உடனடிச்செய்திகள்

Wednesday, February 27, 2019

மண்ணின் மக்கள் பாவலர் வையம்பட்டி முத்துச்சாமி! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் புகழ் வணக்கம்!

மண்ணின் மக்கள் பாவலர் வையம்பட்டி முத்துச்சாமி! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் புகழ் வணக்கம்!
பாவலர் வையம்பட்டி முத்துச்சாமி அவாகள் இன்று (27.02.2019) விடியற்காலை 2.30 மணியளவில் ஓசூரில் தமது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி பெருந்துயரம் தந்தது. நோய்வாய்ப்பட்டு மருத்துவம் பார்த்து நலமாகி வந்த நிலையில், அவர் அந்நோயினால் காலமானது மிகத் துயரமாக உள்ளது. மணப்பாறை அருகே உள்ள அவர் ஊரான வையம்பட்டி அவர் பெயராகிப் போனது!

மக்கள் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல் தானே முளைத்து எழுந்த மண்ணின் கவிஞர் வையம்பட்டி முத்துச்சாமி. வையம்பட்டியும் மக்கள் பாவலர்! அவர் இயற்றிய பாடல்களை அவரே பாடவும் செய்வார். அவர் பாடல்களை பல்வேறு இசைக் குழுவினர் பாடி வருகிறார்கள். திரைப்படங்களிலும் அவர் பாடல்கள் வந்துள்ளன.

மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியிலும் அதன் கலை இலக்கிய அமைப்பிலும் செயல்பட்டு வந்த முத்துச்சாமி அவர்கள், ஓசூர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் தோழர் ப. செம்பரிதி உள்ளிட்ட தோழர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்தார். அங்கு தமிழ்த்தேசியப் பேரியக்க மேடைகளிலும் அவர் தமது பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை ஒசூர் பொறுப்பாளர் தோழர் ப. செம்பரிதி அவர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும் பெருமுயற்சி செய்து நன்கொடை திரட்டி கடந்த 22.04.2018 ஓசூரில் சிறப்பான விழா நடத்தி, பாவலர் வையம்பட்டி முத்துச்சாமிக்கு 1,25,000 ரூபாய் நிதி வழங்கினர்.

என் மீதும் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தார். நாங்கள் மிகுந்த பாசத்துடன் அவருடன் தோழமை கொண்டிருந்தோம்.

சமகால மக்கள் சிக்கல்களை மையப்படுத்தி தான் நாட்டுப் புறப்பாடல்கள் இயற்றி வந்தார்.

பெண் குழந்தை கருவிலும், பிறந்த பின்னும் கொலை செய்யப்படுவதை எண்ணித் துடித்து வையம்பட்டியார் எழுதிய பாடல் மிகவும் புகழ் பெற்றது.

“பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா
பத்து மாசமா போராட்டம்
பொண்ணா பொறந்தா கொன்னுடுவேன்னு
புருசன் செய்யுறான் ஆர்ப்பாட்டம்..”

என்று தொடங்கும் பாடல் கவிதை நயமும் இசை நயமும் மிக்கது.

ஊர்ப்புறங்களில் உள்ள சாதி உணர்வுகளை – சாதிக் கொடுமைகளைக் கண்டித்து அவர் இயற்றிய பாடல்களில் “எங்கள் ஊர் அழகு” என்ற தலைப்பிலான பாடல் மிகவும் அழகு!

“கண்ணை உருத்தும்படி எங்கள் ஊர்
கள்ளிச்செடி ஓர் அழகு
உள்ளம் கசங்குபடி ஊமத்தம்பூ ஓர் அழகு”

என்று ஊரின் ஒவ்வொரு அழகையும் வர்ணித்து வரும் பாவலர் முத்துச்சாமி, இறுதியில் ஈட்டி பாய்ச்சுவது போல் ஒரு கேள்வி கேட்பார் : “இதில் சாதி எந்த அழகு?”.

மண்ணின் மணத்தோடு, வையம்பட்டி முத்துச்சாமி அவர்கள் எழுதி, பாடிய பாடல்கள் வழி அவர் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பார்!

பாவலர் முத்துச்சாமி அவர்களின் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Tuesday, February 26, 2019

கதவணை கட்ட வலியுறுத்தி தாமிரபரணி உழவர்கள் ஆர்ப்பாட்டம்! தமிழக உழவர் முன்னணி முடிவு!

கதவணை கட்ட வலியுறுத்தி தாமிரபரணி உழவர்கள் ஆர்ப்பாட்டம்! தமிழக உழவர் முன்னணி முடிவு!
தமிழக உழவர் முன்னணியின் திருச்செந்தூர் - ஏரல் வட்ட பேரவைக் கூட்டம், இன்று (26.02.2019) காலை - தூத்துக்குடி மாவட்டம் - குரும்பூரில் நடைபெற்றது.

தமிழக உழவர் முன்னணி தமிழகத் துணைத் தலைவரும், தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளருமான தோழர் மு. தமிழ்மணி தலைமையேற்றார். தூத்துக்குடி மாவட்ட உழவர்கள் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து திரு. விஜய நாராயண பெருமாள் விளக்கவுரையாற்றினார்.

தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழக உழவர் முன்னணியின் கொள்கைகளையும், உழவர் போராட்டங்களின் அவசியத்தையும் விளக்கி நிறைவுரையாற்றினார்.

புதிதாக தமிழக உழவர் முன்னணியில் இணைந்த ஆண் - பெண் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை தோழர் கி.வெ. வழங்கினார்.

கூட்டத்தில், கீழ்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019 மார்ச் 16 அன்று மாலை குரும்பூரில் உழவர்களின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

கோரிக்கைகள் 

1. ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும்.

2. வேளாண் விளை பொருட்களுக்கு இலாப விலை தீர்மானிக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக, எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நெல், பருத்தி, வாழை, கரும்பு உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை வழங்க வேண்டும்.

3. தொடர்ந்து வறட்சியாலும், பூச்சி – பறவைகள் தாக்குதலாலும் விளைச்சல் இழந்துள்ள தூத்துக்குடி மாவட்ட உழவர்களின் வேளாண் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

கூட்டத்தின் நிறைவில் திரு. தியாகராசன் நன்றி கூறினார்.

செய்தித் தொடர்பகம்,
தமிழக உழவர் முன்னணி

பேச: 94432 91201, 76670 77075
முகநூல் : தமிழக உழவர் முன்னணி 

சமூக வலைத்தளங்களில் செயல்புரியும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களுக்கு வேண்டுகோள்!

சமூக வலைத்தளங்களில் செயல்புரியும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களுக்கு வேண்டுகோள்!
சமூக வலைத்தளங்களில் செயல்புரியும் பேரியக்கத் தோழர்களும், ஆதரவாளர்களும் துடிப்புடன் நம் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வது பாராட்டிற்குரியது.

அதேநேரம் நம் தமிழ்த்தேசியத் தோழமை இயக்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு மனக்காயம் ஏற்படும்படி எந்தத் திறனாய்வும் செய்யாதீர்கள். அவ்வாறான திறனாய்வைத் தவிர்த்து விடுங்கள்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தேர்தலுக்கு வெளியே இயங்கி தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்து வருகிறது. அதேநேரம், தேர்தலில் பங்கெடுக்கும் சில கட்சிகளுடனும், மக்கள் உரிமைப் போராட்டங்களில் கூட்டுச் செயல்பாடுகள் கொண்டுள்ளோம். அந்தத் தோழமை பாதிக்காத வகையில் நம் தோழர்கள் கருத்துகளை பொறுப்புணர்ச்சியுடன் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்ததில் நம் பங்கு முகாமையானது. அதேவேளை நம் முன்னோர்களின் பங்களிப்புகளை நாம் போற்றுகிறோம். அவர்கள் பங்களிப்பைக் குறைத்து நம் பங்களிப்பை மேலதிகமாகக் காட்டிக் கொள்ளும் முனைப்பு நம் தோழர்களிடம் எழக்கூடாது. இந்த மனப்பக்குவமும் கட்டுப்பாடும் தேவை!

தமிழ்த்தேசியக் கருத்தியலுக்கு எதிரான கருத்தியல்கள் மற்றும் அத்தரப்புத் திறனாய்வுகள் ஆகியவை குறித்துத் திறனாய்வு செய்யும் நம் தோழர்கள் – தனிநபர் தாக்குதலில் இறங்கக்கூடாது. நம்மை எதிர்ப்போர் கொச்சையாகத் திறனாய்வு செய்தாலும் நாம் அப்படி செய்யக்கூடாது.

கி. வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
26.02.2019.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, February 25, 2019

இன்று (பிப்ரவரி 25) - தமிழ்த்தேசிய நாள்

இன்று (பிப்ரவரி 25) - தமிழ்த்தேசிய நாள்
இன்றைக்குப் பலரும் முன்வைக்கும் “தமிழ்த்தேசியம்” என்ற அரசியல் சொற்கோவை, தமிழ் மக்களுக்கு பெருமளவில் அறிமுகப்படுத்திய நிகழ்வாகவே, 1990 ஆண்டு பிப்ரவரி 25ஆம் நாள் சென்னைப் பெரியார் திடலில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அன்றைய எம்.சி.பி.ஐ.) முன்முயற்சியில், கட்சி சார்பற்ற முறையில் பொதுநிலையில் நடத்தப்பட்ட “தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாடு” நடைபெற்றது.

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து அம்மாநாட்டில் நிறைவேற்றியதற்காக, தமிழ்நாட்டில் முதன் முறையாக பிரிவினைத் தடைச் சட்டத்தின் கீழ் (உபா சட்டம்) கைது செய்து, சென்னை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டவர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள்!

அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களின் ஒரு பகுதி இது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, February 22, 2019

மலைவாழ் மக்களை தாயகத்திலிருந்து வெளியேற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வன உரிமை காக்க இந்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

மலைவாழ் மக்களை தாயகத்திலிருந்து வெளியேற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வன உரிமை காக்க இந்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 13 (2019) அன்று பிறப்பித்து, 21.02.2019 அன்று வெளியாகியுள்ள வன உரிமைச் சட்டம் தொடர்பான தீர்ப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

“பழங்குடியினர் மற்றும் மரபுவழி மலையக வாழ் மக்கள் வன உரிமைச் சட்டம் – 2006”–இன் மீது நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகிய மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள இந்தத் தீர்ப்பு, ஏறத்தாழ பத்து இலட்சம் மலைவாழ் குடும்பங்களை அவர்களது வரலாற்றுத் தாயகத்திலிருந்து வெளியேற்றும் ஆணையாக அமைந்துள்ளது.

“வொயில்டு லைப் பர்ஸ்ட்” (Wildlife First) என்ற பெருங்குழுமங்களின் பினாமி தொண்டு நிறுவனம் தொடுத்த வழக்கில், இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் வாழும் பழங்குடி மற்றும் மரபுவழி மலைவாழ் மக்களின் வன நில உரிமைச் சிக்கல், நீண்டகாலமாக நீடித்து வருகிறது. 2006 வன உரிமைச் சட்டத்தின்படி முன்வைக்கப்பட்ட நில உரிமைப் பட்டா கோரிக்கை மனுக்கள் எந்தவித காரணமும் சொல்லாமல் நிராகரிக்கப்படுவதே அனைத்து மாநிலங்களிலும் பொதுப்போக்காக உள்ளது.

தலைமுறை தலைமுறையாக மலைக்காடுகளோடும், வன உயிரினங்களோடும் இணக்கமாக வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள், அவர்களது நிலவுரிமை உறுதி செய்யப்படாமல் வனத்துறை அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது அன்றாட நிலைமையாக இருக்கிறது.

மலைவாழ் மக்களின் இந்த அவல நிலையைப் போக்கி, வன உரிமைச் சட்டத்தின்படி அவர்கள் நிலவுரிமைப் பட்டா பெறுவதற்கு உதவி செய்ய வேண்டிய உச்ச நீதிமன்றம் நிலவுரிமை ஆவணம் இல்லாத மலைவாழ் மக்கள் அனைவரையும் அவர்களது வரலாற்று வாழ்விடங்களை விட்டு வரும் 2019 சூலை 24-க்குள் வெளியேற்ற வேண்டும் என்று இத்தீர்ப்பில் கூறியிருக்கிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் இந்த ஆணையை நிறைவேற்றி மலைவாழ் மக்களை சூலை 24-க்குள் வெளியேற்றத் தவறினால், அந்த மாநிலத் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

அரசும், பெருங்குழும நிறுவனங்களும் வனங்களையும், மலைகளையும் கேள்வி முறையின்றி சூறையாடுவதற்கே இத்தீர்ப்பு துணை புரியும்.

பழங்குடியினர் உள்ளிட்ட மலைவாழ் மக்கள்தான் வனங்களையும், மலைகளையும், வன உயிரினங்களையும் பாதுகாத்து வருகிறார்கள் என்பது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்ட உண்மையாகும். ஏனெனில், வன வளமும், வள உயிர்மச் சூழலும் இம்மக்கள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத அரண்களாகும்!

பிரித்தானிய ஆட்சிக்காலத்திலிருந்து அவ்வப்போது பிறப்பிக்கப்பட்ட வனச் சட்டங்கள், இம் மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதாக அமைந்தது வரலாறு. காந்தியடிகள் தொடங்கி பல தலைவர்களும் இச்சட்டங்கள் மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதை எதிர்த்துப் போராடி வந்திருக்கிறார்கள் என்பதும் வரலாறு!

மலைவாழ் மக்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக கடந்த 2006ஆம் ஆண்டு, “வன உரிமைச் சட்டம்” பிறப்பிக்கப்பட்டது. மலைவாழ் மக்கள் கடுக்காய், தேன், மூலிகை உள்ளிட்ட சிறு வன விளைச்சல்களை எடுத்துப் பயன்படுத்துவதற்கும், தலைமுறை தலைமுறையாக மக்கள் வாழ்ந்து வந்த நிலங்களை அக்குடும்பங்களுக்கு தனிப்பட்டா வழங்கவும், சமூகங்களுக்கு கூட்டுப் பட்டா வழங்கவும் இந்த வன உரிமைச் சட்டம் வழிவகுத்தது. ஆயினும், இச்சட்டம் செயலுக்கு வரவே இல்லை!

இச்சட்டத்தின்படியான தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள கிராமசபைகளின் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநில மலைவாழ் மக்கள், குறிப்பாக பழங்குடியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

வன உரிமைச் சட்டம் பிரிவு 4 (5)-இன்படி மக்களின் மரபுவழிப்பட்ட கிராமசபைகளுக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இம்மக்களின் நிலவுரிமையையும், வன உரிமையையும் கண்காணித்து ஒழுங்கு செய்து பாதுகாக்கும் அதிகாரம் பெற்ற மன்றங்களாக கிராமசபைகளின் அதிகாரம் உறுதி செய்யப்பட்டது.

இச்சட்டப்பிரிவின்படி கிராமசபை விசாரித்து மரபுவழி வாழும் குடும்பங்களுக்கு நிலவுரிமைப் பட்டா வழங்கப் பரிந்துரைத்தால், அதனை அந்தந்த மாநில அரசுத் துறைகள் ஏற்றுக் கொண்டு நிலவுரிமைப் பட்டா வழங்க வேண்டும். ஆனால், நடைமுறையில் வனத்துறை அதிகாரிகளும், வருவாய்த் துறையினரும் இதை மீறியே வருகின்றனர்.

இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விவரங்களின்படி இந்தியா முழுவதும் 42 இலட்சத்து 19 ஆயிரம் நிலப்பட்டா கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதில், 23 இலட்சத்து 30 ஆயிரம் மனுக்கள் எந்தக் காரணமும் சொல்லாமல் நிராகரிக்கப்பட்டன. பட்டா வழங்குவதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 இலட்சத்து 89 ஆயிரம் மனுக்களில் பெரும்பாலானவர்களுக்கு பட்டா வழங்கப்படவே இல்லை!

இந்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையும், மாநில அரசின் வனத்துறையும், வருவாய் துறையும் மலைவாழ் மக்களுக்கு உரிமை வழங்கும் இச்சட்டத்தை மீறியே வந்திருக்கின்றன.

நீதிமன்றத்தின் விசாரணைப் போக்கில் ஆணையிடப்பட்டதற்கிணங்க, வன உரிமைச் சட்டம் எவ்வாறு செயலாக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை வழங்குவதற்காக இந்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அனைத்து மாநிலங்களிலும் விசாரணைக் குழுக்களை அமர்த்தியது. 2017ஆம் ஆண்டு அக்குழுக்கள் அறிக்கைகளை முன்வைத்தன.

தமிழ்நாட்டில் வனத்துறை சட்டம் செயலாவதை விசாரித்த குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், 2008ஆம் ஆண்டு தொடங்கி 2016ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு மலைவாழ் மக்களின் பட்டா கோரிக்கை மனுக்களின் நிலைமை தொடர்பாக வழங்கிய அறிக்கை ஒரு எழுத்தும் எண்ணும் மாறாத ஒரே அறிக்கையாக இருந்தது. அதாவது, எந்த முயற்சியும் ஆய்வும் செய்யாமல் தமிழ்நாடு அரசு ஒரே அறிக்கையை ஏழாண்டுகள் நகலெடுத்து அனுப்பி வந்திருக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் வன உரிமைச் சட்டம் செயலான நிலை இதுதான்!

ஒரு போராட்ட அழுத்தத்தின் காரணமாக வன உரிமைச் சட்டத்தைப் பிறப்பித்திருந்தாலும், இந்திய அரசு மலைகளையும் காடுகளையும் அழித்து அவற்றில் உள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெருங்குழுமங்களுக்கும் வழங்குவதில் குறியாக இருக்கிறது. மாநில அரசுகளும் அவ்வாறே இருக்கின்றன. இதனால்தான், நிலப்பட்டா கோரி மலைவாழ் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்படுவதும், எக்காரணமும் கூறாமல் பட்டா வழங்க மறுப்பதும் தொடர்கிறது.

உச்ச நீதிமன்றம் கோரி பெற்ற அனைத்து மாநில விசாரணை அறிக்கைகள், இந்த உண்மையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. தங்கள் முன்னால் உள்ள இந்த உண்மையை கவனத்தில் கொள்வதற்கு மாறாக, அரசுகளின் மக்கள் பகைப் போக்கையே தனது தீர்ப்புக்கு அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

பட்டா கோரிக்கை ஏற்கப்படாத அனைத்து மக்களும் வெளியேற்றப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றமே செய்யும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்! வன உரிமைச் சட்டத்தைச் செயல்படுத்த ஆணையிடுவதற்கு மாறாக மலைவாழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்ற ஆணையிடுவது சட்டத்தின் ஆட்சியை கேலிக்குரியதாக மாற்றி இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதி வாதம் நடைபெற்றபோது, இந்திய அரசின் வனத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பான வழக்குரைஞர்கள் எந்தவாதமும் செய்யாமல் நீதிமன்றத்திலேயே இல்லாமல் போனது – இதில் ஓர் கூட்டுச் சதி நடந்திருப்பதற்கு சான்று கூறுகிறது.

இந்நிலையில், இத்தீர்ப்புக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமின்றி இந்திய அரசு மலைவாழ் மக்களை வெளியேற்ற மறுக்கும் அவசரச் சட்டமொன்றை உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும்.

காலங்காலமாக மலையகத்தில் வாழ்ந்து வரும் இம்மக்களின் நிலைமையை சான்றுகளோடு அவர்களே மெய்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை மாற்றி, அவர்களை வெளியேற்ற முயலும் அரசுதான் இம்மக்கள் அவர்களுடைய வாழிடத்தில் பரம்பரைப் பரம்பரையாக வாழவில்லை என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்ற சட்ட நிலையை ஏற்படுத்துவதாகவும் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது.

அமைப்பு வலுவின்றி குரலற்றவர்களாக இருக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையை இந்திய அரசு பாதுகாக்க வேண்டுமென்றும், அதற்குரிய அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சியினரும் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

காவிரி மேலாண்மை ஆணையம் உயிரோடு இருக்கிறதா? உங்களுடன் உரையாடல் 2019 பிப்ரவரி – மார்ச்சு. காவிரி உரிமை மீட்புக் குழு.


காவிரி மேலாண்மை ஆணையம் உயிரோடு இருக்கிறதா? உங்களுடன் உரையாடல் 2019 பிப்ரவரி – மார்ச்சு. காவிரி உரிமை மீட்புக் குழு. 


காவிரி ஆணையம் 01.06.2018 அன்று அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட ஒரு தடவை கூட ஆணை இடவில்லை. கடந்த ஆண்டின் (2018) வெள்ளக் காலத்தில்கூட கள ஆய்வுக்கு ஆணையம் வரவில்லை.

கடலில் போய் கலந்த வெள்ள நீரை - தமிழ்நாட்டிற்குத் தந்துவிட்டதாகக் கர்நாடகம் சூதாகச் சொல்கிறது. தேக்க முடியாத அந்த மிகை நீர் கணக்கில் வராது என்ற உண்மையைக் கூட ஆணையம் உரைக்கவில்லை. கடந்த 2018 டிசம்பரிலிருந்து மாதவாரியாகத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய காவிரி நீரைக் கர்நாடகம் சட்ட விரோதமாகத் தடுத்து வைத்துக் கொண்டுள்ளது. டிசம்பர் - 7.3 ஆ.மி.க., சனவரி - 3 ஆ.மி.க., பிப்ரவரி - 2.3 ஆ.மி.க., மார்ச் - 2.3 ஆ.மி.க. - ஆக மொத்தம் 15 ஆ.மி.க. (TMC) தண்ணீர் கர்நாடகம் திறந்து விட வேண்டும். அந்நீரைத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு ஆணையம் ஆணையிட வேண்டும். அந்த நீர் வந்தால் குறுவை சாகுபடி செய்யலாம்.

அவ்வாறு ஆணையிடுமாறு ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்காததன் மர்மம் என்ன?

ஓய்வு நேர ஒய்யார ஆணையம்
---------------------------------------------------
காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை முழுநேர அதிகார அமைப்புகள் என்பதே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு! ஆனால் வேறு பணிகளில் முழுநேரமாகச் செயல்படும் அதிகாரிகளின் ஓய்வு நேரப் பணியாக அவ்விரு அமைப்புகளையும் ஒப்புக்கு அமைத்துள்ளது பா.ச.க. நடுவண் ஆட்சி. இவை வெறும் ஒய்யார அமைப்புகள்!

தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் போலி வெற்றி விழா 
----------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிரான இந்திய அரசின் இந்த இனப்பாகுபாட்டு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகச் செயல்படுத்துமாறு வலியுறுத்தி, சட்டப் போராட்டமும் அரசியல் அழுத்தப் போராட்டமும் நடத்த வேண்டிய தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், போலியாகக் காவிரி வெற்றி விழா கொண்டாடித் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்பினார்கள்; தமிழ்நாட்டு உரிமையைப் பலியிட்டு அரசியல் ஆதாயம் தேடினார்கள்.

காவிரிச் சமவெளியைப் பாலைவனம் ஆக்கும் திட்டம்
-------------------------------------------------------------------------------------
காவிரிச் சமவெளியில் எண்ணெய், எரிவளி, மீத்தேன், நிலக்கரி உள்ளிட்ட ஐட்ரோகார்பன் எடுத்து விற்று இந்திய அரசு பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்காக ஓ.என்.ஜி.சி. மற்றும் ஏகபோக முதலாளிகளின் கூட்டுக் கொள்ளையை அனுமதிக்க வேண்டும். டெல்டாவின் நன்செய் நிலங்களும், நிலத்தடி நீரும் நஞ்சாக வேண்டும்; காவிரிப்படுகை இரசாயனப் பொட்டல் தரிசாக வேண்டும்; அவ்வாறு செய்வதற்குக் காவிரி நீர் வராமல் தடுக்க வேண்டும். அதன்பிறகு நிலங்களைவிட்டு உழவர்கள் ஓடி விடுவார்கள் என்பதே இந்திய அரசின் திட்டம்!

“காவிரியை மற; கோதாவரியை நினை!”
----------------------------------------------------------------
கோதாவரியிலிருந்து 200 ஆ.மி.க. (TMC) தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வரப்போகிறது என்று இந்திய ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் ஒருசேரக் குடுகுடுப்பை அடிக்கிறார்கள். இதன் உட்பொருள் என்ன? காவிரியை மற; கோதாவரிக் கானல் நீரை நினை என்பதாகும்.

கங்கை நீரைக் கொண்டு வரப் போவதாகக் கதையளத்தவர்கள் - இப்போது கோதாவரி நீரைக் கொண்டு வரப் போவதாகக் கூறுகிறார்கள். ஆந்திர அரசுடன் செய்து கொண்ட சென்னைக் குடிநீர் ஒப்பந்தப்படி, கிருஷ்ணா நீர் சென்னைக்கு 12 ஆ.மி.க. எந்த ஆண்டாவது வந்ததுண்டா? இல்லை! கோதாவரி நீர் தமிழ்நாட்டிற்கு வர ஆந்திரப்பிரதேசம் ஒருபோதும் அனுமதிக்காது!

மேக்கேதாட்டில் அணை
-------------------------------------- 
எப்போதாவது வெள்ளப் பெருக்கெடுத்து மிகை நீர் மேட்டூர் அணைக்கு வருவதைப் பார்த்து, வயிறு எரிந்த கர்நாடகம், மேக்கேதாட்டில் 70 ஆ.மி.க. (TMC) கொள்ளளவில் நீர்த்தேக்கம் கட்டத் திட்டமிட்டது. ஒன்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடகத்தின் திட்டத்தை இந்திய அரசு அனுமதித்துள்ளது. அது கட்டப்பட்டால், ஒரு சொட்டுக் காவிரி நீர் கூடக் கர்நாடகத்திலிருந்து மேட்டூர் அணைக்கு வராது.

பா.ச.க.வும் காங்கிரசும் இரட்டையர்கள்
--------------------------------------------------------------
இந்திய அரசிலும் கர்நாடக அரசிலும் காங்கிரசும், பா.ச.க.வும் மாறிமாறி ஆட்சி செய்கின்றன. இரு கட்சிகளும் கடுமையாகச் சண்டையிட்டுக் கொள்கின்றன. ஆனால் தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தரக் கூடாது என்பதில் அவை ஒன்று சேர்ந்து கொள்கின்றன. இந்த பா.ச.க. - காங்கிரசு இரட்டையர்களோடுதான் தமிழ்நாட்டுக் கட்சிகள் கூட்டணி சேர்ந்து கொள்கின்றன. தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கோ பதவிதான் முக்கியம், காவிரி அல்ல!

தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகப் பருவமழை குறைந்து கொண்டே வருகிறது. குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் கீழே போய்க் கொண்டே உள்ளது. தமிழ்நாடு - புதுவை மாநிலங்களின் 21 மாவட்டங்களுக்குக் குடிநீர் காவிரி நீர்; பன்னிரண்டு மாவட்டங்களில் 28 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசன நீர் காவிரி நீர்!

மக்கள் போராடினால் வாழலாம்
---------------------------------------------------
காவிரி நீர்ச் சிக்கல் பாசன மாவட்டங்களின் தண்ணீர்ச் சிக்கல் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் உயிர்ச்சிக்கல்! இந்த உண்மையை உணர்ந்து குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை தமிழ் மக்கள் அறப்போர் நடத்த வேண்டும். எந்த வகை வன்முறைக்கும் இடங்கொடுக்காத வகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட காவிரி உரிமை மீட்புப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய காவிரி உரிமை மீட்புக் குழு உங்களை உரிமையுடன் மீண்டும் அழைக்கிறது! அடுத்தகட்ட அறப்போராட்டத்திற்குத் திட்டமிடுவோம்!

இந்திய அரசே!
-------------------------
1. தன்னதிகாரம் கொண்ட - முழுநேர காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனே அமைத்திடு!

2. 2018 திசம்பரிலிருந்து சனவரி, பிப்ரவரி, மார்ச்சு ஆகிய மாதங்களுக்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட 15 ஆ.மி.க. வேண்டிய காவிரி நீரை உடனே திறந்துவிட அரசமைப்புச் சட்ட உறுப்பு - 355இன் கீழ் ஆணையிடு!

3. மேக்கேதாட்டு அணைக்குக் கொடுத்த அனுமதியை இரத்து செய்!

4. காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடச் செய்யும் வகையில், இச்சமவெளியில் எண்ணெய், எரிவளி, மீத்தேன், நிலக்கரி உள்ளிட்ட ஐட்ரோகார்பன் எடுக்கத் தடை விதி!

தமிழ்நாடு அரசே!
----------------------------
1. உச்ச நீதிமன்றக் காவிரித் தீர்ப்பை இந்திய அரசு செயல்படுத்தாத குற்றத்திற்குத் தண்டனை வழங்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடு!

2. இந்திய அரசையும் கர்நாடக அரசையும் கண்டித்து அனைத்துக் கட்சி, அனைத்து உழவர் அமைப்புகள் மற்றும் அனைத்து மக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து காவிரி உரிமை மீட்க தமிழ்நாடு தழுவிய அறப்போராட்டங்கள் நடத்திட ஏற்பாடு செய்! இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடு!

3. காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு. மீத்தேன் எடுப்பதைத் தடுக்கத் தமிழ்நாடு அரசு 08.10.2015 அன்று போட்ட அரசாணை எண் 186ஐப் பின்பற்றி, ஐட்ரோகார்பன் எடுக்கத் தடை விதித்து புதிய அவசரச் சட்டம் இயற்று!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, February 11, 2019

மதுரையில் எழுச்சியோடு நடந்த.. தமிழர் மறுமலர்ச்சி மூலவர் “வள்ளலார் பெருவிழா!”

மதுரையில் எழுச்சியோடு நடந்த.. தமிழர் மறுமலர்ச்சி மூலவர் “வள்ளலார் பெருவிழா!”
தமிழர் மறுமலர்ச்சி மூலவர் - “வள்ளலார் பெருவிழா” தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நேற்று (10.02.2019) மாலை மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

மதுரை பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் முன்னிலை வகித்தார். தோழர் கரிகாலன் வரவேற்புரையாற்றினார்.

அலங்காநல்லூர் அபிநயா கலைக்குழுவினரின் பறையாட்டத்தோடு தொடங்கிய “வள்ளலார் பெருவிழா”வில், பள்ளிச்சிறுவன் இலக்கியன் வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு குறித்து சிறப்பாகப் பேசியது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

இதனையடுத்து நடைபெற்ற உரையரங்கில், "தமிழர் உரிமை ஆன்மீகப் போராளி" - தவத்திரு. இரா. கருடசித்தர் (அழகர் கோயில்), மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் வள்ளலாரின் ஆன்மிக நெறி குறித்து உரையாற்றினர்.

நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் விழா பேருரை நிகழ்த்தினார். தோழர் மேரி (மகளிர் ஆயம்) நன்றி கூறினார். தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுக்குழு தோழர்கள் கதிர்நிலவன், “விடியல்” சிவா ஆகியோர் பெருவிழா நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

நிகழ்வில் இறைநெறி அன்பர்களும், தோழமை அமைப்பினரும் திரளாகப் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 


காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, February 9, 2019

"தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும்!" வள்ளலார் பெருவிழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!

"தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும்!" வள்ளலார் பெருவிழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!
“சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற புதுமையான நெறியை முன்னிறுத்தும் தமிழர் ஆன்மிகத்தின் முகமாகவும், தமிழினத்தின் மறுமலர்ச்சி முகமாகவும் விளங்கும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், “தமிழர் மறுமலர்ச்சி மூலவர் - வள்ளலார் பெருவிழா” 2019 பிப்ரவரி 9 அன்று மாலை சிதம்பரத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் விழா நிறைவுப் பேருரை ஆற்றினார்.

“வள்ளலார் வழி தமிழர் இறைநெறி”என்ற தலைப்பில் திரு. இறைநெறி இமயவன் அவர்களும், “வள்ளலார் வழி தமிழர் மருத்துவம்” என்ற தலைப்பில் மருத்துவர் தி. தெட்சிணாமூர்த்திஅவர்களும் சிறப்புரையாற்றினர்.

தமிழ்ச் சான்றோர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டப்பட்டது. தொடர்ந்து வள்ளலார் நெறி பரப்பி வரும் காட்டுமன்னார்கோயில் வள்ளலார் வழிபாட்டு மன்றத் தலைவர் திரு. சிவ.சிவ. ரெங்கநாதன் அவர்களுக்கு “வள்ளலார் திருத்தொண்டர்” விருதும், திருக்குறள் ஒப்புவித்தலில் சாதனை படைத்து வரும் அரியலூர் மாணவி செல்வி கு. பத்மபிரியா அவர்களுக்கு “இளம் சாதனையாளர்” விருதும், நாட்டியக்கலைக்குத் தொண்டாற்றி வரும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை திரு. சக்தி இரா. நடராஜன் அவர்களுக்கு “நாட்டியாஞ்சலி செம்மல்” விருதும் வழங்கப்பட்டது.

பேரியக்க சிதம்பரம் நகரச் செயலாளர் இரா. எல்லாளன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே. சுப்ரமணிய சிவா, ரோட். ச. மணிவண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் “மல்லர் கம்பம்” வீர விளையாட்டுக் கலைகளை அரங்கேற்றினர். செல்வன் தி.ரா. அறன் திருவருட்பா ஓதினார். மாணவி மோனிகா திருவருட்பா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார்.

தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிறைவில், த.தே.பே. தோழர் சிவ. அருளமுதன் நன்றி கூறினார்.

இந்த “வள்ளலார் பெருவிழா”வில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள்
அமைக்க வேண்டும்!

“சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற புதுமையான நெறியை முன்வைத்துப் பரப்பிய வள்ளலார் இராமலிங்க அடிகள் தமிழர் மறுமலர்ச்சியின் மூலவர் ஆவார். மெய்யியல், மொழியியல், மருத்துவம், வாழ்வியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆழமான புதிய கருத்துகளை முன்வைத்தவர் வள்ளலார் ஆவார்.

வள்ளலார் சிந்தனைகள் மனிதகுலத்திற்கு முன் எப்போதையும்விட இப்போது தேவை என்பதை உலக நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

வள்ளலாரின் பல துறைச் சிந்தனைகளை ஆய்வு செய்து, பரப்புவதற்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் “வள்ளலார் இராமலிங்க அடிகளார் உயராய்வு மையங்கள்” அமைக்க வேண்டும் என “வள்ளலார் பெருவிழா”வின் வழியாக தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது”.

தீர்மானத்தை வரவேற்று அனைவரும் எழுந்து நின்று கைதட்டி நிறைவேற்றினர்.

நிகழ்வில் தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, February 2, 2019

தமிழ்நாடு அரசே, ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்குத் துணை போகாதே! பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோரை விடுதலை செய்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாடு அரசே, ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்குத் துணை போகாதே! பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோரை விடுதலை செய்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
கதிராமங்கலத்தில், துர்க்கை அம்மன் கோயில் அருகே உள்ள எண்ணெய்க் குழாயில் “பராமரிப்புப் பணி” பார்க்க வருவதாகச் சொல்லிக் கொண்டு, நேற்று (01.02.2019)இந்திய எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகத்தின் (ஓ.என்.ஜி.சி.) ஊர்திகளும், ஊழியர்களும் காவல்துறையினர் புடைசூழ ஊருக்குள் வந்தபோது, மக்களுக்கு பழையபடி பீதி ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டாண்டுகளாக ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றக் கோரி ஊர் மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகிறார்கள். காவல்துறையின் அடக்குமுறைகளுக்கும், சிறை அடைப்புகளுக்கும் அடிக்கடி உள்ளாகி அச்சத்தில் உள்ளார்கள்.

கதிராமங்கலத்தில் எண்ணெய் – எரிவளிக் குழாய்கள் புதைக்கப்பட்டு, ஓ.என்.ஜி.சி. பயன்படுத்திய வேதிப்பொருட்களால் நிலத்தடி நீர் மாசுபட்டு, குடிநீருக்கும், பாசனத்திற்கும் தகுதியில்லாததாக மாறியிருக்கிறது. குழாய்கள் அவ்வப்போது வெடித்து தீப்பிடித்தும், வெள்ளம்போல் எண்ணெய் வழிந்தோடியும் ஏற்கெனவே பாதிப்புகள் உண்டாகியிருக்கின்றன. இந்நிலையில், மீத்தேன் – நிலக்கரி போன்றவற்றை எடுக்க புதிய குழாய்கள் இறக்க ஓ.என்.ஜி.சி. பல இடங்களில் முயன்று வருகிறது. இதற்கு “ஐட்ரோகார்பன்” என்று மாறுவேடப் பெயர் சூட்டியிருக்கிறது.

பலவகையிலும் பாதிக்கப்பட்டுள்ள கதிராமங்கலம் மக்கள், ஊரைவிட்டு ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டுமென்றும், நிலமும் நிலத்தடி நீரும் நஞ்சாவதால் எண்ணெய் – எரிவளி எடுக்கக் கூடாதென்றும, சற்றொப்ப இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். கடந்த 2018 ஏப்ரல் மாதம், இராணுவத்தினரை அழைத்து வந்து அவர்களின் பயிற்சியின் ஒரு பகுதியாக கதிராமங்கலத்தை சுற்றிக் காட்டிப் பயிற்சி கொடுத்தது மக்களிடம் மேலும் பீதியை அதிகப்படுத்தியது.

இந்நிலையில், நேற்று (01.02.2019) முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் வருவாய்த் துறையினரின் தகவல் ஏதுமில்லாமல், ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் காவல்துறையினரை ஊருக்குள் நிறுத்தி வைத்துக் கொண்டு, ஊர்திகளில் ஊழியர்களை அனுப்பியது மக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியது.

அச்சமடைந்த மக்கள் ஒன்றுகூடி, உண்மை விவரங்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து விவரம் அறிந்து கொள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்களை அழைத்துள்ளார்கள். இந்நிலையில் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி காவல்துறையினர் பேராசிரியர் த. செயராமன் அவர்களையும், உள்ளூர் பிரமுகர் திரு. ராஜூ அவர்களையும் கைது செய்து உண்மைக்குப் புறம்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இவர்கள் இப்பொழுது திருச்சி நடுவண் சிறையில் உள்ளார்கள்.

பேராசிரியர் செயராமன் துணைவியார் திருவாட்டி சித்ரா, கதிராமங்கலம் போராட்டக் குழுத் தலைவியர் கலையரசி, செயந்தி ஆகிய மூன்று பேரையும் வழக்கில் சேர்த்துள்ளார்கள். இந்த ஐந்து பேரும் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களைக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக இ.த.ச. 506(2) பிரிவின்கீழ் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். பிணை மறுப்புப் பிரிவுகளைப் போட்டி ருக்கிறார்கள். காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டனத்திற்குரியது! ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதச் செயல்களுக்கு தமிழ்நாடு காவல்துறை அடியாள் போல் செயல்படக்கூடாது!

தமிழ்நாடு முதல்வர், இச்சிக்கலில் தலையிட்டு பேராசிரியர் செயராமன் உள்ளிட்டோர் மீது போட்டுள்ள பொய் வழக்கை உடனடியாகக் கைவிடச் செய்ய வேண்டுமென்றும், சிறையில் உள்ளோரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்றி “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” காவிரிப்படுகையை அறிவிக்க வேண்டுமென்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com

Friday, February 1, 2019

பெருகிவரும் “வெளிமாநில” வாக்காளர்கள் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்தப்போகும் சீர்குலைவு! தோழர் கி. வெங்கட்ராமன்.

பெருகிவரும் “வெளிமாநில” வாக்காளர்கள் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்தப்போகும் சீர்குலைவு! தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 
நாம் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். தமிழ்நாட்டில் குவியும் வெளி மாநிலத்தவர்களில் கணிசமானவர்கள் இங்கேயே வாக்காளர்களாக ஆகி விடுகிறார்கள். இந்த “வெளியார் வாக்காளர்கள்” தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய குறுக்கீடாக அமைவார்கள் என்று நாம் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.

இப்போது வெளியாகியுள்ள புதிய வாக்காளர் பட்டியல் நாம் எச்சரித்ததைவிட மிக வேகமாக இந்த அபாயம் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு, நேற்று (31.01.2019) வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 2018க்குப் பிறகு புதிதாக சற்றொப்ப 8 இலட்சத்து 34 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். 5 இலட்சத்து 63 ஆயிரம் இரட்டைப் பதிவுகளை நீக்கியதற்குப் பிறகும் இந்த உயர்வு!

நம்முன் உள்ள இந்த வாக்காளர் பட்டியலையும், தமிழ்நாட்டில் பிறமொழியாளர்கள் குறித்த 2018 சூன் மாதம் வெளியான “மொழிவழி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - 2011” பட்டியலையும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களையும் இணைத்து ஒப்பிட்டுப் பார்த்தால், வெளி மாநிலத்தவர்களால் இந்த வாக்காளர் எண்ணிக்கை வீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அதிக வாக்காளர்கள் உள்ள மாவட்டங்களாக சென்னைக்கு அடுத்துள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படி திருவள்ளுர் மாவட்ட மக்கள் தொகை 2001 கணக்கெடுப்பை ஒப்பிட 35.24 விழுக்காடும், காஞ்சிபுர மாவட்ட எண்ணிக்கை 38.9 விழுக்காடும், வேலூரின் எண்ணிக்கை 10.04 விழுக்காடும் உயர்ந்தது.

இன்னொருபுறம், இந்திப் பேசுவோர் எண்ணிக்கை 3 இலட்சத்து 93 ஆயிரம் என்றும், குசராத்தி மொழி பேசுவோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 75 ஆயிரம் என்றும் - மொத்தம் பிற மொழி பேசுவோர் 88 இலட்சம் பேர் என்றும் இன்னொரு புள்ளிவிவரம் கூறியது.

வெளி மாநிலத்தவர் தொகை உயர்வு திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மீமிகை எண்ணிக்கையில் இருப்பதையும், இம்மாவட்டத் தொழில் நிறுவனங்களில் இந்திக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதைப் பார்க்கும்போதும், புதிய வாக்காளர் எண்ணிக்கையில் காஞ்சிபுரமும், திருவள்ளூரும் முதல் வரிசையில் வருவதும், அதுபோல் தொழிற்சாலைகள் அதிகமுள்ள கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் புதிய வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், வெளி மாநில வாக்காளர்கள் வீக்கத்தால் நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறான “வெளியார் வாக்காளர்” எண்ணிக்கை திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களிலும் உயர்ந்திருக்கிறது.

அதிக வாக்காளர் உள்ளத் தொகுதியாக சோழிங்கநல்லுர் தொகுதி குறிப்பிடப்படுகிறது. சோழிங்கநல்லூர் பகுதியிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகை எண்ணிக்கையில் வெளியார் இருப்பதையும், இதனையும் இணைத்துப் பார்த்தாலும் இந்த “வெளியார் வாக்காளர்” ஆபத்தை உணர முடியும்.

இந்த வெளி மாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாது என்று தலையால் அடித்துக் கொண்டு, நாம் தொடர்ந்து வலியுறுத்தினாலும் மாநில ஆட்சியாளர்கள் அதைக் கேட்பதாக இல்லை!

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10,000-லிருந்து 25,000 வரையிலும் வெளி மாநிலத்து வாக்காளர்கள் அதிகரித்துவிட்டார்கள். இந்த “வெளியார் வாக்காளர்களின்” முதல் தேர்வாக பாரதிய சனதாவும், அடுத்தத் தேர்வாக காங்கிரசுக் கட்சியும்தான் இருக்கும்!

எவ்வளவுதான் தில்லிக்குக் காட்டிக் கொடுத்தாலும், அண்ணா தி.மு.க. - தி.மு.க. கட்சிகளைக்கூட இவர்கள் கருதிப் பார்க்க மாட்டார்கள்.

இந்த வெளி வாக்காளர் குறுக்கீடு நாடாளுமன்றத் தேர்தலில் மிகக்கூர்மையாக வெளிப்படும்! ஒட்டுமொத்தத் தமிழர்களின் மனநிலை தேர்தல் முடிவுகளில் வெளிப்படாமல், சீர்குலைக்கும் குறுக்கீடாக இந்த “வெளியார் வாக்காளர்கள்” அமைவார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட தீய விளைவுகளை அது ஏற்படுத்திவிடும்! எனவே, இப்போதாவது தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ள வேண்டும்!

இறுதி வாக்காளர் பட்டியலை ஆய்ந்து, அதில் சேர்ந்துள்ள வெளி மாநில வாக்காளர்களை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட வேண்டும்! புதிய வாக்காளர் பட்டியலில் வெளி மாநிலத்தவர் யாரையும் சேர்க்கக் கூடாது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT