உடனடிச்செய்திகள்

Saturday, November 23, 2019

மராட்டியத்தின் நள்ளிரவு மோசடிக்கு நரேந்திரமோடியே பொறுப்பு பெ. மணியரசன் கண்டனம்!


மராட்டியத்தின் நள்ளிரவு மோசடிக்கு நரேந்திரமோடியே பொறுப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

பெ. மணியரசன் கண்டனம்!


மராட்டியத்தில் சிவசேனையும் சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரசும் கூட்டணி சேர்ந்து அமைச்சரவை அமைக்க இருந்த நிலையில், தேசியவாதக் காங்கிரசிலிருந்து அஜீத்பவாரை இழுத்து 22.11.2019 – 23.11.2019 நள்ளிரவில் அரசியல் சதித் திட்டத்தை அரங்கேற்றி – ஆளுநருக்குத் தெரிவித்து விடியற்காலை 7.30 மணிக்கு ஆளுநர் பா.ச.க.,வின் பட்னாவிசை முதலமைச்சராகவும், அஜீத்பவாரை துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்கச் செய்த பா.ச.க.,வின் நள்ளிரவு மோசடி வன்மையான கண்டனத்திற்குரியது.

இந்த நள்ளிரவு மோசடிக்கு முழுப்பொறுப்பு தலைமை அமைச்சர் நரேந்திரமோடியே! நள்ளிரவு 12 மணிக்கு ஆளுநருக்குத் தெரிவித்து,12.30 மணிக்கு புது தில்லி புறப்பட இருந்தவரைத் தடுத்து விடியற் காலை 5.30 மணிக்கு பட்னாவிசையும் அஜீத்பவாரையும் சந்திக்க வைத்து ஆளுநர் காலை 7.30 மணிக்குப் பதவியேற்பு உறுதி மொழி செய்து வைக்க நடுவண் அரசே ஏற்பாடு செய்துள்ளது. இவ்வளவு நள்ளிரவு வேலைகளும் தலைமை அமைச்சர் ஏற்பாடில்லாமல் நடக்க முடியாது.

சட்டவிரோத அமைச்சரவை 7.30 மணிக்குப் பதவி ஏற்கிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் 8.40 மணிக்கு மோடி டிவிட்டர் வழியாக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். மோடியிடம் இட்லர் தோற்றுப்போனார்.

சட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக நள்ளிரவு சதியில் உருவாக்கப்பட்ட அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து செய்தி அனுப்பியிருப்பது. கொடுமையிலும், கொடுமை.

நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவில் இனி சட்டத்தின் ஆட்சி நடக்குமா, அடுத்த மக்களவைத் தேர்தல் நடக்குமா என்ற கேள்விகள் எழுகின்றன. பா.ச.க. தலைமைக்கு அரசியல் ஒழுக்கமில்லை. சனநாயகத்தின் மீதும் அரசமைப்பச் சட்டத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.

இப்படிபட்ட பா.ச.க.,வைத் தமிழ்நாட்டில் வளர்க்கலாமா என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, November 19, 2019

“வேளாண் கொள்முதல் பொறுப்பிலிருந்து தமிழ்நாடு அரசு விலகவே ஒப்பந்தப் பண்ணைச் சட்டம் வழிவகுக்கும்!” “பசுமை விகடன்” வார ஏட்டிற்கு கி. வெங்கட்ராமன் செவ்வி!


“வேளாண் கொள்முதல் பொறுப்பிலிருந்து
தமிழ்நாடு அரசு விலகவே ஒப்பந்தப்
பண்ணைச் சட்டம் வழிவகுக்கும்!”


“பசுமை விகடன்” வார ஏட்டிற்கு
தோழர் கி. வெங்கட்ராமன் செவ்வி!

"ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் சாதகமா, பாதகமா?” என்ற தலைப்பில் 25.11.2019 நாளிட்ட “பசுமை விகடன்” வார ஏட்டிற்கு தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் அளித்துள்ள செவ்வி :
‘‘தமிழக விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்குவதற்காகவும், கார்ப்பரேட் கம்பெனிகள் சுரண்டிக் கொழிப்பதற்காகவும் மத்திய அரசின் தூண்டுதலோடு தமிழக அரசு இந்தச் சூழ்ச்சியான சட்டத்தைக் கொண்டுவருகிறது.
`வேளாண் உற்பத்தியில் ஈடுபடுபவர்களும், கால்நடைகள் வளர்ப்பவர்களும் அவை தொடர்பான பெரிய தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, அவற்றில் ஈடுபடலாம்’ என இந்தச் சட்டம் சொல்கிறது. சாகுபடியின் தொடக்க காலத்திலேயே நெல், பருத்தி, வாழை உள்ளிட்ட விளைபொருள்களுக்கு விற்பனை விலையைத் தீர்மானித்து ஒப்பந்தம் செய்வதுதான் இதன் சாராம்சம்.
அதேபோல, `கால்நடை வளர்ப்பவர்கள் பால் விற்பனை செய்வதற்குப் பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு உத்தரவாதமான சந்தையைப் பெறலாம்’ எனத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு சொல்கிறது. இதன் உண்மையான நோக்கம், வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்து தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக விலகி, சந்தையை முற்றிலும் தனியார் வசமாக்குவதுதான்.
ஏற்கெனவே மத்திய அரசின் சாந்தகுமார் குழு, `வேளாண் விளைபொருள்கள் கொள்முதலிலிருந்தும், அதற்கு அடிப்படை விலை தீர்மானிப்பதிலிருந்தும் அரசு விலகிக்கொள்ள வேண்டும்’ என 2015-ம் ஆண்டு பரிந்துரை செய்தது.
அதை மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இங்கேயுள்ள சூழலுக்கு அரசு கொள்முதல் நிலையங்கள் அதிகம் தேவைப்படுகின்றன.
வேளாண் விளைபொருள்களுக்கு அரசே அடிப்படை விலையைத் தீர்மானிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் இங்கு ஒத்து வராது”.
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!



கோத்தபய வெற்றியிலிருந்து

பாடம் கற்க வேண்டும்!



ஐயா பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்


கடந்த 16.11.2019 அன்று நடந்த இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில், “சிறீலங்கா பொதுஜன பெரமுனா” கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட, மகிந்த இராசபக்சேவின் தம்பி கோத்தபய இராசபக்சே 52.25% வாக்குகள் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயக மாநிலங்களில் உள்ள தமிழர்களும், தமிழ் பேசும் முசுலிம்களும் கோத்தபய இராசபக்சேயை எதிர்த்து நின்ற “ஐக்கிய தேசியக் கட்சி” வேட்பாளரான சஜித் பிரமேதாசாவுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்திருக்கிறார்கள்.

இராசபக்சே குடியரசுத் தலைவராகவும், அவரது தம்பி கோத்தபய இராசபக்சே பாதுகாப்புத் துறைச் செயலாளராகவும் இருந்த காலத்தில் தமிழின அழிப்புப் போரை தீவிரமாக நடத்தினார்கள். 2008 - 2009இல் இலட்சக்கணக்கான தமிழ்ப் பொது மக்களையும், விடுதலைப்புலி வீரர்களையும் இனப்படுகொலை செய்து நரவேட்டை நடத்தினார்கள்.

சிங்கள பௌத்த பேரினவாத ஆதிக்கத்தை – தமிழர்கள் மீது திணித்ததைப் போலவே, முசுலிம் மக்கள் மீதும் இராசபக்சே அரசு திணித்தது. இதனால் இம்மக்கள் இராசபக்சே தம்பிக்கு வாக்களிக்க மறுத்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இன்னொரு சிங்களக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர். ஆனால், கோத்தபய இராசபக்சே மிகப்பெருவாரியான வாக்குகள் பெற்றது எப்படி என்ற கேள்வி எழுகிறது!

இலங்கையில் தமிழர்கள் செயற்கையாகச் சிறுபான்மையாக்கப்பட்ட மக்கள் ஆவர். வரலாற்றில் தமிழர்களின் அரசு தனித்து அங்கு நடந்து வந்தது. ஐரோப்பிய வணிக வேட்டைக் கொள்ளைக் கம்பெனிகள் வேட்டையாட வந்தபொழுது, பீரங்கிகளால் தமிழின அரசை வீழ்த்தி சிங்கள அரசையும் வீழ்த்தி ஒரே நிர்வாகக் கட்டமைப்பாக இலங்கையை உருவாக்கினார்கள். அதில் ஆங்கிலேய அரசு கோலோச்சியது. இதனால், செயற்கையாக சிறுபான்மையாக்கப்பட்ட தமிழர்கள் எந்தக் காலத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் வழியாக தம் மொழியை – பண்பாட்டை – தாயகப் பரப்பை பாதுகாத்துக் கொள்ளும் அரசு அதிகாரத்தை பெறவே முடியாத நிலை ஏற்பட்டது.

இலங்கை மக்கள் தொகையில் வடக்கு கிழக்கு மாநிலங்களில் உள்ள “சிறுபான்மை” மக்கள் எண்ணிக்கை 30 விழுக்காடு. மற்ற சிங்கள மாநிலங்களி்ல் சிங்களரின் மக்கள் தொகை 70 விழுக்காடு.

காலனி வேட்டையாடிகளாலும், பெருந்தேசிய இன ஆக்கிரமிப்பாளர்களாலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடுகளில் செயற்கையாக சிறுபான்மையாகிப் போன மக்களின் உரிமையை அந்நாடுகளில் நடைபெறும் தேர்தல் வாக்குரிமை மூலம் அடைந்துவிட முடியாது என்பதற்கு, இப்பொழுது நடந்துள்ள இலங்கைத் தேர்தல் மற்றுமொரு எடுத்துக்காட்டு!

“பெரும்பான்மையினரின் முடிவை செயல்படுத்துவது” என்ற சனநாயகக் கோட்பாட்டை பல்வேறு இனங்களைக் கொண்ட நாடுகளில் ஒற்றைப் பொருளில் பயன்படுத்தினால், ஒப்பீட்டளவில் சிறுபான்மையாக உள்ள இனங்கள் நிரந்தர அடிமைகளாக வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.

ஏற்கெனவே, பிரித்தானியாவில் (U.K) சிக்கிக் கொண்டுள்ள ஐரிஷ் (அயர்லாந்து), ஸ்காட்டிஷ் (ஸ்காட்லாந்து) தேசிய இனங்கள் தங்களின் மொழி மற்றும் இன உரிமைகளைப் பாதுகாக்க நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல் மூலம் வழியில்லை என்ற முடிவுக்கு வந்து தனிநாடு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் ஒப்பீட்டளவில் மிகச்சிறந்த சனநாயகம் உள்ள நாடாகக் கருதப்படும் பிரித்தானியாவிலேயே இந்த இனப்பாகுபாடு நடந்து கொண்டுள்ளது.

இதேபோல்தான், ஸ்பெயினில் சிக்கிக் கொண்ட “சிறுபான்மை” தேசிய இனங்கள் விடுதலைக்குப் போராடுகின்றன. சோவியத் ஒன்றியத்தில் இரசியப் பேரினவாதத்தின் ஆதிக்கம் தாங்க முடியாத “சிறுபான்மை” தேசிய இனங்கள் பிரிந்து தனிநாடு அமைத்துக் கொண்டன.

அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதால், “சிறுபான்மை” தேசிய இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று எந்த நாட்டிலும் நம்ப முடியாது. இந்தியாவிலும் அப்படித்தான்!

இந்த உண்மைக்கான இன்றைய எடுத்துக்காட்டுதான், ஒட்டுமொத்த தமிழர்களும், தமிழ் பேசும் முசுலிம்களும் கோத்தபய இராசபக்சேவுக்கு எதிராக வாக்களித்தும், அந்த வாக்குகள் வலிமையற்றவை – அந்தத் தேர்தல் வெறும் சடங்கு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

இலங்கை நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. நாணய மதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம் மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. ஊழல் மலிந்துள்ளது. இவையெல்லாவற்றுக்கும் இராசபக்சே கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் காரணங்களாக இருக்கின்றன.

போர் வெறி கொண்டு, இலங்கையின் கருவூலத்தைக் காலி செய்தவர், இராசபக்சே! அவருடைய கட்சியை சிங்கள மக்கள் பெருமளவு தேர்வு செய்திருக்கிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்? தமிழர்களையும், முசுலிம்களையும் கடுமையாக ஒடுக்குவதில் – அழிப்பதில் முதல் பரிசு பெற வேண்டியது இராசபக்சே குடும்பம் என்ற சிங்களப் பேரினவாத உணர்வு பெரும்பாலான சிங்கள மக்களிடம் இருப்பதுதான் இத்தேர்வுக்குக் காரணம்!

வெற்றி பெற்ற உடனேயே கோத்தபய இராசபக்சே, “எனக்கு வாக்காளிக்காதவர்களும் என் பக்கம் வாருங்கள், உங்களுக்கும் நான்தான் குடியரசுத் தலைவர். ஒரே இலங்கையை உருவாக்க வேண்டும்” என்று மிரட்டல் பாணியில் கோரிக்கை வைத்துள்ளார். சிங்கள பௌத்த இன ஆதிக்கத்தை – மொழி ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு, முழுமையான சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கு, சிறுபான்மையினரே மரியாதையாக என்னோடு வாருங்கள் என்ற இராணுவ அழைப்புதான் கோத்தபய விடுத்துள்ள அந்த அழைப்பு!

கோத்தபய இராசபக்சே ஒரே நாடு முழக்கத்தை நரேந்திர மோடியிடமிருந்து எடுத்துக் கொண்டாரா என்ற ஐயப்பாடு எழுகிறது.

வடக்கு - கிழக்கு மாநிலங்களில் மிகத் தீவிரமாக சிங்களக் குடியேற்றங்கள் நடக்கும் அபாயமிருக்கிறது. வடக்கு கிழக்கு மாநிலப் பகுதிகளில் மணலாறு என்ற தமிழர் பகுதியில் இருந்த தமிழர்களை 1984 வாக்கில் இராணுவத்தை வைத்து வெளியேற்றிவிட்டு, வலுவந்தமாக சிங்களக் குடியேற்றங்களை இலங்கை அரசு கொண்டு வந்தது அன்று வலுவந்தமாக 18 கிராமங்களில் சிங்கள அரசு சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டு வந்தது. இன்றைக்கு அங்கு சிங்களக் குடியேற்ற கிராமங்களின் எண்ணிக்கை சற்றொப்ப நூறு!

மணலாறு என்ற தமிழ்ப் பெயரை “வெலிஓயா” என்று சிங்களத்தில் மாற்றிவிட்டார்கள். ஏராளமான தமிழ் கிராமங்களின் பெயர்களையும் சிங்களத்தில் மாற்றிவிட்டார்கள். அப்பகுதியின் 90 விழுக்காட்டிற்கு மேல் கோத்தபய இராசபக்சேவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. இதே பாணி சிங்களக் குடியேற்றங்களைத்தான், இன்றைக்குள்ள வடக்கு - கிழக்கு தமிழர் மாநிலங்களில் வலுக் கட்டாயமாகக் கொண்டு வரப் போகிறது, கோத்தபய ஆட்சி! ஏற்கெனவே, இந்துக் கோயில்களை பௌத்த கோயில்களாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். அப்போக்கு இன்னும் தீவிரப்படும்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கையில் நடந்த தேர்தல் முடிவுகளிலிருந்து மேற்கண்ட பாடங்களைப் படிக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் இப்படித்தான் குடியேற்றங்களும், தமிழர் ஆன்மிகத்திற்குப் புறம்பான வடஇந்திய ஆன்மிகத் திணிப்பும் நடந்து கொண்டுள்ளன.

வாக்குரிமை மூலம் இலங்கையில் தமிழர்கள் தங்களின் தாயகப் பகுதிகளையும் இன உரிமைகளையும் இன அடையாளங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லும்போது, இதற்கு மாற்று ஆயுதப்போர் என்று கருத வேண்டாம்!

இப்போதைய நிலையில், ஒட்டுமொத்த தமிழர்கள் ஒருங்கிணைந்து சனநாயக வழிப்பட்ட போராட்டங்களை நடத்தி சிங்களப் பேரினவாத அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, உலகக் கவனத்தை ஈர்த்து உரிமைகளைப் பெற முயல வேண்டும். அதற்கான முதல் தேவை – சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்களுக்கு அப்பால் உண்மையான தமிழின உரிமையில் அக்கறையும் ஒப்புக் கொடுப்பும் கொண்டு, மக்களைத் திரட்டி சனநாயக வழியில் உரிமைப் போராட்டங்கள் நடத்தும் தலைமை தமிழீழத்தில் உருவாக வேண்டும். தமிழினத்தைச் சேர்ந்த இளம் ஆண்களும், பெண்களும் இதுபற்றி சிந்தித்து சரியான முடிவுக்கு வந்து கூட்டுப் போராட்டங்களை நடத்த வேண்டும்.

இவ்வாறான ஒருங்கிணைந்த மக்கள் திரள் உரிமைப் போராட்டங்கள் தமிழீழத்தில் நடக்கும்போது, தாய்த் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு ஆதரவு நல்க வேண்டும். இங்கு சொல்லப்பட்ட படிப்பினைகள், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பொருந்தும்!

கோத்தபய அரசு சீனாவுக்கு ஆதரவாக இருக்கும். அதனால், இந்திய அரசு இலங்கைக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் என்று நம்மில் சிலர் கதைக்கத் தொடங்குவார்கள். இந்த கதைப்புகளை நம்ப வேண்டாம். கடந்தகால படிப்பினைகள் நமக்கு உணர்த்துவது, எதிர்க்க வேண்டியது சீனர்களையா – தமிழர்களையா என்று முரண்பாடு வந்தால், தமிழர்களைத்தான் எதிர்ப்போம் என்று இந்திய அரசு நிலைபாடு எடுக்கும் என்பதுதான்! எனவே, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் உத்திகளைச் சொல்லும் “சிந்தனைச் சிற்பி”களின் ஆசை வார்த்தைகளில் தமிழர்கள் பலியாகக் கூடாது என்ற படிப்பினையும் பெற வேண்டும். உரிமை மீட்பிற்கான வழி மக்கள் திரள் எழுச்சியே!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, November 17, 2019

பழங்குடி மக்கள் போராட்டத்திற்கு இந்திய அரசு பணிந்தது! - கொடிய வனச்சட்ட வரைவு -2019ஐ திரும்பப் பெற்றது! கி. வெங்கட்ராமன் அறிக்கை!



பழங்குடி மக்கள் போராட்டத்திற்கு

இந்திய அரசு பணிந்தது! - கொடிய வனச்சட்ட

வரைவு -2019ஐ திரும்பப் பெற்றது!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


மலையகத்திலிருந்தும், காடுகளிலிருந்தும் பழங்குடியின மக்களை வெளியேற்றிவிட்டு இந்தியா முழுவதுமுள்ள வனங்களை பெருங்குழுமங்களின் வேட்டைக்குத் திறந்துவிடும் நோக்கில், இந்திய அரசு “இந்திய வனச் சட்ட வரைவு – 2019” – என்பதை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது.

கோடிக்கணக்கான ஆதிவாசிகளையும், மலையக மக்களையும் அவர்களது வரலாற்றுத் தாயகத்திலிருந்து வெளியேற்றும் இக்கொடிய வரைவுச் சட்டத்தை எதிர்த்து, இந்தியாவின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

தமிழ்நாட்டில் ஆதிவாசிகளின் தாயகப் பாதுகாப்புப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்து வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கம், இச்சட்டத்தை எதிர்த்தப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு பெற்றது. திருநெல்வேலி மாவட்டம் – வாசுதேவநல்லூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வழிகாட்டுதலில் இயங்கும் “ஆதிவாசிகள் விடுதலை முன்னணி” சார்பில், இச்சட்ட வரைவை எதிர்த்து இரண்டு முறை பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆதிவாசிகள் விடுதலை முன்னணித் தலைவரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினருமான தோழர் க. பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதிவாசிகளின் உரிமைகளை ஆதரித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும், மகளிர் ஆயம் தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

அடுத்த கட்டமாக தமிழ்நாடு ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் நடைபெற்ற கலந்துரையாடலில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் இந்த வரைவுச் சட்டத்தின் கொடும் தன்மைகளை விளக்கி முதன்மை உரையாற்றினார். அக்கலந்துரையாடலில், 2019 – இந்திய வனச்சட்ட வரைவை திரும்பப் பெற வலியுறுத்தி செங்கல்பட்டு தொடங்கி கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்து, பல மாவட்டங்களில் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அடுத்தகட்டமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரையும், மலையக மக்களையும் ஒன்றுதிரட்டி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்தப் பின்னணியில், இந்திய அரசின் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தில்லியில் இன்று (16.11.2019) செய்தியாளர்களை சந்தித்து, இந்த வரைவு வனச்சட்டம் – 2019 முற்றிலும் திரும்பப் பெறப் படுவதாக அறிவித்தார்.

விரைவில், பெரும்பான்மையான பழங்குடி மக்களை வாக்காளர்களாகக் கொண்ட சார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதைக் கருத்தில் கொண்டுகூட இந்த அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டிருக்கலாம். எப்படி இருப்பினும் ஆதிவாசிகளின் தொடர்ந்த தாயக உரிமைப் போராட்டத்திற்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி இது! இச்சட்ட வரைவை திரும்பப் பெற்றதை அதிகாரப்பூர்வமாக இந்திய அரசின் அரசிதழில் இந்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, November 15, 2019

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு : சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா? கி. வெங்கட்ராமன் அறிக்கை!


தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை
தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு :

சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா?


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!



தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதையும், பிற ஆற்று நீர்த் தடுப்புத் திட்டங்கள் செயல்படுத்துவதையும் தடுத்து நிறுத்த இடைக்கால ஆணை பிறப்பிக்க முடியாது என இன்று (14.11.2019) உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, அதிர்ச்சியளிக்கிறது. சட்டத்தின் ஆட்சியும், நீதிமுறைமையும் தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடையாதா என்ற வினாவை எழுப்புகிறது!
கர்நாடக அரசு, தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான மார்க்கண்டேயா ஆற்றின் குறுக்கே கர்நாடக – தமிழ்நாடு எல்லைக்கு அருகே 9 கிலோ மீட்டர் தொலைவில், யார்கோல் கிராமத்தில் 500 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கும் கொள்ளளவு கொண்ட 414 மீட்டர் நீள அணையை ஏறத்தாழ 87 கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது.
மேலும், கோலாறு மாவட்டத்தின் மல்லூர் வட்டத்தில் 160 குளங்களை நிரப்பும் வகையிலும், எல்லமல்லப்பா குளத்தில் 284 மில்லியன் கன அடி தண்ணீரைத் தேக்கும் வகையிலும், வரத்தூர் குளம் முதல் நரசப்பூர் குளம் வரை பல்வேறு குளங்களுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்லும் வகையிலும் பெண்ணையாற்றிலிருந்து ஏறத்தாழ 8 அடி விட்டமுள்ள குழாய்களைப் பதித்து, இராட்சத நீறேற்றிகளைப் பயன்படுத்தித் தண்ணீர் உறிஞ்ச கர்நாடக அரசு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவையெல்லாம் நிறைவேறிவிட்டால், தென்பெண்ணை ஆற்றிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் வரத்து மிகப்பெருமளவுக்கு பாதிக்கப்படும். கிருட்டிணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட உழவர்களும், பொது மக்களும் பாசன நீரும், குடிநீருமின்றி மிகப்பெரும் அல்லலுக்கு ஆளாவார்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு இத்திட்டங்களைத் தடை செய்ய வேண்டுமென்று கோரி, கடந்த 18.05.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
அன்றைய மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்குமிடையே 1892ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, கர்நாடக அரசு அணைக் கட்டுகள், தடுப்பணைகள், பெருமளவு தண்ணீர் உறிஞ்சும் திட்டங்கள் ஆகிய எதற்கும் தமிழ்நாடு அரசின் முன் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், தமிழ்நாட்டுக்கு தகவல் கூட தெரிவிக்காமல் கர்நாடக அரசு பெருமளவிலான தண்ணீர்த் தடுப்புத் திட்டங்களை செயல்படுத்துவது மேற்சொன்ன ஒப்பந்தத்திற்கு எதிரானது என்பதால், உச்ச நீதிமன்றம் இத்திட்டங்களை சட்ட விரோதமான திட்டங்கள் என அறிவித்துத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், உடனடியாக அத்திட்டங்களை மேற்கொண்டு செயல்படுத்துவதற்கு இடைக்காலத் தடையாணை வழங்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.
இவ்வழக்கில் ஒரு எதிர்வாதியாக உள்ள இந்திய அரசு, கர்நாடகத்தின் இந்த சட்ட விரோதச் செயலுக்கு முழு ஆதரவு அளித்து மனுத்தாக்கல் செய்தது.
தமிழ்நாடு அரசு கர்நாடகத்தின் இந்த அணைக்கட்டு மற்றும் நீர்த்தடுப்புத் திட்டங்களுக்கு எதிராக இந்திய அரசு தலையிட்டு ஆவனசெய்ய வேண்டுமென்று கோரிக்கைக் கடிதம் எழுதியது உண்மைதான் என்றாலும், அது “மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் – 1956”-இன்படி முறையான படிவத்தில் வரவில்லை என்றும், இச்சட்டத்தின்படி ஒரு தீர்ப்பாயம் அமைக்குமாறு தெளிவான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்றும் கூறி தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தது.
அதுமட்டுமின்றி, தென்பெண்ணையாறு குறித்து கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே 1933இல் செய்து கொள்ளப்பட்ட துணை ஒப்பந்தமானது, கர்நாடகம் குடி தண்ணீர் தேவைக்காக அணை கட்டிக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசின் முன் ஒப்புதல் தேவையில்லை என்று கூறுகிறது. கர்நாடக அரசு தான் மேற்கொள்ளும் இத்திட்டங்களெல்லாம் குடி தண்ணீர் தேவைக்காகத்தான் என்று வரையறுத்திருக்கிறது. எனவே, இத்திட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறியது.
அதற்கு மேலும் சென்று, காவிரி வழக்கின் இறுதிக் கட்டத்தில் சொன்னதுபோல இச்சிக்கலில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்ற பழைய வாதத்தையும் முன்வைத்தது.
“மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் – 1956”- பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு மாற்றமடைந்துள்ள இன்றைய நிலையில் மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ப் பகிர்வுச் சிக்கலை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு முழு அதிகாரமுண்டு என்று 2016 திசம்பரில் அரசமைப்பு ஆயத் தீர்ப்பின் வழியாக தெளிவாகக் கூறிவிட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கு தென்பெண்ணை ஆற்று வழக்கை விசாரிக்க அதிகாரமில்லை என்ற தோற்றுப்போன பழைய வாதத்தையே மீண்டும் இந்திய அரசு முன்வைக்கிறது.
கர்நாடக அரசு, தனது “நீராவாரி நிகாம்” வழியாக காவிரியின் குறுக்கே புதிய அணைக்கட்டுகளேயோ, காவிரி நீரைத் திருடி குளங்களில் சேமிப்பதையோ குடி தண்ணீர் திட்டம் என்று சொல்லித்தான் நிலைநாட்ட முனைந்திருக்கிறது. குடி தண்ணீர் தேவைக்காக என்று சொல்லி, தொழிற்சாலைகளுக்கும், பணப்பயிர் சாகுபடிக்கும் நீரைத் திருடிச் செல்வதை கர்நாடகம் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இது இந்திய அரசின் ஒத்துழைப்புடனேயே நடக்கிறது!
இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றுக்குத் தனியாக ஒரு தீர்ப்பாயம் கோரவில்லை என்ற ஒரு வலுவில்லாத காரணத்தைக் காட்டி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் மேற்கொள்ளும் அடாவடித் திட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை போட முன்வராதது இயற்கை நீதிக்கு எதிரானது!
“தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் இதுகுறித்து தீர்ப்பாயம் அமைக்குமாறு நான்கு வாரங்களுக்குள் கடிதம் அனுப்பலாம்” என அறிவுரை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், அந்த நான்கு வாரத்திற்குக் கூட கர்நாடகத்திற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முன்வரவில்லை! மாறாக, இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய தமிழ்நாடு அரசின் இடைக்கால மனுவை (I.A. No. 95384 of 2019) தள்ளுபடி செய்திருப்பது சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லை போலும் என்ற ஐயத்தையே எழுப்புகிறது!
முல்லைப் பெரியாறு வழக்கை முன் எடுத்துக்காட்டாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு இச்சிக்கலை விசாரிக்க அரசமைப்பு ஆயம் கோரியும், அதுவரை கர்நாடகத் திட்டங்களுக்கு இடைக்காலத் தடை கோரியும் உடனடியாக புதிய மனு ஒன்றை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, தென்பெண்ணை ஆற்றின் உரிமையை நிலைநாட்ட விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, November 14, 2019

அம்மாவின் இறப்பும் அடைக்க முடியாத நன்றிக் கடனும் பெ. மணியரசன்



அம்மாவின் இறப்பும்
அடைக்க முடியாத நன்றிக் கடனும்

பெ. மணியரசன்
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


என் அன்னை பார்வதியம்மாள் கடந்த தி.பி. 2050 – ஐப்பசி 25 (11.11.2019) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு 92 அகவை இருக்கலாம்.
எத்தனை அகவை ஆனால் என்ன, தாயார், தந்தையார் இறப்பு என்பது எல்லோருக்கும் பேரிழப்புதான்! பற்று துறந்த பட்டினத்தடிகளே, அவரின் தாயார் காலமானபோது, “அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே” என்று பாடிக் கலங்கினார்.
நேரில் வந்தும், தொலைப்பேசி வழியாகவும் சமூக வலைத்தளங்கள் வழியாகவும் எனக்கும் என் குடும்பத்தார்க்கும் ஆறுதல் சொன்ன பெருமக்களுக்கு நன்றி சொல்லவே இம்மடலை எழுதுகிறேன்.
என் அன்னையார் காலமான செய்தியை உள்நாட்டிலும், உலக நாடுகளிலும் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பெரியவர்களும், நம் பிள்ளைகளும், தோழர்களுமே! என் அன்னையார் காலமான சில மணி நேரத்திலேயே வெளிநாடுகளில் வாழும் நம் தமிழர்கள் அலைப்பேசியில் அழைத்து ஆறுதல் சொல்லத் தொடங்கினார்கள்!
அரசியல் கட்சிகளின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் நேரில் வந்தும், தொலைப்பேசியிலும் ஆறுதல் சொன்னார்கள். அதுபோல் தமிழ்த்தேசியத் தலைவர்கள், உழவர் இயக்கங்களின் தலைவர்கள், மக்கள் இயக்கங்களின் பொறுப்பாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், சான்றோர்கள், ஊடகவியலாளர்கள், முக்கியப் பொறுப்பாளர்கள், எங்கள் குடும்ப உறவினர்கள், ஊர்க்காரர்கள் என ஏராளமானோர் நேரில் வந்து எங்கள் துயரத்தில் பங்கு கொண்டார்கள்.
திராவிடம் – பெரியாரியம் ஆகியவற்றில் என்னோடு முரண்பாடு கொண்டுள்ள பெருமக்கள், தோழர்கள் ஆகியோர் நேரில் வந்தும், தொலைப்பேசி வழியாகவும் எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.
எனக்கும், என் குடும்பத்தினருக்கும் ஒரு வேலையின்றி என் அன்னையார் இறப்பிற்குப் பின் நல்லடக்கம் வரை அனைத்துப் பணிகளையும் செய்தோர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டப் பொறுப்பாளர்களும் தோழர்களும் – எங்கள் ஊர்க்காரர்களும் ஆவர்! தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், நாம் தமிழர் கட்சித் தோழர்கள், நேரில் வந்து துயரத்தில் பங்கு கொண்டார்கள். வர இயலாத தோழர்கள் தொலைப்பேசியில் ஆறுதல் கூறினார்கள்.
இவர்கள் அத்தனை பேர்க்கும் என் நெஞ்சு நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடைக்க முடியாத ஒரு கடன் நன்றிக்கடன்!
என் தந்தை பெரியசாமிக்கும், என் தாயார் பார்வதிக்கும், என்னை வளர்த்ததில் எனக்குக் கல்வி வாய்ப்பளித்ததில் முக்கியப் பங்காற்றிய என் அம்மாச்சி (அம்மாவின் தாயார்) மங்கலம் அம்மாள் அவர்கட்கும் நான் நன்றி செலுத்துவதில் கடன்பட்டவனாகவே இருக்கிறேன். என்னால் அவர்களுக்கு ஒரு நன்மையும் கிடையாது!
எங்கள் ஆச்சாம்பட்டியில் முதல் முதல் கல்லூரிக்குப் படிக்கப் போனதில் நான் இரண்டாவது ஆள். முதலில் சென்றவர் என் மாமா பெ. கோபால்! அவர் முயற்சியால்தான் திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பில் சேர்ந்தேன்.
திருச்சி தேசியக் கல்லூரியில் 1965-66இல் புகுமுக வகுப்பு (PUC) படித்த போது, தேர்வில் முதலில் தோற்றுப் பின்னர் தேர்ச்சி பெற்றேன். தேர்ச்சி பெற்று மறு ஆண்டு அதே தேசியக் கல்லூரியிலும், பூண்டி புட்பம் கல்லூரியிலும் இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பம் போட்டேன். இடம் கிடைக்கவில்லை. பின்னர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில், திருவாரூர் அருகே குருக்கத்தியில் இரண்டாண்டு படித்து, அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன்.
மார்க்சியப் புரட்சி ஈர்ப்பால் மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் 1972 முதல் செயல்பட்டேன். புரட்சி நடக்கப் போகிறது என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டேன்.
இந்திராகாந்தி அம்மையார் சனநாயக உரிமைகளைப் பறித்து – எதேச்சாதிகார நெருக்கடிநிலை அறிவித்தபோது, கட்சியில் ஒரு பகுதியினர் தலைமறைவாக இருந்து புரட்சிகரக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சி.பி.எம். தலைமை முடிவு செய்தது. தலைமறைவாகப் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்ட தோழர்களில் நானும் ஒருவன்.
பிடி ஆணை, பிடிக்கத் துரத்தும் காவல்துறை, தப்பித்துத் தப்பித்துத் தலைமறைவு வாழ்க்கை ஓராண்டு! அப்படித் தலைமறைவாக இருந்த போதுதான் எனக்கு இன்னொரு அம்மாவாகவும் விளங்கிய என் அம்மாச்சி மங்கலம் அம்மாள் காலமானார். அம்மாச்சியின் உடலைக் கட்டி அழுவதற்கோ, இறுதிச் சடங்கில் பங்கு பெறவோ எனக்கு வாய்ப்பில்லை, நான் தலைமறைவில்! துக்க வீட்டிலும் காவல்துறையினர்! சி.பி.எம். தோழர்கள்தாம் நான் செய்ய வேண்டிய கடமைகளையும் சேர்த்துச் செய்து, பெருங்கூட்டமாகச் சென்று என் அம்மாச்சிக்கான இறுதிச் சடங்குகளைச் செய்து எரியூட்டினார்கள்!
நான் கல்லூரிப் படிப்பை நிறுத்திய நிலையில், என் தந்தையார் காலமாகி விட்டார். எனவே அவர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஆற்ற முடியாத பருவம் அது!
வியட்நாம் விடுதலைப் புரட்சி போல், தமிழ்நாடு விடுதலைப் புரட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம்தான் சி.பி.எம். கட்சியில் செயல்பட்டபோதும் என் மனத்தில் இருந்தது. சி.பி.எம். கட்சியை விட்டு நானும் தோழர்களும் வெளியேறிய பின் புரட்சிகரத் தனிக்கட்சி அமைத்து செயல்பட்டபோது, தமிழ்த்தேசியக் கருத்தியலை சமூக அறிவியல்படி நாங்கள் வளர்த்தெடுத்தோம்.
தமிழ்த்தேசியப் புரட்சி ஆயுதப் போர் அன்று; அது மக்கள் எழுச்சி என்று வரையறுத்தோம். பணம் – பதவி – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சிய வீரர்களைக் கொண்ட பாசறையாகத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தை வளர்க்க முடிவு செய்து, அதற்கு எங்களை ஒப்படைத்துக் கொண்டோம்.
இதனால், என் தாயார், என் தம்பி ரெங்கராசு, என் தங்கை மணிமேகலை ஆகியோர்க்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகள் எதையும் செய்ய முடியவில்லை. நான் இளமையிலேயே வீட்டை விட்டு வெளியேறி புரட்சி அரசியலுக்கு வந்து விட்டதாலும், எங்கள் தந்தை நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போதே காலமானதாலும், என் தம்பி – தங்கை இருவரும் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை.
தந்தைக்கு அடுத்த நிலையில், என் குடும்பத்தினர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை என்னால் ஆற்ற முடியவில்லை.
தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த என் தாயாருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை என்னால் ஆற்ற முடியவில்லை.
என்னுடைய அம்மாச்சி குடும்பம் நில உடைமைக் குடும்பம். என் தாத்தா (அம்மாச்சியின் கணவர்) சப்பாணிமுத்து ஆச்சாம்பட்டி பட்டா மணியக்காரர் (கிராம முன்சீப்). தமிழறிஞர் உலக ஊழியன் அவர்கள் முயற்சியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பால பண்டிதம் படித்தார். என் தாத்தாவும் மற்ற பெரியவர்களும் எடுத்த முயற்சியால் 1937 வாக்கில் எங்கள் ஆச்சாம்பட்டியில் ஆங்கிலேயர் ஆட்சியில் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக் கூடம் தொடங்கப்பட்டது. அதில் என் தாயார் பார்வதி ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்.
என் தாயார் பெயர் பார்வதி என்றாலும், அவரை பாப்பு என்று அழைப்பார்கள். என்னை பாப்பு மகன் என்று அழைப்பார்கள். “பார்ப்பு” என்ற சொல்லிலிருந்து பாப்பு உருவானது. “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றுள் இளமை” – தொல்காப்பியம் (548). பறவைக் குஞ்சுகளை “பார்ப்பு” என்றும், “பிள்ளை” என்றும் அழைப்பது மரபு. அப்பெயர்களை செல்லமாகக் குழந்தைகளுக்கு வைத்தார்கள். “பார்ப்பு” என்பதுதான் “பாப்பா” என்றும், “பாப்பு” என்றும் ஆனது! ஆண் பிள்ளைகளுக்கும் பாப்பு என்று பெயர் வைப்பதுண்டு.
தாத்தா சப்பாணிமுத்து திருடர்கள் - சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்ததால், அவர்கள் அவரைக் கொலை செய்தனர். இதனால் என் அம்மா படிப்பு ஐந்தாம் வகுப்புடன் தடைபட்டது.
என் தந்தைவழி நிலமும், என் தாத்தா வழி கிடைத்த நிலமும் எங்கள் குடும்பத்திற்குப் போதுமானது. ஆனால் என் படிப்பிற்காக ஒரு பகுதி நிலங்கள் விற்கப்பட்டன.
என் தாத்தா – அம்மாச்சி வழியாக எங்களுக்கு வந்த பத்து ஏக்கர் நிலத்தில்தான் என் மகன் செந்தமிழன் “செம்மை வனம்” வைத்துள்ளார். எங்கள் அம்மாச்சி வழியாகக் கிடைத்த எங்கள் ஆச்சான் வயலில்தான் பார்வதியம்மாள் இறுதி உறக்கம் கொள்கிறார்! அதுவும், அம்மாச்சியின் நினைவாக என் மகளுக்கு மங்கலம் என்று பெயர் சூட்டினேன். நான்கு வயதுக் குழந்தையில் மூளை நரம்பியல் நோய் ஏற்பட்டு, மங்கலம் இறந்துவிட்டது. குழந்தை மங்கலத்தை அடக்கம் செய்த நினைவிடத்திற்கு அருகில்தான், அவள் அப்பாயி பார்வதியம்மாள் படுத்துள்ளார்.
எவ்வளவோ தந்த என் தாயாரை நான் உரியவாறு கவனிக்கவில்லையே என்ற குற்ற உணர்வும், கவலையும் எனக்குண்டு. என் தாயாரை எந்த நாளும் நான் புறக்கணித்ததில்லை. என் பொது இலட்சியத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டதால், என்னால் அவர்களை உரியவாறு பேணிட முடியாமற் போனது.
முதுமைக் காலத்தின் கடைசி ஆண்டுகளில் என் தங்கை மணிமேகலையும், அவர் மகள்களும்தான் என் அம்மாவை மிகச் சிறப்பாகப் பாதுகாத்தனர். என் மனைவி இலட்சுமி, தன் தாயைக் கவனித்ததைவிடப் பன்மடங்குக் கூடுதலாக தன் மாமியாரைக் கவனித்துக் கொண்டார். என் தம்பி ரெங்கராசும் அக்கறையோடு அம்மாவைக் கவனித்துக் கொண்டான்.
சி.பி.எம். கட்சியில் செயல்பட்ட போதும், இப்போது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் செயல்படும் போதும் எனது குடும்ப வாழ்வைக் கவனித்துக் கொண்டது இவ்விரு இயக்கங்களும்தான்! என் தாயாரின் இறுதிச் சடங்குகளுக்கான அனைத்துச் செலவுகளையும் பகிர்ந்து கொண்டோர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களே!
என்னால் அடைக்க முடியாத எனது நன்றிக்கடன் என் அம்மாவுக்கு மட்டுமல்ல, எங்கள் துயரத்தில் பங்கு கொண்ட உங்கள் அனைவருக்கும்தான்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



Sunday, November 10, 2019

அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது! பெ. மணியரசன் அறிக்கை!



அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்
தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


அரசியல் ஆக்கப்பட்ட ஆன்மிக வழக்கான அயோத்தி வழக்கில், இன்று (09.11.2019) – உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் வழங்கிய தீர்ப்பு, முற்றிலும் ஏமாற்றமளிக்கிறது.
சர்ச்சைக்குரிய 1,500 சதுர கெஜம் முழுவதும் இராமர் கோயிலுக்கு உரியது என்றும், அதற்கு அருகிலே உள்ள 67 ஏக்கர் திடலில் ஐந்து ஏக்கர் நிலத்தை இந்திய அரசு மசூதிக்காக ஒதுக்கித் தர வேண்டும் அல்லது அயோத்தி நகருக்குள் முசுலிம்கள் விரும்பும் ஒரு பகுதியில் 5 ஏக்கர் நிலம் மசூதிக்காக உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கித் தர வேண்டும், மூன்று மாதத்திற்குள் இராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை நடுவண் அரசு நிறுவ வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010இல், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரித்து, இந்துக்களுக்கு இரண்டு பங்கும், முசுலிம்களுக்கு ஒரு பங்கும் கொடுத்து அளித்த தீர்ப்பே நடுநிலை தவறியது என்று அப்போது பேசப்பட்டது. ஆனால், அலகாபாத் தீர்ப்பைவிட பின்தங்கியதாகவும், தரவுகளையும், சாட்சியங்களையும் முதன்மைப்படுத்தாமல் ஒருசார் மத நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டதாகவும் இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.
தீர்ப்புரையின் செயலாக்கப் பகுதியில் (முடிவுரையில்), 796ஆம் பத்தியில் “நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியாது” என்று சரியாகச் சொன்ன உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில் “நம்பிக்கையை”த்தான் கூடுதலாகக் கொண்டிருக்கிறது.
தீர்ப்பின் 798ஆம் பத்தியில் 1949 திசம்பர் 22 / 23 நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் இந்துக் கடவுளான இராமர் சிலையை வலுவந்தமாக வைத்தது குற்றச்செயல் என்று கூறும் இத்தீர்ப்பு, அந்த நாளிலிருந்து இந்துக்கள் அங்கு வழிபாடு நடத்தி வருகிறார்கள் என்றுகூறி, அதையொரு அனுபோகப் பாத்தியதையாகக் கருதுகிறது. அதேவேளை, அங்கு அதன்பிறகு முசுலிம்கள் வழிபாடு நடத்தவில்லை என்றும் தெரிவிக்கிறது. இந்த பதிவு (Observation) எதற்காகக் கூறப்படுகிறது?
“அனுபோகப் பாத்தியதை இல்லை” என்ற பொருளில்தான் கூறப்படுகிறது. அதேபோல், 1857க்கு முன் அந்தக் கட்டடத்தில் முசுலிம்கள் தொழுகை நடத்தினார்கள் என்பதற்கு சான்று இல்லை என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது. இந்துக்கள் 1857க்கு முன் அந்த இடத்தில் வழிபாடு நடத்தினார்களா, இல்லையா என்பது பற்றி இத்தீர்ப்பு எதுவும் கூறவில்லை! உண்மையில், இதற்கும் சான்றில்லை!
1934இல் மசூதிக்குள் அத்துமீறிய இந்துக்களில் ஒரு சாராரையும், 1949இல் மசூதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து இராமர் மற்றும் சீதை படிமங்கள் வைக்கப்பட்டதையும், 1992 திசம்பர் 6-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் சட்டத்தை மீறிய செயல் என்று கண்டிக்கும் இத்தீர்ப்பு, அவ்வாறான அத்துமீறல்களையே “இந்துக்களின் நம்பிக்கை”க்கான அழுத்தமாக எடுத்துக் கொள்கிறது. ஆனால், “நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கவில்லை, அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகிறோம்” என்று சொல்கின்ற இந்தத் தீர்ப்பு, ஐயத்திற்கு இடமின்றி எந்த வரலாற்றுத் தரவையும் அகழ்வாராய்ச்சித் தரவையும் சுட்டிக்காட்டவில்லை!
இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பற்றது என்றும், அனைத்து மக்களுக்கும் சமத்துவம் வழங்குகிறது என்றும், அதுவே நமது வழிகாட்டும் நெறி என்றும் புகழ்ந்து பேசும் தீர்ப்புரை – ஒரு சாரார் கூறும் மதநம்பிக்கை என்ற வாதத்தை மட்டுமே அடிச்சரடாகக் கொண்டு இத்தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது.
சொத்துரிமை குறித்த குடிமையியல் வழக்குதான் இது என்று சொல்லிக் கொள்ளும் இத்தீர்ப்பு, அதற்கான அடிப்படைச் சான்றுகள் இன்றி ஒரு தரப்புக்கு முழுசொத்துரிமையையும் வழங்கியிருக்கிறது. மத நம்பிக்கை அடிப்படையிலும், அரசதிகாரம் மற்றும் பெரும்பான்மை என்ற அளவுகோல் வைத்தும், இத்தீர்ப்பு வழங்கப்பட்டதா என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கு எழுவது இயல்பே!
ஏற்கெனவே மதுரா, ஆக்ரா போன்ற பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகள் இந்துக் கோயில்களை இடித்துக் கட்டப்பட்டது என்றும், அவற்றை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் ஆரிய இந்துத்துவா அமைப்புகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இப்போது வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இந்துத்துவா வகுப்புவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் அபாயமிருக்கிறது.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

பாரத ரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு! பெ. மணியரசன்



பாரத ரத்தினா

சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


விநாயக தாமோதர சாவர்க்கரின் “இந்துத்துவா”கொள்கை பக்தியினால் உருவானதன்று. வி.டி. சாவர்க்கர் பகுத்தறிவாளர்; அறிவியலுக்குப் புறம்பான பக்திக் கதைகளை, மூட நம்பிக்கைகளை ஏற்காதவர்!
பின்னர் எதற்காக, இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட “இந்துத்துவா”அரசியலை முன்னெடுத்தார்? இனக்கொள்கைக்காக; ஆரிய இனக் கொள்கைக்காக!
ஆரிய பிராமணமேலாதிக்கம் இந்து சமூகத்தில் நிலவ வேண்டும் என்பதற்காக! ஆரிய பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக உள்ள இசுலாமிர்களை எதிர்ப்பதற்காக! சாவர்க்கர் பிராமணர்.
சந்திரநாத் பாசு என்ற வங்காளியால் முதல் முதல் கட்டமைக்கப்பட்ட சொற்கோவை “இந்துத்துவா”என்கின்றனர் ஆய்வாளர்கள். அச்சொற்கோவையைத் தனது ஆரிய பிராமண மேலாதிக்கவாத அரசியலுக்கான தத்துவச் சொல் ஆக்கினார் சாவர்க்கர்.
இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் இந்துக் கடவுள்களை வழிபடும் கோடிக்கணக்கான பெரும்பான்மை மக்களை இந்துமத அடையாளத்தை முதன்மைப்படுத்தி ஈர்த்துக் கொள்ளும் வசதி “இந்துத்துவா”கோட்பாட்டில் இருக்கிறது. ஆரிய சாணக்கிய உத்திதான் சாவர்க்கரின் இந்துத்துவா உத்தி! அதில் இந்து பக்தி இல்லை!
அந்தமான் சிறையிலிருந்து 1921இல் விடுதலையாகி சொந்த மாநிலத்தில் (மராட்டியம்) இரத்தினகிரியில் வசித்தார். "இந்து மகாசபா" என்ற மதவாத அமைப்பில் சேர்ந்தார். 1923இல் தனது “இந்துத்துவா”நூலை வெளியிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925 இல் தொடங்கப்பட்டது. இது தனியாகவும் இந்து மகாசபா தனியாகவும் செயல்பட்டன.
சாவர்க்கர் புகழ் பரப்புவதேன்?
-----------------------------------------------
ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர்கள் தொடங்கிய “சனசங்கம்”என்ற அரசியல் கட்சியோ, அதன் மறு பிறப்பான பா.ச.க.வோ சாவர்க்கரை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. இந்திய ஆட்சியை 1998இல் பிடித்தபின் சாவர்க்கர் புகழ்பேசத் தொடங்கியது பா.ச.க.! சாவர்க்கர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் வானூர்தி நிலையத்திற்கு “வீரசாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்” என்று 2002இல் பா.ச.க. ஆட்சி பெயர் சூட்டியது.

பின்னர், சாவர்க்கரின் இந்துத்துவா கோட்பாட்டை பிரபலப்படுத்தினர் பா.ச.க.வினர். இப்பொழுது சாவர்க்கருக்குப் “பாரத இரத்தினா” விருது வழங்க வேண்டும் என்கிறார், பா.ச.க.வின் உள்துறை அமைச்சர் அமித்சா. இந்திய வரலாற்றை சாவர்க்கர் பார்வையில் புதிதாக எழுத வேண்டும் என்கிறார் அவர்.
பா.ச.க. சாவர்க்கர் பக்கம் அதிகமாகச் சாய்வதேன்? ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ அனுமான் முழக்கங்களும் வழிபாடும் மட்டுமே இந்துக்களை ஈர்க்கப் போதுமான தாக இல்லை.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இன அரசியல் முன்னுக்கு வருகிறது. மாநில கட்சிகள் அதிகமாகி விட்டன. இன அரசியலுக்கு ஈர்ப்பு அதிகம். இந்துத்துவா பேசும் சிவசேனை கூட மராத்திய இனப்பெருமை பேசுகிறது. “பசுமாட்டு வட்டாரம்”என்று அழைக்கப் படும் இந்தி மாநிலங்களுக்குத் தனித்தேசிய இனம் கூற முடியவில்லை. மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட போது மொழி - தேசிய இனம் ஆகியவற்றின்படி பெரும்பாலான மாநிலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பசுமாட்டு வட்டாரத்தில் உத்தரப்பிரதேசம் (வடக்கு மண்டலம்), மத்தியப் பிரதேசம் (நடு மண்டலம்) என்று திசையை அடையாள மாகக் கொண்டு மாநிலங்கள் உருவாக்கப் பட்டன.
இந்து மதம் என்பதையே ஓர் இனமாக சித்தரிக்க இந்துத்துவா என்ற சொற்கோவையைப் பயன்படுத்து கின்றன ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்.
இந்து என்பதை ஒரு தேசமாக - தேசிய இனமாக 1937 வாக்கில் பேசியவர் சாவர்க்கர்.
ஆமதாபாத்தில் 1937ஆம் ஆண்டு நடந்த இந்து மகா சபையின் 19ஆவது பேரவையில் தலைமை உரை ஆற்றிய போது சாவர்க்கர் பின்வருமாறு பேசினார் :
"இந்தியாவில் இரு தேசங்கள் அருகருகே வாழ் கின்றன. சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் பலர் இந்தியா ஏற்கனவே ஒரே தேசமாக உருக்கி ஓட்ட வைக்கப்பட்டது என்று கருதுகிறார்கள்; அல்லது அவ்வாறு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒட்ட வைக்க முடியும் என்று கருதுகிறார்கள். இவையெல்லாம் நல்ல நோக்கம் தான். ஆனால் இவையெல்லாம் சிந்தனையுள்ள நண்பர்களின் பொய்க் கனவுகள். அவர்கள் (நம்மைப் பார்த்து) வகுப்புவாத அமைப்புகள் என்கின்றனர். ஆனால் பருண்மையான உண்மை என்ன? அவர்கள் கூறும் வகுப்புவாதங்கள் என்பவை - இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையில் பல நூறு ஆண்டுகளாக வரலாறு வழங்கிய பண்பாடு - மதம் - தேசம் தொடர்பான பகைமை!
மகிழ்ச்சி அளிக்காத இந்த உண்மைகளை நாம் துணிச்சலாக சந்திக்க வேண்டும். இன்று இந்தியாவை ஒற்றைத் தன்மை உள்ள ஒரே உறுப்புகளைக் கொண்ட தேசம் என்று உணர முடியாது. முதன்மையாக இது இரண்டு தேசம் - இந்து தேசம், முஸ்லிம் தேசம்!
(V.D. Savarkar, Samagra Savarkar Wangmaya, Hindu Rashtra Darshan, Volume 6, Maharashtra prantik Hindu sabha, Poona 1963, page 296).
இந்தியாவை இரண்டு தேசம் என்று முதன் முதலில் பேசியது முஸ்லிம் லீக்கோ, முகமது அலி ஜின்னாவோ அல்ல - சாவர்க்கர் தான்! 1940இல்தான் முகம்மது அலி ஜின்னா இருதேசக் கோட்பாடு பேசுகிறார்.
மதம் வேறு இனம் வேறு
----------------------------------------
இந்து - முசுலிம் என்ற மத அடிப்படையில் இந்தியாவை இரு தேசங்களாகப் பார்த்தது சமூக அறிவியல்படி தவறு என்பதை வரலாறு மெய்ப்பித்து விட்டது. தேசிய இன அடிப்படையில் - பாக்கித்தானிலிருந்து வங்காள தேசம் பிரிந்து விட்டது. மேற்குப் பாக்கித்தானிலும் சிந்து மாநிலம், பக்தூன் மாநிலம் ஆகியவற்றில் தனிநாட்டுக் கோரிக்கை மக்கள் கோரிக்கையாக வளர்ந்துள்ளது.

இந்தியாவில் பஞ்சாப், அசாம், நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசிய இனங்கள் தனிநாடு கேட்டுப் போராடுகின்றன. வெளிப்படையாக விடுதலைப் போராட்டம் நடத்தாத மாநிலங்களில் கூட தெலுங்கு தேசம், மகாராட்டிரம் (பெருந்தேசம்), வங்காளிதேசம், கன்னடதேசம், தமிழ்நாடு (தமிழ்த்தேசம்) என்ற சொந்த தேசிய இன உணர்வுகள்தான் மேலோங்கி உள்ளன.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு, மராட்டிய மாநிலத்தில் மக்கள் தலைராக உள்ளவர் தேசியவாதக் காங்கிரசின் தலைவர் சரத்பவார். அவர் மராட்டிய மாநில முதலமைச்சராக இருந்தபோது கூட்டுறவுத் துறையில் ஊழல் செய்து விட்டார் என்று நடுவண் அரசின் அமலாக்கத்துறை, இப்போது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், அது தொடர்பாக பவாரை விசாரிக்கப் போவதாகவும் அறிவித்தது.
அச்செய்தி வெளியானவுடன், 25.09.2019 அன்று மும்பையில் சரத்பவார் செய்தியாளர்களைச் சந்தித்து, “வீரசிவாஜியின் சித்தாந்தத்தின் வழிவந்த மராத்தியன் எவனும் தில்லிக்குத் தலைவணங்க மாட்டான். நானே நேரில் மும்பை அமலாக்கத்துறை அலுவலகம் சென்று “என்னை விசாரியுங்கள்”என்று கேட்கப் போகிறேன்”என்றுகூறி, அவ்வாறு செல்லும் நாளையும் குறிப்பிட்டார். இச்செய்தி 26.09.2019 அன்று ஏடுகளில் வெளியானது. மறுநாளே (27.09.2019) மும்பை மாநகரக் காவல் ஆணையர் சரத்பவாரை அவரது வீட்டில் சந்தித்து அவ்வாறு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
சாவர்க்கர் பிறந்த மராட்டியத்தில்தான் சரத்பவார் பிறந்தார். அது ஆரிய மூளை; இது மண்ணின் மகன் மூளை! இது தில்லி வேறு - மராட்டியம் வேறு என்று இயற்கையாகச் சிந்திக்கிறது. தில்லியில் இப்போது இருப்பது மோடியின் இந்துத்துவா அரசுதான்! சரத்பவார் தாமும் இந்து என்பதால் தமது மராத்தி இனப் பெருமிதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.
சரத்பவார் ஊழல் செய்தாரா - இல்லையா என்பது குறித்து இங்கு விவாதம் செய்யவில்லை. இந்தியத் தேசியம் பேசுவோரிடையே உள்ள இயற்கையான இன முரண்பாடுகளை எடுத்துக்காட்டவே இந்த நிகழ்வு இங்கு சுட்டப்பட்டது.
இந்தியா ஒரு தேசமன்று - இருதேசமன்று - பல தேசங்களைக் கொண்ட துணைக் கண்டம்!
“பாரத ரத்தினா”
------------------------
வி.டி. சாவர்க்கருக்குப் பாரத ரத்தினா விருது வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்சா கோரிக்கை வைக்கிறார். சாவர்க்கரின் ஆய்வைப் பின்பற்றி இந்தியாவின் வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும் என்கிறார்.

அப்படி என்ன வரலாற்று ஆய்வை சாவர்க்கர் நிகழ்த்தி விட்டார்? வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் பட்டாளத்தில் இருந்த இந்து முசுலிம் வீரர்கள் இணைந்து, 1857-இல் உத்தரப்பிரதேச மண்டலத்தில் வெள்ளைப் படை அதிகாரிகளை எதிர்த்துப் ஆயுதப் போர் நடத்தினர். அதை ஆங்கிலேயர் சிப்பாயக் கலகம் என்றனர்; காலனி ஆதிக்க எதிர்ப்பாளர்கள் விடுதலைப் போர் என்றனர். இலண்டனில் வசித்த கம்யூனிசதத் தத்துவத் தலைவர் காரல் மார்க்ஸ் “சிப்பாய்க் கலகத்தை”19ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்றார்.
வெள்ளை அரசிடம் நான்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையான பிறகு இந்து மகாசபையில் சேர்ந்து இந்து மதவாதக் கட்டுரைகள் எழுதிய சாவர்க்கர் 20ஆம் நூற்றாண்டில் மேற்படி “சிப்பாய்க் கலகத்தை”இந்திய விடுதலைப் போர் என்று எழுதினாராம்! அந்த வரலாற்று அறிவின் வெளிச் சத்தில் இந்தியாவின் புதிய வரலாற்றை - இந்துத்துவா பரப்புரைக்கு ஏற்ப எழுத வேண்டும் என்கிறார் அமித்சா! இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று சிப்பாய்ப் புரட்சியை - முதல் முதலாகக் கண்டு பிடித்தவரே சாவர்க்கர் தாம் என்பது போல் அமித்சா அளக்கிறார்.
ஆங்கிலேயர் ஆக்கியவை
-----------------------------------------
இந்தியா, இந்து மதம் என்பவையெல்லாம் வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய பெயர்கள்! இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா என்ற பெயரிலோ, பாரதம் என்ற பெயரிலோ ஒரு நாடு இருந்ததே இல்லை. நூற்ற மைப்பது ஆண்டுகளுக்கு முன் இந்து மதம் என்ற பெயரில் ஒரு மதமும் இருந்ததில்லை.

இந்தியா என்ற பெயரில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பு - ஒரு நாடு - பிரித்தானியப் பீரங்கிகளின் வல்லுறவால் பிறந்தது. பெற்றவர்கள்தாம் தங்கள் பிள்ளைக்கு இந்தியா என்று பெயர்ச் சூட்டினார்கள். இந்த நிலப்பரப்பில் தனித்தனியே ஆட்சி நடத்திய பல்வேறு இனங்களைச் சேர்ந்த அரசர்களையும் படைத் தலைவர்களையும் வீரர்களையும் சுட்டுக் கொன்றும் தூக்கிலிட்டுக் கொன்றும் அவர்களின் புதைகுழிகளின் மேல் இந்தியா என்ற பெயரில் புதிய ஆட்சியை நிறுவினர். சிந்து ஆற்றை அடையாளமாக வைத்து மேற்கத்திய வணிகர்கள் உருவாக்கிய இந்தியா என்ற பெயரை அந்த நாட்டிற்குச் சூட்டினர்.
இந்திய மொழி எதிலும் அதற்கு முன் இந்தியா என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. புராணக் கதை ஒன்று, சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் பிறந்த பரதன் என்பவன் அரசனாகி, வடநாட்டில் ஒரு பகுதியை ஆண்டான் என்று கூறுகிறது. அந்தப் “பரதன்”ஆட்சிக்கும் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஓர் ஆற்றில், ஒரு துறையில் குளித்த தொடர்பு கூட (ஸ்நானப் பிராப்தி கூட) கிடையாது. தமிழர்களைப் போன்றே பல்வேறு இனத்தவர்களுக்கும் அந்தப் பரதனுடன் எந்தத் தொடர்பும் கிடையாது.
ஆணாகிய அந்தப் பரதனைத்தான் பெண்ணாக மாற்றி அனைத்திந்திய வலதுசாரிகளும், இடதுசாரிகளும் “பாரத மாதா”பசனை பாடுகின்றனர்! இதில் காவியும் சிவப்பும் அண்ணன் தம்பிகள்! அக்காள் தங்கைகள்!
இந்து மதம்
------------------
இந்து மதத்தைத் தோற்றுவித்த ஒரு குரு யாரும் இல்லை. இந்து மதத்திற்கென்று தலைமை பீடம் எங்கும் இல்லை. பல்வேறு சமயப் பிரிவுகளின தொகுப்பின் பெயர் இந்து மதம். கடவுள் உண்டு என்பவரும், இல்லை என்பவரும் சம உரிமையோடு இந்து மதத்தில் இருக்கலாம். கடவுள் மறுப்புக் கோட்பாடான உலகாய்தம் இந்து மதக் கோட்பாடுகளில் ஒன்றுதான்!

ஆரிய பிராமணர்கள் உருவாக்கிய வர்ணாசிரமம் - சாதிப் பிரிவுகள் - சாதி ஆதிக்கம் போன்றவை இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகள் என்று கூறும் இந்து மத மூல நூல் எதுவும் தமிழில் இல்லை. பகவத் கீதை என்பது கிறித்துவர்களுக்கு பைபிள் போல - இசுலாமியர்களுக்குக் குரான் போல இந்துக்களின் தவிர்க்க முடியாத தலைமை நூல் அன்று. தமிழ்ச் சைவர்கள் பகவத் கீதையை ஏற்க மாட்டார்கள். தமிழ் வைணவர்களும் பகவத் கீதையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. தமிழ் வைணவர் களுக்கு ஆழ்வார்கள் பாசுரங்கள்தாம் இன்றியமை யாதவை! தமிழ் வைணவர்களின் கடவுள் பெருமாள் - திருமால்!
பகவத் கீதையை வியாசர் எழுதவில்லை; கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் ஆரிய பிராமண ஆதிக்க வாதிகளால் எழுதப்பட்டு அது மகாபாரதத்தில் இடைச் செருகலாக சேர்க்கப்பட்டது என்று இராகுல சாங்கிருத்தியாயன் உள்ளிட்ட பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கிறித்துவம், இசுலாம் என்பவை மதத்தின் பெயரே தவிர, இனத்தின் பெயர் அன்று. அதேபோல், இந்து என்பது மதத்தின் பெயரே தவிர, இனத்தின் பெயர் அன்று; தேசத்தின் பெயர் அன்று!
ஆரிய பிராமண ஆதிக்கவாதிகள் மெய்யான கடவுள் நம்பிக்கையாளர்கள் அல்லர்! அவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்கும் தங்களின் பொருள் சுரண்டலுக்கும் கடவுளைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்! கடவுளைப் பயன்படுத்தித் தூக்கி எறியும் ஆதிக்க வெறியர்கள்! நுகர்வு வெறியர்கள்! எந்த மோசடிக்கும் அஞ்சாதவர்கள்!
மதம் என்பது மொழி கடந்து, இனம் கடந்து, நாடு கடந்து பரவும் ஒரு கருத்தியல் தத்துவம்! அப்படித்தான் பௌத்தம், கிறித்துவம், இசுலாம் போன்ற மதங்கள் பல நாடுகளில் பரவியுள்ளன. இந்துக் கடவுள்களை - வர்ணசாதி சிறைக்குள் அடைத்தவர்கள் ஆரிய பிராமண மேலாதிக்கவாதிகள்! இந்து மதம் மற்ற மொழி - இன - நாட்டு மக்களிடம் பரவாமல் முள்வேலி போட்டு தடுத்தவை ஆரிய பிராமணியத்தின் கர்ம - தர்ம - தண்ட கோட்பாடுகள்!
எதையெடுத்தாலும் உலகு, உலகம் என்று நீதி நெறிகள் சொன்ன தமிழர்களின் ஆசீவகம், சிவநெறி, திருமால் நெறி ஆகியவை வெளியில் பரவாமல் தடுத்தது - ஆரிய பிராமண வேதமத ஆக்கிரமிப்பு!
பிறப்பு அடிப்படையில் சாதிப் புனிதம் - சாதி உயர்வு - சாதித் தீண்டாமை - சாதி இழிவு ஆகியவற்றைக் கற்பித்து நிலைநாட்டிய ஆரிய - பிராமண வர்ணசாதிக் கோட்பாடுகளின் ஆன்மிக - அரசியல் பெயர்தான் சாவர்க்கரின் இந்துத்துவா! இந்துக்களின் புனிதக் கனவான்களாக - மண்ணுலகக் கடவுள்களாக (பூசுரர்களாக)ப் பிராமணர்களைக் கற்பித்து அவர்களின் எசமானத்து வத்தை நிரந்தரப்படுத்துவதுதான் சாவர்க்கரின் - ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. பரிவாரங்களின் இந்துத் துவா அரசியல்!
வீரசாவர்க்கரின் ‘வீரம்’
------------------------------------
இலண்டனில் படிக்கும்போது ஒரு வெள்ளை அதிகாரியைத் தாக்கிய வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட வி.டி. சாவர்க்கரை இந்தியாவுக்குக் கப்பலில் அழைத்து வரும்போது, வழியில் பிரஞ்சுத் துறைமுகத்தில் கப்பலில் இருந்து தப்பித்தார் சாவர்க்கர். பிரஞ்சு அதிகாரிகள் அவரைத் தளைப்படுத்தி ஆங்கிலேய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அந்தமான் சிறையில் 1911-இல் அடைக்கப்பட்டார் சாவர்க்கர். அவர் 30.08.1911 அன்று சிறை அதிகாரிகளுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி, கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்யும்படியும், விடுதலை செய்தால் வெள்ளைக்கார அரசுக்கு விசுவாசமாக நடந்து கொள் வேன், அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதி அளித்தார். வெள்ளை அரசு அவரின் கருணை மனுவை ஏற்க மறுத்தது.
அதன்பிறகு 14.11.1913இல் இரண்டாவது மன்னிப்புக் கடிதம் எழுதினார். “ஊதாரியாக ஊர் சுற்றிவிட்டுத் திரும்பிய மகனைப் போல் (Prodigal) என் பெற்றோராகிய அரசின் கதவைத் தட்டுகிறேன்”என்று அக்கடிதத்தில் கூறியிருந்தார். “என்னை விடுவித்தால், இந்திய மக்கள் பலரிடம் பிரித்தானிய ஆட்சி மீது நம்பிக்கை உருவாகும்”என்றும் எழுதியிருந்தார். இந்த மன்னிப்புக் கடிதத்தை ஏற்க மறுத்தது பிரித்தானிய அரசு.
மூன்றாவது மன்னிப்புக் கடிதத்தை 1917ஆம் ஆண்டு எழுதி அனுப்பினார் “வீர”சாவர்க்கர்! அக்கடிதத்தையும் ஏற்க மறுத்தது ஆங்கிலேய ஆட்சி. நான்காவது கருணை மனுவை 30.03.1920 அன்று பிரித்தானிய ஆட்சியாளர் களுக்கு அனுப்பினார் சாவர்க்கர். வழக்கம்போல் தனது கடந்தகால அரசியல் நடவடிக்கைகளுக்காக வருத்தம் தெரிவித்தும், அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறியிருந்தார்.
திலகர், காந்தி, பட்டேல் போன்ற தலைவர்கள் சாவர்க்கர் உள்ளிட்ட அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி வந்தனர்.
இந்நிலையில், நான்காவது மன்னிப்புக் கடிதத்தை ஏற்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் சாவர்க்கரை விடுதலை செய்தனர். காந்தியை சுட்டுக் கொல்வதற்கு நாதுராம் கோட்சேயைத் தயார்ப்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டில் 1949-இல் சிறைப்படுத்தப்பட்டார் சாவர்க்கர். ஐயமறக் குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை என்று கூறி - சாவர்க்கரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இப்போது சாவர்க்கரின் இந்துத்துவாவை ஏற்றுக் கொண்டோரில் பலர் கோட்சேயைத் தியாகி என்று கொண்டாடுகிறார்கள்! காந்தி நினைவு நாளில் காந்தி பொம்மையைச் செய்து துப்பாக்கியால் சுடுகிறார்கள்.
பா.ச.க. ஆட்சி சாவர்க்கருக்கு “பாரத ரத்தினா” விருது கொடுக்க முனைகிறது. அதை அடுத்து, “பாரத ரத்தினா”விருது கோட்சேவுக்குக் கிடைக்கலாம்!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2019 நவம்பர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது).

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT