உடனடிச்செய்திகள்
Showing posts with label காவிரி உரிமை. Show all posts
Showing posts with label காவிரி உரிமை. Show all posts

Wednesday, December 12, 2018

“அத்துமீறும் கர்நாடகா - அதிர்ச்சியில் தமிழகம்!” புதிய தலைமுறை வார ஏட்டில்.. தோழர் கி. வெங்கட்ராமன் செவ்வி..!

“அத்துமீறும் கர்நாடகா - அதிர்ச்சியில் தமிழகம்!” புதிய தலைமுறை வார ஏட்டில்.. தோழர் கி. வெங்கட்ராமன் செவ்வி..!
காவிரியைத் தடுத்து கர்நாடகம் அணை கட்டுவது குறித்து, “அத்துமீறும் கர்நாடகா - அதிர்ச்சியில் தமிழகம்!” என்ற தலைப்பில், 12.12.2018 நாளிட்ட “புதிய தலைமுறை” வார ஏட்டில் செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களது கருத்து வெளி வந்துள்ளது. அதில், அவர் தெரிவித்துள்ளதாவது :

“காவிரி தீர்ப்பாயம் 192 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற முதலில் தீர்ப்பளித்தது. அதன் பிறகு வந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அதிலிருந்து 14.75 டி.எம்.சி. தண்ணீரை குறைத்து தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. இந்த 14.75 டி.எம்.சி. தண்ணீர் என்பதே பெங்களூருக்கான குடிநீர் தேவைக்காக என்றுதான் சொன்னார்கள்.

இப்போது மீண்டும் குடிதண்ணீருக்காக மேகதாதுவில் 67 டி.எம்.சி. கொள்ளளவில் அணை கட்டப் போவதாக சொல்வது சட்டவிரோதம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படிதான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பின்படி அந்த குழுவின் தலைவராக முழுநேர தலைவரை நியமிக்காமல் பகுதி நேர தலைவரை நியமித்துள்ளது மத்திய அரசு. இதுவும் சட்டவிரோதம். இப்போது அந்த ஆணையத்தின் ஒப்புதலை பெறாமலேயே இந்த அணையை கட்டவும் முயற்சிக்கிறது.

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவே வாய்ப்பில்லை. மேகதாது அணை 67 டி.எம்.சி. கொள்ளளவில் கட்டப்படுகிறது. இது கபினி, ஏரங்கி உள்ளிட்ட அணைகளை விடவும் பெரியது. இந்த அணை கட்டப்படும் மேகதாது என்னும் இடம் கர்நாடகாவில் இருந்துவரும் காவிரி தண்ணீர் மேட்டூர் அணையில் சேரும் இடத்திற்கு கொஞ்சம் முன்னால் உள்ளது. இங்கு அணை கட்டப்பட்டால் காவிரியில் வரும் நீர் மற்றும் இடையில் பொழியும் மழை உள்ளிட்ட அத்தனை நீரையும் மேகதாதுவில் நிரப்புவார்கள். அதன்பிறகு ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு வர வாய்ப்பில்லை.

தமிழகம் வீணாக தண்ணீரை கடலில் கலக்கிறது. அதனால் நாங்கள் மேகதாதுவில் தண்ணீரை சேமிக்கப் போகிறோம் என்று சொல்லித்தான் கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகிறது.

நான்கு மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி இந்த மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் தன்னிச்சையாக கர்நாடகம் அனுப்பிய அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கெனவே சிவசமுத்திரம் நீர் மின் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் அனுப்பியபோது, அதனுடன் தமிழகத்தின் அனுமதி கடிதம் இல்லாததால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அதேபோல், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அமைச்சகம் அனுமதி அளிக்காது என்று முன்பு உமாபாரதி கூறியிருந்தார்.

உமாபாரதியின் நிலைப்பாட்டைத்தான் தற்போதைய அமைச்சர் நிதின் கட்கரியும் எடுத்திருக்க வேண்டும். மேகதாது அணைக்கான வரைவு அறிக்கையுடன் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் இணைக்கப்பட்டாத நிலையில் கர்நாடக மனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்; மாறாக அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது”.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, June 29, 2014

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து துயர்துடைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் - தோழர் கி. வெங்கட்ராமன் வேண்டுகோள்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து
துயர்துடைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும்
தமித் தேசப் பொதுவுடைமைக் கட்சிப்
பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வேண்டுகோள்!

இந்திய அரசின் துணையோடு அடாவடியாகக் கர்னாடகம் காவிரி நீர் மறுப்பதாலும், முல்லைப்பெரியாறு சிக்கலில் கேரளத்தின் இனவெறி காரணமாக அணையில் 142 அடி தண்ணீர் தேக்க முடியாததாலும் ஏற்பட்டுள்ள சிக்கல் ஒரு புறம், தொடர்ச்சியாக 3 ஆண்டுகளாக மழைகுறைந்து வருவது மறுபுறம் என்று மிகப்பெரும் தண்ணீர் சிக்கலில் தமிழ்நாடு தத்தளிக்கிறது.

நெல், வாழை, கரும்பு, பருத்தி போன்ற பயிர்கள் மட்டுமின்றி மரப்பயிர்களும் வறட்சிக்காரணமாக பொய்த்து விட்டன.

காவிரி பாசனப்பகுதிகளில் கூட நிலத்தடி நீர் 500 அடிக்கு கீழே போகத் தொடங்கிவிட்டது. நிச்சயமற்ற மின் வழங்கலும் சேர்ந்து சிக்கலை ஆழப்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம், குளித்தலை பகுதிகளில் கூட தென்னை மரத்திற்கே தண்ணீர் இன்றி அவை வாடுகின்றன. வறட்சியை தாங்கி நிற்கும் பனைமரம் கூட சேலம் மாவட்டம், எடப்பாடியில் கருகி வருவதாகவும் ஏறத்தாழ 7000 மரங்கள் கருகி உதிர்ந்து விட்டதாகவும், ஏடுகளில் வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

சேலம், தர்மபுரி, கிரு~;ணகிரி மாவட்டங்களில் மா, எலுமிச்சை, பப்பாளி சாகுபடிச் செய்யும் உழவர்கள் நிலத்தடி நீர் இன்மையால் கையைப் பிசைந்து நிற்கிறார்கள். இம்மாவட்டங்களில் கறவை மாடுகளுக்கு வைக்கோல் இன்றி உழவர்கள் தவிக்கிறார்கள். அறுவடை காலத்தில் வைக்கோலை வாங்கி சேமித்து வைத்துள்ள இடைமட்ட வணிகர்கள் ஒரு டிராக்டர் வைக்கோலை 14000 ரூபாய் முதல் 15000 ரூபாய் வரை கொள்ளை விலைக்கு விற்கிறார்கள். ஆலைகளிலிருந்து வரும் தீவனங்களும் தாறுமாறாக விலை ஏறி விட்டன.

இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளைக் கேரளாவிற்கு ஓட்டிச்செல்லும் போக்கு தீவிரம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் தேசிய ஆறான காவிரியைச் சார்ந்து குடிதண்ணீர் பெற்றுவரும் 85 ஒன்றியங்களில் பெரும்பான்மையானவை  குடிதண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன். பல நகராட்சிகளில் வாரம் ஒரு முறை குடிதண்ணீர் விடுவது என்ற போக்கு இயல்பாகிவிட்டது. இந்தக் குடிதண்ணீர் தட்டுப்பாடு தனியார் குடிநீர் நிறுவனங்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது.

தமிழக அரசு இந்த வறட்சி நிலையை எதிர்கொள்ள ஒதுக்கி உள்ள 680 கோடி ரூபாய் என்பது யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றதாகும்.

இந்நிலையில் 2012-ல் அறிவித்தது போல் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து இந்திய அரசை வலியுறுத்தி இயற்கைப் பேரிடர் சிறப்பு நிதியைப் பெற்று இடர் நீக்கப் பணிகளில் தமிழக அரசு விரைந்து ஈடுபட வேண்டும்.

தமிழர்கள் நீர் ஆதாரங்களைப் பெருக்க உருவாக்கிய பழைய நீர்நிலை கட்டுமானங்களை உயிர்ப்பிப்பது, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஊக்கப்படுத்துவது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளைக் கொடுங்குற்றமாக அறிவித்து கடும் நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற நீண்டகாலத் திட்டங்களையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.


இல்லையேல் வறட்சிக்காரணமாகப் பெரும் எண்ணிக்கையி தமிழர்கள் புலம்பெயரும் ஆபத்து உள்ளது.

தோழமையுடன்
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Monday, June 9, 2014

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மறுப்பது ஏமாற்றமளிக்கிறது! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மறுப்பது ஏமாற்றமளிக்கிறது!
இதில் ஏட்டிக்குப் போட்டி அரசியல் கூடாது!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை


காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டுமென தமிழக முதல்வர் செயலலிதா அவர்களுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வேண்டுகோள் வைத்தோம். அதன்பிறகு, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களும், அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டுமென்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், எல்லாக் கட்சிகளிடமும் ஒரே கருத்துதான் இருக்கிறது என்றும், எனவே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் செயலலிதா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது மிகவும் வேதனையளிக்கிறது, ஏமாற்றமளிக்கிறது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதில், கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒரே கருத்து தான் இருக்கிறது. இருந்தாலும், அவர்கள் ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறார்கள்? அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு, முதலமைச்சர் சித்தராமையா பிரதமரை சந்திக்க உள்ளாரே, அது ஏன்? ஏனெனில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்பதற்கு மேலும் அழுத்தம் தருவதற்கும், ஒருவேளை வாரியம் அமைத்தால் அதை எதிர்த்து மக்கள் எழுச்சியை உண்டாக்குவதற்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்ட உத்தியை கர்நாடக அரசு கடைபிடிக்கிறது.

தொடர்ந்து காவிரி நீர் மறுக்கப்பட்டு, குறுவையும் சம்பாவும் பாதிக்கப்பட்டு குடி தண்ணீரும் இன்றி கோடிக்கணக்கான தமிழக மக்கள் பல ஆண்டுகளாக அல்லலுற்று வருகின்றனர். தமிழக மக்களின் இந்தத் துயரத்தைப் போக்க உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது இந்திய அரசின் சட்டப்படியான கடமையாகும். அந்த சட்டக்கடமையை இந்திய அரசு நிறைவேற்றிட நீதிமன்றத்தின் வழியாக முயல்வது ஒருவகை. அரசியல் ரீதியாக முயல்வது இன்னொரு வகை. கர்நாடக அரசு இந்த இரு வழிமுறைகளையும் தொடர்ந்து கடைபிடிக்கிறது. இந்த இரு வழிகளுக்கும் மேலாக காவிரி உரிமையை தமிழ்நாட்டிற்கு மறுப்பதற்கு, கர்நாடக விவசாயிகளும் இனவெறி அமைப்புகளும் வீதியில் இறங்கி போராடுவதை கர்நாடக அரசும், அரசியல் கட்சிகளும் பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கின்றன.

ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட இந்திய அரசுக்கு ஒரு நெருக்கடி கொடுக்கக்கூட முதலமைச்சர் செயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த விரும்பவில்லை.

கர்நாடகத்தைச் சேர்ந்த நடுவண் அமைச்சர்களான அனந்த் குமார், சதானந்த கவுடா ஆகிய இருவரும், இந்திய அரசு காவிரி மேலாண்மையை வாரியம் அமைக்காமல் தடுப்போம் என்று ஒளிவு மறைவின்றி அறிவிக்கின்றனர். அச்செய்தி ஊடகங்களில் வந்துள்ளது. அவ்விருவரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சேர்த்துதான் இந்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனால், கன்னட இனச்சார்போடு நடுவண் அமைச்சர் பொறுப்புக்கு முற்றிலும் முரணான வகையில் சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக சவால் விடுகிறார்கள். இந்த இரு நடுவண் அமைச்சாகளின் சட்டவிரோதப் போக்கை தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்திக் கண்டிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் மேற்படி இரு நடுவண் அமைச்சர்களும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவ்வாறு குரல் கொடுக்கிறார்கள் என்று கூறுவது அவர்களின் சட்டவிரோதச் செயலை தமிழக முதல்வர் அனுசரித்துப் போவதுபோல் உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, கர்நாடகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பா.ச.க. நடுவண் அரசு மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்குமா என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது.

எனவே, கடந்த காலங்களில் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் ஏட்டிக்குப் போட்டி அரசியல் நடத்தி தமிழக மக்களின் உரிமைகளை பலி கொடுத்தது போது்ம். இனிமேலாவது, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட இக்கழகங்கள், ஆக்க வழியில் செயல்பட வேண்டும். அதற்கு, முன் எடுத்துக்காட்டாக முதலமைச்சர் செயலலிதா அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன் தமிழக மக்களுக்கு விழிப்புணர்ச்சியையும் எழுச்சியையும் நம்பிக்கையையும் உண்டாக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு

Tuesday, February 25, 2014

காவிரி உருவாகும் குடகு வனப்பகுதியில் மரங்களை வெட்டும் இந்திய அரசைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்! த.தே.பொ.க. பங்கேற்பு!


காவிரி உருவாகும் குடகு வனப்பகுதியில் மரங்களை வெட்டும் இந்திய அரசைக் கண்டித்து
முற்றுகைப் போராட்டம்! த.தே.பொ.க. பங்கேற்பு!


காவிரி உற்பத்தியாகும் குடகு வனப்பகுதியில், மின்பாதை அமைப்பதற்காக 1 இலட்சம் மரங்களை வெட்டும் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தி கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், மடிக்கரையில், காவல்துறை ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

நேற்று(24.02.2014) பிற்பகல் 12 மணியளவில் மடிக்கரை பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்ற, பெருந்திரளான மக்கள் மடிக்கரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இம்முற்றுகைப் போரட்டத்திற்கு, போராட்டக்குழுத் தலைவர் முனைவர் நஞ்சப்பா தலைமையேற்றார். திரு. நஞ்சுண்டேஸ்வர கவுடா தலைமையிலான விவசாய சங்கம், மைசூர் மாண்டியா விவசாய சங்கம் உள்ளிட்ட கர்நாடக உழவர் சங்கங்களும், தமிழ்நாட்டு விவசாய சங்கங்களும், திரளான குடகு இனப் பொது மக்களும், பல்வேறு கன்னட அமைப்பினரும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இப்போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். அங்கு நடந்த விளக்க கூட்டத்திற்கு காவிரிச் சேனை அமைப்பின் தலைவர் திரு. இரவி செங்கப்பா தலைமை தாங்கினார்.

தமிழகத்திலிருந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், இப்போராட்டத்தில் கலந்து கொள்ள, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையிலான த.தே.பொ.க. தோழர்கள் அங்கு சென்றிருந்தனர்.

போராட்டத்தின் போது அங்கு உரையாற்றிய தமிழ்த் தேசப் , பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, குடகு இன மக்கள், கன்னட இன மக்கள், தமிழின மக்களை வஞ்சிக்கும் விதமாக இந்திய அரசுக்கு சொந்தமான பவர் கிருட் கார்ப்பரேசன் தன்னிச்சையாக கோழிகூட்டிற்கு மின்சாரம் கொண்டு செல்வது என்பது, மூன்று இன மக்களையும் வஞ்சிப்பதாகவே உணர்கிறோம் என்றும், இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட்டு, மாற்றுப் பாதையில் இதை இந்திய அரசு கொண்டு செல்ல வேண்டும் என்றும் பேசினார்.

பேராட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தோழர்கள் ரமேஷ், மு.வேலாயுதம், சதீஷ் பாபு, நிகரன், தமிழக உழவர் முன்னணி லிங்கனம்பட்டி அமைப்பாளர் தோழர் தூருவாசன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.





Monday, February 10, 2014

மார்ச்சு – 1 – காவிரி எழுச்சி மாநாடு: "தமிழினமே தஞ்சையில் திரள்க!" தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானம்!


மார்ச்சு – 1 – காவிரி எழுச்சி மாநாடு:
"தமிழினமே தஞ்சையில் திரள்க!"
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப்
பொதுக்குழுவில் தீர்மானம்!



தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னை கட்சித் தலைமையகத்தில் 09.02.2014 ஞாயிறு முழுநாள் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தோழர் உதயன், க.அருணபாரதி (சென்னை), குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், நா.வைகறை (தஞ்சை), அ.ஆனந்தன் (மதுரை), கோ.மாரிமுத்து (ஓசூர்), க.முருகன் (பெண்ணாடம்), மு.தமிழ்மணி (தூத்துக்குடி), க.பாண்டியன் (நெல்லை), விளவை இராசேந்திரன் (கோவை), கு.சிவப்பிரகாசம் (சிதம்பரம்), த.கவித்துவன் (திருச்சி) உள்ளிட்ட கட்சியின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இயற்கை வேளாண் அறிஞர் திரு. கோ.நம்மாழ்வார், பெரியார் பெருந்தொண்டர் தோழர் திருவாரூர் தங்கராசு, கல்பாக்கம் தமிழின உணர்வாளர் திரு. சு.முத்து ஆகியோர் மறைவுக்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. தஞ்சையில் மார்ச்சு 1 அன்று, நடைபெறும் 'காவிரி எழுச்சி மாநாட்'டை வெற்றிபெறச் செய்ய வேண்டும்

தமிழ்நாட்டின் முக்கிய நீராதாரமாகவும், காவிரி டெல்டா மாவட்டப் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமுமான காவிரி ஆற்று நீர் உரிமையை முடக்க கர்நாடகம், எல்லா சட்டங்களையும் மீறி இயங்கிக் கொண்டுள்ளது. கட்சிகள் கடந்து கன்னடர்கள் ஓரணியில் நிற்கின்றனர். இந்திய அரசு தனக்குப் பக்கமலமாக இருக்கிறது என்ற துணிச்சலில், புதிதாக 3 அணைகள் கட்டி  தமிழகத்திற்கு மழைக்காலத்தில் வடிந்து வரும் உபரித் தண்ணீரைக் கூட தடுப்பதற்கு அவர்கள் திட்டமிடுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்க தமிழினம் ஒன்று திரள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, வரும் 2014 மார்ச்சு 1 அன்று, தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், 'காவிரி எழுச்சி மாநாடு' நடைபெறுகின்றது. இம்மாநாட்டில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பதுடன், இம்மாநாட்டிற்குத் தமிழ் மக்களை பெருந்திரளாகத் திரட்டவும் முடிவெடுத்துள்ளது.

  1. காவிரி உற்பத்தியாகும் குடகு வனப்பகுதியில், மின்பாதை அமைப்பதற்காக 1 இலட்சம் மரங்களை வெட்டும் திட்டத்தை இந்திய அரசே கைவிடுக!
      காவிரி ஆறு உற்பத்தியாகும் கூடகு மலைப்பகுதியில், இந்திய அரசு மின்பகிர்மான நிறுவனம் (Power Grid corporation of India), கர்நாடகாவின் மைசூரிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு வரையில் 400 கிலோ வாட் மின்சாரம் எடுத்துச் செல்லும் மின்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் வழியே, சற்றொப்ப 55 கிலோ மீட்டர் வரை அமைக்கப்படும் இப்பாதை காரணமாக சற்றொப்ப 1 இலட்சம் மரங்கள் வெட்டப்படும் பேரபாயம் உள்ளது. தற்போது, 5 கிலோ மீட்டர் அளவில் மின் பாதை அமைக்கப்பட்டு சற்றொப்ப 2000 மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. மரங்கள் வெட்டப்படுவதால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் சூழலியல் வெற்றிடமும், சூழலியல் சமன்பாட்டுச் சீர்குலைவும், ஏற்பட்டு காவிரி ஊற்று நீரைப் பெருமளவில் பாதிக்கும். குடகு, தமிழகம், கர்நாடகம் என காவிரி ஆற்றை முக்கிய நீராதாரமாகக் கொண்டு வாழும் 8 கோடி மக்களின் வாழ்வுரிமையையே இது மறைமுகமாகப் பறித்தெடுக்கும். மேலும், இவ்வனப்பகுதியையே நம்பி வாழும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். வனவிலங்குகளின் வாழ்வாதாரங்களை இழப்பது, ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டுள்ள வனவிலங்கு – மனிதர் மோதலைத் தீவிரப்படுத்தும். மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து, குடகு வாழ் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றனர். இப்போராட்டங்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. இத்திட்டத்தை இந்திய அரசு மின்பகிர்மான நிறுவனம் வேறு பாதையில் செயல்படுத்த வேண்டும். என வலியுறுத்துகிறது

  1. கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள் புதிதாக அணுஉலைகளைத் தொடங்காதே!

ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஒரே சவக்குழியாக இந்திய அரசால் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தினுள், புதிதாக 2 அணுஉலைகளை இயக்க இந்திய அரசு அணுசக்தித்துறை முனைப்புடன் செயலாற்றி வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக  கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து சனநாயக வழியில் போராடி வரும் இடிந்தகரை மக்களின் கருத்துகளைப் புறக்கணித்துவிட்டு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இந்திய அரசு இயக்கி வருகின்றது. இந்நிலையில், புதிய அணுஉலைகளை அங்கு வேண்டுமென்றே திணிப்பது, மக்கள் போராட்டத்தை இழிவுபடுத்தும் எதேச்சாதிகாரப் போக்காகும். எனவே, மேலும் மேலும் இங்கு அணுஉலைகளைத் திணிக்கும் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இப்புதிய அணு உலைகளை நிறுவும் முயற்சிகளைக் கைவிட வேண்டுமெனவும் இந்திய அரசை வலியுறுத்துகிறது.  

  1. தமிழினப்  படுகொலையாளிகளான இராசபக்சே கும்பல் மீது தற்சார்பான பன்னாட்டு விசாரணை கோரி, மார்ச்சு 3 - ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில் இந்திய அரசு தனித்தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்!

ஈழத்தமிழர் இனச்சிக்கல் பன்னாட்டு அரங்கில் ஒரு முக்கியக் கட்டத்தை இப்போது அடைந்துள்ளது. நடந்து முடிந்த கொழும்பு காமன்வெல்த் மாநாட்டின் போது பிரித்தானியப் பிரதமர் கேமரோன் யாழ்ப்பாணத்திற்கும், ஈழத்தமிழர் வாழ்விடயங்களுக்கும் சென்று பார்த்தபோது அவருடன் சென்ற முதன்மை உலக ஊடகங்கள் வழியாக அங்கு தொடரும் இன அழிப்பு அவலம் உலகின் பார்வைக்கு வந்துள்ளது. இப்பின்னணியில் வரும் மார்ச்சு 3 அன்று நடைபெறவுள்ள ஐ.நா. மன்ற மனித உரிமைகள் அவைக் கூட்டம் கூடுதல் முகாமை பெறுகிறது. ஈழத்தமிழர் இனஅழிப்பை வெறும் போர்க்குற்றம் எனச் சுருக்கியும், இலங்கை  அரசக் கட்டமைப்பை பாதுகாக்கும் நோக்கிலும் 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் வட அமெரிக்கா முன்வைத்த சூழ்ச்சிகரமானத் தீர்மானங்களை, இந்திய அரசு ஆதரித்தது இப்போக்கு இனியும் தொடரக் கூடாது இராசபக்சே கும்பல் மீது இனப்படுகொலை குறித்த பன்னாட்டு விசாரணை – ஈழத்தமிழ் மக்களிடையே தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு ஆகிய இரட்டை முழக்கங்கள் ஒட்டுமொத்தத் தமிழர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது. எனவே, வரும் மார்ச்சு கூட்டத்தில் அமெரிக்கத் தீர்மானத்தைப் புறக்கணித்து, இனக்கொலையாளி இராசபக்சே கும்பல் மீது தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை வேண்டுமெனக் கோரி இந்திய அரசே தனித் தீர்மானத்தை முன்மொழிய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோருகிறது. வரும் பிப்ரவரி 20 அன்று சென்னையிலும், தமிழகத்தின் இதர மாவட்டத் தலைநகரங்களிலும் இக்கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில், தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென த.தே.பொ.க. அழைக்கிறது. 

  1. பி.ட்டி கத்தரிக்கு அனுமதி, நியூட்ரினோ திட்டத்துக்கு நிதி – இரண்டையும் கைவிட வேண்டும்

ஜம்முவில் கடந்த 3.02.2014 திங்கள் அன்று நடைபெற்ற தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பி.ட்டி கத்தரி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறுவித்துள்ளார், இவை பற்றி தெரிவிக்கப்படும் எதிர்ப்புகள் அறிவியல் அடிப்படையற்ற அச்சமூட்டும் முயற்சிகள் என்று பேசியுள்ளார். அவரது பேச்சு, மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கும் மரபீனி விதைகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான அவதூறு அறிக்கையாக உள்ளதுமரபீனீ விதைகளை ஆய்வு செய்ய, காங்கிரசு உறுப்பினர்களையும் உள்ளடக்கி இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக்குழுவின் ஆய்வு அறிக்கை இவற்றுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனப் பரிந்துரைத்தது இந்த அறிக்கையை துச்சமாகாத் தூக்கி எறிந்துவிட்டு, அதில் எழுப்பப்பட்டுள்ள சிக்கல்களுக்கு விடைக்கூற முயலாமல் பி.ட்டி கத்தரிக்கும், பிற மரபீனி மாற்றப் பயிர்களுக்கும் தமது அரசு அனுமதி அளிக்கும் என்று பிரதமர் மன் மோகன் சிங் அறிவித்திருப்பது மக்கள் நலனிலும் சன நாயகத்திலும் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது

அதே போல் தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் மலைப் பகுதியைத் தோண்டி அங்கு நிறுவப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வகத்தற்கு 1450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக மன்மோகன் சிங் அறிவித்திருப்பதும் இன்னொரு மக்கள் பகை அறிவிப்பாகும். அப்பகுதி மக்களும், தமிழகத்திலும் கேரளத்திலும் சூழலியல் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் இந்நிலையம் குறித்து எழுப்பியுள்ள எதிர்ப்புகளை ஒரு சிறிதும் மதிக்காமல் செய்யப்பட்டுள்ள இந்த முடிவு ஒரு தலைப் பட்சமான திணிப்பாகும்

பிரதமர் மன்மோகன் சிங்கின் இவ்விரண்டு அறிவிப்புகளையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இத்திட்டங்களை கைவிட வேண்டுமென வற்புறுத்துகிறது.

இடம் : சென்னை-78.
நாள்  : 09.02.2014

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT