உடனடிச்செய்திகள்
Showing posts with label மது எதிர்ப்பு. Show all posts
Showing posts with label மது எதிர்ப்பு. Show all posts

Thursday, August 22, 2019

“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக!” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு!

“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக!” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் – கல்லாக்கோட்டையில் கால்ஸ் மது ஆலையை மூடக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் ஆயமும், நாம் தமிழர் கட்சியும் திரட்டிய பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் இன்று (22.08.2019) காலை, தமிழ்நாடு அரசிடம் கையளிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை வட்டம் - கல்லாக்கோட்டையில் செயல்பட்டு வரும் கால்ஸ் மது உற்பத்தி ஆலை, கடந்த 2008ஆம் ஆண்டு வாக்கில் திறக்கப்பட்ட பின் கல்லாக்கோட்டையைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலத்தடி நீர் வற்றிப் போய் வேளாண்மை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்று வட்ட கிராமங்களின் மக்கள் போதிய குடிநீரின்றித் தவிக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை ஆழ்குழாய்க் கிணறுகள் வழியாகக் கால்ஸ் நிறுவனம் உறிஞ்சுகிறது. அந்த சாராய ஆலைக்கு அருகில் 600 ஏக்கரில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசு வேளாண் விதைப்பண்ணை தண்ணீரில்லாமல் மூடப்பட்டு விட்டது.

கால்ஸ் ஆலை தொடங்கப்பட்டால் இவ்வாறான பாதிப்புகள் வரும் என்று கடந்த 2008இல் சனநாயக வழியில் போராடிய சுற்று வட்ட மக்கள் மீதும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் ஏராளமான வழக்குகளைப் போட்டு, சிறையிலடைத்து அப்போதைய தி.மு.க. ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். ஒருவர் மீது நான்கு, ஐந்து வழக்குகள் போட்டுள்ளார்கள். இன்னும் அந்த வழக்குகளுக்காக அவர்கள் நீதிமன்றம் அலைந்து கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” தலைமையில் கடந்த 14.05.2019 அன்று கல்லாக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட வலியுறுத்தி அவ்வாலை முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்று இருநூறுக்கும் மேற்பட்ட பெண்களும் சுற்று வட்ட மக்களும் பங்கேற்று கைதாகினர்.

அதன்பிறபு, நாம் தமிழர் கட்சியினரும் மகளிர் ஆயத்தினரும் இணைந்து கடந்த 28.06.2019லிருந்து 05.07.2019 வரை கந்தர்வகோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் மக்களிடம் இக்கோரிக்கைகளுக்காக பத்தாயிரம் கையெழுத்துகள் வாங்கினர். இக்கையெழுத்துகள் கொண்ட மனு இன்று (22.08.2019) காலை சென்னை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இம்மனுவை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், நாம் தமிழர் கட்சி கந்தர்வக்கோட்டை செயலாளர் திரு. செல்வக்குமார், புதுக்கோட்டை நடுவண் செயலாளர் திரு. முருகானந்தம், தமிழுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, மகளிர் ஆயம் செயற்குழு தோழர் பிருந்தா, தோழர்கள் கோ. செந்தாமரை, த. சத்தியா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து அளித்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் திரு. நிரஞ்சன் மார்டி இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய ஐயா பெ. மணியரசன் தலைமையிலான தோழர்கள், 2008இல் மது ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைக் கைவிட வேண்டுமெனக் கோரினர். அதன்பின், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி திரு. டி. பாஸ்கரபாண்டிய் இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து பத்தாயிரம் மக்கள் கையெழுத்துகள் வழங்கப்பட்டன.

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஐயா மணியரசன் அவர்கள், “கல்லாக்கோட்டையிலுள்ள கால்ஸ் மது உற்பத்தி ஆலை நிலத்தடி நீரை உறிஞ்சிவிட்டதால், சுற்றுவட்டத்தில் 20 கிராமங்கள் நிலத்தடி நீர் வற்றி வேளாண்மை முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. குடிநீரும் இல்லை. எனவே, கால்ஸ் மது ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாலையைத் தொடங்கக் கூடாது என்று 2008இல் போராடிய மக்கள் மீது போட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும். கல்லாக்கோட்டையில் நிலத்தடி நீரின்றி மூடப்பட்டுள்ள அரசு வேளாண் விதைப் பண்ணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கால்ஸ் மது ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, May 14, 2019

கல்லாக்கோட்டை மதுஆலை மூடும் மகளிர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது!


கல்லாக்கோட்டை மதுஆலை மூடும் மகளிர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது!

கல்லாக்கோட்டையில் கால்ஸ் மதுபான ஆலையை எதிர்த்து மகளிர் ஆயம் சார்பில் மகளிர் முற்றுகை போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

கல்லாக்கோட்டை சாராய ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட மகளிர் ஆயம் தோழர்கள் முடிவு செய்திருந்த நிலையில் ஆலையின் முன்பு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கல்லாக்கோட்டை கடை வீதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட மகளிர் ஆயம் தோழர்களை ஆலையின் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது கொளுத்தும் வெயிலையும் பாராமல் மகளிர் ஆயம் தோழர்கள் - பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் என அனைவரும் சாலையிலேயே அமர்ந்தனர். சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி இருந்தபோது காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனத்தில் அனைவரையும் ஏற்றினர்.


போராட்டத்திற்கு மகளிர் ஆயம் தலைவர் தோழர் லட்சுமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் அருணா, துணைப் பொதுச் செயலாளர் தோழர் செம்மலர், துணைத் தலைவர் தோழர் மேரி உள்ளிட்ட திரளான மகளிர் ஆயம் தோழர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர் 300 பேர் கைது செய்யப்பட்டு தற்போது கந்தர்வக் கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.






தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, May 12, 2019

கல்லாக்கோட்டை மதுபான ஆலை முன்பு மகளிர் முற்றுகையிடும் போராட்டம்..! புதுக்கோட்டையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு!

கல்லாக்கோட்டை மதுபான ஆலை முன்பு மகளிர் முற்றுகையிடும் போராட்டம்..! புதுக்கோட்டையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு! 
புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை அருகிலுள்ள கல்லாக்கோட்டையிலுள்ள “கால்ஸ் டிஸ்டிலரீஸ்” - தனியார் மதுபான ஆலையை முற்றுகையிடும் போராட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (மே 14) நடத்தப்படும் என புதுக்கோட்டையில் நேற்று (11.05.2019) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி, துணைப் பொதுச்செயலாளர் தோழர் செம்மலர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

இச்செய்தியாளர் சந்திப்பில் மகளிர் ஆயம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது :

"தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து, ஆண்டுக்கு ஆண்டு அதன் வணிகத்தைப் பெருக்கும் வகையில் அதிகாரிகளை முடுக்கிவிட்டபிறகு குடிகாரர்களின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருகிறது.

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாத பெண்கள், பள்ளி – கல்லூரி மாணவர்கள் எனப் பல தரப்பினரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிச் சீரழிகிறார்கள்.

மதுப்பழக்கத்தினால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் சின்னாபின்னமாகிச் சிதைந்து விட்டன. பல குடும்பங்களில் குடும்ப வாழ்க்கையே கொடூர வாழ்க்கையாகிவிட்டது. நோயுற்று நடைபிணமாகப் பல ஆண்கள் திரிகிறார்கள்; அற்ப ஆயுளில் சாகிறார்கள்.

பல நாடுகளில், பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்திருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் மூட வேண்டும் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அந்த நாடுகளிலும் மாநிலங்களிலும் உள்ள மக்கள் அதுபற்றி முடிவு செய்யட்டும். நம் தமிழ்நாட்டிற்கு மது பொருந்தவில்லை; மக்கள் அழிகிறார்கள்; எனவே மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்று மகளிர் ஆயம் கோருகிறது.

மது விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் மக்களுக்கு இலவசங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள். இதைவிட அநீதியான, ஒழுக்கக்கேடான ஒரு வாதம் வேறு இருக்க முடியுமா? கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் கதை இது!

இந்த வாதமதாவது உண்மையா? அதுவும் பொய்! கடந்த 2018ஆம் ஆண்டு மது விற்பனை வருமானம் 26,796 கோடி ரூபாய். மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மருத்துவக் காப்பீடு, பசுமை இல்லம், மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, நோட்டு புத்தகம், தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட இலவசங்களுக்கு தமிழ்நாடு அரசு செலவிட்ட தொகை 12,274 கோடி ரூபாய் மட்டுமே! ஒழுக்கம் கெடுத்து பணம் வசூலித்து, இலவசங்கள் வழங்குவது ஓட்டு வாங்குவதற்கான மக்கள் விரோத உத்தியாகும்!

இந்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து வரியாகவும், தொழில் நிறுவனங்களின் இலாபமாகவும் ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் கோடி ரூபாய் வசூலித்துக் கொண்டு போகிறது. அதில் பாதித் தொகையைத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கேட்டுப் பெற்றால் இங்கு எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றலாம். மக்கள் வாழ்வும் செழிக்கும்; பண்பாடும் வளரும்!
முழு மதுவிலக்கு

1. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கைச் செயல்படுத்த வேண்டும்.

2. தமிழ்நாட்டில் செயல்படும் மது உற்பத்தித் தொழிற்சாலைகள் அனைத்தையும் நிரந்தரமாக மூட வேண்டும்.

இவ்விரு கோரிக்கைகளுக்காக முதல் கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டம் – கல்லாக்கோட்டை கால்ஸ் டிஸ்டிலரீஸ் சாராய உற்பத்தி ஆலையை மூட வலியுறுத்தி, மகளிர் ஆயம் சார்பில் அதன் தலைவர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில் 14.05.2019 செவ்வாய் காலை 10.30 மணிக்கு மேற்படி ஆலையை பெண்கள் முற்றுகையிட்டுப் போராடுவார்கள்.

இந்த கால்ஸ் டிஸ்டிலரீஸ் ஆலை நிறுவப்பட்ட பிறகு கல்லாக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள குருவாண்டான் தெரு, சங்கன் விடுதி, சொக்கம்பேட்டை, சத்திரப்பட்டி, கண்ணு குடிப்பட்டி, புதுவயல், மருதன்கோன் விடுதி, கரையவிடுதி, கொத்தகப்பட்டி உள்ளிட்ட இருபது கிராமங்களில் நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் வேளாண்மைக்கும், குடிநீருக்கும் தண்ணீரில்லாமல் பெருந்துயரத்தில் உள்ளார்கள். குடிநீருக்கும் குடும்பப் பயன்பாட்டிற்கும் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம் உண்டாகியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் அன்றாடம் சாராயம் தயாரிக்க இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை நிலத்தடியிலிருந்து கால்ஸ் டிஸ்டிலரீஸ் ஆலை உறிஞ்சுவதுதான்.

கல்லாக்கோட்டை ஆலை உட்பட தமிழ்நாட்டில் உள்ள எல்லா சாராய உற்பத்தி ஆலைகளையும் உடனடியாக மூட வேண்டும்.

கல்லாக்கோட்டை மது ஆலையை மூட வலியுறுத்தி இப்பகுதி மக்களும் பல்வேறு இயக்கங்களும் ஏற்கெனவே கடுமையாகப் போராடியிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்".

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT