உடனடிச்செய்திகள்
Showing posts with label ஏழுதமிழர் விடுதலை!. Show all posts
Showing posts with label ஏழுதமிழர் விடுதலை!. Show all posts

Friday, August 6, 2021

உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்! - ஐயா கி.வெங்கட்ராமன் வேண்டுகோள்!



உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை 
விடுதலை செய்ய வேண்டும்! 

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
ஐயா கி.வெங்கட்ராமன் வேண்டுகோள்!


உச்ச நீதிமன்ற புதிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்துள்ள புதிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 03.08.2021 அன்று உச்ச நீதிமன்றம் அரியான மாநில அரசு – எதிர் – இராசுகுமார் என்ற வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கிருக்கிறது.

“அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட முடியாது. தொடர்புடைய மாநில அரசின் பரிந்துரை ஆளுநரை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தது. தண்டனைக் குறைப்பு குறித்து மாநில அமைச்சரவை பரிந்துரை அளிக்கும் போது ஆளுநர் அதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏமந்த் குப்தா மற்றும் ஏ.எஸ்.கோபண்ணா ஆகியோர் வழங்கிய தீர்ப்பு உறுதிப்பட கூறுகிறது. 

இதற்கு முன்னர் மாருராம் – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் (1981, 1, SCC, 107) உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் “ஆளுநர் என்பவர் மாநில அரசின் சுருக்கெழுத்து வடிவம். அவர் மாநில அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆவார். ஒரு மாநில அரசு தண்டனைக் குறைப்பு ஆணையை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் கூட நேரடியாக அறிவித்துவிடலாம் ஆயினும் பணி விதிகள் மற்றும் அரசமைப்புச் சட்ட இங்கிதம் காரணமாக அமைச்சரவையின் முடிவு ஆளுநரின் வழியாக செயலுக்கு வரவேண்டிருக்கிறது” என்று அரசமைப்பு ஆயம் கூறியிருப்பதை தங்களது முடிவுக்கு அடிப்படையாக நீதிபதிகள் ஏமந்த் குப்தாவும், ஏ.எஸ். கோபண்ணதாவும் மேற்கோள் காட்டுகிறார்கள்

அதுமட்டுமின்றி இந்திய ஒன்றிய அரசு – எதிர் – சிறிகரன் என்ற முருகன் எனும் ஏழு தமிழர் வழக்கில் (2016, 7, SCC, 1) உச்ச நீதிமன்றம் இதே போன்று கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டிய நீதிபதிகள் ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு முன் விடுதலை வழங்குவது அவரது நீங்கா கடமை எனத் தெளிவுப்படுத்துகிறார்கள்.

இந்த புதிய சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்து புதிய பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாருராம் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன் விடுதலை மற்றும் மன்னிப்பு வழங்கும் செயலில் உறுப்பு 72ன் படியான குடியரசுத் தலைவரின் அதிகாரமும் உறுப்பு 161ன் படியான ஆளுநரின் அதிகாரமும் ஒத்தவலு உள்ளவை, ஒரே நேரத்தில் செயல்பட கூடியவை என்று தெளிவுபட கூறியிருக்கின்றன. 

எனவே இச்சிக்கல் குறித்து தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதை ஒரு தடையாக கருதாமல் புதிய பரிந்துரையை உருவாக்கி அதனை ஆளுநருக்கு அனுப்பலாம். எந்த சட்டைத் தடையும் இல்லை.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு உரிய பரிந்துரையை ஆளுநருக்கு உடனடியாக அனுப்பி ஏழு தமிழர் விடுதலைக்கு வலுவாக முயலவேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுகொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, May 25, 2021

ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? - கி. வெங்கட்ராமன் அறிக்கை!



ஏழு தமிழர் விடுதலையில் 
தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன?

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
கி. வெங்கட்ராமன் அறிக்கை!


ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன என்பதைப் பற்றி கூர்மையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், இராபட்பயஸ், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்கள் இராசிவ் காந்தி கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அநீதியான முறையில் சிறையில் வாடுவதை சுட்டிக்காட்டி இவர்கள் விடுதலைக்கு உடனடியான ஒப்புதல் தருமாறு குடியரசுத் தலைவரை கோரியதை தவறு என்று கருதவில்லை.

அதே நேரம் கூடிய விரைவில் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திமோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்ததித்து உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும், தமிழ்நாடு அரசு தண்டணை இடைநிறுத்த விதிகள் - 1982 (The Tamilnadu Suspension of Sentence Rules - 1982) பிரிவு 40 - இன் கீழ் உள்ள சிறப்பதிகாரத்தை பயன்படுத்தி ஏழு தமிழர்களுக்கும் காலவரையற்ற சிறை விடுப்பு வழங்கி இடைக்கால விடுதலைத்தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

ஆயினும் திராவிடக் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன். சீமான், பஞ்சாப் மனித உரிமை செயல்பாட்டாளர் பேராசிரியர் செக்மோகன்சிங் உள்ளிட்டோர். அரசமைப்பு சட்ட உறுப்பு 161 ன் கீழ் மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவை ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்து அதனை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பது. கூட்டாட்சி முறைக்கு எதிரான ஆளுநரின் முடிவை ஏற்பதாக அமைந்து விடும் என்று திறனாய்வு செய்கின்றனர். 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக நடந்து கொண்ட விதமும், செய்த முடிவும் கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்பது மட்டுமின்றி அப்பட்டமான தமிழினப் பகைச் செயல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1) ன் படி மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் ஆவார். இச்சிக்கலில் ஆளுநருக்கு தனிப்பட்ட எந்த விருப்பதிகாரமும் கிடையாது.
இதனை மாருரா – எதிர் – இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயம் ஐயத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தி விட்டது. (1981, 1 SCCB, 107). “ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் சுருக்கெழுத்து வடிவமே தவிர தனித்த அதிகாரம் படைத்தவர் அல்ல” என்று அத்தீர்ப்பு தெளிவுப்படுத்துகிறது.

அதன் பிறகு வந்த அரசமைப்புச் சட்ட ஆயங்களும் இதே நிலைப்பாட்டை உறுதிப்படுத்தின. 

இந்த நிலையில் ஆளுநர் புரோகித் முதலில் இரண்டாண்டுகளுக்கு மேலாக காலம் தாழ்த்தியதும், அடுத்து இராசிவ் காந்தி கொலை தொடர்பான பல்நோக்கு விசாரணைக்குழுவின் முடிவுக்கு காத்திருப்பதாக சாக்குப் போக்கு சொல்லியதும், இறுதியில் இதன் மீது முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என்று கூறி குடியரசுத் தலைவருக்கு இந்த கோப்பை அனுப்பியதும் அரசமைப்புச் சட்ட கவிழ்ப்பாகும். ஏழு தமிழர் விடுதலை தொடர்பான இந்திய அரசின் தமிழினப் பகை முடிவு தான் ஆளுநர் வழியாக வெளிப்பட்டிருக்கிறது. 

ஆளுநரின் முடிவு கூட்டாட்சிக்கு முறைக்கு எதிரானது என்ற திறனாய்வு சரியானதுதான் என்றாலும் மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவை ஏழு தமிழர் விடுதலை பரிந்துரைத்து ஆளநருக்கு அனுப்பிவைப்பது உரிய பலன் தராது என்றே கருதுகிறோம்.
அதே இந்திய அரசு, அதே ஆளுநர் என்ற நிலையில் மீண்டும் காலதாமதம் மீண்டும் இதே முடிவு என்ற ஆபத்து நிகழவாய்ப்பு உண்டு.

குடியரசுத் தலைவர் வழியாகவும் ஏழு தமிழர் விடுதலை கிடைக்குமா என்பது ஐயத்திற்குரியதுதான். ஆயினும் இருக்கிற சட்ட நிலைமையின் படி இந்திய அரசை வலியுறுத்துவது செய்ய வேண்டிய பணிதான்.

ஏற்ககெனவே 2014 இல் அன்றைய முதலமைச்சர் செயலலிதா குற்றவியல் சட்ட விதி 432 ன் கீழ் ஏழு தமிழரை விடுதலை செய்வதாக அறிவித்து அதனை 435 (1) ன் கீழ் இந்திய அரசின் கருத்து கேட்டு அனுப்பிய போது அன்றைய காங்கிரசு ஆட்சி அச்சிக்கலை அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு கொண்டு சென்றது. அதில் 02.12.2015 அன்று வந்த தீர்ப்பு குற்றவியல் சட்டப்படியான மாநில அரசின் அதிகாரங்களையே பறிப்பதாக அமைந்து விட்டது. ஆயினும் அரசமைப்பு சட்ட உறுப்பு 161ன் படியான மாநில அரசின் தண்டனை குறைப்பு அதிகாரம் கட்டற்றது என்று மட்டும் உறுதி செய்தது. ஆளுநர் புரோகித்தின் செயல் இதையும் தட்டிப்பறிப்பதாக அமைந்தது. 

ஆளுநரின் முடிவை ஆதரிக்கும் சிலர் இராசிவ் காந்தி கொலை வழக்கில் இந்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டங்களும் இருப்பதால் குற்றவியல் சட்டம் 435 (1) ன் கீழ் பொருந்தும் இந்திய அரசின் அதிகாரம் 161 க்கும் பொருந்தும் என உள் நோக்கத்தோடு கூறுகிறார்கள்.

ஆனால் மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை வெட்டி குறைத்த உச்ச நீதிமன்ற அரசரமைப்பு ஆயம் (இந்திய ஒன்றிய அரசு – எதிர் – முருகன் என்கிற சிறிகரன் மற்றும் பிறர் வழக்கு) கூட உறுப்பு 161ன் கீழ் மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது, எந்த நேரத்திலும் செயல்பட கூடியது என்று கூறியது மட்டும்மல்ல “ஆளுநர், அதாவது அவர் தொடர்புடைய அவரது அமைச்சரவை, இந்திய குடியரசுத் தலைவரை விட உயரதிகாரம் படைத்தது அல்ல என்றாலும் அரசமைப்பு சட்ட உறுப்பு 161 இதற்கு விதிவிலக்கானது. குடியரசுத் தலைவரின் அதிகாரமும் மாநில ஆளுநரின் அதிகாரமும் தண்டனைக் குறைப்பு குறித்த செய்தியில் ஒன்றுக்கொன்று இணையானவை, ஒன்றுக்கொன்று சமமானவை” எனக் கூறியது.

“மாநில அரசின் நிர்வாக அதிகார எல்லையில் எந்த சட்டத்தின் படி தண்டிக்கப்பட்ட எந்த நபரின் தண்டனையையும் குறைக்கவோ, நிறுத்தி வைக்கவோ, மீட்சி வழங்வோ, மன்னிப்பு வழங்கவோ மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு” என்பது தான் உறுப்பு 161.

இதில் குறிப்பிடப்படும் “மாநில அரசின் நிர்வாக அதிகார எல்லை” என்பது மாநில எல்லையைக்குறிக்கிறது என்பதை தவிர வேறொன்றுமில்லை.

சட்ட நிலைகள் தெளிவாக இருந்தாலும் ஆளுநர் புரோகித் இது தனது அதிகாரத்திற்கு உட்டபட்டது அல்ல என்று கூறி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பது தான்தோன்றிதனமான சட்ட கவிழ்ப்பாகும். இது நடந்து ஓராண்டு கூட ஆக வில்லை. 
இந்த நிலையில் 161 ன் கீழ் தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் இதே நிலை ஏற்படும் ஆபத்து உண்டு.

மேலும் சில நண்பர்கள் ஆளுநரின் சட்ட கவிழ்ப்பை சுட்டி காட்டி நீதி மன்றத்தை அணுகலாம் என கருத்து தெரிவிக்கின்றனர். சட்டப்படி இது சரிதான் என்றாலும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டால் உறுப்பு 161, 163 (1) ஆகியவற்றையும் அரசமைப்புச் சட்ட ஆயத்திற்கு அனுப்பி நிச்சயமற்ற நிலையை உருவாக்கிவிடும் ஆபத்து உண்டு என உணர முடியும்.

இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இந்திய தலைமைச்சரை சந்தித்து வலியுறுத்திவிட்டு தமிழ்நாடு தண்டனை இடை நிறுத்த விதிகள் பிரிவு 40- ஐ பயன்படுத்தி பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், இரவிச்சந்திரன், இராபட்பயஸ், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களுக்கு காலவரையற்ற நீடித்த விடுப்பு வழங்கி இடைக்கால விடுதலை தருவதே தமிழ்நாடு அரசின் முன் உள்ள கடமை என வலியுறுத்துகிறோம்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, May 24, 2021

"ஏழு தமிழர் விடுதலை: ஸ்டாலின் இதைச் செய்வாரா?" - "எமது தேசம்" ஊடகத்துக்கு.. தோழர் கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"ஏழு தமிழர் விடுதலை: 

ஸ்டாலின் இதைச் செய்வாரா?"



"எமது தேசம்" ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, February 5, 2021

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு முதலமைச்சர் உண்மையை உரைக்க வேண்டும்! ஐயா கி. வெங்கட்ராமன்


பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு முதலமைச்சர் உண்மையை உரைக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


தனது சட்டக் கடமையை முற்றிலும் மீறி ஏழு தமிழர் விடுதலை குறித்து தான் முடிவெடுக்க முடியாது என்றும், குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என்றும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் தனது முன்விடுதலை கோரி பேரறிவாளன் தொடுத்த வழக்கில், நீதிபதி நாகேசுவரராவ் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் முன்விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவை அளித்த பரிந்துரையின் மீது இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது அதிருப்தி அளிப்பதாக தனது கண்டனத்தை வெளிப்படையாகப் பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்குரைஞர், ஆளுநர் மூன்று நாட்களில் இதுகுறித்து முடிவெடுப்பார் என்று முதலிலும், அடுத்த நாள் ஒருவாரத்தில் முடிவெடுப்பார் என்றும் பதிலுரை தாக்கல் செய்தது.

இந்நிலையில், 2021 சனவரி 25ஆம் நாளிட்ட தனது கடிதத்தின் வழியாக ஆளுநர் “இதுகுறித்து, தான் முடிவெடுக்க முடியாது. தொடர்புடைய அதிகாரமுள்ளவர் குடியரசுத் தலைவர்தான்” என்று தெரிவித்துவிட்டதாக நேற்று (04.02.2021) உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்குரைஞர் பதிலுரை அளித்திருக்கிறார்.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163-இன்படி, ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். அவருக்கு எந்தத் தனிப்பட்ட விருப்பு அதிகாரமும் கிடையாது. இந்த நிலையில், ஆளுநர் புரோக்கித்தின் இந்த முடிவு முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்! தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் இருப்பதற்கே உள்ள தகுதியை இழந்துவிட்டார்.

ஏழு தமிழர் விடுதலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, சட்டமன்றத்தில் பதிலுரைத்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தான் கடந்த 2021 சனவரி 29 அன்று ஆளுநரை சந்தித்து ஏழு தமிழர் விடுதலை குறித்து வலியுறுத்தியதாகவும், இதுகுறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் தேவையில்லாமல் எதிர்க்கட்சியினர் பிரச்சினை செய்கிறார்கள் என்றும் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்தது சனவரி 29ஆம் நாள். ஆனால், ஆளுநரோ சனவரி 25ஆம் நாளே ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, தனது பதிலுரையை அளித்திருக்கிறார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணமும் அதை உறுதி செய்கிறது.

அப்படியானால், சனவரி 29 அன்று தன்னை சந்தித்த முதலமைச்சரிடம் ஆளுநர் இந்த உண்மையை மறைத்திருக்கிறாரா? அல்லது ஆளுநர் இந்த உண்மையைச் சொன்ன பிறகும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்லியிருக்கிறாரா என்பது நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்!

இச்சிக்கலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரட்டை வேடம் போடுகிறார் என்பதை தொடர்ந்து கூறிவருகிறோம். பேரறிவாளன் தொடர்பான பரோல் வழக்கிலேகூட, அவரை சிறை விடுப்பில் விடக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்டது. அதனைப் புறக்கணித்து, உயர் நீதிமன்றம் பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு வழங்கியது. எடப்பாடி பழனிச்சாமி அரசின் அணுகுமுறைக்கு இது சான்று கூறுகிறது!

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து இப்போதாவது உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

ஆளுநரின் அப்பட்டமான இந்த சட்டமீறல் அவரது தமிழினப் பகைப் போக்கை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே அன்றைய தலைமை நீதிபதி தத்து தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் 2015ஆம் ஆண்டு திசம்பரில் உறுப்பு 161இன்படி, மாநில அமைச்சரவை பரிந்துரை பெற்று ஆளுநர் இராசீவ்காந்தி வழக்கில் சிறையிலுள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய எந்தத் தடையும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ள சூழலில், உச்ச நீதிமன்றம் அரசமைப்பு உறுப்பு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும், மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வழி ஏற்படுத்த வேண்டும்.

இந்திய அரசு தனது தமிழினப் பகை நோக்கை செயல்படுத்துவதற்காக எந்தளவுக்கு சட்ட மீறலில் ஈடுபடும் என்பதையும், தமிழ்நாடு அரசு பா.ச.க. அரசோடு தனக்குள்ள கீழ்நிலை உறவுக்காக தமிழர் உரிமையை மட்டுமின்றி, தனது அமைச்சரவைக்கு உள்ள சட்ட உரிமையை பலியிடும் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இச்சிக்கலில் நடந்த உண்மை என்ன என்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்க வேண்டுமென்றும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கு உண்மையாக செயல்பட வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துகிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


Sunday, January 31, 2021

“ஏழு தமிழர் விடுதலை மறுப்பு தமிழினப் பகையே!” “லைட்ஸ் ஆன்” ஊடகத்துக்கு, ஐயா கி. வெங்கட்ராமன் அவர்கள் நேர்காணல்!

“ஏழு தமிழர் விடுதலை மறுப்பு 

தமிழினப் பகையே!”



“லைட்ஸ் ஆன்” ஊடகத்துக்கு,

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் அவர்கள் நேர்காணல்!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, November 19, 2020

"முதல்வரே கவர்னரிடம் அடித்துப்பேசுங்கள்! எழுவர் விடுதலையை உறுதிபடுத்துங்கள்!" -தூசு அம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் - ஐயா பெ. மணியரசன் நினைவேந்தல் உரை!

"முதல்வரே கவர்னரிடம் அடித்துப்பேசுங்கள்! எழுவர் விடுதலையை உறுதிபடுத்துங்கள்!"


தமிழ்த்தேசியப் போராளி தோழர் தமிழரசன் அவர்களின் தாயார் வீரத்தாய் பதூசு அம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில்  தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் நினைவேந்தல் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, November 17, 2020

உச்ச நீதிமன்றம் கண்டித்தும் பேரறிவாளன் விடுதலையை மறுத்தால் தமிழின வெறுப்பு - தமிழினத் துரோகம்! ஐயா பெ. மணியரசன்.


உச்ச நீதிமன்றம் கண்டித்தும்
பேரறிவாளன் விடுதலையை மறுத்தால்
தமிழின வெறுப்பு - தமிழினத் துரோகம்!

பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

நீட் தேர்வு நீக்கம், மருத்துவ மேற்படிப்பில் நடுவண் அரசுத் தொகுப்பிற்குக் கொடுக்கும் தமிழ்நாட்டு இடங்களில் இடஒதுக்கீடு போன்றவற்றில் உச்ச நீதிமன்றம் தங்கள் கைகளைக் கட்டிப் போட்டது; நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறிக் கொள்ளும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், ஏழு தமிழர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிப் பல ஆண்டுகள் ஆன பின்னும் செயல்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி, பரவலாகத் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.

அன்றையத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் 18.02.2014 அன்று அளித்த தீர்ப்பில், சிறையாளிகளின் தண்டனைக் குறைப்பு, விடுதலை ஆகியவற்றில் மாநில அரசுக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்கும் அதிகாரம் தங்கு தடையற்றது; நிபந்தனை இல்லாதது என்று கூறியது. அந்த அரசமைப்பு ஆயம் ஏழு தமிழர் விடுதலைக்கு அன்றைய முதலமைச்சர் செயலலிதா போட்ட ஆணையை எதிர்த்து அமைக்கப்பட்டது ஆகும்.

செயலலிதா நேரடியாகப் போட்ட விடுதலை ஆணையை செல்லாது என்று கூறிய நீதிபதி சதாசிவம் ஆயம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் மாநில அமைச்சரவை பரிந்துரை நிறைவேற்றி ஆளுநர் கையொப்பம் பெற்று, தனது மாநிலத்தில் உள்ள எந்தக் கைதிக்கும் தண்டனைக் குறைப்பு வழங்கலாம்; விடுதலை செய்யலாம் என்று தனது தீர்ப்பில் கூறியது.

உச்ச நீதிமன்றம் அவ்வாறு கதவு திறந்து விட்டும் அன்றைய முதல்வர் செயலலிதா தனது அமைச்சரவையில் ஏழு தமிழர் விடுதலைக்குப் பரிந்துரை நிறைவேற்றி ஆளுநர்க்கு அனுப்பவில்லை.

அதன்பிறகு, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட்டது. அது தண்டனைக் கைதிகள் விடுதலை பற்றி ஆய்வு செய்து 2015 ஆகத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த ஆயமும், அரசமைப்புச் சட்டக் கூறு 161-இன் கீழ், மாநில அரசு ஆளுநர் வழியாக எந்தக் கைதியையும் விடுதலை செய்யலாம்; நடுவண் அரசின் புலனாய்வுத்துறை நடத்திய வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்யலாம் என்று தனது தீர்ப்பில் கூறியது. அத்துடன் இதில் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 – மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரம் தங்கு தடையற்றது (Unfettered) என்றும் கூறியது.

2015 ஆகத்து மாதம் வந்த இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்தி, ஏழு தமிழர்களை விடுதலை செய்ய அன்றைய முதலமைச்சர் செயலலிதா எதுவும் செய்யவில்லை.

இந்தப் பின்னணியில் தம்பி பேரறிவாளன் தன்னை விடுதலை செய்வதற்குரிய காரணங்களைக் கூறியும், தான் அப்பாவி என்பதற்கு, இராசீவ் கொலை வழக்கை விசாரித்த காவல் கண்காணிப்பாளர் தியாகராசன் பணி ஓய்வுக்குப் பின் – தான் செய்த தவறை வெளிப்படுத்தியதைச் சுட்டிக்காட்டியும், இவ்வழக்கின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கி தீர்ப்பு எழுதிய நீதிபதி கே.டி. தாமசு பணி ஓய்வுக்குப் பின், இராசீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பது – ஐயமற – தெள்ளத் தெளிவாக மெய்ப்பிக்கப்படவில்லை, எனவே அரசு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யலாம் என்று கூறி வந்ததையும் சுட்டிக்காட்டி – தன்னை விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு ஆளுநர்க்கு 2015 டிசம்பர் 30 அன்று விண்ணப்பித்தார்.

பேரறிவாளனின் இந்த மனுவைக் கிடப்பில் போட்டுவிட்டார் ஆளுநர். இந்த விண்ணப்பத்தின் மீது தமிழ்நாடு ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற ஆயங்களின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டியும் தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

பேரறிவாளனின் இந்த முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி நவீன் சின்கா, நீதிபதி கே.எம். சோசப் ஆகியோர் அமர்வு விசாரித்து, 06.09.2018 அன்று தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி, கைதிகளுக்குத் தண்டனைக் குறைப்பு – விடுதலை ஆகியவற்றை செயல்படுத்த மாநில அரசுக்குத் தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கிறது என்று அத்தீர்ப்பு கூறியது.

அதன்பிறகு, 09.09.2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது அமைச்சரவையைக் கூட்டி, மேற்படி இராசீவ் வழக்கில் 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யத் தீர்மானித்து, அப்பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, “ஆய்வு செய்வதாகக்” கூறிக் கொண்டு அமைச்சரவையின் பரிந்துரையைத் திட்டமிட்டுக் கிடப்பில் போட்டு விட்டார் ஆளுநர்.

தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடந்த 20.01.2020 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இவ்வளவு காலமாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல, அவர் என்ன செய்கிறார் என்று கேட்டுச் சொல்லுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு ஆணையிட்டது. கடந்த 03.11.2020 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேசுவரராவ் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்த்தோகி, ஏமந்த குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஆளுநர் தாமதம் செய்வதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

பன்னாட்டுச் சதி பற்றி விசாரணை இன்னும் முடியவில்லை; அதனால் இவர்களை விடுதலை செய்ய முடியாது என்று இந்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம். நடராசு கூறினார். உடனடியாக நீதிபதி நாகேசுவரராவ், “இவ்வழக்கில் சிறையில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். பன்னாட்டுச் சதி வழக்கில் இவர்களைச் சேர்க்க முடியாது. இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டுச் சதியைக் கண்டறிய முடியவில்லையா?” என்று கண்டனக் குரலில் கூறினார்.

ஆளுநர் விடுதலை செய்யக் கையொப்பமிடவில்லை என்றால், உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 –இன் கீழ் தானே முன்வந்து விடுதலை செய்யும் என்றார் நீதிபதி நாகேசுவரராவ். விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று எச்சரித்து வழக்கை 23.11.2020-க்குத் தள்ளி வைத்துள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கடும் எச்சரிக்கை மற்றும் கண்டிப்புக்குப் பின்னும் ஆளுநர் அமைதி காப்பதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைதி காப்பதும், அசைய மறுப்பதும் என்ன செய்தியை வெளிப்படுத்துகின்றன?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கத்தினால் கத்திக் கொள்ளட்டும். நான் மோடி – அமித்சாவின் கட்டளை இல்லாமல் அசையவே மாட்டேன் என்று ஆளுநர் பன்வாரிலால் வெளிப்படையாகச் சொல்லாமல் அனைவர்க்கும் உணர்த்துகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சரோ, கணக்குக் காட்ட - என் கடமையை முடித்து விட்டேன்; இதற்கு மேல் இதில் தலையிட்டு தில்லி ஆட்சியாளர்களின் எதிர்ப்பைத் தேடிக் கொள்ள நான் விரும்பவில்லை என்று எடப்பாடி சொல்லாமல் சொல்கிறாரா?

மோடி – அமித்சா – பன்வாரிலால் மூவருக்கும் தமிழினத்திற்கு எதிரான வெறுப்புணர்வு இருக்கிறது. பழிவாங்கும் உள்மன உந்துதல் இருக்கிறது. அதனால்தான் அரசமைப்புச் சட்டம் வழங்கும் நீதி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் வழிகாட்டல் – தமிழர்களுக்குப் பொருந்தாது; இன ஒதுக்கலுக்கு உள்ளாக வேண்டிய இனம் இது என்று அவர்கள் கருதலாம். ஆனால், எடப்பாடி அவர்களோடு ஒத்துப் போவது இனத்துரோகம் அல்லவா!

காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கேட்சேயை (நாதுராம் கோட்சேயின் தம்பியை) 14 ஆண்டுகளில் விடுதலை செய்தது மராட்டிய காங்கிரசு ஆட்சி! கோபால் கோட்சே மராட்டியர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை உடனடியாக நேரில் சந்தித்து, முதல் கட்டமாக தம்பி பேரறிவாளனை விடுதலை செய்யக் கையெழுத்துப் பெற வேண்டும். ஆளுநர் பன்வாரிலால் கையெழுத்துப் போட மறுத்தால் அவருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக தமிழ்நாடு அரசு மனுப் போட்டு – நடவடிக்கை கோர வேண்டும்.

முதல் கட்டமாகப் பேரறிவாளனை விடுதலை செய்ய இதுபோன்ற அல்லது அதற்குரிய வேறு வழியைக் கையாண்டு தமிழ்நாடு முதல்வர் தீர்வு காண வேண்டும். அதன்பிறகு அதே வழியில் எஞ்சிய ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

வெளிப்படையாக – பேரறிவாளன் விடுதலைக்குக் கருத்துத் தெரிவித்தும், ஆளுநரின் இரண்டாண்டு தாமதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை என்றால், கட்சி கடந்து தமிழின உணர்வாளர்கள் – நடுநிலையாளர்கள் – மனித உரிமை ஆர்வலர்கள் என்ன கணிப்பார்கள் என்பதையும் அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


Friday, November 13, 2020

"பேரறிவாளன் விடுதலைக்காக ஆளுரை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்!" - ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை!

"பேரறிவாளன் விடுதலைக்காக ஆளுரை
முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்!"



தமிழ்த்தேசிய பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, November 7, 2020

“பா.ச.க.வோடு அ.தி.மு.க. சேர்ந்தால் இந்த சாபம் எடப்பாடியை விடாது.!” “ழகரம்” ஊடகத்துக்கு...ஐயா பெ. மணியரசன் அவர்களின் பேட்டி!

“பா.ச.க.வோடு அ.தி.மு.க. சேர்ந்தால்

இந்த சாபம் எடப்பாடியை விடாது.!”


“ழகரம்” ஊடகத்துக்கு...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

ஐயா பெ. மணியரசன்  அவர்களின் பேட்டி!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT