உடனடிச்செய்திகள்
Showing posts with label கி. வெங்கட்ராமன் பேரிடர்!. Show all posts
Showing posts with label கி. வெங்கட்ராமன் பேரிடர்!. Show all posts

Wednesday, April 29, 2020

ஊரடங்கைப் பயன்படுத்தி காவிரி உரிமையைப் பறிக்கிறது மோடி ஆட்சி! புதிய விதித் திருத்தத்தைக் கைவிட வேண்டும்! கி. வெங்கட்ராமன் அறிக்கை!


ஊரடங்கைப் பயன்படுத்தி

காவிரி உரிமையைப் பறிக்கிறது மோடி ஆட்சி!

புதிய விதித் திருத்தத்தைக் கைவிட வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!



கொரோனா நெருக்கடியில் அனைவரது கவனமும் இருக்கும் சூழலைப் பயன்படுத்தி, தனது ஆரியத்துவ சர்வாதிகார நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக நரேந்திர மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அரைகுறை தற்சார்ப்புத் தன்மையையும் முற்றிலும் குழி தோண்டிப் புதைக்கும் சட்ட விரோத ஆணையை இப்போது பிறப்பித்துள்ளது.

இந்திய அரசின் நிர்வாகப் பணிகள் ஒதுக்கீட்டு விதிகள் - 1961-க்கு, திருத்தங்கள் செய்வது என்ற பெயரில் இந்திய அரசின் நீர்வளத்துறை தொடர்பான திருத்த விதிகளை 27.04.2020 நாளிட்ட இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணையின் (S.O. 1371(E), 24.04.2020) வழியே அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்தத் திருத்த விதிகள் வழியாக, காவிரி மேலாண்மை ஆணையம் இந்திய அரசின் நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனமாக மாற்றப்படுகிறது. இதற்கென 33E என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.

ஏற்கெனவே இருந்த பணிகள் ஒதுக்கீட்டு விதியில், மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இப்போது புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிற பதிவு 33E–இன் வழியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்திய நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஏற்றாற்போல் பிற மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

ஏற்கெனவே உள்ள பணி ஒதுக்கீட்டு விதி 1961இல் பிரிவு IV – இந்திய நீர்வளத்துறை அமைச்சகம் நிர்வாகம் செய்ய வேண்டிய சட்டங்களைக் குறிக்கிறது. அவற்றுள் பதிவு 32 – மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் 1956-ஐக் குறிக்கிறது. அதாவது, 1956ஆம் ஆண்டு தண்ணீர் தகராறு சட்டத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு நீர்வளத்துறைக்கு இருக்கிறதென்று பொருள். ஆயினும், அந்தப் பொறுப்பு அதிகாரம், 1956 சட்டத்திற்கு இசைய அமைய வேண்டும் எனக் குறிக்கிறது. தண்ணீர் தகராறு சட்டம் – 1956இன் வரம்புக்குட்பட்ட வகையில்தான், நீர்வளத்துறை அதில் செயல்பட முடியும் என்று பொருள்.

இப்போதைய திருத்த விதி, இந்தப் பதிவு 32–ஐ விதியிலிருந்தே நீக்கி விடுகிறது. (Entry 32 omitted).

பதிவு 33 – ஆற்று வாரியச் சட்டம் 1956ஐக் (River Board Act, 1956) குறிக்கிறது. 1956ஆம் ஆண்டின் ஆற்று வாரியச் சட்டம், அதற்குக் கீழ் 33A முதல் 33E வரை புதிய பதிவுகள் இணைக்கப்படுகின்றன. அதில், 33E – காவிரி மேலாண்மை ஆணையமும் நீர்வளத்துறை அதிகாரத்தின் கீழ் வருவதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்றாற்போல், 7A என்ற புதிய பதிவு சேர்க்கப்படுகிறது.

இதுவரை இந்திய நீர்வளத்துறை கங்கை நிதி மேலாண்மை மற்றும் தூய்மையாக்கல் குறித்த அதிகாரத்தைத்தான் பெற்றிருந்தது.

இப்போது, 7A – இந்தியாவிலுள்ள அனைத்து ஆறுகளையும் பாதுகாப்பது, மேம்படுத்துவது, மேலாண்மை செய்வது மற்றும் தூய்மை சீர்கேட்டை தடுப்பது ஆகிய அதிகாரங்களை இந்திய நீர்வளத்துறைக்கு அளிக்கிறது. அந்தந்த மாநில அரசுகளின் ஆற்று நீர் மேலாண்மை தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் ஓசையில்லாமல் இந்திய அரசு பறித்துக் கொள்ள இந்நிர்வாக விதி சீர்திருத்தத்தின் வழியாகவே சட்ட விரோத ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தப் பதிவு 7A-வுடன் 33E-ஐ இணைத்துப் படித்தால்தான், இது எவ்வளவு பெரிய சர்வாதிகாரத்தனமான சட்டமீறல் என்பது புரியும்.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16இல் வழங்கிய இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்குமாறு தீர்ப்பு கூறியது. பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இத்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதாக இந்திய அரசு 2018 சூன் 1ஆம் நாளிட்ட ஆணையின் வழியாக அரசிதழில் வெளியிட்டது.

அந்த அறிவிப்பிலேயே காவிரி மேலாண்மை ஆணையம் தற்சார்பான கூட்டுரு நிறுவனம் (Body Corporate) எனத் தெளிவாக அறிவித்தது. (The Cauvery Water Management Authority shall be a body corporate having perpetual succession and a common seal and shall sue and be sued). இந்த ஆணையத்தின் தலைவரையும், 2 நிரந்தர உறுப்பினர்களையும் வாக்களிக்கும் உரிமை இல்லாத செயலாளரையும் பணியமர்த்துவது இந்திய அரசின் உரிமை. தொடர்புடைய ஒவ்வொரு மாநிலமும் தங்கள் சார்பாக இரண்டு இரண்டு பகுதி நேர உறுப்பினர்களை இந்த ஆணையத்திற்கு அமர்த்த வேண்டும் என்று இந்த அறிவிப்பு கூறுகிறது. இவ்வாறு ஆணையத்தை அமர்த்தப்பட்டதற்குப் பிறகு, அதன் நிகழ்ச்சி நிரலையும், மற்ற பணிகளையும் முடிவு செய்து கொண்டு இயங்கும் தற்சார்பு அதிகாரம் ஆணையத்திற்கே உண்டு என்பதையும் 2018 சூன் 1 அறிவிக்கை தெளிவுபடக் கூறுகிறது.

இந்த ஆணையம் செயல்படுவதற்கு முன் தொகையாக 2 கோடி ரூபாய் இந்திய அரசு வழங்கினாலும், அதன் தொடர் செயல்பாட்டுக்கான நிதிப் பொறுப்புக்கு தற்சார்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு 40%, கர்நாடகம் 40%, கேரளம் 15%, புதுச்சேரி 5% என்ற வகையில் பிரித்துக் கொள்ள வேண்டுமென்றும், தங்கள் தங்கள் மாநிலம் தொடர்பான ஆணைய உறுப்பினர்களின் செலவுகளை அந்தந்த மாநிலமே ஏற்க வேண்டும் என விதிகள் உருவாக்கப்பட்டன.

ஆணையத்தின் தலைவராக அமர்த்தப்படக்கூடியவரின் கல்வி மற்றும் பணித் தகுதிகளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியாக வரையறுத்தது. அதன்படி 2018 சூன் ஆணையும் வரையப்பட்டது. ஆனால், இப்போது, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பதிவு 33E-இன் வழியாக, இந்தத் தற்சார்பு முற்றிலும் குடை சாய்க்கப்படுகிறது.
இதற்கு மாநிலங்களிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் – 1956, வரம்பு விதிக்கும் என்பதால் அதைக் குறித்தப் பதிவு 32 (Entry 32) இப்போது நீக்கப்படுகிறது.

அதற்குப் பதிலாக, எல்லா ஆறுகளின் மீதும் முற்றதிகாரம் செலுத்தும் வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய பதிவு 7A சேர்க்கப்படுகிறது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 77 (3)-இன்படி, இந்தப் பணி ஒதுக்கீட்டு விதித் திருத்தம் செய்யப்படுவதாக இந்த அறிவிக்கைக் கூறுகிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்திலோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையோ மீறுவதற்கு இந்த 77 (3) குடியரசுத் தலைவருக்கு, அதாவது இந்திய அமைச்சரவைக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கிவிடவில்லை.

அரசமைப்புச் சட்டம் பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் அதிகாரச் சமநிலையை நிலை நிறுத்தும் நோக்கம் கொண்டது. எடுத்துக்காட்டாக, தலைமைத் தேர்தல் ஆணையரை உரிய சட்ட வழிமுறைப்படி இந்திய அரசுதான் அமர்த்திக் கொள்ள வேண்டும். பணியமர்த்தும் அதிகாரம் இந்திய அரசுக்கு இருந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தற்சார்பு அதிகாரத்தில் அரசு குறுக்கிட முடியாது. அரசமைப்புச் சட்டம் அதை அனுமதிக்காது. அதேபோலத்தான், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வெளியிடப்பட்ட அரசு அறிவிக்கை உறுதிப்படுத்திய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்சார்புத்தன்மையை ஒரு நிர்வாக விதித் திருத்தத்தின் மூலம் மாற்றியமைத்துவிட முடியாது.

பல்வேறு அமைச்சகங்களுக்கிடையில், பணி எளிமைக்காக (For the more convenient transaction of the business of the Government of India) பணி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தைத்தான் 77 (3) வழங்குகிறது. இதை முற்றிலும் தவறாகப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மீறுவதற்கான இந்த ஏற்பாடு, குடியரசுத் தலைவரின் வழியாக நரேந்திர மோடி ஆட்சி நிகழ்த்துகிற சட்டக்கவிழ்ப்பாகும்.

எல்லோரின் கவனமும், கவலையும் கொரோனா நெருக்கடியில் குவிந்திருக்கும்போது, நரேந்திர மோடி அரசு செய்திருக்கும் இந்த சர்வாதிகார நடவடிக்கை முற்றிலும் கோழைத்தனமானது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு எஞ்சியுள்ள மிகக் குறைந்த உரிமையையும் தட்டிப் பறிக்கும் இனப்பகை செயலாகும்! இதனை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!

இந்தியக் குடியரசுத் தலைவரின் அறிவிக்கை (S.O. 1371(E), 24.04.2020) வழியாக செய்யப்பட்டுள்ள பணி ஒதுக்கீடு விதித் திருத்தங்களை முற்றிலும் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நரேந்திர மோடி அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


Tuesday, March 24, 2020

கொரோனா மக்கள் முடக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உடனடியாக வாழ்வூதியம் வழங்குக! கி. வெங்கட்ராமன் அறிக்கை!


கொரோனா மக்கள் முடக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள உடனடியாக வாழ்வூதியம் வழங்குக!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!



இந்திய அரசு தேசியப் பேரிடராக அறிவித்துள்ள கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, இன்று (22.03.2020) அனைத்திந்திய அளவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. வரும் மார்ச்சு 31ஆம் நாள் வரை அனைத்திந்திய அளவில் தொடர்வண்டிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதிலுருமிருந்து 75 மாவட்டங்களை இதர பகுதிகளிலிருந்து துண்டித்து, தனிமைப்படுத்த வேண்டுமென இந்திய அரசு அறிவித்துள்ளது. அதில், தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களும் உள்ளன. இதன் காரணமாக, இம்மாவட்டங்களில் வரும் மார்ச்சு 31 ஆம் நாள் வரை முழுமையான பணி முடக்கம் செயலாக்கப்படவுள்ளது. போக்குவரத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகள் நோய்த் தொற்றைத் தவிர்க்க உதவினாலும், இம்முடக்கம் காரணமாக எழும் சமூகப் பொருளியல் சிக்கல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து, கடந்த 19.03.2020 அன்று அறிக்கை வெளியிட்ட நாம், இப்பொருளியல் முடக்கம் காரணமாக பாதிக்கப்படும் பல இலட்சக்கணக்கான குறை ஊதிய தொழிலாளர்களின் நிலைமையைக் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு பேரிடர் கால வாழ்வூதியம் வழங்க வேண்டுமெனவும் அறிக்கை விடுத்திருந்தோம். ஆனால், அதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறது.

ஏற்கெனவே உள்ள பொருளியல் மந்தத்தோடு, கொரோனா வைரஸ் சிக்கல் இணைந்து ஒட்டு மொத்தப் பொருளியல் நடவடிக்கைகளும் முடங்கியுள்ள இச்சூழலில், இவற்றால் பாதிக்கப்படும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைப் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டிய அரசு, அதனைத் தட்டிக் கழிப்பது சரியல்ல.

எனவே, தேசியப் பேரிடர் கால வாழ்வூதியம் வழங்கும் பொறுப்பை ஏற்று, தமிழ்நாட்டிலுள்ள குடும்ப அட்டை உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஆகும் அதிகபட்ச செலவான 13,000 கோடி நிதியை - தேசியப் பேரிடர் கால உதவியாக இந்திய அரசு 75 விழுக்காடும், தமிழ்நாடு அரசு 25 விழுக்காடும் எனப் பகிர்ந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசின் வழியாக ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் இத்தொகை செலுத்தப்பட வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாத குடும்பங்களுக்கு அவரவர்களுக்குரிய ரேசன் கடைகளின் வழியாக வழங்கப்பட வேண்டும்.
அதேபோல், இந்தப் பேரிடர் காலத்தில் ரேசன் கடைகளில் வழக்கமாக வழங்கும் விலையில்லா அரிசிக்கு மேலாக, நாள் ஒன்றுக்குக் கூடுதலாக குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் ஒரு கிலோ அரிசியை மானிய விலையில் ரூபாய் மூன்றுக்கு வழங்க வேண்டும். மண்ணெண்ணெய், பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் வழங்கலை அரை மடங்குக் கூடுதலாக்கி, மானிய விலையில் வழங்க வேண்டும்.

விடுமுறை அறிவிக்கப்பட்ட சத்துணவு பெறும் மாணவர்களுக்கு கேரள அரசு செய்வதைப் போல், அம்மாணவர்களுக்குரிய சத்துணவை பாதுகாக்கப்பட்ட பொட்டலங்களில் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்.

அம்மா உணவகங்களின் உணவு வழங்கல் அளவை இரட்டிப்பாக்கி, அதற்குரிய கூடுதல் ஊழியர்களையும் இக்காலத்தில் அமர்த்தி மானிய விலை அம்மா உணவகங்களைக் கூடுதலாக அமைப்பதற்கு சிறப்பு நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிறுதொழில்களுக்கு இடர்நீக்க நிதி வழங்குவதுடன், அவர்களது மின்சாரக் கட்டணத்திற்கும் சலுகை வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அரைப் பட்டினிக்கும், சத்துக் குறைபாடுக்கும் ஆளாகி நோய்த் தொற்று அதிகப்பட தொடங்கி விடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு, தமிழ்நாடு அரசு விரைந்து செயலாற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Thursday, March 19, 2020

கொரோனா பேரிடர் காலத்திற்கு வாழ்வூதியம் வழங்குக! கி. வெங்கட்ராமன் அறிக்கை!


கொரோனா பேரிடர் காலத்திற்கு

வாழ்வூதியம் வழங்குக!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


இந்திய அரசு கொரோனா பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பெருமளவு மக்கள் கூடும் பெரிய வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், சுற்றுலா கூடங்கள் போன்றவற்றை மார்ச்சு 31 வரை மூட ஆணையிடப்பட்டுள்ளது. ஆயினும், இவற்றில் பணியாற்றும் பல இலட்சக்கணக்கான குறை ஊதிய தொழிலாளர்களின் நிலைமையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே உள்ள பொருளியல் மந்தத்தோடு, கொரோனா வைரஸ் சிக்கல் இணைந்து ஒட்டுமொத்த பொருளியல் நடவடிக்கைகளே கிட்டத்தட்ட முடங்கும் நிலையில் இருக்கின்றன. இந்நிலையில், தேசியப் பேரிடர் கால வாழ்வூதியம் வழங்கும் பொறுப்பை அரசுகள் ஏற்க வேண்டும். இல்லையென்றால், அரைப் பட்டினிக்கும், சத்துக் குறைபாடுக்கும் ஆளாகி நோய்த் தொற்று அதிகப்பட தொடங்கி விடும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பேரிடர் கால வாழ்வூதியமாக குடும்ப அட்டை உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

2019 மார்ச்சு 15 தொடங்கி 31 வரையுள்ள 15 நாட்களுக்கு, இதற்கு ஆகும் அதிகபட்ச செலவு 13,000 கோடி ரூபாய்தான். தேசியப் பேரிடர் கால உதவியாக இது திகழ்வதால், இதன் 75 விழுக்காட்டு நிதிப் பொறுப்பை இந்திய அரசும், 25 விழுக்காட்டு நிதிப் பொறுப்பை தமிழ்நாடு அரசும் பகிர்ந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் வழியாக ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் இத்தொகை செலுத்தப்பட வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாத குடும்பங்களுக்கு அவரவர்களுக்குரிய ரேசன் கடைகளின் வழியாக வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், இந்தப் பேரிடர் காலத்தில் ரேசன் கடைகளில் வழக்கமாக வழங்கும் விலையில்லா அரிசிக்கு மேலாக, நாள் ஒன்றுக்குக் கூடுதலாக குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் ஒரு கிலோ அரிசியை மானிய விலையில் ரூ. 3-க்கு வழங்க வேண்டும்.

அதேபோல், மண்ணெண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் வழங்கலை அரை மடங்குக் கூடுதலாக்கி, மானிய விலையில் வழங்க வேண்டும்.

விடுமுறை அறிவிக்கப்பட்ட சத்துணவு பெறும் மாணவர்களுக்கு கேரள அரசு செய்வதைப் போல், அம்மாணவர்களுக்குரிய சத்துணவை பாதுகாக்கப்பட்ட பொட்டலங்களில் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்.

அம்மா உணவகங்களின் உணவு வழங்கல் அளவை இரட்டிப்பாக்கி, அதற்குரிய கூடுதல் ஊழியர்களையும் இக்காலத்தில் அமர்த்தி மானிய விலை அம்மா உணவகங்களைக் கூடுதலாக அமைப்பதற்கு சிறப்பு நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேற்கண்ட பேரிடர் காலப் பணிகளை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவித்திட தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT