுவில் தமிழகமும் கேரளமும் தலா ஒரு பிரதிநிதியை அமைக்கக் கோரியது.

உச்சநீதி மன்றத்தின் இம் முடிவு சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் மறுபடியும் புதிய ஆய்வுக்குழு ஒன்றை அமைக்கத் தேவையில்லை என்றும் கூறிய தமிழக அரசு, தன் சார்பில் பிரதிநிதியை நியமிக்கமாட்டோம் என்று அறிவித்து அது குறித்து உச்சநீதி மன்றத்திலும் வாதாடியது. இதே நிலைபாட்டுடன் தி.மு.க. தனது பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் உச்சநீதி மன்றம் புதிய குழு அமைக்க வேண்டும் என்றும் தமிழகம் தனது பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்றும் மீண்டும் கூறியது.

இப்பொழுது தி.மு.க. அரசு குட்டிக் கர்ணம் போட்டு முல்லைப் பெரியாறு வலுவைச் சோதிக்கும் புதிய குழுவிற்குத் தனது பிரதிநிதியாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன் அவர்களை அமர்த்தியுள்ளது.

இம்மாற்றத்திற்கான காரணங்களை 21.4.2010 அன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, தமிழகப் பிரதிநிதியை அமைக்குமாறு வலியுறுத்தி நடுவண் அரசு 8.3.2010 அன்றும் 5.4.2010 அன்றும் இரு மடல்கள் தமிழக அரசுக்கு எழுதியிருப்பதாகக் கூறினார். அத்துடன் உச்சநீதி மன்றத் தீர்;ப்புதான் தமது அரசுக்கு முக்கியம் என்றும் அதன் அடிப்படையிலேயே பிரதிநிதியை நியமித்திருப்பதாகவும் கூறினார்.

இதே உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று அளித்த தீர்ப்பைக் கேரள அரசு துச்சமாகத் தூக்கி எறிந்து அதை நிறைவேற்ற மறுத்துவிட்டது. அத்தீர்ப்பை உச்சநீதி மன்றமும் முக்கியமானதாகக் கருதவில்லை, நடுவண் அரசும் முக்கியமானதாகக் கருதவில்லை. அத்தீர்ப்பை நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு மடல் கூட கேரள அரசுக்கு நடுவண் அரசு எழுதவில்லை.

இந்தப் பின்வாங்கல், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள உரிமையை தமிழக அரசு தானே முன்வந்து கைவிடுவதற்குச் சமம் ஆகிவிட்டது. இது எங்கே போய் முடியும்? எப்படி முடியும் என்ற பெருங்கவலை அக்கறையுள்ள அனைவர்க்கும் ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு உரிமைக்காக உச்ச நீதி மன்றத்தில் வாதாடிய போதே (17.2.2010) தமிழக அரசு சார்பில் பேசிய வழக்கறிஞர் பராசரன், புதிய ஆய்வுக்குழு அமைப்பதை ஏற்றுக் கொண்டார்.

முல்லைப் பெரியாறு அணை வழக்கைக் கவனித்து வந்த அக்கறையுள்ளோர் புதிய ஆய்வுக்குழுவை ஏற்பதால் ஏற்படப் போகும் ஆபத்தைச் சுட்டிக் காட்டிய பின் தமிழக அரசு தனது கருத்தை மாற்றிக் கொண்டு, புதிய ஆய்வுக் குழு அமைப்பதை எதிர்த்தது. இப்போது அந்த நிலையையும் கைவிட்டு புதிய ஆய்வுக் குழுவிற்கு பிரதிநிதியை நியமித்துள்ளது.

தமிழக அரசின் இந்த உறுதியற்ற சந்தர்ப்பவாத நிலைபாடுகள் கேரள அரசிற்குச் சாதகமானது. 2006 பிப்ரவரி 27 தீர்ப்பிற்கு முன்பிருந்த நிலைக்கு முல்லைப் பெரியாறு வழக்கைப் பின்தள்ளி விட்டார் கருணாநிதி.

இதே போன்று உறுதியற்ற சந்தர்ப்பவாத முடிவுகளை அவ்வப்போது எடுத்துத்தான் காவேரி உரிமையைப் பலியிட்டார் கருணாநிதி. இப்பொழுது முல்லைப் பெரியாறு உரிமையைக் காவு கொடுக்கிறார். அது மட்டுமின்றி அமராவதிக்கு வரும் நீரைத் தடுத்துப் பாம்பாற்றில் கேரளம் அணைகட்டுவதையும் ஆதரித்து இப்பொழுது சட்டப் பேரவையில் அவர் கருத்துக் கூறியுள்ளார்.

உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பைத் தானே மறுதலித்து அமைத்துள்ள புதிய ஆய்வுக் குழுவைத் தமிழக அரசு ஏற்க மறுத்து அதில் உறுதியைக் கடைப்பிடித்தால் அரசமைப்புச் சட்ட நெருக்கடி ஏற்பட்டு விவரிவான விவாதங்கள் நடந்து, உச்சநீதி மன்றம் தனது முடிவை மாற்றிக் கொள்ளும் படியான நெருக்குதல் உண்டாகியிருக்கும். அதைவிடுத்து, தமிழக அரசு பின்வாங்கி, கேரள அரசுக்குச் சாதகமாக நடந்து கொண்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் திட்டமிடும் கேரளம் இனி, அத்திசையில் உறுதியாகச் செயல்படும்.

இனி முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காப்பாற்ற வேண்டுமெனில், கேரள இந்திய அரசுகளை எதிர்த்துத் தமிழக மக்கள் கடுமையாகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT