உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழ்த் தேசியப் பேரியக்கம். Show all posts
Showing posts with label தமிழ்த் தேசியப் பேரியக்கம். Show all posts

Saturday, September 17, 2016

தஞ்சை இந்திய அரசு உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை! நூற்றுக்கணக்கானோர் கைது!


ர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும்
தஞ்சை இந்திய அரசு உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை!
நூற்றுக்கணக்கானோர் கைது!



உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரைத் திறந்து விட மறுத்து, கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி - தமிழர்களின் உடைமைகளை சூறையாடிய கன்னட இனவெறியர்களைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை அமைக்க மறுக்கும் இந்திய அரசைக் கண்டித்தும், தஞ்சை இந்திய அரசு உற்பத்தி வரி அலுவலகம் இன்று (16.09.2016) முற்றுகையிடப்பட்டது.
காவிரி உரிமை மீட்புக் குழு – அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள “காவிரி போராட்டக் குழு” சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரதாரவுடன் தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு நடந்து வரும் நிலையில், காவிரி போராட்டக் குழு சார்பில், தஞ்சை இந்திய அரசு உற்பத்தி வரி வசூல் அலுவலகம், திருவாரூர் ஓ.என்.ஜி.சி. அலுவலகம், நாகை இந்திய அரசு பெட்ரோலிய நிறுவனம் உள்ளிட்ட தமிழ்நாடெங்கும் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
தஞ்சையில் காவிரி போராட்டக் குழு சார்பில் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள இந்திய அரசின் உற்பத்தி வரிவசூல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யனாவரம் சி. முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. செயராமன், தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் திரு. நகர் செல்லையா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதில் பங்கேற்றுள்ளனர்.
“காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே! தமிழ்நாட்டில் வரி வசூலிக்காதே!”, “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களுடன் ஆவேசமாக எழுப்பிக் கொண்டு பேரணியாகச் சென்ற தோழர்களை, உற்பத்தி வரி அலுவலகத்தின் வாயிலில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். முன்னேறிச் செல்ல முயன்ற தோழர்களுடன் காவல்துறையினர் தள்ளுமுள்ளில் ஈடுபட்டன. தோழர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்தனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் இராசாரகுநாதன், தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி உள்ளிட்ட திரளான தோழர்கள் கைதாகியுள்ளனர். 

Tuesday, September 13, 2016

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைகளைத் தமிழர்களுக்கே வழங்கு! திருச்சியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது!





 தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில்

90 விழுக்காடு வேலைகளைத் தமிழர்களுக்கே வழங்கு! 

திருச்சியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் 

நூற்றுக்கணக்கானோர் கைது!


“வந்தவனெல்லாம் சுரண்டிக் கொழுக்க தமிழ்நாடென்ன திறந்த வீடா?”, “வெளியேற்று வெளியேற்று வெளியாரை வெளியேற்று!”, “இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைகளை தமிழர்களுக்கே வழங்கிடு!” - திருச்சித் தொடர்வண்டி நிலையத்தில், இன்று காலை விண்ணதிர எழுப்பப்பட்ட முழக்கங்கள் இவை!

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் – தொழிற்சாலைகளில் 90 விழுக்காடு வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேல் பணியில் உள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும், தமிழையே இந்த அலுவலகங்களில் ஆட்சி மொழியாகச் செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (12.09.2016) திருச்சி தொடர்வண்டிக் கோட்டத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்தியது.

போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, திருச்சி தொடர்வண்டி நிலையம் முன்பு பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சாலைப் போக்குவரத்து ஒரு பகுதி முடக்கப்பட்டது.
பேராட்டத்திற்காக, இன்று காலை முதல் தொடர்வண்டி நிலையத்தின் வாயிலில் பெண்கள் – குழந்தைகள் – முதியவர்கள் – இளைஞர்கள் என திரளாகத் திரண்ட தமிழ் மக்கள் இம்முற்றுகைப் போரில் பங்கேற்று, தொடர்வண்டி நிலையம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தியக் காவல்துறையினர், அவர்களைக் கைது செய்வதாக அறிவித்தனர்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அங்கேயே சாலையில் படுத்து மறியல் செய்தார். தோழர்கள் அனைவரும் மறியல் செய்து, சாலையில் அமரவே அவ்விடம் பரபரப்பானது. இன்னொருபுறத்தில், தொடர்வண்டி நிலையத்தின் முகப்பிலிருந்த தொடர்வண்டிப் பெட்டியின் மீது, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஏறி நின்று, “வெளியாரை வெளியேற்று” என ஆவேசமாக முழக்கங்கள் எழுப்பினர். செய்வதறியாது திகைத்தக் காவல்துறையினர், அனைவரையும் கைது செய்தனர்.

முன்னதாக, முற்றுகைப் பேரணியை பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தொடக்கவுரையாற்றிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார், ஓவியர் வீரசந்தனம், திருப்பூர் தமிழின உணர்வாளர் திரு. க.இரா. முத்துச்சாமி, புலவர் இரத்தினவேலவர், தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டச் செயலாளர் திரு. ம.பா. சின்னதுரை உள்ளிட்ட இன உணர்வாளர்கள் பலரும் முன்னிலை வகித்தனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை முற்றுகைப் போராட்ட முழக்கங்களை எழுப்பினார்.


தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், மதுரை இரெ. இராசு, குடந்தை விடுதலைச்சுடர், முருகன்குடி க. முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் இராசாரகுநாதன், ஒசூர் செம்பரிதி, பெண்ணாடம் கனகசபை, திருச்செந்தூர் தமிழ்மணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளர்களும் தோழர்களும் என சற்றொப்ப 500க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Tuesday, August 16, 2016

சம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் பெறவும் மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்கவும் செயல்படுமாறு தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்தி மக்கள் போராட வேண்டும்! தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!


சம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் பெறவும்
மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்கவும்
செயல்படுமாறு தமிழ்நாடு முதல்வரை வலியுறுத்தி
மக்கள் போராட வேண்டும்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!


கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா 15.08.2016 அன்று பெங்களூருவில் இந்திய விடுதலை நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் ரூபாய். 5,912 கோடியில் புதிய நீர்த்தேக்கம் கட்டத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். மேக்கேத்தாட்டுவில் 50 டி.எம்.சி. தண்ணீர் தேக்கும் அணைகள் கட்டுவது கர்நாடகத்தின் திட்டம்!

அப்படிக் கட்டிவிட்டால் வெள்ளப் பெருக்குக் காலங்களில்கூடக் கர்நாடக அணைகள் நிரம்பி மிச்ச நீர் மேட்டூர் அணைக்கு வரும் நிலை இருக்காது. காவிரி நீராவாரி நிகாம் மூலம் புதிதாக 430 ஏரிகளில் காவிரி நீரைத் தேக்கிட, அந்த ஏரிகளைக் குட்டி அணைகளாக மாற்றிட 1,002 கோடி ரூபாயில் திட்டம் தீட்டியுள்ளதாகவும் சித்தராமையா தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கர்நாடகத்தில் நீர், நிலம், மொழி விடயங்களில் அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகச் செயல்படுகின்றன என்றும் சித்தராமையா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தன்னல ஆதாய அரசியலும் அதனால் தனிநபர் பகை அரசியலும் கோலோச்சுகின்றன. எனவே இங்கு நடக்கும் கட்சிகளின் பகை அரசியல் தமிழர்களின் வாழ்வுரிமை, வரலாற்றுரிமை அனைத்தையும் பலியிட்டுக் கொண்டுள்ளன.

உச்ச நீதிமன்றம் 2013 சனவரி மாதம் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த இந்திய அரசுக்கும் தொடர்புடைய மாநில அரசுகளுக்கும் கட்டளை இட்டது. ஆனால் அத்தீர்ப்பின்படி அமைக்க வேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இந்திய அரசு மறுக்கிறது; தமிழ்நாட்டை வஞ்சித்து மறைமுகமாகக் கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களை ஆதரிக்கிறது நடுவண் அரசு.

செல்வி செயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு செயலற்ற அரசாக உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் தாய்ப்பாலாக ஓடிவரும் காவிரியின் மீது தமிழ்நாட்டிற்கு உள்ள வரலாற்று உரிமையை செயலலிதா தமது ஆட்சிக் காலத்தில் நிரந்தரமாக இழந்து விடுவாரோ என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகக் காவிரி அணைகளில் இப்போது மொத்தக் கொள்ளளவில் 80 விழுக்காடு அளவிற்குத் தண்ணீர் உள்ளது.

பொதுப்பணித்துறைப் பொறியாளர்களை அனுப்பிக் கர்நாடகக் காவிரி அணைகளை நேரில் பார்வையிடச் செய்து, நீர் இருப்பின் உண்மை அளவுகளை எடுத்து, அவ் விவரங்களுடன் தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவர் வல்லுநர் குழுவுடன் கர்நாடக முதல்வரைச் சந்திக்க வேண்டும். இருப்பு நீரில் தமிழ்நாட்டிற்குரிய சட்டப்படியான விகித நீரைத் திறந்துவிடக் கோர வேண்டும். மறுத்தால் உண்மை விவரங்களைப் பெங்களூருவில் செய்தியாளர் கூட்டம் நடத்தி வெளிப்படுத்த வேண்டும்.

அதன்பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு வலியுறுத்த வேண்டும் என்று கடந்த சூலை மாதத்திலிருந்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக் கொண்டோம்.

முதல்வர் செயலலிதா அசையவில்லை. கடிதம் எழுதுவது, உச்ச நீதிமன்றத்தில் மனுப் போடுவது என்ற வழக்கமான கண்துடைப்பு வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கர்நாடகம் மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை முதல்வர் செயலலிதாவால் தடுக்க முடியுமா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் காரைக்கால் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் 20 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும் பயன்படும் காவிரி நீர் உரிமையை மீட்கத் தமிழ்நாட்டு முதலமைச்சரையே செயல்பட வைக்க முடியவில்லை எனில், தமிழ் மக்களால் இந்திய அரசை எப்படி செயல்பட வைக்க முடியும், கர்நாடக அரசை எப்படி நீதியின் பக்கம் திருப்ப முடியும் என்ற வினா எழுகிறது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் காவிரி நீர் பெறவும், மேக்கேத்தாட்டு அணை முயற்சியைத் தடுக்கவும் செயல் துடிப்புள்ள நடவடிக்கைகளில் இறங்கிடக் கோரிக்கை வைத்துத் தமிழ் மக்கள் அறப் போராட்டங்கள் நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாகக் குறுவை சாகுபடியை இழந்தோம். இவ்வாண்டு சம்பா சாகுபடியும் கேள்விக் குறியாகிவிட்டது. எனவே, தமிழ்நாடு அரசு காவிரி நீர் பெற அரசியல் நடவடிக்கைகளில் களமிறங்கிட வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் நடத்த முன்வருமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

“போர்க்குணமுள்ள உழவர் ஒருங்கிணைப்பை உருவாக்கியவர் மருத்துவர் எம்.ஆர். சிவசாமி!” தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!



போர்க்குணமுள்ள உழவர் ஒருங்கிணைப்பை
உருவாக்கியவர் மருத்துவர் எம்.ஆர். சிவசாமி!”

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் எம்.ஆர். சிவசாமி அவர்கள் 14.08.2016 அன்று காலமான செய்தி, துயரமளிக்கிறது.

அவர், உழவர் பெருந்தலைவர் திரு. நாராயணசாமி அவர்களின் தலைமையில் இணைந்து களப் போராட்டங்கள் நடத்தியவர். 1970கள் மற்றும் 80களில் உழவர் உரிமைகளுக்காகவும் உழவர் துயர் துடைப்பதற்காகவும் நடந்த வீரஞ்செறிந்த போராட்டங்களின் தளபதியாக விளங்கியவர்.


அவர்கள் அப்போது நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் உழவர்களை அவமானப்படுத்தி கடன் வசூலிக்கும் முறை பெருமளவில் ஒழிந்தது. வேளாண்மைக்கு இலவச மின்சாரம் கிடைத்தது.
போர்க்குணமுள்ள உழவர் ஒருங்கிணைப்பை தமிழ்நாடு முழுவதும் உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் மருத்துவர் சிவசாமி. அவர் இறுதி மூச்சு வரை உழவர் உரிமைகளுக்காகவே போராடினார். வாழ்ந்தார்.

காவிரி உரிமைச் சிக்கலில் 1998-இல் அதிகாரமில்லாத போலித்தனமான ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்ட போது, அதை எதிர்த்து தமிழ்த் தேசியப் பேரியக்கம், மருத்துவர் சிவசாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம் ஆகியவை கூட்டாகப் பல போராட்டங்கள் நடத்தின. காவிரிச் சிக்கலில் அண்மைக்காலம் வரை மருத்துவரும், தமிழக விவசாயிகள் சங்கமும், தமிழ்த் தேசியப் பேரியக்கமும் கூட்டாக இயங்கிப் போராட்டங்கள் நடத்தியுள்ளன.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பிலும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் மருத்துவர் சிவசாமி அவர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் இல்லத்தாருக்கும் விவசாயிகள் சங்கத்தினருக்கும் ஆறுதலைக் கூறிக் கொள்கிறேன்.

தமிழீழத்தில் 107 முன்னாள் போராளிகள் அடுத்தடுத்து புற்றுநோயால் மரணம்! சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!



தமிழீழத்தில் 107 முன்னாள் போராளிகள் 
அடுத்தடுத்து புற்றுநோயால் மரணம்!

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!


2009ஆம் ஆண்டு தமிழீழத்தின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைப் பேரரின் போது, சிங்கள இராணுவத்தால் 11,786 தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகள் கைது செய்யப்பட்டு, பல்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். பல்லாண்டு கால சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட போராளிகளில் 107 பேர், அண்மைக்காலமாக மர்மமான முறையில் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளாகி இறந்துள்ளனர்.
நஞ்சு ஊசி போட்டும், உணவில் நஞ்சு கலந்தும் சிங்கள இராணுவம் தமிழீழப் போராளிகளை இனப்படுகொலை செய்ய இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக, தமிழீழ மக்களும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் ஐயப்படுகின்றனர். உடனடியாக தமிழீழ முன்னாள் போராளிகளுக்கு அயல்நாட்டு மருத்துவர்களைக் கொண்டு, சோதனைகள் நடத்த வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு மாகாண சபையிலும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
முன்னாள் போராளிகளின் மர்ம மரணத்தைக் கண்டித்தும், சர்வதேச அளவில் மருத்துவக் குழு அமைத்து விடுவிக்கப்பட்ட போராளிகளை சோதனை செய்யக் கோரியும், சென்னையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், 13.08.2016 அன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
தமிழ்நாடு முசுலிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி ஆர்.எம். அனீபா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தந்தை பெரியார் தி.க. வடக்கு மண்டலச் செயலாளர் தோழர் கரு. அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தோழர் கொண்டல்சாமி (மே17) நிகழ்வை நெறிப்படுத்தினார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி பங்கேற்றக் கண்டன உரையாற்றினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தோழர்கள் செ. ஏந்தல், வடிவேலன், கோ. நல்லன், த. சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Monday, August 15, 2016

.“திரைப்பாடல் இலக்கியத்தில் தமிழை உயர்த்திய கவிஞர் நா. முத்துக்குமார் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

.

.“திரைப்பாடல் இலக்கியத்தில் 
தமிழை உயர்த்திய கவிஞர் நா. முத்துக்குமார்”

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் இரங்கல்!


கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியைத் தருகிறது. இளம் அகவையில் இலக்கிய நாட்டத்துடன் கவிஞராக அரங்குகளிலும், பின்னர் திரைப்படத் துறையில் இலக்கியத் தரமும் புதிய உத்திகளும் கொண்ட பல பாடல்களை எழுதி மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்றவர்.
இக்காலத்தில் கலை இலக்கிய வளர்ச்சியில் – திரைத்துறைக்கு முகாமையான பங்களிப்புச் செய்தவர். அந்த வகையில் திரைப்பாடலில் தமிழின் சமகால வளர்ச்சிக்கு பெரும் பங்களித்தவர் முத்துக்குமார். அவருடைய மாணவர் பருவத்தில், காஞ்சிபுரத்தில் நடந்த எமது “தமிழ்க் கலை இலக்கியப் பேரவை” கூட்டங்களில் வந்து ஆர்வத்தோடு கலந்து கொண்டவர் முத்துக்குமார்.
தமிழ் மொழி உணர்வு - தமிழ் இன உணர்வு ஆகியவற்றிலும் அக்கறை கொண்டவர். சிறந்தத் திரைப்பாடலுக்காக அனைத்திந்திய அரசு விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். தமிழ் இலக்கிய மற்றும் சமூகவியல் துறையில், இன்னும் எவ்வளவோ சாதனைகள் படைக்க வேண்டிய நிலையில், அவர் காலமானது பேரிழப்பாகும். அதேவேளை, அவருடைய கவிதைகள் – திரைப்பாடல்கள் – கட்டுரைகள் வழியாக கவிஞர் நா. முத்துக்குமார் நிரந்தரமாகத் தமிழுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
கவிஞர் நா. முத்துக்குமார் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் கூறிக் கொள்கிறேன்.

Saturday, August 13, 2016

தோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு வீரவணக்கம்..! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!


தோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன்
அவர்களுக்கு வீரவணக்கம்..!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் இரங்கல்!


தமிழர் தன்மானப் பேரவை நிறுவனத் தலைவர் தோழர் அ.கோ. கஸ்தூரி ரெங்கன் அவர்கள் கடந்த 10.08.2016 அன்று உடல்நலக் குறைவால் காலமான செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
கடந்த மாதம் தஞ்சைத் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த போது, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களுடன் அங்கு சென்று தோழர் அ.கோ.க. அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தோம்.
சரியாகப் பேச முடியாத அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் என்னை அடையாளம் கண்டு ஒரு சில சொற்கள் பேசினார். ஓரளவு நலம் பெற்று ஊர் திரும்பிய அ.கோ.க. மறுபடியும் உடல்நலம் குன்றி நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்குதான் அவர் காலமாகியுள்ளார்.
பெரியாரியவாதியாக, மார்க்சியவாதியாகக் கீழத்தஞ்சை மாவட்டத்தில் மக்களைத் திரட்டி உரிமைப் போராட்டங்கள் பல நடத்தியவர் அ.கோ.க.
மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தலைமையில் அவர் செயல்பட்ட போது, உழவுத் தொழிலாளர்கள் உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைக்காகவும் களம் பல கண்ட வீரர் அவர்.
ஒரு வழக்கில் சிறைப்பட்ட போது அங்கேயும் சிறைவாசிகளுக்குக் கமுக்கமாக சங்கம் ஏற்படுத்தி, அவர்களின் போராட்டங்களை நடத்தியவர்களில் அ.கோ.க. தலைமையானவர்!
சிறந்த நுண்ணறிவு படைத்த அ.கோ.க. எந்தச் சிக்கலையும் உடனடியாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். நான்கு அமைப்புகள் சேர்ந்து தமிழ்த் தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பு உருவாக்கியதில் தோழர் அ.கோ.க. அவர்களுக்குக் காத்திரமான பங்குண்டு. இளைஞர்களை ஈர்க்கும் ஆற்றல் பெற்றவர்.
தோழர் அ.கோ.க. அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அ.கோ.க. அவர்களின் இயக்கத் தோழர்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, July 31, 2016

இந்திய அரசே! காசுமீரிகள் மீதான தாக்குதலை உடனே நிறுத்துக! கண்டனப் போராட்டங்கள்




இந்திய அரசே! காசுமீரிகள் மீதான
தாக்குதலை உடனே நிறுத்துக!

கண்டனப் போராட்டங்கள்


காசுமீரில் வெறியாட்டம் நிகழ்த்தி வரும் இந்திய அரசைக் கண்டித்து, மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், நேற்று (29.07.2016) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா முதன்மைச்சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்க மதுரை மாநகரச் செயலாளர் தோழர் ரெ. இராசு தலைமை தாங்கிப் பேசினார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் முழக்கங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார். பேரியக்க தோழர் மூ. கருப்பையா, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சு. அருணாச்சலம், எஸ்.டி.பி.ஐ. மதுரை மாவட்டச் செயாளர் திரு. அப்துல் காதர், தமிழர் தேசிய முன்னணி மாவட்டத் தலைவர் தோழர் வெ. கணேசன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்திக், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் பே. மேரி, பேரியக்கத்தோழர் கதிர்நிலவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நுங்கம்பாக்கம்
---------------------------
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், கடந்த 21.07.2016 அன்று, காசுமீரில் வன்முறையில் ஈடுபட்டு வரும் இந்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. அப்துல் சமது, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், மா.லெ. மக்கள் விடுதலை தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சதீசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி பங்கேற்றுக் கண்டன உரையாற்றினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை செயலாளர் தோழர் கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தோழர்கள் சாமி, ஏந்தல் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
அம்பத்தூர்
-----------------------
28.07.2016 அன்று, அம்பத்தூரில் தமிழர் விடுதலைக் கழகம் சார்பில், அதன் முன்னணித் தோழர் “மானிடமனம்” சேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் சுந்தரமூர்த்தி, மனித நேய சனநாயகக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பொழிலன், இந்திய தவ்கீத் சமாத் தலைவர் திரு. எஸ்.எம். பாக்கர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன் பங்கேற்றுக் கண்டனவுரையாற்றினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், ஏந்தல், செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய அரசே! 
காசுமீரில் வெறியாட்டங்களை நிறுத்து!
காசுமீரிகளிடம் பொது வாக்கெடுப்பு நடத்து!

Friday, July 29, 2016

சீராய்வு முடிவுக்காகக் காத்திராமல் ஏழு தமிழர்களை 161-இன்படி விடுதலை செய்க! தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!


சீராய்வு முடிவுக்காகக் காத்திராமல்
ஏழு தமிழர்களை 161-இன்படி விடுதலை செய்க!

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை! 


அரசமைப்பு ஆயத் தீர்ப்பின் மீதான சீராய்வு மனுவைக் காரணம் காட்டி, இராசீவ் காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளிகளாக உள்ள ஏழு தமிழர் விடுதலையை தமிழ்நாடு அரசு தள்ளிப்போட்டுவிடக் கூடாது.

குற்றவியல் சட்டப்பிரிவு 435, மாநில அரசுக்கு வழங்கும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை நடுவண் அரசின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது என உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் கடந்த 02.12.2015 அன்று அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சீராய்வு மனு போட்டுள்ளது.

இச்சிக்கல் ஏழு தமிழரை விடுதலை செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததிலிருந்து தொடங்கினாலும், அரசமைப்பு ஆயத் தீர்ப்புக்குப் பிறகு அது ஏழு தமிழர் வழக்கிற்கு நேரடித் தொடர்பற்றதாக மாறிவிட்டது.

குற்றவியல் சட்டப்பிரிவு 435(2) மாநில அரசுக்கு வழங்கியிருந்த தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை இந்திய அரசின் இசைவின்றி செயல்படுத்த முடியாது என அரசமைப்பு அமர்வு அளித்தத் தீர்ப்பே சீராய்வு மனுவில் விவாதிக்கப்படுகிறது. இது மாநில அரசிற்குள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை வெட்டிச் சுருக்குகிறது என்ற ஒன்றிய – மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகார எல்லை குறித்த சிக்கலாகும்.

இப்பொதுவான சட்ட சிக்கலை ஏழு தமிழர் வழக்கோடு நிரந்தரமாக முடிச்சுப் போடக் கூடாது. அவ்வாறு செய்வது, ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதாவுக்கு உண்மையான அக்கறையில்லை என கருதவே இடமளிக்கும்.

ஏனெனில், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் ஏழு தமிழருக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2011-இல் எழுந்த போது, முதலமைச்சர் செயலலிதா எழுப்பிய ஒரு முக்கியமான ஐயத்தை விவாதத்திற்குரிய இந்த அரசமைப்பு ஆயத் தீர்ப்புகூட தீர்த்திருக்கிறது.

மூன்று தமிழர் தூக்குத் தண்டனை 161-இன்படி கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையையொட்டி, காஞ்சி தழல் ஈகி செங்கொடி உயிரீகம் செய்த சூழலில், 29.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் செயலலிதா, “05.03.1991 நாளிட்ட கடிதத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில், அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-இன் கீழ் குடியரசுத் தலைவருக்குள்ள அதிகாரத்தின்படி நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161-இன் படியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 257(1)-இன்படி கட்டளையிடுகிறது” என்பதாகக் கூறினார்.

இவ்வாறான சட்டத்தடை ஏதுமில்லை, உறுப்பு 161-இன்படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது – நீதிமன்றத் தலையீட்டிற்கும் அப்பாற்பட்டது என திட்டவட்டமாக அரசமைப்பு ஆயத் தீர்ப்பு கூறிவிட்டது.

இந்நிலையில் ஒன்றிய – மாநில அதிகாரம் குறித்த பொதுவான அடிப்படை சிக்கல் தீரும் வரை ஏழு தமிழர் விடுதலையை நிறுத்தி வைப்பது தவறான முடிவாகிவிடும். ஏனெனில், ஒன்றிய – மாநில அதிகாரப் பகிர்வு குறித்த இந்த அடிப்படை சிக்கல் சீராய்வு மனு என்ற நிலையைத் தாண்டி, ஏழு நீதிபதிகள் அல்லது ஒன்பது நீதிபதிகள் கொண்ட முழு ஆயத்தின் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய தேவை எழக்கூடும். அது முடிகிறவரை, எந்த ஞாயமுமின்றி ஏழு தமிழர்கள் சிறையில் வாட வேண்டிய அவசியமில்லை.

எனவே, மாநில அரசு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி உடனடியாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிசந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Monday, July 25, 2016

அனகாபுத்தூரில் எளிய மக்களை வெளியேற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம்!



அனகாபுத்தூரில் எளிய மக்களை வெளியேற்றும்
தமிழ்நாடு அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம்!


கடந்த 2015ஆம் ஆண்டின் இறுதியில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது தமிழ்நாடு அரசு, செம்பரம்பாக்கம் ஏரியை இரவு நேரத்தில் முன்னறிவிப்பின்றி திறந்து விட்டது. இதன் காரணமாக, பெருமளவிலான வெள்ள நீர் சென்னை மாநகரக்குள் புகுந்து பெரும் அழிவை ஏற்படுத்தியது.
செம்பரபாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரும், கனமழையால் வந்த மழை நீரும் அடையாறு ஆற்றில் வெள்ளமென வந்த நிலையில், நீரின் போக்கைத் தடுத்து சென்னை மாநகருக்குள் கட்டப்பட்டிருந்த பெரு நிறுவன ஆக்கிரமிப்புக் கட்டங்களின் காரணமாக வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.


செம்பரம்பாக்கம் ஏரியை இரவு நேரத்தில் திடீரென திறந்துவிட்டது குறித்து தமிழ்நாடு அரசின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை நிலுவையிலுள்ளது.

இந்நிலையில், தனது நிர்வாகத்திறமையின்மை மற்றும் இரவு நேரத்தில் திடீரென செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதுதான் சென்னை மாநகரின் வெள்ளப் பெருக்கிற்கு முதன்மைக் காரணம் என்பதை மறைத்துவிட்டு, ஒட்டு மொத்த பாதிப்புகளுக்கும் எளிய மக்களின் குடியிருப்புகள் மட்டுமே காரணம் என்று கூறிக் கொண்டு, தமிழ்நாடு அரசு திசைதிருப்பும் பணிகளைச் செய்து வருகின்றது.

சென்னை மாநகருக்குள் அடையாறு மற்றும் கூவம் ஆற்றங்கரைகளிலும், மாநகருக்குள் உள்ள பல்வேறு ஏரிகளிலும் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் கட்டுமானங்கள் மீது கைவைக்க விரும்பாத தமிழ்நாடு அரசு, ஆற்றின் போக்கைத் தடுக்காமல் கரைகளில் வீடுகட்டி பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் எளிய மக்களின் குடியிருப்புகளை இடித்து நொறுக்கத் திட்டமிட்டு வருகின்றது.

அடையாறு ஆறு சென்னை மாநகருக்குள் பயணிக்கத் தொடங்கும் நந்தம்பாக்கம் தொடங்கி, கடலோடு கலக்கும் பட்டினப்பாக்கம் வரையிலான 12 கிலோ மீட்டர் தொலைவில்தான் பெரும் கட்டுமானங்கள் ஆற்றின் போக்கைத் தடுக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ளன என்று பல்வேறு வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மிக முகாமையாக, சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் ஓடு தளமே, அடையாறு ஆற்றின் போக்கைத் தடுத்து உருவாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியான செய்தி! மேலும், மணப்பாக்கம் மியாட் தனியார் மருத்துவமனை, நடுவண் அரசின் பறக்கும் தொடர்வண்டிக் கட்டுமானம் உட்பட பல கட்டிடங்களும் பல மென்பொருள் நிறுவனக் கட்டிடங்களும் வணிக வளாகங்களும் சென்னை மாநகருக்குள்தான் ஆற்றின் போக்கைத் தடுத்துக் கட்டப்பட்டுள்ளன.

அதிலும் முகாமையாக, அடையாறு ஆற்றின் நீர் கடலுக்குள் சேரும் பட்டினப்பாக்கம் பகுதியில் லீலா பேலஸ் நட்சத்திர விடுதி, செட்டிநாடு நிறுவனங்களின் கட்டடங்கள் காரணமாக, ஆற்றின் ஆழம் மிகவும் குறைந்து மேடாக இருப்பதும், பல்லாண்டுகளாக முகத்துவாரப் பகுதி தூர் வாரப்படாததும்தான், ஆற்று நீர் கடலுக்குள் போக முடியாமல் தண்ணீர் பல கிலோ மீட்டர் அளவிற்கு நகருக்குள் தேங்கி நிற்பதற்கு முதன்மைக் காரணம் என சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு அரசோ இந்த நிறுவனங்களின் கட்டுமானங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடையாறு ஆறு பயணித்து வரும் பகுதிகளில் “ஆக்கிரமிப்பு” என்ற பெயரில், எளிய மக்களை வெளியேற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது.
2015 _- பெருவெள்ளத்தைக் காரணம் காட்டி, காஞ்சி மாவட்டம், அனகாபுத்தூரிலுள்ள சாந்தி நகர், மூகாம்பிகை நகர், ஸ்டாலின் நகர், டோபிகானா உள்ளிட்ட பகுதிகளை இடித்துத் தள்ள தற்போது தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இதனைக் கண்டித்து, இப்பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் 650-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதற்கெதிரானப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கெனவே, சென்னை பெருவெள்ளம் ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே 2012ஆம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியின்போது, இதே பகுதி மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளிவிட்டு, அதன்மேல் அடுக்ககங்களில் வசிக்கும் பணம் படைத்தோர் நடைபயணம் செல்வதற்கு ஏதுவாக, ஆற்றோர நடைபாதை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், தற்போது சென்னை பெருவெள்ளத்தை காரணமாகக் கூறிக் கொண்டு, இதே பகுதியை முற்றிலும் இடித்து நொறுக்க திட்டமிடப்படுகின்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு நேர் எதிராக அடுத்த கரையில் அமைந்துள்ள மாதா பொறியியல் கல்லூரியின் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீது, ஒரு அடியைக்கூட மீட்கத் தயங்கும் தமிழ்நாடு அரசு, கரையின் இன்னொரு பகுதியில் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து கொண்டுள்ள பகுதியை, இடித்து நொறுக்கத் திட்டமிடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
அனகாபுத்தூர் பகுதி மக்களை வெளியேற்றக் கூடாது என்று கோரி, 22.07.2016 அன்று காலை, அனகாபுத்தூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில், அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்தை அப்பகுதி இளைஞர்கள் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.
பெண்களும் ஆண்களும் என நூற்றுக்கணக் கானோர் ஆர்ப்பாட்டத்தில் திரண்டு நின்று, அரசின் முடிவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தே.மு.தி.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அனகை முருகேசன், சி.பி.எம். பகுதிச் செயலாளர் தோழர் பாலன், புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் தோழர் தமிழ்வாணன், புரட்சி பாரதம் மாநிலத் துணைச் செயலாளர் திரு. அன்பரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கண்டன உரையாற்றினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி உரையாற்றினார். பேரியக்கத் தென்சென்னை செயலாளர் தோழர் கவியரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பொறுப்பாளர்களும், அப்பகுதி இளைஞர்கள் இராசேசு, மாரி, கோபி, குப்பன், வேல், நாகராசு, மாரியப்பன், குமார், ஞானவேல் உள்ளிட்ட திரளானப் பொது மக்களும் பங்கேற்றனர்.
அனகாபுத்தூர் மக்களை வெளியேற்றும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும். அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி, கரைகளை வலுப்படுத்தி, சென்னை மாநகருக்குள் உள்ள தனியார் நிறுவனக் கட்டுமானங்களை அகற்றினாலே அடையாறு ஆறு தடைபடாமல் ஓடும். எனவே, தமிழ்நாடு அரசு அதைச் செய்ய வேண்டும்.

Sunday, July 24, 2016

பியூசு மனுசைத் தாக்கிய சிறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு முதல்வரும் சென்னை உயர் நீதிமன்றமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


பியூசு மனுசைத் தாக்கிய சிறை அதிகாரிகள் மீது
தமிழ்நாடு முதல்வரும் சென்னை உயர் நீதிமன்றமும்
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


தமிழ்நாட்டுச் சிறைகள் எந்தளவிற்கு காட்டுமிராண்டிக் காலத்தில் இருக்கின்றன என்பதற்கு சேலம் மக்கள் மன்றத் தலைவர் திரு. பியூசு மனுசை, சேலம் நடுவண் சிறையில் - சிறைக் கண்காணிப்பாளரும் சிறைக் காவலர்களும் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதும் சித்திரவதை செய்ததுமே சாட்சியம்!
சேலம் முள்ளூர் கேட் என்ற இடத்தில் தொடர்வண்டி மேம்பாலம் கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்பட்ட போது பொது மக்களுக்கு மாற்று வழி அமைக்காமல் பணிகளைத் தொடங்கக் கூடாதென்று மறியல் போராட்டம் நடத்திய பியூசு மனுசு, ஈசன் கார்த்திக். முத்து ஆகிய மூவரையும், 08.07.2016 அன்று சேலம் காவல்துறையினர் தளைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறை அதிகாரிகளிடம் இம்மூவரும் இந்திய அரசுக் கொடியை எரித்;தவர்கள் என்றும் எனவே இவர்களை அடிக்குமாறும் காவல்துறையினர் கூறியதாகத் தெரிகிறது. அதனால் சிறைக் கண்காணிப்பாளர், இதர சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் உள்ளிட்ட 30 பேர் மிகக் கொடூரமாகத் தடியால் திரு. பியூசு அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். மற்ற இருவரும் 15.07.2016 அன்று பிணையில் விடுதலையான நிலையில், பியூசுக்கு மட்டும் பிணை மறுத்து தமிழ்நாடு அரசு கடுமையாக வாதாடியுள்ளது.

அண்மையில் பிணையில வந்த பியூசு, சிறையில் தமக்கு நடந்த கொடுமைகளை செய்தியாளர்களிடம் சொன்னதுடன், தன்மீது நடந்த அனைத்துத் தாக்குதல்களும் சிறைக்குள் இருந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

பியூசும் அவருடைய தோழர்களும் இந்திய அரசுக் கொடியை எரிக்கவில்லை. வாதத்திற்காக அவர்கள் அரசுக் கொடியை எரித்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், சட்டப்படி அதற்குத் தண்டனை தர விதிமுறைகள் இருக்கின்றன. அதைவிடுத்து, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை சிறை அதிகாரிகளும் காவலர்களும் காட்டுமிராண்டித்தனமாய் தாக்குவதற்கு எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது?

தமிழ்நாட்டுச் சிறைச்சாலைகள் எந்தளவிற்கு மனித உரிமைகளை பலியிடும் கொடூரக் கூடங்களாக இருக்கின்றன என்பதற்கு சேலம் சிறை நிகழ்வு, ஒரு எடுத்துக்காட்டு!
அனைவரும் தம்மை ‘அம்மா’ என்றழைப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகக் கூறிக் கொள்ளும் செயலலிதா ஆட்சியில், சிறைச்சாலைகள் மனித உரிமைப் பறிப்பு பலிபீடங்களாக இருக்கலாமா?

தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, சேலம் சிறையில் நடந்த உண்மைகளைக் கண்டறிந்து, அந்தக் காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதலில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரையும் இடை நீக்கம் செய்ய வேண்டும்.

நீதிபதிகள் அனுப்பும் கைதிகளுக்கானக் காப்புக் கூடங்கள்தான் சிறைச்சாலைகள். அவ்வாறு இருக்கும் போது, நீதிபதியால் காவலுக்கு அனுப்பப்பட்ட பியூசு மனுசுக்கு சிறை அதிகாரிகளால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு நீதித்துறைக்கு இருக்கிறது.

எனவே, பியூசு மனுசை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய நீதிபதியும், சென்னை உயர் நீதிமன்றமும் உடனடியாகத் தலையிட்டு குற்றம் புரிந்த சிறை அதிகாரிகள் - காவலர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில கொடூர நிகழ்வுகளை செய்தித்தாளில் படித்துவிட்டு தாங்களே வழக்காக எடுத்துக் கொள்ளும் நீதிபதிகள், சேலம் சிறைத் தாக்குதல் நிகழ்வைக் கண்டு அமைதி காக்கக் கூடாது!

தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு, பியூசு மனுசு மற்றும் இருவர் மீது போடப்பட்ட பொய் வழக்கைக் கைவிடச் செய்ய வேண்டும். மேற்கண்ட ஞாயங்களை நிறைவேற்றி நீதியை நிலைநாட்டுமாறு முதல்வரையும், சென்னை உயர் நீதிமன்றத்தையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Friday, July 22, 2016

வேலையில்லாதோருக்கு வேலையளித்தல், வேளாண் விளைபொருட்களுக்கு இலாப விலை அளித்தல் இரண்டுக்கும் செயல்திட்டம் அறிவிக்க வேண்டும். தோழர் பெ. மணியரசன் கோரிக்கை


வேலையில்லாதோருக்கு வேலையளித்தல்,
வேளாண் விளைபொருட்களுக்கு இலாப விலை அளித்தல்
இரண்டுக்கும் செயல்திட்டம் அறிவிக்க வேண்டும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை

இன்று (21.07.2016) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் 2016-2017 நிதிநிலை அறிக்கையில், தீர்வு காணப்படாத மிக முக்கியமான செய்திகளில் இரண்டை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறேன்.


1. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை தேடிப் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 92 இலட்சம். இவர்களில் பெரும்பாலோர் உரிய கல்வித் தகுதியும் சிறப்புத் தகுதிகளும் பெற்றவர்கள். இவர்களுக்கு வேலை வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

தமிழ்நாடு அரசின் கல்வித் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்கள் இலட்சக் கணக்கில் உள்ளன. அவற்றை நிரப்ப ஒரு சிறப்புத் திட்டம் தேவை.

அடுத்து, தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலை தராமல் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறார்கள். வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே மிக அதிக எண்ணிக்கையில் வேலை தருகிறார்கள். வேலைக்கான தேர்வு என்பதைச் சூதாக நடத்தித் தமிழர்களைப் புறக்கணிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டித் துறை, பி.எச்.இ.எல்., பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், பெட்ரோலியத் தொழிற்சாலைகள், நெய்வேலி அனல் மின் நிலையம், துறைமுகங்கள், வருமான வரி - உற்பத்தி வரி - சுங்கவரி அலுவலகங்கள்,கடவுச் சீட்டு அலுவலகங்கள், கணக்குத் தணிக்கை அலுவலகங்கள், வானூர்தி நிலையங்கள் என இந்திய அரசுத் துறையைச் சேர்ந்த அனைத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மண்ணின் மக்களுக்கு நேர்ந்துள்ள இந்த உரிமைப் பறிப்பைச் சரிசெய்ய, தற்போது கர்நாடகத்தில் செயல்பாட்டிலுள்ள “சரோஜினி மகிசி” குழு பரிந்துரைகள் போல், தமிழ் நாட்டிலும் விதிமுறைகள் தேவை. எனவே மண்ணின் மக்களுக்கு இந்திய அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலைகள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை இந்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு செய்திருக்க வேண்டும். 

தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாகவே மேற்கண்ட இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் வேலைக்கு ஆள் எடுக்க வேண்டும். ஏற்கெனவே இந்த முறைதான் செயல்பாட்டிலிருந்தது.


இந்தப் பணிகளுக்கு அனைத்திந்திய அளவில் தேர்வு வைக்கும் முறையைக் கைவிடுமாறு இந்திய அரசைத் தமிழ்நாடு அரசு கோரவேண்டும். இதற்கு முன்னோட்டமாகக் கர்நாடகத்தில் அமைக்கப்பட்ட சரோஜினி மகிசி ஆணையம் போல் ஓர் ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை இந்த நிதி நிலை அறிக்கையிலேயே சேர்க்க வேண்டும்.

2. உழவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களுக்குக் கட்டுபடியான விலை என்று சொல்லும் மோசடிச் சொற்கோவையை நீக்கி இலாப விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற கொள்கை அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் ஆகியோருக்குச் சம்பளம் நிர்ணயிக்கும் போது அவர்களின் குடும்பச் செலவையும் கணக்கில் கொள்வது போல் உழவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு விலை வரையறுக்கும்போது அவர்களின் குடும்பச் செலவையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இந்தக் கோட்பாட்டு அடிப்படையில் வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். அந்த ஆணையத்தில் தகுதியான வல்லுநர்களையும் வேளாண் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும்.

இப்பொழுது இடைக்கால ஏற்பாடாக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ3000 என்றும், கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ4000 என்றும் விலை நிர்ணயம் செய்து இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.

மேற்கண்ட இன்றியமையாத இரு கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு நடப்பு நிதி நிலை அறிக்கையில் சேர்க்குமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


Tuesday, July 19, 2016

அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையை மீட்டுத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சருக்கு தோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை!


அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும்
திருவள்ளுவர் சிலையை மீட்டுத்
தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்!

தமிழ்நாடு முதலமைச்சருக்கு
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை! 


உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ச.க. மாநிலங்களவை உறுப்பினர் தருண் விசய், தமிழினத்தின் பேராசான் திருவள்ளுவப் பெருந்தகையின் சிலையை, உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் நிறுவுவதற்கு 29.06.2016 அன்று விழா ஏற்பாடு செய்த நிலையில், அங்குள்ள வடநாட்டவர்கள் திருவள்ளுவர் சிலையை இங்கு நிறுவக் கூடாது என்று தடுத்து விட்டனர்.

அதன்பிறகு, அரித்துவாரில் உள்ள உ.பி. மாநிலத்திற்குச் சொந்தமான பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அச்சிலை நிறுவப்பட்டதாக செய்திகள் வந்தன.

ஆனால், இன்று (18.07.2016) ஆங்கில இந்து ஏட்டில் வந்த படமும் செய்தியும் மேற்படி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிறுவப்பட்டதாகச் சொல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை கருப்பு நெகிழித் தாள்களால் (பிளாஸ்டிக்) சுற்றப்பட்டு, கயிறுகளால் கட்டப்பட்டு மேற்படி வளாகத்தில் ஒரு மூலையின் கிடத்தி வைக்கப்பட்டுள்ள உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அப்படத்தைப் பார்த்த தமிழர்கள் தங்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போன்ற துயரத்தில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் 30.06.2016 அன்று வெளியிட்ட அறிக்கையில், வடநாட்டில் திருவள்ளுவர் சிலை இழிவுபடுத்தப்பட்டுள்ளது – இது தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல, அவமானமும் ஆகும், எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு அச்சிலையை மீட்டு தமிழ்நாட்டில் நிறுவி பேராசான் திருவள்ளுவருக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுதாவது திருவள்ளுவப் பெருந்தகைக்கு இழைக்கப்பட்டுள்ள அவமானத்தைத் துடைக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அந்தச் சிலையை மீட்டு, உடனடியாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து தக்க இடத்தில் நிறுவ வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியத்தேசியம் என்றும் தமிழர்களும் பாரத மாதா புத்திரர்கள் – புத்திரிகள் என்றும் பம்மாத்து செய்து கொண்டிருக்கும் ஆரியப் பார்ப்பனிய ஆற்றல்களும் அவர்களுக்கு அடிவருடிப் பிழைப்பு நடத்தும் இனத்துரோகிகளும் இந்தியாவில் தமிழர்களும் சமமாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்று கூறும் பொய்யைப் புரிந்து கொண்டு தங்கள் உரிமைகளைக் காக்க – தங்கள் தன்மானத்தைக் காக்க விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் முகமூடி அணிந்து கொண்டு, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. ஆகிய ஆரியப் பார்ப்பனிய அமைப்புகளை வேரூன்றச் செய்து வளர்த்திட செய்யும் தந்திரங்களை அடையாளங் கண்டு முறியடிக்க உறுதியேற்க வேண்டுமென்ற தமிழ் மக்களை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT