உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழ்வழிக் கல்வி. Show all posts
Showing posts with label தமிழ்வழிக் கல்வி. Show all posts

Friday, February 12, 2021

“கேந்திரிய வித்தியாலயாவை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்று! ” - ஐயா பெ.மணியரசன் நேர்காணல்!.


கேந்திரிய வித்தியாலயாவை

 தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்று!  ”


ஐயா பெ.மணியரசன் நேர்காணல்!. 



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, May 7, 2019

நடுவண் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலவழி நுழைவுத் தேர்வால் புறக்கணிக்கப்படும் தமிழ்வழி மாணவர்கள்

நடுவண் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலவழி நுழைவுத் தேர்வால் புறக்கணிக்கப்படும் தமிழ்வழி மாணவர்கள் - வான்முகில்.
தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புப் பாடத்திட்டங்களை தமிழ்வழியிலேயே கற்கிறார்கள். இம்மாணவர்கள் 12ஆம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் இவர்களுக்குத் தமிழ்நாட்டில் இந்திய அரசு நடத்தும் புதுச்சேரி, திருவாரூர் நடுவண் (மத்திய) பல்கலைக்கழங்களில் மேல் படிப்புகளைத் தொடர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.

இவ்விரு பல்கலைக்கழகங்களும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சேரத் தகுதி வாய்ந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல், கலைப் பாடங்களை நடத்திவருகின்றன. இவ்விரு பல்கலைக்கழகங்களும் இப்பாடப்பிரிவில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுகளை ஆங்கில வழியில் மட்டுமே நடத்துகின்றன. இது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்படும் அநீதி! தமிழ் வழியில் படித்தவர்கள் எப்படி ஆங்கில மொழியில் தேர்வு எழுத முடியும்?

தமிழ்நாட்டில் செயல்படும் இவ்விரு இந்திய அரசின் நடுவண் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 90 விழுக்காடு இடங்களை மண்ணின் மைந்தர்களுக்கே ஒதுக்க வேண்டும்! இந்த ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு நுழைவுத் தேர்வின்றி, மாணவர்களை அவர்கள் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், புதுவை பல்கலைக்கழகம் உள்ளூர் மக்களுக்காக 25 விழுக்காடு இடங்களை ஒதுக்கியுள்ளதாக அதன் வெளியீடு (Prospectus) கூறுகிறது. ஆனால் புதுவை மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் நடத்தப்படாத பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களைப் பெறுவதற்கே தமிழ் வழியில் படித்த மாணவர்கள் ஆங்கிலத்தில் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

முதுகலை கணிதம், வேதியியல், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல், கலை உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் சேர உள்ளூர் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இன்றுவரை இல்லை!

சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திருவாரூர் பல்கலைக்கழகத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. இவ்விரு நடுவண் அரசின் பல்கலைக்கழகங்களிலும் அதன் அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் மண்ணின் மைந்தர்களுக்கான 90 விழுக்காடு இடஒதுக்கீட்டை நாம் போராடிப் பெற வேண்டும். ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு நுழைவுத் தேர்வின்றி மேல்நிலை வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவும் போராட வேண்டும்.

தமிழ்நாடு அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள்கூட நுழைவுத் தேர்வைத் தமிழில் நடத்துவதில்லை என்பது தான் வேதனைக்குரிய நிலை. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகமும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் நேரடியாகச் சேரக்கூடிய 5 ஆண்டு ஒருங்கிணைந்த பல முதுகலை அறிவியல், கலை பாடப் பிரிவுகளை நடத்தி வருகிறது. இப்பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வை ஆங்கில வழியிலேயே நடத்தி வருகிறது. இந்நிலை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்.

மேல்நிலை வகுப்பை தமிழில் படித்துள்ள மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த ஆண்டு நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் நுழைவுத் தேர்வையே நீக்கி விட்டது. ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை அறிவியல், வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இது மட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் தர வரிசைப்படி முதல் பத்து மாணவர்களுக்கு மாதம் 2,000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்குகிறது. இப்பல்கலைக் கழகத்தில் சேர விண்ணப்பம் போட கடைசி நாள் - மே 3.

நுழைவுத் தேர்வையே நீக்க முடிவெடுத்த பல்கலைக் கழகத் துணைவேந்தரும், பேராசிரியர்களும் நம் பாராட்டுக் குரியவர்கள். நெல்லைப் பல்கலைக்கழகம் எடுத்த முடிவை, நல்ல தொடக்கமாகக் கொண்டு, தமிழ் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நுழைவுத் தேர்வை நீக்க வேண்டும்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 மே மாத இதழ்)

கண்ணோட்டம் இணைய இதழ்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: tamizhdesiyam.com

Monday, March 18, 2019

பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கோரி திருப்பூரில் ஐயா க.இரா. முத்துச்சாமி ஓராண்டாகப் பேசா நோன்பு ! அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும்! தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!

பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கோரி திருப்பூரில் ஐயா க.இரா. முத்துச்சாமி ஓராண்டாகப் பேசா நோன்பு ! அமைச்சர் பாண்டியராசன் தலையிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
திருப்பூர் ஐயா க.இரா. முத்துச்சாமி அவர்கள் பேசி ஓராண்டு ஆகப் போகிறது. கடந்த 24.03.2018 அன்று திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி அணைப்புதூர் அழகாபுரி நகரில் உள்ள திருமுருகநாத சுவாமி திருமடத்தில் பனை மரத்தின் முன்னிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைப் பயிற்று மொழி ஆக்கும் வரை பேசா நோன்பு (மௌன விரதம்) இருக்கப் போவதாக உறுதிமொழி ஏற்றார் திருப்பூர் இயற்கை வாழ்கம் க.இரா. முத்துச்சாமி அவர்கள்! அவர்களின் எண்பதாம் அகவையின் தொடக்கம் அப்போது!

எத்தனையோ அமைப்புகள், தலைவர்கள், கலை இலக்கியப் படைப்பாளிகள், தமிழினப் போராளிகள், தாய் மொழிப் பற்றாளர்கள், ஊடகத்தார் ஐயா அவர்களைச் சந்தித்துப் பாராட்டி வருகின்றனர். அவர்களில் பலர் பேசா நோன்பைக் கைவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டனர். ஆனால், ஐயா அவர்கள் கோரிக்கை நிறைவேறாமல் பேசா நோன்பைக் கைவிட மறுத்து விட்டார்.

நான் கடந்த 23.12.2018 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ. இளங்கோவன், தோழர்கள் குமார், சிவக்குமார் ஆகி யோருடன் ஐயா முத்துச்சாமி அவர்களையும், ஐயாவின் அன்புத் துணைவியார் அம்மா சுப்புலட்சுமி அவர்களையும் திருப்பூரில் அவர்கள் இல்லத்தில் சந்தித்து நலம் கேட்டறிந்தேன்.

ஐயா அவர்கள் பேசா நோன்பைக் கைவிட்டு, இயன்றளவு வழக்கம் போல் தமிழ் உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் என்று நான் அன்புடன் கேட்டுக் கொண்டேன்.

ஐயா அவர்கள் ஒரு தாளில் எழுதி எனக்கு விடையளித்தார். “நான் ஏற்கெனவே கால வரம்பற்ற உண்ணாப்போராட்டம் தொடங்கினேன். நீங்கள் உண்ணாப்போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினீர்கள். அதனால் நான் அதைக் கைவிட்டேன். இப்போதும் அப்படி வலியுறுத்தாதீர்கள். கோரிக்கை நிறைவேறாமல் பேசா நோன்பைக் கைவிட மாட்டேன்” என்று அதில் எழுதியிருந்தது. அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை!

பெரியவர் முத்துச்சாமி உள்ளாடை உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தவர். வசதி வாய்ப்புகள் உள்ளவர். அந்தத் தொழில் நிறுவனத்தை மகளிடம் ஒப்படைத்துவிட்டு, முழுநேரமும் தமிழ்ச் சமூகப் பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டார். இளைஞரைப் போல் தமிழ்நாட்டின் பல போராட்டங்களிலும் கலந்து கொள்வார். ஓராண்டாக வீட்டில் தமிழுக்காகத் தவமிருப்பது போல் பேசா நோன்பிருக்கிறார். பேசாமல் ஓராண்டு தொடர்வது எளிய செயல் அல்ல. பெருந்துன்பம்!

தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் ஐயா அவர்களைச் சந்தித்து தமிழ்வழிக் கல்விக்கு உறுதி அளிக்க வேண்டும். குறிப்பாக, குறைகளைச் செவி கொடுத்துக் கேட்டு இயன்றதைச் செய்து வரும் தமிழ் மொழி அமைச்சர் திரு. மஃபா. பாண்டியராசன் அவர்கள் க.இரா.மு. ஐயா அவர்களைச் சந்தித்து உறுதி அளித்து அவரது பேசா நோன்பை முடித்து வைத்தால் சிறப்பாக இருக்கும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, May 4, 2014

பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகை : தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கப் பொதுக்குழு முடிவு.



அரசுப் பள்ளிகளில் தமிழை அப்புறப்படுத்தி ஆங்கில வழிப்பிரிவுகளைத் திணிப்பதைக் கண்டித்து பள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம்! தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கப் பொதுக்குழு முடிவு.

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கப் பொதுக்குழுக் கூட்டம் 02.05.2014 அன்று மாலை சென்னை க.க.நகரில் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்யா, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் தொழிற்சங்கச் செயலாளர் திரு சைதை கே.வி.சிவராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் தோழர் இரா.பச்சைமலை, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், மக்கள் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந.அரணமுறுவல், தென்மொழி ஆசிரியர் திரு. மா.பூங்குன்றன், தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைமை செய்தித் தொடர்பாளர் தோழர் அருண்சோரி, சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தி.செந்தில்குமார், தமிழர் எழுச்சி இயக்கப் பொறுப்பாளர் தோழர் ச.எழிலன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தமிழர் தேசிய இயக்கப் பொறுப்பாளர் தோழர் ஆவடி செ.ப.முத்தமிழ்மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் பா.நாகராசன், தலைநகர்த் தமிழ்ச் சங்கம் தோழர் க.சோழநம்பியார், தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் மா.சேகர், திரு. அன்றில் பா.இறையெழிலன், புலவர் இரத்தினவேலவர், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கப் பொறுப்பாளர் தோழர் சிவ.காளிதாசன், பொன்னேரி வழக்குரைஞர் பொன்.செல்வன், திரு. அ.முல்லைத்தமிழன், திரு. அ.சி.சின்னப்பத்தமிழர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு முன்மொழிவுகள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. இறுதியில் பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசு 2013-2014 கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதென்று திட்டமிட்டு முதற்கட்டமாக 1ஆம் வகுப்பிலும் 6ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிப்பிரிவுகளைத் தொடங்கியது. நடப்பு 2014-2015 கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்குகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கல்வியில் தமிழைப் பயிற்று மொழி நிலையிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் போக்கில் தமிழக அரசு தீவிரமாக செயல்படுகிறது. இதை ஒரு சாதனையாக நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் கூறினார். ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையும் தமிழ்நீக்க - ஆங்கிலவழித் திணிப்புத் திட்டத்தை சாதனையாக கூறியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் மாணவர் சேர்க்கையில் ஆங்கில வழிப்பிரிவுகளில் சேர்ப்பதற்கு முன்னுரிமை தருகிறார்கள்; முனைந்து செயல்படுகிறார்கள்.

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் கடந்த 2013 மே 28ஆம் நாள் சென்னை பள்ளிக்கல்வி இயக்கக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, ஆங்கிலவழிப் பிரிவுத் திணிப்புத் திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியது. அதில் கலந்து கொண்ட சற்றொப்ப 300 பேர் தளைப்படுத்தப்பட்டனர். அதன்பிறகு, சூன் 17-இல் மாவட்டத் தலைநகரங்களில் மேற்படி கோரிக்கையை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 2013 ஆகத்து 7-இல் சென்னையில் கோட்டையை நோக்கி கோரிக்கை விண்ணப்பம் அளிக்கும் மாபெரும் பேரணி நடத்தினோம். அதில் 1200 பேர் தளைப்பட்டனர். 

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் 2014 சனவரி 24 அன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் திரு. கே.சி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து, ஆங்கில வழித் திணிப்பால் ஏற்படும் அபாயங்களை விளக்கி, அத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி வேண்டுகோள் விண்ணப்பம் கொடுத்தோம். அதே போல், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திருவாட்டி. சபீதா அவர்களிடமும் விண்ணப்பம் கொடுத்தோம். 

நமது தாய்மொழியாகவும் தேசிய மொழியாகவும் உள்ள தமிழைக் காப்பாற்றவும் தமிழ் வழியில் பயின்று தமிழர்கள் உலகத்தாரோடு போட்டியிடும் வகையில் அறிவுத்திறன் பெற்றிடவும் நாம் எடுத்த அறவழிப் போராட்டங்களையும் கோரிக்கை விண்ணப்பங்களையும் சிறிதளவு கூட தமிழக அரசு சட்டைசெய்யவில்லை. தமிழை வெளியேற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழியில் சேர்க்க விரும்புகிறார்கள் என்று தமிழக அரசு சொல்கிறது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றினால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழியில் சேர்ப்பர். மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை ஆகியவற்றில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 80 விழுக்காடு தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும். அதேபோல், வேலை வாய்ப்பில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 80 விழுக்காடு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்கட்டுமானங்களை வலுப்படுத்த வேண்டும். கல்விக் கொள்ளை வணிகத்திற்காக மெட்ரிக்குலேசன் – சி.பி.எஸ்.இ. கடைகளைத் திறந்து வைக்கும் இலாபவேட்டைக்காரர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான பல்வேறு கோரிக்கைகளை நாம் தமிழக அரசுக்குத் தொடர்ந்து வைத்து வருகிறோம். ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கற்பதை நாம் ஏற்கிறோம். இவற்றில் எதையும் செய்ய தமிழக அரசு முன்வரவில்லை.

தமிழக அரசின் தமிழ் நீக்க – ஆங்கிலத் திணிப்புத் திட்டம் தொடர்ந்து நிறைவேறினால், முதற்கட்டமாக பள்ளிக் கல்வியிலிருந்து தமிழ் நீக்கப்படும். அடுத்த கட்டமாக தமிழக அரசின் ஆட்சியில் இப்பொழுதிருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழ் ஆட்சி மொழியும் நீக்கப்பட்டுவிடும். தமிழர்கள் தங்கள் தாயகத்திலேயே ஆங்கிலம் – இந்தி போன்ற அயல் மொழிகளுக்கும், அயல் இனத்தாருக்கும் அடிமைப்பட்டு தங்கள் மொழியையும் இனத்தையும் இழக்கும் இழிநிலை உண்டாகும். அயல் இனத்தாரை அண்டிப்பிழைக்கும் அவலம் தான் மிஞ்சும்.

எனவே, தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்புத் திட்டத்தைக் கண்டித்தும், அதனைக் கைவிட வலியுறுத்தியும், சென்னையில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீட்டை 2014 மே 28 அறிவன் (புதன்) கிழமை அன்று முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

-=-=-=-=-=-=-=-
வேண்டுகோள்
-=-=-=-=-=-=-=-
தமிழ்வழிக் கல்விக் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு அமைப்புகளும், மற்றும் வெளியில் உள்ள தமிழ் அமைப்புகளும் தமிழ்ச் சான்றோர்களும் இன – மொழி உணர்வாளர்களும் இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் நிலைபாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்குப் பெருந்திரளான எண்ணிக்கையில் மக்கள் இதில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

நம் மொழி காக்க நடக்கும் இப்போராட்டத்தை மக்கள் திரள் போராட்டமாக நடத்திட, வரலாற்றில் தடம் பதிக்கும் போராட்டமாக ஆக்கிட ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு உணர்வாளரும் சென்னையிலும், மாவட்டங்களிலும் அந்தந்த வட்டாரங்களிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தியும், சுவரெழுத்து எழுதியும், துண்டறிக்கைகள் வழங்கியும், பதாகைகள் கட்டியும், உணர்வாளர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடியும் போராட்டத்திற்கு மக்களை அழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

தங்களன்புள்ள,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம். 

Monday, June 17, 2013

தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாடடம்!

தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் இன்று(17.06.2013) தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில், காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாநகர மாவட்டச் செயலாளர் திரு. மு.பூமிநாதன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய இயக்க மாநில பொருளாளர் திரு. மு.ரெ.மாணிக்கம், தோழர் பரிதி(தமிழ் தமிழர் இயக்கம்), திரு. கோ.செய்யது இப்ராகிம்(எஸ்.டி.பி.ஐ.), தோழர் கதிர்நிலவன்(தமிழ்த் தேசியக் குடியரசு இயக்கம்), திரு. வெற்றிச்செல்வன் (புரட்சிக்கவிஞர் பேரவை), தோழர் குமரசன் (த.பெ.தி.க), தோழர் முகில் அரசன்(தமிழ்ப்புலிகள்), தோழர் மணி தாபா (தமிழ்நாடு மக்கள் கட்சி), தோழர் மில்ட்டன் (தமிழ்நாடு மாணவர் இயக்கம்), திரு. பொன்மாறன்(தமிழ்க் காப்புக் கழகம்), தமிழியம் இதழாசிரியர் திரு. தமிழ்மகன், மக்கள் உரிமைப் பேரவை வழக்குரைஞர் சு.அருணாச்சலம், சமநீதி வழக்குரைஞர் சங்கம் திரு. இராசேந்திரன், அனைத்துக் கல்லூரி மாணவர் இயக்கம் திரு. முகிலன், தோழர் செல்வம் (ஆதித்தமிழர் பேரவை), மகளிர் ஆயம் அமைப்புக்குழுத் தோழர் மேரி, புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சென்னை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி.வேல்முருகன் தலைமையேற்றார். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் திரு. ஆனூர் செகதீசன் தொடக்கவுரையாற்ற, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனீபா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்நாடு மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, சேவ் தமிழஸ் இயக்க் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தோழர் தியாகு(த.தே.வி.இ.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். புலவர் பா.இறையெழிலன் நன்றி கூறினார். இவ்வார்ப்பாட்டத்தில் திரளான மகளிரும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர். தஞ்சை தஞ்சாவூர் பனகல் கட்டிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில், 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாவரம் திரு. சி.முருகேசன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, ம.தி.மு.க. பொருளாளர் திரு. துரை.சிங்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழக அமைப்பாளர் திரு. அரங்க குணசேகரன், திரு. ம.இரவிச்சந்திரன்(தமிழக வாழ்வுரிமைக் கட்சி), மனித நேய மக்கள் கட்சி திரு. ஜெ.ஜெலந்தர், தாளாண்மை உழவர் இயக்கம் திரு. கோ.திருநாவுக்கரசு, முனைவர் இளமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கிருட்டிணகிரி கிருட்டிணகிரி பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா எதிரில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. வேலுமணி, ம.தி.மு.க. நகரச் செயலாளர் திரு. சந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஓசூர் நகரச் செயலாளர் தோழர் முருகப்பெருமாள், தந்தை பெரியார் தி.க. மாவட்ட அமைப்பாளர் தோழர் ருத்ரன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் மாவட்டச் செயலாளர் தோழர் ஒப்புரவன். தமிழர் தேசிய இயக்கம் மாவட்டச் செயலாளர் தோழர் முருகேசன், தமிழ உழவர் முன்னணி இராயக்கோட்டைக் கிளைச் செயலாளர் தோழர் தூருவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திருவள்ளூர் திருவள்ளூர் தொடர்வண்டி நிலையம் அண்ணா சிலை அருகில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு அதியமான் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் கஜேந்திரன், திரு. குமரி நம்பி(சுதேசி இயக்கம்), திரு. ஆ.இராஜா திருநாவுக்கரசு (தமிழின உணர்வாளர் கூட்டமைப்பு), தோழர் மு.பெ.முத்தமிழ்மணி(தமிழர் தேசிய இயக்கம்), தமிழ்த் தேசக் குடியரசு இயக்க அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் திரு. வீரபாண்டியன், தமிழர் பேரரசுக் கட்சி வழக்கறிஞர் கணேசன், மனித உரிமைக்கான மக்கள் கூட்டம் தோழர் சு.ப.செம்பாண்டியன், புலவர் தமிழேந்தி(மா.பெ.பொ.க.), தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திரு. சு.நாச்சியப்பன், மனித நேய மக்கள் பாசறை திரு. நீலக்கண்டன், தமிழ்த் தேசியக் கூட்டணி வழக்கறிஞர் பா.குப்பன், தமிழ்நாடு மக்கள் கல்விக் கூட்டமைப்பு திரு. பசுமை மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாட்டாமை கட்டிடம் முன்பு காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, உலகத் தமிழ்க் கழக சேலம் மாவட்டத் தலைவர் திரு. வை.நா.ஆடல் அரசு தலைமையேற்றார். திரு. ஆனந்தராஜ்(ம.தி.மு.க.), தமிழக எல்லைப் போராட்ட தியாகிகள் சிங்கம் திரு. ரெ.ரெத்தினம், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவர் திரு. கே.சி.இளந்திரையன், உயிர்மைத் தமிழ்ச் சங்கம் திரு. சொல்லரசர், திரு காமராசு (ஆயுத எழுத்து தமிழ்ச் சங்கம்), திரு பூங்குழலி (தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம), திரு. அண்ணாதுரை (அம்பேத்கர் மக்கள் இயக்கம்), திரு. முரளி (உழைக்கும் மக்கள் முன்னணி), தோழர் தமிழியன் (புரட்கிசர மக்கள் முன்னணி), தோழர் இளமாறன்(த.ஓ.வி.இ.), திரு. சோலை இராஜா (தமிழர் முன்னேற்றக் கழகம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா வே.ஆனைமுத்து சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேலம் அமைப்பாளர் தோழர் ச.பிந்துசாரன் நன்றியுரைத்தார். இதே போன்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. தர்மபுரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவைக் காரணம் காட்டி, தமிழக அரசு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளது.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT