உடனடிச்செய்திகள்
Showing posts with label நிகரன் விடைகள். Show all posts
Showing posts with label நிகரன் விடைகள். Show all posts

Sunday, March 31, 2019

மோடிக்கு முன்னோடி எதேச்சாதிகாரி இந்திரா காந்தி! தோழர் பெ. மணியரசன்

மோடிக்கு முன்னோடி எதேச்சாதிகாரி இந்திரா காந்தி! தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.
“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் (2019 ஏப்ரல்) வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் “மோடிக்கு முன்னோடி எதேச்சாதிகாரி இந்திரா காந்தி!” என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், இதழாசிரியருமான ஐயா பெ. மணியரசன் தெரிவித்துள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது :

“மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அதன் பிறகு இந்தியாவில் தேர்தலே நடக்காது என்றும், அந்த பாசிச அபாயத்தைத் தடுக்க இராகுல்காந்திக்கு வாக்களிக்க வேண்டும்; இந்த அபாய கட்டத்தில் ஈழத்தில் தமிழினப் படுகொலையில் பங்கு கொண்ட காங்கிரசு என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று தமிழின உணர்வாளர்கள் சிலர் கூறுகிறார்கள்.

இராகுல் காந்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் அவர் எதேச்சாதிகாரியாக மாற மாட்டார்; சனநாயகததைக் காப்பார்; முறையாகத் தேர்தல் நடத்துவார் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?

இராகுலின் பாட்டி இந்திரா காந்தி 1969இல் தலைமை அமைச்சராக இருந்தபோது, மொரார்சி தேசாய், எஸ்.கே. பாட்டீல், நிஜலிங்கப்பா, அதுல்யா கோஷ் போன்ற பிற்போக்காளர்களை எதிர்த்து முற்போக்குக் காங்கிரசு உருவாக்குகிறேன்; மன்னர் மானியம் ஒழிக்கிறேன்; வங்கிகளை அரசுடைமை ஆக்குகிறேன் என்று முழங்கி காங்கிரசைப் பிளந்து இந்திரா காங்கிரசை உருவாக்கினார். 1971 மக்களவைத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று தலைமை அமைச்சராகத் தொடர்ந்தார்.

அதே இந்திரா காந்திதான் 1975இல் எதேச்சாதி காரியாக மாறி அவசர நிலை பிறப்பித்து, சனநாயக உரிமைகளைப் பறித்தார். இலட்சக்கணக்கானோரை சிறைகளில் அடைத்தார். 1976இல் நடத்த வேண்டிய மக்களவைப் பொதுத் தேர்தலையும் நடத்தாமல் தள்ளி வைத்தார்.

அனைத்திந்திய அளவில் சி.பி.ஐ. கட்சியும், தமிழ் நாட்டளவில் அ.இ.அ.தி.மு.க.வும்தான் இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரத்தை ஆதரித்தன. அனைத்திந்திய அளவில் பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் மக்களும் இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போராடினர். இதனால் உலக நாடுகளின் அழுத்தமும் இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக வந்தது.

வென்று விடுவோம் என்ற நப்பாசையில் 1977இல் மக்களவைப் பொதுத்தேர்தல் நடத்தினார் இந்திரா காந்தி. அவருடைய கட்சியும் தோற்றது; அவரும் அவரின் அடாவடி மகன் சஞ்சய் காந்தியும் தோற்றனர். சனதாக் கட்சி என்ற கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது.

பாட்டியைப் போல் இராகுல் மாற மாட்டார் என்பதற்பு என்ன உறுதி? மோடியிடமிருந்தும், இராகுலிடமிருந்தும் வேறு யாரிடமிருந்தும் சனநாயகத்தைக் காப்பது கட்சிகள் மற்றும் மக்களின் கடமை ஆகும்!

அடுத்து, முகாமையான ஒரு கருத்து; எதிரி முன் வைக்கும் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்யும் நிலையில் இருப்பது சமூகப் பொறுப்பும் இல்லை; இலட்சிய அரசியலும் அன்று!

எதிரி முன்வைக்கும் இரு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்வது இருக்கின்ற சமூக நிலை (Status Quo) நீடிக்கவே பயன்படும். இப்படியான “தேர்வுக்கு” முடிவும் இருக்காது.

இலட்சியவாதிகள் தங்களின் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். போதிய மக்கள் ஆதரவில்லையெனில் பொறுமையாக மாற்றுக் கருத்துகளை விதைக்க வேண்டும். மக்களை ஈர்க்கப் புரிய வைக்கப் புதிய உத்திகளையும் போராட்டங்களையும் வகுக்க வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இழக்கக் கூடாது! ”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, March 30, 2019

தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் நடுநிலை தவறக் கூடாது! தோழர் பெ. மணியரசன்.

தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் நடுநிலை தவறக் கூடாது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.
“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் (2019 ஏப்ரல்) வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் சின்னங்கள் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாகுபாட்டுடன் செயல்படுவது குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், இதழாசிரியருமான ஐயா பெ. மணியரசன் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது :

“நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றிற்குத் தேர்தல் சின்னம் ஒதுக்கியதில் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட்டதாகத்தெரியவில்லை!

இந்திய ஆட்சியாளர்களின் தலையீடு தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் இருப்பது மோடி ஆட்சியில் அதிகரித்து விட்டது. காங்கிரசு ஆட்சியிலும் இந்தத்தலையீடு இருந்தது.

அரசமைப்புச் சட்டப்படி தன்னாட்சி பெற்றுள்ள நிறுவனங்களான உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் பொறுப்பு வகிப்போர்க்கு தற்சார்பும் தன்மான உணர்வும் கூடுதலாக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு நடுநிலையுடன் செயல்படும் ஆளுமையைப் பெற வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் அக்கட்சிகள் ஏற்கெனவே போட்டியிட்ட சின்னங்களை ஒதுக்குவதில் என்ன சிக்கல் உள்ளது? ஏன் இந்த இழுத்தடிப்பு?”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, March 29, 2019

பாரத மாதா கட்சிகளுக்கு – இந்தி, திராவிட மாதாக் கட்சிகளுக்கு – ஆங்கிலம். தோழர் பெ. மணியரசன்.

பாரத மாதா கட்சிகளுக்கு – இந்தி, திராவிட மாதாக் கட்சிகளுக்கு – ஆங்கிலம். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.
“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் (2019 ஏப்ரல்) வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் “தமிழ் ஆட்சி மொழி” குறித்த கேள்விக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், இதழாசிரியருமான ஐயா பெ. மணியரசன் விடை அளித்துள்ளார். அவ்வினாவும் விடையும் வருமாறு :

கேள்வி : தமிழை ஆட்சி மொழியாக்குவதாகப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டார்கள். பல்வேறு இயக்கங்கள் அதற்காகப் பல போராட்டங்கள்நடத்தின. இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. இனியாவது நடக்குமா? அல்லது இந்தியாவுக்குள் இருக்கும் வரை நடக்காதா? (காரைக்குடி கண்ணன்).

விடை : “ஆட்சி மொழி என்பதில் கல்வி மொழி, நீதிமன்ற மொழி அனைத்தும் அடக்கம்.

தமிழ்நாட்டில் நாம் எட்டுக் கோடிப் பேர் வாழ்கிறோம். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழர் தாயக மாகத் தமிழ்நாடு இருந்து வருகிறது. நம் தமிழ்மொழி உலகின் மூத்தசெம்மொழி. தனி அரசு கொண்டு வாழ்ந்த இனம் தமிழினம்; தனித் தேசமாக வாழ எல்லாத் தகுதியும் உள்ள இனம் தமிழினம்.

நாம் ஆங்கிலேயர்க்கு அடிமைப்பட்டிருந்ததால் ஆங்கிலம் இன்றும் நம்மை ஆள்கிறது. ஆங்கிலேயர்களுக்குப் பிறகு நாம் இந்தியாவிற்கு அடிமைப்பட்டு வாழ்வதால் இந்திநம்மை ஆள்கிறது.

ஆங்கில ஆதிக்கம் இந்தி ஆதிக்கம் இரண்டையும் நீக்கி, தமிழைத் தமிழ்நாட்டின் முழுமையான ஆட்சி மொழி ஆக்க வேண்டுமானால், தமிழ்நாடு முழு இறையாண்மை பெறவேண்டும். அதற்கு முன் நிபந்தனையாகத் தமிழ்த்தேசிய அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க வேண்டும்; அதைத் தத்துவமாய் ஏந்த வேண்டும்.

செர்மனியில், டென்மார்க்சில், நார்வேயில், கொரியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அங்கெல் லாம் அவற்றில் அந்தந்த நாட்டுத் தாய்மொழிதான் அலுவல்மொழி! ஆனால் தமிழ்நாட்டில் அவற்றில் ஆங்கிலம்தான் அலுவல் மொழி! தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. தமிழ்அலுவல் மொழியாக இல்லை!

திராவிடக் கட்சிகள் ஆங்கிலத்தை முதன்மைப்படுத்துகின்றன. காங்கிரசு, பா.ச.க., கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் ஆகிய இந்தியத் தேசியக் கட்சிகள் இந்தியை முதன்மைப் படுத்துகின்றன.

தமிழ்நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் தமிழ்த்தேசியத் தத்துவத்தை ஏந்தும்போது, தமிழ்மொழி இங்கு முழுமையான ஆட்சிமொழியாகும்!”.


இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT