உடனடிச்செய்திகள்

Wednesday, May 22, 2019

ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பது அநாகரிகம்! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பது அநாகரிகம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, அவ்வாலையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி சுற்றுவட்டார மக்கள் கடந்த ஆண்டு (22.05.2018) பேரணியாகச் சென்றபோது, தமிழ்நாடு அரசின் காவல்துறை திட்டமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. முன்கூட்டியே தீர்மானித்தபடி துப்பாக்கிச் சூடு நடத்தி, 15 பேரைக் கொன்றது. நூற்றுக்கணக்கான பேர்களை படுகாயப்படுத்தியது. இந்தப் படுகொலை நடந்த மறுநாளே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நாங்கள் தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னோம். அத்துடன் உயிரிழந்தோர் இல்லத்திற்கும் சென்று ஆறுதல் கூறினோம்.

இன்று (22.05.2019), ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் சார்பில் முதலாமாண்டு இரங்கல் நிகழ்ச்சி நடத்துவதற்கு தூத்துக்குடியில் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்குச் சென்று கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளனர். உயர் நீதிமன்றமும் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என வரம்பு விதித்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்க அனுமதி மறுத்த இராசபக்சேவின் ஈவிரக்கமற்ற கொடுங்கோன்மையைத்தான் தமிழ்நாடு அரசின் இச்செயல் நினைவூட்டுகிறது. தூத்துக்குடி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்கவிருந்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப. உதயகுமார் அவர்களை நாகர்கோவிலிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று காவல்துறையினர் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

மனித உயிரிழப்புகளுக்கு துக்கம் கடைபிடிக்கக்கூட அனுமதி மறுக்கும் தமிழ்நாடு அரசின் மனிதநேயமற்றச் செயலையும், அநாகரிகத்தையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தங்கள் மக்களின் வாழ்வுரிமையைக் காக்க அறப்போராட்டம் நடத்தி உயிரீகம் செய்த வீரர்களுக்கும் – வீராங்கனைகளுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறது!

#WeRememberTuticorinMassacre

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, May 20, 2019

திராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்! தோழர் பெ. மணியரசன்.

திராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்! தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் திராவிடத்திற்குப் புத்துயிர் ஊட்ட புதிய உளிகளோடு கிளம்பியுள்ளார்கள். சொந்தத் தத்துவமோ, சொந்த சித்தாந்தமோ இல்லாதவை திராவிடக் கழகங்கள். அதனால் அவர்கள் தங்கள் தலைவர்களை சாக்ரடீஸ், இங்கர்சால் என்று அயல்நாட்டுத் தலைவர்கள் பெயரில் அழைத்துக் கொள்கிறார்கள்.

திராவிடத்திற்கென்று என்றுமே தனித்துவமான தத்துவமோ, சித்தாந்தாமோ இருந்ததில்லை! அதில் கொஞ்சம் – இதில் கொஞ்சம் எடுத்துக் கொள்வார்கள். தமிழறிஞர்கள் முன்வைத்த தமிழ் இன - மொழி கருத்துகள், மேற்கத்திய நாத்திகவாதம், காங்கிரசார் - கம்யூனிஸ்ட்டுகள் சொல்லும் கொள்கைகள் முதலியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் பஞ்சாமிர்தத் தத்துவம் பேசுவார்கள். “மாஸ்கோவுக்குப் போவேன், மாலங்கோவைப் பார்ப்பேன்; நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட் என்பேன்” என்று பேசினார் அண்ணா.

திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகளே, உங்கள் கழகங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குச் செய்த சாதனைகள் என்ன? உங்கள் திராவிடக் கட்சிகள் உருவாகவில்லை என்றால் தமிழர்கள் – உங்கள் பெரியார் சொன்னதுபோல் காட்டுமிராண்டிகளாக – நாடோடிக் கூட்டமாக அலைந்து திரிந்திருப்பார்களா? உங்களுக்கு அறைகூவல் (சவால்) விடுக்கிறோம். எந்தக் காலத்தில் – எந்த நூற்றாண்டில் தமிழர்களைவிட வட இந்தியர்கள் முன்னேறி இருந்தார்கள்? எதில் முன்னேறி இருந்தார்கள்?

எந்தக் காலத்தில் தமிழர்கள் பின்தங்கியிருந்தார்கள்?

கடந்த ஐயாயிரம் ஆண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டு விவாதிப்போம்! எந்தக் காலத்தில் உ.பி., ம.பி., பீகார், இராசஸ்தான்காரர்களை விடத் தமிழர்கள் எதில் பின் தங்கி இருந்தார்கள்? வங்காளிகளும், மராத்தியரும் தமிழர்களைவிட முன்னேறி இருந்தார்களா?

சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் நடந்த மன்னராட்சியில் தமிழர்கள்தாம், தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில், குறிப்பாக வணிகத்தில் – கல்வியில் – கலைகளில் முன்னேறி இருந்தனர். பூம்புகார், கொற்கை, முசிறி இவையெல்லாம் தமிழர் வணிகத்தின் பன்னாட்டுத் துறைமுகங்கள். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் வேட்டையாடப் போன தமிழன் கூடத் தன் பெயரை கோடரி போன்ற வேட்டைக் கருவிகளில் தமிழில் பொறித்து வைத்திருந்தான். தமிழ்நாட்டில் கல்வி அவ்வளவு வளர்ச்சி பெற்றிருந்தது என்று ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். (செம்பியன் கண்டியூர் கற்கோடரியில் பெயர் பொறித்திருந்ததைப் பார்த்த போது).

திராவிடத் தலைவர்கள் அவதாரம் எடுக்கவில்லையென்றால் தமிழர்கள் படித்திருக்க மாட்டார்கள்; மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள் என்று தமிழ் இனத்தை ஏகடியம் பேசுகின்றீர்கள். ஆடுமாடு மேய்த்த தமிழனும், தமிழச்சியும் கல்வி கற்று விட்டுத்தான் அந்த வேலையைச் செய்தார்கள். படிக்காத காட்டுமிராண்டிச் சமூகத்தில்தான் 3,500 ஆண்டுகளுக்கு முன் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் எழுதப்பட்டனவா?

படிக்காத தமிழ்ச்சமூகம்தான் மூன்று தமிழ்ச் சங்கங்களை உருவாக்கி, அதில் புலவர்கள் படைப்புகளை அரங்கேற்ற வேண்டும் என்று ஏற்பாடு செய்ததா? எண்ணற்ற பெண்பாற் புலவர்களை உருவாக்கியதா?

படிக்காத காட்டுமிராண்டித் தமிழ்ச்சமூகம்தான் ஆதிச்சநல்லூர் – கீழடி – அரப்பா வரையிலான ஐயாயிரம் ஆண்டு நாகரிகச் சின்னங்களை வைத்திருக்கிறதா?

ஆங்கிலேய ஆட்சி வருவதற்கு முன்பே இரும்பு உருக்குத் தொழில் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக இருந்தது என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் வட இந்தியாவைவிட பெருளாதாரத்திலும் கல்வியிலும் தமிழ்நாடுதான் முன்னேறி இருந்தது.

இந்திய விடுதலைக்குப் பின் நடந்த காங்கிரசு ஆட்சியிலும், வட இந்திய மாநிலங்களை விடத் தமிழ்நாடுதான் கல்வியில் முன்னணியில் இருந்தது. படித்தோர் எண்ணிக்கை (Literacy Rate) வட இந்தியாவை விடத் தமிழ்நாட்டில்தான் அதிகம்!

மன்னராட்சியிலேயே 2,000 ஆண்டுகளுக்கு முன் கல்லணை கட்டிய இனம் தமிழினம்! பொறியியல் துறையின் மிகப்பெரிய சாதனையாக 1,000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இனம் தமிழினம்! வெள்ளைக்காரன்தான் மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணை போன்றவற்றைக் கட்டினான். பிறகு காங்கிரசு ஆட்சியில் பவானி சாகர் உள்ளிட்ட பல அணைகள் கட்டப்பட்டன.

பெரிய ரெயில்வே தொழிலகங்களைத் தமிழ்நாட்டில் வெள்ளைக்காரன் நிறுவினான். காங்கிரசு ஆட்சியில் ஆவடி, திருச்சி படைக்கலத் தொழிற்சாலைகள், பி.எச்.இ.எல்., நெய்வேலி தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. திராவிட ஆட்சிகளும் வேறு சில திட்டங்களை நிறைவேற்றின. ஓர் ஆட்சியின் அடிப்படை அது!

பாழாய்க் கிடந்த – நாடோடிக் கும்பலைக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கல்வியைக் கொண்டு வந்தன; தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தன என்பன போன்ற கட்டுக்கதைகளை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள் – திராவிடச் சிற்பிகளே!

சுரண்ட வந்த வெள்ளைக்காரன்கூட ஆட்சி நிர்வாகம் அமைத்த பின், கல்வி – வேலை – தொழில் – வேளாண்மை – பொதுநலம் எனப் பல துறைகளில் பல முன்னேற்றங்களை உண்டாக்கினான். வெள்ளைக்காரனுக்கு மாறாக சோழர் – பாண்டியர் ஆட்சியின் நீட்சியாக சனநாயக மலர்ச்சி ஏற்பட்டு தமிழர் ஆட்சி தொடர்ந்திருந்தால், 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களை விட அதிக முன்னேற்றத்தைத் தமிழ்நாடு அடைந்திருக்கும்! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசேந்திரச்சோழன் வைத்திருந்த கப்பற்படைக்கு நிகராக உலகத்தில் எந்த ஆட்சியும் வைத்திருக்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள்.

இந்தியாவின் காலனி

அன்று இங்கிலாந்தின் காலனியாக இருந்தது தமிழ்நாடு; இன்று இந்தியாவின் காலனியாக இருக்கின்றது தமிழ்நாடு! இந்த வரையறுப்பை இன்றைக்கு சொல்ல தி.க. தயாரா? தி.மு.க. தயாரா? இந்திய ஏகாதிபத்தியக் காலனியத்தை எதிர்த்துப் போராடத் திட்டம் வெளியிடத் தயாரா? உங்கள் பெரியார்தான் சொன்னார், 1947 ஆகத்து விடுதலை தமிழ்நாட்டிற்கு இல்லையென்று! அப்படிச் சொன்னவர்தான் பின்னர், காங்கிரசுக்குக் காவடி தூக்கினார்.

தமிழ்நாடும் தமிழரும் அடிமையாய் உள்ளார்கள் – மெய்யான விடுதலை பெற வேண்டும் என்ற உண்மையை தொடக்கக் காலத்தில் சொன்னதால்தானே தி.க.வையும் தி.மு.க.வையும் தமிழர்கள் ஏற்றார்கள்; காங்கிரசைக் கைவிட்டார்கள். தனிநாடு பேசித்தானே தி.க.வும், தி.மு.க.வும் தமிழ்நாட்டில் வளர்ந்தன. வளர்ந்த பின் தி.க.வும், தி.மு.க.வும் செய்ததென்ன? பச்சைத்துரோகம்! தமிழினத்துக்குத் துரோகம் செய்து, தில்லிக்குக் காவடி தூக்கின!

1954லிருந்து இந்திய ஏகாதிபத்தியக் கட்சியான காங்கிரசுக்கு பிரச்சார பீரங்கியானார் பெரியார். 1967இல் காங்கிரசு தோற்று தி.மு.க. தமிழ்நாடு ஆட்சியைப் பிடிக்கும் வரை காங்கிரசுக்கு – சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஓட்டுக் கேட்டு ஊர் ஊராகப் போனவர் பெரியார். “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தமது ஏட்டில் எழுதிக் கொள்வார் – அவ்வப்போது தமிழ்நாடு தனியாக வேண்டும் என்று கூறிக் கொள்வார் – ஆனால் காங்கிரசின் பிரச்சார பீரங்கியாக முழங்கி வருவார். அக்கட்சிக்கு ஓட்டு கேட்பார். எப்படிப்பட்ட “விடுதலை வீரர்” பெரியார்!

அண்ணாவை வீழ்த்துவதே பெரியாரின் நோக்கம்

யாரைத் தோற்கடிக்க, காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார்? தி.மு.க.வைத் தோற்கடிக்க! திராவிட சித்தாந்தத்தின் சிறப்பே சிறப்பு! திராவிடச் சிந்தனைச் சிற்பிகள் சொல்லுவார்கள் – காமராசருக்காக – காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார் என்று! அதன் பொருள் என்ன? அண்ணாவைத் தோற்கடிக்கத் தானே காமராசருக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார்? என்னே திராவிடத் தந்தை, என்னே திராவிட மகன்! என்னே திராவிடத் தத்துவ ஆற்றல்!

தனிநபர் பகை அரசியல்

எப்போதுமே தனிநபர் பகைதான் திராவிட அரசியலில் முதன்மை வகிக்கும்! அண்ணாவையும், தி.மு.க.வையும் ஒழித்துக் கட்டுவதற்காக காங்கிரசை ஆதரித்தார் பெரியார். வேறென்ன?

அண்ணாவும் அவர் தம்பிகளும் தி.க.விலிருந்து ஏன் பிரிந்தார்கள்? பெரியார் மணியம்மையாரை தம் 70 ஆம் அகவையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதுதான் தி.மு.க. பிரிந்ததற்கான முதன்மைக் காரணம்! இக்காரணத்தைத்தான் தி.மு.க.வினர் வெளியே சொன்னார்கள்.

கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட தனிநபர் பகையில் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க. உருவானது. அ.தி.மு.க.வுக்கு செயலலிதா தலைமை உருவான பின் கருணாநிதிக்கும் அம்மையாருக்குமான தனிநபர் பகை அசிங்கமானது; அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டது.

கருணாநிதி முதல்வராக இருந்தால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் செயலலிதா சட்டப்பேரவைக்குப் போவதில்லை. தி.மு.க.வினர் தன்னை இழிவுபடுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக! அப்படி ஒரு நிகழ்வு 1989இல் நடந்தது. செயலலிதா முதல்வராக இருந்தால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் கருணாநிதி சட்டப்பேரவைக்குப் போவதில்லை. ஏன்? அ.இ.அ.தி.மு.க.வினர் தன்னை இழிவுபடுத்தி விடுவார்கள் என்று அஞ்சி அவர் போவதில்லை. திராவிடம் வளர்த்த பண்பைப் பாருங்கள் – நாகரிகத்தைப் பாருங்கள் – சனநாயகத்தைப் பாருங்கள்! “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு” காக்கும் திராவிடப் பாரம்பரியத்தைப் பாருங்கள்!

சட்டப்பேரவையில் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாக உட்கார முடியாத கேவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? தமிழ்நாட்டின் நாகரிகத்திற்கும் தமிழர்களின் பண்பிற்கும் கேடு உண்டாக்கிய கட்சிகள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்!

கருணாநிதிக்கும் வைகோவுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பகையினால்தான் ம.தி.மு.க. உருவானது. எந்தப் புதிய தத்துவத்திற்காக – இலட்சியத்திற்காக ம.தி.மு.க. உருவானது? எதுவுமில்லை!

வைகோ மீது கருணாநிதி சாட்டிய குற்றச்சாட்டு சாதாரணமானதல்ல. “விடுதலைப்புலிகளோடு சேர்ந்து கொண்டு வைகோ என்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்” என்று கூறினார் கலைஞர். நடுவண் அரசின் உளவுத்துறை ஆதாரங்கள் இருக்கின்றன என்றார்.

கருணாநிதி இந்தக் கொலைக் குற்றச்சாட்டை தமது “பிதாமகர்” பெரியார் வழியைப் பின்பற்றித்தான் வைத்தார். திராவிடர் கழகத்தில் பிளவு உண்டானபோது அண்ணா தன்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறார் என்று, தமது ஏட்டில் பெரியார் எழுதினார். அண்ணா பெரியாரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்தத் தந்தையின் பாணியைத்தான் தனையன் கருணாநிதி பின்பற்றினார்! திராவிடத்தின் தந்தை மகன் பாசம் – அண்ணன் தம்பி பாசம், அடடா.. அடடா..!

ஏன் வந்தது திராவிடம்?

திராவிடக் கட்சி என்பது 1944-இல் பிறக்கும்போதே போலியாகப் பிறந்த கட்சி என்பதற்கு “திராவிடர் கழகம்” என்ற பெயரே சான்று!

தமிழர்களுக்காக மட்டுமின்றி, தெலுங்கர் – கன்னடர் – மலையாளி ஆகியோருக்காகவும் தமிழ்நாட்டில் கட்சி தொடங்கியவர் பெரியார். தமிழர் என்று சொன்னால், தெலுங்கர் – கன்னடர் – மலையாளி ஆகியோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், எனவேதான் “திராவிடர்” என்று சொல்கிறேன் என்றார் பெரியார். ஆனால், ஆந்திர – கர்நாடக – கேரள மாநிலங்களிலுள்ள தெலுங்கர் – கன்னடர் – மலையாளிகள் தங்கள் மண்ணில் திராவிடர் கழகத்தை ஏற்கவில்லை.

அந்த உண்மை தெரிந்த பின்னும் 1949இல் தி.க.விலிருந்து பிரிந்து தி.மு.க.வை உருவாக்கியபோது, அண்ணாவும் மற்ற தலைவர்களும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களையும் இந்தியாவிலிருந்து விடுதலை செய்வதற்காகப் புதிய கழகம் உருவாக்கப்படுகிறது என்றார்கள். எவ்வளவு பெரிய பொய்!

தி.மு.க.வுக்கு மற்ற மூன்று மாநிலங்களில் தமிழர்களைத் தவிர பிறரிடம் கிளைகள் இல்லை; அத்துடன் அம்மாநிலங்களில் தனிநாட்டுக் கோரிக்கை எவராலும் வைக்கப்படவில்லை. உண்மையான தனிநாட்டு விடுதலை வீரர்களாக இருந்தால் – இப்படித் தொடர்பில்லாத மற்ற தேசிய இனங்களுக்கும் சேர்த்து விடுதலைக் கோரிக்கையை வைப்பார்களா? பிறக்கும்போதே போலித்தனம்! “நாங்கள் உண்மையான விடுதலை கோரவில்லை” என்று தில்லி ஏகாதிபத்தியத்திற்கு உணர்த்தும் உத்தி!

தி.க.வும் தி.மு.க.வும் தமிழர்களுக்குச் செய்த துரோகங்களின் சிகரம் எது? “தமிழர்” என்ற வரலாற்று வழிப்பட்ட நம் இனப்பெயரை நீக்கி நமக்கு “திராவிடர்” என்று புதிதாக ஒரு இனப்பெயரைச் சூட்டியதுதான் மன்னிக்க முடியாத துரோகம்! ஓர் இனத்தின் இயற்கையான பெயரை மாற்ற இவர்களுகளுக்கென்ன அதிகாரம் இருக்கிறது? அப்படித்தான் இவர்களுக்கென்ன வரலாற்று அறிவு இருந்தது? திராவிடம் என்பதற்கு சமற்கிருதச் சான்றுகளைத்தான் அண்ணா காட்டினார்.

அடுத்து, தமிழர் மானிடவியலைக் கற்காத – அரைகுறை தமிழ்ப் பண்டிதர் கால்டுவெல் “திராவிடர்” என்று கூறியதை சான்று காட்டினார்கள். “சாண் ஏறினால் முழம் சறுக்குபவர் கால்டுவெல்” என்றார் பாவாணர்.

திராவிடர் என்பதில் பிராமணர் இல்லையா?

“திராவிட“ என்பது ஆரியப் பிராமணர்கள் உருவாக்கிய சொல். வடக்கே இருந்து தெற்கே புலம் பெயர்ந்து சென்ற பிராமணர்களைக் குறிக்கப் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட சொல். இன்றைக்கும் பல பிராமண சங்கங்கள் “திராவிட” அடையாளத்தோடு செயல்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டு – புதூரு திராவிட பிராமண சங்கம், சவுத் கனரா திராவிட பிராமண சங்கம் (http://www.skdbassociation.com).

குசராத், மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்ற பிராமணர்களைக் குறிக்க “பஞ்சதிராவிடர்கள்” என்றார்கள். (பஞ்ச – ஐந்து. அப்போது மலையாள மொழி உருவாகவில்லை). வடக்கே கங்கைச் சமவெளி நோக்கி இமயமலைவரை சென்ற பிராமணர்களுக்கு “கௌட பிராமணர்கள்” என்று பெயர் சூட்டினர். தமிழர்களைக் குறிக்க “திராவிடர்” என்ற சொல்லை அவர்கள் உருவாக்கவில்லை.

கால்டுவெல் “திராவிட” என்ற சொல்லை மனுஸ்மிரிதி மற்றும் குமாரிலபட்டரின் “தந்த்ர வார்த்திகா” ஆகிய சமற்கிருத நூல்களிலிருந்து எடுத்ததாகக் குறிப்பிடுகிறார் (திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்). சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்திக்கால இலக்கியம், சித்தர் இலக்கியம் எதிலும் தமிழில் “திராவிட” என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அக்காலத்தில் தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக்கொள்வதை இழிவாகக் கருதினார்கள்.

தமிழர் இன அடையாளத்தை மறைப்பதற்காகத் திட்டமிட்டு பெரியாரால் பரப்பப்பட்ட சொல் திராவிடம். “தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்ப் படிக்காதீர்கள்; ஆங்கிலத்தைப் படியுங்கள், வீட்டில் மனைவியிடம் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள்” என்று 1968 – 1969 இல் கூட திரும்பத் திரும்ப எழுதியவர், பேசியவர் பெரியார்.

தமிழ் இனத்தின் மீது - தமிழ் மொழி மீது அவ்வளவு பெரிய காழ்ப்புணர்ச்சி ஏற்படும்படி தமிழர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? பெரியாருக்கு என்ன அநீதி இழைத்தார்கள்?

பெரியாரின் தாய்மொழி கன்னடம் என்பதற்காக அவரைத் தமிழர்கள் அயலாராகக் கருதவில்லை. நாம் பெரியாரை விமர்சிப்பது, அவர் அயல் இனத்தார் என்ற பொருளில் அன்று! சம உரிமையுள்ள தமிழ்நாட்டு மண்ணின் மகன் பெரியார் என்ற புரிதல்தான் தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு இருக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று வழியில் தமிழ்நாட்டில் குடியேறி வாழ்ந்து வரும் தெலுங்கு – கன்னடம் – சௌராட்டிரம் – உருது – மராத்தி போன்ற மொழிகள் பேசும் அனைவரையும் சம உரிமையுள்ள மண்ணின் மக்களாகவே நாங்கள் வரையறுக்கிறோம். ஆனால், பெரியாருக்குத்தான் தன் இனம் குறித்து ஏதோவொரு ஐயுறவு ஏற்பட்டு “தமிழர்” என்ற இனப்பெயரை நீக்கி, “திராவிடர்” என்ற ஆரியப்பெயரைத் திணித்தார்.

“திராவிடர்” என்று சொன்னால் அதில் பிராமணர்கள் சேர மாட்டார்கள் என்று ஒரு கட்டுக்கதையை பெரியார் உருவாக்கினார். தி.மு.க.வில் பிராமணர்கள் பலர் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு கன்னடப் பிராமணப் பெண் தலைவி ஆனார். அந்த செயலலிதாவுக்கு “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் கொடுத்தார் ஆசிரியர் வீரமணி.

பிராமணிய எதிர்ப்பு மரபு

சங்க காலத்திலிருந்து பிராமணியத்தை எதிர்த்து வரும் இனம் தமிழினம். ஆரியர்களை அடக்கி அவர்கள் தலையில் கல்லை ஏற்றி வந்த தமிழன் கதை கூறும் நூல் சிலப்பதிகாரம். பக்திக்காலம் - சித்தர்கள் காலம் தொட்டு வள்ளலார் காலம் – மறைமலையடிகள் காலம் வரை பிராமணிய எதிர்ப்பும், சமற்கிருத எதிர்ப்பும் தமிழினத்தின் குருதியில் கலந்தது. தமிழினத்திற்கு மரபு வழியில் ஆரிய - பிராமணிய எதிர்ப்பு தொடர்ந்து இருந்துவந்த காரணத்தால்தான், பெரியாரின் பிராமண ஆதிக்க எதிர்ப்பு இங்கு மக்களைத் திரட்டித் தந்தது.

தமிழ்நாட்டில் வெகுமக்கள் ஆதரவோடு நடந்த பிராமணிய எதிர்ப்புப் போராட்டம் போல் இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த மாநிலத்தில் நடந்தது? அந்த மாநிலங்களிலெல்லாம் வர்ணாசிரம தர்மம் இல்லையா? பிராமண ஆதிக்கம் இல்லையா? ஏகலைவன் கட்டை விரல் வாங்கிய கதை, தவமிருந்த சம்பூகன் தலை வெட்டிய கதை எல்லாம் வடநாட்டில்தானே நடந்தது! ஏன் அம்மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போல் பிராமண எதிர்ப்பு வெகுமக்கள் ஆதரவைப் பெறவில்லை?

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் 2,500 ஆண்டுகளுக்கு மேல் மனித சமத்துவம் பேசி வரும் இனம் – தமிழினம்! ஆரியத்தின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துவரும் இனம் – தமிழினம்!

“பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால், போர் கொண்ட மன்னர்க்கு பொல்லாத நோயாம்” என்று திருமூலர் பாடினார். அவரேதான் “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன், தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே” என்றார். ”வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்! வேதாகமங்களின் விளைவறியீர்! சூதாகச் சொன்னவலால், உண்மைநிலை தோன்ற உரைக்கவில்லை” என்றார் வள்ளலார். பல தெய்வ சிலை வணக்கத்தை மறுத்து, அனைவருக்கும் பொதுவான ஒளி வணக்கத்தை அறிமுகப்படுத்தினார். சாதி – மதம், ஆண் – பெண் வேறுபாடின்றி அனைவரும் உறுப்பு வகிக்கக் கூடிய “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்ற பொதுநிலைக் கழகத்தை 1865இல் தொடங்கி நடத்தியவர் வள்ளலார். இது எங்கள் மரபு!

இந்த மரபு பெரியாருக்கு வாய்ப்பளித்தது. பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார். அதற்கு நன்றி பாராட்டுகிறோம்! அதற்காக, எங்கள் இனத்தின் பெயரை நீக்குவதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? எங்கள் தாய்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றும், எங்கள் இனத்திற்கு நாகரிக வரலாறு இல்லை என்றும், எங்கள் இனத்தில் சரியான அறிவாளி யாருமே இல்லை என்றும் பேசி தமிழினத்தை இழிவுபடுத்தியதைத் தமிழர்கள் சகித்துக் கொள்ள வேண்டுமா? தமிழை “நீச பாஷை” என்றார்கள் பிராமணர்கள்; தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார். இவருடைய பிராமண எதிர்ப்பு, பாதிக் கிணறு தாண்டுவதாக இருக்கிறதே!

திராவிடத்துக்குப் புத்துயிரூட்டப் புறப்பட்டிருக்கும் சிந்தனைச் சிற்பிகளே, அதற்காகத் தமிழ்த்தேசியத்தைத் தாக்காதீர்கள். தமிழ்த்தேசியத்தை இழிவுபடுத்தாதீர்கள். தமிழர்களாகப் பிறந்த நீங்கள் தமிழ்த்தேசியத்தை இழிவுபடுத்துவது, கொச்சைப்படுத்துவது நீங்கள் குடித்த தாய்ப்பாலுக்குத் துரோகம் செய்வது போன்ற வேலை! “மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியறுக்க வேண்டும்” என்று கொடுமைக்கார மாமனார் – மாமியார் நினைத்ததாக ஒரு பழமொழி உண்டு. அப்படி, தமிழ்த்தேசியத்தை அழிப்பதற்காக நீங்கள் பிறந்த தமிழினத்திற்கு துரோகம் செய்யாதீர்கள்.

இனப்பெயர் நாமாகத் தேர்வுசெய்வதன்று. வரலாற்று வழியில் – மரபு வழியில் இயற்கையாக உருவாவது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் நம் இனப்பெயர் தமிழர் தான். இன்றும் நம் தேசிய இனப்பெயர் தமிழர்தான். மரபு இனப்பெயரும் (Race) தேசிய இனப்பெயரும் (Nationality) ஒன்றாக இருப்பது உலகத்தில் சில இனங்களுக்கு மட்டுமே இருக்கிறது. அதில் மூத்த இனம் தமிழினம்! அந்தப் பெயரை “திராவிடர்” என மாற்றிப் பிறந்த இனத்துக்குத் துரோகம் செய்யாதீர்கள்.

கொள்ளுப்பேரன் தலைமைதான் திராவிட விசுவாசமா?

திராவிடச் சிந்தனைச் சிற்பிகளே, கருணாநிதி தலைமையை ஏற்றுக் கொண்டு, அவர் மகன் தலைமையை ஏற்றுக் கொண்டு, அவர் பேரன் தலைமையை ஏற்றுக் கொண்டு, அதன் பின் கலைஞரின் கொள்ளுப்பேரன் தலைமையை ஏற்றுக்கொள்வதுதான் “திராவிட விசுவாசம்” என்று கருத்தியல் உருவாக்கி - இனப்பற்றை “கலைஞர் வாரிசுகள் பற்று” என்று கொச்சைப்படுத்திக் கொள்ளாதீர்கள்!

தமிழ் இழப்பு – உரிமைகள் பறிப்பு

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகாலத் திராவிட ஆட்சி தமிழ்மொழிக் கல்வியே இல்லாத நிலையை உருவாக்கும் திசைநோக்கிச் செல்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை; தனியார் பள்ளிகளில் தமிழ் இல்லை. அண்டை மாநிலங்களில் இப்படியான நிலை இல்லை. கேரளத்தைப் பாருங்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் நிரம்பி இருக்கிறார்கள்; மலையாளம் கற்கிறார்கள்.

ஐம்பது ஆண்டுகாலத் திராவிட ஆட்சியில்தான் கச்சதீவை இழந்தோம்; கடலில் மீன்பிடி உரிமை இழந்தோம்; காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆகிய ஆறுகளை இழந்தோம். கல்வி உரிமை மாநிலத்திடமிருந்து நடுவண் அதிகாரத்திற்கு போனது. மாநில அரசு வணிக வரி வசூலிக்கும் உரிமையை இழந்தோம். ஜி.எஸ்.டி வந்தது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமைகளைத் தமிழ்நாடு இழந்தது. தில்லியின் நீட் தேர்வு வந்தது.

ஐட்ரோகார்பன் வந்து வேளாண் நிலங்களை அழிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மனித உயிர்களைப் பறிக்கிறது. அடுக்கடுக்காய் அணு உலைகள், நியூட்ரினோ ஆலை, எட்டுவழிச் சாலை, வேளாண் நிலங்களின் குறுக்கே கெயில் குழாய்கள், உயர் மின் அழுத்த கோபுரங்கள் - எத்தனை சீரழிவுகள்; எத்தனை வகையில் வாழ்வுரிமைப் பறிப்புகள்!

வெளி மாநிலத்தார் குவிப்பு

தமிழர்களுக்கான தாயகமாகத் தமிழ்நாடு இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்ற பேரச்சம் ஏற்பட்டுள்ளது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளமென இந்திக்காரர்கள் கூட்டம் – வெளி மாநிலத்தார் கும்பல்! தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில், அலுவலகங்களில் இந்திக்காரர்களையும் வெளி மாநிலத்தவர்களையும் மிக அதிக அளவில் வேலையில் சேர்கிறார்கள். சொந்தத் தாயகத்திலேயே தமிழர்களுக்கு எதிராக இன ஒதுக்கல் கொள்கையை இந்திய அரசு செயல்படுத்துகிறது.

மேற்கண்ட அத்தனை உரிமைப் பறிப்புகளையும் தாயகப் பறிப்புகளையும் செய்யும் காங்கிரசு, பா.ச.க.வுடன்தான் திராவிடக் கட்சிகள் எப்போதும் கூட்டணி!

திராவிட அரசியல் என்பது இரண்டு சக்கரங்கள் மீது இயங்குகிறது. ஒரு சக்கரம் - தலைவர்கள் ஆதாயம், இன்னொரு சக்கரம் திராவிடத் தலைவர்களிடையே பகை! பயணம் முழுவதும் ஊழலோ – ஊழல்!

தமிழ்த்தேசியர்களே,

தேர்தல் என்பது ஒரு சனநாயக வழிமுறை! அதேவேளை, அதற்கான எல்லைகளை இந்திய அரசு வரையறுத்து வைத்துள்ளது. தேர்தல் மூலம் – தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டுவிடலாம் என்று எண்ணாதீர்கள்! அவ்வளவு எளிதாக இந்திய ஏகாதிபத்தியம் - தான் பறித்த உரிமைகளை விட்டுக் கொடுக்காது. இந்திய ஏகாதிபத்தியத்தின் இருபெரும் கட்சிகள் பா.ச.க.வும் காங்கிரசும்! இவை “பாரதமாதா”வின் பிள்ளைகள்; தமிழன்னையின் பகைவர்கள்.

தமிழ்த்தேசிய உரிமைகள் மீட்பு – கோடிக்கணக்கான தமிழர்களின் எழுச்சியில்தான் கைகூடும்! அதற்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன, இழந்த உரிமைகள் எவை, அவற்றை எப்படி மீட்பது, அதற்கான வெகுமக்கள் போராட்ட உத்திகள் யாவை என்பவற்றையெல்லாம் தலைவர்களும், முன்னணிச் செயல்பாட்டாளர்களும் கற்றறிய வேண்டும். அவற்றை மக்களின் குரலாக மாற்ற வேண்டும்.

தத்துவம், அரசியல், பொருளியல், பண்பியல், சூழலியல் என அனைத்துத் துறையிலும் தமிழ்த்தேசிய உரிமைப் போராட்டங்கள், வெகுமக்கள் போராட்டங்களாக – சனநாயகப் போராட்டங்களாக வீச்சுப் பெற வேண்டும்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, May 14, 2019

கல்லாக்கோட்டை மதுஆலை மூடும் மகளிர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது!


கல்லாக்கோட்டை மதுஆலை மூடும் மகளிர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது!

கல்லாக்கோட்டையில் கால்ஸ் மதுபான ஆலையை எதிர்த்து மகளிர் ஆயம் சார்பில் மகளிர் முற்றுகை போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

கல்லாக்கோட்டை சாராய ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட மகளிர் ஆயம் தோழர்கள் முடிவு செய்திருந்த நிலையில் ஆலையின் முன்பு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கல்லாக்கோட்டை கடை வீதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட மகளிர் ஆயம் தோழர்களை ஆலையின் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது கொளுத்தும் வெயிலையும் பாராமல் மகளிர் ஆயம் தோழர்கள் - பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் என அனைவரும் சாலையிலேயே அமர்ந்தனர். சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி இருந்தபோது காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனத்தில் அனைவரையும் ஏற்றினர்.


போராட்டத்திற்கு மகளிர் ஆயம் தலைவர் தோழர் லட்சுமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் அருணா, துணைப் பொதுச் செயலாளர் தோழர் செம்மலர், துணைத் தலைவர் தோழர் மேரி உள்ளிட்ட திரளான மகளிர் ஆயம் தோழர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர் 300 பேர் கைது செய்யப்பட்டு தற்போது கந்தர்வக் கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.






தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, May 12, 2019

கல்லாக்கோட்டை மதுபான ஆலை முன்பு மகளிர் முற்றுகையிடும் போராட்டம்..! புதுக்கோட்டையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு!

கல்லாக்கோட்டை மதுபான ஆலை முன்பு மகளிர் முற்றுகையிடும் போராட்டம்..! புதுக்கோட்டையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு! 
புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை அருகிலுள்ள கல்லாக்கோட்டையிலுள்ள “கால்ஸ் டிஸ்டிலரீஸ்” - தனியார் மதுபான ஆலையை முற்றுகையிடும் போராட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (மே 14) நடத்தப்படும் என புதுக்கோட்டையில் நேற்று (11.05.2019) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி, துணைப் பொதுச்செயலாளர் தோழர் செம்மலர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

இச்செய்தியாளர் சந்திப்பில் மகளிர் ஆயம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது :

"தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து, ஆண்டுக்கு ஆண்டு அதன் வணிகத்தைப் பெருக்கும் வகையில் அதிகாரிகளை முடுக்கிவிட்டபிறகு குடிகாரர்களின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருகிறது.

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாத பெண்கள், பள்ளி – கல்லூரி மாணவர்கள் எனப் பல தரப்பினரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிச் சீரழிகிறார்கள்.

மதுப்பழக்கத்தினால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் சின்னாபின்னமாகிச் சிதைந்து விட்டன. பல குடும்பங்களில் குடும்ப வாழ்க்கையே கொடூர வாழ்க்கையாகிவிட்டது. நோயுற்று நடைபிணமாகப் பல ஆண்கள் திரிகிறார்கள்; அற்ப ஆயுளில் சாகிறார்கள்.

பல நாடுகளில், பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்திருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் மூட வேண்டும் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அந்த நாடுகளிலும் மாநிலங்களிலும் உள்ள மக்கள் அதுபற்றி முடிவு செய்யட்டும். நம் தமிழ்நாட்டிற்கு மது பொருந்தவில்லை; மக்கள் அழிகிறார்கள்; எனவே மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்று மகளிர் ஆயம் கோருகிறது.

மது விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் மக்களுக்கு இலவசங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள். இதைவிட அநீதியான, ஒழுக்கக்கேடான ஒரு வாதம் வேறு இருக்க முடியுமா? கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் கதை இது!

இந்த வாதமதாவது உண்மையா? அதுவும் பொய்! கடந்த 2018ஆம் ஆண்டு மது விற்பனை வருமானம் 26,796 கோடி ரூபாய். மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மருத்துவக் காப்பீடு, பசுமை இல்லம், மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, நோட்டு புத்தகம், தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட இலவசங்களுக்கு தமிழ்நாடு அரசு செலவிட்ட தொகை 12,274 கோடி ரூபாய் மட்டுமே! ஒழுக்கம் கெடுத்து பணம் வசூலித்து, இலவசங்கள் வழங்குவது ஓட்டு வாங்குவதற்கான மக்கள் விரோத உத்தியாகும்!

இந்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து வரியாகவும், தொழில் நிறுவனங்களின் இலாபமாகவும் ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் கோடி ரூபாய் வசூலித்துக் கொண்டு போகிறது. அதில் பாதித் தொகையைத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கேட்டுப் பெற்றால் இங்கு எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றலாம். மக்கள் வாழ்வும் செழிக்கும்; பண்பாடும் வளரும்!
முழு மதுவிலக்கு

1. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கைச் செயல்படுத்த வேண்டும்.

2. தமிழ்நாட்டில் செயல்படும் மது உற்பத்தித் தொழிற்சாலைகள் அனைத்தையும் நிரந்தரமாக மூட வேண்டும்.

இவ்விரு கோரிக்கைகளுக்காக முதல் கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டம் – கல்லாக்கோட்டை கால்ஸ் டிஸ்டிலரீஸ் சாராய உற்பத்தி ஆலையை மூட வலியுறுத்தி, மகளிர் ஆயம் சார்பில் அதன் தலைவர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில் 14.05.2019 செவ்வாய் காலை 10.30 மணிக்கு மேற்படி ஆலையை பெண்கள் முற்றுகையிட்டுப் போராடுவார்கள்.

இந்த கால்ஸ் டிஸ்டிலரீஸ் ஆலை நிறுவப்பட்ட பிறகு கல்லாக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள குருவாண்டான் தெரு, சங்கன் விடுதி, சொக்கம்பேட்டை, சத்திரப்பட்டி, கண்ணு குடிப்பட்டி, புதுவயல், மருதன்கோன் விடுதி, கரையவிடுதி, கொத்தகப்பட்டி உள்ளிட்ட இருபது கிராமங்களில் நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் வேளாண்மைக்கும், குடிநீருக்கும் தண்ணீரில்லாமல் பெருந்துயரத்தில் உள்ளார்கள். குடிநீருக்கும் குடும்பப் பயன்பாட்டிற்கும் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம் உண்டாகியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் அன்றாடம் சாராயம் தயாரிக்க இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை நிலத்தடியிலிருந்து கால்ஸ் டிஸ்டிலரீஸ் ஆலை உறிஞ்சுவதுதான்.

கல்லாக்கோட்டை ஆலை உட்பட தமிழ்நாட்டில் உள்ள எல்லா சாராய உற்பத்தி ஆலைகளையும் உடனடியாக மூட வேண்டும்.

கல்லாக்கோட்டை மது ஆலையை மூட வலியுறுத்தி இப்பகுதி மக்களும் பல்வேறு இயக்கங்களும் ஏற்கெனவே கடுமையாகப் போராடியிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்".

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, May 11, 2019

உங்கள் அனைவர்க்கும் என் வாழ்த்துகள்! தோழர் பெ. மணியரசன்.

உங்கள் அனைவர்க்கும் என் வாழ்த்துகள்! தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேரன்புடையீர்,

வணக்கம்! நேற்று (10.05.2019) எனக்கு 72 அகவை நிறைவடைந்து 73ஆம் அகவை தொடங்கிய நாள். முகநூல் வழியாகவும், தோழர்கள் வழியாகவும் என் பிறந்த நாளை அறிந்து நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வழியாகவும் தொலைப்பேசி வழியாகவும், நேரிலும் எனக்களித்த உங்களுக்கும், மனத்தளவில் வாழ்த்திக் கொண்டிருக்கும் பெரு மக்களுக்கும் என் மனங்கனிந்த நன்றி!

தமிழ் இன, தமிழ் மொழி, தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க என்னை மேலும் ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வையே உங்களின் வாழ்த்துகள் எனக்கு ஊட்டின.

தமிழ்ச் சமூகம் தனக்குள் உள்ள சாதி, மத முரண்பாடுகளைக் களைந்து, நம் முன்னோர் வகுத்த அறத்தின்படி சமத்துவம் கடைபிடிக்கச் செய்ய, மேலும் உழைக்க வேண்டும் என உறுதி ஏற்கிறேன்.

வடநாட்டு - பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் வேட்டைக்காடாகத் தமிழ்நாடு ஆக்கப்பட்டுள்ள அடிமைத் தளையை அறுத்தெறிய வேண்டும். தற்சார்புள்ள தமிழர் தொழில், வணிகம், கல்வி, வேளாண்மை, சூழலியல் தழைக்க நாம் அனைவரும் உழைப்போம்!

வந்து குவிந்து, தமிழர் தாயகத்தைத் தங்கள் மண்டலமாக்கிக் கொள்ளும் வடநாட்டார் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரை வெளியேற்ற ஒருங்கிணைவோம்.

பெண்ணுரிமை, சூழலியல் பாதுகாப்பு போன்றவை தன்னிலிருந்தும் தன் வீட்டிலிருந்தும் புறப்பட்டு தமிழ்நாட்டளவில் செயல்பட வைப்போம்.

நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே தி.மு.க. ஊட்டிய தமிழின உணர்ச்சியில் வளர்ந்தவன். அதன் பிறகு, 1968-இல் பாவாணர் அவர்களைத் தலைவராகவும், பெருஞ்சித்திரனார் அவர்களைப் பொதுச் செயலாளராவும் கொண்டு உருவாக்கப்பட்ட உலகத் தமிழ்க் கழகத்தின் வழி தமிழின உணர்வும், தமிழ்த்தேசிய உணர்வும் பெற்றவன்.

உலகத் தமிழ்க் கழகத்திற்குள்ளேயே தனித்தமிழ்நாட்டை முதன்மைப்படுத்திய தோழர்கள் மகிபை பாவிசைக்கோ, உணர்வுப்பித்தன், தேனி இரும்பொறை போன்றோரின் மாற்று அமைப்பிற்குள் செயல்பட்டவன்.

வியட்நாம் விடுதலைப் போர் போல் தமிழ்நாட்டிலும் விடுதலைப் போர் நடத்த வேண்டும் என்று கருதிய அக்காலத்தில், அந்த இலட்சியப் பயணத்தில் வாழ்நாள் எப்போது வேண்டுமானாலும் முடியலாம் என்று நான் கருதிக் கொண்டது உண்டு!

வியட்நாம் கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமானால் இங்குள்ள கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் இணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவு செய்து, சி.பி.எம். கட்சியில் நானும் என் கருத்துடன் ஒத்துப்போன உலகத் தமிழ்க் கழகத் தோழர்கள் சிலரும் 1970களில் தீவிரமாகச் செயல்பட்ட சி.பி.எம். கட்சியில் சேர்ந்தோம். அக்கட்சியில் 1973 முதல் 1985 வரை முழுநேரச் செயல்பாட்டாளராகப் பணியாற்றினேன். கற்றுக் கொள்ளப் போன நாங்கள் அன்றாடப் போராட்டங்களில் ஈடுபட்டு அக்கட்சியுடன் உண்மையாகவே இணைந்துவிட்டோம்.

சி.பி.எம். கட்சி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அப்போது உழவுத் தொழிலாளர் கூலி உயர்வுப் போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் முதலியவற்றை முடுக்கிவிட்டிருந்தது. அப்போராட்டங்களில் பங்கு பெற்ற போது, எதிர்த்தரப்பில் வீச்சரிவாளோடும், தடிக்கம்புகளுடனும் தாக்க வருவார்கள். எங்களுக்குத் தலைமை தாங்கிய தோழர் ந. வெங்கடாசலம் அவர்கள் 1977இல் கொலை செய்யப்பட்டார். 1984இல் அரிவாள் கம்புகளால் நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன்.

அப்பொழுதெல்லாம் என் வாழ்நாள் எவ்வளவு காலம் நீளும் என்ற உறுதியற்ற நிலை இருந்தது. அதற்காக ஒருபோதும் பின்வாங்கியதில்லை!

இவ்வாறான செயல்பாடுகளுக்கிடையே 72 ஆண்டுகள் வாழ்ந்துள்ளோமே என்ற வியப்பும் ஏற்படுகிறது.

தமிழ்த்தேசியத்திற்கு ஒப்படைத்துக் கொண்ட ஒரு போராளி என்ற உணர்வே என்னை இப்போது இயக்குகிறது. தமிழ்த்தேசிய இறையாண்மை மீட்புப் போராட்டம் மக்கள் போராட்டமாக – அறப்போராட்டமாக தமிழ்நாடு தழுவியதாக வளர மேலும் மேலும் உழைப்பேன்.

எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த தலைவர்கள், தோழர்கள், தம்பிகள், தங்கைகள், பேரன்கள், பேத்திகள், வெளிநாடு வாழ் உறவுகள் அனைவர்க்கும் என் நெஞ்சு நிறைந்த நன்றி! உங்கள் அனைவர்க்கும் மூத்தவன் என்ற முறையில் என் வாழ்த்துகள்!

அன்புடன் 
பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

நாள் - 11.05.2019

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

Wednesday, May 8, 2019

மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படவில்லையா? பொன். இராதாகிருட்டிணன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா? தோழர் பெ. மணியரசன் சவால்!

மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படவில்லையா? பொன். இராதாகிருட்டிணன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சவால்!
நடுவண் அரசின் இணை அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் 07.05.2019 அன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, “மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. என்றும் தமிழ்நாட்டில் சிலர் வேண்டுமென்றே வட மாநிலத்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக வருமான வரித்துறை, வங்கிகள், அஞ்சல் துறை, ரெயில்வே துறை, பிஎச்இஎல், நெய்வேலி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையம், ஆவடி, திருச்சி அரவங்காடு ஆகிய இடங்களில் உள்ள படைக்கலத் தொழிற்சாலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், வானூர்தி நிலையங்கள், துறை முகங்கள் உள்ளிட்ட 18 துறை சார்ந்த நடுவண் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்களைப் புறக்கணித்து வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு எடுத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள இவ்வேலைகளுக்காக நடத்தப்பட்ட அனைத்திந்தியத் தேர்வுகளில் இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தில்லு முல்லு செய்துள்ளார்கள். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது, வினாவும் விடையும் முன்கூட்டியே “விற்பனை செய்வது” போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்திக்காரர்கள் ஆவடி, திருச்சி படைக்கலத் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அஞ்சல் துறைப் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் தமிழ்ப்பாடத்தில், அரியானாவைச் சேர்ந்தவர்கள் மொத்த மதிப்பெண் 25க்கு 23 வாங்கிய அதிசயம் நடந்தது. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் வழக்குப் போட்டனர் உயர்நீதிமன்ற ஆணையின் பேரில் விசாரித்த சி.பி.ஐ காவல் துறையினர் மோசடியாகத் தேர்வு எழுதிய அரியானாக்காரர்களைக் கைது செய்தார்கள். அந்தத் தேர்வுமுடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

அண்மையில் தமிழ்நாட்டில் இரயில்வேத் துறையில் பழகுநர் பணிகளுக்கு நடந்த நேர்காணலிலும் அதன்பிறகு வேலைக்கு அமர்த்தப்பட்டோரிலும் 90 விழுக்காட்டிற்கு மேல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டு மாணவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டனர்.

இந்தத் 90 விழுக்காட்டு வெளிமாநிலத்தவர்களில் பத்து இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே மிகவும் அதிகம்.

எனவே தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு அலுவலகங்களில் மற்றும் நிறுவனங்களில் தமிழர்களைப் புறக்கணித்து மிகுதியாக வட இந்தியர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள் என்றும், இச்செயல் தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கை ஆகும் என்றும் நாங்கள் கூறும் குற்றச்சாட்டு வெறும் வதந்தி அல்ல; உண்மை நடப்பின் அடிப்படையில் கூறப்பட்டது.

இதுபற்றி நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணனுடன் பொது மேடையில் நேருக்கு நேர் நான் விவாதிக்கத் தயார்? பொன்னார் அவர்களே நீங்கள் தயாரா?

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

"தமிழனா…? தமிழ்நாட்டில் வேலை இல்லை! "நக்கீரன் வார ஏட்டில் ஐயா பெ. மணியரசன் அவர்களது பேட்டியுடன் செய்திக் கட்டுரை!

"தமிழனா…? தமிழ்நாட்டில் வேலை இல்லை! "நக்கீரன் வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களது பேட்டியுடன் செய்திக் கட்டுரை!
"தமிழனா…? தமிழ்நாட்டில் வேலை இல்லை!"என்ற தலைப்பில், 2019 மே 8 - 10 நாளிட்டு வெளிவந்துள்ள “நக்கீரன்” வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களது பேட்டியுடன் செய்திக்கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் முழு வடிவம் :

மத்திய அரசுத் துறைகளுக்கான தமிழக காலிப் பணியிடங்களில், தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்தப் பணியிடங்களில் வெளிமாநிலத்தவர்களே அதிகமாக பணியமர்த்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அது தொடர்பான செய்திகளும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்பின.

இந்நிலையில், திருச்சி பொன்மலையிலுள்ள ரயில்வே பணிமனையில் பழகுநர்களுக்கான காலிப்பணியிடங்களில் நிரப்பப்பட்ட 300 பணியாளர்கள் அனைவருமே வடமாநிலத்தவர்கள் என்ற செய்தி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்தப் பணி நியமனத்தைத் திரும்பப் பெற்று அதில் தமிழக இளைஞர்களை பணியமர்த்த வேண்டும். 18 பொதுத்துறைகளில் 90 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி பொன்மலை ரயில்வே வளாகத்தின் முன்பு மே 3 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டது தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

தமிழ்த்தேசியப்பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களோடு பல்வேறு கட்சி இயக்கங்களைச் சேர்ந்த மெதாழிலாளர்கள். பெண்கள், குழந்தைகள் என 500 க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டனர்.

“தமிழக வேலை தமிழருக்கே” என்ற முழக்கத்துடன் அனைவரும் பொன்மலை பணிமனை வளாகத்தை நோக்கி பேரணியாக நடக்க முயன்றனர்.

அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை மறித்து நிறுத்த, அனைவரும் கொளுத்தும் வெயிலில் தரையில் படுத்துக் கொண்டனர். உடனடியாக 500 பேரையும் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்று மண்டபத்தில் அடைத்தது காவல்துறை.

திருச்சியில்தான் போராட்டம் என்றாலும், போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் பலரும் அதை சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கவனத்தை ஈர்த்தனர். 

#தமிழகவேலைதமிழருக்கே, #TamilnaduJobsForTamils ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தன.

இதை மராட்டியர்கள், “மராட்டியர்களின் வேலை மராட்டியர்களுக்கே” என தாங்களும் ட்ரெண்டாக்கி தமிழர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

திருச்சியில் நடைபெற்ற போராட்டம் இந்திய அளவில் பேசுபொருளாயிருக்கும் நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசனிடம் பேசியபோது, “தென்னக இரயில்வேயில் வேலைபழகுநர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருச்சி பொன்மலையில் 1765 பேரிடம் நேர்கானல் நடத்தியிருக்கிறார்கள். அதில் நியமிக்கப்பட்ட 325 பேரில் 300 பேர் வடமாநிலத்தவர்கள், 25 பேர் மலையாளிகள். அங்கு நிரந்தரப் பணியில் இருக்கும் 3 ஆயிரம் பேரில் 1500 பேர் வேற்று மாநிலத்தவர்கள்.

அதேபோல், தமிழ்நாட்டில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட்மாஸ்டர், போஸ்ட்மேன் என அஞ்சலகங்களில் 4452 காலிப்பணியிடங்களை நிரப்ப ஏப்ரல் 15 தான் கடைசித்தேதி வடமாநிலங்களில் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 5 தேதிதான் அறிவிப்பு வெளியாகிறது. தமிழக இளைஞர்கள் விண்ணப்பிக்கச் சென்றால் “கணினி சர்வர் வேலை செய்யவில்லை” என்கிறார்கள். இனி அத்தனை பணியிடங்களிலும் வடவர்களையே நியமிக்கப் போகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல்துறை பணிகளுக்கு தேர்வு நடந்தது. அதில் 25 மதிப்பெண்ணுக்கு தமிழ்மொழி பாடத்தில் கேள்விகள் இருந்தன. தமிழ்மொழியில் படித்த நம் இளைஞர்கள் 15, 20 மதிப்பெண் எடுக்க, ஹரியானாக்காரன் 23 மதிப்பெண் எடுத்திருந்தான். இந்தப் பிரச்சனையால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோல், அஞ்சல்துறை வேலை வாய்ப்பு விண்ணப்பத்தில் இல்லாத “அட்டஸ்ட்” காரணத்தைக் கூறி தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்களை நிராக்கரித்தார்கள்.

இத்தனை கொடுமைக்கு மத்தியில், தமிழக இளைஞர்களின் வேலைகளைப் பறிக்க ஓ.பி.எஸ். என்ற நல்ல மனிதர் 2016 இல் தனி சட்டத்திருத்தமே கொண்டுவந்தார். அதன்மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும் வேலைகளுக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ்காரனும் விண்ணப்பிக்கலாம்.

அதாவது, கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மாற்றி, “வேலைக்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றுக்கொண்டால் போதும்” என ஓ.பி.எஸ். முன்மொழிந்த இந்த சட்டத்திருத்தத்தால், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் பதவிகளுக்குக்கூட இந்திக்காரன் வரக்கூடிய வாய்ப்புள்ளது. இந்தச் சட்டத்திருத்தத்தை ரத்துசெய்யக்கோரி பலமுறை மனுக்கொடுத்தும் பயனில்லை.

மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில வேலைகளில் நூறு சதவீதமும், மத்திய அரசு வேலைகளில் 90 சதவீதமும் மண்ணின் மைந்தர்களுக்கே கிடைக்க சட்டம் இருக்கிறது. ஆனால், இங்குதான் 99 சதவீதம் வேலைகளை வடநாட்டவருக்கு தாரைவார்க்கிறோம். 

ஆப்பிரிக்காவில் கறுப்பர்களைச் செய்ததுபோல, தமிழர்களை சொந்த மண்ணிலேயே இன ஒதுக்கல் செய்கிறார்கள். இளைஞர்கள் களத்திற்கு வந்து போராடினால்தான் விடிவு பிறக்கும்” என்றார் ஆத்திரத்துடன்.

மாநிலத்தின் உரிமைகள், அந்தந்த மொழிபேசும் மக்களக்கு அவர்கள் மாநிலத்திலேயே வாழ்வாதாரம், வளர்ச்சி இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. தற்போது அந்த நோக்கம் சிதைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் – வேலைவாய்ப்பு அனைத்தும் பிற மாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் சூழல் எழுந்துள்ளது என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

தி.மு.க. உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளும் இதுகுறித்துப் பேச ஆரம்பித்திருப்பதால், மாற்றங்களை எதிர்ப்பார்க்கிறார்கள் இளைஞர்கள்”.

இவ்வாறு “நக்கீரன்” செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படிக்க : https://www.nakkheeran.in/…/tamilana-there-no-job-tamil-nadu 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, May 7, 2019

நடுவண் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலவழி நுழைவுத் தேர்வால் புறக்கணிக்கப்படும் தமிழ்வழி மாணவர்கள்

நடுவண் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலவழி நுழைவுத் தேர்வால் புறக்கணிக்கப்படும் தமிழ்வழி மாணவர்கள் - வான்முகில்.
தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புப் பாடத்திட்டங்களை தமிழ்வழியிலேயே கற்கிறார்கள். இம்மாணவர்கள் 12ஆம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் இவர்களுக்குத் தமிழ்நாட்டில் இந்திய அரசு நடத்தும் புதுச்சேரி, திருவாரூர் நடுவண் (மத்திய) பல்கலைக்கழங்களில் மேல் படிப்புகளைத் தொடர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.

இவ்விரு பல்கலைக்கழகங்களும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சேரத் தகுதி வாய்ந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல், கலைப் பாடங்களை நடத்திவருகின்றன. இவ்விரு பல்கலைக்கழகங்களும் இப்பாடப்பிரிவில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுகளை ஆங்கில வழியில் மட்டுமே நடத்துகின்றன. இது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்படும் அநீதி! தமிழ் வழியில் படித்தவர்கள் எப்படி ஆங்கில மொழியில் தேர்வு எழுத முடியும்?

தமிழ்நாட்டில் செயல்படும் இவ்விரு இந்திய அரசின் நடுவண் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 90 விழுக்காடு இடங்களை மண்ணின் மைந்தர்களுக்கே ஒதுக்க வேண்டும்! இந்த ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு நுழைவுத் தேர்வின்றி, மாணவர்களை அவர்கள் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், புதுவை பல்கலைக்கழகம் உள்ளூர் மக்களுக்காக 25 விழுக்காடு இடங்களை ஒதுக்கியுள்ளதாக அதன் வெளியீடு (Prospectus) கூறுகிறது. ஆனால் புதுவை மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் நடத்தப்படாத பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களைப் பெறுவதற்கே தமிழ் வழியில் படித்த மாணவர்கள் ஆங்கிலத்தில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

முதுகலை கணிதம், வேதியியல், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல், கலை உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் சேர உள்ளூர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இன்றுவரை இல்லை!

சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திருவாரூர் பல்கலைக்கழகத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. இவ்விரு நடுவண் அரசின் பல்கலைக்கழகங்களிலும் அதன் அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் மண்ணின் மைந்தர்களுக்கான 90 விழுக்காடு இடஒதுக்கீட்டை நாம் போராடிப் பெற வேண்டும். ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு நுழைவுத் தேர்வின்றி மேல்நிலை வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவும் போராட வேண்டும்.

தமிழ்நாடு அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள்கூட நுழைவுத் தேர்வைத் தமிழில் நடத்துவதில்லை என்பது தான் வேதனைக்குரிய நிலை. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகமும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் நேரடியாகச் சேரக்கூடிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த பல முதுகலை அறிவியல், கலை பாடப் பிரிவுகளை நடத்தி வருகிறது. இப்பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வை ஆங்கில வழியிலேயே நடத்தி வருகிறது. இந்நிலை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்.

மேல்நிலை வகுப்பை தமிழில் படித்துள்ள மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த ஆண்டு நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் நுழைவுத் தேர்வையே நீக்கி விட்டது. ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல், வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இது மட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் தர வரிசைப்படி முதல் பத்து மாணவர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்குகிறது. இப்பல்கலைக் கழகத்தில் சேர விண்ணப்பம் போட கடைசி நாள் - மே 3.

நுழைவுத் தேர்வையே நீக்க முடிவெடுத்த பல்கலைக் கழகத் துணைவேந்தரும், பேராசிரியர்களும் நம் பாராட்டுக் குரியவர்கள். நெல்லைப் பல்கலைக்கழகம் எடுத்த முடிவை, நல்ல தொடக்கமாகக் கொண்டு, தமிழ் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நுழைவுத் தேர்வை நீக்க வேண்டும்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 மே மாத இதழ்)

கண்ணோட்டம் இணைய இதழ்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: tamizhdesiyam.com

இலங்கையில் இசுலாமியப் பயங்கரவாதம் மதச்சார்பின்மை போதாது! மத மறுசீரமைப்பு தேவை! தோழர் பெ. மணியரசன்.

இலங்கையில் இசுலாமியப் பயங்கரவாதம் மதச்சார்பின்மை போதாது! மத மறுசீரமைப்பு தேவை! தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.
இலங்கையில் கிறித்துவத் தேவாலயங்களிலும் பெரிய விடுதிகளிலும் கடந்த 21.04.2019 காலை பயங்கரவாதிகள் குண்டு போட்டுக் கொன்ற அப்பாவி மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்! அவர்களின் உறவுகளுக்கு நெஞ்சம் கனத்த ஆறுதல்கள்!

வெடிகுண்டு போட்டு பொது மக்களைக் கொல்லும் இந்த “வீரச்” செயலுக்கு இசுலாமிய அரசு (ஐ.எஸ்.) என்ற முசுலிம் அமைப்பு உரிமை கொண்டாடியுள்ளது. இதில் இலங்கையில் செயல்படும் முசுலிம் தீவிரவாத அமைப்பான “தேசிய தவ்ஹீத் சமாத்”தொடர்பு கொண்டுள்ளது என்று இலங்கை அரசு கூறுகிறது.

கிறித்துவத் தேவாலயங்களில் தமிழர்கள், சிங்களர்கள் ஆகிய இரு தரப்பினரும் கொல்லப்பட்டனர். பெரிய விடுதிகளில் உள்நாட்டவர், வெளிநாட்டவர் எனப்பலரும் கொல்லப்பட்டனர். இதுவரை வந்த கணக்குப்படி 353 பேர் கொல்லப்பட்டனர். ஐநூறு பேர் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.

உலக நாடுகளும் இந்தியாவும் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும் அபாயம் உள்ளது என்று முன் கூட்டியே எச்சரித்திருக்கின்றன. இந்த எச்சரிக்கையை தலைமை அமைச்சர் இரணில் விக்கிரமசிங்கேவுக்கும், அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் குடியரசுத் தலைவர் சிறீசேனா நிர்வாகம் அனுப்பவில்லை.

கடந்த ஆண்டில் சிறீசேனாவுக்கும் இரணிலுக்கும் இடையே வெடித்த அதிகாரச் சண்டை தொடர்கிறது. அந்நாட்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளால் தற்காலிகமாக சிறீசேனா - இரணில் நிர்வாகம் ஒட்ட வைக்கப்பட்டுள்ளது. சிறீசேனாவுக்கும் உலக நாடுகளின் எச்சரிக்கை உண்மையிலேயே தெரிந்ததா என்பதும் வினாக்குறிதான்!

பேரினவாத வெறி, வஞ்சகம், சூழ்ச்சி, வன்முறை முதலியவற்றில் விளைந்ததுதான் சிங்கள அரசியல்! இலங்கை சுதந்திரக் கட்சியானாலும், ஐக்கிய தேசியக் கட்சியானாலும், சனதா விமுக்தி பெரமுனாவானாலும் அவற்றின் பொதுப் பண்பாட்டுக் குணங்கள் இவை!

தமிழினத்தை ஒடுக்க - அதன் உரிமைகளைப் பறிக்க - தமிழீழ விடுதலைப்புலிகளைக் குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்க - தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்ய சிங்களக் கட்சிகள் ஒற்றுமையாய் இருக்கும். ஆனால் தங்களுக்குள் ஒருவர் காலை இன் னொருவர் வாரிவிட சதித்திட்டம் தீட்டிக் கொண்டே இருப்பார்கள்.

இந்தச் சதித்திட்டத்தினால்தான் இவ்வளவு பெரிய பயங்கரவாதச் செயல்கள் தங்கு தடையின்றி அரங்கேறி இருக்கின்றன. இராசபட்சே, இரணில், சிறீசேனா மூவருமே இந்தியாவின் செல்லப் பிள்ளைகள்!

பிரபாகரனின் போர் அறம்

இந்தப் பயங்கரவாதக் குண்டு வெடிப்பிற்குப் பின் தலைமை அமைச்சர் இரணில் சொன்னார் : ”உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில்கூட இதுபோன்ற பயங்கரவாதச் செயல்கள் நடந்ததில்லை!”.

ஏன் நடந்ததில்லை இரணில்? உங்களுடைய வீரதீரப் படையாட்களின் கண்காணிப்பாலா? உங்கள் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலா? இல்லை! தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் கடைபிடித்த தமிழர் போர் அறத்தினால் சிங்களப் பொது மக்கள் தாக்கப்படவில்லை!

விடுதலைப் புலிகளிடம் விமானப்படை இருந்தது. சிங்களப் போர்க் கப்பல்களையும், டாங்கிகளையும் தூள் தூளாக்கிய வெடிகுண்டுகள் இருந்தன. ஆனால், சிங்களப் பொது மக்களைத் தாக்கக் கூடாது என்பது விடுதலைப் புலிகள் கடைபிடித்த போர் விதி! தமிழ்ப் பொது மக்களை ஆயிரக்கணக்கில் சிங்களப்படை கொன்று குவித்த காலத்தில்கூட, விரக்தியின் விளிம்புக்குப் போகவில்லை பிரபாகரன்; சிங்கள நகரங்களில் வானூர்தி மூலம் குண்டுபோடச் சொல்லவில்லை. புலிப்படையை சிங்களப் பொதுமக்கள் மீது ஏவிவிடவில்லை!

எத்தனையோ தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறை செய்தனர் சிங்களப் படையாட்கள்; சுட்டுக் கொல்லப்பட்ட தமிழச்சியின் பிணத்தைக் கூட வல்லுறவு கொண்டனர் சிங்களர். ஒரு சிங்களப் பெண்ணைக்கூட மானங்கெடுத்ததில்லை தமிழ்ப்புலி வீரன்!

அறத்தினால் வீழ்ந்தனர் விடுதலைப்புலிகள்! முதல் உலகப் போரில் செர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்த போது பெல்ஜியத்திற்கு வாழ்த்துக்கூறி பாரதியார் எழுதிய கவிதையின் முதல் வரி “அறத்தினால் வீழ்ந்து விட்டாய்” என்பதாகும்! மறத்தினால் வெல்லவில்லை சிங்களர்; இந்தியா, அமெரிக்கா, இரசியா, சீனா போன்ற நாடுகளின் துணையினால் சூழ்ச்சியால் வென்றனர் சிங்களர்.

தமிழீழத் தேசியத் தலைவர் கடைபிடித்த போர் அறம் தவறன்று. சரியானது; அதுவே தமிழர் மரபு!

இசுலாம் மதத்தில் தன் திறனாய்வு

ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்களில் வழிபட்டுக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்களையும், விடுதிகளில் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பாவிகளையும் இசுலாத்தின் பெயரால் வெடிகுண்டு போட்டுக் கொல்வது என்ன அறம்? என்ன ஆன்மிகம்?

இசுலாம் மதத்தை வழிகாட்டும் நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் - உலகம் முழுவதையும் ஒரே இசுலாமிய அரசின்கீழ் கொண்டு வருவோம் என்று சொல்பவர்கள், யாரையோ பழிவாங்கும் வெறியோடு, வேறு யாரையோ வெடிகுண்டு போட்டுக் கொல்வது என்ன ஆன்மிக நெறி?

தமிழ்நாட்டில் முசுலிம் அமைப்புகள் அனைத்தும் இலங்கையில் ஐ.எஸ். நடத்தியுள்ள கொலை வெறியாட்டத்தைக் கண்டித்துள்ளன. பாராட்டுகள்! அது மட்டும் போதாது!

இசுலாத்தில் மதம் சார்ந்த சீர்திருத்த எழுச்சி தேவைப்படுகிறது. இசுலாத்திற்குள் ஷியா - சன்னி பிரிவினர் நடத்திக் கொள்ளும் ஆயுதப்போரினால் எவ்வளவு முசுலிம்கள் அன்றாடம் கொல்லப்படுகிறார்கள்! இலட்சக் கணக்கான முசுலிம்கள் ஏதிலிகளாக அயல் நாடுகளுக்கு ஓடுகிறார்கள். இசுலாத்தில் உள்ள இறுக்கமான மதக்கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, இசுலாமிய நாடுகள் சிலவற்றில் இன்னும் மன்னராட்சிகள் தொடர்கின்றன. பல நாடுகளில் அரசுக் கவிழ்ப்பு நடத்தி சர்வாதிகாரிகள் ஆட்சி செய்கிறார்கள். அங்கே சனநாயகத்திற்காக மக்கள் போராடுகிறார்கள்.

இலங்கைக் குண்டு வெடிப்புகளை ஒட்டி இலங்கையைச் சேர்ந்த இசுலாமியப் பெண்கள் பாத்திமா மாஜிதா, சர்மிலா செய்யித் ஆகியோரின் விமர்சனங்களை “இந்து தமிழ் திசை” வெளியிட்டிருந்தது (25.04.2019). முசுலிம்களிடம் தன் திறனாய்வு தேவை என்கிறார்கள்.

“தாக்குதல் நடத்தியவர்கள் (உண்மையான) முசுலிம்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களுக்கும் இசுலாத்துக்கும் சம்பந்தமில்லை என்று சப்பைக் கட்டு கட்டுவதை நிறுத்துங்கள். இப்போதுகூட நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதி விடுவோம்” என்கிறார் பாத்திமா மாஜிதா.

உலகத்தில் இருவகை மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு வகையினர் முசுலிம்கள்; மற்றவர்கள் அனைவரும் காபிர்கள் என்று கருதும் போக்கினை முசுலிம்கள் கைவிட வேண்டும் என்கிறார். “சகிப்புத்தன்மையற்ற வஹாபியிசத்தின் கொடூரங்கள் எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தும் பார்க்காமலும் இருந்த இந்த நோய் முற்றிதான் பயங்கரவாதமாக இன்று மாறி உயிர்களைப் பலிகொள்கிறது” என்கிறார் மாஜிதா. இவர் இலங்கைத் தமிழ் எழுத்தாளர், வழக்கறிஞர்.

இன்னொரு இலங்கைத் தமிழ் எழுத்தாளர் “உம்மத்” நாவலாசிரியர் சர்மிளா செய்யித் கூறுகிறார்:

“இலங்கை முசுலிம்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக அழத் தொடங்கியிருக்கி(றோம்)றார்கள். ஆனால், “தீவிரவாதிகளுக்கு மதமில்லை; அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட வேண்டும்” என்பதோடு இனியும் தப்பிக்க முற்பட்டுவிட முடியாது. இத்தகைய மதத் தீவிரவாதக் கருத்துகளுக்கு எதிராகக் கடந்த காலங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறோமா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேளுங்கள். மௌனமாக இருந்தவர்கள்கூடத் தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் என்பேன்”.

மேற்கண்ட இருவரின் திறனாய்வுகள் இசுலாம் மதத்திற்கு மட்டுமல்ல எல்லா மதத் தீவிரவாதத்திற்கும் பொருந்தும். இந்து மதத் தீவிரவாதத்தை இந்து மதத்தின் உள்ளே எதிர்கொள்வதற்கும் பொருந்தும்.

தமிழ்நாட்டில் மதவாதம்

தமிழ்நாட்டில் இந்து மதவாதமும், அதற்கு எதிர்வினை என்ற பெயரில் முசுலிம் - கிறித்துவ மதவாதமும் வளர்ந்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க - ஆர்.எஸ்.எஸ். ஆரியத்துவா அமைப்புகள் இந்து மதவாதத்தை முன்வைத்தன. எதிர்வினையாக பள்ளி வாசலில், கிறித்தவ தேவாலயங்களிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மதபீட அறிவிப்புகளாக வெளியிடப்பட்டன. தற்காப்பு நிலையில் இருந்துதான் சிறுபான்மை மதத்தவர் இவ்வாறு கூறுகிறார்கள் என்று இதனை ஞாயப்படுத்திவிட முடியாது. தனிமைப்படவே அது வழி செய்யும். ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் பா.ச.க. அணிக்கு வாக்களிக்க சொல்லி வெளிப்படையாக வேண்டுகோள் விட்டார்.

மதம், சாதி இரண்டையும் தேர்தல் கட்சிகள் பயன்படுத்திகொள்வது வழக்கம் தான். ஆனால் இவ்விரண்டும் இப்போது தீவிரமடைகின்றன.

ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் முசுலிம் மக்கள் பெருவாரியாக காங்கிரசு, தி.மு.க. போன்ற கட்சிகளில் இருந்தார்கள். இப்பொழுது அது மிகவும் சுருங்கி விட்டது. முசுலிம்கள் முசுலிம்களுக்காக முசுலிம்களால் தலைமை தாங்கப்படும் கட்சிகளில்தான் இருக்க வேண்டும் என்ற பெரும் போக்கு வளர்ந்துள்ளது. அம்மத இறுக்கமும் கட்டுப்பாடுகளும் கூடுதலாகி உள்ளன. தமிழ்நாட்டு முசுலிம் சமூகத்திலும் ஐ.எஸ். ஆதரவாளர்கள் உருவாகிறார்கள். இஸ்லாமியத் தவ்ஹித் அமைப்பினர் இந்துக்களின் சிலைவணக்கத்தை எதிர்த்துப் பரப்புரை செய்வது வளர்ந்துள்ளது. இதற்கு எதிர்வினையாக இந்து தீவிரவாதி களும் உருவாகி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலைதான் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதம் வளர வாய்ப்பளிக்கிறது.

இப்போதெல்லாம் முசுலிம் செயல்பாட்டாளர்களில் கணிசமானோர் தங்கள் மதம் இசுலாம்; தங்கள் இனம் தமிழர் என்று கருதவில்லை. அவர்கள் தங்கள் மதம் இசுலாம்; தங்கள் இனம் முசுலிம் என்று கருதுகிறார்கள். இவ்வாறான சூழ்நிலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் உருவாக வாய்ப்பளிக்கும். முசுலிம் அரசியல் தலைவர்களும் அறிஞர்களும் நமது மதம் இசுலாம்; நமது இனம் தமிழர் என்ற கருத்தை வளர்க்க வேண்டும்.

கிறித்துவத்தில் பெந்தகொஸ்தே பிரிவினர் மதம் மாற்றுவதைத் தங்களின் முதன்மை வேலைத் திட்டங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். கிறித்துவமதக் கருத்துகளைக் கேட்டு, தாமாக மதம் மாறுவோர் மாறட்டும். ஆனால், அதையே ஒரு வேலையாகக் கொண்டு - “அற்புதங்களைக்” கூறி மதம் மாற்றுவது சரியன்று. அது தான் தமிழ்நாட்டில் இந்து தீவிரவாதத்தைப் பரப்ப வாய்ப்பளிக்கிறது.

இதேபோல், ஓசைப்படாமல் புத்தமதத்திற்கு மாற்றும் வேலைகள் இப்போது தமிழ்நாட்டில் பரவலாக - தீவிரமாக நடக்கின்றன. சிங்கள நாட்டின் தலையீடு இதில் இருக்கிறது. பௌத்தத்தின் பயங்கரவாத வன்முறைகளைத் தமிழர்கள் இலங்கையில் அனுபவித்துக் கொண்டுள்ளார்கள். மியான்மரில் ரோகிங்கியா முசுலிம்கள், பௌத்த பயங்கரவாதத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கும், தாமாக முன்வந்து புத்த மதத்தைத் தழுவுவதை நாங்கள் தவறென்று கூறவில்லை. திட்டமிட்டு மாற்றுவதைத்தான் சுட்டிக் காட்டுகிறோம்.

இந்துத் தீவிரவாதம்

சைவம், வைணவம் இரண்டும் மரபு வழிப்பட்ட தமிழர் நெறிகள். இவை இரண்டும் இப்போது இந்து மதத்தின் உட்பிரிவுகளாக உள்ளன. இந்து மதத்தை - வேத மதமாக - பிராமண மதமாக சித்தரித்துக் காட்டுவது பிராமண பீடங்களின் வேலை. ஆரியத் தலைமையை ஏற்றுக் கொண்ட இரண்டாம் தர மக்களாகத் தமிழர்களை மாற்றுவது; முசுலிம்களை - கிறித்தவர்களை இந்துக்களின் முதன்மை எதிரிகளாகக் காட்டுவது முதலியவை ஆரியத்துவா பரிவாரங்களின் அன்றாட வேலைத்திட்டம்!

ஆரியத்துவாவாதிகளால் இந்து மத வெறியூட்டப்பட்டவர்கள்தாம் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கினார்கள்; குசராத்தில் 2,000 அப்பாவி முசுலிம்களைப் படுகொலை செய்தார்கள். சமத்துவம் பேசிய எத்தனையோ அறிஞர்களை, செயல்பாட்டாளர்களைப் படுகொலை செய்தார்கள். தமிழ்நாட்டில் இந்துத் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. அங்கங்கே வன்முறைகள் நடக்கின்றன.

எனவே, எந்த மதத் தீவிரவாதத்தையும் அந்தந்த மதங்களில் உள்ள மக்கள் ஏற்கக் கூடாது; அச்செயல் பாடுகளைக் கண்டனம் செய்ய வேண்டும்; எதிர்த்துப் போராட வேண்டும்!

இந்து, இசுலாம், கிறித்துவம், பௌத்தம் உள்ளிட்ட எல்லா மதங்களில் உள்ளோரும் தங்கள் மதத்தை மறு சீரமைப்பு செய்யும் கடமைகளை நிறைவேற்றினால், இந்த மதங்களின் பெயரால் தூண்டப்படும் வன்முறைகளுக்கு ஆள் சேராது.

மத மறுப்புப் பரப்புரையும், மத ஒழிப்புப் போராட்டமும் மதத்திற்குப் புத்துயிரூட்டவும், மதத்தீவிரவாதத்தை வளர்க்கவுமே பயன்பட்டிருக்கின்றன.

மதவெறி தலைதூக்கும் போதெல்லாம், மதச்சார் பின்மை (செக்குலரிசம்) பேசப்படுகிறது. இது போதாது! மதங்களோடுதான் மனித வாழ்வு பின்னிப்பிணைந்துள்ளது. மத மறு சீரமைப்பு மிகமிகத் தேவை!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 மே மாத இதழ்)

கண்ணோட்டம் இணைய இதழ்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: tamizhdesiyam.com

“முதலில் இந்திக்காரர்கள் வெளியேறட்டும்!” குமுதம் ரிப்போர்ட்டர் வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேட்டி!

“முதலில் இந்திக்காரர்கள் வெளியேறட்டும்!” குமுதம் ரிப்போர்ட்டர் வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேட்டி!
“முதலில் இந்திக்காரர்கள் வெளியேறட்டும்!” என 10.05.2019 நாளிட்டு வெளிவந்துள்ள “குமுதம் ரிப்போர்ட்டர்” வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவ்விதழில் வெளி வந்துள்ள பேட்டியின் முழு வடிவம் :

தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வரும் வடமாநிலத்தவர்களுக்கு எதிராக தமிழ்த்தேசிய அமைப்புகள் களம் இறங்கி உள்ளன. திருச்சி பொன்மலையில் உள்ள இரயில்வே பணிமனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசனிடம் பேசினோம்.

கேள்வி : தமிழகத்தில் இயங்கிவரும் இரயில்வே அலுவலகப் பணிகளுக்கு வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்படுவதாக சொல்லப்படுவது உண்மைதானா?

பெ.ம. : தமிழகத்தில் சாதாரணமாக நுழைந்த வடமாநிலத்தவர்கள் இன்று தமிழர்களுக்கான வேலை வாய்ப்புகளில் கைவைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதாவது இவர்கள் நேர்மையான வழியில் நுழைவதில்லை. இரயில்வே வாரியம் நடத்தும் தேர்வில் ஆளு மாறாட்டம் செய்து பணிக்குத் தேர்வாகிறார்கள். அதேநேரத்தில், அப்ரண்டீஸ்களுக்கு தேர்வு எதுவும் வைக்கப்படுவதில்லை. சான்றிதழ் சரி பார்த்தலுக்குப் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வில், வடமாநிலத்தவர்கள் எளிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அண்மையில் சென்னை, திருச்சி, கோவையில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பேர் அப்ரண்டீஸ்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிற 1725 பேரில் 1600 பேர் வடஇந்தியர்கள் தான்.

கேள்வி : இரயில்வே துறையில் மட்டும்தான் வட இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்?

பெ.ம. : சென்னையில் இயங்கி வரும் வருமானவரித் துறை அலுவலகத்தில் 100 சதவிகித வட இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதை எதிர்த்து அந்த அலுவலகத்திலேயே புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது வங்கிப் பணிகளிலும் வட மாநிலத்தவர்கள்தாக் அதிகம் தேர்வு செய்யப்படுகிறார்கள் இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

கேள்வி : மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் பங்கேற்று தகுதி அடிப்படையில் பணியிடங்களைக் கைப்பற்றுவது தவறா?

பெ.ம. : வட இந்தியர்கள் நியாயமான, நேர்மையான வழியில் நுழையாமல், குறுக்கு வழியைக் கடைப்பிடிப்பார்கள். வடமாநிலங்களில் கோச்சிங் சென்டர் என்ற பெயரில் தில்லுமுல்லு சென்டர்கள் இயங்கி வருகின்றன. அந்த சென்டர்களில் மத்திய அரசு பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் இடம்பெறும் கேள்விகளையும் விடைகளையும் முன்கூட்டியே கொடுத்து பயிற்சி வகுப்பு நடத்துகிறார்கள். இதுதவிர வட இந்தியர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்வில் ஆள் மாறாட்டத்தையும் கடைபிடிப்பார்கள்.

கேள்வி : நீங்கள் இப்படி சொல்வதற்கு ஏதுனும் ஆதாரம் இருக்கிறதா?

பெ.ம. : இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக அஞ்சல் இந்திய அளவிலான தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழை ஒரு பாடமாக்கி அதற்கு 25 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 23 மதிப்பெண்களை ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் எடுத்தார். தமிழை தாய்மொழியாகக் கொண்டவரே அதிகபட்சமாக 18 மதிப்பெண்கள் எடுக்கும் நிலையில், பிற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி 23 மதிப்பெண் எடுக்க முடியும்? இது அம்பலமாகி சம்பந்தப்பட்ட அரியானா மாநிலத்தவரை விசாரித்தால் அவருக்கு தமிழ் பேசவும் எழுதவும் தெரியவில்லை. இந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

அதே போன்று சமீபத்தில் தமிழக அஞ்சல் துறையில் காலியாக இருந்த 4,460 பணியிடங்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 15 என நிர்ணயிக்கப்பட்டியிருந்தது. ஆனால், இதே விளம்பரம் வட இந்தியாவில் மார்ச் 15 ஆம் தேதியே வெளியிடப்பட்டது. ஆன்லைனில் தமிழர்கள் விண்ணப்பித்தபோது சர்வர் வேலை செய்யவில்லை. இதுவெல்லாம் தமிழர்களுக்கு முட்டுக்கட்டை போடும் செயல்தானே!

கேள்வி : திராவிடக் கட்சிகள் இந்த பிரச்சனையாகக் கண்டுகொள்வதில்லையா?

பெ.ம. : தமிழகத்தில், மத்திய அரசுப் பணிகளில் வட இந்தியர்கள் ஆதிக்கம் வட இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவது குறித்து இப்போது ஸ்டாலின் பேசி வருகிறார். தேர்தலுக்குப் பிறகு இதே விவகாரத்தில் அவர் ஆர்வம் காட்டுவாரா என்பது சந்தேகம் தான்.

கேள்வி : வட இந்தியர்களுக்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

பெ.ம. : தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் வட இந்தியர்கள் ஆக்கிரமிப்பு சட்டரீதியாகதடை விதிக்கப்பட்டியிருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 1986 ஆம் ஆண்டு ஒரு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதன்படி மத்திய, மாநில அரசு துறைகள், தனியார் துறை என மூன்றிலும் கன்னடர்களுக்குத்தான் 90 சதவிகித வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டியிருக்கிறது. இதே போல் குசராத், மகாராசுடிரா, சத்தீசுகர், ஆகிய மாநிலஙகளிலும் சட்டம் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தான் மாநில அரசின் பணிகளிலும் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

கேள்வி : உங்கள் போராட்டத்துக்கு தமிழகத்தில் வரவேற்பு இருக்கிறதா?

பெ.ம. : வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவது குறித்து நாங்கள் சரியான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். அதனால் இளைஞர்கள் மட்டுமல்ல நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட தமிழ்த்தேசிய அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நாங்கள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். எதிர்காலத்தில் போராட்டங்கள் தீவிரம் அடையும்போது கண்டிப்பாக வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படும்.

கேள்வி : தமிழர்களிடம் சோம்பல் அதிகமாகிவிட்டதால், வேலை வாய்ப்புகளில் வட இந்தியர்கள் முந்துவதாக சொல்லப்படுவது உண்மையா?

பெ.ம. : அப்படிச் சொல்ல முடியாது நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் இலவச அரிசி உட்பட பல இலவசங்கள் வழங்கப்படுவதால் சிலர் சோம்பலாகி இருக்கலாம் அது தவறுதான் இது தொடர்பாகவும் நாங்கள் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறோம். இது வெறும் 10 சதவிகித அளவுதான் ஒட்டுமொத்த தமிழர்களும் சேர்ந்து இருக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. ஆனாலும் இதை ஒரு காரணமாக வைத்து வேலை வாய்ப்பில் வட இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தவறு.

கேள்வி : டெல்லி பல்கலைக்கழங்கத்தில் தமிழர்களால் டெல்லிவாசிகள் பாதிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறி இருக்கிறாரே?

பெ.ம. : தமிழகத்தில் உள்ள இந்திக்கரார்களை முதலில் அவர் வெளியேறச் சொல்லட்டும் அதற்குப் பிறகு தமிழர்களை கெஜ்ரிவால் வைத்துக்கொள்வதும் வெளியேற்றுவதும் அவர் விருப்பம் தமிழகத்தை விட்டு இந்திக்காரர்கள் வெளியேறினால் காலியாகும் பணியிடங்களை டெல்லியில் இருந்து அனுப்பப்படும் தமிழர்களுக்கு உடனடியாக வழங்கிவிடலாம். இதனால் கெஜ்ரிவாலின் ஆதங்கத்தைத் தீர்க்க முடியும்".

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT