உடனடிச்செய்திகள்

Tuesday, July 30, 2013

கூடங்குளம் போராட்டக்குழு உறுப்பினர் மை.பா.சேசுராசன் மீது புதிய பொய் வழக்கு: போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்


கூடங்குளம் போராட்டக்குழு உறுப்பினர் மை.பா.சேசுராசன் மீது புதிய பொய் வழக்கு:
போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக, கடந்த இரண்டாண்டிற்கும் மேலாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர், அமைதிவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை, வன்முறை போராட்டமாகவும் தேச விரோதச் செயலாகவும் சித்தரித்து, ஞாயமான போராட்டத்தை நசுக்குவதற்கு வரலாறு காணாத வகையில் தமிழகக் காவல்துறை அடுத்தடுத்து பொய் வழக்குகளை புனைந்து வருகிறது.

இவ்வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், தமிழக அரசின் நிலையில் மாற்றம் எதுவும் வரவில்லை.

இந்நிலையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் திரு. சுந்தரராசன் மற்றும் மனித உரிமை வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகளில் இன்று (29.07.2013) தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், இவ்வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு தமிழக அரசை வலியுறுத்தியது.

.இவ்வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் வழக்குரைஞர் கூடங்குளம் போராட்டக் குழுவினர் அணுஉலையைத் தகர்க்க சதி செய்தி கொண்டிருப்பதாக முற்றிலும் பொய்யான வாதத்தை முன்வைத்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் இவ்வாறான அறிவுரை வரும் என எதிர்பார்த்த தமிழகக் காவல்துறை, இன்னொரு அப்பட்டமான பொய் வழக்கை தொடுத்துள்ளது. போராட்டக்குழு உறுப்பினர் அருட்தந்தை. மை.பா.சேசுராசன் மற்றும் 18 பேர் இணைந்து, கூத்தன்குழியில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக சோடிக்கப்பட்ட பச்சைப் பொய் வழக்கை தொடுத்திருக்கிறது. மை.பா.சேசுராசன் தொடர்ந்து இடிந்தகரையில் தான் வசித்து வருகிறார் என்பது காவல்துறைக்கு தெரியாததல்ல. வேண்டுமென்றே இப்பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளது.

தமிழகக் காவல்துறையின் தொடர்ச்சியான இந்த அடக்குமுறைப் போக்கை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இந்த வழக்கு உள்ளிட்டு கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீதும் பகுதி மக்கள் மீதும் தொடரப்பட்டுள்ள, அனைத்து வழக்குகளையும் கைவிடுமாறும் அம்மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் அச்சத்தின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொண்டு அணுஉலை இயங்குவதை நிறுத்துவதற்கு ஆவணஞ்செய்ய முன்வருமாறும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
(கி.வெங்கட்ராமன்)
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம்: சிதம்பரம்
 
 

Monday, July 29, 2013

'தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்!' - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!



'தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்!'
“அறப்போர்”ஆவணப்பட விழாவில் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!


'தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்' என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக மாணவர் போராட்டம் குறித்தான 'அறப்போர்' ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் பேசினார்.

2013 மார்ச் மாதத்தில், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா தாக்கல் செய்த மோசடியானத் தீர்மானத்தை எதிர்த்து நடைபெற்ற தமிழக மாணவர்களின் எழுச்சியை ஆவணப்படுத்தும் விதமாக, 'அறப்போர்' ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. மரணதண்டனைக்கு எதிரான ஆவணப்படமான 'இப்படிக்கு தோழர் செங்கொடி' படத்தை இயக்கிய பத்திரிக்கையாளர் திரு. வெற்றிவேல் சந்திரசேகர், 'அறப்போர்' படத்தை இயக்கியுள்ளார். செங்கொடி மீடியா ஒர்க்ஸ் சார்பில், திரு. சி.கபிலன் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு விழா நேற்று(28.07.2013) மாலை சென்னை அண்ணாசாலை புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு முன்னதாக, ஆவணப்படம் திரையிடப்பட்டது. 

இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையேற்றார். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்,  மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, இயக்குநர் ம.செந்தமிழன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இயக்குநர் அமீர் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சென்னை செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் நிகழ்வை தொகுத்து வழங்கினார். 

தலைமையுரையாற்றிய, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசியதாவது:

அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்துக் களம் கண்ட  தமிழக மாணவர்களின் போராட்டத்தை ஆவணப்படுத்தும் விதமாக 'அறப்போர்' ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 1965இல் தமிழகத்தையே புரட்டிப் போட்ட, இந்தி எதிர்ப்புப் போராட்டம் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. அது போன்ற குறைகளை இல்லாமல் செய்வதற்காக, நமது கண்முன்னே நிகழ்ந்த மாணவர் போராட்டத்தை இங்கு ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு, முதலில் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழக மாணவர்களின் போராட்டம், எவ்வளவு வீரியமானதாக இருந்தாலும் அது இன்னும் தனது இலக்கை அடையவில்லை. நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு, அமைதி நிலவும் இந்த இடைப்பட்ட காலத்தை மாணவர்கள் அடுத்தக் கட்டப் போராட்டங்களுக்கான தயாரிப்புக் காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது கொள்கைகளில் முழுமையானத் தெளிவு பெற வேண்டும். 

அதில் முதலாவதாக இருக்க வேண்டியது, இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதல் தான். தமிழர்களுக்கென ஒரு நாடு அமைவதை இந்திய அரசு ஒருகாலத்திலும் ஏற்றுக் கொள்ளாது. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது, உள்நாட்டில் என்ன கொள்கை நிலவுகிறதோ அதன் நீட்சியாகவே இருக்க முடியும். உள்நாட்டில், தமிழ்நாட்டிற்கு எதிராக அனைத்து சிக்கல்களிலும் எதிராக நிற்கும் இந்திய அரசு, அதன் நீட்சியாகத் தான் தமிழீழ விடுதலைக்கு எதிராக நிற்கிறது என்ற புரிதலை நாம் பெற்றாக வேண்டும். தமிழர்களுக்கு எதிரான அனைத்து சிக்கல்களிலும், இந்திய அரசு முதன்மை எதிரியாக வந்து நிற்க, அதன் ஆரிய இனவெறித் தமிழினப் பகையே முக்கியக் காரணமாகும். 

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், இந்தியாவை பாரத்(BHARAT) எனக் குறிப்பிடுகிறார்களே? இது எங்கிருந்து வந்தது? ஆரியப் பார்ப்பனர்களின் வரலாற்றிலிருந்து எடுத்தாண்ட பெயர் அது. ஆரியத்தின் அடையாளம் இந்திய அரசின் அசோகச் சக்கர சின்னமாக, ஆரியபட்டாவாக, பத்மபூசனாக, பத்மசிறீயாக வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாம் தான் இதைக் காணத் தவறுகிறோம். இவையெல்லாம் தற்செயல் நிகழ்வல்ல. தமிழர்களுக்கு எதிரான ஆரியத்தின் பகைவெறி, இன்றும் இந்திய அரசு மூலமாகத் தொடர்கிறது. இது தான் நாம் பெற்றாக வேண்டிய முதல் கொள்கைத் தெளிவு. 

இரண்டாவதாக, வல்லரசுகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு உத்தியைக் கொண்டு நமது போராட்டங்களை நசுக்குவதற்கான முயற்சிகளில் இருக்கின்றனர். இந்தியாவும், அமெரிக்காவும் இன்றைக்கு ஒரே புள்ளியில் நின்று செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். தமிழர்களுக்கு எந்த வகையிலும் அதிகாரமளிக்காத மோசடியான 13ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமெனக் கூறும் விவாதங்களுக்குப் பின்னணியில் இந்தியா இருக்கிறது. அதே போல, அமெரிக்கா வேறொரு முயற்சியில் இருக்கிறது. 

அண்மையில் 2013 சூலை 23 அன்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் ஆல்பிரைட் மற்றும்  சூடானுக்கான அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் தனித்தூதர் வில்லியம்சன் ஆகியோர் ஒரு அறிக்கை தயாரித்து அமெரிக்க அரசுக்கு அளித்துள்ளனர். “அமெரிக்க ஐக்கிய நாடுகளும் பாதுகாக்கும் பொறுப்பு குறித்த சிக்கலும்” என்ற தலைப்பிலான அறிக்கை இது. 

ஐ.நா.மன்றம் 2005 ஆம் ஆண்டு “பாதுகாக்கும் பொறுப்பு” (Responsibility To Protect- R2P) என்ற சட்டத் தீர்மானத்தை இயற்றியது. “ஒவ்வொரு உறுப்புநாடும் இனக் கொலையிலிருந்தும் போர்க் குற்றங்களிலிருந்தும் இனத் தூய்மையாக்கலிலிருந்தும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களிலிருந்தும் தங்கள் குடிமக்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளன” என்று இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு செய்யத்தவறும் நாடுகளை அறிவுறுத்துவது, அது இயலாத போது அந்நாடுகள் இத்தீர்மானத்தின்படி நடந்து கொள்வதற்கு நெருக்கமாக துணை செய்வது அதுவும் இயலாத சூழலில் ஐ.நா.வின் ஒப்புதலோடு படை நடவடிக்கை உள்ளிட்ட நேரடி தலையீட்டில் இறங்குவது என இதன் செயலாக்கத்திற்கான படி நிலை வழி காட்டலையும் ஐ.நா.வின் இத்தீர்மானம் வழங்குகிறது. இத்தீர்மானத்தின் படி எந்தெந்த நாடுகள் தொடர்பாக அமெரிக்கா செயல்படவேண்டும் என எடுத்துரைப்பதே ஆல்பிரைட் - வில்லியம்சன் அறிக்கையாகும்.

இந்த அறிக்கை இலங்கை பற்றியும் பேசுகிறது. அதில் 2009 ஆம் ஆண்டு நடந்த படுகொலையில் அமெரிக்கா வெறும் பார்வையாளராக இருந்தது எனக் கண்டிக்கும் ஆல்பிரைட் - வில்லியம்சன் அறிக்கை இனி “இலங்கையில் இன நல்லிணக்கத்திற்கு அமெரிக்கஅரசு இலங்கை அரசுக்கு துணை புரிய வேண்டும்” என அறிவுறுத்துகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் 13ஆவது திருத்தத்தின் படியான தீர்வு என்ற இந்தியாவின் நிலைபாடும் அமெரிக்க வல்லரசின்  “நல்லிணக்கத்திற்குத் துணைபுரிந்தது” என்ற நிலைபாடும் சந்திக்கிற புள்ளி இது. 13ஆவது சட்டத்திருத்தம் என்ற வரம்புக்குள் தமிழீழ விடுதலைக் கோரிக்கையை புதைக்க பன்னாட்டுச் சதி வலை விரிக்கப்பட்டிருக்கிறது.

சிங்கள அதிபர் ராசபக்சேவின் தம்பி பசில் ராசபக்சே, திரும்பத் திரும்ப 13ஆவது சட்டத் திருத்தத்தை ஏற்க மாட்டோம் எனக் கூறி வருகிறார். புலிகள் ஒட்டு அழிக்கப்பட்டுவிட்டதாக கருத முடியாது, 13ஆவது சட்டத் திருத்தம் மூலம் அவர்கள் மீண்டும் எழுவார்கள் என்றெல்லாம் சொல்லி வருகிறார். 

அப்படி, அந்த 13ஆவது சட்டத்திருத்தத்தில் தமிழர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்ற போதும், அதைக்கூட ஏற்கமறுக்கிறது சிங்களம். போருக்குப் பின்னால், தமிழீழப் பகுதிகளில் மிகப்பெரும் பிரச்சினையாக இருப்பது அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேள்வி கேட்பாராற்ற, மிகத்தீவிரமான சிங்களக் குடியேற்றமாகும். இதற்கு, 13ஆவது சட்டத் திருத்தம் ஏற்கெனவே அங்கீகாரம் வழங்கியிருப்பது இங்கு பலரும் அறியாத செய்தி.

13ஆவது சட்டத்திருத்தத்தில், தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, கவனமாக தமிழர்களும் பிற இனத்தவர்களும் வாழும் பகுதி எனக் குறிப்பிடுகிறது. இதன் பொருள், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் தாயகம் மட்டுமல்ல, அங்கு பிற இனத்தவர்களும் வாழ்கிறார்கள் எனக் காட்டுவது. இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அப்பகுதிகளில் தீவிரப்படுத்துவதே இதன் நோக்கம். அரசாங்கம், வடகிழக்குப் பகுதிகளில் ஏழைகளுக்கு நிலத்தைப் பகிர்ந்தளிக்கும்போது இலங்கை முழுவதுமுள்ள இனத்தவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறது. அதன்படி, சிங்களர்களுக்கு நிலங்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டது. இந்தியாவும் இதைத்தான் விரும்புகிறது. 

காவல்துறை, நிதி, காணி அதிகாரங்கள் எதுவுமில்லாத 13ஆவது சட்டத்திருத்தம் எந்த அதிகாரத்தையும் தமிழர்களுக்கு வழங்கப் போவதில்லை. சிங்களம் எந்த ஒரு சிறு உரிமையையும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்காது, ஈழத் தமிழர்கள் இலங்கையில் சிங்களர்களோடு ஓர் அரசமைப்பின் கீழ் சேர்ந்து வாழ முடியாது என்பதுதான் இதில் பெற வேண்டிய படிப்பினையே தவிர 13ஆவது திருத்தம் சிறப்பானது என்று வாதிடுவது அல்ல.

இதை நாம் மட்டும் சொல்லவில்லை, 13ஆவது சட்டத்திருத்தத்தை அமலாக்குகிறோம் எனச் சொல்லிக் கொண்டு, வரதராஜபெருமாள் என்பவரை இந்திய இராணுவ வண்டியில் கொண்டு வந்து தமிழர் மாகாணத்தின் முதல்வராகப் பதவியேற்க வைத்தார்களே, அவர் சொன்னார். இந்திய அமைதிப்படை திரும்பச் செல்லும் போது, அவரும் இந்திய இராணுவத்துடன் இணைந்து இந்தியாவிற்கு ஓடினார். அவர் சொன்னார், எனது அலுவலகத்தி்ல் ஒரு நாற்காலி வாங்குவதற்கக் கூட, ஜனாதிபதி மாளிகைக்கு விண்ணப்பித்துக் காத்திருக்க வேண்டும், இதில் எந்த அதிகாரமுமில்லை எனச் சொன்னார். 

இன்றைக்கு 13ஆவது சட்டத்திருத்தம் குறித்து தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் காங்கிரசுக்காரர்களும், இந்து போன்ற பத்திரிக்கைகளைச் சேர்ந்தவர்களும், 13ஆவது சட்டத்திருத்தமே இறுதித் தீர்வு என்பது போலப் பேசுகிறார்கள். இந்த 13ஆவது திருத்தததை ஏற்றுக்கொள்ளாமல் தமிழீழத் தனிஅரசு கோரிக்கையில் பிரபாகரன் பிடிவாதமாக இருந்ததால்தான் இவ்வளவு பெரிய பேரழிவு ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுவிட்டது, இனியாவது ஈழத்தமிழர்கள் இதனை ஏற்று தமிழர் சிக்கலுக்கு தீர்வுகாண வேண்டும் என காங்கிரசாரும் ஆரிய - பார்ப்பனிய ஊடகங்களும் முழு வீச்சோடு கருத்துப் பரப்பி வருகின்றன.

இது போதாதென்ற, வரும் ஆகஸ்ட் 8ஆம் நாள் டெசோ சார்பில் 13ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் வேறு நடக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் அவையில், அமெரிக்கா மூலம் கொண்டுவரப்படும் தீர்மானத்தை, இலங்கையும் ஆதரிக்கும் வகையில் ஒட்டெடுப்பு இல்லாதத் தீர்மானமாக, நீர்த்துப் போகச் செய்ய முனைப்புடன் இறங்கி செயல்பட்டது இந்திய அரசு தான். சுப்பிரமணிய சாமி என்ற தரகர் இதற்காகவே, இந்திய அரசு சார்பில் அமெரிக்கா சென்றார். இதை, அமெரிக்காவே கூறியது. தீர்மானத்தின் ஒவ்வொரு வார்த்தையையும், இந்தியாவைக் கேட்டுக் கொண்டே நாங்கள் மாற்றியமைத்தோம் என அமெரிக்கா சொன்னது. உண்மையில் அது அமெரிக்கத் தீர்மானமல்ல, இந்திய - அமெரிக்கத் தீர்மானம் அது. 

இன்றைக்கு டெசொ சார்பில் பேசும் தி.மு.க.வினர் என்ன சொல்கிறார்கள்? எங்களது இலக்கு என்பது தமிழீழம் தான் என்றாலும், இடைக்காலத்தில் தமிழீழத் தமிழர்கள் மூச்சு விடுவதற்காக 13ஆவது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றக் கோருகிறோம் என்கின்றனர். முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு, 13ஆவது சட்டத்திருத்தம் ஒரு முதல்படிதான் என்றும் சொல்கின்றனர். சட்டப்பேரவையில், தமிழீழம் அமையப் பொதுவாக்கெடுப்பு வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் செயலலிதாவும் இதையே தான் கருத்தாகக் கொண்டுள்ளார். செயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் எழுதியதை, அ.தி.மு.க.வினர் ஆரவாரத்துடன் காண்பிக்கிறார்கள். 

இந்தப் பெரியக் கட்சிகள், 13ஆவது சட்டத் திருத்தம் அதிகாரப்பகிர்வுக்கான முதல் படி என்கின்றன. இதை யார் சொன்னது? இலங்கை அரசு சொன்னதா? இந்திய அரசு சொன்னதா? இலங்கை - இந்திய அரசுகளைப் பொறுத்தவரை, 13ஆவது சட்டத்திருத்தம் தான் இறுதித்தீர்வு என்கின்றனர். ஆனால், பெரியக் கட்சிகள் தான் இவ்வாறு கூறு ஏமாற்றுகின்றனர். 

எப்படி ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் மோசடியானது என தமிழக மாணவர்கள் போராடினார்களோ, அதைப் போல 13ஆவது சட்டத் திருத்தம் மோசடியானது, அதை ஏற்க மாட்டோம் எனப் போராட வேண்டும். அமரிக்கத் தீர்மானத்தை எரித்துப் போராடியதைப் போல, 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும். 

இந்தப் போராட்டத்திற்கான தயாரிப்புக் கால எல்லையாக, இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கவிருப்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். காமன் வெல்த் மாநாட்டை, ஒரு நாட்டில் நடத்துவதை நாம் சாதாரணமாக, பொதுப்பார்வையுடன் பார்த்துவிட முடியாது. எங்கு காமன் வெல்த் மாநாட்டு நடக்கிறதோ, அதன்பின், 2 ஆண்டுகளுக்கு அந்த நாட்டு அதிபர்தான் காமன் வெல்த் கூட்டமைப்புக்குத் தலைவராக இருப்பார். அதனால் தான், இந்திய அரசு இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தி, இராசபக்சேவுக்கு முடிசூட்டி அழகுப் பார்க்க விரும்புகிறது. 

இன்றைக்கு ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் இராசபக்சேவையே, தமிழினப் படுகொலைக்காக நாம் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லையெனில், நாளை அவர் காமன் வெல்த் கூட்டமைப்பின் தலைவரானால் என்ன செய்வது? அவரை ஒன்றும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான், இந்திய அரசு திட்டமிட்டு இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்துகிறது. அதை நாம் முறியடிக்க வேண்டும்!

தமிழீழ விடுதலைக்கு எதிரான இந்தியாவின் செயல்பாடுகள் வெறும் பொருளியல் ஆதிக்க நலன்களுக்காக மட்டுமே இல்லை. இந்தியாவின் தமிழினப்பகையே அதைத் தீர்மானிக்கிறது. இந்தியாவின் பொருளியல் நலன்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என தமிழீழ விடுதலைப்புலிகள் திரும்பத் திரும்பக் கூறினார்கள். சுதுமலையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையில், தெற்காசியாவில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்போம் எனத் தெரிவித்தார். இந்தியக் கம்பெனிகளுக்கு எங்களால் ஆபத்து வராது என கூறியதோடு மட்டுமின்றி அதை செயல்படுத்திக் காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்.

புலிகளின் கடற்பிரிவான, கடற்புலிகள் வலுவாக இருந்தக் காலத்தில், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கடற்பகுதிகளில் சீனா, பாகிஸ்தான் என எந்த நாடும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. புலிகளின் அரசியல் மதியுரைஞரான அண்டன் பாலசிங்கம் ஒருபடி மேலே போய், மேற்காசியாவில் எப்படி அமெரிக்காவிற்கு இசுரேல் பாதுகாவலனாக இருக்கிறதோ, அதே போல் தெற்காசியாவில் இந்தியாவின் பாதுகாவலனாக தமிழீழம் இருக்கும் என்றார். இதில் எங்களுக்கு பல கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவின் பொருளியல் நலனுக்கு எதிராக நிற்கமாட்டோம் எனப் புலிகள் அறிவித்திருப்பதை எடுத்துக் காட்டவே இதைச் சொல்கிறேன். 

இப்படி இந்தியாவின் நலன்களுக்கு ஆதரவாக இருந்த புலிகளை, இந்திய அரசு அடியோடு ஒழித்தது. தமிழர்களை இனப்படுகொலை செய்தது. ஏன்? காரணம், இந்திய அரசின் முதன்மையான தமிழினப்பகை. அமெரிக்காவிற்கு வேண்டுமானால் புவிசார் நலன்கள் இருக்கலாமேத் தவிர, இந்திய அரசு தமிழீழ இனப்படுகொலையை நடத்த உதவியது அதன் தமிழினப்பகையையே காட்டுகிறது. இதைப் புரிந்து கொண்டு தான் நாம் அடுத்தக் கட்ட நகர்வுகளுக்குத் திட்டமிட வேண்டும்!”.

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார். 

கூட்டத்தின் நிறைவில், ஆவணப்பட இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் ஏற்புரை வழங்கினார். “பல இயக்குநர்கள் தமிழீழச் சிக்கல் குறித்து ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பதை தனது கனவாக அறிவிக்கின்றனர். ஆனால், யாரும் அதுபோன்றதொரு படத்தை எடுக்கவில்லை. எடுக்காமாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால், இந்திய அரசிடம் தேசிய விருது வாங்குவதே இலட்சியம் என செயல்படும் இயக்குநர்கள் தான் இங்கு அதிகமாக இருக்கின்றனர். எனவே, இந்திய அரசைப் பகைத்துக் கொண்டு படமெடுக்கும் இயக்குநர்கள் இங்கு இல்லை. கோடிகளெல்லாம் வேண்டாம், எனக்கொரு 30 இலட்ச ரூபாய் இருந்தால் போதும் தமிழீழச் சிக்கல் குறித்து நாங்கள் படமெடுப்போம். அதற்கான முன்னோட்டமாகத் தான் இந்த ஆவணப்படங்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்” என அவர் பேசினார். 

திரளான உணர்வாளர்களும், மாணவர்களும், பத்திரிக்கையாளர்களும் திரண்டிருந்த இந்நிகழ்வின் முடிவில், பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'அறப்போர்' ஆவணப்படம் மீண்டும் திரையிடப்பட்டது. 







(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Saturday, July 27, 2013

முல்லைப் பெரியாறு அணை: உச்சநீதிமன்றக் கேள்விகளும் சட்டப்படியான உண்மைகளும் - தோழர் பெ.மணியரசன் விளக்க அறிக்கை!


முல்லைப் பெரியாறு அணை:
உச்சநீதிமன்றக் கேள்விகளும் சட்டப்படியான உண்மைகளும்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் 
பெ.மணியரசன் விளக்க அறிக்கை!

முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழக அரசு வழக்கறிஞர்களைப் பார்த்து எழுப்பிய வினாக்கள் தமிழர்களிடையே அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. வழக்கு என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற பதற்றம் தமிழின உணர்வாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

நீதிபதி ஆர். எம். லோதா, நீதிபதி எச். எல். தத்து, நீதிபதி சி.கே. பிரசாத், நீதிபதி மதன் பி.லோகுர், நீதிபதி எம்.ஒய். இக்பால் ஆகிய ஐவர் அடங்கிய அரசமைப்பு அமர்வு முல்லைப் பெரியாறு அணை வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த  23.7.2013 லிருந்து தமிழக அரசு சார்பிலான வழக்கறிஞர் வினோத் பாப்டே தமது வாதத்தைத் தொடங்கி 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் பேசினார்.

அரசமைப்பு அமர்வுக்குத் தலைமை தாங்கும் நீதிபதி லோதா குறுக்கிட்டுக் குறுக்கிட்டு விளக்கம் கேட்டார். நீதிபதி லோதா கிளப்பிய ஐயங்களும் எழுப்பிய வினாக்களும் தாம் தமிழ் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
1886 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள் தமிழ்நாட்டு மக்களுக்காக அன்றையப் பிரித்தானிய இந்திய அரசு அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் போட்ட முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தை உரிமை கோருவதற்கு இன்றையத் தமிழக அரசுக்கு வாரிசுரிமைப் பாத்தியதை உண்டா? அதை நிரூபியுங்கள்! இதுதான் நீதிபதி லோதா எழுப்பும் மையமான வினா.
தமிழ்நாட்டு அரசு அல்லது சென்னை மாகாணம் சார்பில் அன்று ஒப்பந்ததில் யாரும் கையெழுத்திடவில்லை. அன்றைய இந்தியஅரசின் ஆளுநர் நாயகம் (கவர்னர் ஜெனரல்) சார்பில் இந்திய அரசின் செயலாளர் கையொப்ப மிட்டுள்ளார். அந்த ஒப்பந்தம் சென்னை மாகாண அரசு திருவிதாங்கூர் சமஸ்தான எல்லைக்குட் பட்டுள்ள பகுதியில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி 152 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கி, அத்தண் ணீரை சென்னை மாகாண மாவட்டங்களுக்குப் பாசனத்திற்கு கொண்டு செல்ல திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஒப்புதல் தெரிவிக்கும் ஒப்பந்தம் ஆகும்.
அந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி எட்டாயிரம் சதுரமைல் என்றும் அதற்குத் சென்னை மாகாண அரசு தர வேண்டிய ஆண்டுக்குத்தகைத் தொகை இவ்வளவு என்றும் அவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அணைப்பராமரிப்பு நீர்ப்பிடிப்புப் பகுதிப் பராமரிப்பு மற்றும் அனுபோகம் சென்னை மாகாணத்திற்குரியது என்றும் அவ்வொப் பந்தம் கூறுகிறது.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 127 ஆண்டுகளாக அந்நிலப்பரப்பும் அணையும் அணை நீரும் முதலில் சென்னை மாகாண அரசின் அனுபோகத் திலும் பின்னர் தமிழக அரசின் அனுபோகத்திலும் உள்ளன.
இந்திய அரசுச் செயலாளர், திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் குத்தகை வாரிசுதாரர் தமிழ்நாடு அரசுதான் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம், இப்பொழுது கேட்கிறது.
இந்திய அரசு தனது மாகாணங்களில் ஒன்றுக்காக பிற அரசுகளுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் அக்குறிப்பிட்ட மாகாண அரசுக்குச் சட்டப்படியான உரிமை உண்டு. பிரித்தானிய இந்திய அரசு 1858 ஆம் ஆண்டு பிறப்பித்த சட்டப்படிதான் 1886 முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் போடப்பட்டது என்றும், அதன் பிறகு 1919 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்திய அரசுச் சட்டமும் இதை உறுதிசெய்கிறது என்றும் தமிழக அரசுக்கான வழக்கறிஞர் பாப்டே எடுத்துரைத்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக 1935 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியா இயற்றிய இந்தியச் சட்டத்தின் 177 வது பத்தியை வழக்கறிஞர் பாப்டே எடுத்துரைத்தார். அச்சட்டப் பிரிவின் சுருக்கம் வருமாறு:
“177(1) (a): இச்சட்டத்தின் பகுதி III செயலுக்கு வருவதற்கு முன்னால், இந்திய அரசுச் செயலாளர் செய்து கொண்ட ஓர் ஒப்பந்தம்- பகுதி III இல் சொல்லப் பட்டுள்ள மாகாணங்களில் ஒன்றிற்குரியதாக இருந்தால் அவ்வொப்பந்தம் அந்த மாகாணம் செய்து கொண்டதற்குரிய அதிகாரத்தைப் பெறும்.”
இந்திய அரசுச் செயலாளர் சென்னை மாகாண அரசுக்காக 1886 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் போட்ட முல்லைப்பெரியாறு ஒப்பந்தம், 1935க்குப் பிறகு 1950 வரை, சென்னை மாகாண அரசு இந்திய அரசின் சட்டப்பூர்வ வாரிசு தாரர் என்று கூறுகிறது. அதன் பிறகு விடுதலைப் பெற்ற இந்தியாவில் 1950 சனவரி 26 இல் செயலுக்கு வந்த “இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்ட” விதி 363 பின் வருமாறு கூறுகிறது.
“363- (1) இக்குடியரசுச் சட்டம் செயலுக்கு வருவதற்கு முன் எந்த ஓர் இந்திய ஆட்சியாளரோ அல்லது இந்திய அரசாங்கமோ ஒரு தரப்பாக இருந்து போடப்பட்ட ஒப்பந்தம், உடன் படிக்கை, ஏற்பாடுகள், சன்னத்துகள் முதலியவற்றை செல்லாது என்று அறிவிப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு எந்த நீதிமன்றத்திற்கோ அதிகாரம் இல்லை”
1935 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டமும் 1950 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டமும், அவை செயலுக்கு வருவதற்கு முன் இந்திய அரசாங்கம் ஒரு தரப்பாக இருந்து செய்து கொண்ட ஒப்பந்தம் அவை செயலுக்கு வந்த பின்னரும் தொடரும். இவ்வொப்பந்தங்களின் செல்லுபடித்தன்மை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது என்று கூறுகிறது.
இப்பொழுது செயல்பாட்டில் உள்ள இந்தியக் குடியரசுச் சட்ட விதி 131- இன்னும் தெளிவாக, இந்திய அரசு செய்த பழைய ஒப்பந்தங்கள் மீது, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பக்கூடாது என்று தடை செய்கிறது.
விதி 131-இல் 1956-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட புதிய திருத்தம் பின் வருமாறு கூறுகிறது.
“இச்சட்டம் செயலுக்கு வருவதற்கு முன் இந்திய அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தம், உடன்படிக்கை, ஏற்பாடுகள், சன்னத் முதலியவை தொடர்ந்து செயலில் இருக்குமானால் அவற்றின் செல்லுபடித் தன்மை பற்றி உச்சநீதிமன்றம் விசாரிக்க அதிகாரமில்லை”.
1970 இல் முல்லைப் பெரியாற்று அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கேரள அரசுக்கு மீன்பிடி உரிமை, சுற்றுலா படகு போக்குவரத்து நடத்திக்கொள்ள உரிமை ஆகியவற்றை வழங்கி, முல்லைப்பெரியாறு ஒப்பந்தத்தை மறு உறுதி செய்து ஒரு ஒப்பந்தம் கேரளமாநில அரசுக்கும், தமிழக அரசுக்கும் ஏற்படாது இதன் மூலம் 1886 ஒப்பந்தம் கேரள அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அது தொடர்ந்து செயலில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வளவு தெளிவாக 1935, 1950 ஆம் ஆண்டுகளின் இந்திய அரசமைப்புச் சட்டங்கள் பழைய ஒப்பந்தங்கள் பற்றி வரையறுத்திருக்கும் போது, 1970 ஒப்பந்தமானது முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் 1886- ஆம் ஆண்டின் தொடர்ந்து செயலில் இருப்பதை உறுதி செய்திருக்கும் போது ஐவர் குழுவின் அமர்வுக்குத் தலைமை தாங்கும் நீதிபதி லோதா – முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தின் செல்லுபடித் தன்மையையும் – அதன் வாரிசுரிமை பற்றியும் கேள்வி எழுப்புவது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுகிறது.
பழைய சென்னை மாகாணத்தின் இன்றைய வாரிசு தமிழ்நாடு தானா என்ற கேள்வியை நீதிபதி லோதா மூன்று நாளும் எழுப்பியுள்ளார்.
1886 ஒப்பந்தத்தின் படியான இந்திய அரசின் வாரிசு தமிழ்நாடு அரசுதான் என்பதற்கு மேலும்  உறுதியான ஆதாரங்கள் உள்ளன. மாநிலங்கள் மறு சீரமைப்புச் சட்டம் 1956-இன் பிரிவு 108 பின்வருமாறு கூறுகிறது.
மாநில மறுசீரமைப்புக்கு முன் மாநிலம் அல்லது மாநிலங்களுடன் இந்திய அரசு செய்து கொண்ட பாசனம், மின்சாரம் மற்றும் பல்நோக்குத் திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், ஏற்பாடுகள் சன்னத்துகள் உள்ளிட்ட அனைத்தும் மாநிலங்கள் மறு சீரமைக்கப்பட்டபின் நிலவுகின்ற மாநிலங்களிலும் தொடரும்; செயல்படும். அவ்வொப்பந்தங்கள் படியான நிர்வாகம், பராமரிப்பு, மற்றும் செயல்பாடுகள் ஆகியவையும் அப்படியே தொடரும்.
இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. மறுசீரமைப்பிற்குப் பின் நிலவுகின்ற திருவி தாங்கூர் மாநிலம் எது? இதற்கான விடை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளது.
நிலவுகின்ற மாநிலம் (Existing state) என்பது அரசமைப்புச் சட்ட அட்டவணை 1-இல் உள்ள மாநிலம் ஆகும் என்கிறது மாநில மறுசீரமைப்புச் சட்டவிதி 108. அட்டவணை I கேரளம் குறித்து என்ன சொல்கிறது?
மாநில மறுசீரமைப்புச் சட்ட விதி 5(1) மற்றும் (2)- இன்படி உருவாக்கப்பட்ட கேரளம் நிலவுகின்ற மாநிலம் என்கிறது. அந்த 5(1), (2) விதிகள் திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியை இணைத்துக் கொண்ட கேரளமே நிலவுகின்ற மாநிலம் என்று கூறுகிறது. அதாவது,
முல்லைப்பெரியாறு ஒப்பந்தத்தைப் பொறுத்தளவில் இன்றைய கேரள மாநில அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தொடர்ச்சி ஆகும். ஆந்திர, கேரள, கர்நாடகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டவை போக உருவாக்கப்பட்ட சென்னை மாகாணமே – நிலவுகின்ற தமிழ்நாடு மாநிலம் ஆகும். நிலவுகின்ற தமிழ்நாடு மாநிலமே முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய அரசின் சட்டப்படியான வாரிசு ஆகும்.
இவை அனைத்தையும் 2006 – பிப்ரவரி 27ஆம் நாள் முல்லைப் பெரியாறு வழக்கில் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி ஒய்.கே.சபர்வால் அளித்த தீர்ப்பில் தெளிவுபட உறுதி செய்துள்ளார். மற்ற நீதிபதி களான சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும் ஏற்றுக் கொண்ட ஒருமித்த தீர்ப்பாகும் இது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புத் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று 2006 – மார்ச்சில் சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றியது கேரளம். இச்செயல் நீதிமன்ற அவமதிப்பு என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கேரளம் ஏற்கும்படி ஆணையிட வேண்டும் என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அதே மாதம் மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, மீண்டும் மீண்டும் கேரள அரசின் வல்லடி வாதத்தை மட்டுமே மையப்படுத்தி தமிழக அரசிடம் கேள்வி கேட்கிறது.
1886-இல் இந்திய அரசு, தமிழக மாவட்டங்களான மதுரை (திண்டுக்கல், தேனி உட்பட), இராமநாதபுரம் (சிவகங்கை உட்பட) மாவட்டங்களின் பாசனத்திற் காகத்தான் திரு விதாங்கூர் சமஸ்தானத்துடன் முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் போட்டது. நாளது தேதிவரை முல்லைப் பெரியாறு நீரை மேற்படி மாவட்டங்கள் தாம் பயன்படுத்தி வருகின்றன. நாளது தேதிவரை முல்லைப் பெரியாறு நீர்படிப்புப் பகுதிக்கான குத்தகைத் தொகையைத் தமிழ்நாடு அரசுதான் கேரள அரசுக்குச் செலுத்தி வருகிறது. 1886-இல் இந்திய அரசு போட்ட ஒப்பந்தத்தின் வாரிசுரிமை அனுபோக உரிமையாகவும் தமிழகத்தின் வசமே உள்ளது. இதில் தமிழக அரசு அன்றைய இந்திய அரசுக்கு வாரிசா என்ற கேள்வி எங்கிருந்து எழுகிறது?
அன்றைய இந்திய அரசின் சட்டப்படியான வாரிசு தமிழக அரசு தான் என்பது சட்டப் புத்தகங்கள் வழியாகவும் நிலைநாட்டப்பட்டுள்ளது. நடப்பு உண்மையா கவும் அது விளங்குகிறது.
உயிரோடு தன் முன்னே நின்று கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பார்த்து, நீ உயிருள்ள மனிதன் என்று நிரூபிக்க வேண்டும் என்று ஒரு நீதிமன்றம் கேட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது முல்லைப் பெரியாறு ஒப்பந்தத்தின் சட்டப்படியான வாரிசு தமிழ்நாடு அரசுதான் என்று நிரூபிக்குமாறு கேட்பது? பொது அறிவு கண்டறியும் உண்மைகளைக் கூட, நிரூபிக்க “அறிவியல் ஆய்வு” தேவை போலும்! சட்ட அறிவியல் படியும் நமது உரிமையை நிலைநாட்டியுள்ளோம்.
ஒரு வேளை, அன்றைய இந்திய அரசின் இன்றைய வாரிசு தமிழ்நாடு அல்ல என்று தீர்ப்பு வந்தால் எப்படி இருக்கும்? இந்தியாவில் தமிழ்நாடு இல்லை; இந்தியச் சட்டங்கள் தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதாக ஆகும்.
இன்னொன்று, இச்சிக்கலில் இந்திய (ஒன்றிய) அரசு தொடர்பில்லாததுபோல், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான மூன்றாம் தரப்பு போல் சட்டப்படி ஒதுங்கி இருக்க முடியாது. பஞ்சாயத்துப் பேசவும் முடியாது. அன்றைய சென்னை மாகாணத்தின் சார்பில்தான் அன்றைய பிரித்தானிய இந்திய அரசு முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் கண்டது. அன்றைய சென்னை மாகாண அரசின் தொடர்ச்சி இன்றைய தமிழ்நாடு அரசு அன்றைய பிரித்தானிய இந்திய அரசின் இன்றைய தொடர்ச்சி சுதந்திர இந்தியாவின் நடுவண் அரசு. எனவே தில்லி அரசு தமிழகத்தின் சார்பில் நின்று உச்ச நீதிமன்றத்தில் இச்சிக்கலில் வழக்காட வேண்டும். இந்த அமர்வு அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் தானே தமிழகம் சார்பில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாதத்திற்காக அன்றைய இந்திய அரசின் வாரிசாக இன்றைய தமிழக அரசு இல்லை என்று ஏற்றுக்கொண்டால், அப்போதும் கூட முல்லைப் பெரியாறு சிக்கலில் தமிழக அரசு வழக்குத் தொடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டை தள்ளிவிட முடியாது. தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையைப் புறக்கணித்து விட முடியாது. ஏனெனில் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் பெற்றுதான் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிலங்களில் சாகுபடி செய்யமுடியும் என்ற நிலையும், தமிழகத்தின் ஐந்து தென் மாவட்டங்கள் குடிநீருக்கு முல்லைப் பெரியாறு அணை நீரையே சார்ந்திருக்கிறது என்ற நிலையும் மெய்யானது.
முல்லைப் பெரியாறு அணை உரிமை தமிழகத்திற்கு மறுக்கப்பட்டால் இம்மாவட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தின் பொருளியல் நிலை பாதிப்படையும்.
இந்த நிலையில் பாதிக்கப்படும் மக்கள் சார்பில் வழக்காட தமிழக அரசுக்கு உரிமை இருக்கிறது. சட்டத்தகுதியும் இருக்கிறது.
“முல்லைப்பெரியாறு சுற்றுச்சூழல் அமைப்பு” என்ற சிறு குழுவினரை ஒரு தரப்பாக ஏற்றுதான் 2006 தீர்ப்பே உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இந்த சிறு குழுவிற்கே கேரளம் சார்பாக வழக்காடுவதற்கு தகுதிப்பாடு (locus standi)  இருக்கும் போது பெருந் தொகையான மக்கள் சார்பில் தமிழக அரசு இவ்வழக்கில் ஒரு தரப்பாக நிற்பதற்கு எல்லா வகையிலும் தகுதிப்பாடு உண்டு.
எப்படி பார்த்தாலும் தமிழகத்தின் சட்ட உரிமையை, தமிழக மக்கள் தரப்பில் உள்ள நியாயத்தை உச்சநீதி மன்றம் உதறித்தள்ளி விட முடியாது.
தமிழர்களே,
வரலாற்றுக் காலந்தொட்டு தேக்கடி, குமுளி, மற்றும் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய அனைத்தும் தமிழ்நாட்டின் பகுதியாக திகழ்ந்தவைதான். கடைசியாக அப்பகுதியை ஆண்ட பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த பூஞ்சார் மன்னன் 1868 இல் திருவிதாங்கூர் மன்னனுக்கு அப்பகுதியை அளித்தான். அதே போல் தேவிகுளம், பீர்மேடு, இடுக்கிப் பகுதிகள் மதுரை மாவட்டத்தின் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளாக விளங்கியவைதான். மாநில மறு சீரமைப்பின் போது இந்த பகுதிகளை மலையாள அயல் இனத்திடம் பறிகொடுத்தோம்.
 முல்லைப் பெரியாறு சிக்கல் தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியை தமிழர்கள் இழந்ததால் ஏற்பட்ட சிக்கல் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத் தாயக மண்ணின் வளமான பகுதிகளை விழுங்கியதோடு மலையாள வெறி அடங்க வில்லை.
வந்தது கேரள அரசு. ஆயினும் உச்சநீதிமன்றம் 2006-இல் ஆயினும் இந்த சொத்தை வாதங்களுக்கெல்லாம் ஆப்படித்து, சிறப்பான தீர்ப்பு வழங்கியது.
நடுவண் அரசின் நீர்வளத்துறை அமைத்த வல்லுநர்குழுக்கள் ஆய்வு செய்து அணை வலுவாக உள்ளது என்றும் முதல் கட்டமாக 142 அடிவரை, தண்ணீர் தேக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது.
இப்பொழுது,1886-ஒப்பந்தம் செல்லாது என்றும், அப்படியே அதற்கு உயிர் இருந்தாலும் –அந்த ஒப்பந்தப்படி அதற்குத் தமிழ்நாடு சட்டப்படியான வாரிசு அல்ல என்றும் கேரளம் வல்லடி வழக்கு பேசுகிறது.
அதை உச்சநீதிமன்றம் ஏற்க சட்டஞாயம் ஏதும் இல்லை. உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தமிழ்நாட்டின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிப்பதாக அமையும்!

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

வெளியீடு:
த.தே.பொ.க. செய்திப்பிரிவு,

தலைமையகம், சென்னை-17.

Friday, July 26, 2013

சென்னையில் நடைபெறும் அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு விழா!

சென்னையில் நடைபெறும் அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு விழா!



தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக கொந்தளித்து, கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தமிழகக் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன் நடத்திய போராட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள அறப்போர்ஆவணப்படம் வரும் ஜூலை 28 – ஞாயிறு அன்று சென்னையில் வெளியிடப்படுகின்றது.

2013 மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா. மன்ற மனித உரிமைகள் ஆணைய அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது என்றவுடன்அந்தத் தீர்மானம் ஒரு ஏமாற்றுத்  தீர்மானம்; அதை இந்தியா ஆதரிக்கக் கூடாதுஎன்று கிளம்பியது மாணவர்கள் போர்க்குரல். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை இலயோலாக் கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர், கடந்த மார்ச் 8ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இது தமிழகம் முழுவதும் பற்றிப் பரவத் தொடங்கியது.

மாணவர்களின் போராட்டம், டெசோவுக்கு ஆதரவானது, மாணவர் போராட்டம் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கிறதுஎன்று தி.மு.கவும், தி.மு. ஆதரவு ஊடகங்களும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்க முயன்றது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் அமெரிக்கத் தீர்மான நகலை எதிர்த்தனர். ஒரு கட்டத்தில்அந்தத் தீர்மானமே இந்தியாவின் ஒப்புதலோடுதான் தயாரிக்கப்பட்டதுஎன்று அமெரிக்கா பின்வாங்கியது. இது மாணவர் போராட்டத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழினப் படுகொலைக்கு நேரடியாக உதவி செய்து வந்த காங்கிரஸ் கட்சியுடன் கலைஞர் கருணாநிதியின் தி.மு.. கூட்டணி வைத்திருந்தது. இந்த மாணவர் போராட்டத்தின் வீச்சைக் கண்டு அஞ்சிய தி.மு. தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத நிலை வந்துவிடுமோ என்று அஞ்சி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இந்த மாணவர் போராட்டம் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்தது. மாணவர்கள் பேருந்துகள் மீது கல்லெறியவில்லை. அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவில்லை. தமிழக வரலாற்றில் முதல் முதலாக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். வரலாறு காணாத இந்த மாணவர் போராட்டத்தினை அதன் போக்கில்அறப்போர்ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது.

இப்படத்தை, செங்கொடி மீடியா ஓர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் திரு. சி.கபிலன் தயாரித்துள்ளார். மூன்று தமிழர் உயிர்காக்க தீக்குளித்த காஞ்சிபுரம் தோழர் செங்கொடியின் வாழ்வைப் படம்பிடித்த ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’ ஆவணப்பட இயக்குநரும், பத்திரிக்கையாளருமான திரு. வே.வெற்றிவேல் சந்திரசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் தமிழர் அல்லாதவர்களிடம் தமிழீழக் கோரிக்கையின் தேவையை உணர்த்தும் நோக்கில் இந்த ஆவணப்படம் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானீஷ், இத்தாலி மொழி சப் டைட்டில்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, சென்னை - அண்ணாசாலையில் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் 28.07.2013 ஞாயிறு அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறுகின்றது. இயக்குநர் அமீர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் நிகழ்வுக்குத் தலைமையேற்க, உணர்ச்சிப்பாவலர்  காசி ஆனந்தன் ஆவணப்படத்தை வெளியிட, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார். இயக்குநர் .செந்தமிழன் கருத்துரை வழங்குகிறார்.

ஏற்கெனவே, இந்த ஆவணப்படம் தமிழீழத் தமிழர்கள் அதிகம் வாழும் சுவிசர்லாந்தில் இரண்டு முறை திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

சென்னையில் நடக்கவுள்ள, இவ் ஆவணப்பட வெளியீட்டு விழாவில், தமிழீழ ஆதரவாளர்களும், மாணவர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென ஆவணப்பட வெளியீட்டு விழாக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அழைப்பு:
அச்சுப் பத்திரிகை, தொலைக்காட்சி, இணைய தள செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள் ஆவணப்பட வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்து செய்தி சேகரித்து வெளியிடும்படி விழாக்குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர். (தொடர்புக்கு: 99444 46787, 99941 55339)


 (செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT