உடனடிச்செய்திகள்

Wednesday, March 31, 2021

மனிதநேயத்திற்கும் இனம்தான் காரணமாக அமைகிறதா? ஐயா பெ. மணியரசன்,



மனிதநேயத்திற்கும் இனம்தான்
 காரணமாக அமைகிறதா?

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்


படைத்துறையைச் சேர்ந்த வல்லாதிக்கக் கலகக் கும்பல் மியான்மரில் வரம்புக்கு உட்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்த – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்து, ஆட்சியாளர்கள் பலரையும் ஆங் சான் சூகி அம்மையாரையும் சிறைப்படுத்தி வைத்துள்ளது. 

இந்த இராணுவ சர்வாதிகார - சனநாயகப் படுகொலையை எதிர்த்து, மியான்மர் மக்கள் வீரஞ்செறிந்த போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அம்மக்களை சுட்டுக் கொல்கிறது மியான்மர் இராணுவ ஆட்சி! கடந்த காரிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 107 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். 

இந்த நிலையில், மியான்மரிலிருந்து அந்நாட்டு மக்களில் ஒரு சாரார் உயிர் பிழைக்க அண்டையில் உள்ள மிசோரம், மணிப்பூர் மாநிலங்களுக்கு ஓடி வருகிறார்கள். இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது, ஆதரவு தரக்கூடாது, திருப்பி விரட்டிவிட வேண்டும் என்று சொல்கிறது இந்திய அரசு! 

இந்திய அரசின் உள்துறை செயலாளர் இவ்வாறு ஒரு கடிதத்தை வடகிழக்கு எல்லையோர மாநிலங்களுக்கு அனுப்பியிருக்கிறார். இந்திய அரசின் இந்த நிலைபாட்டை எதிர்த்தும், இதை மாற்றி மியான்மரிலிருந்து வரும் ஏதிலிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும், மிசோரமில் தங்க வைக்க வேண்டும், அவர்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்கு மிசோரம் முதலமைச்சர் சொரம்தங்கா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். 

மிசோரமுக்கு தனிநாடு விடுதலை வேண்டுமென்று கோரிய – காலஞ்சென்ற லால் டெங்கா நிறுவிய கட்சியான மிசோ தேசிய முன்னணியைச் சேர்ந்தவர் முதலமைச்சர் சொரம்தங்கா. இவர் கட்சி இப்பொழுது பாரதிய சனதாக் கட்சியின் தேசிய சனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறது. ஆனால், மிசோரம் சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மை இருக்கிறது. பா.ச.க. கூட்டணியில் இருந்தாலும், இன உணர்வோடு பேசியிருக்கிறார் சொரம்தங்கா. 

அவர் தலைமையமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மிசோரமின் எல்லையோரங்களில் மியான்மரில் வசித்து வரும் சின் (Chin) சமுதாய மக்கள் உயிர் பிழைக்க எங்கள் மாநிலத்தை நாடி ஓடி வருகிறார்கள். அவர்கள் இன வழியில் மிசோரம் மக்களின் உடன் பிறப்புகள். நீண்ட நெடுங்காலமாக அவர்களோடு நெருக்கமான உறவு வைத்திருக்கிறோம். எங்களிடையே உள்ள இந்த உறவு இந்திய விடுதலைக்கும் முந்தையது. எனவே, அவர்கள் துன்ப துயரங்களைக் கண்டும் காணாமல் நாங்கள் ஒதுங்கிக் கொள்ள முடியாது. இந்திய அரசு இந்த மனிதநேய நெருக்கடிக்கு உதவி செய்யாமல் கண்ணை மூடிக் கொள்ளக் கூடாது” என்று கூறியுள்ளார். இக்கடிதம் கடந்த 18.03.2021 அன்று மோடிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

ஆனால், அதன்பிறகு இந்திய அரசு படைத்துறையினரை அனுப்பி மிசோரம் எல்லையை பாதுகாக்கச் செய்திருக்கிறது. உயிர் பிழைக்க வருகின்ற மியான்மர் மக்களை விரட்டியடிக்க ஆணையிட்டிருக்கிறது. 

இதே மியான்மர் ஏதிலியர் சிக்கல் பக்கத்திலுள்ள இன்னொரு மாநிலமான மணிப்பூருக்கு வந்திருக்கிறது. மணிப்பூர் பா.ச.க. முதலமைச்சர் நாங்தொம்பம் பீரன் சிங், மியான்மரிலிருந்து மக்கள் உயிர் பிழைக்க மணிப்பூர் எல்லைக்குள் நுழைந்தால் அவர்களைத் திருப்பி அனுப்பி விடுங்கள், யாருக்காவது கொடும் காயம் இருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து திருப்பி அனுப்பி விடுங்கள், அவர்களை நம் மாநில எல்லையில் தங்க வைக்காதீர்கள் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். 

பீரன் சிங் மியான்மரிலிருந்து ஓடி வரும் ஏதிலியர் இனத்தைச் சேர்ந்தவர் இல்லையா, அல்லது பா.ச.க.வில் சேர்ந்து விட்டால் ஆரியரல்லாத மற்ற இனங்களை மனிதநேயத்துடன் அணுகக்கூடாது என்ற இலக்கணத்தை அப்படியே கடைபிடிக்கிறாரா என்று தெரியவில்லை!   

இவ்வாறு அவர் 26.03.2021 அன்று தனது மாநில அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருந்தார். ஆனால், மணிப்பூர் மக்களிடையே மியான்மர் ஏதிலியரைத் திருப்பி அனுப்பும் நிலைபாட்டிற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதுபோல் தெரிகிறது. அதனால், மணிப்பூருக்கு உயிர் பிழைக்க ஓடிவரும் மியான்மர் மக்களை திருப்பி அனுப்ப மாட்டோம், பாதுகாப்பாக தங்க வைப்போம் என்று 29.03.2021 அன்று அம்மாநில உள்துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, மிசோரம் வரும் மியான்மர் ஏதிலியருக்கு100 நாள் திட்டத்தில் வேலையும் ஊதியமும் வழங்குவோம் என்று அம்மாநில முதல்வர் அண்மையில் அறிவித்துள்ளார். 

உயிர்பிழைக்க தமிழ்நாட்டிற்கு ஓடிவந்த ஈழத்தமிழர்கள் குறித்து சொரம்தங்கா உணர்வுடன் தமிழ்நாட்டில் எல்லோரும் நடந்து கொண்டார்களா என்பதை ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும்! 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 


Tuesday, March 30, 2021

“இந்தியாவின் அதிகாரப் போட்டிக்கு இலங்கை ஒத்துழைக்காது” கோத்தபய இராசபட்சே அறிவிப்பு! - ஐயா பெ. மணியரசன்,



“இந்தியாவின் அதிகாரப் போட்டிக்கு இலங்கை
 ஒத்துழைக்காது” கோத்தபய இராசபட்சே அறிவிப்பு!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்


“இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் ஆதிக்கத்திற்காக வல்லரசுகள் போட்டியிடு கின்றன. இலங்கையில் அதிகாரப் பகிர்வு செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து, பிரிவினை சக்திகளுக்கு ஊக்கமூட்டுகிறார்கள்” என்று இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபய இராசபட்சே கருத்துகள் வெளியிட்டுள்ளார். 

“ஜெனீவாவில் எங்களுக்கு விடப்பட்ட சவாலை நாங்கள் சந்தித்தோம். அழுத்தங்களுக்கு நாங்கள் அச்சப்பட மாட்டோம். நாங்கள் சுதந்திர நாடு. இந்தியப் பெருங்கடல் போட்டியாளர்களுக்கு நாங்கள் பலியாக மாட்டோம்” என்றும் கோத்தபய கூறுகிறார். 

இந்தியப் பெருங்கடல் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள நாடுகள் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளே! “ஜெனீவா சவால்” என்று கோத்தபய கூறுவது, மறைமுகமாக இந்தியாவைத்தான். ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வின் மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த “போர்க் குற்றங்கள்” பற்றிய சாட்சியங்களைத் திரட்ட வேண்டுமென்று 23.03.2021 அன்று வாக்கெடுப்பு நடந்தது. அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இந்தியா, இலங்கை ஒற்றுமையையும், அதிகாரப் பகிர்வையும் சமமாக நாங்கள் கோருகிறோம் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அறிக்கை கொடுத்தது. மேலும் அந்த அறிக்கையில் இலங்கையின் 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டுமென்றும், மாநிலங்களுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்றும் இந்தியா கூறியிருந்தது. 

இக்கருத்துகளை மனத்தில் வைத்துத்தான், கோத்தபய இராசபட்சே இந்தியாவின் பெயரைச் சொல்லாமல் இந்தியாவை எச்சரிக்கிறார். 

இலங்கை அரசு, 1960களிலிருந்தே இந்தியாவுக்கு எதிராக சீனாவையும், பாக்கித்தானையும் ஆதரித்து வந்த வரலாறு அனைவருக்கும் தெரியும். இந்திய - சீன போரில் இலங்கை சீனாவுக்கு ஆதரவாகத்தான் இருந்தது. 1971இல் நடந்த வங்காளதேசப் புரட்சியை இந்தியா ஆதரித்தது. மேற்குப் பாக்கித்தான் படை விமானங்கள் கிழக்குப் பாக்கித்தான் (வங்காளதேசம்) எல்லைக்குள் சென்று மக்களைத் தாக்குவதற்கு இந்தியாவின் வழியாக வானத்தில் பறக்கக் கூடாதென்று தடை விதித்தது இந்திய அரசு. அப்போது, அவ்விமானங்களை இலங்கை வழியாக பறந்து செல்லவும், இலங்கையில் எரிபொருள் நிரப்பிக் கொள்ளவும் இலங்கை அரசு அனுமதித்தது. 

இப்பொழுதும் இந்தியாவை இலங்கை அரசு முழுமையாக ஆதரிக்காமல் சீனாவுடன் கூடுதல் நெருக்கம் கொண்டுள்ளது. ஆனாலும், இந்திய அரசு ஈழத்தமிழின எதிர்ப்பை முதன்மைப்படுத்தி சிங்கள அரசின் இனப்படுகொலைகளுக்குத் துணை நின்றது. அப்படுகொலையில் பங்கெடுத்தும் கொண்டது. 

அந்த இனப்படுகொலைக் குற்றங்கள் பற்றி பன்னாட்டு விசாரணை வராமல் தடுத்திட, இந்தியா தனது தூதரக உறவின் மூலம் பல நாடுகளை அணுகி, அழுத்தம் கொடுத்து வருகிறது. 

இப்பொழுது கோத்தபய இராசபட்சே இந்தியாவுக்கு எதிராகத் துல்லியமாகத் தாக்குதல் தொடுத்து கருத்துகளை வெளியிட்டுள்ளார். இப்பொழுதும்கூட, இந்தியா இலங்கையுடன் கொண்டுள்ள நல்லுறவைக் கைவிட்டுவிடும் என்று எதிர்பார்த்திட இயலாது! இந்தியாவின் வரலாறு அப்படி! 

எல்லாவற்றுக்கும் மேலாக, தண்ணீரை விடக் குருதி அழுத்தமானது என்பார்கள். இந்திய ஆட்சியாளர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே ஆரியக் குருதி உறவு தொடர்கிறது என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இதுவரை தமிழர்களா, சிங்களர்களா, எந்தப் பக்கம் நிற்பது என்ற கேள்வி வந்த போதெல்லாம் இந்தியா சிங்களர் பக்கமே நின்றிருக்கிறது. 

எனவே, ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் இந்தியாவின் எதிர்வினை என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

Monday, March 29, 2021

சென்னைப் பல்கலையில் சைவ சித்தாந்த முதுகலைப் படிப்பு தொடர வேண்டும்! - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!



சென்னைப் பல்கலையில் சைவ சித்தாந்த
 முதுகலைப் படிப்பு தொடர வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் அறிக்கை!

சென்னைப் பல்கலைக்கழகம் சைவ சித்தாந்தம், சைவ ஆகமங்கள் மற்றும் பன்னிரு திருமுறை செவ்விலக்கியங்கள் ஆகியவற்றைக் கொண்ட முதுகலை மெய்யியல் படிப்பை நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. உரிய எண்ணிக்கையில் மாணவர்கள் சேராததே காரணம் என்று பல்கலைக் கழகம் கூறியுள்ளது மிகவும் துயரமளிக்கிறது! 

சைவ சித்தாந்த மெய்யியல் மிக நுட்பமான அறிவாற்றலையும், தருக்கத்தையும் கொண்டது. மனித நேயம் – மனித சமத்துவம் கொண்டது. சைவ சித்தாந்தத்தின் உயிர் சிவநெறியும், தமிழும் ஆகும். அப்படிப்பை முதுகலையில் கற்க மாணவர்கள் வரவில்லை என்பது, அதிர்ச்சி அளிக்கிறது. 

சைவ சித்தாந்த மெய்யியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்குத் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் சைவ சித்தாந்த ஆய்வு இருக்கை உருவாக்க வேண்டும். மாணவர்களை இக்கல்விக்கு ஈர்ப்பதில் பல்கலைக்கழகம் கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். அப்படிப்பை மூடிவிடுவது எளிது; சிக்கல்களுக்கிடையே அப்படிப்பை தொடர்வதுதான் ஆளுமைத்திறன்! 

சென்னைப் பல்கலைக்கழகம் அந்த ஆளுமைத்திறனைப் பயன்படுத்த வேண்டும். முதுகலை மெய்யியலில் சைவ சித்தாந்த படிப்பைத் தொடர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டு மாணவர்கள் மெய்யியல் கல்வியின் மேன்மையை உணர வேண்டும். அதிலும் சைவ சித்தாந்தம் என்ற மிக நுட்பமான தமிழ் மொழி – தமிழ் இனம் சார்ந்த ஆற்றல்மிகு மெய்யியலைக் கற்க ஆவல் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அவ்வழியில் ஊக்குவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 


Thursday, March 25, 2021

“ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம் கற்பிக்கும் பாடம்!” - ஐயா பெ. மணியரசன் உரை!

“ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்

 கற்பிக்கும் பாடம்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, March 24, 2021

“தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தேர்தல் நிலைப்பாடு என்ன?” - 'ழகரம்' இணையத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

“தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தேர்தல் நிலைப்பாடு என்ன?


'ழகரம்' இணையத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, March 20, 2021

ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்!” - ஐயா பெ.மணியரசன் கண்டனம்!



ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் 

இந்தியா “இலங்கையை ஆதரிக்குமாம்!”


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ.மணியரசன் கண்டனம்!

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து ஒரு தீர்மானம் 22.3.2021 அன்று விவாதத்திற்கு வரப்போகிறது. இந்தத் தீர்மானத்தைப் பிரிட்டன், கனடா, செர்மனி, வடக்கு மாசிடோனியா, மாலவி, மான்டினிக்ரோ ஆகிய ஆறுநாடுகள் முன் மொழிந்துள்ளன.

47 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 46-வது கூட்டத்தில் வரவுள்ள இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான இத்தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கப்போவதில்லை, இலங்கை அரசைத்தான் இந்தியா ஆதரிக்கப்போகிறது என்று உறுதி கூறிவிட்டதாக இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே கூறியுள்ளார். (The Hindu 19.3.2021) 

ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் தலைமை ஆணையர் கடந்த பிப்ரவரி மாதம் மேற்படி மன்றத்தின் உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் சுற்றறிகை அனுப்பியிருந்தார்.

அந்த சுற்றறிக்கையில் அவர், “இலங்கை அரசு அந்நாட்டு மக்களுக்குப் பொது அரசாகச் செயல்பட வில்லை. ஓர் இனச் சார்பாகச் செயல்படுகிறது. ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அது செயல்படுத்தவே இல்லை. இனியும் அது செயல்படுத்தும் என்று நம்பிட வாய்பில்லை. அங்கு நீதித்துறையின் தற்சார்பு சீரழிக்கப்பட்டுவிட்டது. செய்தி ஊடகங்களுக்கு உரிமை இல்லை. மனித உரிமை அமைப்புகள் அங்கு நடுநிலையுடன் செயல்பட முடியாது. எனவே இலங்கை அரசு நடத்திய மனித குலத்திற்கெதிரான குற்றங்கள், படுகொலைகள், காணாமல் போனவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவர்க்குமான பொறுப்புக் கூறல் (Accountability) போன்றவற்றை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

“இலங்கையின் மேற்படி குற்றங்களுக்காக அந்நாட்டு ஆட்சியாளர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோரை, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும். இதற்கான முன்னெடுப்பை ஐ.நா.பொதுப் பேரவையும், பாதுகாப்புக் குழுவும் எடுக்க வேண்டும் என்று, ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்பட உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் தலைமை ஆணையரின் இவ்வேண்டுகோளை எந்த நாடும் சட்டை செய்யவில்லை. பிரிட்டன் முதலிய ஆறுநாடுகள் முன் மொழிந்துள்ள நீர்த்துப் போன தீர்மானத்தைக் கூட இந்திய அரசு ஆதரிக்காது என்று இலங்கையின் வெளியுறவுச் செயலர் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

இந்தியாவில் தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் 9 கோடித் தமிழர்கள் வாழ்கிறோம். நம்முடன் குருதி உறவு கொண்ட  ஈழத்தமிழர்கள் இலங்கையில் சிங்களப் பேரின வாத அரசால் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

இவ்வாறன மனித குலத்திற்கு எதிரான இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு இழைத்த மனிதப் படுகொலைகளை, காணாமல் போனவர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட படுகொலைகளை, போர்க் குற்றங்களை – மனித உரிமைப் பறிப்புகளை உலக நாடுகள் பலவும் அறியும்.  இக்குற்றங்களை விசாரிக்கப் பன்னாட்டு மனித உரிமை வல்லுநர்களையும் இணைத்துக் கொண்டு இலங்கை அரசு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றம் 2015இல் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. அதன் மீது இலங்கை அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்நிலையில் மீண்டும் ஒரு விசாரணை நடத்தக் கோரி பிரிட்டன் முன் மொழிந்துள்ள அரை குறைத் தீர்மானத்தைக் கூட இந்தியா ஆதரிக்காது என்று இலங்கை அதிகாரி கூறிய பின்னும் இன்று வரை இந்திய அரசு அது பற்றி வாய் திறக்காதது ஏன்?
இலங்கை அரசின் தமிழின அழிப்புத் திட்டங்களுக்கு இந்தியாவும் துணை போவது ஏன்?

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இழைக்க உள்ள இந்த அநீதி குறித்து ஏடுகளில் செய்திகள் வந்த பின்னும் தமிழ்நாட்டு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மற்றுமுள்ள கட்சிகள் இந்திய அரசின் சிங்கள வெறி ஆதரவுச் செயல்பாட்டைக் கண்டிக்காமல்  இருப்பது ஏன்? இந்திய அரசின்  இந்த நிலைபாட்டை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.  மனித உரிமை நீதியின் பக்கம் இந்திய அரசைத் திருப்ப அனைத்துக் கட்சிகளும் உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.  

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 


Thursday, March 18, 2021

தேர்தல் புறக்கணிப்பு சரியா? தவறா? - ஐயா பெ. மணியரசன், சுப.வீ.கட்டுரைக்கு மறுவினை கட்டுரையின் காணொலி வடிவம்!


தேர்தல் புறக்கணிப்பு சரியா? தவறா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், சுப.வீ.கட்டுரைக்கு மறுவினை கட்டுரையின் காணொலி வடிவம்!

width="640">

கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, March 17, 2021

"தமிழ்நாடு அசைந்தால் தான் தமிழினத்திற்கு விடிவு!" - சென்னை இசை வெளியீட்டு விழாவில் ஐயா பெ. மணியரசன் பேச்சு!


"தமிழ்நாடு அசைந்தால் தான்

 தமிழினத்திற்கு விடிவு!"


சென்னை இசை வெளியீட்டு விழாவில் தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் பேச்சு!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, March 15, 2021

தேர்தல் புறக்கணிப்பு சரியா? தவறா? - சுப.வீ. கட்டுரைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் மறுவினை!



தேர்தல் புறக்கணிப்பு சரியா? தவறா?

சுப.வீ. கட்டுரைக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் மறுவினை!

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் 12.3.2021 அன்று இணையத்தளத்தில் ஒரு விவாதக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதன் தலைப்பு “நீங்கள் எந்தப் பக்கம்? தேர்தல் வாக்களிப்பா? புறக்கணிப்பா?” என்பதாகும்.

“தமிழ்த்தேசியப் பேரியக்கமும் வேறு சில இயக்கங்களும் கடைபிடிக்கும் தேர்தல் புறக்கணிப்பு தவறு, அப்புறக்கணிப்பால் மோசமான கட்சிகள் பயன் அடைவதைத் தவிர வேறு ஒரு பயனையும் பெற இயலாது” என்று கூறி சுப.வீ. தமது கட்டுரையை முடித்துள்ளார். இது பற்றி என்னிடம் முதல் நாள் (11.3.2021) தொலைபேசியில் சில வினாக்கள் கேட்டார்.

இந்தக் கட்டுரையின் கடைசிப் பகுதியில், உங்கள் “லட்சியம் எது என்று கேட்டேன். அதற்கு இறையாண்மை கொண்ட தமிழ்த் தேசியம் என்றார்” என்று சுப.வீ. குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு திருத்தம்; “எங்கள் இலட்சியம் இறையாண்மை கொண்ட தமிழ்த் தேசம்” என்றேன். தமிழ்த் தேசியம் என்று கூறவில்லை. இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. தமிழ்த்தேசியம் என்பது கருத்தியல் வடிவம். தமிழ்த்தேசம் என்பது தாயகம் என்ற பருண்மை வடிவம்.

தேர்தலைப் புறக்கணித்த பின், உங்கள் குறிக்கோளை அடைய மாற்று வழி என்ன வைத்துள்ளீர்கள் என்று என்னிடம் கேட்டார் சுப.வீ. அதற்கு “இலட்சியத்தை நோக்கிய கட்டமைக்கப்பட்ட வெகுமக்கள் போராட்டங்கள்” என்றேன். இது பற்றி சிறிது சொல்ல வேண்டியிருக்கிறது.

இக்காலத்தில், தன்னெழுச்சியாக கட்சி சார்பற்று நடந்த வெகுமக்கள் எழுச்சியும் போராட்டமும் கலைஞர் கருணாநிதி, செயலலிதா போன்ற வலிமையான ஆளுமைகளின்  ஆட்சிகளால் மீட்க முடியாத சல்லிக் கட்டு உரிமையை மீட்டது; ஸ்டெர்லைட்  ஆலையை மூடியது, ஐட்ரோ கார்பன் எடுப்பதைத் தடுத்தது; காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக ஆட்சியாளர்களை அறிவிக்க வைத்தது. மீத்தேன் எடுப்பதைத் தடைசெய்து  அன்றைய முதல்வர் செயலலிதா ஆணை பிறப்பித்தது கூட நம்மாழ்வார் தொடங்கி வைத்து விரிவடைந்த மக்கள் திரள் போராட்டங்களால்தான்!

வெகுமக்கள் எழுச்சி சாதிக்கும் என்பதற்கு இவை சில எடுத்துக்காட்டுகள். சரியான அமைப்பினால் வழிகாட்டப்பட்டு, கட்டமைக்கப்பட்ட வெகு மக்கள் எழுச்சியும் போராட்டமும். தமிழ்த்தேச இறையாண்மையை மீட்கும். தேர்தல் வழிமுறை மூலமோ, தேர்தல் கட்சிகள் மூலமோ தமிழ்த்தேச இறையாண்மையை மீட்க முடியாது என்ற எனது நிலைபாட்டைச் சுருக்கமாகத் தொலைபேசியில் குறிப்பிட்டேன், அதன் சுருக்கத்தை சுப.வீ வெளியிட்டுள்ளார். அதில் குறையொன்றுமில்லை.

ஆனால் தமிழ்த்தேச இறையாண்மை மீட்பு இலட்சியத்தை சுப.வீ ஏற்கிறாரா, மறுக்கிறாரா? என்பது குறித்து அவர் தமது திறனாய்வுக் கட்டுரையில் குறிப்பிடாதது ஏமாற்றமளிக்கிறது.

சுப.வீயின் தலைவர்களான அண்ணாவும் கலைஞரும் முழங்கிய “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” இலட்சியம் பற்றி நான் கேட்கவில்லை. கலைஞர் கருணாநிதி 1970-களின் தொடக்கத்தில் “மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி” என்று முழங்கி, மாநாடெல்லாம் போட்டாரே அந்த முழக்கத்திற்காவது மறுஉயிர் கொடுத்து, அதை முதன்மைப்படுத்தி இந்தத் தேர்தலை(2021) சுப.வீயின் தலைவர் தளபதி ஸ்டாலின் சந்திப்பார் என்று கூட சுப.வீயால் சொல்ல முடியவில்லை.

பிரிவினைத் தடைச் சட்டம் வந்த பின் அல்ல, வரப்போகிறது என்று தெரிந்த உடனேயே திராவிட நாட்டு விடுதலைக் கோரிக்கையை “ஒத்திவைத்தது” தி.மு.க.(1964) “தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதே தவிர, அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று பின்னர் அண்ணா சொன்னார். 1967-இல் முதலமைச்சர் ஆன பின்னும் “தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டது; ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்றார். “காஞ்சி” இதழில் எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது; முதலைமைச்சர் என்ற பட்டம்; என் தலையில் முள் கிரீடம் போல் இருக்கிறது, நான் சூழ்நிலையின் கைதி என்று எழுதினார். 

கலைஞரின் தலைமையிலான தி.மு.க. 1971-இல் இந்திரா காங்கிரசுடன் மக்களவை – தமிழ்நாடு சட்டப்பேரவை இரண்டிற்குமான தேர்தலில் கூட்டணி வைத்துக் கொண்டது. 1977 மக்களவைத் தேர்தலில் மொரார்சி தேசாயின் சனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருந்தது தி.மு.க. மொரார்சி தலைமை அமைச்சரானார். அடுத்து 1980-இல் இந்திரா காந்தியின் காங்கிரசுடன் மக்களவை மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி சேர்ந்தது. 

1996-97-இல் தேவகவுடா, ஐ.கே.குஜரால் ஆகியோரை தலைமையமைச்சராக கொண்ட கூட்டணியில் தி.மு.க. உறுப்பு வகித்து அமைச்சர் பதவிகளை பெற்றது. வாஜ்பாயி (1999-2004), மன்மோகன்சிங் (2004-2014) ஆட்சிகளில் நடுவண் அரசின் அமைச்சர்களாகத் தி.மு.க.வினர் வீற்றிருந்தனர்.

இக்காலத்தில் மாநிலத் தன்னாட்சிக் கோரிக்கைகளில் எத்தனை உரிமைகளை மீட்டார்கள்? மாநில அதிகாரப்பட்டியலில் இருந்த கல்வியை 1976-இல் பொதுப்பட்டியலுக்கு மாற்றினார் இந்திரா காந்தி  இதுபோன்ற மாநில உரிமைகள் பல நேர்முகமாகவும் மறைமுகமாகவும் பறிக்கப்பட்டன. இவ்வாறு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை கூட்டணி அரசில் இருந்த தி.மு.க.வால் தடுக்க முடிந்ததா? பறித்தவற்றில் ஒன்றிரண்டை மீட்க முடிந்ததா? ஒரே ஒரு உரிமையைப் புதிதாகக் கலைஞர் மாநில அரசுக்குப் பெற்றார். இந்திய விடுதலை நாளில், மாநிலங்களில் ஆளுநர்கள் இந்திய அரசுக் கொடியை ஏற்றி வந்தனர். அதை மாநில முதலமைச்சரே ஏற்றும் “உரிமையை” “வாதாடிப்” பெற்றார். மாநில சுயாட்சியில் அவர் மீட்ட புதிய உரிமை இது! “சற்சூத்திரராக” தன்னை தில்லி எசமானர்களிடம் காட்டிக் கொண்டார்.

இந்தப் பின்னணியில் தான் மு.க.ஸ்டாலின் தி.மு.கவின் தலைமையை ஏற்றபின் இதுவரை “மாநிலத்தில் தன்னாட்சி மத்தியில் கூட்டாட்சி” என்ற முழக்கத்தை முதன்மைப்படுத்தவில்லை. இந்தத் தேர்தலிலும் தேர்தல் அறிக்கையிலும் அந்த முழக்கத்தை மு.க.ஸ்டாலின் முதன்மைப் படுத்த வில்லை. தலைவரை மீறி சுப.வீயால் தமிழினத்திற்கான – தமிழ்த்தேசத்திற்கான இறையாண்மை மீட்பு போன்ற இலட்சித்தை அல்ல – மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்ற கோரிக்கையைக் கூட முதன்மைப்படுத்த முடியாது.

======================================

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை

======================================

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் 6.4.2021 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அறிக்கையை 13.3.2021 அன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் முகப்புரைப் பகுதியில் “அ.தி.மு.க. அரசு நம் அரசியல் சட்டத்தில் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் சாரமான மாநில உரிமைகள் அனைத்தையும் தாரைவார்த்து விட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது இந்த சொற்றொடரின் வழியாக தி.மு.க. இரண்டு வகையில் தில்லிக்கான தனது எசமான விசுவாசத்தைக் காட்டிக்கொள்கிறது.

ஒன்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படாத “கூட்டாட்சி” என்ற சொல்லையும் கருத்தையும் அச்சட்டத்தின் மீது ஏற்றிப் புகழ்கிறது தி.மு.க.! இந்தியாவை “ஒன்றியம்” என்று அரசமைப்புச் சட்டம் கூறிக் கொண்டாலும் அதில் ஒற்றையாட்சித் தன்மையே மிகுந்துள்ளது, என்பதை தி.மு.க.வின் சிந்தனையாளர்களில் ஒருவரான காலஞ்சென்ற கு.ச.ஆனந்தன் அவர்கள் தமது “மாநில சுயாட்சி” நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு, கொஞ்ச நஞ்சம் இருந்த மாநில உரிமைகளையும் காங்கிரசு மற்றும் பா.ச.க. ஆட்சிகள் பறித்துவிட்டன என்பதை மூடி மறைத்து, அ.இ.அ.தி.மு.க அரசு தாரைவார்த்து விட்டது என்கிறது. அவ்வாறு மாநில உரிமைகளைப் பறித்த போதும் அதற்குப் பின்னும் காங்கிரசு, பா.ச.க. கூட்டணியில் தி.மு.க. இருந்தது. மாநில உரிமைகளைப் பறிகொடுப்பதில் முதன்மையான கட்சி அ.இ.அ.தி.மு.க-வா, தி.மு.க-வா என்று வேண்டுமானால் பட்டிமன்றம் நடத்தலாம்! மற்றபடி தில்லிக்கு கங்காணி வேலை பார்ப்பதில் இவ்விரு கழகங்களிடையே அடிப்படை வேறுபாடு எதுவுமில்லை.

===============================================

மாநிலத் தன்னாட்சி

===============================================

அடுத்து, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் “மாநில சுயாட்சி” என்ற தலைப்பு வருகிறது.

“மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெற்றிடும் வண்ணம் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழு ஈடுபாட்டோடு மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும்”, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் எதிர்எதிரான இரண்டு முகாம்களில் இருந்து கொள்ள வேண்டும் என்பது தி.மு.க.வின் நிரந்தர உத்தி! இந்தத் தந்திரத்தில் தமிழர்களின் பகைமுகாமில் விசுவாசமாக இருந்து கொண்டு, தமிழர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பது போல் பாசங்கு செய்வது தி.மு.க.வின் உத்தி! அதற்கான எடுத்தக்காட்டுகளை அடுக்கினால் கட்டுரை நீளும்.

இப்பொழுது கூட பா.ச.க. ஆட்சியின் இந்துத்துவா அதாவது ஆரியத்துவா பாசிசத்தை அடையாளப்படுத்தாமல் – மக்களின் முதல் எதிரி பா.ச.க. என்பதைச் சொல்லாமல் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரசு – தி.மு.க. கூட்டணி ஆட்சியில்தான் மாநில அரசின் வணிக வரிவசூல் உரிமையைப் பறித்து சரக்கு சேவை வரி நடுவண் அரசு வசூலிக்கும் புதிய சட்டத்தை அணியப்படுத்தினார்கள். அவர்களின் கூட்டணி ஆட்சிதான் நீட் தேர்வுத் திட்டத்தை உருவாக்கியது. இப்போது பா.ச.க ஆட்சி மாநிலக் காவல்துறையின் அதிகாரத்தைப் பறித்து நடுவண் அரசின் அதிகாரத்தில் சேர்த்துக் கொண்ட தேசியபுலானய்வு முகமைச் சட்டத்தை (NIA) தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தார்கள்!

இந்திய அரசின் மாநில உரிமைப் பறிப்புகளுக்குத் துணை போகும் கட்சி அ.தி.மு.க. என்பதில் எந்த ஐயமும் எங்களுக்கு கிடையாது. செல்லாத நாணயத்தின் இரண்டு பக்கங்களே தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்! 

“பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் இடம் பெறச் செய்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்”  என்று தி.மு.க. தேர்தல் அறிக்கை கூறுகிறது.

அடுத்து புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாகத் தமிழ்நாட்டில் தனியே கல்விக் கொள்கைச் சட்டம் இயற்றப்படும் என்று அவ்வறிக்கை கூறுகிறது.

இவைப் போன்ற இன்னுஞ் சில உரிமை மீட்புக் கோரிக்கைகளை – மதச்சார்பின்மைக் கோரிக்கைகளை பொது வேலைத் திட்டமாக வைத்தல்லவா தி.மு.க. தனது தலைமையில் தேர்தல் கூட்டணி உருவாக்கி இருக்க வேண்டும். ஏன் அப்படி கூட்டணி அமைக்கவில்லை? தேர்தல் அறிக்கையில் ஊர் மெச்ச ஒப்புக்குக் கோரிக்கைகள் வைக்கிறது தி.மு.க!

பா.ச.க.வின் “இந்துத்துவா பாசிசத்தை” எதிர்க்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும் – இதற்காக தி.மு.க. கூட்டணியை இத்தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்று வேறு சிலர் கருத்துகள் கூறுகின்றனர்.

பா.ச.க. பாசிச எதிர்ப்புக் கூட்டணி அமைத்திருப்பதாகத் தி.மு.க.வும் காங்கிரசும் கூட்டறிக்கையோ, கூட்டுப் பிரகடனமோ வெளியிட்டுள்ளனவா? இல்லை! பா.ச.க. அரசு மாநில உரிமைகளைப் பறிப்பதைப் பற்றி பெயர் சுட்டிக் கண்டனம் செய்யவில்லை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பா.ச.க.வை வீழ்த்த வேண்டிய தேவையை தி.மு.க. தேர்தல் அறிக்கை சுட்டிக் காட்டவில்லை.

இனிமேல் பா.ச.க.வுடன் கூட்டணி சேரமாட்டோம் என்ற அறிவிப்பும் தி.மு.க. தரப்பிலிருந்து இல்லை!

கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் கவனத்தைப் போல் கங்காணி அதிகாரத்தைக்  கைப்பற்றிக் கொள்ளும் தன்னல நோக்கமே தி.மு.க.வின் தேர்தல் உத்தியில் பளிச்சிடுகிறது.

================================================

சுப.வீ.யாவது சொன்னாரா?

================================================

பா.ச.க.வின் இந்துத்துவா பாசிசத்தை – வீழ்த்திட, தி.மு.க.வை ஆதரிப்பது தேவை அல்லவா என்று சுப.வீ.யாவது வெளிப்படையாக மேற்படிக் கட்டுரையில் சொன்னாரா? இல்லை!

தி.மு.க. எவ்வழி, அவ்வழியே சுப.வீ. வழி! பா.ச.க. பாசிசம் என்ற பகைமை ஆற்றலை பளிச்சென்று வெளிப்படுத்தாமல் அதற்கு அஞ்சி பதுங்கிக் கொள்வது தி.மு.க.வின் உத்தி! அதனால் அது தனது தேர்தல் அறிக்கையில் கூட பா.ச.கவின் ஆரியத்துவா பாசிசத்தை வெளிப்படுத்தவில்லை! இக்கட்டுரையில் அதே பாணிதான் சுப.வீ பாணி!

“சோதனைக்காக, தோழர்கள் மணியரசன், தியாகு போன்ற நபர்களிடம் பா.ச.க அல்லது அ.தி.மு.க பற்றி ஒரு வினா எழுப்புங்கள், உடனே அவர்கள் காங்கிரசு, தி.மு.க. இரண்டையும் கொண்டு வந்து சேர்த்துதான் விடை சொல்வார்கள்! கேட்ட கேள்விக்கு நேரடியாக விடை சொல்லமாட்டார்கள்” என்று சுப.வீ. கூறுகிறார்.

சுப.வீயின் மனச் சான்றுக்குத் தெரிகிறது, அ.தி.மு.கவுக்குள்ள அதே குறைகள் தி.மு.க.வுக்கும் இருக்கிறது. எனவே, “குறைப்பற்றி பேசி, சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை. அதனால் அதிகக் குறையுள்ள கட்சி, குறைந்த குறையுள்ள கட்சி என்று பேசுகிறார்.

“உள்ளதில் நல்லது என்னும் விதிப்படி, யார் ஓரளவு ஏற்புடையவர்களோ அவர்களுக்கே நாம் வாக்களிப்போம். யாருக்கும் வாக்களிக்கவில்லை என்றால் அந்தச் சுமாரானவருக்கு வாக்குகள் குறையும். அதன் மூலம் அவரை விட மோசமானவருக்குத் தானே பயன் கிடைக்கும்” என்று கேட்கிறார் சுப.வீ!

அவரின் மதிப்பீட்டில், தி.மு.க.சுமாரான கட்சிதான், குறைகள் உள்ள கட்சிதான்! சொக்கத் தங்கம் அன்று! திராவிடத் தமிழர் உரிமை மீட்புப் பாசறை அன்று!

அதெல்லாம் போகட்டும், இன்றைய பா.ச.க. பாசிசத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்தி அதை முறியடிக்க வாரீர் என்று வாக்காளர்களைத் தி.மு.க.வும் அழைக்கவில்லை; சுப.வீயும் இக்கட்டுரையில் அழைக்கவில்லை!

இந்திய ஏகாதிபத்தியக் கட்சிகளாகவும், தமிழினத்தின், தமிழ் மொழியின், உரிமைப் பறிப்புக் கட்சிகளாகவும் செயல்படும் காங்கிரசு மற்றும் பா.ச.கவுடன் பதவி, பணம், ஊழல் ஒய்யார வாழ்வு முதலிய தன்னல நோக்கங்களுக்காக் கூட்டணி சேர்ந்தும் சேராமலும் ஒத்துழைத்து இன இரண்டகம் செய்யும் கட்சிகள் தி.மு.க.வும் அ.தி.மு.கவும் என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கதின் வரையறுப்பு.

இவை ஒரு புறமிருக்க இப்போது கூட மோகன்பகவத் – மோடி ஆட்சியின் ஆரியத்துவா பாசிசத்தை அம்பலப்படுத்தி, அதை எதிர்த்திட வறையறுக்கப்பட்ட வேலைத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு அழைப்பு விடாத கட்சி தி.மு.க! 

=========================================

தேர்தல் பற்றிய வரையறுப்பு

=========================================

அடுத்து மிக முகாமையான ஒரு வினாவை சுப.வீ எழுப்பியுள்ளார். 1980களின் இறுதிப் பகுதியில் நாங்கள் தேர்தலில் பங்கெடுக்கும் தேவை பற்றி – சுப.வீயிடம் தருக்கம் செய்தததையும் அதற்கு மறுப்புத் தெரிவித்து அவர் தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தியதையும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சிக்கலில் அவர் சொல்லியிருப்பது உண்மை! நாங்கள் பிறவி மேதைகள் அல்லர். முயன்று தவறிக் கற்றுக் கொள்ளும் விடாமுயற்சியாளர்கள். அதில் முன்னேறிச் செல்வோம்! இந்த முயற்சிப் போக்கில் எங்களிடம் எந்தத் தன்னலமும் இல்லை. மக்கள் நலன் – இன நலன் மட்டுமே எங்களுக்குத் தலைமையானது! 

அப்பொழுது நாங்கள் பொதுவுடைமைக் கொள்கையை முதன்மைப் படுத்தி, அதன் வழியில் புரட்சிகரப் பாதையில் செல்லத் தீர்மானித்து தனி அமைப்பை உருவாக்கினோம்.

இந்தியாவின் முதன்மை முரண்பாடு இன முரண்பாடு; ஆரிய-இந்தி இனம் மற்ற இனங்களை ஒடுக்குகின்றது. ஆரியம் தனது முதல் பகையாகத் தமிழினத்தைக் கருதுகிறது. இந்த ஒடுக்கு முறையிலிருந்து விடுபடத் தமிழ்த் தேசம் இறையாண்மை பெற வேண்டும்; இந்தியாவில் ஒடுக்கப்பட்டுள்ள மற்ற இனங்களுக்கும் இறையாண்மை வேண்டும் என்பதே வளர்ச்சி அடைந்த எங்களின் புதிய முடிவு!

இந்த இலட்சியத்திற்கு இரண்டகம் செய்யாமல் எங்களால் இயன்ற வகைகளில் செயல்பட்டு வருகிறோம். பதவி,பணம்,விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சியர்களின் பாசறையாகத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தை வளர்த்து வருகிறோம். இவ்வாறான சிந்தனை வளர்ச்சிப் போக்கில், ஆதிக்க இனம் நடத்தும் தேர்தல் பற்றி புதிய முடிவுகளுக்கு வந்தோம்.

இந்திய அரசு ஆரிய – இந்தி இன மேலாதிக்க அரசு. இதன் தலைமை அடுக்குகள் பிராமணர்கள் – ஆரிய வைசிய மார்வாரி – குசராத்தி மற்றும் வடநாட்டுப் பெருமுதலாளிகள்! இதன் வெகு மக்கள் ஆதரவு ஆற்றல்கள் இந்தி பேசும் இனத்தவர்கள்! இவர்கள் மிகப் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள்.

இந்தியா என்பது ஒரு தேசமன்று; பல தேசிய இனங்களின் – பல தேசங்களின் பிணைப்பு! பிரித்தானியப் பீரங்கிகளின் வல்லுறவுக்குப் பிறந்தது இத்தியா! இந்தியாவை உருவாக்கிய உண்மையான தந்தைமார் இராப்ர்ட் கிளைவு போன்றோரே!

இப்படிப்பட்ட பீரங்கிப் பிணைப்பில் தமிழர்கள் செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்டு விட்டார்கள். இன்றும் பிரிட்டனை விட, பிரான்சை விட அதிக மக்கள் தொகை கொண்டது தமிழ்நாட்டின் தமிழ்த் தேசிய இனம்!

இந்திய நாடாளுமன்றம் என்பது சனநாயகத் திரைச் சீலையால் மூடப்பட்ட இன ஒடுக்கு முறையின் ஒய்யாரமேடை. ஓர் இன எதேச்சாதிகாரம் கொண்டது. மக்களவையில் மொத்த உறுப்பினர்கள் 543 பேர்! தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் 39 பேர். புதுவையைச் சேர்த்தால் 40 பேர்! ஆனால் இந்திக்காரர்கள் எண்ணிக்கை சற்றொப்ப 250 பேர்! அவர்களுக்குப் பத்து மாநிலங்கள் இருக்கின்றன.

இந்திக்காரர்களுக்கு நடுவண் ஆட்சியும், மாநில ஆட்சியும் ஒன்றுதான். செயற்கையாக சிறுபான்மையாக்கப்பட்ட தமிழர்களைப் போன்ற தேசிய இனங்களுக்கு இப்போதுள்ள இந்திய ஆட்சியானது ஆங்கிலேயக் காலனி ஆட்சியின் மறுவடிவம்தான்!

அதில் வைஸ்ராய் என்பவர்க்கும் இலண்டன் நாடாளுமன்றத்திற்கும் ஏகபோக அதிகாரம். அவர்களுக்குக் கட்டுப்பட்டவைதான் அப்போதிருந்த மாநில ஆட்சிகள்! இப்போது தலைமை அமைச்சர்க்கும் நாடாளுமன்றத்திற்கும் கட்டுப்பட்டவைதான் மாநில ஆட்சிகள். நாடாளுமன்றத்தில் நம்மவர் நாற்பது பேரும் ஒன்றாகக் குரல் கொடுத்தாலும் அவர்களின் முன் மொழிவுகள் செயலுக்கு வராது. பயன்படாத சிறுபான்மை!

=========================================

காந்தியின் தேர்தல் புறக்கணிப்பு

========================================

ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வது போன்று கற்பனைச் செய்துகொள்வதற்காகக் கொண்டுவரப்பட்டதே மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தம். அதன் அடிப்படையில் வெகுமக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும் சட்டமன்றம் அமைச்சரவை ஆகியவை 1920-இல் உருவாக்கப்பட்டன. ஆளுநர்க்கு அதிகாரம், சட்டமன்றத்திற்கும் சில அதிகாரங்கள் – இறுதி அதிகாரம் ஆளுநர்க்கு!

இது இரட்டையாட்சி இதில் பங்கெடுக்க மாட்டோம் என்று காந்தியும் காங்கிரசும் தேர்தலைப் புறக்கணித்தனர்.

இந்தியாவின் முதல் அரசமைப்புச் சட்டம் என்று கருதப்படும், இந்திய அரசாங்கச் சட்டம் (Government of India Act) 1935-இல் செயலுக்கு வந்தது. அதனடிப்படையில் ஆங்கிலேய ஆட்சி 1937-இல் நடத்திய பொதுத் தேர்தலில் ஒரு நிபந்தனையோடு வேட்பாளர்களை நிறுத்தியது காங்கிரசு!

காங்கிரசின் தலைமை பதவி விலகச் சொல்லும் போது பதவி விலக ஒப்புக் கொண்டு, கையொப்பமிட்டுக் கடிதம் தந்தால்தான் வேட்பாளராக நிற்க அனுமதி என்றது. அந்த நிபந்தனையை ஏற்றுத் தேர்தலில் நின்று மாநிலங்களின் ஆட்சியை பிடித்தது காங்கிரசு! ஆனால் 1939-இல் இந்திய விடுதலையை முன் நிபந்தனையாக்கி, அனைத்து முதலைமைச்சர் மற்றும் அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவி விலகச் சொன்னது காங்கிரசுத் தலைமை. அனைவரும் விலகினார்கள்.

காங்கிரசு மிதவாதக் கட்சிதான், ஆனால் இந்திய விடுதலையில் உறுதியாக நின்றது. 1947 ஆகத்து 15-இல் இந்திய விடுதலையை அது பெற்றது.

===============================

தமிழீழத்தில்

===============================

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழ விடுதலைக்கு ஆயுதப் போர் நடத்தினார்கள். அவர்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள். ஆனால் அவர்களும் தேவை என்று கருதிய போது தேர்தலைப் பயன்படுத்தினார்கள். கி.பி.2000-இல் வெளிநாடுகள் தலையீட்டில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே வெளிநாடுகளில் அமைதிப் பேச்சு நடந்து வந்தது. அதில், பங்கேற்ற சிங்கள அரசுப் பிரதிநிதிகள், “துப்பாக்கி முனையில் மக்களை விடுதலைபுலிகள் அச்சுறுத்தி தனி ஈழம் கேட்க வைத்துள்ளார்கள். அவர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்குத் தமிழர்களிடையே ஆதரவில்லை” என்றார்கள்.

அது பொய்க் குற்றச்சாட்டு என்று மெய்ப்பிப்பதற்காகவும், தமிழர்கள் தமிழீழ விடுதலையை ஆதரிக்கிறார்கள் என்பதை உலகிற்குக் காட்டுவதற்காகவும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புதிய உத்தியைக் கையாண்டார். ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களைக் கொண்டு சம்பந்தர் தலைமையில், தமிழ்த்தேசியக் கூட்டணி என்ற அமைப்பை 2001-இல் உருவாக்கினார். 

தமிழ்த்தேசியக் கூட்டணி தமிழீழ விடுதலைப் புலிகளையும் தனி ஈழக் கோரிக்கையையும் வெளிப்படையாக ஆதரித்தது. அக்கூட்டணி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதுவரை இல்லாத அளவிற்கு வடக்கு, கிழக்கு மாகணங்களில் 22 தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெற்றது. தமிழ்ப் பகுதியில் 90 விழுக்காடு வெற்றி!

தமிழீழ விடுதலையைத் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் – அவர்களின் பிரதிநிதியே தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற உண்மை உலக அரங்கில் உறுதி செய்யப்பட்டது.

அதே வேளை, தமிழீழ விடுதலையைத் தேர்தல் மூலம் அடைவது என்ற நிலைபாட்டை ஒருபோதும் பிரபாகரன் எடுக்கவில்லை.

அயலாரால் அடிமைப்படுத்தப்பட்ட நாட்டின் அல்லது இனங்களின் விடுதலைக்குத் தேர்தலைப் புறக்கணிக்கலாம் அல்லது பயன்படுத்தவேண்டிய தருணங்களில் பயன்படுத்தலாம்; அதே வேளை தேர்தல் பங்கெடுப்பை நிரந்தரப் பாதையாக வகுத்துக் கொண்டு தேச விடுதலையைப் பெற முடியாது என்பதைக் காந்தியடிகளும் பிரபாகரன் அவர்களும் இருவேறு முனைகளில் இருந்து வழிகாட்டியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

கூட்டணித் தந்திரம் பற்றி வெளிநாட்டு உவமைகள் பலவற்றை சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகள் கூறுவது வழக்கம். கம்யூனிஸ்ட் சோவியத்து ஒன்றியம், ஏகாதிபத்திய பிரித்தானிய – வட அமெரிக்க – பிரான்சு நாடுகளுடன் சேர்ந்து பாசிச இட்லரின் செர்மானியப் படையை எதிர்த்துப் போரிட்டது போன்றதுதான் இந்தியாவில், பெரிய எதிரிக்கு எதிராகப் பல்வேறு சந்தர்ப்பவாதக் கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி சேர்வது என்பார்கள். நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் கையாளும் கூட்டணி உத்தியை ஒரு நாட்டிற்குள் நடக்க வேண்டிய சனநாயக மீட்பு, இன இறையாண்மை மீட்பு போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது. மலை ஏறுபவன் உயிர்வளிக் குடுவை (ஆக்சிஜன் குடுவை) கொண்டு செல்கிறான் – அவன் வீரன்! மாடி ஏறுபவன் உயிர்வளி குடுவை கொண்டு சென்றால், அவன் நோயாளி!

===================================

படிப்பினைகள் 

===================================

தமிழ்நாட்டில் அண்ணாவும், காசுமீரில் சேக் அப்துல்லாவும், மிஜோரமில் லால்டெங்காவும் ஆண்டைகள் நடத்தும் தேர்தலில் வென்று இன உரிமை பெறுவோம் என்று அறிவித்துத் தேர்தலில் பங்கெடுத்தார்கள். இந்த மூன்று மாநிலங்களிலும் இனவிடுதலைக்கு எழுச்சிபெற்ற மக்களை இவர்களின் உத்தி சீரழித்ததுதான் மிச்சம்!

மேலே கண்ட அனைத்துப் படிப்பினைகளையும் தமிழ்தேசியப் பேரியக்கம் உள்வாங்கிக் கொள்கிறது.

தேர்தலில் பங்கெடுப்போரை நாங்கள் தடுப்பதில்லை. அதே வேளை நாங்கள் தேர்தலில் பங்கெடுப்பதில்லை.  தேர்தல் திருவிழாக் காலந் தவிர மற்ற காலம் முழுவதும் நம் மக்கள் தங்கள் வாழ்வுரிமைகளுக்காக மொழி, இன, தாயகப் பாதுகாப்பிற்காகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவ்வாறான வெகுமக்கள் போராட்டங்கள் தமிழ்த் தேசிய உள்ளடக்கத்துடன் நடக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு!

==============================================

அரசிடம் கோரிக்கை வைக்கலாமா?

==============================================

தேர்தலைப் புறக்கணிக்கும் நீங்கள் தேர்தலில் அமையும் அரசிடம் தானே கோரிக்கை வைக்கிறீர்கள், இதன் முரண்பாடில்லையா என்று தொலைபேசி உரையாடலில் சுப.வீ. கேட்டார்.

“வெள்ளையனே வெளியேறு” என்று தீர்மானம் போட்ட காந்தி வெள்ளை அரசிடம் தான் கோரிக்கைகள் எழுப்பினார். தமிழீழ விடுதலைப் போர் நடத்திய புலிகளின் தலைமை சிங்கள அரசுடன் தான் இடைக்காலக் கோரிக்களுக்காகப் பேச்சு நடத்தியது; இலட்சியத்தை விட்டு அந்தந்த அரசுகளுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்து விடவில்லை.

ஒருவர் வாக்களிக்காத கட்சி ஆட்சிக்கு வ்ந்துவிட்டால் அவர் அந்த ஆட்சியிடம் கோரிக்கை வைக்கக் கூடாது என்ற அடுத்த நிலைக்கு சுப.வீ.போன்றவர்கள் போய்விட வேண்டாம். வாக்களித்தவர்-வாக்களிக்காதவர் அனைவர்க்கும் பொதுவானது அரசு  என்று தான் அவர்களின் சட்டம் கூறுகிறது. 

 

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 


Friday, March 12, 2021

ஞாயவிலைக் கடை மூடலுக்கானப் பணி தொடங்கிவிட்டது! - கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!



ஞாயவிலைக் கடை மூடலுக்கானப் பணி தொடங்கிவிட்டது!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!


மோடி அரசு அறிவித்துள்ள மூன்று உழவர் ஒழிப்புச் சட்டங்கள் உழவர்களை வேளாண்மையிலிருந்து வெளியேற்றுவது மட்டுமல்ல – ஞாயவிலைக் கடைகளையும் (ரேசன்) மூடும் உள்நோக்கம் கொண்டது என எச்சரித்து வருகிறோம். 

ஆனால், இந்தியத் தலைமையமைச்சர் மோடியும், அவரது அமைச்சர்களும் “தாங்கள் அவசர சட்டம் போட்டு ஆறுமாதம் ஆகிவிட்டது. எங்கே கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டன? எங்கே ரேசன் கடைகள் மூடப்பட்டு விட்டன? எதிர்கட்சிகள் வேண்டுமென்றே புரளி கிளப்புகிறார்கள்” என்று “சமத்காரம்” பேசினார்கள். 

ஆனால், உண்மையில் வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அரசுக் கொள்முதலும் படிப்படியாக கைவிடப்படும் என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக ஞாயவிலைக் கடைகள் மூடப்படும் என்பதையும் எடுத்துக்கூறி வருகிறோம். 

எல்லாம் சிறப்பாக இருப்பதாக மக்களிடம் படம் காட்டிக் கொண்டு தங்கள் உழவர் ஒழிப்புத் திட்டங்களை ஓசையில்லாமல் செயல்படுத்தி வருகிறார்கள் என்பதற்கு மோடி அரசின் செயல்பாடுகளே சான்று!

எடுத்துக்காட்டாக, 2021 – 2022ஆம் ஆண்டுக்ககான வரவு செலவு அறிக்கையில் குறைந்தபட்ச ஆதரவு விலையில், வேளாண் விளைபொருட்களைக் கொள்முதல் செய்வற்கான நிதி ஒதுக்கீடு 2020 – 2021ஆம் ஆண்டை ஒப்பிட 25 விழுக்காடு வெட்டப்பட்டுள்ளது. சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டான 2019 – 2020 –ஐ ஒப்பிட, சென்ற நிதியாண்டில் ஏற்கெனவே 25 விழுக்காடு நிதிவெட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆகமொத்தம், கடந்த 2 நிதியாண்டுகளில் மட்டுமே அரசுக் கொள்முதலுக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய ஆண்டுகளை ஒப்பிட 50 விழுக்காடு வெட்டப்பட்டு விட்டது! 

சென்ற ஆண்டு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நிகழ்ந்த தொழில் முடக்கச் சூழலில், இந்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் ஏழை எளிய மக்களுக்கு விலை இல்லா உணவு தானியங்கள் வழங்கியதால், கொள்முதல் வெட்டு கண்ணுக்குத் தெரியவில்லை. இனி வரும் ஆண்டுகளில் இதனுடைய தாக்கம் தெளிவாகத் தெரியவரும். 

மறுபுறம், ஞாயவிலைக் கடைகளுக்கான மானிய ஒதுக்கீட்டை மிகப்பெரும் அளவுக்குக் குறைக்க வேண்டுமென இந்திய அரசின் “நிதி ஆயோக்” அறிவுரை வழங்கியிருக்கிறது. 

இச்சிக்கல் குறித்து, நிதி ஆயோக் முன்வைத்திருக்கிற விவாதக் குறிப்பு (Discussion Paper) கசிந்திருக்கிறது. கசிந்த இந்த விவாதக் குறிப்பை கடந்த 28.02.2021 அன்று தில்லியிலிருந்து வெளியாகும் “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளேடு ஆதாரத்தோடு வெளிப்படுத்தியது. 

இந்தியா முழுவதும் குடும்ப அட்டைகளின் வழியாக ஏறத்தாழ 81 கோடியே 35 இலட்சம் பேர் உணவு மானியம் பெற்று வருவதாக அரசின் புள்ளி விளக்கங்கள் கூறுகின்றன. 

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில், 1 கோடியே 97 இலட்சத்து 82 ஆயிரத்து 593 குடும்பங்கள் குடும்ப அட்டைப் பெற்றிருக்கின்றன. இந்தக் குடும்ப அட்டைகளில் 1 கோடியே 85 இலட்சத்து 84 ஆயிரத்து 153 அட்டைகள் அரிசி பெறும் அட்டைகளாகும். 60 ஆயிரத்து 827 அட்டைகள் ஞாயவிலைக் கடைகளில் எந்தப் பொருளும் வாங்காமல், அடையாள அட்டைகளாக பயன்படுத்தப்பட்டு வரும் உயர் வருமானத்தினரின் அட்டைகளாகும். 

2013ஆம் ஆண்டில், இந்திய அரசு பிறப்பித்த உணவு உறுதிப்பாடு சட்டம் (உணவுப் பாதுகாப்பு சட்டம்) தமிழ்நாட்டிற்கு எதிரானது. அதை இங்கே செயல்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

ஞாயவிலைக் கடைகள் வலைப்பின்னல் பிற மாநிலங்களை ஒப்பிட, தமிழ்நாட்டில் மக்கள் பயன்பெறும் வகையில் இருக்கின்றது. இந்திய அரசின் சட்டம் அதை சீர்கெடுத்துவிடும் என்பதால் எதிர்த்தோம். 

ஆயினும், அச்சட்டப்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய உணவு மானியம் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், அந்த நிதிச் சுமையை தமிழ்நாடு அரசே ஏற்று ஞாயவிலைக் கடைகளை நடத்தி வருகிறது. 

வாக்குவேட்டை அரசியலுக்காக அனைவருக்கும் விலை இல்லா அரிசி வழங்கி வருகிறது. 

நம்மைப் பொறுத்தளவில், குடும்பத்திற்கு வேண்டிய அரிசி, பருப்பு, உணவு எண்ணெய், மளிகைப் பொருட்கள். மண்ணெண்ணெய் ஆகிய அனைத்தும் குறைந்த விலையில் ஞாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம். ஆனால், முதியோர், ஆதரவற்றோர் போன்ற மிக நலிந்த பிரிவினராக உள்ள 18 இலட்சத்து 62 ஆயிரத்து 615 அட்டைதாரர்களுக்கு மட்டும் விலை இல்லா அரிசி வழங்கலாம். மற்ற அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி 5 ரூபாய் என்றளவில் விலை வைத்து, மாதம் 35 கிலோ வழங்கலாம். 

உழவர்கள் உழைத்துப் பயிரிட்ட அரிசியை இலவசமாக வழங்குவது அவர்களது உழைப்பை இழிவுபடுத்துவது மட்டுமின்றி, கொள்முதல் விலையைக் குறைப்பதற்கும் வழிவகுத்துவிடும் என்பதாலேயே இவ்வாறு கூறுகிறோம். 

அரிசி, உணவு எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அனைத்தையும் குறைந்த விலையில் வழங்கும் வகையில், ஞாயவிலைக் கடைகள் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்கிறோம்.

ஆனால், இந்திய அரசு இதற்கு நேர் எதிர்த்திசையில் நடைபோடுகிறது. 2013ஆம் ஆண்டின் உணவு உறுதிப்பாடு சட்டம், நகர்ப்புறங்களில் மொத்தமுள்ள குடும்ப அட்டைகளில் 50 விழுக்காட்டினருக்கு மட்டும் மானிய விலையில் அரிசி – கோதுமை வழங்கலாம், அதேபோல் கிராமப்புற அட்டைதாரர்களில் 75 விழுக்காட்டினர்க்கு மட்டும் இவ்வாறு வழங்கலாம் என வரையறுத்தது. 

இன்னெருபுறம், 2015ஆம் ஆண்டிலிருந்து நிதி ஆயோக் அறிவுரைப்படி பருப்பு வகைகள், பிற புன்செய் தானியங்கள் ஆகியவற்றை ரேசன் கடைகள் வழியாக வழங்குவதை மிகப்பெரும் அளவுக்கு நிறுத்தி விட்டது. 

இன்றைக்கு ரேசன் கடைகளில் துவரம் பருப்பு மட்டுமே மிகக்குறைந்தளவில் வழங்கப்படுகிறது. மற்றவை அறவே நிறுத்தப்பட்டுவிட்டன. இதுவும் ஒருநாள் வணிகத்திற்கே போதுமானதாக இல்லாத சூழலில், பருப்பு கிடைக்காத மக்கள் ரேசன் கடை ஊழியர்களோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், இந்திய அரசு இந்த வழங்கலைக் குறைத்துவிட்டது என்பதை பெரும்பாலான மக்கள் அறிவதில்லை. 

இப்போது, நிதி ஆயோக்கின் விவாதக் குறிப்புகள் – அரிசி, கோதுமை வழங்குவதை நகர்ப்புறங்களில் 50 விழுக்காடாக இருப்பதை 40 விழுக்காடாகவும், கிராமப்புறங்களில் 75 விழுக்காடாக இருப்பதை 60 விழுக்காடாகவும் குறைத்துவிடலாம், இதன் வழியாக ஏறத்தாழ 10 கோடி பேரை ரேசன் கடையிலிருந்து விலக்கி வைத்துவிடலாம் உணவு மானியத்தில் 47 ஆயிரத்து 229 கோடி ரூபாயை குறைத்துவிடலாம் என்கிறது.

ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு, சாந்தக்குமார் குழு அறிவித்தவாறு மொத்த உணவு மானியம் பெறக்கூடிய குடும்பங்களின் எண்ணிக்கையை இப்போதுள்ள 67 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக விரைவில் குறைக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் குறிப்பு பரிந்துரைக்கிறது. 

மிக விரைவில் ஞாயவிலைக் கடைகளை மூடப்போகிறார்கள் என்பதற்கான அபாய அறிவிப்பு இது! 

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் ஞாயவிலைக் கடைகளை சார்ந்துதான் மிகப் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். மற்ற பல்வேறு மாநிலங்களில் ஞாயவிலைக் கடைகளே பெருமளவு செயல்படாததால் அதற்குப் பழக்கப்பட்டுள்ள மக்கள் வறுமையில் உழல்கிறார்கள். ஆனால், ஞாயவிலைக் கடைகள் அதிகம் செயல்பாட்டில் உள்ள தமிழ்நாட்டில் நிதி ஆயோக் பரிந்துரையின் தாக்கம் மிகக் கொடுமையானதாக இருக்கும். 

ஏற்கெனவே, எரிவளி உருளைகளுக்கு (கேஸ் சிலிண்டர்) வங்கியில் போட்டுவந்த மானியம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. மறுபுறம், ஒவ்வொரு நாளும் அதன் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதேநிலை, ரேசன் கடைகள் வழியாக வாங்கப்படும் பொருட்களுக்கும் ஏற்பட்டால் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் மிகக் கொடுமையாக இருக்கும். 

ஒருபுறம், குடும்பங்களுக்கு 1,000 தருகிறோம் – 1,500 தருகிறோம் எனச் சொல்லிக் கொண்டே மறுபுறம், பெட்ரோல் – டீசல் – எரிவளி விலை உயர்வைப் பற்றி கண்டு கொள்ளாத அரசியலாளர்கள், ஏற்கெனவே ரேசன் கடைகளை பலவீனப்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். 

தமிழ்நாட்டு மக்கள், தங்கள் எதிர்காலம் தங்கள் கையில்தான் என்பதை உணர்ந்து, விழிப்புணர்வு பெற்றே ஆக வேண்டும்; வீதிக்கு வந்தே ஆக வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


Wednesday, March 10, 2021

இந்திக்காரர்களைப் பார்த்தாவது இன உணர்வு கொள்க! - ஐயா பெ.மணியரசன் அறிக்கை!




இந்திக்காரர்களைப் பார்த்தாவது 
இன உணர்வு கொள்க!

தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

“எங்கள் மாநிலத்தில் தனியார் துறையில் 100க்கு 75 வேலை மண்ணின் மக்களுக்கு மட்டுமே தரவேண்டும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்போம்”.

இப்படி வாக்குறுதி அல்ல, சட்டமே இயற்றி இருக்கிறார்கள், அரியானா மாநிலத்தில்! பா.ச.க. தலைமையிலே கூட்டணி ஆட்சி அங்கு நடக்கிறது. பா.ச.க.வைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் அரியானாவின் முதலமைச்சர்!

அந்த சட்ட முன் வரைவைக் கையொப்பமிட்டு சட்டமாக்கிய ஆளுநர் பெயர் சத்திய தேவ் நாராயண் ஆர்யா! பெயரே அவர் எப்படிப்பட்ட பின்னணி கொண்டவர் என்பதைக் கூறுகிறது.

அரியானா இந்தி மாநிலம்! அந்த அரியானாவில் உள்ள தனியார் துறை வேலைகளை, அம்மாநில மண்ணின் மக்களுக்குக் கிடைக்காமல் பறித்துக் கொள்ளும் வெளி மாநிலத்தவர் யார்?

பெரும்பாலும் உ.பி., பீகார், இராசஸ்தான் போன்ற இதர இந்தி மாநிலங்களைச் சேர்தவர்களே அந்த வெளியார்! பஞ்சாபியரும் ஒரு பகுதி இருக்கலாம். இவர்கள் எல்லாம் அரியானாவின் இந்திக்காரர்களுக்கு அயலார்!
ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைகளைப் பறித்துக்கொள்ளும், இந்திக்காரர்களிடமிருந்தும், அயல் மாநிலத்தவரிடமிருந்தும் மண்ணின் மக்களுக்கு அரியானாவைப் போல் பாதுகாப்புச் சட்டம் தேவை என்று போராடும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் இனவெறி அமைப்பு என்கின்றனர் இங்குள்ள பா.ச.க.-காரர்கள். அப்படி நமக்குப் பட்டம் கொடுப்பது, தமிழர்களின் உரிமைகளை மீட்பதில் நாம் உறுதியாக நிற்கின்றோம் என்பதற்கான சான்றிதழ்!

ஆனால் இங்கு இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்வோரும், தீவிரத் திராவிடம் பேசுவோரில் ஒரு சாராரும் உதட்டளவுத் தமிழ்தேசியர்களும், நாம்  “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே, வெளியாரை வெளியேற்றுவோம்” என்று முழங்குவதற்காக, நம்மை இனவெறியர்கள் என்கிறார்கள்.

பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல தாயகங்கள் கொண்ட இந்தியாவை ஒற்றைத் தாயக ஒரு தேசமாவும், இந்தியன் அல்லது பாரதீயன் என்ற ஒரே இனமாகவும், கற்பனை செய்து கொள்ளுமாறு நம்மைக் கட்டாயப்படுத்தும் பா.ச.க. ஆளும் அரியானா என்ற இந்தி மாநிலத்தில் வெளியார் வேலைக்கு வரம்பு கட்டித் தடைச் சட்டம் போட்டிருக்கிறார்கள்.

பா.ச.க.ஆளும் மத்தியப் பிரதேசத்தில் அரியானாவைப் போல் வெளியார் வேலை தடைச் சட்டம் கொண்டு வரப்போவதாக அம்மாநில முதலைமைச்சர் செளகான் அறிவித்துள்ளார்.

அரியானாவுக்கு முன்னோடியாக ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு ஆட்சி-அதன் முதல்வர் ஒய்.எஸ்.செகன் மோகன் ரெட்டி 2019-ஆம் ஆண்டே, தனியார் துறையில் ஆந்திரத்தின் மண்ணின் மக்களுக்கு 75 விழுக்காடு வேலைச் சட்டத்தை இயற்றிவிட்டார்.

அதற்கு முன் கர்நாடகம், குசராத், மராட்டியம், சத்தீசுகட் போன்ற மாநிலங்கள், மாநில அரசு மற்றும் தனியார் துறை வேலைகளுக்கு மட்டுமின்றி, நடுவண் அரசு வேலைகளுக்கும் மண்ணின் மக்கள் முன்னுரிமை ஆணைகள் வெளியிட்டுச் செயல்படுத்தி வருகின்றன.

ஆளுநரின் கையெழுத்தை 2021 மார்ச் தொடக்கத்தில் பெற்று “அரியானா மாநில மக்கள் வேலைச் சட்டம் – 2021” (Haryana State Employment of Local Canditates Act - 2021) செயலுக்கு வந்துவிட்டது. இதன்படி, 50,000 ரூபாய் வரை மாதச் சம்பளம் வாங்கும் அனைத்துத் தனியார் துறை வேலையிலும் 75 விழுக்காடு வரை, கட்டாயம் அரியானாவின் மண்ணின் மக்களுக்கே வழங்க வேண்டும் என்கிறது. தவறினால் தண்ணடனை உண்டு!

தாய் மண்ணிலேயே வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு அனாதைகள் ஆக்கப்பட்டுள்ள தமிழின இளையோர் “மண்ணின் மக்களுக்கே வேலை, வெளியாரை வெளியேற்று” என்று முழங்கி வீதிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தியத் தேசிய வாதக் கட்சிகளின் தலைமைகளும், திராவிட வாத கட்சிகளும் இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டை, பாரத மாதா பசனையை ஓங்கி ஒலிக்கின்றன. மண்ணின் மக்கள் வேலை உரிமைச் சட்டங்களை எதிர்க்கின்றன. பள்ளிப் பருவத்திலேயே தமிழின மறுப்பையும் “இந்தியன்” என்ற விருப்பையும் பாடத்திட்டங்களில் சேர்த்துள்ளன. அதுமட்டுமல்ல, பாரதவாத, திராவிட வாதக்கட்சிகள் – பாரத தேசியத்தைப் பரப்பி வருகின்றன. இந்தியா, பல்வேறு இனங்களின் ஒன்றியம் என்ற உண்மையை மறைக்கின்றன.

ஆங்கில இந்துவின் ஆத்திரம்
அரியானாவின் சட்டத்தைக் கண்டு ஆங்கில இந்து ஏடு ஆத்திரப்பட்டு 9.3.2021 இதழில் ஆசிரிய உரை எழுதியுள்ளது.

“அச்சுறுத்தும் கொடுஞ்சட்டம் – அரியானாவின் 75 விழுக்காட்டு வேலை உள்ளூர்காரர்களுக்கு என்பது பேரழிவின் முன்னறிவிப்பு” (Alarming diktat – Haryana’s new 75% jobs for locals’ law is a harbinger of doom) என்று தலைப்பிட்டுள்ளது அவ்வேடு.

அரியானா போன்ற மாநிலங்கள் போட்டிருக்கும் இச்சட்டம் அரசமைப்புச்சட்ட உறுப்புகள் 19(1)(g) மற்றும் 16(2) ஆகியவற்றுக்கு  எதிரானது என்று கூறும் இந்து, மறைமுகமாக – உச்சநீதிமன்றம் இச்சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று கோருகிறது.

“தனியார் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் திறன் மிக்கத் தொழிலாளிகள் அரியானா மக்களிடம் இருக்க மாட்டார்கள்.”

“அதிகாரிகள் தொழிற்சாலை வளாகங்களுக்குள் அடிக்கடி சென்று ஆய்வு செய்து, வெளிமாநிலத்தவர் வேலை செய்கிறார்களா என்று விசாரித்துத் தொந்தரவு கொடுப்பார்கள். மறுபடியும் “தொழிற்சாலை ஆய்வாளர் ஆட்சி (Inspector Raj) உருவாகும். இதனால் முதலாளிகள் அரியானாவுக்கு வெளியே தொழிற்சாலைகளைக் கொண்டு போய் விடுவார்கள். அதன் பிறகு, அரியானாவில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்து விடும் என்கிறது இந்து. அரியானாவில் மண்ணின் மக்களுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமானதால்தான் இச்சட்டம் வந்துள்ளது என்ற உண்மையை மாற்றிப் பேசுகிறது இந்து.

“ஆனால் மண்ணின் மக்களுக்கு வேலை முன்னுரிமை என்ற போக்கினால் வெளிநாட்டு முதலாளிகள் அரியானாவில் மட்டுமல்ல, இந்தியாவில் வேறெங்கும் தொழிற்சாலை தொடங்க வரமாட்டார்கள். தலைமை அமைச்சரின் ஒரே தேசம் ஒரே சந்தை – (ஒரே பாரதம் – ஒரே ஸ்ரேஷ்ட பாரதம்) என்ற முழக்கத்தை வீணடித்துவிடும்” என்கிறது இந்து.

மிகையான தொழிற்சாலைக் குவிப்பு சுற்றுச் சூழலை மாசுபடுத்தி, மனிதர்கள் வாழத் தகுதியற்ற மண்ணாகத் தாயகத்தை மாற்றும் என்கின்ற உண்மையை மறுக்கிறது இந்து. 

“பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், “வங்கிகளில் பீகார் மக்கள் சேமிக்கும் தொகைகள் அளவிற்குப் பீகாரிலுள்ள வங்கிகள் பீகார் மக்களுக்குக் கடன் தருவதில்லை” என்று குறைபட்டுக் கொண்டுள்ளார்”. என்கிறது இந்து. 

“இது போன்ற, “மாநில விசா” தரும் சட்டங்கள் இயற்றுவதை இந்திய அரசு தடைசெய்ய வேண்டும் என்று ஆத்திரப்படுகிறது இந்து!

ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்கள் உருவானாலும், அல்லும் பகலும் ஆரியத்துவா முழக்கமான இந்துத்துவா இரைச்சல் போட்டாலும், மோடி மஸ்த்தான்கள் “ஒரே தேசம், ஒரே சந்தை” போன்ற முழங்கங்களை எழுப்பினாலும், இந்தியா பல தேசிய இனங்களின் – பல தேசங்களின் துணைக் கண்டம் என்பதை யாராலும் மறைக்க முடியாது; இந்தியைப் பொது மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கும் வடமாநில மக்கள், தங்களின் தாய் இனத்தையும் தாய்மொழியையும் மறக்க மாட்டார்கள். அவர்களுக்கு இந்தி இணைப்பு மொழியே தவிர தாய் மொழி அல்ல! அது மட்டுமல்ல, இந்தியும் சமற்கிருதமும் யாருக்கும் தாய் மொழிகள் அல்ல என்ற உண்மையும் மறைந்துவிடாது.

பிரித்தானியப் பீரங்கிகளின் ஆக்கிரமிப்பால் இணைக்கப்பட்ட பல்வேறு மொழி-இனத் தாயகங்களின் பிணைப்பே இந்தியா என்ற வரலாற்று உண்மையும் மாறிவிடாது. அதனால்தான் மத்தியப் பிரதேசம், அரியானா, பீகார் போன்ற இந்தி மாநிலங்களிலும், குசராத் போன்ற சேட்டுகளின் மாநிலத்திலும் மண்ணின் மக்கள் – வெளியார் என்ற சட்ட ஏற்பாடுகள் வேலைவாய்ப்பில் இருக்கின்றன.

அதுசரி, திராவிடத் திணிப்பாளர்கள் அரசியல் அம்பலம் செய்யும் தமிழ்நாட்டில் மண்ணின் மக்கள் வேலை முன்னுரிமைச் சட்டங்கள் இல்லையே ஏன்?  

மது போதைக்கு அடிமை ஆனவர்கள் தன் உணர்வு, தன்மதிப்பு அனைத்தையும் இழந்து விடுகிறார்கள் அல்லவா! திராவிடம் என்பது ஆரியம் உற்பத்தி செய்த மது! அதைத் தமிழ்நாட்டில் கள்ளச் சாராயமாகத் தயாரித்துத் தமிழர்களுக்கு வழங்கினார்கள். கள்ளச்சாரயத்திற்குப் போதை அதிகம்! அந்த போதையில் தமிழ் மொழி உணர்வு, தமிழ் இன உணர்வு, தமிழர் தாயக உணர்வு அனைத்திலும் நமக்கு ஊனம் ஏற்பட்டுள்ளது.

இப்போது இந்திக்காரர்களைப் பார்த்தாவது தமிழர்கள் இன உணர்வு கொள்ள வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, March 8, 2021

பேராசிரியர் இராம சுந்தரம் மறைவு மனத்தை வாட்டுகிறது! - பெ. மணியரசன் இரங்கல்!



பேராசிரியர் இராம சுந்தரம் மறைவு
மனத்தை வாட்டுகிறது!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக அறிவியல் புலத்தின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் இராம. சுந்தரம் அவர்கள் தமது 83-ஆம் அகவையில் இன்று (08.03.2021 திங்கள்கிழமை) விடியற்காலை தஞ்சையில் தமது இல்லத்தில் இயற்கை எய்தினார். என்ற செய்தி துயரம் தருகிறது.
ஐயா அவர்கள் மொழியியல் துறையில் ஓர் ஆய்வறிஞர். அத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரின் முனைவர் பட்ட வழிகாட்டி காலஞ்சென்ற தமிழறிஞர் வ. அய். சுப்ரமணியம் அவர்கள். திருவனந்தபுரத்தில் வ.அய்.சு. பேராசிரியராகப் பணியாற்றிய போது இராம. சுந்தரம் முனைவர் பட்டம் பெற்றார்.
ஐயா வ.அய். சுப்ரமணியம் அவர்கள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராகப் பணியாற்றிய காலத்தில், ஒவ்வொரு துறைக்கும் திறமையாளர்களைத் தேடிப்பிடித்துப் பணியில் அமர்த்தினார். அப்படி வந்தவரே இராம. சுந்தரம். அவர் அண்ணாமலையில் தமிழ்ப் பேரறிஞர்கள். ஏ.சி. செட்டியார், தெ.பொ.மீ.ஆகியோரின் மாணவர்.
புனா, மதுரை தியாகராசர் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தமிழ்விரிவுரையாளராகப் பணியாற்றிய இராம. சுந்தரம் அவர்கள், ஏழாண்டுகள் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு திருக்குறளை போலிஷ் மொழியில் வல்லுநர்களின் துணையுடன் மொழியாக்கம் செய்தார்.
தஞ்சை தமிழ்ப்பல்கலையில் அறிவியல் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றிய போது மருத்துவம் (MBBS), பொறியியல் (BE) இரண்டு தொழிலியல் கல்வியும் தமிழில் கற்பிப்பதற்கான முயற்சியாக இவற்றின் முதல் இரண்டாண்டுப் பாடங்களைத் தமிழாக்கம் செய்ய துணைவேந்தர் வ.அய். சுப்ரமணியம் அவர்களின் ஊக்குவிப்புடன் களத்தில் இறங்கினார் இராம. சுந்தரம். தக்க கல்வியாளர்களின் துணை கொண்டு இரண்டாண்டுப் பாடங்களைத் தமிழாக்கினார். ஆனால் ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
தஞ்சை தமிழ்ப் பல்கலையில் அறிவியல் தமிழ் தொடர்பான ஆய்வுத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றினார். அத்துறையில் பல நூல்கள் எழுதியுள்ளார். மொழியில், அறிவியல் தமிழ் தொடர்பாக ஏராளமாகக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அமெரிக்கப் பேராசிரியர். தாமஸ் டரவுட்மன் ஆங்கிலத்தில் எல்லீசின் தமிழ்ப் பணி குறித்து எழுதிய “திராவிடச் சான்று” என்ற நூலைத் தமிழாக்கினார். அந்நூலைக் காலச்சுவடும் – சென்னை வளர்ச்சி ஆய்வு நடுவமும் சேர்ந்து வெளியிட்டன.
தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க தமிழ் மொழியியல் ஆய்வாளராக விளங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பல்கலை மேனாள் ஆய்வுத்துறை பேராசிரியர் மற்றும் பதிவாளர். முனைவர் கி. அரங்கன் அவர்கள் இராம. சுந்தரம் அவர்கள் தமது கருத்து வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தியவர் என்று பெருமையுடன் கூறுவார் இராம.சுந்தரம் அவர்கட்கு நட்புவட்டம் அதிகம். எல்லோருடனும் கலகலவென்று இனிமையாக நகைச்சுவையாகப் பேசும் இயல்பு கொண்டவர்.
இடதுசாரிச் சிந்தனையும் தமிழ்ப் பற்றும் மிக்க இராம. சுந்தரம் அவர்களுடன், நானும் எமதியக்கத் தோழர்களும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தது இயல்பானதே!
முனைவர் சி. பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழ்ப் பல்கலைத் துணை வேந்தராக இருந்தபோது உதவி ஆய்வாளர்கள் மற்றும் தற்காலிகப்பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்துப் பேராசிரியர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரும் நெடும் போராட்டம் நடத்தினார்கள். சற்றொப்ப 60 நாள் நடந்த அப்போராட்டத்தில் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இராம.சுந்தரம் பங்கு ஆற்றினார்.
எமது “தமிழர் கண்ணோட்டம்” மாத இதழில் “வசந்தன்” என்ற புனை பெயரில் பல கட்டுரைகள் எழுதினார். வளர்ச்சியடையாத வெளிநாடுகளில் எல்லாம் அந்தந்த நாட்டின் தாய்மொழி ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் செயல்படுத்தப்பட்ட வரலாற்றைத் தொடர்கட்டுரையாகத் தமிழர் கண்ணோட்டத்தில் எழுதி வந்தார். தமிழர் கண்ணோட்டம் வளர்ச்சிக்குப் பல்வேறு மதியுரை வழங்கி வந்தார். தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழுவிலும் உறுப்பு வகித்தார்.
சிவகங்கை மாவட்டம் அலவாக்கோட்டையில் பிறந்த இராம.சுந்தரம் தஞ்சை தமிழ்ப் பல்கலையில் பணியாற்றியதை ஒட்டி தஞ்சாவூர்க்காரர் ஆனார்.
பேராசிரியர் - முனைவர் - எம் பேரன்புக்குரிய தோழர் இராம. சுந்தரம் அவர்களின் மறைவு மனத்தை வாட்டுகிறது. அவரது மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
பி.கு. பேராசிரியர், முனைவர், இறுதி ஊர்வலம் தஞ்சை பாரதிநகர் அருகே பல்கலைக்கழக குடியிருப்புப் பகுதிக்கு (பிள்ளையார்ப் பட்டிச் சாலை) எதிரே 71, செல்லையா நகரின் இல்லத்திலிருந்து நாளை (09.03.2021) காலை 10 மணிக்குப் புறப்படும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT