உடனடிச்செய்திகள்

Friday, October 8, 2021

இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை! பெ.மணியரசன் அறிக்கை!



இந்து அறநிலையத் துறை தொடங்கும் கல்லூரிகளில்
தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்கள் தேவை!

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
பெ.மணியரசன் அறிக்கை!

இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த திருக்கோயில்களில் கூடுதலாக உள்ள நிதியைப் பயன்படுத்தி புதிய கல்லூரிகளும், மருத்துவமனைகளும் நிறுவிடத் தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

சென்னை அருள்மிகு கபாலீசுவரர் கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரி இன்று (8.10.2021) செய்தி ஏடுகளில் விளம்பரம் வந்துள்ளது. அதில் பி.காம்.(B.Com.), பி.சி.ஏ.(B.C.A.), பி.பி.ஏ.(B.B.A.), பி.எஸ்.சி.(B.Sc.) கணிப்பொறிப் படிப்பிற்கான விண்ணப்பம் கோரப்படுள்ளது. 

அதில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் படிப்புகளுக்கான வகுப்புகள் இல்லை.  ஒரு வேளை இவ்விரு தலைப்புகளில் பட்டப் படிப்பு படிக்க மாணவர்கள் சேர மாட்டார்கள் என்று அரசு கருதி இப்படிப்புகள் சேர்க்கப்படவில்லையோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. 

அவ்வாறு மாணவர்களிடையே இவ்விரு பட்டங்களுக்கான ஆர்வம் இல்லை என்றாலும், அவர்களை ஆர்வப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. கூடுதல் உதவித் தொகை – பணி அமர்த்தத்தில் இப்படிப்புப் படித்தோர்க்கு சிறப்பு முன்னுரிமைகள் போன்ற ஊக்கங்களை அளித்து – அவற்றை அறிவித்துதான் விண்ணப்பங்கள் கோர வேண்டும்.

அடுத்து இப்பொழுது விண்ணப்பங்கள் கோரப்படுள்ள பட்டப் படிப்புகளில் தமிழ்ப் பயிற்று மொழி உண்டா என்ற விவரமும் விளம்பரத்தில் இல்லை. தமிழ்ப் பயிற்று மொழிப் பாடப் படிப்புகள் கட்டாயத் தேவை. தமிழ்ப் பயிற்று மொழிவழி படித்தோர்க்கு வேலை வாய்ப்பில் தமிழ்நாடு அரசு 20 விழுக்காடு ஒதுக்கியுள்ளதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

எனவே, இந்து அறநிலையத் துறையின் சார்பில் இயங்குகின்ற மற்றும் தொடங்கப்பட உள்ள கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், தமிழர் மெய்யியல் பட்டங்களும், தமிழ்ப் பயிற்று மொழி ஏற்பாடும் வேண்டும் என்பதைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

Thursday, October 7, 2021

"தமிழ் இந்து யார்?" 'எம்தமிழ்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தமிழ் இந்து யார்?" 


'எம்தமிழ்' ஊடகத்துக்கு.. 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, October 5, 2021

"தமிழ் இந்து வேறு - ஆரிய இந்து வேறு!" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தமிழ் இந்து வேறு - ஆரிய இந்து வேறு!"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

கண்ணோட்டம் வலையொளியில்..!!!

வெளியாரை வெளியேற்றும் திரிபுரா! ஐயா பெ. மணியரசன் வாழ்த்துரை!

வெளியாரை வெளியேற்றும் திரிபுரா!


தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் வாழ்த்துரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, October 1, 2021

வள்ளலாரின் “தன்னை அறிதல்!” ஐயா பெ. மணியரசன் உரை!

வள்ளலாரின் “தன்னை அறிதல்!” 


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, September 29, 2021

"தேர்தலை புறக்கணிக்கும் மணியரசன்! சீமானோடு இணைந்தது ஏன்?" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தேர்தலை புறக்கணிக்கும் மணியரசன்! சீமானோடு இணைந்தது ஏன்?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

கண்ணோட்டம் வலையொளியில்..!!!

"தமிழ் இந்து? ஆரிய இந்து?" மூன்று மாதங்களுக்கு முன்பே சிறப்பான விளக்கமளித்து விவாதங்களைத் தொடங்கி வைத்த. ஐயா பெ. மணியரசன் அவர்கள்!

"தமிழ் இந்து? ஆரிய இந்து?"



மூன்று மாதங்களுக்கு முன்பே சிறப்பான விளக்கமளித்து விவாதங்களைத் தொடங்கி வைத்த...

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் அவர்கள்!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, September 27, 2021

"தமிழ் இந்து தேவையா? ஆரியம் மீண்டும் வராதா?" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தமிழ் இந்து தேவையா? 

ஆரியம் மீண்டும் வராதா?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Sunday, September 26, 2021

மோடி அரசுக்கு எதிராக நாளை நடைபெறும் அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்! ஐயா பெ. மணியரசன் அறிக்கை!



மோடி அரசுக்கு எதிராக நாளை நடைபெறும்  அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் அறிக்கை!


உழவர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரும் தீங்கிழைக்கும் வேளாண் சட்டங்களை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமெனக் கோரி, கடந்த 2020 ஆகத்து மாதம் தொடங்கி ஓராண்டைக் கடந்த நிலையிலும், புதுதில்லியில் பஞ்சாப் – அரியானா உழவர்கள் பெருந்திரளாக முற்றுகைப் போராட்டத்தை தற்போது வரை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடும் பனி – வெயில் – மழை எனப் பொருட்படுத்தாமல் தற்காலிகக் கூடாரங்களை அமைத்து, இரவு பகலாக அங்கேயே தங்கி உழவர்கள் நடத்திவரும் போராட்டத்தை உலகமே உற்று நோக்கி வருகின்றது. 

இந்நிலையில், மோடி அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், உழவர்களுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பாக மாற்றித் தொழிலாளர் உரிமைப் பறிக்கும் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும், தனியார்மயம் – தாராளமயம் என்ற பெயரில் மக்களின் பொதுச் சொத்துகளை – இயற்கை வளங்களை பெருங்குழும நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கக் கூடாது, பெட்ரோல் டீசல் மற்றும் எரிவளி உருளை விலை ஏற்றத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (27.09.2021) அனைத்திந்திய அளவில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த “அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” அழைப்பு விடுத்துள்ளது. 

காங்கிரசு, தி.மு.க., கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கெடுக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநில அரசுகளும் இப்போராட்டத்தை ஆதரிக்கின்றன.  

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து காவிரி உரிமை மீட்புக் குழுவில் இணைந்து வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றது. அத்துடன் எதிர்க்கட்சிகளின் மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கைகளும் ஆகும். எனவே,  நாளை (27.09.2021) நடைபெறும் முழு அடைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது! தமிழ்த்தேசியர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் பங்கெடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறது! 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, September 25, 2021

சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்! ஐயா கி. வெங்கட்ராமன்,



சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ச.க.விலிருந்து தமிழர்கள் வெளியேற வேண்டும்!

தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம். 


சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என நரேந்திர மோடி அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிடிவாதமாகக் கூறிவிட்டது. 

மராட்டிய மாநில அரசு மற்றும் சிலர் தொடுத்திருந்த வழக்கில் 23.09.2021இல் இவ்வாறு கூறிய இந்திய அரசு, “இந்தியாவில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட சாதிகள், துணை சாதிகள், சாதிக் குழுக்கள் இருக்கின்றன. இவற்றுள் பட்டியல் சமூகத்தினரைத் தவிர பிறரைக் கணக்கெடுப்பது நடைமுறை சாத்தியமற்றது. அதுமட்டுமின்றி, சாதியற்ற சமூகம் படைக்கும் இலட்சியத்திற்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பட்டியல் மாநில அரசுகளால் உருவாக்கப்படுவதாலும், கிட்டத்தட்ட ஒரே ஒலிப்புள்ள சாதிகள் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு நிலைகளில் இருப்பதாலும், பட்டியல் சாதியினர் சிலர் மதம் மாறுவதால்  சமூகநிலை மாற்றங்கள் நிகழ்வதாலும் - இவ்வாறு கணக்கிடுவது சாத்தியமற்றது” என்று காரணம் கூறி இருக்கிறது. 

ஆனால், இந்தக் காரணங்கள் எதுவுமே ஏற்கத்தக்கதல்ல, சாதிவாரிக் கணக்கெடுப்பது சாத்தியமானதுதான் என்பதற்கான விளக்கமளித்து இந்திய அரசின் “தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமே” கூட கடந்த 2021 சனவரியில் அறிக்கை அளித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்தியது. 

வேடிக்கை என்னவென்றால், “இந்துத்துவ” பா.ச.க. மேற்கொண்ட இதே நிலைப்பாட்டைத்தான் “மதச்சார்பற்ற” காங்கிரசுக் ஆட்சியும் இதற்கு முன் மேற்கொண்டது. 

இந்திய நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மட்டுமின்றி, மன்மோகன் சிங் ஆட்சியின் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்ட காங்கிரசுத் தலைவர்கள் பலர் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தினர். அப்போது, அன்றைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஒரு சொல்லும் மாறாமல் பா.ச.க.வின் இதே மறுப்பைத்தான் நாடாளுமன்றததில் தெரிவித்தார். அது நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதன் விளைவாக, சாதிவாரிக் கணக்கெடுப்பையும் உள்ளடக்கிய “சமூக - பொருளியல் - சாதிவாரிக் கணக்கெடுப்பு” (Socio - Econmic - Caste Census) மேற்கொள்ள முடிவானது. அதற்கு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கி ஆய்வுக்குழுவை அமைத்தது. அதன் முடிவுகள் அரசிடம் முன்வைக்கப்பட்ட பின்பு, இந்திய ஆட்சியில் கட்சி மாற்றம் ஏற்பட்டது. 

நரேந்திர மோடி அரசு, இந்த ஆய்வறிக்கையில் சமூக, பொருளியல் விவரங்களை மட்டும் வெளியிட்டுவிட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்பு பகுதியை மீளாய்வு செய்ய அன்றைய நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பங்காரியா தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை நிறுவியது. அதன் ஆய்வுமுடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஆயினும், பங்காரியா குழுவின் ஆய்வறிக்கையை மேலாய்வு செய்த ஊரக மேம்பாட்டு நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையை 2016 ஆகத்து இறுதியில் மக்களவை தலைவரிடம் வழங்கியது. அதில், “சமூக, பொருளியல், சாதிவாரிக் கணக்கெடுப்பு 98.87 விழுக்காடு மிகச்சரியாக இருக்கிறது. காணப்படும் சிற்சில குறைபாடுகளை நாங்கள் பரிந்துரைத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நீக்கி விடலாம்” என்று கூறியது. 

உண்மை இவ்வாறிருக்க, 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாது என மோடி அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல! ஒருவேளை, மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்குமானால் ஏற்கெனவே செய்ததுபோல் தனியாக ஆய்வுக்குழு அமர்த்தி இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும். 

சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குறிப்பான சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்காக திட்டமிட முடியும். பல்வேறு படிநிலைகளில் ஏற்றத்தாழ்வாக உள்ள சாதிகளிடையே உள்ள உண்மையான சிக்கல்களை தீர்த்தால்தான், சாதிகளிடையே சமநிலையை உருவாக்க முடியும். அதுதான் சாதி ஒழிப்புக்கான முக்கியமான படிநிலையாகும்! 

ஆனால், 2010லிருந்தே பா.ச.க.வின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து வருகிறது. அதற்கான உண்மையான காரணம் - சாதி ஒழிப்பு நோக்கமோ, நடைமுறைச் சிக்கலோ அல்ல! பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் உண்மையான தொகை தெரியுமானால், இப்போதுள்ள 50 விழுக்காடு என்ற இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீடிக்க முடியாது என்றும், ஆதிக்கசாதியினருக்கான 10 விழுக்காடும் அடிபட்டுப் போகும் என்றும் ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ். அஞ்சுகிறது. 

இன்னொருபுறம், தாராளமயப் பொருளியலின் சந்தை விதிகள் அனைத்துச் சாதியினருக்கும் சம வாய்ப்புகளைத் திறந்துவிட்டிருக்கிறது என்ற பொய்யும் அம்பலப்பட்டுவிடும் என்று தாராளமயவாதிகள் அஞ்சுகிறார்கள். 

மோடி அரசின் உள்நோக்கமுள்ள இந்த முடிவை தமிழ்நாட்டு மக்களும், இந்தியா முழுவதுமுள்ள சனநாயக ஆற்றல்களும் வலுவாக மறுக்க வேண்டும்! ஏற்கெனவே எடப்பாடி அரசு அறிவித்த தமிழ்நாடு அளவிலான சாதிவாரிக் கணக்கெடுப்பை தி.மு.க. அரசு விரைந்து முடிக்க வேண்டும்! இச்சிக்கலில் ஒத்த கருத்துள்ள பல்வேறு மாநில அரசுகளையும், கட்சிகளையும் ஒருங்கிணைத்து அனைத்திந்திய அளவிலான சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு மோடி அரசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும். தமிழர்கள் பா.ச.க. தலைமையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்! 

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2021 அக்டோபர் இதழின் ஆசிரியவுரையாக எழுதியது).


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

தமிழ்நாட்டு வேலை தொழில் வணிகம் தமிழர்களுக்கே! தலைமை செயலகம் முன் ஆர்ப்பாட்டம் ! ஐயா பெ.மணியரசன் அழைப்பு!

தமிழ்நாட்டு வேலை தொழில் வணிகம் தமிழர்களுக்கே! தலைமை செயலகம் முன் ஆர்ப்பாட்டம் !



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ.மணியரசன் அழைப்பு! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, September 23, 2021

"சாதியை ஆதரிப்பது தி.மு.க.வா? தமிழ்த்தேசியமா?" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"சாதியை ஆதரிப்பது தி.மு.க.வா? தமிழ்த்தேசியமா?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, September 21, 2021

"திராவிடர்களுக்கு ஸ்டாலின் தலைவரா? வீரமணி தலைவரா?" 'ழகரம்' ஊடகத்துக்கு..ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"திராவிடர்களுக்கு ஸ்டாலின் தலைவரா? வீரமணி தலைவரா?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, September 17, 2021

முதன் முதல் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா? ஐயா பெ.மணியரசன்



முதன் முதல் வகுப்புரிமையைச் செயல்படுத்திய 
சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்

வகுப்புரிமை இட ஒதுக்கீட்டுக்கான முதல் அரசாணை வெளியிடப்பட்டதன் நூற்றாண்டை தி.மு.க. ஆட்சி கொண்டாடுகிறது. 

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்று அதிகார வழிப் பெயர் கொண்ட நீதிக்கட்சி ஆட்சி, 1920 ஆம் ஆண்டு முதல் முதலாக நடத்தப்பட்ட சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது. 1921-ஆம் ஆண்டு அக்கட்சி ஆட்சியில், பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட ஆந்திர மண்டலத்தைச் சேர்ந்த ராமராயநிங்கார் முதலமைசராக இருந்த போது, அப்போது வேலை வாய்ப்பில் கோலோச்சிய பிராமண ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி பிராமணர் அல்லாதார்க்கும் உரிய வாய்ப்பளிக்க வகுப்புரிமை ஆணை (Communal G.O.) 16.9.1921 அன்று பிறப்பித்தார். அந்த அரசாணை எண் 613. (MRO Public ordinary Service GO 613). 

அதன் நூற்றாண்டைத்தான் 16.9.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். நூறாண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி சமூக நீதி உரிமைக்காக எடுத்த அந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் அந்த அரசாணை செயல்படுத்தப்படவில்லை என்ற உண்மையை முதல்வர் ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை. (முரசொலி -17.9.2021)

உண்மையில் வகுப்புரிமைக்குப் புதிய அரசாணை பிறபித்து, அதை முதல் முதல் செயல்படுத்தத் தொடங்கியது தமிழரான முதலமைச்சர் சுப்பராயன் ஆட்சியில்தான். தமிழரான அமைச்சர் முத்தையா முதலியார் தமது துறையில் அதை முதலில் செயல்படுத்தினார். இந்த உண்மையைச் சொல்லி இவர்களுக்குத் தனிச் சிறப்பான பாராட்டை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்க வேண்டும்.

1926-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ராமராயநிங்காரின் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் தோற்றுவிட்டது. 21 உறுப்பினர்கள் மட்டுமே நீதிக்கட்சியில் வென்றனர் ஆனால் தனிப்பெரும் கட்சியாய் வென்றிருந்த (காங்கிரசு) சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களில் வென்றிருந்தனர். ஆனால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டனர். அப்போது சென்னை மாகாண ஆளுநர், கட்சி சார்பற்ற சுயேச்சையான சுப்பராயன் (மோகன் குமாரமங்கலம்-பார்வதி தந்தையார்) அவர்களை ஆட்சி அமைக்க அழைத்தார். சுப்பராயன் அமைச்சரவையில் அவருடன் மற்றும் 4 பேர் அமைச்சர்கள். அவர்கள் முத்தையா முதலியார், ஏ.ரெங்கநாத முதலியார், ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார், எம்.ஆர்.சேதுரத்தினம் அய்யர். சுப்பராயன் அமைச்சரவைக்கு வலுச்சேர்க்க ஆளுநர் தனக்கு இருந்த அதிகாரப் படி 34 சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்தார். இவர்கள் சுப்பராயன் அமைச்சரவையை ஆதரித்தனர்.

நீதிகட்சி சுப்பராயன் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் வாக்கெடுப்பில் அது தோற்றுப்போனது.

முத்தையா முதலியார் காங்கிரசுக்காரர். ஆனால் அவர் பிராமண ஆதிக்க எதிர்ப்பாளர். 1916-இல் நீதிக்கட்சி அமைப்பதற்காக நடந்த பிராமணரல்லாதார் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர். எனவே காங்கிரசு சுயராஜ்ஜிய கட்சியின்  முடிவை மீறி, சுப்பராயன் அமைச்சரவையில் முத்தையா முதலியார் சேர்ந்தார்.

சுப்பராயன் அமைச்சரவை 4.11.1927-இல் செனை மாகாண சட்டமன்றத்தில் புதிய வகுப்புரிமை அரசாணை பிறப்பித்தது. G.O.M.S.No.1021.  இந்தப் புதிய ஆணையை 1928-இல் முத்தையா முதலியார் தமது துறையில் முதல் முதலாகச் செயல்படுத்தினார். (ராமராய நிங்கார் கொண்டுவந்த வகுப்பரிமை ஆணை செயல்பாட்டிற்கு வராமலே காலாவதி ஆகிவிட்டது.)

உண்மையில் வகுப்புரிமை வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டுமானால் சுப்பராயன்- முத்தையா முதலியார் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட அரசாணை எண் 1021 செயலுக்கு வந்ததைத்தான் கொண்டாட வேண்டும். 

அந்த சுப்பராயன் அமைச்சரவையை நீதிக்கட்சி ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சுப்பராயன் அமைச்சரவை 1927-இல் கொண்டு வந்த வகுப்பரிமை இடஒதுகீடு விவரம்: 

வேலை வாய்ப்பில்: வேலை வழங்கப்பட வேண்டிய இடங்கள் மொத்தம் 12 என்று கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த 12-இல்: பிராமணர் அல்லாத இந்துகளுக்கு 5 இடம்; பிராமணர்களுக்கு 2 இடம், முகமதியர்களுக்கு 2 இடம்; ஆங்கிலோ இந்தியர் உட்படக் கிறித்துவர்களுக்கு 2 இடம்; பட்டியல் வகுப்பார்க்கு 1 இடம்: (மொத்தம் 12 இடம்)

மொத்தம் எத்தனை இடங்கள் வேலைக்கு நிரப்பப்பட்டாலும் மேற்கண்ட விகிதத்தில் நிரப்ப வேண்டும் என்பதே ஆணை!

1948-இல் அப்போதைய காங்கிரசு முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் புதிதாகப் பின் தங்கிய வகுப்பார் என்று ஒரு பிரிவை உருவாக்கி, சுப்பராயன் ஆணையில் திருத்தம் கொண்டுவந்தார். மொத்தம் 12 இடங்கள் என்று இருந்ததை 14 இடங்கள் என்று உயர்த்தி – புதிதாக 2 இடங்களை பின் தங்கிய வகுப்பார்க்கு வழங்கினார் ஓமந்தூரார்.

சுப்பராயன் அமைச்சரவை செயல்படுத்தி – அதில் ஓமந்தூராரல் புதிய சேர்க்கை உருவாக்கப்பட்ட அதே அரசாணை 1021 (G.O.M.S. No. 1021)ஐத்தான் 1950-இல் உச்ச நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது.

வகுப்புரிமை பற்றிப் பேசும் போதெல்லாம் தி.க.வினரும் தி.மு.க.வினரும் பனகல் அரசர், நீதிக்கட்சி என்று பேசுகின்றனர். புதிய ஆணை போட்டு உண்மையில் செயல்படுத்திய முலமைச்சர் சுப்பராயன் பெயரை அவர்கள் சொல்வதே இல்லை. சுப்பராயன் திராவிடர் அல்லாதவர்; தமிழர் என்பதால் புறக்கணிப்பா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கடலூர் ஏ.சுப்பராயலு பெயர் இருக்கிறது. ஆனால் சுப்பராயன் பெயர் இல்லை. அவர் ஆட்சியில்  வகுப்புரிமை ஆணை புதிதாகப் போடப்பட்டு முதல் முதலாகச் செயல்படுத்தப்பட்ட செய்தியும் இல்லை.

சமூக நீதி உணர்வாளர்கள் வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொண்டு, சமூக நீதிக்கு, வகுப்புரிமைக்கு சுப்பராயன்-முத்தையா முதலியார், ஓமந்தூரார் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதே வேளை நீதிக்கட்சி வகுப்புரிமைக்காக எடுத்த முன்முயற்சியைப் பாராட்ட வேண்டும்!

அதே போல் 19 ஆம் நூற்றாண்டில் பிராமணர் அல்லாதார் இட ஒதுக்கீட்டிற்கு முன் மொழிவு வழங்கிய ஆங்கிலேய அதிகாரிகள் டபுள்யூ.ஆர்.கார்னிஷ் போன்றவர்களையும் நாம் நன்றியுடன் எண்ணிப்பார்க்க வேண்டும். “நாட்டின் முன்னேற்றம் தொடர்பான எந்தச் செய்தியையும் பார்பனக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்கக் கூடாது. அரசின் உண்மையானக் கொள்கை – அரசு அலுவலர்கள் எண்ணிக்கையில் பார்பனர்களுக்கு வரம்புகட்டுவதாகவும், பார்பனர் அல்லாத இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் அரசு அலுவலகங்களுக்குள் நுழைவதை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும். எந்த ஒரு சாதிக்கும் தனி முக்கியதுவம் கொடுப்பதாக இருக்க கூடாது.”

-Report on the Census of Madras Presidency 1871, Volume -1, Page 197 
(சான்று:) கி.வீரமணி ’வகுப்புரிமை வரலாறு’, மூன்றாம் பதிப்பு – 2000.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, September 16, 2021

"தமிழை இழித்தவர் தந்தை பெரியார்" "பேசு தமிழா பேசு" வலையொளிக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தமிழை இழித்தவர் தந்தை பெரியார்"


"பேசு தமிழா பேசு" வலையொளிக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, September 15, 2021

இந்திய அரசு நீட்டை நீக்கும் வரை தமிழ்நாடு ஒத்துழையாமை நடத்த வேண்டும்! ஐயா பெ.மணியரசன் அறிக்கை!



இந்திய அரசு நீட்டை நீக்கும் வரை
தமிழ்நாடு ஒத்துழையாமை நடத்த வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டின் இளம் பிஞ்சுகளை, காவி அரசு காவு வாங்கிக் கொண்டுள்ளது. பிரஞ்சு நாட்டில் லூயி மன்னர்கள் கில்லட்டின் கொலைக் கருவியால் மக்கள் கழுத்தைக் கத்தரித்துக் கொலை செய்தார்கள். தமிழ்நாட்டிலோ நீட் தேர்வே கில்லட்டின் கொலைக் கருவி ஆகிவிட்டது.

சில நாட்களுக்கு முன் மேட்டூர் அருகே கூழையூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ், நேற்று (14.9.2021) அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடியைச் சேர்ந்த  மாணவி கனிமொழி, இன்று (15.9.2021) காட்பாடி அருகே தலையாரம்பட்டு என்ற ஊரைச்  சேர்ந்த மாணவி செளந்தர்யா என்று வரிசையாக நம் தமிழ்ப் பிஞ்சுகளை நீட் பூதம் விழுங்குகிறது. நரேந்திர மோடியிலிருந்து தமிழ்நாட்டு அண்ணாமலை வரை உள்ள ஆரியத்துவா வாதிகளுக்கு இவ்வுயிர்ப் பறிப்புகள் அதிர்ச்சியை அளிக்காது. அவர்கள் பாரதமாதாவுக்குக் கொடுத்த இரத்தப்பலி என்று உள்ளூர உவப்பார்கள். ஆனால் நாம் அனிதா தொடங்கி அடுத்தடுத்து இதுவரை 16 பிள்ளைகளை நீட் பூதத்தின் வாயில் கொடுத்து விட்டு அன்றாடம் துடிக்கிறோம்! இந்த நீட் கொலைகள் தொடர அனுமதிக்கலாமா?

தமிழ்நாடு அரசு 13.9.2021 அன்று, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வை நடத்தாமல் விலக்கு அளித்து, சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவை நிறைவேற்றியுள்ளது. பா.ச.க. தவிர மற்ற எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தோர் ஆதரித்து, இந்த முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் இதுபோல் சல்லிக்கட்டு உரிமைக்காகவும், நீட் தேர்வு விலக்குக்காகவும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளின் கதி என்ன? தில்லிக் காலனி ஆதிக்க அரசின் குப்பைத் தொட்டிக்குத்தான் அவை போயின.

இந்த சட்ட முன்வடிவைத் தமிழ்நாடு ஆளுநருக்குத்தான் தமிழ்நாடு அரசு அனுப்ப வேண்டும். ஆளுநர், குடியரசுத் தலைவர்க்கு அனுப்பி வைப்பாராம், குடியரசுத் தலைவர் ஒன்றிய அமைச்சரவை ஆய்வுக்கு அனுப்பி வைப்பாராம். மோடி – அமித்சா வகையறா முடிவு செய்வார்களாம்.

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் கூட இந்தக் கொடுமை இல்லை. அப்போது மாநில சட்டமன்றத்தின் வசம் கல்வி அதிகாரம் இருந்தது. “குடியரசு” என்று சொல்லிக் கொள்ளும் ஆரியக் குடிகளின் அரசில் கல்வி, மாநில சட்டப் பேரவை அதிகாரத்தில் இல்லை.

புதிய ஆளுநராக ஆர்.என்.இரவி 18.9.2021 அன்று தமிழ்நாட்டில் பதவி ஏற்கவுள்ளார். இந்தியக் காவல் துறையில் உளவுப் பிரிவு அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆர்.என்.இரவி. ஏற்கெனவே நாகாலாந்து ஆளுநராக இருந்து, அம்மாநில மக்களிடம் கெட்ட பெயர் வாங்கித் தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் பெற்று வருகிறார்.
 
கடந்த காலப் பட்டறிவுகளிலிருந்து தமிழ்நாட்டு ஆளுங்கட்சியும், நீட்டை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளும் புதிய உத்திகளை வகுத்து நீட் தேர்வு விலக்கு முன்வடிவுக்கு இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

புதிய ஆளுநர் பதவி ஏற்ற பின் இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள். ஒன்று அவர் கையொப்பம் இட்டு சட்டமாக அறிவிக்க வேண்டும். அல்லது கையொப்பமிட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டு நீட் விலக்கு சட்ட முன்வடிவு தமக்கு வந்த மூன்று நாளில் கையொப்பமிட்டு சட்டமாக்க வேண்டும். 2017-இல் சல்லிக் கட்டு சட்ட முன்வடிவைச் சட்டமாக்கிடக் கோரி தமிழர்கள் மெரினாவிலும் மாவட்டங்களிலும் இலட்சம் இலட்சமாய்- இரவு பகலாய்த் தொடர் போராட்டம் நடத்திய போது அவசரம் அவரமாகக் குடியரசுத் தலைவர் கையொப்பம் வாங்கி, சட்டமாக்கினார்கள்.

மேற்கண்ட முறையில் தமிழ்நாடு ஆளுநரும் இந்திய ஆட்சியாளர்களும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டியதில்லை என்று விலக்களிக்கும் சட்ட முன்வடிவைச் சட்டமாக்கவில்லை என்றால் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூடி, இந்திய அரசுக்கு எதிராக, சனநாயக வடிவில் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்த முடிவு செய்து நூற்றுக்கு நூறு செயல்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல், சட்டமன்றத்தில் முன்வடிவு நிறைவேற்றியதோடு, தன் கடமை முடிந்து விட்டது என்று தி.மு.க. ஆட்சி ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. இதில், தி.மு.க.வைக் குறை கூறி மோடி ஆட்சிக்கு சேவை செய்யும் பணியில் அ.இ.அ.தி.மு.க. இறங்கக் கூடாது.

தமிழ்நாடு முதலமைச்சர், மற்ற மாநில முதல்வர்கள் மற்றும் கட்சிகள் ஆதரவை நீட்டுக்கு எதிராக ஒருங்கு திரட்ட முயல வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள், அனைத்து இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, நீட் விலக்கு சட்ட முன் வடிவுக்கு இந்திய அரசு ஒப்பம் அளிக்கும் வரையில், இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமைப் போராட்டம் நடத்த முடிவு செய்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, September 13, 2021

இளையோரே எழுக! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அழைப்பு! ஐயா பெ. மணியரசன் கட்டுரை!


இளையோரே எழுக!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அழைப்பு!

விவேகானந்தர் சிக்காகோவில் உரை நிகழ்த்தியதன் 128-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் 12.9.2021 அன்று ஆற்றிய காணொலி உரையின் சுருக்கத்தை ஆங்கில இந்து நாளிதழ் (The Hindu 13.9.2021) வெளியிட்டிருந்தது.

“இப்போது, அரசியல் மற்றும் சமூகத்தில் நிலவும் எதேச்சாதிகாரம், மதவெறி போன்ற சீரழிவுகளை எதிர்த்து இளைஞர்கள் எழுக” என்று உணர்ச்சிமிகு உரையைத் தலைமை நீதிபதி ஆற்றி இருந்தார்.

தமிழ்நாட்டிலும் மீள் எழுச்சியை உருவாக்கத் தமிழ் இளையோர்க்கும் பொருந்துவதாக இவ்வுரை இருப்பதால், இதன் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது.

===================================
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===================================

சனநாயக உரிமைகள் என்று நம்மால் ஏற்கப்படுள்ளவை, இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலும், இருண்ட நெருக்கடி நிலைக் காலத்திலும் ஆயிரமாயிரம் இளையோர், ஆதிக்கப் பெரும் புள்ளிகளை எதிர்த்து வீதிகளில் போராடியதன் விளைவால் பெற்றவை! தேசத்திற்காக, சமூகத்தின் மகத்தான நன்மைகளுக்காக, அவர்களில் பலர் தங்கள் உயிரை ஈகம் (தியாகம்) செய்தார்கள். பெரும் வருவாய் தரும் பணிகளை இழந்தார்கள்.

நாட்டின் அமைதி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான பயணத்தில் ஏற்படும் தடங்கல்களைக் களைய இளைஞர்களை நம்புங்கள். தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ இழைக்கப்படும் அநீதிகளை இளையோர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று விவேகானந்தர் கூறினார். அவர்கள் தங்கள் இலட்சியங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் தன்னல மற்றவர்கள்; வீர தீரமானவர்கள்! தாங்கள் உண்மை என்று நம்பும் இலட்சியங்களுக்காக ஈகங்கள் செய்வார்கள். இப்படிப்பட்ட கள்ளம் கபடம் அற்ற மனங்கள் – தூய நெஞ்சங்கள் தாம் நமது நாட்டின் முதுகெலும்புகள்!

இளையோரே, சமூகத்தின் நடப்புகளை சவால்களை நீங்கள் அறிந்து கொள்வது கட்டாயத் தேவை! நினைவில்  நிறுத்துங்கள்; நாட்டில் ஏற்படும் எந்தப் பாதை மாற்றமும், எப்போதும் அதன் இளையோரிடம் வேர்கொள்கிறது. அவர்களின் பங்கேற்பால் நிகழ்கிறது. நீங்கள் பார்க்க விரும்பும் முழுநிறைவான தேசத்தையும் சமூகத்தையும் கட்டி எழுப்புவது உங்களுக்கான பணி!

சமத்துவக் கொள்கையுள்ள நமது அரசமைப்புச் சட்டத்தில் இணைந்துள்ள மதச் சார்பின்மைக் கொள்கை, இந்திய விடுதலைப் போராட்ட நெருப்பில் புடம் போடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே இந்தியாவிற்கான மருந்துச்சீட்டு போல் மதச்சார்பின்மையைப் பேசியவர் விவேகானந்தர். மதத்தின் மெய்யான சாரம் அனைவர்க்குமான பொது நன்மை, சகிப்புத்தன்மை ஆகியவையே என்று உறுதியாக நம்பினார். மூடநம்பிக்கைகளுக்கும், கெடுபிடிகளுக்கும் அப்பாற்பட்டதாக மதம் இருக்க வேண்டும். 

இந்தியா மீள் எழுச்சி கொள்ள, இளையோரிடையே விவேகானந்தர் கோட்பாடுகள் குறித்த உணர்வுகளை ஊட்ட வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Wednesday, September 8, 2021

தமிழ் இன உணர்வுப் பாவலர் புலமைப்பித்தன் மறைவு பேரிழப்பு! பெ. மணியரசன் இரங்கல்!



தமிழ் இன உணர்வுப் பாவலர்  
புலமைப்பித்தன் மறைவு பேரிழப்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!


புலவர் புலமைப்பித்தன் அவர்கள் இன்று (08.09.2021) காலமான செய்தி, பெரும் துயரமளிக்கிறது. திரைப்படப் பாடல்களில் மரபு இலக்கிய செழுமையைக் கொண்டு வந்தவர் புலமைப்பித்தன்! உண்மையான தமிழின உணர்வு நிரம்பிய நெஞ்சத்துக்கு சொந்தக்காரர். 

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்து, தமிழீழ விடுதலைப் போருக்கு தமிழ்நாட்டில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. முழுமையாக ஆதரவு கொடுக்கப் பாடுபட்டவர். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும், மற்ற தளபதிகளும் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, அவர்கள் புலவர் புலமைப்பித்தன் இல்லத்திற்கு உரிமையோடு சென்று தங்குவதும் உணவருந்துவதும் வழக்கமாக இருந்தது. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களோடு நெருக்கமான தொடர்பு வைத்து, பல உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வர் புலவர்.

இந்திய அரசின் துணையோடு சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்களைக் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்து குவித்தபோது, கொதித்தெழுந்து போர் நிறுத்தக் கோரிக்கை இயக்கங்களில் பங்கு பெற்றார். 

2009 பேரழிவுக்குப் பிறகு ஈழத்தமிழர்களுடைய துயர் துடைக்கவும் இனப்படுகொலைக் குற்றவாளிகளைப் பன்னாட்டு நீதிமன்றத்தில் ஏற்றவும் நடந்த பல்வேறு முயற்சிகள் - இயக்கங்கள் முதலியவற்றில் முதன்மையாகப் பங்கு கொண்டார் புலமைப்பித்தன். அவ்வாறான  செயல் பாடுகளில் தமிழ்த்தேசியப் பேரியக்கமும் புலவர் புலமைப்பித்தன் அவர்களும் கள நிகழ்வுகளில் கூட்டாகச் செயல்பட்டிருக்கிறோம். 

தமிழீழ மக்கள் அன்றாடம் கொன்று குவிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்குப் போர் நிறுத்தம் கோரி தன்னையே எரித்துக் கொண்ட தழல் ஈகி முத்துக்குமார் சிலையை தமிழ்த்தேசியப் பேரியக்கம், தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டி - சாணூரப்பட்டியில் திறந்தபோது, அப்போதைய தமிழ்நாடு அரசு தடை செய்தது. அந்தத் தடையைக் கண்டித்து அதே நாளில் (16.5.2010) அதே ஊரில் நடந்த பொதுக்கூட்டத்தில் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் கலந்து கொண்டு எழுச்சிமிகு உரையாற்றினார்.  

சமகாலத்தில் தமிழ் இலக்கியத்தைத் திரைப்பாடல் வாயிலாக வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சி மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள ஐயா புலமைப்பித்தன் அவர்களின் மறைவு தமிழினத்திற்குப் பேரிழப்பாகும்! அவரது மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Tuesday, September 7, 2021

திராவிடத் திணிப்பு: தமிழ்நாட்டைக் கலப்பின மாநிலமாக்கவே! - ஐயா பெ.மணியரசன்



திராவிடத் திணிப்பு: 
தமிழ்நாட்டைக் கலப்பின மாநிலமாக்கவே!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்  

பேராயர் இராபர்ட் கால்டுவெல், “திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்” ( A comparative Grammar of Dravidian or South Indian Family Languages) என்ற மொழியியல் நூல் எழுதியவர் என்பதைப் பலரும் அறிவர். ஆனால் அவர் சமற்கிருத வைதிக ஆரியப் புராணங்களைப் படித்து விட்டு, அவற்றைத் தொகுத்து “பாரதப் புராதனம்” என்ற நூலை எழுதியவர் என்பது பலருக்குத் தெரியாது. அதே கால்டுவெல் தொல்காப்பியம், மற்றும் சங்கத் தமிழ் நூல்கள் பலவற்றைப் படிக்காதவர் எனபதும் பலருக்குத் தெரியாது. அவர் சமற்கிருதம் கற்ற அளவிற்குத் தமிழ் கற்றதில்லை. அவர்தாம்  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதியவர்.

“திராவிட” என்ற மூல மொழியிலிருந்து (Proto Language) தமிழ் மொழி உருவானது என்று கற்பனைக் கயிறு திருத்தவர் தாம் காலடுவெல். அவருக்கு முன்பு ஆங்கிலேயே அதிகாரியாக இருந்து தமிழ் – ஆய்வு செய்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு (1777-1819) தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல. இவை தென்னிந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை; இவற்றின் தாய் தமிழ் மொழி என்று கூறினார். தென்னிந்திய மொழிக் குடும்பம் என்று நிலவியல் அடிப்படையில் இம்மொழிகளை வகைப்படுத்தினார். 

எல்லீசு இக்கருத்துகளை, 1816-ஆம் ஆண்டு வெளியான அலெக்சாண்டர் டங்கன் காம்பெல் எழுதி வெளியிட்ட தெலுங்கு மொழி இலக்கண நூலுக்கான முன்னுரையில் வெளியிட்டார்.

எல்லீசுக்கு முன்னோர்களான சர் வில்லியம் ஜோன்ஸ், தாமஸ் கோல் புரூக் போன்றவர்கள் தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தும் சமற்கிருத மொழிக் குடும்பதிலிருந்து பிறந்தவை என்று கூறி இருந்தனர். அதற்கு மாற்றாகக் ஆய்வுரை வழங்கிய எல்லீசை அவருக்குப் பின் 1850 களில் ஆய்வு செய்த கால்டுவெல் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழ் மொழிக்கு ஒரு மூலமொழி இருந்திருக்க வேண்டும்; அந்த மூல மொழி எது என்று தேடினேன்; சமற்கிருத  நூல்களான மனுதர்மத்திலும், குமாரில பட்டரின் தந்திரவார்த்திகாவிலும் கூறப்பட்ட “திராவிட” என்பதை எடுத்துக் கொண்டேன் என்கிறார்.

(Robert Caldvel: A comparative Grammar of the Dravidian or south Indian Family of Languages (ஆங்கிலம்) கவிதா சரண் பதிப்பகம், சென்னை (2008) பக்கம் 4,5). கால்டுவெல், தமது “கண்டுபிடிப்பிற்கு” அகச்சான்று – அதாவது தமிழ் மொழிச் சான்று எதுவும் காட்டவில்லை. ஆரிய சமற்கிருத நூலான மனுதர்மத்தில் சீரழிந்து  போன வடநாட்டு சமூகப் பிரிவினைக் குறிக்கும் பட்டியலில் உள்ள “திராவிட” என்ற சொல்லையும் தந்திர வார்த்திகாவில் உள்ள ஆந்திர  - திராவிட பாஷா என்ற சொல்லையும் எடுத்துக் கொண்டு கற்பனைக் கயிறு திரித்து திராவிட இனம் என்றும் திராவிட மொழி என்றும் பெயர் சூட்டிவிட்டார்.

கால்டுவெல் தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் இழிவு ஏற்படுத்தக் கூடிய வகையில் என்னென்ன தவறுகளைத் தமது ஒப்பிலக்கண நூலில் செய்துள்ளார் என்பதைப் பாவாணர் பட்டியல் இட்டுள்ளார். கால்டு வெல் தவறுகளைக் குறிப்பிட மிகவும் நாகரிமாக “கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ் சறுக்கல்கள்” என்று தலைப்பிட்டுள்ளார். (நூல்: தமிழ் வரலாறு, பக்கம் 26, 27)

1. சேர, சோழ, பாண்டியர்களை அரசர்கள் என்று அறியாமல், அந்தந்தப் பகுதி மக்களின் குடிப்பெயர் என்று கருதினார் கால்டுவெல்.
2. தமிழர் நாகரிகம் கொற்கையில் தொடங்கியது என்று கூறினார்.
3. தமிழரை (அவர்பாணியில் திராவிடரை) உயர் நாகரிகப்படுத்தியவர்கள் ஆரியர்கள் என்று கூறினார்.
ஆயிரத்திற்கு மேல் தமிழர்களுக்கு எண்ணத் தெரியாது. மருத்துவ நூல் தமிழில் இல்லை; மருத்துவர் இல்லை. வெளிநாட்டு வாணிகம் தமிழர்களுக்கு இல்லை. இலங்கையைத் தவிர வேறெந்த கடல் கடந்த நாட்டுடனும் தமிழர்களுக்குத் தொடர்பில்லை.
வானநூல் , கணியம், இலக்கணம் முதலியவை பற்றி தமிழர்களுக்குத் தெரியாது.
மனம், நினைவு, மனச்சான்று போன்றவற்றைக் குறிக்கத் தமிழில் சொற்கள் இல்லை,
4. தமிழ் நெடுங்கணக்கு (எழுத்து வகைகள்) சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியது; வடவெழுத்துகளுள் வேண்டியவற்றை மட்டும் தமிழர்கள் எடுத்துக் கொண்டனர்.
5. தமிழ்ப் பெயர்ச் சொல்லின் வேற்றுமை அமைப்பு முற்றிலும் சமற்கிருத வேற்றுமை அமைப்பைப் பின்பற்றியது.
6. தமிழில் சரியானபடி செயல்பாட்டு வினையே இல்லை.
7. அரசன், ஆயிரம், உலகம், கணியம், சேரன், சோழன், பாண்டியன், திரு, நாழி, மனம், மாதம் முதலியவை வட சொற்கள்.
மலையாளத்தை ஓரிடத்தில் தமிழின் கிளை மொழி (Oldest offshoot) என்கிறார். இன்னோர் இடத்தில் அது தமிழின் உடன் பிறப்பு மொழி (Sister dialect) என்கிறார்.

கால்டுவெல்லின் மேற்கண்ட ஏழு குறைபாடுகளும் உண்மைக்கு மாறானவை என்று பாவாணர் கூறுகிறார்.

இப்படிப்பட்ட கால்டுவெல்லைத்தான் தமிழர் வரலாற்று மீட்பின் தலைமைக் குருவாக தி.மு.க. கொண்டாடுகிறது. கி.மு, கி.பி என்பது போல் கா.மு., கா.பி. என்று கொண்டு வருகிறது தி.மு.க. ஆட்சி. கால்டுவெல்லுக்குப் பின் 150 ஆண்டுகளில் திராவிடத் தலைவர்கள் எழுதியவை, பேசியவை, இட ஒதுக்கீடு, மாநில சுயாட்சி, ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா, பணி ஓய்வு அதிகாரி பாலகிருட்டிணன் ஆகியோர் படைப்புகள் முதலியற்றைத் தொகுத்துத் “திராவிடக் களஞ்சியம்” என்ற தலைப்பில் நூல்களாகக் கொண்டு வரப் போவதாகத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2.9.2021 அன்று சட்டப் பேரவையிலும், ஊடகங்களிலும் அறிவித்தார்.

காலடுவெல் மொழியியல் ஆய்வில் செய்த அதிகப் பிரசங்கித்தனம், அவர் வெளிப்படுத்திக் கொண்ட அறியாமை ஆகியவற்றைத் திராவிடவாத சிந்தனையாளர்கள் எப்போதும் வெளிப்படுத்துவது இல்லை. காரணம், தமிழின மறைப்பு, தமிழ் மொழி மறைப்பு ஆகியவற்றுக்குத் தேவைப்படும் திராவிடத் திரை நெய்து கொடுத்தவர் கால்டுவெல். எல்லாவற்றுக்கும் மேலாக, பிறந்த இன மறப்பிற்கும் மறுப்பிற்கும் “திராவிட இனம்” என்ற மேலைநாட்டு மது தயாரித்துக் கொடுத்தவர் அவர்.

=======================================
தெலுங்கு, கன்னட, மலையாளிகள் ஏற்கிறார்களா?
=======================================

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், துளுவர், தமிழர் எல்லோரும் ஒரே மரபினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்  அந்த மரபினம் திராவிடர் என்றும் கால்டுவெல்லின் வரலாற்று வாரிசுகளாகப் பேசிவரும் திராவிடவாதிகளுக்கு நாம் விடுக்கும் அறைகூவல் (சவால்) இது தான்:

திராவிடம் என்ற பெயரில் ஓரினம், ஒரு மொழி, ஒரு தாயகம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்று தருவீர்களா? இதுவரை தந்ததுண்டா? இல்லை!

அடுத்து, தெலுங்கு, கன்னட, மலையாள தேசிய இனத்தவர்கள் தாங்களும் தமிழர்களும் திராவிட இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்களா? தாங்கள் திராவிடர் என்று ஒரு போதும் அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை.

நாமெல்லாம் ஓர் இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்ற உளவியல் உணர்ச்சி அவர்களிடம் உண்டா? இல்லை.

திராவிட இன அரசியல் பிதாமகர்களான பெரியார், அண்ணா ஆகியோரைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தங்கள் தலைவர்களாக ஏற்றதுண்டா? அல்லது அவ்விருவர் காலத்தில் அம்மாநில மக்கள் தி.க., தி.மு.க. கிளைகளைத் தொடங்கியதுண்டா? இல்லை. அம்மாநிலங்களில் இருந்த அல்லது இருக்கின்ற, தி.மு.க. கிளைகள் அங்கு வாழும் தமிழர்களால் தொடங்கப்பட்டவை!
பெரியார், அண்ணா காலத்திலும், இப்பொழுதும் ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் திராவிடக் கருத்தியலை வளர்க்க உழைத்ததுண்டா? இல்லை! அல்லது உழைத்தோம் பயனில்லை என்றால் பொருந்தாத திராவிடக் கோட்பாட்டை வைத்திருக்கிறோமே என்ற தன்திறனாய்வு உண்டா? இல்லை. 

1956-இல் மொழி வழி மாநிலமாகத் தமிழ்நாடு அமைந்த பிறகு பெரியார், திராவிட நாடு என்ற இலட்சியத்தைக் கைவிட்டு, தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தைக் கைக்கொண்டார் என்கிறீர்கள். அப்புறம் ஏன் திராவிடத்திற்கு இன்றும் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

ஒன்று “திராவிடர்க்கு” உண்மையாய் இருங்கள்; அல்லது தமிழர்க்கு உண்மையாய் இருங்கள்.

=============================
இனம் இயற்கையா? மனிதத் தேர்வா?
=============================

சாதி – மத மறுப்பு, கடவுள் – மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு ஆகியவற்றைக் கொண்டது திராவிடர் இனம்; தமிழ் இனத்தை அப்படிச் சொல்ல முடியாது; எனவே இவற்றிற்குரிய திராவிட இனத்தை ஏற்கிறோம் என்று திராவிடவாதிகளில் ஒரு சாரார் கூறுகிறார்கள். மேலும் திராவிடர் என்பது மரபினம்; தமிழர் என்பது மரபினம் அன்று என்றும் கூறுகிறார்கள். 

இனம் (Race) என்பது இயற்கையின் படைப்பு. மனிதர்கள் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு அதில் இல்லை. எல்லா இனத்திலும் முற்போக்கு கருத்துகளும் உண்டு, பிற்போக்கு கருத்துகளும் உண்டு. அறிவியல் சார்ந்த கருத்துகளும் உண்டு; மூட நம்பிக்கைகளும் உண்டு. முற்போக்காக ஓர் இனத்தை முழுஅளவில் நாங்கள் படைத்துக் கொள்கிறோம் என்று யாராவது கூறினால் அது சமூக அறிவியல் அன்று.  மானிட வளர்ச்சிக் கோட்பாடும் அன்று.
தமிழர்களைப் பொறுத்தவரை, எமது மரபு இனமும் (Race), தேசிய இனமும் (Nationality) “தமிழர்” என்பதே.

==================================
திராவிடர்களின் தமிழர் பகை வன்முறைகள்
==================================
கர்நாடக, கேரள “திராவிட” மாநிலங்களில் கன்னடர்களும் மலையாளிகளும் தமிழர்களைத் தாக்குவது அதிகரித்து வருகிறது.

காவிரித் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் என, எது தீர்ப்புக் கொடுத்தாலும் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத்தராமல் கர்நாடகத்தில் அம்மாநில அரசும் பல தரப்புக் கன்னடர்களும் தடுத்துத் தேக்கிக் கொள்கிறார்கள்.

1991 டிசம்பரில் கர்நாடகத்தில் காலம் காலமாக வாழ்ந்து வரும் ஏரளமானத் தமிழர்களை கன்னட வெறியர்கள் இனப்படுகொலை செய்தார்கள். தமிழர்களின் வீடுகள், நிறுவனங்கள் சூறையாடப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன. இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் ஏதிலிகளாகத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் காவிரிச் சிக்கலை வைத்துத் தமிழர்களைத் தாக்குகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னும் தமிழர்களைத் தாக்கி, மண்டியிடச் செய்து, காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம் என்று முழக்கமிட வலியுறுத்தி அதைக் காணொலி ஆக்கிக் கன்னடர்கள் வெளியிட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி.என் நிறுவனத்தின் சொகுசுப் பேருந்துகளையும் இதரத் தமிழர்களின் சரக்குந்துகளையும் 200க்கும் மேற்பட்டவற்றை பெங்களூரில் கன்னடர்கள் எரித்துச் சாம்பலாக்கினார்கள். சற்றொப்ப இரண்டுமாதங்கள் தமிழக –கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஊர்தி போக்குவரத்துத் தடுக்கப்பட்டு மூடி கிடந்தது.

கர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பினாலும் கூட, தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட மறுக்கிறார்கள். வெள்ள காலங்களில் வெளியேறும் மிகை நீரும் மேட்டூர் அணைக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக 67.16 ஆ.மி.க. கொள்ளளவில் மேக்கேதாட்டில் அணைகட்டக் கர்நாடகம் முனைகிறது.

முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கின்ற நிலையில் அணை உடையப் போகிறது என்று கேரள சி.பி.எம்; காஙிகரசுக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் பீதி கிளப்பி, தமிழர்களுக்கு எதிரான இனவெறியைத் தூண்டிவிட்டன. 2011,2012 ஆண்டுகளில் தமிழ்நாட்டு எண் பொறித்த ஊர்திகளையும் தமிழர்களையும் தாக்கினார்கள் மலையாளிகள்! சென்னையைச் சேர்ந்த ஒரு தமிழன் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிக் கொன்றார்கள். ஐயப்ப சாமி கோயிலுக்குப் போன தமிழர்களைத் தாக்கினார்கள். கேரள நச்சுக் கழிவுகளைத் திட்டமிட்டுத் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். தமிழ்நாட்டிற்குரிய கண்ணகி கோயில் நிலப்பகுதியை கேரளம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. கூடலூர் – பளியங்குடி வழியாகக் கண்ணகி கோயிலுக்குத் தமிழ்நாட்டு எல்லைகுள் தமிழ்நாடு அரசு சாலை அமைப்பதையும் தடுத்து வைத்திருகிறது கேரளம்.

தமிழ்நாட்டு அரசுப் பொறுப்பில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு, விலைக்கு மின்சாரம் தரமறுக்கிறது கேரள அரசு. மின்னாக்கியை (ஜெனரேட்டரை)ப் பயன்படுத்தித்தான் தமிழ்நாடு அவ்வளவு பெரிய அணையையும் அலுவலகங்களையும் பல பத்தாண்டுகளாக நிர்வகிக்கிறது.

ஆந்திரம், தமிழ்நாட்டிற்குரிய பாலாறு, தென்பெண்ணை ஆறுகளில் அணைகள் கட்டி சொட்டு நீரும் வராமல் தடுத்துவிட்டது. தமிழ்நாடு அரசு பணம் செலுத்தி சென்னைக் குடிநீருக்குக் கிருஷ்ணா ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டது. ஓர் ஆண்டில் கூட ஒப்பந்தப்படி 12 ஆ.மி.க. (T.M.C.) தண்ணீரை ஆந்திரம் சென்னைக்குத் திறந்துவிட்டதில்லை. பேருந்தில் பயணம் செய்த தமிழர்கள் 18 பேரை ஆந்திரக் காவல் துறையினர் கடத்திச் சென்று, அம்மணப்படுத்தி, கைகால்களைக் கட்டி, உறுப்புகளை அறுத்து, சித்திரவதை செய்து சுட்டுக்கொன்ற செய்தி அனைவருக்கும் தெரியும்.


====================
திராவிடத் தீவிரம்
====================
இன்னும் எத்தனை எத்தனையோ வன்கொடுமைகளைத் தமிழர்களுக்கு எதிராக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் அரங்கேற்றுகின்றன. அவர்களும் தமிழர்களும் ஒரே இனம் என்ற திராவிட இனக் கொள்கையைத் தி.க.வும் தி.மு.க.வும் கடைபிடித்து, தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தமிழினத் தற்காப்பு உணர்வற்ற ஏமாளிகள் ஆக்குகின்றன தமிழர் இழப்புகளுக்கு ஆளகிறார்கள்.

இப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதிலிருந்து திராவிட இனவாதத்தைத் தீவிரபடுத்தியுள்ளார். முதலமைச்சர் பதவி உறுதி மொழி ஏற்றவுடன் “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், திராவிட இனத்தவன்” என்று தன்னை வெளிபடுத்தினார். தமிழ்நாட்டு முன்னேற்றத்தைத் “திராவிட மாடல்” என்றார். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் போது அவருக்குத் “திராவிடச் சிறுத்தை”  என்று சிறப்பு அடைமொழி கொடுத்தார். இப்போது தமிழ்நூல்கள் தொகுப்பிற்குத் “திராவிடக் களஞ்சியம்” என்று பெயர் சூட்டுகிறார்.

திராவிடர் கழகத்தை விஞ்சும் அளவிற்கு இப்போது மு.க.ஸ்டாலின் திராவிட இனத்திணிப்பில் தீவிரம் காட்டுவது ஏன்?

தமிழ்நாடு என்பது தமிழர்களுக்கான மொழிவழித் தேசிய இனத்தாயகம். அவ்வாறான தேசிய இனத் தாயக அடிப்படையில்தான் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், மராட்டியர்கள், குசராத்தியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர்கள் எனப் பல இனத்தவர்க்கும் தனித் தனி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதற்காக இம்மாநிலங்களில் பிற மொழி பேசும் மக்களும் பிற தேசிய இனமக்களும் வாழவே மாட்டார்கள், வாழவே கூடாது என்ற வரையறை எதுவும் இல்லை. 
    
வரலாற்றுப் போக்கில் பல்வேறு காரணங்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் வெளியிலிருந்து வந்து குடியேறிய மக்கள் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சம உரிமை உண்டு. ஆனால் அந்தச் சிறுபான்மையினர்க்காக, அம்மாநிலத்துக்குரிய வரலாற்று வழிப்பட்ட மண்ணின் மக்கள் தங்கள் இனப்பெயரை மறைத்துக் கொள்வது என்பதோ, தங்கள் தாய்மொழியை, முன் நிறுத்தக் கூடாது என்பதோ எந்த மாநிலத்திலும் இல்லை. மரபு வழியில் மண்ணுக்குரிய இனத்தின் பெயரை -  அதன் மாநிலத்திற்கு  வைக்கக் கூடாது என்றும் கூற முடியாது. 

அதே வேளை தொடர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து அயல் இனத்தவர்கள் அன்றாடம் வந்து குவிந்து தமிழ்த் தேசிய இனத்தின் தாயகமான தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. மொழி வழி தேசிய இனத் தாயகமாகத் தமிழர்களுக்குத் தமிழ்நாடு வரையறுக்கப்பட்ட 1956 நவம்பர் 1க்கு பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய அனைவரும் அயலார் என்றும் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை எழுப்பிவருகிறது.   

தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, செளராட்டிரம் முதலிய மொழிகளைப் பேசும் மக்கள் பலநூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களை நாம் அயலாராகக் கருதவில்லை. மண்ணின் மக்களே. அதே வேளை தமிழே இங்கு கல்வி மொழி, ஆட்சி மொழி; தமிழர்களின் மரபுவழித் தாயகம் தமிழ்நாடு!

கர்நாடகத்தில் தமிழர் நிறுவனங்களில் கன்னடத்துடன் தமிழிலும் நிறுவனப் பெயர் எழுதபட்டிருந்தால் அப்பலகைகளை அடித்து உடைக்கிறார்கள் கன்னட வெறியர்கள். தமிழில் இசை நிகழ்ச்சி நடந்தால் மேடை ஏறித் தாக்குகிறார்கள்.  தமிழ்நாட்டில் அப்படியெல்லாம் நடப்பதில்லை. நடக்கக் கூடாது.

ஆனால் தமிழின அடையாளத்தையே மறைக்க தி.க.வும், தி.மு.க.வும் முனைவது சரியா? திராவிடத்திணிப்பு ஏன்?இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின்  திராவிடத் திணிப்பில் தீவிரம் காட்டுவது ஏன்?

ஐயா அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 175-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி அவர் நினைவைப் போற்றும் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் “தமிழன், திராவிடம்” என்ற இரண்டு சொற்கள் இல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது என்று முன்னுரை கொடுத்தார். திராவிடம் என்பதை அனைவர்க்கும் பொதுவான இனமாகவோ – பண்பாகவோ திணிப்பதை ஏற்க முடியாது.

அயோத்திதாசர் தொடக்கத்தில் திராவிட என்ற சொல்லைப் பயன்படித்தினார். பின்னர் அச்சொல்லைக் கைவிட்டு, தமிழன் என்பதையே பயன்படுத்தினார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (1881) தமிழர் என்று அனைவரையும் பதியச் சொன்னார். தமிழன் என்ற பெயரில் ஏடு நடத்தினார்.

அயோத்திதாசரைப் போற்றுவதைக் கூட ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஸ்டாலின், திராவிடத்தைத் திணிப்பது சரியன்று.

தமிழிக்கும் தமிழினத்திற்கும் பாடுபட்ட அயோத்திதாசர், மனோன்மணியம் சுந்தரனார் போன்றவர்கள் கூட திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். காரணம் அப்போது ஆட்சியாளர்களால் திராவிடர் என்ற சொல் பிரபலப்படுத்தப்பட்டிருந்ததாகும்.

“திராவிட” என்ற சொல் எப்போது பிரபலம் ஆனது. விசயநகரத் தெலுங்கு மன்னர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்த போது! அதிலும் குறிப்பாகத் தெலுங்கு பிராமணர்கள் “திராவிட” என்ற சொல்லைக் கூடுதலாகத் திணித்தார்கள். அப்பொழுதுதான் தாயுமானவர் முதல் முதலாகத் தமிழ் இலக்கியத்தில் “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

ஐரோப்பிய மொழியியல் ஆய்வாளர்கள், ஆரிய பிராமணர்கள் கொடுத்த “திராவிட” என்கிற இன – மொழிப் பெயரை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.
  
நம்முடைய தமிழ்ச்சான்றோர்களும்,  அறிஞர்களும் திராவிட, திராவிடர் என்ற சொற்களைப் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தினார்கள். தெலுங்கர்களின் – பிராமணர்களின் மேலாதிக்கச் செல்வாக்கால் – வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி நம் சான்றோர்கள் திராவிடத்தைப் பயன்படுத்தினார்கள்.

 ஆரிய-பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடினார் பெரியார்; ஆரிய ஆதிக்கத்தின் மீது அடி விழுந்தது. அந்த நன்றிக் கடனுக்காக, நம்முடைய பாவேந்தர் போன்றோர் தமிழையும் தமிழ் இனத்தவரையும்  பெரியார் இழிவு படுத்தியதையெல்லாம் தாங்கிக் கொண்டார்கள். பெரியார் தாசனாகப் பாவேந்தர் விளங்கினார். அதே வேளை தமிழுக்கு அமுதென்று பேர், தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடினார்.

தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழைப் படிக்காதே, ஆங்கிலத்தைப் படி என்று பெரியார் ஆவேசப் பரப்புரை செய்த போது கூடப் பாவேந்தர் “நூலைப்படி; சங்கத் தமிழ் நூலைப்படி; காலை இரவு பொருள்படும்படி சங்கத் தமிழ் நூலைப்படி” என்று பாடினார்.

தமது பாக்களில் திராவிடன், திராவிட நாடு என்று எழுதிய பாவேந்தர் பின்னர் மறுபதிப்புகளில் அவற்றைத் தமிழன், தமிழ்நாடு என்று மாற்றினார். இதுபற்றி பாவேந்தர் ஆய்வாளர் காலஞ்சென்ற முனைவர் இளவரசு அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்திதாசரும் பாவேந்தரும் “திராவிடர்” என்று முழுமையாகக் கடைசிவரைக் கூறவில்லை. அவர்கள் தமிழ், தமிழர் என்ற களத்தில்தான் செயல்பட்டார்கள். இந்த இடத்தில் இன்னொரு கருத்தையும் சொல்லிவிடுவது நல்லது. நம்முடைய அயோத்திதாசரும், பாவேந்தரும் “திராவிடர்” என்ற இனம் பற்றி மெய்யாகவே கூறியிருந்தாலும் அதை நீக்கிவிட்டுதான் நாம் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.   

இதுதான் தமிழ் அறிவுத் தேடல் மரபு. அயோத்திதாசரும் பாவேந்தரும் அந்த அறிவுத் தேடல் மரபை நமக்கு அடையாளம் காட்டியுள்ளார்கள்.

===============================
திராவிடத் திணிப்பு வேகம் பிடிப்பதேன்?
===============================

அண்மைக் காலமாகத் தமிழின உணர்ச்சி தமிழ்நாட்டு இளையோரிடமும் பெரியோரிடமும் வளர்ந்து வருகிறது. தமிழ்த் தேசியம் வளர்ந்து வருகிறது. இந்தத் தமிழின உணர்ச்சி வளர்ச்சி வேகத்தைத் தடுத்து மடைமாற்றத் திராவிட உணர்ச்சியை செயற்கையாகத் தூண்டுகிறார்கள்.

அடுத்து, தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்று இருப்பதைக் கலப்பு இன மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டம் கொண்டுள்ளார்கள்.

கலப்பின மாநிலம் என்பதை நேரடியாகச் சொன்னால் திராவிடக் கட்சிகளில் இருக்கின்ற தமிழர்களே அதை எதிர்ப்பார்கள் என்பதற்காக, ஆரிய எதிர்ப்புக்கு உரியது திராவிடமே என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். இந்த உத்தி ஏற்கெனவே பெரியாரால் சொல்லப்பட்டதுதான்.

ஆரிய-பிராமணப்-சமற்கிருத ஆதிக்க எதிர்ப்பை 2000 ஆண்டுகளாக தொடர்ந்து வள்ளலார் காலம் – மறைமலையடிகள் காலம் வரை கடைபிடித்து வந்தது தமிழினம். அதற்கான சான்றுகள் ஏராளம். அப்படி தமிழ் முன்னோர்களால் ஆரிய எதிர்ப்பிற்கு பக்குவப் படுத்தப்பட்ட மண்ணில்தான் பெரியாரின் ஆரிய எதிர்ப்பு வளர முடிந்தது அதே வேளை அவர் உரிமை கொண்டாடிய ஆந்திர, கர்நாடக, கேரள திராவிட மாநிலங்களில் ஆரிய பார்ப்பணிய சமற்கிருத எதிர்ப்பு வெகு மக்கள் இயக்கமாக உருவாகவில்லை.  

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்க திராவிடம் இனம் என்ற வரையறை தேவை என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் பார்ப்பனர்களை எதிர்க்கத் தமிழினம் பொருத்தமில்லை, திராவிட இனமே சரியானது என்று பெரியார் கூறினார். இதோ அவர் கூற்று:
“திராவிட சமுதாயம் என்று நம்மைக் கூறிக் கொள்ளவே கஷ்டமாயிருக்கும் போது, தமிழர் என்று எல்லோரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும்.  இங்கேயே பாருங்கள் கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாதுரை தமிழர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். எனவே திராவிட  சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம், நம் நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது” என்று ஒரு பொதுக் கூட்டத்தில்  பெரியார் பேசினார்.     (பெரியார் ஈ.வெ.ரா, சிந்தனைகள் -1, பதிப்பாசிரியர், வே.ஆனைமுத்து. 1974 பக் 543-550).

தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழரல்லாத மற்ற இனத்தவர்களுக்கும் உரிய பொதுச் சொல்லாகத்தான் பெரியார் திராவிடத்தைத் தேர்வு செய்தார். அதன்பிறகு தமிழர் என்றால் “என் தாய் மொழியும் தமிழ் என்று கூறிக் கொண்டு பார்ப்பனர்களும் வந்து சேர்ந்து கொள்வதைத் தடுக்கத் திராவிடர் என்ற இனப் பெயரைப் பயன்படுத்துகிறேன் என்று கூறினார்.

தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகிய மூன்று இனத்தார்க்கும் பொதுச் சொல் திராவிடர் என்று கால்டுவெல் பாணியைப் பின்பறிப் பெரியார் கூறினார்.

இப்போதும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இருக்கும் தமிழர் என்ற தனி அடையாளத்தை – தாயக உரிமையை நீக்க, தெலுங்கர், கன்னடர், மலையாளி போன்ற பிற இனங்களையும் இணைத்து, கலப்பின மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றவே முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட இனம் குறித்துத் தீவிரமாகப் பேசிவருகிறார்.

தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் முறையே ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக, கேரள மாநிலங்களில் தங்களின் இயற்கையான இனப்பெயரில் வாழ்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டும் தங்களின் இயற்கையான இனப்பெயரை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, திராவிடர் என்ற பெயரில் அடையாளப்பட வேண்டும் என்பதுதான் இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் திராவிட முனைப்பு. இதைப் புரிந்து கொண்டு தமிழர்கள் தங்களின் இனப்பெயரை, இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்.
அதே வேளை, பல நூறு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழும் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்களைத் தமிழர்களாகிய நாம் அயலாராகக் கருதவில்லை, கருதக்கூடாது. சம உரிமை உள்ள மக்களாகவே கருதுகிறோம். அவர்களும் தமிழர்களின் இனப்பெயரை மாற்றும் “திராவிட” முயற்சிகளுக்கு ஆதரவளிக்கக்கூடாது. ஓர் இன மக்களுக்கு அந்த இன முன்னோர்கள்தான் இனப்பெயரை சூட்டுவர், கால்டுவெல் போன்ற வெளியார் தமிழர்களுக்கு இனப் பெயர் சூட்ட முடியாது. கால்டுவெல்லை பயன்படுத்தித் தமிழின அடையாளத்தை மறைத்தும் மறுத்தும் சூதாடுகின்ற திராவிட அரசியலை ஏற்க முடியாது.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT