உடனடிச்செய்திகள்

Friday, January 29, 2010

மாவீரன் முத்துக்குமாருக்கு த.தே.பொ.க.வின் வீரவணக்கங்கள்!


மாவீரன் முத்துக்குமாருக்கு த.தே.பொ.க.வின் வீரவணக்கங்கள்!



தமிழகமெங்கும் மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்ச்சிகள்!

ஈழத்தமிழர் மீதான இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி தீக்குளித்த மாவீரன் முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (29.01.2010) கடைபிடிக்கப்படுகின்றது. இதனையொட்டி தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக மாணவர் முன்னணி, தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகளின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தஞ்சை

தஞ்சையில் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் ஈகி முத்துக்குமாரின் முதலாமாண்டு நினைவாக, தெருமுனைக் கூட்டம் - சுடரோட்டம் - கருத்தரங்கம் ஆகியவை 29.01.2010(வெள்ளி) இன்று நடத்தப்படுகின்றது. கருத்தரங்கை ஒட்டி, 29.01.2010 அன்று காலை தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில், தெருமுனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணியளவில், பள்ளியக்கிரகாரத்திலிருந்து, முத்துக்குமார் நினைவுச் சுடரோட்டம நடத்தப்படுகின்றது.

மாலை 6 மணியளவில் ஆப்ரகாம் சாலையில், கருத்தரங்கம் நடைபெறுகின்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை தலைமை தாங்குகிறார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நகர அமைப்பாளர் புலவர் கோ.நாகேந்திரன் பாவீச்சு நிகழ்த்துகிறார். ”ஈழத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும், ”ஈகி முத்துக்குமாரின் இறுதி அறிக்கையும் தமிழ்த்தேசியமும்” என்ற தலைப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் அவர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.

ஈரோடு

ஈரோட்டில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு திறந்தவெளி கருத்தரங்கம் நேற்று (28.01.2010)) மாலை நடத்தப்பட்டது. நேற்று மாலை 5.30 மணியளவில், கருங்கல்பாளையம் திருநகர் காலனி அருகே இளந்தமிழர் இயக்கக் குழுவினரின் தப்பாட்டத்துடன் இந்நிகழ்ச்சித் தொடங்குகிறது.

இக்கருத்தரங்கிற்கு, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் ச.அர.மணிபாரதி தலைமை தாங்குகிறார். சாதி ஒழிப்புக் கூட்டியக்கத் தலைவர் இரத்தினசாமி, வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆகியோர் தொடக்கவுரை நிகழ்த்துகின்றனர். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்.

பரமக்குடி

பரமக்குடியில் 29.01.2010 இன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் படிப்பகம் திறப்பு நிகழ்ச்சியும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்தப்படுகின்றது. மாலை 5.30 மணியளவில் நடைபெறும் கருத்தரங்கிற்கு முன்னதாக, மாவீரன் முத்துக்குமார் நினைவு சுடரோட்டம் நடக்கிறது. நிகழ்வுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பரமக்குடி நகரச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்குகிறார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பொதுக்குழு உறுப்பினர் மகிழ்நன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். முன்னதாக த.தே.பொ.க. கொடியை திரு. பெ.மணியரசன் ஏற்றி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்புண்டி

திருத்துறைப்புண்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்தப்படுகின்றது. 31.01.2010 அன்று திருத்துறைப்புண்டி தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இ.தனஞ்செயன் தலைமை தாங்குகிறார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

திருச்செந்தூர்

மாவீரன் முத்துக்குமார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் கருத்தரங்கம் நடத்தப்படுகின்றது. 01.02.2010 அன்று மாலை ஆத்தூர் கடைத்தெருவில் நடக்கும் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினது ச.தமிழ்மணி தலைமை தாங்குகிறார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

சிதம்பரம் நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை

சிதம்பரத்தில் தமிழக மாணவர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆகியவை அமைப்புகள் இணைந்து, 30.01.2010 அன்று மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தலை முன்னிட்டு திறந்தவெறி உரையரங்கம் நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தன.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், இளந்தமிழர் இயக்க நெறியாளர் ம.செந்தமிழன் உள்ளிட்டோர் உரையாற்றுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்நிகழ்விற்கு திடீரென காவல்துறை தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கின் முடிவை ஒட்டி, வேறொரு நாளில் கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் காவல்துறை தடை

கோவையில் தமிழக இளைஞர் முன்னணி மற்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆகிய அமைப்புகள் இணைந்து 02.02.2010 அன்று கோவை ராஜவீதியில் முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தன. தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாநகரச் செயலாளர் பா.தமிழரசன் ஆகியோர் உரை நிகழ்த்துவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், இக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் கடிதம் கொடுத்துள்ளனர். காவல்துறையின் தடைக்கு எதிராக வழக்கு நடத்திய பின், வேறொரு நாள் கூட்டம் நடத்தப்படும் என த.தே.பொ.க. கோவை மாநகரத் துணைச் செயலாளர் பா.சங்கர் அறிவித்துள்ளார்.

தாம்பரம்

சென்னை தாம்பரத்தில் 13.02.2010 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - தமிழக இளைஞர் முன்னணி அமைப்புகள் சார்பில் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்படுகின்றது. இந்நிகழ்விற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். கவிஞர் கவிபாஸ்கர் பாவீச்சு நிகழ்த்துகிறார். உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.

மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்!

Thursday, January 28, 2010

சிதம்பரத்தில் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்ச்சிக்குத் காவல்துறை தடை

சிதம்பரத்தில் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனக்கொலைப் போரைத் தடுத்த நிறுத்து வலியுறுத்தி மாவீரன் முத்துக்குமார் மற்றும் 17 பேர் 2009ஆம் ஆண்டு தங்கள் தேகங்களைத் தீக்கிரையாக்கி ஈகம் செய்தனர். முத்துக்குமார் உள்ளிட்ட இத்தியாகிகளை நினைவு கூர்ந்து வீரவணக்க சுடரோட்டம் - பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் 30.01.10 அன்று நடத்த திட்டமிட்டிருந்தோம்.

இக்கூட்டத்திற்குக் காவல்துறை அனுமதி மதுத்துத் தடை விதித்துள்ளது.

நினைவேந்தல் கூட்டத்திற்குக் கூட காவல்துறை தடை விதிப்பது - அதுவும் இதே வகைக் கூட்டங்களுக்கு எங்கள் கட்சிக்கும், பிற அமைப்பினருக்கும் தமிழகம் முழுவதும் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் போது சிதம்பரத்தில் மட்டும் தடை விதிப்பது வியப்பையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

காவல்துறையின் இச்செயல் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை சனநாயக உரிமையை மறுக்கும் செயலாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தடையாணைக்கு எதிராக சென்னை, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம். நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு வேறொரு நாளில் இக்கூட்டம் நடைபெறும்.

எனவே, 30.1.10 அன்று நடப்பதாக இருந்த மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க சுடரோட்டம், பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

தலைமைச் செயற்குழு உறுப்பினர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

சிதம்பரம்.

Monday, January 25, 2010

இன்று மொழிப்போர் தியாகிகள் நாள்: த.தே.பொ.க. வீரவணக்கம்!

இன்று மொழிப்போர் தியாகிகள் நாள்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் அஞ்சலி

1938-1965 ஆகிய ஆண்டுகளில் இந்தித் திணிப்பில் ஈடுபட்ட இந்திய அரசைக் கண்டித்து தீக்குளித்தும், நஞ்சுண்டும், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று(25-1-2009) கடைபிடிக்கப்படுகிறது.

திருச்சி

இதனை முன்னிட்டு, இன்று காலை திருச்சியில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திப் பேசினார். திராவிட இயக்கங்களின் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை மோசடிக் கொள்கை என்றும், தமி்ழ் மட்டுமே அனைத்து நிலைகளிலும் செயல்பட வழிவகுக்கும் ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்றும் அவர் பேசினார்.

சென்னை

சென்னையில் மூலக்கொத்தளம் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாலமுத்து நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் தோழர்கள், இன்று காலை மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சிதம்பரம்

மொழிப்போரில் இந்திய அரசின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் நினைவிடத்தில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் இன்று மாலை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மொழிப் போர் ஈகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் தெற்கு சன்னதித் தெருவில், த.தே.பொ.க. சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிதம்பரம் நகர த.தே.பொ.க. செயலாளர் கு.சிவப்பிரகாசம், இளந்தமிழர் இயக்க நிர்வாகக் குழு உறுப்பினர் ம.செந்தமிழன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் அரவிந்தன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொள்கின்றனர்.

Wednesday, January 20, 2010

இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்கக் கூடாது - த.தே.பொ.க. தீர்மானம்

இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்கக் கூடாது

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தீர்மானம்

 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 15.01.2010 அன்று தஞ்சையில் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ. மணியரசன் மற்றும் தோழர்கள் கி.வெங்கட்ராமன், நா.வைகறை, குழ.பால்ராசு, அ.மகிழ்நன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

1.         இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்கக் கூடாது.

 

தெலங்கானா தனிமாநிலப் போராட்டத்தை ஒட்டி இந்திய அரசு இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்க முனைவதாகத் தெரிகிறது.

 

1956 இல் அமைக்கப்பட்ட முதல் மாநிலச் சீரமைப்புக் குழு, பல்வேறு தேசிய இனங்கள் தங்கள் தாயக அடிப்படையில் மாநிலம் அமைக்கக் கோரிப் போராடி, பலர் உயிர்த் தியாகம் செய்தபின் உருவானது.  ஆனால் இப்பொழுது மொழிவாரி மாநில அமைப்பைச் சீர்குலைக்கும் வகையில் தேசிய இனத்தாயகங்களை வெறும் நிர்வாக அமைப்புகளாகத் துண்டாடும் உள்நோக்கத்துடன் மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்க முயல்கிறது இந்திய அரசு.

 

மாநிலத் தன்னாட்சியை மறுத்து மேலும் மேலும் தில்லி மையத்தில் அதிகாரங்களைக் குவித்து வரும் இந்திய அரசு தனது ஒற்றையாட்சி நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள தெலங்கானாப் போராட்டத்தை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறது.

 

இரண்டாவது சீரமைப்பு ஆணையத்தின் ஆய்வுப் பரிந்துரைப் பொருள் பட்டியலில் மொழிவாரி மாநில அமைப்பை முழுமைப்படுத்துவதோ அல்லது தேசிய இனத்தாயக அடிப்படையோ இடம் பெறாது என்பது உறுதியாகத் தெரிகிறது.

 

இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் நிறுவப்பட்டால் புதிய போராட்டங்கள் உருவாகுமே தவிர, சிக்கலுக்குத் தீர்வு ஏற்படாது. 

 

ஏதாவது ஒரு மாநிலத்தில் மாநிலத்தைப் பிரிக்கும் கோரிக்கை எழுந்தால் அம்மக்களுடன் பேசி அதற்குத் தீர்வு காண வேண்டுமே தவிர ஒட்டு மொத்த இந்தியாவுக்கு மாநிலச் சீரமைப்பு ஆணையம் போட வேண்டிய தேவை இல்லை.

 

தமிழ்நாட்டைத் துண்டாடக் கூடாது

 

தெலங்கானாப் போராட்டத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு சில தன்னல சக்திகள் தமிழ்நாட்டைத் துண்டாட வேண்டும் என்று குரல் எழுப்புகின்றன.

 

தமிழ்நாட்டைத் துண்டாடுவது தமிழ் இனத்தின் அழிவில்தான் போய்முடியும்.

 

தமிழ்த்தேசிய இன மறுப்பாகவும் தமிழர் தாயக மறுப்பாகவும் இத்துண்டாடுதல் அமைந்துவிடும்.  இத்தன்னல சக்திகளின் துண்டாடும் கோரிக்கை மொழிவாரித் தாயக உரிமை பறிக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கு இனிக்கும் செய்தியாகும்.

 

எனவே தமிழ்நாட்டு மக்கள் இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையத்தையும் தமிழ் நாட்டைத் துண்டாடும் கோரிக்கையையும் எதிர்க்குமாறு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

 

2.         மரபீனி மாற்றுக் கத்தரிக்காயைத் தடுப்போம்

 

பன்னாட்டுப் பகாசுரக் கொள்ளை நிறுவனமான மான்சான்டோவும் அதன் கூட்டாளி அமைப்புகளும் மரபீனி மாற்றுக் கத்தரிக்காயை இந்தியச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி அளிக்க இந்திய அரசு முடிவு செய்துவிட்டது. ஒப்புக்குக் கருத்துக் கேட்பு நாடகம் நடத்துகிறது இந்தியா. வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய முகவர் போல் செயல்படும் இணைஅமைச்சர் ஜெய்ராம் ரமே'; கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்துவது வெறும் கண்துடைப்பே.

 

தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தமிழ்நாட்டில் மரபீனி மாற்றுக் கத்தரிக்காய் விற்பனைக்கு வருமென்றும் அது மான்சான்டோ உருவாக்கியது அன்று என்றும் தமிழ் நாட்டு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியது என்றும் அண்மையில் சட்டப் பேரவையில் கூறினார்.

 

மரபீனி மாற்றுக்கான மூலசூத்திரத்தை மான்சான்டோவிடம் இருந்துதான் தமிழ்நாட்டு வேளாண் பல்கலைக் கழகம் வாங்கியுள்ளது.

 

தமிழக அரசின் முத்திரையை முகமூடியாகப் போட்டுக் கொண்ட மான்சான்டோ மரபீனி மாற்று கத்தரிக்காய் முதலில் வரும். பின்னர் முகமூடியை அகற்றிவிட்டு நேரடியாக மான்சான்டோ கத்தரிக்காயே விற்பனைக்கு வரும்

 

தமிழக அரசும் வீரபாண்டி ஆறுமுகமும் மான்சான்டோவின் நெருங்கிய கூட்டாளிகள் என்பது ஏற்கெனவே அம்பலப்பட்ட ரகசியமாகும். மான்சான்டோவின் மரபீனி மாற்று நெல் விதை நாற்றங்காலைத் தமிழ்நாட்டில் தமிழக அரசு ரகசியமாக அனுமதித்ததும் உழவர்கள் அந்நாற்றங்காலை அழித்ததும் ஊரறிந்த செய்தி.

 

எந்தப் பெயர் ஒட்டிக் கொண்டு வந்தாலும் மரபீனி மாற்றுக் கத்தரிக்காயை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது. மரபீனி மாற்றுப் பருத்தியைச் சாகுபடி செய்து உரிய விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்டு கடன் தொல்லையில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட விதர்ப்பா, ஆந்திரப் பிரதேச உழவர்களின் எலும்புக் கூடுகள் நமக்கு எச்சரிக்கைச் சின்னமாகும்.  மரபீனி மாற்று உணவுப் பண்டங்களை உண்போர்க்கு பலவகை நோய்கள் வருகின்றன.

 

எனவே என்ன விலை கொடுத்தேனும் மரபீனி மாற்றுக் கத்தரிக்காய்களைத் தமிழ்நாட்டில் நம் மக்கள் அனுமதிக்கக் கூடாது.  மரபீனி மாற்றுக் கத்தரிக்காய் சந்தைக்கு வந்தால் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அவற்றை அழிப்பதற்குத் உறுதி ஏற்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

3.         தஞ்சைப் பெரிய கோயில் 1000 மாநாடு

 

ஒப்புவமை அற்ற உலகப் பெரும் கலைப் படைப்பான தஞ்சைப் பெரிய கோயிலைச் சோழப் பேரரசன் இராசராசன் எழுப்பி 1000 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

 

இதனைக் கொண்டாடும் வகையில் தஞ்சையில் வரும் சூலை மாதம் தஞ்சைப் பெரிய கோயில் 1000 மாநாடு நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது.

 

அம்மாநாட்டில் சோழர்கால ஆட்சி நிர்வாக முறை, பாசன முறை, கட்டடக் கலை, ஓவியம், நாட்டியம், இசை, இலக்கியம், மக்கள் வாழ்வியல் எனப் பல்வேறு தலைப்புகளில் பன்முகக் கருத்தரங்குகளும் ஆடல் பாடல்களும் நடைபெறும்.

 

தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வறிஞர்களும் கலைஞர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

 

 

Sunday, January 10, 2010

தமிழீழ தேசியத் தலைவர் தந்தையாருக்கு த.தே.பொ.க.வின் வீர அஞ்சலி!


தமிழீழ தேசியத் தலைவர் தந்தையார்

திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் வீர அஞ்சலி!

கேணல் கிட்டுவிற்கு த.தே.பொ.க.வின் வீரவணக்கம்!

இந்திய அரசின் துரோகத்திற்கு பலியான வேங்கைகளுக்கு

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின்

வீரவணக்கம்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT