உடனடிச்செய்திகள்

Wednesday, December 24, 2008

கைதுக்கு சற்றுமுன் பெ.மணியரசன் பேட்டி - இன்றைய(24-12-2008) குமுதம் ரிப்போர்ட்டர்


மீண்டும் அரங்கேறியிருக்கிறது கைதுப்படலம்.  இந்த முறை இயக்குநர் சீமானுடன் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் ஆகியோரும் கைதாகியிருக்கிறார்கள். ஈரோட்டில் கடந்த 14-ம் தேதி தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில், `தமிழர் எழுச்சி உரை வீச்சு' என்ற தலைப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், ராஜீவ் படுகொலையைக் கொச்சைப்படுத்திப் பேசியதாகவும் தமிழக காங்கிரஸார் போர்க்கொடி தூக்க, இந்த மூவரும் கைதாகியிருக்கிறார்கள்.

வத்தலகுண்டில் படப்பிடிப்பில் இருந்த சீமானும், மேட்டூரில் கொளத்தூர் மணியும் 19-ம் தேதி கைது செய்யப்பட, அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த மணியரசனும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற பரபரப்பான சூழ்நிலை. சென்னை, தியாகராய நகரில் உள்ள தனது அலுவலகத்தில் போலீஸார் வருகைக்காகக் காத்திருந்த மணியரசனை அன்று மாலை சரியாக ஆறு மணிக்குச் சந்தித்தோம்.

இயக்குநர் சீமான், கொளத்தூர் மணியும் கைதாகக் காரணமாக இருந்த அந்தக் கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது?

``தமிழர்களின் ஒற்றுமை, தமிழர்களின் உரிமையை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ஈழத் தமிழர்களை சிங்கள அரசு இனப் படுகொலை செய்கிறது. சிங்கள அரசை ஆதரித்து ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்து வருகிறது, இந்திய அரசு. ஒன்பது கோடி உலகத் தமிழர்களின் கோரிக்கைக்கு இந்திய அரசு செவி சாய்க்க மறுக்கிறது. இத்தாலியர்கள் கொல்லப்பட்டால், அவர்களைக் கொல்கின்ற அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் தருமா? மலையாளிகளைக் கொல்கிற அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் தருமா? தமிழினத்தை அழிக்கத் துணை போகும் இந்திய அரசை அந்தக் கூட்டத்தில் வன்மையாகக் கண்டித்தோம்.

ஈழத்தில் மட்டுமின்றி, தமிழக  மீனவர்கள் 406 பேர் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாடுகளுக்கு இடையே கடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாடுகளுக்கு இடையே யுத்தம் வரும் போதுகூட ஒரு நாட்டின் மீனவர்களை எதிரி நாட்டு ராணுவம் கொல்வதில்லை. இந்தியா- பாகிஸ்தான்  இடையே அடிக்கடி போர் மேகம் சூழ்கிறது. இருந்தும் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீன்பிடிக்கும் குஜராத், மகாராஷ்டிரா மீனவர்களை அந்நாட்டு ராணுவமோ, கராச்சி மீனவர்களை இந்திய ராணுவமோ சுட்டுக் கொன்றதில்லை. எல்லை தாண்டினால் கைது செய்து எச்சரித்து அனுப்புகிறார்கள். ஆனால், தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக நமது மீனவர்களை சிங்களப் படையினர் கொல்கிறார்கள். இதற்கு இந்திய அரசு கொடுக்கும் துணிச்சல்தான் காரணம் என்றும் அந்தக் கூட்டத்தில் தெரிவித்தோம்.

தமிழர்கள் உறுதியாக எழுந்து நின்றால்தான் இழந்த உரிமைகளைப் பெறமுடியும். ஒற்றுமை இருந்தால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள உரிமைகளைப் பெறமுடியும் என்றும் பேசினோம். ஈழத்தில் மட்டுமல்ல; தமிழகத்திலும் தமிழனின் உரிமை மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் மின்வெட்டு கடுமையாக இருக்கிறது. ஆனால், நமக்குக் காவிரி நீர் தரமறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் செல்கிறது. காவிரி நீர்ப் படுகைகளில் கிடைக்கும் பெட்ரோல் முழுவதையும் தமிழகத்துக்குப் பயன்படுத்தினால், பெட்ரோல் விலையும் உயராது என்றும் பேசினாம். எங்களது இந்தப் பேச்சு, இந்திய இறையாண்மைக்கு எந்தளவுக்குப் பங்கம் ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. தமிழினம் கொல்லப்படும் போது ஒப்பாரி வைத்து அழுதால் கூட இலக்கணப் பிழை என்று சொல்லிக் கைது செய்கிறார்கள். என்னைக் கைது செய்ய வரும் போலீஸாருக்காகக் காத்திருக்கிறேன்.''

அப்படியென்றால், இந்தக் கைது நடவடிக்கையில் ஏதாவது அரசியல் பின்னணி இருக்கும் என்று சந்தேகிக்கிறீர்களா?

``அந்தக் கூட்டத்தில் இளங்கோவனின் தமிழின விரோதப் போக்கைப் பட்டியலிட்டேன். திருமா வளவனைக் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வரும் இளங்கோவன், டெல்லி சென்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்கக் கூடாது என்றார்.    ஈரோட்டில் கன்னடர்களின் ஆதரவால் வெற்றி பெற்றதாக தவறாக நினைத்துக் கொண்டு, தன்னை  வெற்றிபெறச் செய்த தமிழர்களிடம் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்தவர்,  இளங்கோவன். சுப.தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு ஐ.நா. சபையே கண்டனம் தெரிவித்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் வைக்கப்பட்டிருந்த சுப. தமிழ்ச்செல்வன் இரங்கல் போஸ்டர்களைக் கிழித்தெறிய, தன் கட்சிக்காரர்களை இளங்கோவன் தூண்டினார்.

அவருக்கு ராஜீவ் காந்தி மீது இருக்கும் பற்றைவிட தமிழினத்தின் மீது இருக்கும் பகை உணர்ச்சியே அதிகம். எங்களைக் கைது செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்தவர், மொடக்குறிச்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனிச்சாமி. மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கும் அவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் கோஷ்டி ஆள். எனவேதான் இந்தக் கைதுக்கு இளங்கோவனின் நெருக்கடியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறோம்.''

ஈழப் பிரச்னையில் தமிழக முதல்வரின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

``கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார். பதவி  அரசியலில் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என மாறி மாறி நிற்கிறார். கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாக, இந்திய அரசு அறிவித்தது. ஆனால், இன்று வரை அவர் இலங்கை செல்வதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை. இதை, கருணாநிதியின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், கருணாநிதியே அலட்சியமாகத்தான் அந்தக் கோரிக்கையை வைத்தார்.

தமிழினத்துக்கு எதிராக ஓடும் சாக்கடை ஆற்றின் இரு கரைகளாக கருணாநிதியும், ஜெயலலிதாவும் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் தமிழினப் பகைக்கு எதிரானவர்கள் கருணாநிதி பக்கமும், கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு எதிரானவர்கள் ஜெயலலிதா பக்கமும் இருந்து, இரு கரைகளையும் பலப்படுத்துகிறார்கள். அடிக்க அடிக்க மேலே எழும் பந்துபோல இந்தக் கைதால் தமிழர்களின் எழுச்சி விஸ்வரூபம் எடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்'' என்று மணியரசன் சொல்லி முடிக்க, அவரைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் அங்கு வந்து சேர்ந்தனர். ``ஈழத் தமிழர்களைக் காப்பாற்றாத இந்திய அரசைக் கண்டிக்கிறோம்'' என்ற தோழர்களின் கோஷங்களுக்கு இடையே ஜீப்பில் ஏற்றப்பட்டார், பெ.மணியரசன்.

படம்: ஞானமணி
 
நன்றி  குமுதம் ரிப்போர்ட்டர் - 24-12-2008

செங்கிப்பட்டியில் காவல்துறை இன்றும் அட்டூழியம்

கி.வெங்கட்ராமன் அறிக்கை

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 14-12-2008 அன்று ஈரோட்டில் நடந்திய "தமிழர் எழுச்சி உரைவீச்சு" பொதுக்கூட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் த.செ. மணி, இயக்குநர் சீமான் ஆகியோரை தமிழக அரசின் காவல்துறை கைது செய்து சிறையிலடைத்துள்ளது.

சிங்கள அரசின் இனவெறியால் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது தெரிந்திருந்தும் இந்திய அரசு சிங்கள அரசிற்கு ஆய்தங்கள் வழங்கி இப்போரை ஊக்குவிக்கின்றது. இந்திய அரசின் இப்போக்கைக் கண்டித்தும் இந்திய அரசின் இச்செயலை நியாயப்படுத்தி ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசின் பிரதிநிதியாகவே செயல்படும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும், கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் தன்னெழுச்சியாக போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டங்களில் ஈடுபட்ட பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை செங்கிப்பட்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் புதலூர் ஒன்றியம் சார்பாக கண்டன ஊர்வலம் - ஆர்ப்பாட்டம் 22-12-2008 அன்று மாலை நடந்தது. இந்நிகழ்வின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் அமைச்சர் இளங்கோவன் ஆகியோரது உருவப்படங்கள் கொளுத்தப்பட்டன. இதனால் காவல்துறை முதலில் 5 த.தே.பொ.க.வினரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

பின்னர், தீடீரென அங்கு வந்த அதிரடிப்படையினர் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை பயன்படுத்தி அதில் கண்ணில்படுபவர்களையெல்லாம் கைது செய்ய வேண்டும் என்ற நோக்குடன் செங்கிப்பட்டியில் வீடு வீடாக "தேடுதல் வேட்டை" என்ற பெயரில் பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டி அச்சுறுத்தி அட்டூழியங்களில் ஈடுபட்டது. அதன் முடிவில் 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதைத் தொடர்ந்து இன்றும்(24-12-2008) அதிரடிப்படை மற்றும் காவல்துறையினர் த.தே.பொ.க. அமைப்பு அமைந்துள்ள செங்கிப்பட்டி, புதுக்குடி, காமாட்சிபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் வீடு வீடாக சென்று உள்ள பெண்களை குழந்தைகளையும் மிரட்டி அச்சுறுத்தி அத்து மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இன்று மட்டும் 8 பேர் இந்நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கிப்பட்டியில் தமிழக அரசின் காவல்துறை மற்றும் அதிரடிப்படையின் இந்த அத்துமீறியச் செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் இவ்வகை அடாவடி நடவடிக்கைகளை மனித உரிமை ஆர்வலர்களும் தமிழ் உணர்வாளர்களும் கண்டிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கி.வெங்கட்ராமன்,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம் : தஞ்சை,
நாள் : 24-12-2008.

Tuesday, December 23, 2008

சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பெசியதாகக் கைது செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்துர் மணி , தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் தமிழக அரசின் இக்கைது நடவடிக்கையை கண்டித்தும் சிதம்பரம் மெல வீதியில் 20-12-2008 அன்று மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.



இவ்வார்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். பெரந்திரளான தமிழ் உணர்வாளர்கள் இதில் கலந்து கொண்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

கொளத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் : 150 தோழர்களுக்கு சிறை

ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பெசியதாகக் கைது செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்துர் மணி , தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் தமிழக அரசின் இக்கைது நடவடிக்கையை கண்டித்தும் ஈரோடு மாவட்டம் கொளத்தூரில் 22-12-2008 அன்று பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.




எழுச்சியுடன் நடந்த இவ்வார்ப்பட்டத்தின் போது ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு, மத்திய அமைச்சர் இளங்கோவன் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. காவல்துறை அதனை தடுக்க முற்பட்ட போது தோழர்கள் அவர்களது எதிர்ப்பையும் மீறி உருவ பொம்மைகளை எரித்து சாம்பலாக்கினர்.








இதன் காரணமாக பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தமிழ் உணர்வாளர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை இரவு 10 மணியளவில் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் பொழுது தோழர்கள் பட்டாசு வெடித்து உற்சாகப்படுத்தினர்.

புதுச்சேரி ஆர்ப்பாட்டம் : காங்கிரசக்கு சவப்பாடை ஊர்வலம்


ஈழத்தமிழர்க்கு ஆதரவாக பேசிய பெரியார் திராவிடா கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், இயக்குநர் சீமான் ஆகியோரை கைது செய்த தமிழக அரசைக் கண்டித்தும், இயக்குநர் சீமானின் வாகனத்தைக் கொளுத்திய காங்கிசாரைக் கண்டித்தும் புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று (22-12-2008) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை சாரம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் நடந்த இவ்வார்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் தலைமை தாங்கினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் உட்பட பல அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் இதில் கலந்து கொண்டனர்.





இவ்வார்ப்பாட்டத்தின் இடையில் தமிழினத்திற்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு சவப்பாடை கட்டி பெரியார் தி.க. தோழர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனா. பின்னர் செருப்படிகளுடன் அச்சவப்பாடை "மரியாதை" செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆளும் மாநிலம் என்பதால் புதுச்சேரியில் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சையில் ஆர்ப்பாட்டம் : இளங்கோவனுக்கு செருப்பு மாலை : த.தே.பொ.க. வினர் 17 பேர் கைது

ஈரோட்டு பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோரை விடுவிக்கக் கோரி தஞ்சை செங்கிப்பட்டியில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க.வின் தஞ்சை நகர செயலாளர் இராசு. முனியாண்டி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சித் தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும் இதில் திரளாகக் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஈழத்தமிழாகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தலைவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் படங்கள் செருப்பு மாலையிடப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு தீ வைத்து எரியுட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 5 பேரை முதலில் காவல்துறை கைது செய்தது.











ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்த பின்னர் காவல்துறையினர் பதிவு செய்த ஒளிப்படக்காட்சிகளை பார்த்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் பிடிக்க செங்கிப்பட்டி கிராமம் முழுக்க தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீடு வீடாக புகுந்து அடாவடியில் ஈடுபட்டனா. இறுதியாக 17 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

Monday, December 22, 2008

ஈரோட்டில் கண்டன போராட்டம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோரின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.



அதன் ஒருபகுதியாக ஈரோட்டில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இராம.இளங்கோவன் தலைமையில் 21-12-2008 அன்று கோபி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தத. அதில் கலந்து கொண்டு உணர்ச்சி முழக்கமிட்டத் தோழர்கள் 60 க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஈரோட்டு பொதுக்கூட்டத்தில் பேசியதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி 1 ஆம் நுழைவாயில் காந்தி சிலை முன்பாக (19.12.2008) அன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக தூத்துக்குடி மாநகர தலைவர் தோழர் கோ.அ.குமார் தலைமையேற்றார். ஆதித்தமிழர் பேரவை தோழர் இரா.வே.மனோகர் ஆர்ப்பாட்டதினை தொடங்கிவைத்து தனது கண்டனத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து பெரியார் தி.க.வின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார். அவரைத்தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா.தமிழரசன், தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை தோழர் தவராசு பாண்டியன் , மக்கள் குடியுரிமை ஜனநாயகம் செ.பிரபாகர், மனித உரிமைப்பாதுகாப்பு மய்யம் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் ஆகியோர் தங்களது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார்.

தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆர்ப்பாட்டத்தின் விளக்கவுரையாற்றினார். அவர் உரையாற்றும் பொழுது காங்கிரசு கட்சியின் வரலாற்றினையும் காங்கிரசு கட்சியானது ஆங்கிலேய பெண்மணி ஒருவரால் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவுபட கூறியும் காங்கிரசு கட்சியின் போலி தேசப்பற்றினையும் தமிழின விரோதப்போக்கையும், ஈழத்தில் அமைதி திரும்ப பிரணாப் முகர்ஜியினை விரைவில் அனுப்புவோம் என்று கூறிக்கொண்டு ஈழத்தில் தமிழர்களை அழிக்க சிங்கள இராணுவத்திற்கு ஆலோசனை சொல்ல இந்திய இராணுவ உயரதிகாரிகளை உடனடியாக சிறீலங்காவிற்கு அனுப்பியதைக் கண்டித்தும் காங்கிரசை திருப்திப்படுத்த தமிழின உணர்வாளர்களை கைது செய்யும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியைக் கண்டித்தும் தெளிவுபட தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார்.

தொடர்ந்து நிறைவுரையாக மக்கள் உரிமைக்குழு வழக்கறிஞர் தோழர் அதிசயக்குமார் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோரைக்கண்டித்து வழக்கறிஞர்களாகிய எங்களுக்கே கருத்து சொல்ல உரிமை உண்டா என்று கேள்வி எழுப்பி தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார். இறுதியாக பெரியார் திராவிடர் கழக மாநகர துணைத் தலைவர் தோழர் சா.த.பிரபாகரன் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் பெரியார் தி.க தலைமைக்கழக உறுப்பினர் தோழர் நெல்லை சி.ஆ.காசிராசன் , தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச்செயலாளர் தோழர் க.மதன் , மாநகர செயலாளர் தோழர் பால்.அறிவழகன் , தமிழ்நாடு மாணவர் கழக தோழர் வ.அகரன் பெரியார் தி.க. தோழர்கள் ச.கா. பாலசுப்பிரமணியன் , அறிவுபித்தன் , சோசப் , நெல்லை இராசா, நெல்லை ஆறுமுகம் மற்றும் தலித்திய சமூக நீதி உரிமைப்பேரவை , புரட்சிகர இளைஞர் முன்னணி , ஆதித்தமிழர் பேரவை மற்றும் வழக்கறிஞர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

தஞ்சையில் த.தே.பொ.க. கண்டன ஆர்ப்பாட்டம்



விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக தமிழக அரசால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் இயக்குநர் சீமான் வாகத்தை எரித்த காங்கிரசாரைக் கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சையில் ஆர்ப்பட்டம்
நடைபெற்றது.


தஞ்சை ஜீப்பிடர் திரையரங்கு அருகே 19-12-2008 அன்று மாலை நடந்த
இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை நகரச் செயலாளர் இராசு.முனியாண்டி தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை, தமிழர் தேசிய இயக்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.






தஞ்சை நகர முக்கியப் பகுதிகளில் த.தே.பொ.க.வினர் தமிழக அரசின் கைது
நடவடிக்கையைக் கண்டித்து சுவரெழுத்து, சுவரொட்டிகளும், பதாகைகளும்
வைக்கப்பட்டுள்ளன.

ஆற்காட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்



சிங்கள அரசு போரை நிறுத்த வேண்டியும் இனி மேலும் தமிழினப் படுகொலை தொடரக் கூடாதென்றும் மத்திய அரசு இப் பிரச்சனையில் உடனடியாக தலையிட வேண்டியும் ஏற்காடு பேருந்து நிலையத்தில் 21-12-2008 அன்று காலை 8 மணி முதல் இரவு 5 மணிவரை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது,

இதில் நீலமலை தோட்டத் தொழிலாளர் தலைவர் திரு, வீ,க. நல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், சேவராய் தொழிளாளர் சம்மேளனம் ஆகிய அமைப்புத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.



இதனையடுத்து ஏற்காடு ஒன்றிய பெரியார் தி.க. ஒருங்கிணைப்பில் ஒண்டிக்கடை அண்ணா சிலை அருகில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. தோழர் சீமான், தோழர் பெ.மணியரசன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் சீமானின் வாகனத்தைக் கொளுத்திய காங்கிரசாரை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பட்டத்திற்கு ஏற்காடு பெ.தி.க. ஒன்றியச் செயலாளர் இரா.உலகநாதன் தலைமை தாங்கினார். தமிழின உணர்வாளர்களைக் கைது செய்த தமிழக அரசைக் கண்டித்தும் இயக்குநர் சீமானின் வாகனத்தைக் கொளுத்தியக் காங்கிரசின் வன்முறைப் போக்கைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சென்னையில் ஆர்ப்பாட்டம் - பெ.தி. தோழர்கள் - சிறுத்தைகள் சிறையில் அடைப்பு

ஈரோட்டில் த.தே.பொ.க. நடத்திய பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பெசியதாக த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோர் தமிழக அரசுக் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

இக்கைதை வலியுறுத்திய காங்கிரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அக்கட்சித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இவ்வார்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம் ஆனூர் செகதீசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பரணிப்பாவலன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

அமைதியாக நடந்த இவ்வார்ப்பாட்டதின் போது ரகளையில் ஈடுபட்ட காங்கிரசாருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கா‌ங்‌கிர‌சா‌ர் கொடு‌த்த புகா‌ரி‌ன் பே‌ரி‌‌ல் அண்ணாசாலை காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு‌ப்பதிவு செய்து பெரியார் திராவிடர் கழகத் தலைவ‌ர் ஆனூர் ஜெகதீசன் உள்ளிட்ட 62 பேரையும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் பச்சை, பகலவன், சாரநாத், ரஜபுத்திரன் உள்ளிட்ட 11 பேரையும் காவல் துறை கைது செ‌ய்து புழல் சிறையில் அடைத்துள்ளது.

இவ்வாறு, தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக நடைபெறும் கண்டன போராட்டங்களில் ரகளையில் ஈடுபடும் காங்கிரசாரைக் கைது செய்யாமல் காங்கிரசின் வெறிக்கூச்சல் காரணமாக தமிழுணர்வாளர்களைக் கைது செய்த தமிழக அரசை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் த.தே.பொ.க. நடத்திய பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோரை கைது செய்த தமிழக அரசைக் கண்டித்து திருச்செந்தூர் குறும்பூரில் 21.12.2008 அன்று மாலை தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்நிகழ்வுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் திருச்செந்தூர் பொறுப்பாளர் தோழர் தமிழ்மணி தலைமையேற்றார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் தோழர் சு.க.மகாதேவன், துரைசிங், ஞானசேகரன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தோழர் கதிரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இறுதியாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றினார். இந்நிகழ்வில் பல அமைப்புகளும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்.

கோவையில் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இயக்குநர் சீமான் காரைக் கொளுத்திய காங்கிரசாரைக் கைது செய்யக் கோரி கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் முன்பு இன்று(19.12.2008) மதியம் 1 மணியளவில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, சீமான் காருக்கு தீவைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியார் திராவிடர்கழக பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன், தலைமைக் கழக உறுப்பினர் தோழர் வெ.ஆறுச்சாமி , தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் ந.பன்னீர்செல்வம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை அமைப்பாளர் தமிழரசன் உட்பட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலை 5 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

பெ.மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் கைதைக் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள்

”தமிழர் எழுச்சி உரை வீச்சு” என்ற தலைப்பில் ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 14-12-2008 அன்று நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோர் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையிலுள்ள மர்மங்களை தெளிவாக எடுத்துக்கூறியும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய இந்திய அரசு உதவி செய்வதையும் கண்டித்து உரையாற்றினார்கள்.

இவர்கள் பேச்சுக்கு தமிழக காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இயக்குனர் சீமான் வத்தலகுண்டு அருகே காவல்துறையால் 19.12.2008 வெள்ளியன்று கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நண்பகலில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும் காவலர்கள் கைது செய்தனர். இரவு 7 மணியளவில் சென்னையில் தமதுக் கட்சித் தலைமையகத்தில் வைத்து பெ.மணியரசன் கைது செய்யப்பட்டார்.


இதனை அறிந்த தமிழுணர்வாளர்கள் தமிழகம் முழுவதும் கைதைக்கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - மறியல் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இக்கைது நடவடிக்கைகளை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ., இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Sunday, December 21, 2008

பெ.மனியரசன் கோவை சிறையில் அடைப்பு!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடந்த 14.12.2008 அன்று ஈரோட்டில் நடத்திய "தமிழர் எழுச்சி உரைவீச்சு" பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக இயக்குனர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்து}ர் மணி ஆகியோரை மீது தமிழகக் காங்கிரசார் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதன் பேரில், இயக்குனர் சீமான், கொளத்து}ர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டு வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று மாலை சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து அதன் பொதுச் செயலாளர் பெ.மணியரசனும் கைது செய்யப்பட்டார்.

சனிக்கிழமை காலை சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு காவல்துறை வாகனத்தில் அவர் கொண்டு வரப்பட்டார். காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் அவர் ஈரோடு மூலப்பாளையத்தில் உள்ள மேஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

'சீக்கியர்களோ மலையாளிகளோ கூட்டமாகக் கொலை செய்யப்பட்டால் சோனியாவும், மன்மோகன் சிங்கும் ஆயதம் தருவார்களா? பாழ்பட்ட தமிழனத்தின் பிறந்தவர்கள் என்ற ஒரேக் காரணத்திற்காக தமிழனைக் கொல்ல இந்தியா ஆயதம் தருகிறது. 406 மீனவர்களை சுட்டுக் கொன்ற போதும் அதனை நிறுத்தாவில்லை. காங்கிரசை ஒழிக்காமல் தமிழினத்திற்கு விடிவே இல்லை.'

இவ்வாறு அவர் கூறினார்.


பெ.மணியரசன், கொளத்து}ர் மணி, சீமான் ஆகியோரின் கைதைக் கண்டித்து நேற்றும் இன்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தமிழின உணர்வாளர்கள் சுவரொட்கள், துண்டறிக்கைகள் வெளியிட்டியும், ஆர்ப்;பாட்டங்கள் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Friday, December 19, 2008

கொளத்தூர் மணி, சீமான் கைது

பெரியார் திராவிடர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் கொளத்தூர் மணி மற்றும் தமிழ்த் திரை இயக்குநர் சீமான் ஆகியோர் இன்று தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.





ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் ”தமிழர் எழுச்சி” பொதுக்கூட்டம் நடந்தது. அதில் இயக்குநர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ராசீவ் காந்தியின் கொலையில் காங்கிரசாரின் பங்கு குறித்தும், இந்திய அரசின் ஆரிய பார்ப்பனிய இனவெறி குறித்தும் தோழர்களின் பேச்சால் பெருவாரியான மக்களை இக்கூட்டம் ஈர்த்தது.

இதனையொட்டி மொடக்குறிச்சி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோரைக் கைது செய்ய வலியுறுத்தி காவல்துறையில் புகார் அளித்தார்.

அதே கருத்தை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சுதர்சனம் உள்ளிட்டவர்கள் அறிக்கை விடுத்தனர்.

காங்கிரசாரின் இக்கூச்சலையடுத்து, கைதுக்கு காவல்துறையினர் தயாராயினர்.
இந்நிலையில் திண்டுக்கல் அருகே தேவதானப்பட்டியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த இயக்குநர் சீமானை, ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறையினர் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து மேட்டூரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் இருந்த கொளத்தூர் மணியை, மேட்டூர் டி.எஸ்.பி. சிவானந்தம் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் காவல்துறை அவரையும் கைது செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறையின் இக்கைது நடவடிக்கைகள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம் சீமான் ஆவேச உரைவீச்சு - படங்களுடன்



தமிழகத்தில் இன்னொரு பிரபாகரன் பிறக்கும் வரை தமிழினத்திற்கு விடிவில்லை: இயக்குநர் சீமான்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2008, 02:06.32 AM GMT +05:30 ]

ஈரோட்டில் தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில், "தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம்” 18-12-2008 அன்று நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், தமிழ்த் திரை இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டு உரைவீச்சு நடத்தினர்.

சீமானின் உரைவீச்சு மக்களை பெருமளவில் கவர்ந்தது. அப்பொதுக் கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசியதாவது:

இராமேஸ்வரத்தில் பேசியதற்காக என்னைக் கைது செய்தனர். என்ன பேசினேன் என்று எவனுக்கும் தெரியவில்லை. என்னை எதற்காக கைது செய்கிறீர்கள் என பொலிஸ் அதிகாரியிடம் கேட்ட போது, "நல்லா பேசுனீங்க சார் எல்லாம் எங்க தலையெழுத்து' என்று அழைத்துச் சென்றார். கைது செய்து உள்ளே வைத்தனர். இதோ இப்போது வெளியே வந்து விட்டேன்.

ஈழ விடுதலை தீபம் அணைக்க முடியாமல் எரிகிறது. தடை செய்யப்பட்ட இயக்கம் எனக் கூறப்படும் விடுதலைப் புலிகள் பற்றி பேசக் கூடாது என்கின்றனர். யாரைக் கேட்டு தடை செய்தீர்கள்? அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த அந்த நான்கு ஆண்டுகளில், அவசர அவசரமாக விடுதலைப் புலிகள் மீது தடை போட வேண்டிய அவசியம் என்ன? நான் பேச வேண்டும் சொந்த அண்ணனான பிரபாகரனைப் பற்றி பேசுவதை தடுக்க என்ன சட்டம் போடுவாய்? என் கனவு, சிந்தனை, உணர்வு அனைத்தும் பிரபாகரனுடன் ஒன்றிவிட்டது அதை ஒன்றும் பண்ண முடியாது.

உள்ளே போட்டால் இன்னும் அதிகமாகப் பேசுவேன். சீமான் பேசுவதை நிறுத்தினான் என்றால், தனி ஈழம் அடைந்திருக்க வேண்டும் அல்லது அவன் இறந்திருக்க வேண்டும். உலகிலேயே பிரபாகரனைப் போன்ற வீரன் இல்லை. அவனை விட்டால் உலகத்தில் வலிமைமிக்க இராணுவத்தை ஏற்படுத்தி விடுவான் என பயப்படுகின்றனர். "ராஜிவை விடுதலைப்புலி கொன்னுட்டாங்க'ன்னு காங்கிரஸ்காரர்கள் பல்லவி பாடுகின்றனர். அவர்கள் தீவிரவாதிகள் என்கின்றனர். ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில், இலங்கைக்கு இரண்டு இலட்சம் பேரை அனுப்பினாரே ராஜிவ் இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா?

இலங்கையில் போரை நிறுத்தும் வரை யாருக்கும் ஓட்டு போடாதீர்கள். ஓட்டு கேட்டு வருபவர்களை துரத்தியடியுங்கள். காந்தி, இந்திரா ஆகியோர் கொல்லப்பட்டனர். கொலைகாரர்களை என்ன செய்தாய்? பெரியாரின் குச்சிதான் இன்று நிமிர்ந்து துப்பாக்கியாக பிரபாகரன் கையில் உள்ளது. அவன் நமது குலதெய்வம்.

தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத ஒரு தேசம் மீது எப்படி நேசம் வரும்? தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா, கேரளாவை யாராவது கண்டித்தார்களா? 406 தமிழக மீனவர்களை, இலங்கை இராணுவம் கொன்றது. இதை இந்திய தேசம் கண்டித்ததா? இல்லை. நவீன துப்பாக்கி, தொலைநோக்குக் கருவி, தோட்டாக்களை இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கும் இந்தியா தான் தமிழினத் துரோகி.

இந்தியா கண்டுகொள்ளாமல் இருந்தால், இலங்கையை ஒரு கை பார்த்து விடுவான் எங்கள் அண்ணன். இவ்வாறு அவர் கூறினார்.




தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் மற்றும் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கொளத்தூர் மணி ஆகியோரின் பேச்சுக்களும் அங்கிருந்த மக்களிடம் பெரும் வீச்சை ஏற்படுத்தியது. மக்கள் தெருவெங்கும் கூடி நின்று இப்பேச்சைக் கேட்டனர்.

இப்பேச்சையடுத்து இயக்குநர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கொளத்தூர் மணி ஆகியோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி மொடக்குறிச்சிக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனச்சாமி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இதே கருத்தை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்றத் தலைவர் சுதர்சனம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டவாகள் 18-12-2008 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

படங்களுக்கு நன்றி : தமிழ் செய்தி மையம் இணையதளம்

Sunday, December 14, 2008

'தமிழர் எழுச்சி உரைவீச்சு' நிகழ்வில் தோழர் பெ.மணியரசன் உரை!

தமிழகத்தில் பேரெழுச்சி உருவாக்கிய  'தமிழர் எழுச்சி உரைவீச்சு' நிகழ்வில் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ. மணியரசன் உரை! 

தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் “தமிழர் எழுச்சி உரைவீச்சு” என்ற தலைபபில், 14.12.2012 அன்று எழுச்சிமிகுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானப் பொதுமக்கள் கலந்து கொண்ட இப்பொதுக்கூட்டத்தில், தமிழீழ விடுதலையையும், அவர்களது விடுதலை அமைப்பான விடுதலைப்புலிகளை ஆதரித்தும் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி, இயக்குநர் சீமான் ஆகியோர் பேசினர். 

தலைவர்களின் இப்பேச்சை கண்டு கொதித்த காங்கிரசுத் தலைவர்கள், தமிழகக் காவல்துறையினரிடம் புகார் மனு கொடுத்தனர். அதற்கேற்ப கருணாநிதி அரசின் காவல்துறை தோழர்கள் பெ.மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தது.






Wednesday, November 26, 2008

வீரவணக்கம்! வீரவணக்கம்!

மாவீரர் நாள் - நவம்பர் - 27 - 2008


Wednesday, November 12, 2008

ராஜபட்சே திரும்பிப் போ :: தமிழகமெங்கும் த.தே.பொ.க. கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

ராஜபட்சே திரும்பிப் போ
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
 
சிங்கள அரசின் அதிபர் ராசபட்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் நடந்தது.

 

மதுரை
 

மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இணைந்த இவ்வார்ப்பாட்டத்தை நடத்தின. 12-11-2008 காலை 11.00 மணிக்கு மதுரை மேலமாசிவீதிவடக்குமாசி வீதி சந்திப்பில் நடந்த இவ்வார்ப்பட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி மதுரை நகரச் செயலாளர் இராசு தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க செயற்குழு உறுப்பினர் கருப்பையா முன்னிலை வகித்தார். "தமிழர் இரத்தம் குடிக்கும் ராஜபட்சே திரும்பிப் போ!", "இனக்கொலை புரியும் ராஜபட்சே திரும்பிப் போ!", "கொலைவெறியன் ராஜபட்சேவுடன் இந்திய அரசே கைகுலுக்காதே" என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அ.ஆனந்தன்(த.தே.பொ.க.), கதிர்நிலவன்(த.தே.வி.இ.), வையவன்(தமிழக மாணவர் முன்னணி) உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

 

தஞ்சை

 
தஞ்சையில் 12-11-2008 மாலை 5.00 மணிக்கு பனகல் கட்டிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கருப்புக் கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு.முனியாண்டி தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தெ.காசிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான இளைஞர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

செங்கிப்பட்டி

 
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆண்களும் பெண்களுமாக பலநூறு பேர் திரண்டுவிட்டதால் தஞ்சை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கட்சியின் மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் குழ.பால்ராசு, தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றிய செயலாளர் தேவதாஸ் ஆகியோர் உரையாற்றினர்.
 

திருவாரூர்

 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 12-11-2008 அன்று மாலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் க.அரசு தலைமை தாங்கினார். த.தே.பொ.க. மூத்த உறுப்பினர் இரா.கோவிந்தசாமி, வழக்குரைஞர் தமிழ்மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சட்டமன்றம் நோக்கி பேரணி:: பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அமைப்பினர் கைது

சட்டமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற
தமிழ்த் தேசிய அமைப்பினர் கைது
சென்னை, 12-11-௨00௮
ஈழத்தமிழர் மீதான சிங்கள அரசின் போரை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழ்த் தேசிய அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக சென்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு முன்பு இந்திய அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். காவல்துறையின் தடையை மீறி இவ்வார்ப்பட்டம் நடைபெறும் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.

இன்று(12-11-2008) காலை சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை அருகே காவல்துறையின் தடையை மீறி சட்டமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தமிழ்த் தேசிய அமைப்பினர் 130 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.









இப்பேரணிக்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, மறுமலர்ச்சி மக்கள் தமிழகத்தின் தலைவர் துரையரசன், கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இராசேந்திரசோழன், ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்டோர் இவ்வார்ப்பட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில், "இந்திய அரசே! போரை நிறுத்து", "ராசபட்சே திரும்பிப் போ", "இந்திய அரசு சிங்களவனுக்கு அள்ளிக் கொடுத்த ஆயுதங்களை திரும்பப் பெறு" போன்ற முழக்கங்கள் எழுப்பட்டன. கைதானவர்களை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Tuesday, November 11, 2008

ராசபக்சே வருகை :: த.தே.பொ.க. கருப்புப் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர் இரத்தத்தைக் குடிக்கும்
இனக்கொலை வெறியன் ராசபக்சேயே திரும்பிப் பொ
த.தே.பொ.க. கருப்புப் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்
 
ஈழத்தில் தமிழர்கள் மீது போர் தொடுத்து பல லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து தமிழர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இனக்கொலை வெறியன் ராசபக்சே இந்தியா வருகிறார்.
 
அதனைக் கண்டித்து இனக்கொலை வெறியன் இராசபக்சேயே திரும்பிப்ப போ என்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 12-11-2008 அன்று மாலை நடக்கவுள்ளது.
 
தஞ்சை, மதுரை, செங்கிப்பட்டி, திருத்துறைப்புண்டி, ஈரோடு ஆகிய இடங்களில் இவ்வார்ப்பட்டம் நடத்தப்படவுள்ளது. திராளான தமிழ் இன உணர்வாளர்கள் இதில் பங்கு பெற வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
நாள்  :11-11-2008
இடம் : சென்னை
 

Thursday, October 23, 2008

தஞ்சையில் ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு

தஞ்சையில் ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு
 
தஞ்சை, 23, அக்டோபர், 2008
 
தஞ்சையில் இன்று மாலை அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
 
ஈழத்தமிழர்களுக்காக போராடுபவர்களை தேச் துரோகக் குற்றத்தில் கைது செய்ய வேண்டுமெனத் தெரிவித்ததற்காக அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கொடும்பாவி தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தோழர்கள் இன்று மாலை எரித்தனர்.
 
தஞ்சை ரயிலடி அருகே நடைபெற்ற இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிகழ்வின் போது ஜெயலலிதாவின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்ட்டன.
 
 

Thursday, October 16, 2008

ஈரோட்டில் இந்து நாளேடு தீவைத்து எரிப்பு - செய்தி

ஈரோட்டில் இந்து நாளேடு தீவைத்து எரிப்பு
த.தே.பொ.க., பெ.தி.க. தோழர்கள் கைது
 
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்துள்ள தமிழர் எழுச்சியை கொச்சைப்படுத்தும் விதமாக 'இந்து' நாளேடு நேற்று முன்தினம் தலையங்கக் கட்டுரை ஒன்றை எழுதியது. அகட்டுரை தமிழகத்தில் தமிழ் இன உணர்வாளர்களிடையே பெரும கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
நேற்று கோவையில் பெரியார் தி.க., ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் உட்பட சுமார் 80 பேர் 'இந்து' அலுவலகத்தை முற்றுகையிட்டு அந்நாளேட்டை தீவைத்துக் கொளுத்தி கைதாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.   
 
இதன் தொடர்ச்சியா "இந்து"வின் அக்கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோட்டில், 'இந்து' நாளேட்டை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராடவிடர் கழகம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் தீவைத்து கொளுத்தினர். இது தொடர்பாக தமிழகக் காவல்துறை 2 பேரை கைது செய்ததுடன் த.தே.பொ.க.வைச் சேர்ந்த செய பாஸ்கரன், பெ.தி.க.வைச் சேர்ந்த குமரகுரு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது.

Tuesday, October 14, 2008

ஈரோட்டில் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்



ஈரோட்டில் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோடு, 14-10-௨00௮


ஈரோட்டில் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி தலைமை தபால் நிலையம் முன்பு வந்தடைந்தனர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் மோகன்குமார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.


இவ்வார்ப்பாட்டத்தில் தோழர் கணேசமூர்த்தி (ம.தி.மு.க), தோழர் இராம.இளங்கோவன்((பெரியார் திராவிடர் கழகம்) தலைமைக்கழக உறுப்பினர்), தோழர் சா.அர.மணிபாரதி( தமிழ்த் தேச பொதுவுடைமைக்கட்சி), தோழர் சேதுபதி (விடுதலைச்சிறுத்தைகள் ஈரோடு மாவட்ட செயலாளர்), தோழர் புலிப்பாண்டியன் (சாதி ஒழிப்பு பொதுவுடமை முன்னணி), தோழர் கலைவேந்தன் (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), தோழர் விஜயகுமார் (தமிழக தொழிலாளர் முன்னணி), தோழர் பொன்னுச்சாமி (ஆதித்தமிழர் பேரவை) ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் பொழுது கொட்டும் மழையினை பொருட்படுத்தாமல் தோழர்கள் அனைவரும் கட்டுப்பாடோடு கொட்டும் மழையின் வேகத்தை விட அதிகமாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமழையிட்டனர். இரவு 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






இப்போராட்டத்தினை பெரியார் திராவிடர் கழகம் , தமிழர் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் , தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போன்ற அமைப்புகள் ஈரோட்டில் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 100க்கும் மேற்ப்பட்ட தமிழ் உணர்வாளர்களும் இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

சேலத்தில் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


சேலத்தில் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
சேலம், 14-௧0-2008


சிங்கள அரசிற்கு உதவி வரும் நயவஞ்சக இந்திய அரசைக் கண்டித்து சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிங்கள பங்காளி தமிழன் பகையாளியா? என்ற கேள்வியோடு நேற்று 13-10-2008 அன்று இந்திய அரசை கண்டித்து பல்வேறு அமைப்புகள் பங்கேற்க மாபெரும் பேரணியும் ஆர்ப்பாட்டமும் சேலத்தில் நடைபெற்றது.

இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்வதை உடனே நிறுத்தக் கோரியும், கொடுத்த படைக் கருவிகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழீழம் மலரட்டும், ஈழத் தமிழர்களுக்கு துணை நிற்போம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.






பெண்கள் குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், தமிழக இளைஞர் இயக்கம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், மனித உரிமை பாதுகாப்பு மய்யம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் ஆகிய இயக்கங்களைச் சார்ந்தத் தோழர்களும் தமிழ் இன உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT