உடனடிச்செய்திகள்
Showing posts with label உரை. Show all posts
Showing posts with label உரை. Show all posts

Tuesday, September 24, 2019

“அன்பே சிவம் என்றால் – இனி ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் அடிப்பார்கள்!” ஐயா பெ. மணியரசன் உரை!

“அன்பே சிவம் என்றால் – இனி ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் அடிப்பார்கள்!” 
சத்தியவேல் முருகனார் பவள விழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!

தமிழ்த்தேசிய ஆன்மிகச் சான்றோர் ஐயா மு.பெ. சத்தியவேல் முருகனார் அவர்களின் 70ஆம் அகவை நிறைவு பெற்று – 71ஆம் அகவைத் தொடங்கும் நாளான 21.09.2019 காரி (சனி)க் கிழமை பிற்பகல் 2.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை பவள விழா சீரும் சிறப்புமாக சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் பங்கேற்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் :
“தமிழர் ஆன்மிகத்திற்கும் தமிழ் வழிபாட்டிற்கும் தம்மை ஒப்படைத்துக் கொண்ட ஐயா சத்தியவேல் முருகனார் அவர்களுக்கும், அவர்களின் இல்லத்தரசியார் அம்மா மல்லிகா அவர்கட்கும் அவர்கள் மகன் திருச்சுடர் நம்பி அவர்கட்கும், மகள் அருட்செல்வி அவர்கட்கும் இந்த பவள விழா நாளில் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்தியவேல் முருகனார் பற்றி எனக்கு 2002-ஆம் ஆண்டுதான் தெரிய வந்தது. அப்போது கரூர் அருகே திருமுக்கூடலூரில் உள்ள திருமுத்தீசுவரர் கோயில் குடமுழுக்கை ஆன்மிகத் தமிழ்ப் பெரியவர்களைக் கொண்டு தமிழ்வழியில் தமிழின உணர்வாளர்களும், தமிழ் ஆன்மிகர்களும் நடத்தி விட்டனர். பிராமணர்களும், அவர்களின் ஆதிக்கவாத ஆன்மிகத்திற்குப் பலியான தமிழர்களும் வானம் இடிந்து விழுந்ததைப் போல் அலறி ஆர்ப்பரித்துக் கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.

தமிழினத்தைச் சேர்ந்த தருமபுரம் ஆதின கர்த்தரும் திருப்பனந்தாள் ஆதினகர்த்தரும் கண்டனம் தெரிவித்தனர். பிராமணர்களைக் கொண்டு மறுபடி அக்கோயில் கோபுரத்திலும் உட்புறமும் தண்ணீர் விட்டுக் கழுவி “தீட்டுக்” கழித்தார்கள்.

இதற்கெல்லாம் அவர்கள் சொன்ன காரணம், ஆகமப்படி பிராமணர்கள்தாம் அர்ச்சனை செய்ய வேண்டும்; குடமுழுக்கு நடத்த வேண்டும்; அதுவும் சமற்கிருத மந்திரங்களை ஓதித்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்பதுதான்! பிராமணரல்லாதோர் குடமுழுக்கு செய்யக் கூடாது; தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது; அபச்சாரம்; அபச்சாரம் என்றார்கள்.

அந்தக் கூச்சல்களுக்கிடையே, ஒரு குரல் எழுந்தது. “எந்த ஆகமத்தில் அப்படி இருக்கிறது? எடுத்துக் காட்டுங்கள்! இருபத்தெட்டு ஆகமங்களில் எதில் இரு இருக்கிறது? ஆகமங்களைப் படித்தவன் நான். ஒரு ஆகமத்திலும் சாதி வேறுபாடு கூறப்படவில்லை. தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என்று எந்த ஆகமத்திலும் கூறப்படவில்லை. ஆகம விதிப்படி பார்த்தால் பிராமணர்கள் அர்ச்சகர்களாக இருக்கக் கூடாது. கட்டி எழுப்பப்பட்ட கோயில் வழிபாட்டை ஏற்காத பிராமணர்கள் ஸ்மார்த்தர்கள். ஆகமப்படி அவர்கள் கோயிலின் கொடிக் கம்பத்தைத் தாண்டி கோயிலுக்குள் நுழையக் கூடாது” என்று குரல் எழுப்பியவர் ஐயா சத்தியவேல் முருகனார். தமிழ்நாடே அதிர்ந்தது! அப்போதுதான் ஐயா அவர்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.

அப்போது, செயலலிதா அம்மையார் முதலமைச்சர். அவர் காஞ்சி சங்கராச்சாரியார் செயேந்திர சரசுவதி தலைமையில் இதுபற்றி ஆன்மிகப் பெரியவர்கள் கலந்து பேசி முடிவெடுக்க ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அக்கூட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில், ஒற்றைக் குரலாக – தமிழில் வழிபாடு நடத்த – தமிழ் அர்ச்சகராகச் செயல்புரிய எந்த ஆகமும் தடை விதிக்கவில்லை என்று எடுத்துக்காட்டுகளோடு வாதிட்டார் சத்தியவேல் முருகனார்.

சத்தியவேல் முருகனார் மீது வழக்கு

ஆகமப்படி அமைக்கப்பட்ட கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தவும், வழிபாடு நடத்தவும் சத்தியவேல் முருகனார்க்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி – தருமபுரம் ஆதினகர்த்தரும், திருப்பனந்தாள் ஆதினகர்த்தரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள்.

அப்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாங்கள் – பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் – ஒன்றுகூடி திருப்பனந்தாள் மடாதிபதியைக் கண்டித்து – அந்த மடத்தைச் சுற்றி வந்து – அதன் வாசலிலும் நின்று முழக்கமிட்டு, கண்டனப் பேரணி நடத்தினோம். பேரணி முடிவில் கண்டனப் பொதுக் கூட்டமும் நடத்தினோம்.

இதை அறிந்த சத்தியவேல் முருகனார் அவர்கள் என் மீது அன்பு செலுத்திப் பாராட்டினார்கள்.

சிதம்பரம் கோயில், தீட்சிதர்கள் சொத்தா?

தமிழ்ப் பேரரசர்களும் தமிழ் அறச் சிந்தனையாளர்களும் எழுப்பிய சிதம்பரம் நடராசர் கோயிலை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள தீட்சிதர்களைக் கோயில் நிர்வாகத்திலிருந்து வெளியேற்றி அக்கோயிலை தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. அப்போது, தி.மு.க. ஆட்சி நடந்தது. அறநிலையத்துறைக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகளும், தமிழ் உணர்வாளர்களாக இருந்தார்கள். தில்லைக் கோயிலை அறநிலையத் துறையில் சேர்ப்பதற்குரிய அத்தனை ஞாயங்களையும் சட்ட விதிகளையும் எடுத்து அவர்களிடம் விளக்கினார் சத்தியவேல் முருகனார்.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களுக்கு சட்ட நுணுக்கங்கள் – மரபுகளையும், ஆகம விதிகளையும் தில்லைக் கோயிலின் வரலாற்றுச் செய்திகளையும் விளக்கிச் சொன்னவர் சத்தியவேல் முருகனார். வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு வெற்றி கிடைத்தது! தில்லை நடராசர் கோயில் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைய ஆட்சித் துறை ஏற்று நடத்த 2009ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனால், ஆரியம் கூக்குரலிட்டது! சுப்பிரமணிய சாமி தலைமையில் தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.தி.மு.க. தலைவர் செயலலிதாவை தீட்சிதர்கள் நேரில் சந்தித்து முறையிட்டார்கள். அதன் பலனாக, செயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அவ்வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் உரியவாறு வாதிடவில்லை. உச்ச நீதிமன்றம் 2014 சனவரியில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, கோயிலைத் தீட்சிதர்கள் வசம் ஒப்படைத்தது. நீதிமன்றமாக இருந்தாலும் சென்னைச் சூழலுக்கும் தில்லிச் சூழலுக்கும் வேறுபாடு எப்போதும் உண்டு!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தி.மு.க. ஆட்சியில் 2006இல் ஓர் அரசாணை பிறப்பித்தார்கள். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிராமண அர்ச்சகர்கள் வழக்குப் போட்டார்கள். இவ்வழக்கில் 2015இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தீர்ப்பில் கூறியுள்ளார்களா, அவ்வாறு ஆக முடியாது என்று கூறியுள்ளார்களா என்பது பற்றி செய்தி ஊடகங்களில் ஒரே குழப்பம்! தீர்ப்பு வெளியான அன்று இரவு சத்தியம் தொலைக்காட்சியில் இத்தீர்ப்பு பற்றி விவாதம்! என்னையும் அழைத்திருந்தார்கள். தீர்ப்பு பற்றி தெளிவுபடுத்திக் கொள்வதற்காக ஐயா சத்தியவேல் முருகனாரிடம் தொலைப்பேசி வழியாக விளக்கம் கேட்டேன். தெளிவாகச் சொன்னார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தபோது, அதில் தன்னையும் எதிர்த்தரப்பாக இணைத்துக் கொண்டு தானே உச்ச நீதிமன்றத்தில் கூர்மையாக வாதாடியவர் சத்தியவேல் முருகனார் அவர்கள்.

அர்ச்சகர் பணிக்கு “சாதி” அடிப்படைக் கூறு அல்ல! ஆனால், ஆகமப்படி கட்டப்பட்ட கோயில்களில் அந்தந்த ஆகமதத்தை – சமயப் பிரிவைச் சேர்ந்தவர்களைத்தான் அர்ச்சகராக அரசு அமர்த்த வேண்டும் என்பதே தீர்ப்பு என்றார்கள்.

அதாவது, இந்துக் கோயிலாக இருந்தாலும், அதில் சைவம் – வைணவம் போன்ற பிரிவுகள் மற்றும் ஆகமப் பிரிவுகள் இருக்கின்றன. இவற்றை வகையறாக் கோயில்கள் (Denomintion Temples) என்று வகைப்படுத்துவார்கள். அந்தந்த வகைக் கோயிலில் – அந்தந்த வகை வழிபாடு செய்வோரைத்தான் அர்ச்சகராக அமர்த்த வேண்டும். எடுத்துக்காட்டாக, சைவக் கோயிலில் சைவப் பிரிவைச் சேர்ந்தவரும், வைணவர் கோயிலில் வைணவப் பிரிவைச் சேர்ந்தவரும் அர்ச்சகராய் அமர்த்தப்பட வேண்டும். இதில் என்ன சிக்கல்? ஒன்றுமில்லை! உச்ச நீதிமன்றம் சொல்கின்ற ஆகமக் கோயில்கள் தமிழ்நாட்டில் மிகமிகக் குறைவு என்ற உண்மையையும் சத்தியவேல் முருகனார் சொன்னார்.

மேலும், இத்தீர்ப்பை விளக்கி ஏடுகளில் செவ்வி கொடுத்தார். “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு, ஐயா அவர்களின் விரிவான நேர்காணலை ஒரு கட்டுரை போலவே போட்டிருந்தது. தி.க. தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள், அதைத் தமிழாக்கி – பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டுப் பரப்பினார்.

ஆனால் தங்கள் ஆட்சியில் இந்த அரசாணையை வெளியிட்ட தி.மு.க. ஆடவில்லை; அசையவில்லை! ஏற்கெனவே தமிழ்வழி அர்ச்சகர் பயிற்சி பெற்றுள்ள பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாகக் கோயில்களில் பணியமர்த்துமாறு ஆட்சியாளர்களுக்குக் கோரிக்கை வைத்து, பரப்புரை செய்தது தமிழ்த்தேசியப் பேரியக்கம். செயலலிதா ஆட்சி அத்தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்தது. அதைச் செயல்படுத்துமாறு கலைஞர் கருணாநிதியோ அ.தி.மு.க. அரசை வலியுறுத்த மறுத்தார் கலைஞர் கருணாநிதி.

இந்து மதம் – ஒரு கூட்டு மதம்

இன்று ஆரியத்துவ ஆன்மிக ஆக்கிரமிப்பு தமிழ்நாட்டில் தீவிரமாகி வருகிறது. நாம் இந்து மதத்தை எதிர்க்க வேண்டியதில்லை. இந்து மதத்தை ஆரியப் பிராமணர்கள் உருவாக்கவில்லை. இந்து மதம் என்ற பெயரை 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேய ஆட்சிதான் கொடுத்தது. சிந்து நதியை அடையாளமாக வைத்து இந்தியா என்று ஒரு நிர்வாகப் பெயர் கொடுத்ததும், இந்து என்று மதப்பெயர் கொடுத்ததும் வெள்ளையரே!

இந்து என்ற சொல்லில் எந்தக் கெட்ட உட்பொருளும் இல்லை. பல்வேறு சமயப் பிரிவுகளின் தொகுப்புக்குப் பெயர்தான் இந்து மதம்! இந்து மதத்தை உருவாக்கிய தலைமை ஆசான் யாரும் இல்லை! தலைமை குருமார் யாரும் இல்லை. புனிதமான ஒற்றைத் தத்துவ நூல் இல்லை. ஒற்றைக் கடவுள் வழிபாடும் இல்லை. பல கடவுள்களை வழிபடும் மக்கள் இந்து மதத்தில் இருக்கிறார்கள். கடவுளை மறுப்பவர்களும் இந்து மதத்தில் இருக்கிறார்கள். யாரும் ஒருவரை இந்து மதத்திலிருந்து நீக்க முடியாது. தமிழர்களுக்கு எதிரானவை – ஆரிய பிராமணிய வைதீகமும், வர்ணாசிரமமும்தான்!

இந்த ஆரிண பிராமணிய வர்ணாசிரமத்தை எதிர்க்க வேண்டும். இந்து மதத்தை எதிர்க்க வேண்டியதில்லை.

தமிழ்ச் சிவநெறி

தமிழ்ச் சைவம் – இயல்பாகவே ஆரிய – சமற்கிருத – வைதீக – வர்ணாசிரம எதிர்ப்புச் சமயம்தான்! தமிழை முதன்மையாகக் கொண்டது. தமிழ்ச் சைவமும் சரி, தமிழ் வைணவமும் சரி, இரண்டும் சாதி கடந்த மனித ஒற்றுமையைத்தான் வலியுறுத்துகின்றன.

“என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே”

என்றார் திருமூலர்! தமிழ்ச் சைவமும், தமிழும் பிரிக்க முடியாதவை!

“திசையனைத்தின் பெருமையெலாம்
தென்திசையே வென்றேற
அசைவில்செழும் தமிழ் வழக்கே
அயல் வழக்கின் துறை வெல்ல”

என்றார் சேக்கிழார். திருநாவுக்கரசர் ஊர் ஊராகச் சென்று சைவம் பரப்பிய செய்தியை “தமிழ்நாடெங்கும் போனார் ஞானத் தலைவர்” என்றார் சேக்கிழார்! சிவபெருமானையும் தமிழ் மொழியையும் இணைத்தே முதன்மைப்படுத்துகிறது தமிழ்ச் சைவம்!

இன்னிசையால் தமிழ் பாடும் ஞான சம்பந்தன் என்று பெருமையாகக் கூறிக் கொண்டவர் திருஞானசம்பந்தர். தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றார் மாணிக்கவாசகர். இவர்கள் தமிழைத் தமிழ்நாட்டை முதன்மைப்படுத்தியதால் பிராமணர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டுவதில்லை!

தமிழர் மாலியமும் தமிழைத்தான் முதன்மைப்படுத்தியது. பூதத்தாழ்வார் தன்னைப் “பெருந்தமிழன்” என்று கூறிப் பெருமைப்பட்டார். ஆனால், இன்று தமிழ் வைணவம் பிராமண ஆதிக்கத்தின் கீழ் இருப்பதுதான் கொடுமை!

அன்பே சிவம் என்றால் அடி விழும்

இன்று ஆரிய பிராமண ஆதிக்கம் அரசியல் அதிகாரத்தோடு சாட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு வருகிறது. நீங்கள் தமிழில் “அன்பே சிவம்” என்றும், “நம சிவாய வாழ்க!” என்றும் தெருவில் சொல்ல முடியாத காலம் நெருங்கிக் கொண்டுள்ளது. “அன்பே சிவம்” என்று ஆன்மிகக் குரல் எழுப்பினால் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் உங்களை அடிக்கும்! “ஜெய் ஸ்ரீராம் எனச் சொல்; ஜெய் ஹனுமான் சொல்; பாரத் மாத்தா கீ ஜே சொல்” என்று கூறி, அந்தப் பரிவாரங்கள் அடிக்கும்!

அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் விநாயகர் அகவல் பாடவில்லை! “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், பாரத் மாத்தா கீ ஜே” – முழக்கங்கள்தான் போட்டார்கள்.

“மாலே, மணிவண்ணா! ஆழிமழைக் கண்ணா” என்று தமிழ் வைணவர்கள் தெருவில் பாடினாலும் அடிப்பார்கள். ”ஜெய் ஸ்ரீராம்” சொல்லச் சொல்வார்கள்!

அப்படியெல்லாம் தமிழ்நாட்டில் செய்ய முடியாது என்று எண்ணாதீர்கள்! அவர்கள் அன்றும் இன்றும் சிறுபான்மைதான்! நாம் பெரும்பான்மைதான்! ஆனால், அவர்கள் ஆதிக்கத்தைத்தான் நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். அவர்கள் புதிதாகக் கொண்டு வந்த சற்கிருதத்தில்தான் வழிபாடு நடத்த வேண்டும் என்றார்கள்; ஏற்றுக் கொண்டோம்! அவர்கள் தமிழ் முருகனை – சுப்ரமணிய என்றார்கள்; நாம் முருகனைக் கைவிட்டு சுப்ரமணியவை உச்சரிக்கிறோம். ஐயாறப்பனை அவர்கள் பஞ்ச நதீசுவரர் என்றார்கள் ஏற்றுக் கொண்டோம். அறம் வளர்த்த நாயகியை தர்மசம்வர்த்தினி என்றார்கள். ஏற்றுக் கொண்டோம்! இந்த சமற்கிருதப் பெயர்களில் வடநாட்டில் – ஆரிய வர்த்தத்தில் கோயில்கள் இருக்கின்றனவா? இல்லை!

நம்முடைய முதுகுன்றத்தை விருத்தாச்சலம் என்று மாற்றினார்கள். ஏற்றுக் கொண்டோம். நம்முடைய மரைக்காட்டை வேதாரணியம் என்று மாற்றினார்கள், ஏற்றுக் கொண்டோம். இப்படி எத்தனையோ கடவுட் பெயர்களை – ஊர்ப் பெயர்களை சமற்கிருதப் பெயர்களாக மாற்றினார்கள், ஏற்றுக் கொண்டோம். இன்றைக்குத் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுகிறார்களா? இல்லை! மிகப்பெரும்பாலோர் சமற்கிருதத்தில் பெயர் சூட்டுகிறார்கள். பேசுவது, எழுதுவது ஆங்கிலம்; பெயர் சூட்டுவது சமற்கிருதம்! என்னே கொடுமை!

வீதிக்கு வாருங்கள்

சிவநெறி, மாலிய நெறிகளில் உள்ள ஆன்மிகச் சான்றோர்களே, ஆன்மிகத் தொண்டர்களே, ஐயா சத்தியவேல் முருகனார் போல் தமிழினம் காக்க, தமிழ் மொழி காக்க, தமிழர் ஆன்மிகம் காக்க வீதிக்கு வாருங்கள்! நம் அடையாளத்தை அழித்து நம்மை ஆரிய பிராமண அடிமைகளாக்கிடத் துடிப்போர் – வேத, இதிகாச, புராணப் புரட்டு ஆன்மிகத்தை முன்வைத்து வீதிக்கு வந்துள்ளார்கள்; நம் மக்களைத் தங்கள் தலைமையின் கீழ் திரட்டிக் கொள்கிறார்கள்!

நம்முடைய வள்ளலார் போல் மறைமலை அடிகளார் போல், நமது சமத்துவ ஆன்மிகத்தைத் தமிழினத் தற்காப்புத் தத்துவமாக்குங்கள்! வீதிக்கு வாருங்கள்! சமற்கிருதம் கலக்காமல் – தனித்தமிழில் எழுதவும் பேசவும், பிராமணப் புரோகிதர்களை அழைக்காமல் தமிழ் அறவோரைக் கொண்டு குடும்பச் சடங்குகளை, கோயில் விழாக்களை நடத்தவும், 1916இல் தனித்தமிழ் இயக்கம் கண்டார் மறைமலை அடிகளார்.

வீதிக்கு வந்த வள்ளலார் மனித சமத்துவத்திற்கான – தமிழர், தமிழ் மொழிக் காப்பிற்கான சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு செயல்படும் தமிழர்களே, தமிழ் மொழி காக்க – தமிழ் இனம் காக்க வீதிக்கு வாருங்கள்! ஐயா சத்தியவேல் முருகனார் போல் வெளியே வாருங்கள்!”.
(21.09.2019 அன்று நிகழ்த்திய சொற்பொழிவில் நேரங்கருதி குறைத்துக் கொண்ட சில செய்திகள் இதில் கூடுதலாக இடம் பெற்றுள்ளன).

நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்களும், பல்வேறு அமைப்புத் தலைவர்களும் பங்கேற்று ஐயா சத்தியவேல் முருகனாரின் பணிகளைப் பாராட்டினர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன், நடுவண் சென்னை செயலாளர் தோழர் மு. வடிவேலன், தோழர்கள் பிரசாந்த், முத்துராமலிங்கம், கோ. செந்தாமரை, மணி தெள்ளியன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, November 27, 2017

“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழீழக் கருத்து வாக்கெடுப்பு முயற்சிகள் முன்செல்ல வேண்டும்!” சென்னை கருத்தரங்கில் - தோழர் கி. வெங்கட்ராமன் உரை!

“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழீழக் கருத்து வாக்கெடுப்பு முயற்சிகள் முன்செல்ல வேண்டும்!” சென்னை கருத்தரங்கில் - தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் உரை!
“கட்டலோனியா, குர்திஸ்தான் - அடுத்து ஈழம்?” என்ற தலைப்பில், இளந்தமிழகம் இயக்கம் சார்பில், 25.11.2017 காலை, சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, “விசை” இணைய இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் அ.மு. செய்யது தலைமை தாங்கினார்.

இளந்தமிழகம் இயக்கத் தோழர்கள் வசுமதி, சரவணக்குமார், வினோத் களிகை, பட்டுராசா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவர் திரு. தமிமுன் அன்சாரி, சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணன், ஊடகவியலாளர் தோழர் ஆழி செந்தில்நாதன், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பட்டுராசன் காந்தி, தமிழ்நாடு மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் இளையராசா ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தோழர் கி.வெ. அவர்களது உரையின் எழுத்து வடிவம் :

“கட்டலோனியா, குர்திஸ்தான் - அடுத்து ஈழம்?” என்ற தலைப்பில், முகாமையான பொருளில், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள தோழர்களுக்கு முதலில் எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டலோனியா, குர்திஸ்தான் தேசிய இனப் போராட்டங்கள் குறித்து நாம் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு, இதுபோன்ற கருத்தரங்குகள் பயன்பட வேண்டும்.

பொதுவாக நாம், “கருத்து வாக்கெடுப்பு” என்றும், “பொது வாக்கெடுப்பு” என்றும் மாறிமாறிப் பயன் படுத்துகிறோம். இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உண்டு! பொது மக்கள் பங்கெடுக்கும் வாக்கெடுப்புதான் என்றாலும், ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டின் மீது நடக்கும் வாக்கெடுப்பு என்பதால், குறிப்பாக தேசிய இறையாண்மை குறித்தது என்பதால் நாம் இதனை “கருத்து வாக்கெடுப்பு” (Plebiscite) என்றே கூற வேண்டும். “பொது வாக்கெடுப்பு’’ எனக் கூறக்கூடாது என்பது எனது கருத்து!

அவ்வகையில், குர்திஸ்தான் - கட்டலோனியாவில் தங்கள் விடுதலையை முன்னிறுத்தி நடத்திய கருத்து வாக்கெடுப்புகளை நாம் ஆதரிக்கிறோம். கட்டலோனியா, குர்திஸ்தான் தேசிய இன விடுதலைப் போராட்டங்களை, தமிழ்ச்சூழலுக்கு எப்படிப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் நாம் சிந்திக்க வேண்டும்.

நம் எல்லோருக்கும், தமிழீழ விடுதலை என்ற நோக்கத்தில் பொது கருத்தும், அக்கறையும் இருக்கிறது. தமிழீழத்தில் ஒரு மாபெரும் இன அழிப்பு நடந்த நிலையில், அந்த அக்கறை நம்மிடத்தில் கூடுதலாகவும் உள்ளது. ஆனால், அதனை சாத்தியப்படுத்துவதற்கான அணுகுமுறையில் நம்மிடையே வேறுபாடுகள் உள்ளன.

ஐ.நா.வின் சட்டங்கள் - பிரகடனங்கள் போன்ற வற்றில், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை வைத்துக் கொண்டு என்றைக்குமே வல்லரசு நாடுகள் தேசிய இனங்களின் உரிமைப் போராட்டத்திற்கு தானே முன்வந்து ஆதரவு தெரிவித்த வரலாறு கிடையாது! வரலாற்று நிர் பந்தங்களின் அடிப்படையிலேயே அவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதுவும் அவர்களது நாட்டு நலன் களை அல்லது அவர்களது ஆதிக்கத் தேவைகளுக்கு இசைவாக இருக்கும் போதுதான் ஆதரிக்கிறார்கள்.

பொதுவுடைமை சித்தாந்தத்தை முன்வைத்து ஆட்சி செய்த சோவியத் - சீனா போன்ற நாடுகள், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, தேச விடுதலைப் போராட்டங்களுக்கு துணையாக நின்றது உண்மை தான்! ஆனால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளதையும் பார்க்கிறோம்.

மாபெரும் தலைவர் மாசேதுங் உயிரோடு இருந்த காலத்தில்தான், சீனா - திபெத் தேசிய இனத் தாயகத்தை ஆக்கிரமித்தது.

தேசிய இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை அளித்து - உலகிற்கே முன்னெடுத்துக்காட்டாக விளங்கும் அரசமைப்புச் சட்டத்தை, சோவியத் ஒன்றியம் வைத்திருந்தது. அந்த உரிமையைக் கொண்டு பின்லாந்து நாடு பிரிந்து போவதை தலைவர் லெனின் ஏற்றுக் கொண்டு, தனி நாடு அமைத்துக் கொள்ள வழிவிட்டார்.

இங்குதான் நாம் “சோவியத் ரசியா” என்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், அவர்கள் சட்டப்படி “சோவியத் ஒன்றியம்” என்றுதான் சொன் னார்களே ஒழிய, நாட்டின் பெயரில் “இரசிய” அடையாளம் வெளிப்படையாக வராமல்தான் பார்த்துக் கொண் டார்கள்.

ஆனால், ஏட்டளவில் உரிமைகள் இருந் தாலும், நடைமுறையில் சோவியத் நாட்டில், இரசிய மொழி - இரசிய இன ஆதிக்கம் மேலாங்கியது. லெனின் காலந்தொட்டு, அங்கு இரசிய மேலாதிக்கத்திற்காக நடந்த அத்துமீறல்கள் குறித்து உக்ரேனியன் கம்யூனிஸ்ட்டுகள் இப்போது எழுதுகிறார்கள். லாட்வியக் கம்யூனிஸ்ட்டுகள் வெளிப்படுத்துகிறார்கள். சோவியத் ஒன்றியம் சிதறிப் போனதில், இரசிய மேலாதிக்கத்திற்கு முகாமையான பங்குண்டு!

லெனின் பிரிந்து போகும் உரிமையை ஆதரித்தாலும், தேச அரசு அமைத்துக் கொள்வதை நிபந்தனையற்று ஏற்கவில்லை. தேசியத் தன்னுரிமையை மணமுறிவு (விவாகரத்து உரிமைக்கு) இணையானதாகக் கூறினார். அதாவது பல தேசங்கள் சேர்ந்து இருப்பது குடும்பமாக வாழ்வது போல் இயல்பானது; பிரிந்து சென்று தேச அரசு அமைப்பது விவாகரத்து போல விதிவிலக்கானது. என்பதுதான் லெனின் கோட்பாடு!

ஐ.நா.வின் உரிமைப் பிரகடனத்தின் உறுப்பு 1 (2) இல், எல்லா தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை உண்டு என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்கு முரணாக அடுத்த பகுதியிலேயே, உறுப்பு நாடுகளின் இறையாண்மையை - பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரண்டு பிரிவுகளையும் தேவைக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது தங்களுக்கு சாதகமாக வல்லரசு நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

எப்போதுமே தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது, எதிர்நிலையான இந்த சர்வதேச சூழலில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டுதான் முன்னேறுகிறது! வரலாற்றுத் தேவைகளைக் கருதி, வல்லரசுகள்கூட தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் சூழல் வரலாம். ஒரு ஏகாதிபத்திய வல்லரசு நாடு ஆதரிக்கிறது என்பதற்காக ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல் இருக்கக் கூடாது என்று லெனின் சொன்னார்.

அதுபோல், வட அமெரிக்கா ஆதரிக்கிறது என்பதற்காக ஒரு விடுதலைப் போராட்டத்தை, “அமெரிக்கக் கையாட்களின் போராட்டம்” என்று முத்திரை குத்திவிட முடியாது. குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் அதுதான்!

ஈராக், துருக்கி போன்ற பல நாடுகளிடையே குர்து இன மக்கள் சிதறிக் கிடக்கின்றனர். துருக்கியில் ஒசலான் தலைமையில் பி.கே.கே. என்ற கம்யூனிஸ்ட் தொழி லாளர் கட்சி தேசிய இன விடுதலைப் போராட்டத்தை பல்லாண்டுகளாக - பல ஒடுக்குமுறைகளை எதிர்த்து முன்னேறிக் கொண்டுச் சென்றுள்ளது. ஒசலான் வாழ் நாள் சிறையாளியாக துருக்கியில் அடைக்கப்பட் டுள்ளார்.

1988இல் ஈராக்கில் சதாம் உசேன் அரசு, குர்து மக்களை இனப் படுகொலை செய்து, தொகை தொகையாகக் கொன்ற போது குர்து மக்களின் விடுதலைத் தாகம் பெருமளவில் பேசப்பட்டது. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது, குர்திஸ்தான் விடுதலை இயக்கத்தினர் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு மாகாண அரசு ஏற்படுத்திக் கொள்வதற்கான சூழலாக அதை அமைத்துக் கொண்டார்கள்.

அதன் தலைவர் பர்சானி அப்போதே சொன்னார். “எங்களுக்கு சாதகமான சூழல் வரும்போது எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு இந்த மாகாண அரசைப் பயன்படுத்திக் கொள்வோம்’’ என்றார். அதைத்தான் இப்போது 25.09.2017இல் கருத்து வாக்கெடுப்பு நடத்தி - தங்கள் விடுதலைக் கோரிக்கையை உலகறியச் செய்துள்ளனர்.

விடுதலைக் கோரிக்கைக்காக ஆயுதம் தூக்கினால் அதை பயங்கரவாதம் என்கிறாயே, இதோ அங்கீகரிக்கப்பட்ட அரசைக் கொண்டு - சனநாயக வடிவிலேயே எங்கள் விடுதலைக் கோரிக்கையை - மக்கள் கருத்தாக நாங்கள் முன்வைக்கிறோம் என்று குர்து மக்களும், கட்டலோனிய மக்களும் தெரிவித் துள்ளார்கள்.

செர்மனி மேலாதிக்கத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம், கொசோவா விடுதலையை ஆதரிக்கிறது, ஆனால், கட்டலோனியா விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அதுபோல்தான் பல வல்லரசுகளும்!
இதே சூழலில்தான், கனடாவில் கியூபெக் மாகாணத்திலும், ஐக்கிய முடியரசான பிரிட்டனில் ஸ்காட்லாந்திலும் கருத்து வாக்கெடுப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. எந்த வல்லரசும் அதை முன்வைக்கவில்லை. அங்கிருக்கும் சனநாயக வளர்ச்சிக்கேற்ப, அதை அங்குள்ள பிரிட்ஷ் அரசும், கனடா அரசும்தான் நடத்தியது.

பல தேசிய இனங்கள் வாழக்கூடிய நாட்டில் “கூட்டாட்சி” (Federation அல்லது Confederation) என்பது தோற்றுப்போன ஒரு கோட்பாடு! கூடுதல் உரிமைகள் பெற்றெல்லாம் ஒரு தேசிய இனம் கூட்டாட்சியில் நிலைத்துவிட முடியாது! கூடுதல் அதிகாரத்தை நோக்கிப் போவதே இயல்பாக நடப்பதில்லை. தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் வலுவாகும் இடங்களில் அவற்றின் அழுத்தத்தில் அவற்றை எதிர்கொள்ள சில இடங்களில் நடக்கலாம்.

சோவியத் ஒன்றியத்தைவிட, தேசிய இனங்களுக்கு உரிமை வழங்கிய ஒரு அரசமைப்புச் சட்டம் உலகில் எங்காவது உண்டா? ஆனால், நடைமுறையில் ரசிய மொழி இன மேலாதிக்கம்தான் அங்கு நடந்தது. ஒரே கட்சி, ஒரே சித்தாந்தம் என்ற வழியில் அது நடந்தது. வட அமெரிக்காவில் பெரும்பாலும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களின் ஆங்கிலோ சாக்சன் மொழியினரின் கூட்டாட்சியாக அது இருந்தாலும் கூட, அங்கும் முரண்பாடுகள் வெடிக்கின்றன. கலிபோர்னியாவில் தனி நாட்டுக் குரல் கேட்கிறது. பல தேசிய இனங்களின் கூட்டாட்சி அரசில், ஏதாவதொரு தேசிய இனம் மேலாதிக்கம் செலுத்துவது இயல்பாக உள்ளது.

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி சன்னி பிரிவு முஸ்லீம்கள் ஆட்சியாகத்தான் நடந்தது. குர்திஸ்தானில், சன்னி இசுலாமியப் பிரிவினரே பெரும் பான்மையாக உள்ளனர். கட்டலோனியாவில் ரோமன் கிருத்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஸ்பெயினிலும் அவ்வாறே! இருப்பினும், அங்கெல்லாம் மதத்தைத் தாண்டி மொழி வழி தேசிய இனப் போராட்டம் நடக்கிறது. பண்பாட்டுக் கூறாக மதம் இருக்கலாமே தவிர, மொழி - தாயகம் தான் தேசிய இனத்தின் அடித்தளமாக இருக்கின்றன. இவையே விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையாக உள்ளன. சில அரிதான சூழல்களில், நாகாலாந்து போன்ற இடங்களில் பல மொழி பேசுபவர்கள் வரலாற்றுத் தாயகம் என்ற அடிப்படையில், ஒரு தேசிய இனமாக ஒருங்கிணைந்து கொண்டு, தங்களுக்கான தேச அரசை அமைத்துக் கொள்ளப் போராடுவதும் நடக்கிறது. இது சராசரிப் போக்கல்ல!

தமிழீழத்தில் இன்றைக்குள்ள நிலையில், விடுதலைக் கோரிக்கையை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில் அங்கு அமைப்பு ரீதியான சில குழப்பங்கள் உண்டு!

தமிழீழத்தில், தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு தேச அரசை நிறுவி ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்த அரசையும், தமிழீழ மக்களையும் சிங்கள பௌத்த இனவெறி அரசு பல நாடுகளின் பங்ளிப்போடு போர் நடத்தி - இரத்தக் களரியில் அழித்தொழித்தது.

எனவே, பன்னாட்டுச் சமூகம்தான் ஐ.நா.வழியே அந்த அரசை மீட்டெடுத்துத் தர வேண்டும்! அதற்கான கருத்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்க வேண்டும். அதற்குமுன், நமக்கு சில புரிதல்கள் வேண்டும்.

இந்தியாவின் அனுசரணையோடு - இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்நகர்த்தவே முடியாது என்ற அடிப்படைப் புரிதல் நமக்கு வேண்டும். எந்தவொரு அரசுக்கும் வர்க்கத்தன்மை இருப்பதைப் போல், அவற்றுக்கு ஒரு இனத்தன்மையும் இருக்கிறது. அவ்வாறு, இந்தியாவுக்கு ஒரு ஆரிய இனத்தன்மை இருக்கிறது. ஆரியக் கட்டமைப்பாக அது செயல்படுகிறது.

ஆண்டாண்டு காலமாக ஆரியத்திற்கு எதிராக நிற்கும் தமிழினத்தை பகையாக நிறுத்தியே, இந்தியா பிறந்து வளர்ந்து நம்முன் நிற்கிறது என்ற புரிதல் நமக்கு அவசியமானது!

உலகின் புவிசார் அரசியல் நிலைமைகள் அவ்வப்போது மாறலாம். சோவியத் - அமெரிக்கா என்ற இருமுனை உலகம் இருந்தபோது, உலக நிலைமைகள் வேறு! இன்றைக்கு, வட அமெரிக்கா தலைமையில் ஒருமுனை உலகம் வலிந்து திணிக்கப்படும் சூழலில், அதற்கு எதிராகப் பலமுனை உலகம் உருவாகி வரும் சூழல் வேறு! எனவே, புவிசார் அரசியல் நலன் என்பது தற்காலிகமானது!

இன்னொருபக்கம், சீன எதிர்ப்புக்காக இந்திய அரசு தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சொல்லும் கருத்தாளர்கள் இருக்கின்றனர். இந்தியா ஒருபோதும் அவ்வாறு செய்யாது! தமிழினப் பகையோடுதான், இந்திய அரசு சீன எதிர்ப்பை முன்வைக்கும். அவ்வாறுதான் செயல்படுகிறது. தனது பிம்ஸ்டெக் (BIMSTEC) கூட்டமைப்பிலும், சாகர் மாலா திட்டத்திலும் சீனாவோடு கைகோக்கிறது. பன்னாட்டு உறவு வெறும் கருப்பு வெள்ளையாக இல்லை!

எனவே, இந்தியா - தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடுதான் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசியல் அணி வகுப்பை நாம் முன்வைக்க வேண்டும்.

தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வழக்கம்போல் சிங்கள அரசு எதிர்க்கும்! எனவே, அதற்கு ஆதரவாக வெளியில்தான் சூழல்களை உருவாக வேண்டும். அப்பணியில் நாம் ஈடு பட வேண்டும்.

இன்றைக்கு, பல தடைகளைக் கடந்து தமிழீழத்தில் மாவீரர் நாள் எழுச்சியோடு கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில், மாவீரர் நாள் என்பது துக்கம் கொண்டாடும் நிகழ்வல்ல! “நாங்கள் ஒரு தேசம்! இது எங்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் எதிரியால் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள்’’ என்று உலகிற்குத் தங்கள் விடுதலைக் கோரிக்கையை பறைசாற்றும் நிகழ்வு!

இவ்வாறான சூழலில், தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த விரும்பினால், அதற்கு மிகப்பெரிய தடையாக இந்தியாதான் முன் நிற்கிறது!

நாமெல்லாம் நேசித்த கியூபா, வெனிசுவேலா போன்ற பல இடதுசாரி நாடுகள், இந்தியாவின் உதவி வேண்டும் என்பதற்காகத்தான், கேள்வி இல்லாமல் இந்தியா ஆதரித்த இலங்கையின் தமிழின அழிப்புப் போரை ஆதரித்தார்கள். இதில் முதலாளிய நாடு - பொதுவுடைமை நாடு என்ற சித்தாந்த வேறுபாடுகள் கிடையாது!

இன்றைக்குள்ள உலகச் சூழலில், தேசிய விடுதலைப் போராட்டம் என்பது, வல்லரசுப் போட்டிகளுக்கு உள்ளே நுழைந்து நடத்தும் ஒரு காய் நகர்த்தல் ஆகும்! வெறும் கொள்கை உறவோடு, ஞாயங்களின் அடிப்படையில் அது நடக்காது! மனித உரிமை ஆர்வலர்கள் இருப்பார்கள், மக்கள் இருப்பார்கள். ஆனால், அரசு என்பது ஒரு போதும் ஞாயத்தின் பக்கம் நிற்காது. தங்கள் அரசுக்கு அல்லது தங்கள் மண்டலத்திற்கு ஒரு நலன் இருக்கிறதென்றால், ஒரு தேச விடுதலைப் போரை ஆதரிக்கும் நிலை ஏற்படலாம்!

இன்னொரு கருத்தை முன் வைக்கின்றனர். கட்டலோனியா மற்றும் குர்திஸ்தானில், மாகாண அரசுதான் கருத்து வாக்கெடுப்பை நடத்தியது. எனவே, இங்கேயும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியைப் பிடித்த பிறகு அவ்வாறு கருத்து வாக்கெடுப்பு நடத்து வோம் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு வாய்ப்பில்லை!
ஒரு சாதாரண பஞ்சாயத்துத் தேர்தலில், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்குக் கூட “இந்திய ஒருமைப் பாட்டை - இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம்” என்று ஒருவர் வாக்குறுதி அளித்தால் தான், இங்கு தேர்தலிலேயே நிற்க முடியும்! இந்திய அரசமைப்புச் சட்டம், தேர்தல் முறை ஆகியவை அத்தகையவை! கருத்து வாக்கெடுப்பு என்று அறிவித்தால் அடுத்த நொடி தமிழ்நாட்டு ஆட்சியை இந்திய அரசு கலைத்துவிடும்!

“அடைந்தால் திராவிட நாடு” என முழங்கியவர்கள் கூட, ஏதோவொரு வடிவத்தில் விடுதலைக் கோரிக்கையை முன்வைத்தபோது, தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். தி.மு.க.வுக்கு அப்போது கூடுதல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்தனர். ஆனால், இந்திய அரசு ஒரு தடைச்சட்டம் போட்டு அதை கைவிடச் செய்தது.

தனிநாடு கேட்டவர்கள் ஆயிற்றே என தமிழ் நாட்டுக்குக் கூடுதல் உரிமைகள் எல்லாம் கொடுக்கப் படவில்லை. கூடுதலாக அதிகாரங்கள்தான் பறிக்கப் பட்டன. மாநில உரிமைகள் பல பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அவ்வாறுதான், தமிழ்நாட்டின் கல்வி உரிமைப் பறிக்கப்பட்டு இந்திய அரசால் “நீட்” தேர்வு கொண்டு வரப்பட்டது.

இந்திய நாடாளுமன்றம்தான் தேசிய இன ஒடுக்குமுறையின் முதன்மைக் கருவியாக இருக்கிறது. சனநாயகம் என்ற போர்வையில் ஆரியமய இந்தி இனத்தின் ஆதிக்கம், ஆரிய வளையத்தில் வீழ்ந்துபோன பிற இனங்களின் துணையோடு நடக்கிறது. நாடாளுமன்றப் பெரும்பான்மை என்பது அதுதான்!

எல்லா வகையிலும் அதிகாரத்தை மையப்படுத்துவதென்பது வெறும் சட்டப்பிரச்சினை அல்ல! சமற்கிருத இந்தி மொழித் திணிப்பும், மாநில உரிமைகள் பறிப்பும் ஆரிய இன மேலாதிக்கத்திற்காக நடக்கின்றன. மோடி இதில் வேகமாக உள்ளார் என்றால், காங்கிரசு அதில் கொஞ்சம் பதமாக நடக்கிறது. அடிப்படையில் இருவருக்கும் வேறுபாடில்லை!

சிலர், பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று கூறுகின்றனர். அது உயர்ந்த இலட்சியம்தான் என்றாலும், அதற்கு உடனடி வாய்ப்பில்லை!

எனவே, முதல் கட்டமாக ஒத்த தேசிய இனங்கள் என்ற வகையில் தமிழர்கள் தங்கள் இறையாண்மை இலட்சிய அடிப்படையில் ஒன்று சேர வேண்டும். தமிழர்களின் தேசியத் தாயகங்களான தமிழீழமும் தமிழ்நாடும் “தமிழர் சர்வதேசியம்” என்ற வகையில், பொதுப் புரிதலோடு ஒத்திசைய வேண்டும்.

அதன் வழியிலேயே, தமிழீழத்துக்கான கருத்து வாக்கெடுப்பு நோக்கி நாம் நகர முடியும்! தமிழீழம் இன்றைக்கு எலும்புக் கூடாக இருக்கலாம்! சாம்பல் மேடாக இருக்கலாம். ஆனால், நாளை எழும்! சாம்பலிலிருந்து மீண்டும் எழும்! மாவீரர்களின் ஈகம் வீண் போகாது! தமிழீழம் உறுதியாய் வெல்லும்!”.
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Tuesday, August 1, 2017

“ஆரியப் பேரினவாதம் தமிழை ஏற்காது!” மதுரை வழக்கறிஞர்களின் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டத்தில் . . .தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உரை !

“ஆரியப் பேரினவாதம் தமிழை ஏற்காது!” மதுரை வழக்கறிஞர்களின் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டத்தில் . . .தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உரை !
சென்னை உயர் நீதிமன்றத்திலும், அதன் மதுரைக் கிளையிலும் தமிழை வழக்காடும் மொழியாக ஆணையிட வலியுறுத்தி, வழக்கறிஞர்களும் இன உணர்வாளர்களும் 9 பேர், சூலை 27 - 2017 முதல் மதுரை மாநகர் காளவாசல் பகுதியில், காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த உண்ணாப் போராட்டத்தில், வழக்கறிஞர் கு. பகத்சிங், வழக்கறிஞர் வே. முருகன், வழக்கறிஞர் ச. எழிலரசு, வழக்கறிஞர் மு. வேல்முருகன், வழக்கறிஞர் மு. செல்வக்குமார், வழக்கறிஞர் வே. திசையிந்திரன், மே பதினேழு இயக்கத் தோழர் மெய்யப்பன், மருது மக்கள் இயக்கம் தோழர் செ. முத்துப்பாண்டியன், இசுலாமிய சனநாயக முன்னணி தோழர் மதுக்கூர் அ. மைதீன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொருளாளர் தோழர் அ. விடியல், மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி, தோழர்கள் சிவா, இளமதி, தங்கப்பழனி ஆகியோர் நான்காம் நாள் (30.07.2017) உண்ணாப் போராட்டப் பந்தலில் சந்தித்து, அவர்களின் போராட்ட இலட்சியத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களின் ஈகத்திற்கு வாழ்த்துக் கூறினர்.

போராட்டத்தை வாழ்த்தியும், போராளிகளைப் பாராட்டியும் தோழர் பெ. மணியரசன் பேசியதன் எழுத்து வடிவம் :
“தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழை உயர் நீதிமன்ற வழக்குமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் ஒருசேர வலியுறுத்தி இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியிலும், தி.மு.க. ஆட்சியிலும் இதற்காக சட்டப்பேரவைத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு, அவை இந்திய அரசுக்கு முறைப்படி ஆளுநர் வழியாக அனுப்பப்பட்டன. எனவே, இங்கு தமிழை உயர் நீதிமன்ற மொழியாக்குவதில் எந்தக் கட்சிக்கும் மாற்று கருத்துகள் இல்லை. எனவே, நாம் ஒன்றுபட்டு இக்கோரிக்கையை எடுத்துச் சென்று போராடுவதற்கான தருணம் இது!

இந்திய அரசமைப்புச் சட்டம், தமிழர்களை அடிமைப்படுத்தும் அடிமை சாசனம் என்பதே எங்கள் கருத்து! இருந்தாலும், அதில் வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச உரிமைகளைக்கூட இந்திய அரசு வழங்குவதில்லை. அதிலும், தமிழர்களுக்கு அந்த உரிமைகள் அறவே இல்லை என்றாகிவிட்டது!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 348 (2)இன்படி, மாநில அரசு ஆளுநர் வழியாக - அம்மாநில மொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கப் பரிந்துரைத்தால் இந்திய அரசு அதை ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். இந்தி மாநிலங்களில் உறுப்பு 348 (2)-ஐப் பயன்படுத்தி இந்தியை அவர்கள் உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவித்து, செயல்படுத்தி வருகின்றனர். ஆனால், இது ஏன் தமிழுக்குப் பொருந்தாது என்கிறார்கள்? இதைத்தான் நாங்கள் இனப்பாகுபாடு என்கிறோம்!

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 153(ஏ)வின்படி, இந்த “இனப்பாகுபாடு” தண்டனைக்குரிய குற்றமாகும்! ஆனால், இந்தக் குற்றத்தைச் செய்வது இந்திய ஆட்சியாளர்களும், உச்ச நீதிமன்றமும் என்பதுதான் வேதனை; வேடிக்கை!
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி நீதி வழங்க முடியுமா? அவ்வாறு வழங்க முடியுமெனில் இந்திய அரசமைப்புச் சட்டம் எதற்கு? அதன் பெயரால் உறுதி எடுப்பதெல்லாம் மோசடி அல்லவா?

தமிழை வழக்கு மொழியாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு கோரிக்கை அனுப்பினால், அதை இந்திய ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்புகிறார்கள். எதற்காக அதை உச்ச நீதிமன்ற பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்? உச்ச நீதிமன்றத்தில் சட்டங்களில் சரி தவறுகளை பார்க்கலாமே தவிர, உச்ச நீதிமன்றமே சட்டமியற்றிக் கொண்டிருக்க அதிகாரமுண்டா? அப்படியென்றால், நாடாளுமன்றம் -_- சட்டமன்றம் எதற்காக?

இந்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தன் சட்ட நடைமுறைகளில் சில விளக்கங்களை (Clarifications) கேட்கலாமே தவிர, அதன் பரிந்துரைக்கு அனுப்புவது எதற்காக? இதில் என்ன சட்டக் குழப்பம் இருக்கிறது? அரசமைப்புச் சட்ட 348(2) படி, இச்சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டியதுதான் நடுவண் அரசின் வேலை!

எனவே, தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக்கக் கூடாது என்பதற்காக சூழ்ச்சியாக உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அத்தீர்மானத்தை இந்திய அரசு அனுப்பியது. இது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா?

காங்கிரசும், பா.ச.க.வும் அண்ணன் தம்பிகள் போல, இருவருக்கும் பெரிய அளவில் கொள்கை வேறுபாடுகள் கிடையாது. எனவேதான், இவ்விருவரும் இந்திய அரசை ஆளும்போது, தமிழை வழக்கு மொழியாக்க மறுத்தார்கள்.

இங்கே கூட்டாட்சி நடப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், தமிழை வழக்கு மொழியாக்கினால் “தேசிய ஒருமைப்பாடு”க்கு ஆபத்து வந்துவிடும் எனக் கூப்பாடு போடுகிறார்கள். உண்மையில், “தேசிய ஒருமைப்பாட்டு”க்கு அல்ல - வடக்கத்தியரின் ஆரிய மேலாதிக்கத்திற்குத்தான் இது ஆபத்து என்று அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆரிய மொழியான சமற்கிருதம் போட்ட கலப்பினக் குட்டிதான் இந்தி! எனவே அதை வழக்கு மொழியாக்க அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. சமற்கிருதத்தையே வழக்கு மொழியாக அறிவித்தால்கூட, அங்கு எதிர்ப்புகள் எழாது!
அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், பா.ச.க.வின் ‘ஆரியத்துவாப் பொறுக்கி’ சுப்பிரமணிய சாமி, “ஒரு நாட்டில் ஒரு மொழிதான் இருக்க வேண்டும். அதுபோல் இந்தியாவுக்கு இருக்க வேண்டிய ஒரு மொழி சமற்கிருதம்தான். இடைக்காலத்திற்காகத் தான் இந்தி இருக்கிறது, ஏனெனில், இந்தியை சமற்கிருத வரி வடிவத்தில்தான் இப்பொழுது எழுதுகிறோம். எனவே கொஞ்ச நாளைக்கு இந்தி! அதன்பிறகு சமற்கிருதம்தான் இந்தியாவின் ஒற்றை மொழியாக இருக்க வேண்டும். இப்போது தமிழில் 40 விழுக்காடு சமற்கிருதச் சொற்கள் கலந்துள்ளன. மலையாளத்தில் 70 விழுக்காடு சமற்கிருதச் சொற்கள் இருக்கின்றன. இதேபோல் இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளிலும் சமற்கிருதச் சொற்கள் நிறைய இருப்பதால், எல்லோராலும் சமற்கிருதத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும். எனவே, தமிழை சமற்கிருத வரி வடிவத்தில் எழுதிப் பழக வேண்டும்” என்று கூறினார்.

அவர் வெளிப்படையாகக் கூறி வருவதைத்தான் காங்கிரசும், பா.ச.க.வும் ஒளித்து, மறைத்து செய்து வருகின்றன. பா.ச.க.வைப் போலவே, காங்கிரசும் சமற்கிருதத் திணிப்புக் கொள்கை உடையதுதான்! ஏன் காங்கிரசின் அனைத்திந்தியத் தலைமை, பா.ச.க.வின் சமற்கிருதத் திணிப்புக்கு எதிராக முழங்குவதில்லை?

ஒரே வரி - ஒரே மொழி - ஒரே மையம் என்று இந்திய அரசு செயல்படுகின்றது. நமக்கு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதைப் போல், அனைத்து மாநிலங்களுக்கும்தான் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆனால், நீட் - ஜி.எஸ்.டி. என மாநில உரிமைப் பறிப்புகளுக்கு எதிராக, பீகார், உ.பி., ம.பி., ராசஸ்தான் போன்ற இந்தி மாநிலங்கள் ஏன் கொதித்தெழுவதில்லை?

நடுவண் அரசு வலுப்படுவது என்பது, இந்தி பேசுவோரின் அரசு வலுப்படுகிறது என்று பொருள்! அவர்களுக்கு மாநில அரசு, ஒரு வட்டார அரசு போல! இந்திய அரசு - தங்களது சொந்தப் பேரரசு என்று கருதுகிறார்கள்!

தற்போது அவர்களது ஆரிய இனத்திற்கு ஒரு பேரரசர் போல, நரேந்திர மோடி கிடைத்திருக்கிறார். மற்ற மாநிலங்களின் உரிமைகளெல்லாம் பறிக்கப்பட்டு, தங்களின் இந்திப் பேரரசு மோடியின் ஆட்சியின் கீழ் வலுப்படுத்தப்பட்டு வருகிறது என்ற பூரிப்பு அவர்களுக்கு இருக்கிறது. எனவேதான் அவர்கள் மாநில அரசுகளின் உரிமைப் பறிப்புகளுக்கு எதிராகக் கொந்தளிப்பதில்லை!

இந்தியாவிலேயே வரி வசூலில் அதிகத் திறனுடைய மாநிலம் தமிழ்நாடு! நம்முடைய மாநிலத்தில் வரி வசூலித்து, அதை இந்தி மாநிலங்களுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், வறட்சி - புயல் பாதிப்பை சந்திக்கும் நாம் 100 ரூபாய் கேட்டால், வெறும் 3 ரூபாய்தான் கொடுக்கிறார்கள். இது இனப்பாகுபாடு இல்லையா?
விந்திய மலைக்கு வடக்கே மற்றும் கிழக்கிலும் மேற்கிலும் இரு கடல்கள் வரை உள்ள மண்டலம் ஆரிய வர்த்தம் என்றார் மனு. அந்த ஆரிய வர்த்தத்தின் ஆட்சிதான் இப்போது நடக்கிறது. அதற்கு சரியான அடியாளாக நரேந்திர மோடி கிடைத்திருக்கிறார்.

மோடி குசராத்தியாக இருந்தாலும் ஆரிய வைசியர். அதுமட்டுமல்ல, இந்திக்காரரை விஞ்சிய இந்தி வெறியர்!

இரசியர்கள் தங்களை மகா இரசியர் என்றுகூறி தற்பெருமை கொள்வார்களாம். இரசியர் அல்லாத ஜார்ஜியராகப் பிறந்த ஸ்டாலின், இரசியர்களைவிடத் தீவிரமாக இரசிய மொழித் திணிப்பிலும், இரசியப் பெருமிதவாதத் திணிப்பிலும் ஈடுபட்டார். அப்போது நோய்வாய்ப்பட்டிருந்த லெனின், ஸ்டாலினின் இரசியத் திணிப்பை அறிந்து, இரசியராய்ப் பிறந்தவரைவிட மகா இரசியராக ஸ்டாலின் இருக்கிறார் என்று கண்டித்தார். இது லெனின் தொகுப்பு நூல்களில் உள்ளது.

எனவே, மாநில உரிமைகளைப் பறிக்கும் மோடியின் ஆரிய ஆதிக்கவாதத்துக்கு வடக்கத்தியரிடம் எதிர்ப்புகள் வருவதில்லை!

வங்காளம், மராட்டியம் போன்ற மொழிகளில் இலக்கியச் செழுமை இருந்தாலும், அவை சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அதுபோல், தெற்கில் தமிழ்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் ஆரிய சமற்கிருதக் கலப்பிலேயே உயிர் வாழ்பவை. “மொழி ஞாயிறு” பாவாணர் அவர்கள் கூறுவார். “தமிழ் தவிர்த்த இதரத் தென்னிந்திய மொழிகளில் வடசொல் சேரச் சேர அம்மொழிகள் சிறப்புப் பெறும்! தமிழோ வடசொல் தீரத் தீர சிறப்புப் பெறும்!”.

நீட் தேர்வில் தமிழ்நாடுதான் கடுமையாக பாதிக்கப் படுகின்றது. இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. எனவே, இங்கு வெளி மாநிலத்தவரை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கத் துடிக்கிறார்கள். ஏற்கெனவே, வெளி மாநிலத்தவரை தொடர்வண்டித் துறை முதற்கொண்டு இந்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் தேர்வு என்ற பெயரில் மோசடிகளையும் முறைகேடுகளையும் அரங்கேற்றி, தமிழ்நாட்டில் திணித்துக் கொண்டுள்ளார்கள். நீட் தேர்வு நிலைமையை இன்னும் மோசமாக்கப் போகிறது.

தொடக்கத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ. மாணவர்களை அதிகமாகச் சேர்ப்பார்கள். சில ஆண்டுகள் கழிந்ததும், அனைத்திந்திய அளவில் மதிப்பெண் வரிசைப்படி வடநாட்டு மாணவர்களையும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களையும் தமிழ்நாட்டில் அதிகமாகச் சேர்ப்பார்கள். மண்ணின் மக்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காது!

எனவேதான், நம் மீது இனப்பாகுபாடு காட்டப்படுகிறது எனத் திரும்பத் திரும்ப சொல்கிறோம். நாம் சட்ட நுட்பங்களை மட்டும் பேசிக் கொண்டிருந்தால் போதாது. இந்திய அரசின் இனப்பாகுபாட்டை அம்பலப்படுத்த வேண்டும்! நமக்கான இன உரிமையைப் பேச வேண்டும்!

நம் தமிழ்ப்பேராசான் வள்ளுவப் பெருந்தகை, “நோய்நாடி நோய் முதல் நாடி” என்றார். நாம் சிக்கலின் தன்மையைப் புரிந்து அதன் வேரை அறிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசின் ஆரியப் பேரினவாத அரசியலை அடையாளம் காண வேண்டும்.

இங்கே காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் தோழர்களில் வழக்கறிஞர்கள் கு. பகத்சிங், வே. முருகன், ச. எழிலரசு, மு. வேல்முருகன், மு. செல்வக்குமார், வே. திசையிந்திரன் ஆகியோர் கடந்த முறையும் இதே காலத்தில் இதே இலட்சியத்திற்காக காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்கள். இதே கோரிக்கை அட்டையை ஏந்தி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அரங்கில் அமைதியாக அமர்ந்து அறப்போராட்டம் நடத்தினார்கள். அதனால் இவர்களின் வழக்கறிஞர் தொழில் செய்யும் உரிமைப் பறிக்கப்பட்டது.

ஒருமுறை பாதிப்புகளை எதிர்கொள்வோர் மீண்டும் போராட்டக்களத்திற்கு வருவதில்லை என்ற கூற்றை உடைத்து சுக்குநூறாக்கி, அந்த பாதிப்புகளையெல்லாம் எதிர்கொண்டு, இப்போது மீண்டும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். இந்த ஈகத்தை - போர்க்குணத்தை நாம் பாராட்ட வேண்டும்!

புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் பாடிய ஒரு பாடல் உள்ளது. “இந்த உலகம் ஏன் இயங்குகிறதென்றால், இந்திரன் அருந்தும் அமிழ்தமே கிடைத்தாலும் _ தான் மட்டும் உண்ணாமல் பிறருக்கும் அளித்து உண்ணும் மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு தவறு செய்தால், உலகமே கிடைக்கும் என்றாலும், அத்தவறை செய்ய மாட்டார்கள். உயிரே போகுமென்றாலும் பிறருக்கு நலம் பெயர்க்கும் செயலை செய்வார்கள். தனக்கென வாழாது, பிறர்க்கென வாழும் இப்படிப்பட்ட மாந்தர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்குகிறது” என்று “உண்டாலம்ம” என்று தொடங்கும் பாடலில், 2500 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார்.

அந்த ஈக உணர்ச்சியின் தொடர்ச்சி தமிழினத்தில் இன்றைக்கும் இருக்கிறது என்பதற்கான சான்றுகளில் ஒன்றே இந்த ஒன்பது பேரின் காலவரம்பற்ற உண்ணாப்போராட்டம்! இக்கோரிக்கை வெல்ல வேண்டும்! இந்தப் போராட்டத்தைத் தமிழ் மக்கள் கையெலடுக்க வேண்டும்! இப்பணியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கிறது! உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! நன்றி! வணக்கம்!”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, October 27, 2016

“சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி.. பழம்பெருமை பேசும் சீனர்களிடம் உள்ள சனநாயகம்கூட இந்தியாவின் ஆரியத்திடம் இல்லை!” சிங்கப்பூர் மேனாள் குடியரசுத் தலைவர் திரு. எஸ்.ஆர். நாதன் நினைவேந்தலில் - பெ. மணியரசன் உரை!

“சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி.. பழம்பெருமை பேசும் சீனர்களிடம் உள்ள சனநாயகம்கூட இந்தியாவின் ஆரியத்திடம் இல்லை!” சிங்கப்பூர் மேனாள் குடியரசுத் தலைவர் திரு. எஸ்.ஆர். நாதன் நினைவேந்தலில் - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் உரை!


சிங்கப்பூரின் மேனாள்  குடியரசுத் தலைவரான -_ தமிழர் திரு. எஸ்.ஆர். நாதன் அவர்கள், கடந்த 22.08.2016 அன்று தமது 92ஆவது அகவையில், சிங்கப்பூரில் காலமானார். தஞ்சைத் தமிழ்ச் சங்கம் சார்பில், அவரது நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 26.09.2016 மாலை தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, “புதிய பார்வை” இதழ் ஆசிரியர் முனைவர் ம. நடராசன் தலைமை தாங்கினார். தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிரீகம் செய்த சங்கர், உண்ணாப்போர் நடத்தி உயிரீகம் செய்த திலீபன் ஆகியோரின் படங்களுக்கு, தலைவர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி, மெழுகு திரி ஏற்றி நிகழ்வு தொடங்கப்பட்டது. தமிழர் தேசிய முன்னணிப் பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன் வரவேற்றார். 
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள், திரு. எஸ்.ஆர். நாதன் அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துணைத் தலைவர் தோழர் சி. மகேந்திரன், நாம் தமிழர் கட்சி தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை, ம.தி.மு.க. பொறியாளர் வி. விடுதலைவேந்தன் உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினர். நிகழ்ச்சியை, பேராசிரியர் வி. பாரி ஒருங்கிணைத்தார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பேசியதாவது:
“1999ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகள், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக பணியாற்றிய எஸ்.ஆர். நாதன் என்று அன்போடு அழைக்கப்பட்ட திரு. செல்லப்பன் இராமநாதன் அவர்களின் பன்முக ஆளுமை குறித்து, அவர் மறைந்த பிறகே நான் அறிந்து கொண்டேன். சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக அதிக நாட்கள் பணியாற்றதும் அவரே என்று இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டார்கள்.
பல்வேறு தேசிய இன மக்கள் வாழும் நாடான சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக இருந்த ஒரு தமிழர், கல்வியில் சிறந்து விளங்கி, மொழிபெயர்ப்பாளர் பணியாற்றி, பல்வேறு நாடுகளில் தூதராகப் பணியாற்றி பல்கலைக்கழகத் துணை வேந்தராக விளங்கி பன்முக ஆளுமை கொண்ட மனிதராக வாழ்ந்திருக்கிறார். பள்ளிக்கல்வியில் தோல்வியுற்று, பின்னர் சொந்த முயற்சியில் தொலைக்கல்வி கற்று அரசியல் வித்தகராக, ஆய்வாளராக உயர்ந்திருக்கிறார். அவரது இந்தத் தன்முயற்சி நம் இளைஞர்களுக்கு உந்து விசை அளிக்கும்.
அவரது இறுதி ஊர்வலத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டதையும், சிங்கப்பூர் அரசு சிறப்பாக அவருக்கு நன்றி தெரிவித்ததையும் இங்கு, இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் காட்டிய ஆவணப்படம் விளக்கியது.
தமிழ் மக்கள் சிங்கப்பூர், மலேசியா, தென்னாப் பிரிக்கா என பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும் தாய்த்தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையே குருதி ஓட்டம் போன்ற உயிரோட்டமுள்ள தொடர்பு இல்லை!
உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களை அரவணைத்து, அவர்களுக்கு ஒரு காப்பகம் போல் தாய்த்தமிழ்நாடு விளங்க வேண்டும். இவ்வாறான தமிழர் பன்னாட்டு உறவு உருவாகிட, வளர்ந்திட தமிழர் சர்வதேசியம் தேவை.
இவ்வாறு உலகத் தமிழர்கள் அனைவரும், எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் தங்களுக்குள் ஒரு சர்வதேசியத்தை _- தமிழர் சர்வதேசியத்தைக் கட்டி வளர்க்க வேண்டுமென நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். 2011ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்ட போது, அந்த நிகழ்வில் இதை நான் கூறினேன். மீண்டும் அதை வலியுறுத்துகிறேன். 
அப்படி, நமக்குள் ஒரு சர்வதேசியம் இருந்தால்தான், நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு _- ஒருவருக்கொருவர் உந்து விசையாகப் பணியாற்ற முடியும். இல்லையெனில், நாம் துண்டு துண்டாகத்தான் சிதறிக் கிடப்போம்.

தமிழீழத்தில் நம் இன மக்கள் இனப்படுகொலை செய்த போது, அதை உலகமே வேடிக்கைப் பார்த்தது. சர்வதேச சமூகம் வேடிக்கைப் பார்த்தது.
எனவே, இனி நமக்கு அப்படியொரு நிலை வரக்கூடாது. சர்வதேச சமூகம் நம்மை திரும்பிப் பார்ப்பதற்கு, நாமொரு சர்வதேசியமாக அதாவது,- தமிழர் சர்வதேசியமாக செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
சீனர்களுக்கு எப்பொழுதும் ஒரு ஆதிக்க மனப் பான்மை உண்டு. அவர்கள் பழம்பெருமையில் திளைப்பவர்கள். தங்கள் பண்பாடுதான் சிறந்தது, தங்கள் மொழி தான் சிறந்தது, உலகில் சிறந்த இனம் _- தங்கள் ஹன் தேசிய இனம்தான் என்ற உளவியலை அவர்கள் எப்பொழுதும் பெற்றிருப்பார்கள்.

அப்படிப்பட்ட சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ஆனால், இந்தியாவில் தமிழுக்கு என்ன நிலை என்று எண்ணிப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. ஆதிக்க மனப்பான்மை கொண்ட சீனர்கள்கூட, தமிழ் மொழியை அங்கீகரிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் ஏன் இந்த நிலை இல்லை?
உலகத்தில் சீனர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் சீன நாடு அதில் தலையிட்டு, அங்கு சீனர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால், உலகத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டால், அந்தத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டுத் தமிழர்களால் தலையிட முடியவில்லை. ஏனெனில், தமிழ்நாடு இறையாண்மையுள்ள ஒரு தேசமாக இல்லை. தமிழ்நாடு ஐ.நா. மன்றத்தில் குரலெழுப்ப முடியாது. தமிழர்கள் தங்களுடைய மக்கள் வலிமையை வைத்துத் தமிழ் நாட்டில் போராடினால்தான், உலகின் கவனத்தை ஈர்க்க முடியும்.
150 கோடி மக்கள் பேசும் மொழி சீன மொழி. அந்த இனம் பெரும்பான்மையாக உள்ள சிங்கப்பூரில் தமிழை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யாருமே பேசாத ஆரியர்களின் சமற்கிருத மொழியைத் தமிழ்நாட்டில் திணிக்கிறார்கள். சமற்கிருதம் படி அல்லது அதன் குட்டி மொழியான இந்தியைப் படி என்கிறார்கள். சமற்கிருதம் யாருடைய தாய்மொழி? யாருடைய பேச்சு மொழி? எல்லா துறைகளிலும் அந்த மொழியின் மேலாண்மையை நிறுவ இந்திய அரசு ஏன் துடிக்கிறது?
சீனர்கள் தமிழ் மீது அச்சப்படாமல், தமிழை ஆட்சி மொழியாக - கல்வி மொழியாகத் தொடர வாய்ப் பளித்தனர். ஆனால், இந்தியாவோ தமிழைக் கண்டு அச்சம் கொள்கிறது. தமிழை ஒடுக்கியே -_ நசுக்கியே வைத்திருக்க வேண்டுமெனக் கருதுகிறது. அதனால்தான் தஞ்சாவூரின் பள்ளிகளில்கூட, சமற்கிருதத்தைத் திணிக்க _- இந்தியைத் திணிக்க இந்திய அரசு திணிக்கிறது. ஆரியம் எப்பொழுதும் சனநாயகத்தை மதிக்காது; சனநாயகத்தை விரும்பாது. அது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவே முனையும்.

இங்கே தஞ்சையிலும் - சென்னையிலும் உள்ள பள்ளி _- கல்லூரிகளில் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கும் அவலம் இருக்கிறது. மக்களின் அறியாமைப் பயன் படுத்தி, மக்களிடம் உள்ள அண்டிப்பிழைக்கும் கோழைத்தனத்தைப் பயன்படுத்தி, தமிழை சொந்த மண்ணிலேயே அழிக்கத் துடிக்கின்றனர். இந்த ஆதிக்க நிலையை முறியடிக்க வேண்டும்.
இந்தியாவின் ஆட்சியாளர்கள், தாங்கள் மட்டுமே வாழ வேண்டும் -_ தங்கள் மொழி மட்டுமே வாழ வேண்டும் என்று, சிறிதளவுகூட சனநாயகம் உணர்வு இல்லாத ஆரியச் சிந்தனையோடுதான் இருக்கிறார்கள்; செயல்படுகிறார்கள். அதனால்தான், கடைக்கோடி கிராமங்களில்கூட இந்தியைத் திணிக்கிறார்கள். இதனை நாம் ஒன்றுபட்டு எதிர் கொள்ள வேண்டும்.
திரு. செல்லப்பன் இராமநாதன் அவர்களுக்க வணக்கம் செலுத்தும் வேளையில், நம் சொந்த மண்ணில் தமிழ் மொழி உரிமை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும்! திரு. எஸ்.ஆர். நாதன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!”
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார். நிறைவில், உலகத் தமிழர் பேரமைப்பு திரு. குபேந்திரன் நன்றி கூறினார். நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்கள் பங்கேற்றனர்.



Sunday, December 14, 2008

'தமிழர் எழுச்சி உரைவீச்சு' நிகழ்வில் தோழர் பெ.மணியரசன் உரை!

தமிழகத்தில் பேரெழுச்சி உருவாக்கிய  'தமிழர் எழுச்சி உரைவீச்சு' நிகழ்வில் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ. மணியரசன் உரை! 

தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் “தமிழர் எழுச்சி உரைவீச்சு” என்ற தலைபபில், 14.12.2012 அன்று எழுச்சிமிகுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானப் பொதுமக்கள் கலந்து கொண்ட இப்பொதுக்கூட்டத்தில், தமிழீழ விடுதலையையும், அவர்களது விடுதலை அமைப்பான விடுதலைப்புலிகளை ஆதரித்தும் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி, இயக்குநர் சீமான் ஆகியோர் பேசினர். 

தலைவர்களின் இப்பேச்சை கண்டு கொதித்த காங்கிரசுத் தலைவர்கள், தமிழகக் காவல்துறையினரிடம் புகார் மனு கொடுத்தனர். அதற்கேற்ப கருணாநிதி அரசின் காவல்துறை தோழர்கள் பெ.மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தது.






போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT