உடனடிச்செய்திகள்

Friday, January 26, 2018

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விசயேந்திரர் உருவப்படம் எரிப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விசயேந்திரர் உருவப்படம் எரிப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி சங்கர மட இளைய மடாதிபதி விசயேந்திரரைக் கண்டித்து, மொழிப்போர் நாளான 25.01.2018 அன்று காலை, தருமபுரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பல், விசயேந்திரர் உருவப்பட எரிப்புப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
 
போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க தருமபுரி செயலாளர் தோழர் க. விசயன் தலைமை தாங்கினார். தோழர்கள் முருகேசன், பிரகாஷ் தங்கவேல் ஐயா, மதிமுக கோவிந்தராஜ், பச்சியப்பன், திருவள்ளுவன் உள்ளிட்டோர் பங்கேற்று, விசயேந்திரரின் தமிழ் பகைப் போக்கைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
 
காஞ்சி விசயேந்திரர் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென முழங்குவோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, January 25, 2018

போராடும் மக்களை மதித்து தமிழ்நாடு அரசு பேருந்து கட்டண உயர்வை பெருமளவு குறைக்க வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

போராடும் மக்களை மதித்து தமிழ்நாடு அரசு பேருந்து கட்டண உயர்வை பெருமளவு குறைக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
பேருந்துக் கட்டணங்களைத் தமிழ்நாடு அரசு, தாறுமாறாக உயர்த்தியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும், பொது மக்களும் தன்னெழுச்சியாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
 
ஏற்கெனவே, வழக்கமாக அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் பேருந்துகளைக்கூட விரைவு வண்டி, இடைநில்லா பேருந்து, வரம்புக்குட்பட்ட நிறுத்தப் பேருந்து, தாழ்தளப் பேருந்து, சொகுசுப் பேருந்து என பல பெயர்கள் மாற்றி வெளிப்படையாக அறிவிக்காத கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியே வருகிறது.
 
வேறு மாநிலங்களை ஒப்பிட தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செல்லக் கூடியதாக, அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற போதிலும், படிகள் உடைந்த பேருந்து, சிறிய மழைக்கும் ஒழுகும் பேருந்து, பழுதாகி அங்கங்கே நிற்கும் பேருந்து, ஓட்டை வழியாகக் குழந்தையே விழும் அளவிற்கான பேருந்து போன்றவற்றை கண்ணை மூடிக் கொண்டு, அரசுப் பேருந்தாகத்தான் இருக்கும் என சொல்லிவிட முடியும்! அந்தளவிற்கு படுமோசமான நிர்வாகச் சீரழிவில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.
 
இந்த நிலையில், 19.01.2018 அன்று தமிழ்நாடு அரசு அனைத்துப் பேருந்துகளின் கட்டணங்களையும் சராசரியாக 66 விழுக்காடு வரை உயர்த்தி, அன்று நள்ளிரவு முதலே உடனடியாக செயலுக்கு வரும் என்று அறிவித்ததை அறிந்த மக்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள். குறிப்பாக, மாணவர்கள், அன்றாட ஊதியக்காரர்கள், குறு வணிகர்கள் போன்றவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற மாநகரங்களில் எளிய மக்கள், தங்கள் செலவில் 58 விழுக்காடு வரை போக்குவரத்திற்கு செலவு செய்வதாக அரசின் புள்ளி விளக்கங்களே கூறுகின்றன.
 
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தொடர் இழப்பில் இயங்குவதால் ஏழாண்டு கழித்து இந்த கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஞாயம் பேசுகிறார். மேலே சுட்டிக்காட்டியவாறு, அறிவிக்கப்படாத கட்டண உயர்வுக்கு மேலாக இக்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏழாண்டாக கட்டணமே உயர்த்தப்படவில்லை என முதலமைச்சர் கூறுவது முழு உண்மையல்ல!
 
தொழிற்சங்கங்களும், பல்வேறு தரப்பு வல்லுநர்களும் போக்குவரத்துக் கழக இழப்பை சரி செய்வதற்கான வழிகளை பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அவற்றில் எதையும் கருதிப் பார்க்காமல், மக்கள் மீது கட்டண உயர்வை சுமத்துவது மட்டுமே ஒரே வழி என அரசு கூறுவது ஏற்பதற்கில்லை!
 
உண்மையில், போக்குவரத்துக் கழகங்களை இழப்பிலிருந்து பாதுகாப்பதைவிட தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்காக, இந்த தாறுமாறான உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது என ஐயப்பட அடிப்படை உண்டு! இதற்காக முதலமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட ஆட்சியாளர்களுக்கு, பல கோடி கையூட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கசிந்து வரும் செய்திகளை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
 
ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி அரசியல் புள்ளிகளின் குடும்பத்தினர் பல பேருந்து நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை! இந்நிலையில், தனியாருக்காகவும் இந்த பேருந்துக் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது என ஐயப்படுவதில் தவறில்லை!
 
பேருந்துகள் கட்டுவது, வெளியிலிருந்து வாங்குவது, உதிரி உறுப்புகள் கொள்முதல் உள்ளிட்ட அனைத்திலும் ஊழல் கொடிகட்டிப் பறப்பது போக்குவரத்துக் கழகங்களில் எல்லோரும் அறிய பல ஆண்டுகளாக நடந்து வருவதுதான். இன்னொருபக்கம், கடுமையான டீசல் விலை உயர்வு!
 
2014 திசம்பரில், பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 105 டாலர் இருந்தது. (ஒரு பேரல் என்பது 159 லிட்டரைக் குறிக்கும்). அதாவது 6,615 ரூபாய்! அப்போது ஒரு லிட்டர் டீசல் விலை 53 ரூபாய் 78 காசுகள். அதன்பிறகு, கடந்த நான்காண்டுகளாக உலகச்சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2018 சனவரியில், இந்த விலை 61 டாலர்! அதாவது 159 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூபாய் 3,876.58. தூய்மைப்படுத்திய பிறகு ஒரு லிட்டர் டீசலின் அடிப்படை விலை 35.05 ரூபாய். ஆனால், இப்போது ஒரு லிட்டர் டீசல் விலை 67 ரூபாய்!
 
கச்சா எண்ணெய் விலை மிகப்பெரும் அளவுக்குக் குறைந்த பிறகும், டீசல் விலை ஏறிக் கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் இந்திய அரசு மற்றும் மாநில அரசு விதிக்கும் வரிகள்தான்! 2014இல் இந்திய அரசின் டீசல் வரி ரூபாய் 3.46 ஆக இருந்தது. இப்போது, அது ரூபாய் 15.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தற்போது விதிக்கும் டீசல் மீதான வரி லிட்டருக்கு 8 ரூபாய் 76 காசுகள்.
 
இவ்வாறு வரி வழியில் ஏறத்தாழ 50 விழுக்காடு விலை உயர்வு நேர்கிறது! தனியார் மற்றும் அரசு எண்ணெய் நிறுவனங்களின் இலாபமாக ஏறத்தாழ 40 விழுக்காடு செல்கிறது. வணிகர்கள் ஈவுத் தொகை உள்ளிட்ட பிற வகையில் 10 விழுக்காடு செல்கிறது. ஆக, கச்சா எண்ணெயிலிருந்து தூய்மைப்படுத்தி கிடைக்கும் ஒரு லிட்டர் டீசலின் விலை 35 ரூபாய் 5 காசாக இருப்பது, இவ்வாறு 67 ரூபாயாக மாறுகிறது.
 
இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தங்களது வரி விகிதத்தை உயர்த்தாமல் இருந்தாலே, உலகச்சந்தையில் விலை குறைவு நுகர்வோருக்கு கிடைக்க வாய்ப்புண்டு! போக்குவரத்துக் கழகங்களுக்கு மிகப்பெரும் அளவுக்கு செலவு குறையும்.
 
இந்திய அரசின் இசைவோடு தனியார் நிறுவனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் வசூலிக்கும் சுங்கக் கட்டணம், காலவரையற்ற பெருங்கொள்ளையாக இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்களுக்கு, சுங்கக்கட்டணங்களின் வழியாக ஆண்டுக்கு 900 கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது.
 
கழகங்களின் எண்ணிக்கை தேவையற்ற வகையில் அதிகமாக இருப்பது மிகப்பெரும் அளவுக்கு அதிகாரிகள் பட்டாளத்தை உருவாக்குகிறது. இது, பெரும் தொகையை விழுங்குகிறது. இதுதவிர, ஆளுங்கட்சி மற்றும் “செல்லப்பிள்ளை” சங்கப் பொறுப்பாளர்கள் என்ற வகையில் ஒவ்வொரு பணிமனையிலும் பல தொழிலாளிகள் கோயில் காளை போல், சுற்றித் திரிந்து வேலை செய்யாமல் சம்பளம் பெறுகிறார்கள். அவ்வப்போது, கருங்காலி வேலைக்கு பயன்படும் நிரந்தரப் படையாக இவர்கள் இருக்கிறார்கள்.
 
உதிரி உறுப்புகள் உள்ளிட்டு அனைத்துக் கொள்முதலிலும் தாறுமாறான கையூட்டுகள் நடைபெறுகின்றன.
 
இவையெல்லாம் சேர்ந்துதான், போக்குவரத்துக் கழகங்களுக்கு தொடர் இழப்புகளை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக எட்டாண்டுகளில் நிறுத்தப்பட வேண்டிய பேருந்துகள், ஓட்டை உடைசலாக மாறிய பின்னும் 16 ஆண்டுகள் வரை ஓட்டப்படுகின்றன. இது பயணிகளுக்கு பெரும் இடையூறுகளையும், விபத்துகளையும் ஏற்படுத்துகின்றது.
 
டீசல் மீதான இந்திய – தமிழக அரசுகளின் வரிக் குறைப்பு, சுங்கச்சாவடிக் கட்டணங்களிலிருந்து விதிவிலக்கு, அதிகாரிகள் எண்ணிக்கையைக் குறைத்து பராமரிப்புத் தொழிலாளர்களை போதுமான அளவுக்கு நியமித்தல், ஊழல் தவிர்ப்பு ஆகியவற்றை மேற்கொண்டால், மிகக் குறைந்த கட்டண உயர்வை மூன்றாண்டுக்கு ஒருமுறை அறிவித்தாலே, போக்குவரத்துக் கழகங்களை இலாபத்தில் இயக்க முடியும்!
 
எந்தக் காலத்திலும் கட்டண உயர்வே இருக்கக் கூடாது என்பது நமது வாதமல்ல! மக்கள் தாங்கக் கூடிய, ஞாயமான கட்டண உயர்வை அறிவித்தே போக்குவரத்துக் கழகங்களை இலாபமாக இயக்க முடியும் என்பதே நமது கருத்து!
 
எனவே, மேற்கண்ட சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கட்டண உயர்வை பெருமளவுக் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னணம்,
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Monday, January 15, 2018

இதழியல் மற்றும் நாடகத்துறையில் தனித்தடம் பதித்தவர் ஞாநி! தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

இதழியல் மற்றும் நாடகத்துறையில் தனித்தடம் பதித்தவர் ஞாநி! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
இதழியல் துறை, கலை இலக்கியம், சனநாயக அரசியல் ஆகிய அனைத்திலும் தனித்தன்மையுடன் கருத்துகளையும் படைப்புகளையும் வழங்கி வந்த நம்முடைய அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் ஞாநி அவர்கள், இன்று (15.01.2018) விடியற்காலை காலமாகிவிட்டார் என்ற செய்தி, பேரதிர்ச்சியைத் தருகிறது!
 
சிறுநீரக நோய் காரணமாக அவர் துன்பப்பட்டிருந்த நிலையிலும், படுக்கையில் வீழ்ந்து விடாமல் மன உறுதியினாலும், உணவு ஒழுங்கினாலும் இயங்கி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பாக, சிதம்பரத்தில் தோழர் பா. பழநி அவர்கள் இல்ல விழாவில், தோழர் ஞாநி அவர்களைச் சந்தித்தேன். அவருடைய உடல் நிலைமை குறித்து சொன்னார்.
 
வீதி நாடகம் என்ற புதிய வடிவத்தில், சமகால தமிழ்க் கலையை ஒரு போக்காக வளர்த்தவர் ஞாநி. இந்தித் திணிப்பு - இந்துத்துவா அரசியல் ஆகியவற்றை ஒளிவுமறைவின்றி எதிர்த்து வந்தவர் தோழர் ஞாநி. எல்லா நிகழ்வுகளிலும் உடனுக்குடன் கருத்துக் கூறுவார். அவருடைய எல்லா கருத்துகளிலும் நமக்கு உடன்பாடிருக்கிறது என்று சொல்ல முடியாது. எனினும், பெரும்பாலான கருத்துகள் முற்போக்கானவையாகவே இருக்கும்!
 
வெளியூரில் நான் இருந்தமையால், தோழர் ஞாநி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை. சென்னை க.க. நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் ஞாநி அவர்களது உடலுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், புலவர் இரத்தினவேலவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், சென்னை கிளைச் செயலாளர் தோழர் ஏந்தல் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். இன்று (15.01.2018) மாலை, தோழர் ஞாநி அவர்களின் விருப்பப்படி, அவரது உடல் சென்னை அரசுப் பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கப்படுகிறது!
 
தனித்து நின்று அரசியல் சனநாயகத்திற்கும், வர்ண சாதி ஆதிக்கமற்ற சமத்துவ சமூகத்திற்கும் குரல் கொடுத்து, கலை இலக்கியப் படைப்புகளையும் வழங்கிப் பணியாற்றிய தோழர் ஞாநி அவர்கள் மறைவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய சிறந்த ஆளுமைகளையம், பண்புகளையும் இளம் தலைமுறையினர் கற்று முன்னேறுவது ஒன்றே, ஞாநி அவர்களுக்கு செய்யக் கூடிய சிறந்த புகழ் வணக்கமாக அமையும்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Sunday, January 14, 2018

புதிய எதிர்பார்ப்புகளோடு புத்தாண்டை வரவேற்கிறோம்! தோழர் பெ. மணியரசன் வாழ்த்து!

புதிய எதிர்பார்ப்புகளோடு புத்தாண்டை வரவேற்கிறோம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வாழ்த்து!
பொங்கலாய், தமிழர் திருநாளாய், உழவர் பெருநாளாய், புத்தாண்டுப் பிறப்பாய் புதிது புதிதாய் வளர்ந்து வரும் தையே, “தமிழன்டா” மகுடத்துடன் கடந்த ஆண்டு தைப்புரட்சி ஆனாய் நீ! ஏறுதழுவும் உரிமை மீட்டாய்!
 
இன்முகத்தோடு, புதிய எதிர்பார்ப்புகளோடு உன்னை வரவேற்கிறோம்!
 
வையத்தின் மூத்த இனமாய் உள்ள எங்களின் இளமைக்குக் காரணம் - தமிழ்! “தமிழ் எங்கள் இளமைக்குப் பால்” என்றார் பாவேந்தர்.
 
தமிழர் திருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும்போது, நம் இளையோர் ஒவ்வொருவரும் இன உரிமை அரசியல், சமூக சமத்துவம், உளவியல் அறம் மூன்றையும் முன்னெடுக்க உறுதி ஏற்க வேண்டும்.
சாதிவெறியர்களால் வீதிகள் எரிக்கப்பட்டால், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோர் கொலை செய்யப்பட்டால் உளவியல் அறம் கொண்ட ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும் வெட்கப்பட வேண்டும். வேதனைப்பட வேண்டும். இந்த அநீதிகளைத் தடுக்க தங்களால் ஆனவற்றைச் செய்ய வேண்டும்!
 
தமிழின உரிமைகள் பறிக்கும் ஆரியத்துவாவின் இந்திய ஆட்சியாளரிடம் அடங்கிப் போவோர் - தமிழ்நாட்டுக் கங்காணி ஆட்சியாளரிடம் தலை சொறிந்துபிழைப்போர் - நம்மில் சாதியால் பலவீனப்பட்டுள்ள மக்களிடம் ஆதிக்கம் செய்வதும், அவர்களைக் கொலை செய்வதும் என்ன வீரம்? உட்சூழ்ச்சி புரியாமல் அந்த ஆதிக்கவாதிகள் காட்டும் சாதிக் கவர்ச்சியில் இளைஞர்கள் சாய்ந்துவிடக் கூடாது!
 
இந்தத் தன்னலக்காரர்கள் தமிழின வீரத்தை மழுங்கடித்து, சாதி அடாவடித்தனத்தைத் தூண்டி விடுகிறார்கள்; தமிழ்ப்பற்றை மறக்கச் செய்து சாதிப்பற்றைத் தூண்டி விடுகிறார்கள்.
 
தமிழ்நாட்டில் அரசியல் பதவி வேட்டையாடிகள் சாதியை - தங்களுக்கான வாக்கு வங்கியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். இவர்கள் சாதி உணர்வை அல்லும் பகலும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தமிழர்கள் அனைவரும் ஒரே இன மக்கள்! இது வரலாற்றுண்மை! யாதும் ஊரே யாவரும் கேளீர் (உறவினர்) என்றல்லவா நம் பாட்டன்மார், பாட்டிமார் கூறிச் சென்றுள்ளார்கள். இதுவல்லவா நம் முன்னோர் நமக்கு வழங்கிய மனிதநேய மந்திரம்!
 
மனிதப் பிறப்பை உயர்வு தாழ்வாய் மாற்றிச் சொன்னது ஆரியம்! வர்ண - சாதிச் சூத்திரம் சொன்னது பிராமணியம்! நம் முன்னோர் நமக்கு வழங்கிச் சென்றது ஓரினக் கொள்கை!
 
இந்துத்துவா முகமூடி மாட்டிக் கொண்டு வரும் ஆரியத்துவா - இசுலாமியர், கிறித்துவர் எல்லாம் அயலார் என்கிறது. நம்மைப் பொறுத்தவரை தமிழர்கள் இந்துவாக, இசுலாமியராக, கிறித்தவராக இருக்கிறார்கள்; அவர்கள் இனம் ஒன்றே!
 
நம் பொங்கல் விழா அனைவருக்கும் பொதுவான விழா! அறுவடைத் திருவிழா! பொங்கலிட்டுப் படைத்து உண்போர் உண்ணலாம்! படைக்காமலே - பொங்கலிட்டும் உண்ணலாம்! மாட்டுப் பொங்கல் ஏறு தழுவுதல் - காணும் பொங்கல்.. பொங்கல் விழாவில் விளையாட்டுப் போட்டிகள், பாட்டரங்குகள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், நாட்டிய அரங்குகள்.. எத்தனையெத்தனை அரங்கேறுகின்றன!
 
அப்பப்பா மக்கள் வெள்ளம் ஒன்று கலக்கும் எத்தனை வடிவங்கள்! இதுபோல் பன்முக விழா வேறேது?
அனைவர்க்கும் இனிய பொங்கல் - புத்தாண்டு வாழ்த்துகள்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, January 13, 2018

சிதம்பரம் மேம்பாலத்திற்கு மொழிப்போர் தியாகி இராசேந்திரன் பெயர் தமிழ்நாடு அரசுக்கு த.தே.பே. பாராட்டு!

சிதம்பரம் மேம்பாலத்திற்கு மொழிப்போர் தியாகி இராசேந்திரன் பெயர் தமிழ்நாடு அரசுக்கு த.தே.பே. பாராட்டு! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
சிதம்பரம் தொடர்வண்டி மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி (தியாகி) இராசேந்திரன் பெயர் சூட்ட வேண்டும் என கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ்த்தேசியப் பேரியக்கமும், சிதம்பரம் தமிழ்க் காப்பணியும் இன்னும் பல தமிழ் உணர்வாளர்களும் வலியுறுத்தி வந்தோம்.
 
இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து 1965இல் நடைபெற்ற தமிழ் மொழிக் காப்புப் போராட்டத்தில், இப்போது மேம்பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில்தான் மாணவர் தியாகி இராசேந்திரன், 1965 சனவரி 27 அன்று துப்பாக்கிச் சூட்டில் உயிரீகம் செய்தார்.
 
எனவே, அந்த இடத்தில் அமைந்துள்ள தொடர்வண்டி மேம்பாலத்திற்கும், இதையொட்டியுள்ள சிவபுரிச் சாலைக்கும் மொழிப்போர் ஈகி இராசேந்திரன் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கமும், பிற தமிழ் இன மொழி உணர்வாளர்களும் தொடர் போராட்டங்களும், இயக்கங்களும் நடத்தி வந்தோம்.
 
இந்நிலையில், காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. முருகுமாறன் நேற்று (12.01.2018) தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர்வண்டி மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி இராசேந்திரன் பெயர் சூட்ட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை உடனடியாக ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிதம்பரம் தொடர்வண்டி மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி இராசேந்திரன் பெயர் சூட்ட ஒத்துக்கொண்டார்.
 
இதற்கான முயற்சியை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறனுக்கும், ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறென்.
 
வரும் மொழிப்போர் வீரவணக்க நாளுக்கு முன்னதாக இம்மேம்பாலத்திற்கு மொழிப்போர் ஈகி இராசேந்திரன் பெயர் வைக்க அனைத்து நடவடிக்கைகளையும், மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
இதுமட்டுமின்றி, வரலாற்றுச் சிறப்புமிக்க 1938 மற்றும் 1965 மொழிப் போராட்டங்களின் வரலாற்றை பள்ளி - கல்லூரி பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Tuesday, January 9, 2018

"நீதிபதி இந்திரா பானர்சி வாயிலிருந்து நல்ல சொற்களே வராதா?" தோழர் பெ. மணியரசன்

"நீதிபதி இந்திரா பானர்சி வாயிலிருந்து நல்ல சொற்களே வராதா?" தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களுக்கு 2016 செப்டம்பரிலிருந்து தர வேண்டிய ஊதிய உயர்வைத் தர வலியுறுத்தியும், தங்களது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களில் 7 ஆயிரம் கோடி வரைத் தமிழ்நாடு அரசு எடுத்துக் கொண்டு, தொழிலாளர்களுக்குத் தர மறுப்பதைத் தந்திட வலியுறுத்தியும், பணி ஓய்வு பெற்றோர்க்கு ஓய்வூதியம் மற்றும் வைப்பு நிதி போன்றவற்றை தர வலியுறுத்தியும் வேலை நிறுத்தம் செய்து போராடி வருகிறார்கள்.

இப்போராட்டம் தொடர்பான வழக்கில் – சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்சி – நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அமர்வு 05.01.2018 அன்று “சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள்” என்று கூறியதுடன், தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு வேலைக்குப் போக வேண்டும். வேலைக்குத் திரும்பவில்லை எனில் வேலை நீக்கம் செய்வோம் என்று ஆணையிட்டது.

நேற்று (08.01.2018) இவ்வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, இந்திரா – பானர்சி, “தமிழ்நாடு அரசினால் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களைத் தர முடியவில்லை என்றால் போக்குவரத்தைத் தனியார் மயமாக்க வேண்டியதுதானே” என்று கூறினார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்சி கூற்றின்படி, போக்குவரத்துத் துறை தனியார் மயமானால் 80 ஆயிரம் போக்குவரத்துத் தொழிலாளர் குடும்பங்கள் சந்தியில் நிற்க வேண்டியதுதான்! தனியாரின் கட்டணக் கொள்ளையால் தமிழ்நாட்டு மக்கள் அல்லாட வேண்டியது தான்!

இந்திரா பானர்சி வாயில் நல்ல சொற்களே வராதா?

மக்கள் வழக்கில் ஒரு பழமொழித் தொடர் ஒன்று இருக்கிறது : “நாக்கில் சனி!”.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, January 6, 2018

போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தம் : ஆணவம் பிடித்த நிர்வாக அதிகாரி போல் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேசக்கூடாது! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தம் : ஆணவம் பிடித்த நிர்வாக அதிகாரி போல் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேசக்கூடாது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
மூன்று நாட்களாகத் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்துவரும் போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அவர்களின் தொழிற்சங்கங்கள் வழியாகப் பேச்சு நடத்தி இணக்கமான முடிவை உண்டாக்கத் தமிழ்நாடு அரசு தவறிவிட்டது.

ஊதிய உயர்வு குறித்து பேச்சு வார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே குறைவான வேறுபாடே உள்ளது. ஆனால், தொழிலாளர்களிடமிருந்து அவர்களின் ஊதியத்தில் பிடித்த ஏழாயிரம் கோடி ரூபாயை வருங்கால வைப்பு நிதி, அஞ்சல் ஈட்டுறுதி நிதி (PLI), வாழ்நாள் ஈட்டுறுதி நிதி (LIC) முதலியவற்றிற்குக் கட்டாமல், தமிழ்நாடு அரசு தானே செலவழித்துவிட்டது. கடந்த 16 மாதங்களில் 21 தடவை நடந்த பேச்சில் இந்த ஏழாயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தர தமிழ்நாடு அரசு உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை! கொடுத்த வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது.

தமிழ்நாடு அரசின் நிதித்துறை திவாலாகிவிட்டது. ஆனால் எம்ஜியார் நூற்றாண்டு விழா என்ற பெயரில் உருப்படியற்ற வாண வேடிக்கைச் செலவுகளை பல நூறு கோடி ரூபாய்க்குச் செய்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு!

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் நம்பகத் தன்மையை இழந்துவிட்டது தமிழ்நாடு அரசு!

இந்நிலையில், 04.01.2018 அன்று பிற்பகல் பேச்சு வார்த்தை முறிந்த நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென்று வேலை நிறுத்தம் தொடங்கினர். வேலை நிறுத்தம் குறித்து ஏற்கெனவே கொடுத்த அறிவிக்கை போதும் என்கின்றன தொழிற்சங்கங்கள். இது சட்டப்படியான வேலை நிறுத்தம் என்கின்றன.

ஆனால், தொழிலாளிகள் – பயணிகளை நடுவழியில் அங்கங்கே இறக்கிவிட்டு, அல்லோகலப்படுத்தி வேலை நிறுத்தம் தொடங்கிய முறை சரியன்று! முக்கியமான பேருந்து நிலையங்களில் பயணிகளை இறக்கி விட்ட பின்தான் வேலை நிறுத்தம் தொடங்கியிருக்க வேண்டும். மக்களிடம் இப்பொழுது இதுபற்றி ஏற்பட்டுள்ள கெட்ட பெயரைப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் படிப்பினையாக் கொள்ள வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்சி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு இந்த வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்று அறிவித்ததுடன், உடனடியாக வேலைக்குத் திரும்பவில்லையென்றால் தொழிலாளிகள் பணி நீக்கம் செய்யப்படுவர்; அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடப்படும் என்றும் மிரட்டியுள்ளது.

சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்குப் போங்கள் என்று தொழிலாளர்களைப் பார்த்து சொல்வதற்கு, இந்திரா பானர்ஜிக்கு அதிகாரம் தந்தது யார்? இப்பேச்சு அதிகார மமதையின் உச்சம்!

நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் அப்துல் குத்தூஸ் இருவரும் நீதித்துறை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள். அவர்கள் தொழிற்சங்கங்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கும் முன் கடுஞ்சொற்களை உதிர்த்துள்ளார்கள்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மட்டுமின்றி, தமிழ்நாடு அரசு சட்டத்திற்குப் புறம்பாகப் பயன்படுத்தியுள்ள தங்களது ஊதியப்பணம் ஏழாயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து 16 மாதங்களாக – குரலெழுப்பி வருகிறார்கள். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தரவில்லை; இன்றியமையாத் தேவைகளுக்குத் தங்கள் வைப்பு நிதியிலிருந்து கடன் வாங்கும் உரிமையைப் பயன்படுத்த முடியவில்லை.

தொழிலாளர்களின் இந்தப் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாத நீதிபதிகள், பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கண்டு மனம் வருந்தும் சாக்கில் நீதித்துறை அதிகாரத்தை நிர்வாகத்துறை அதிகாரமாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். தங்களின் இந்த நிலைபாட்டை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பாக நீதிபதி இந்திரா பானர்சி மறு ஆய்வு செய்ய வேண்டும்; மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தின்போதும் ஆணவம் கொண்ட நிர்வாக அதிகாரிகள் போல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கட்டளைகள் பிறப்பித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு, தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசி உடனடியாகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, இயல்பு நிலையைக் கொண்டு வந்து மக்களின் துன்பங்களையும் நீக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அதைவிட்டுவிட்டு, போராட்டத்தை மடைமாற்ற, மாற்று ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்குகிறோம் என மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது என்றும் எச்சரிக்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! பிப்ரவரி 3 - சென்னையில் சிறப்பு மாநாடு! 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! பிப்ரவரி 3 - சென்னையில் சிறப்பு மாநாடு! 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை!
 


 
#TamilnaduJobsforTamils
 
”தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில் வரும் 2018 பிப்ரவரி 3 அன்று, சென்னையில் சிறப்பு மாநாட்டை நடத்துகிறது - தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
சென்னை சேப்பாகம் சிவனந்தா சாலையிலுள்ள அண்ணா அரங்கில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை கருத்தரங்குகள் - கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. செயலுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
 
கண்காட்சி

காலை 9.30 மணிக்கு பெண்ணாடம் இளநிலா கலைக் குழுவினரின் பறையாட்டம் - எழுச்சிப் பாடல்களுடன் தொடங்கும் மாநாட்டின் முதல் நிகழ்வாக, “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்” என்ற தலைப்பில் நடக்கும் ஒளிப்படக் கண்காட்சியை தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் திறந்து வைக்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. வெற்றித்தமிழன் நிகழ்வுக்குத் தலைமை தாங்குகிறார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், மாநாட்டு வரவேற்புரையாற்றுகிறார்.
 
கருத்தரங்கம் - 1

சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், மாநாட்டுத் தொடக்கவுரையாற்ற, அதனைத் தொடர்ந்து “வேலை வாய்ப்பில் தமிழர் உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து தலைமையேற்கிறார்.
 
“தமிழ்நாடு அரசுத் துறையில்..” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, “இந்தியத் தொழில்துறையில்..” என்ற தலைப்பில், தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் ப. வேலுமணி, “இந்திய அரசு அலுவலகங்களில்..” என்ற தலைப்பில், மேனாள் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி திரு. ஏ. அழகிய நம்பி, “மாற்றுத்திறனாளிகள் உரிமை..” என்ற தலைப்பில், திசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக்நாதன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
 
சட்ட வரைவு

மாநாட்டின் முகாமையான நிகழ்வாக, “தமிழர் வேலை உறுதிச் சட்டம்” என்ற சட்டத்தின் வரைவை, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்வைத்து உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளையும், பிற்பகல் 2 மணியளவில் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
 
ஆய்வறிக்கை வெளியீடு

பிற்பகல் 3 மணியளவில், “மண்ணின் மக்கள் வேலை உறுதிச் சட்டம்: மற்ற மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும்” என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை எல்லை மீட்புப் போராட்ட ஈகியும், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியருமான பேரா. பி. யோகீசுவரன் வெளியிடுகிறார். புலவர் இரத்தினவேலவன், திருவாளர்கள் ச. யோகநாதன், வெ. சேனாபதி, பிரடெரிக் ஏங்கல்ஸ், தாரை. மு. திருஞானசம்பந்தம், சோயல் பாண்டியன், அர. மகேசுகுமார், நா. நெடுஞ்செழியன், இரா. இரஜினிகாந்த், ம. இலட்சுமி அம்மாள் ஆகியோர் அறிக்கையைப் பெற்றுக் கொள்கின்றனர்.
 
பாவரங்கம்

பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் பாவரங்கில், “அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க!” என்ற தலைப்பில் பாவலர் கவிபாஸ்கர், “போர்க்குரல் எழுப்பு!” என்ற தலைப்பில் பாவலர் செம்பரிதி, “எரிதழல் எந்தி வா!” என்ற தலைப்பில் பாவலர் முழுநிலவன் ஆகியோர் பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.
 
கருத்தரங்கம் - 2

பிற்பகல் 4 மணிக்கு, “தமிழ்நாட்டுத் தொழில் - வணிகத்தில் அயலார்” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.
 
தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன் -“கட்டுமானத்துறையில்” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு உணவு தானிய மொத்த வணிகர் சங்கத் தலைவர் திரு. சா. சந்திரேசன் - “தொழில் வணிகத்தில்” என்ற தலைப்பிலும், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் - “திரைத்துறையில்..” என்ற தலைப்பிலும், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன் - “அரசியலில்..” என்ற தலைப்பிலும், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா “கல்வியில்” என்ற தலைப்பிலும் கருத்துறையாற்றுகின்றனர்.
 
தீர்மானங்கள்

இதனைத் தொடர்ந்து, மாநாட்டுத் தீர்மானங்களை பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பழ. இராசேந்திரன், க. முருகன், க. விடுதலைச்சுடர், மூ.த. கவித்துவன், மு. தமிழ்மணி, இலெ. இராமசாமி, க. பாண்டியன், பி. தென்னவன், க. விசயன், ஏந்தல் ஆகியோர் முன்மொழிக்கின்றனர்.
 
வாழ்த்தரங்கம்

நிறைவாக நடைபெறும் வாழ்த்தரங்கில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. மு. தமிமுன் அன்சாரி, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார். தோழர் பழ.நல். ஆறுமுகம் நன்றி கூறுகிறார். பாவலர் நா. இராசாரகுநாதன், ப. சிவவடிவேலு, இரா. இளங்குமரன், இரா. வேல்சாமி, வெ. இளங்கோவன், விளவை இராசேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கின்றனர்.
 
தமிழ்நாடு தமிழர் தாயகமா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்காடா? சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அகதிகளா? அன்னையின் மடியிலேயே அவள் பிள்ளைகள் அனாதைகளா?
 
சிறப்பு மாநாட்டிற்கு வாருங்கள் தமிழர்களே!
 
#TamilnaduJobsforTamils
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, January 4, 2018

பட்டுக்கோட்டையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சேதப்படுத்திய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும்! அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்! தோழர் நா. வைகறை கோரிக்கை!

பட்டுக்கோட்டையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சேதப்படுத்திய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும்! அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை கோரிக்கை!
 பட்டுக்கோட்டை அருகில் ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்கள் வசித்து வரும் வீதியில், 60 வீடுகள் உள்ளன. கடந்த 2017 திசம்பர் 31 இரவு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், பகுதி இளைஞர்கள் ஒலிபெருக்கி வைத்து கொண்டாடியுள்ளனர்.



தெற்கு குடிகாடு பகுதியிலிருந்து சற்றொப்ப மூன்று கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள வடக்கு ஆம்பலாப்பட்டு பகுதியில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் சிலர், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு இரு சக்கர ஊர்திகளில் வந்துள்ளனர். அங்கு கட்டப்பட்டிருந்த பலூன்களை உடைத்துவிட்டு, சாதிப் பெயரை சொல்லி “உங்களுக்கு ஏண்டா புத்தாண்டு?” என்று, அங்கிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். கைகலப்பும் ஏற்பட்டது.
உடனே, அங்கிருந்து சென்ற வடக்கு ஆம்பலாப்பட்டு இளைஞர்கள் சிறிது நேரத்தில் ஊர்திகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கையில் இரும்புக் குழாய், உருட்டுக் கட்டைகள் எடுத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருவுக்கு வந்துள்ளனர். அவர்கள் தெரு விளக்கின் சுவிட்ச் பலகையை அடித்து நொறுக்கியதால், தெருவிலே இருட்டாகிவிட்டது. தெருவின், இரண்டு புறமும் உள்ள சற்றொப்ப 30 வீடுகளில் கண்ணாடி சன்னல்களை, ஒடுகளை, தொலைக்காட்சிப் பெட்டிகளை, நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர ஊர்திகள் முதலியவற்றை வெறி கொண்டு தாக்கியுள்ளனர்.


உயிருக்கு பயந்து கையில் குழந்தைகளுடன் இருட்டில் பெண்கள் ஓடி, பின்பக்கம் தோப்பில் ஒளிந்துள்ளனர். பூட்டிய வீடுகளின் முன்பு நின்று கொண்டு வந்தவர்கள் கூறிய ஆபாச வார்த்தைகள், கொலை வெறித் தாக்குதல்கள் – ஒடுக்கப்பட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
 புத்தாண்டு நாளுக்காக கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி, நாற்காலிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். சற்றொப்ப 15 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியுள்ளன.

 தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தோழர் மா. இராமதாசு ஆகிய நாங்கள் குழுவாகச் சென்று, இன்று (04.01.2017) காலை, ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளில் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட்டோம். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.

பாதிக்கப்பட்ட மக்களிடையே, குறிப்பாக பெண்களிடத்தில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் முதன்மையான பணி!


எனவே, வீடுகளைத் தாக்கிய அனைவர் மீதும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவர்களைக் கைது செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக, அரசு சார்பில் துயர் துடைப்பு நிதி வழங்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் மீது எந்தவித பொய் வழக்கும் போடக்கூடாது. அனைத்து சாதி மக்களையும் இணக்கப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
இன்னணம்,
நா. வைகறை
தஞ்சை மாவட்டச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT