உடனடிச்செய்திகள்
Showing posts with label கையூட்டு. Show all posts
Showing posts with label கையூட்டு. Show all posts

Tuesday, August 7, 2018

வாக்காளர்களுக்கு அதிகமாகக் கையூட்டு தருவது வளர்ச்சிக்கான சான்றாம்! – நியூஸ்18 வாதம்! தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

வாக்காளர்களுக்கு அதிகமாகக் கையூட்டு தருவது வளர்ச்சிக்கான சான்றாம்! – நியூஸ்18 வாதம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
நேற்று (06.08.2018) மாலை கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் தொலைக்காட்சிகள் அது தொடர்பான நேரலைகள் – கருத்துரையாடல்கள் முதலியவற்றை வெளியிட்டன. நியூஸ்18 – தமிழ் தொலைக்காட்சி, திரு. குணசேகரன் அவர்களை நெறியாளராகக் கொண்டு ஒரு கலந்துரையாடலை நேரலை செய்தது. அதில், திரு. சுமந்த் சி. இராமனும் மற்றும் ஒருவரும் (அவர் பெயர் நினைவில் இல்லை) கலந்து கொண்டனர்.

தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சியின் 50 ஆண்டுகளில் மற்ற பல மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் வாக்காளர்களுக்கு அதிகமாகப் பணம் கொடுப்பது கூட பொருளாதார வளர்ச்சியின் பக்க விளைவுதான் என்றும் சுமந்த் சி. இராமனும் மற்றவரும் கூறினர். பணமதிப்பு குறைக்கப்பட்ட நேரத்தில் கண்டெய்னர் சரக்குந்துகளில் 89 கோடி ரூபாய் கடத்தப்பட்டது கூட பணமதிப்பு குறைப்பால் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்பதற்கான அடையாளம் தான் என்று மேலும் இருவரும் கூறினர். இவ்விருவரின் இக்கருத்தை ஏற்றுக் கொண்ட நெறியாளர் திரு. குணசேகரன், இந்த வாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஓர் உவமை கூறினார்.

ஆலைக்கழிவுகளால் பாதிப்பு வருகிறது, ஆனால் அது தொழில் வளர்ச்சியின் பக்க விளைவு அல்லவா என்றார்.

உலகில் எந்தப் பொருளியல் வல்லுநரும் பொருளாதார வளர்ச்சிக்கான அளவு கோலாகக் கையூட்டுத் தொகையின் அளவு அதிகரிப்பைக் கூறியிருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டைவிட பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகளில் தமிழ்நாட்டைப் போல் அதிகமாக வாக்காளர்ககுக் கையூட்டுக் கொடுக்கிறார்களா? இல்லை!

பாலியல் தொழில் வளர்ச்சியடைந்து, அதில் கட்டண உயர்வு ஏற்பட்டால், அதுவும் தமிழ்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சிகள் நிகழ்த்திய சாதனைதான் என்பார்களோ இவர்கள்!

கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது நமது வாதமன்று! வெள்ளையராட்சியில் கூட அணைக் கட்டுகள், தொழிற்சாலைகள், சாலைகள், தொடர்வண்டிகள், கல்விக் கூடங்கள் எனப் புதிய முன்னேற்றங்கள் வரத்தான் செய்தன.

கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நிலையில், அவர் ஆட்சி பற்றி அக்குவேறு ஆணி வேறாக விமர்சிப்பது தேவை இல்லை.

பொதுவாகத் தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் அரசியல் சீரழிவுகள் அதிகமாக ஏற்பட்டன. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கழகங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர் வாங்கும் கையூட்டுத் தொகை கற்பனைக் கெட்டாத வடிவங்களில், அளவுகளில் வளர்ந்தது.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நடத்திக் கொண்ட தனிநபர் பகை அரசியல் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு கேவலமானது! சுக துக்கங்களில் கலந்து கொள்வதுகூட குற்றம் என்று ஆக்கப்பட்டது. சட்டப்பேரவையில் இரு கழகங்களின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து விவாதிக்க முடியாத அவலம்!

கச்சத்தீவு பறிபோனது, மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க முடியாமல் போனது, காவிரி உரிமை போனது, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகத் தமிழ்நாட்டை மாற்றியது போன்ற பேரிழப்புகளும், பேரவலங்களும் கழகங்களின் ஆட்சியில்தான் ஏற்பட்டன.

கல்வித் தகுதி பெற்று தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை தேடிப் பதிவு செய்துள்ள இளையோர் எண்ணிக்கை 90 இலட்சத்திற்கு மேல்! உரிய கல்வியும் உயர்கல்வியும் கற்றவர்கள் உரிய ஊதியம் இல்லாமல் மிகக் குறைவான அத்துக்கூலியில் கல்வி நிலையம் தொடங்கி தொழிற்சாலைகள் வரை தமிழ்நாட்டில் ஏராளமானோர் பணிபுரிகிறார்கள்.

இவைதாம் தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சியின் “சாதனைகள்” !

வடமாநிலங்களைவிடத் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என்று இம்மூவரும் கலந்துரையாடலில் கூறினர். கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில் எந்தக் காலத்தில் வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தைவிட வளர்ச்சி பெற்றிருந்தார்கள்? வேறு எதில்தான் தமிழ்நாட்டைவிட முன்னேறியிருந்தார்கள்?

இதுவரை வடமாநிலத்தவர்களைக் காட்டிலும் பொருளாதாரம், அறிவாற்றல், கலைப்படைப்புகள் அனைத்திலும் தமிழர்தாம் முன்னேறி இருந்தார்கள்! கழகங்களின் ஆட்சியில் எவ்வளவோ சீரழிவுகளும், அரசியல் கொள்ளைகளும் இருந்தாலும், மரபுத்தொடர்ச்சி வளர்ச்சி தமிழர்களுக்கு இருக்கிறது என்பதே உண்மை!

திராவிடப் பொற்கால ஆட்சி குறித்த பூரிப்பில் இருப்பவரும், தமிழ்நாட்டில் இந்திய ஏகாதிபத்தியவாதத்தின் கடைசிப் புகலிடம் திராவிட அரசியல்தான் என்று அடையாளம் கண்டவர்களும் நடத்திய கலந்துரையாடல் என்று இதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, March 12, 2018

இலஞ்சம் பெறும் நோக்கில் பொது மக்களை அலைக்கழிக்கும் - பல்லாவரம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர் அதிகாரிகளிடம் முறையீட்டுக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!

இலஞ்சம் பெறும் நோக்கில் பொது மக்களை அலைக்கழிக்கும் - பல்லாவரம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர் அதிகாரிகளிடம் முறையீட்டுக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!
அரசின் விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், இலஞ்சம் பெறும் நோக்கில் - சட்டவிரோத நடைமுறைகளின் வழியே பொது மக்களை அலைக்கழித்ததோடு, அதைத் தட்டிக் கேட்ட சக தாசில்தார் ஒருவரை – தனது அலுவலகத்தில் வைத்து இரும்பு ராடால் தாக்கியுள்ள பல்லாவரம் தாசில்தார் வில்பிரட் கிச்சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவரால் அலைக்கழிக்கப்பட்டு வரும் பொது மக்களுக்கு சட்ட விதிமுறைகளின்படி உடனடியாக ஆவணங்களை வழங்க வேண்டுமென்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில், தமிழ்நாடு அரசு – வருவாய்த் துறை ஆணையர் திரு. சத்தியகோபால் இ.ஆ.ப.(ஐ.ஏ.எஸ்.), அவர்களையும், இணை ஆணையர் திருமதி. இலட்சுமி இ.ஆ.ப., அவர்களையும் நேரில் சந்தித்து இது குறித்து முறையிட்ட பிறகு, இன்று (12.03.2018) காலை, சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், மருது மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துப்பாண்டி, தமிழ்நாடு மாணவர் முன்னணித் தலைவர் திரு. சே. இளையராசா ஆகியோர் இதனை தெரிவித்தனர்.
குரோம்பேட்டையைச் சேர்ந்த திருமதி. ரஃபீக்கா என்ற முதியவரின் கணவர் திரு. முகமது தவ்பீக் என்பவர் கடந்த 01.06.2015 அன்று இறந்து விட்ட நிலையில், தனக்கு வாரிசுரிமைச் சான்று கோரி பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை விண்ணப்பம் அளித்தார். அரசு விதிமுறைகளின்படி பதினைந்து நாட்களுக்குள் அளிக்க வேண்டிய வாரிசுச் சான்றை, உரிய சான்றுகள் வைத்திருந்தும் - பல மாதங்கள் கழித்த நிலையிலும், திருமதி. ரஃபீக்கா அவர்களால் பெறமுடியவில்லை! தள்ளாத அகவையிலும், திருமதி. ரஃபீக்கா பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நடையாய் நடந்து கொண்டிருந்தார்.

வாரிசுரிமைச் சான்றிதழ் பெற பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதைக் கணக்கில் கொண்டு கடந்த 2017இல் (09.08.2017), தமிழ்நாடு அரசு – வருவாய் துறை ஆணையம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், வாரிசுரிமை கோருபவர் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் (Point No 5) மற்றும் பிற வாரிசுதாரர்களின் விவரங்களைக் குறிப்பிட்டு சுய உறுதிமொழியும் (Self Declaration) அளித்தால் போதும் (Point No 5 - 1) என்று தெளிவுபட கூறியிருந்தது. இந்த நடைமுறைதான் சென்னை மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது.

ஆனால், பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டும் ஒரு புது நடைமுறை செயலில் உள்ளது. அங்கு வட்டாட்சியராக உள்ள திரு. வில்பிரட் கிச்சிங் என்பவர், வாரிசுரிமை கோருபவர் மட்டுமின்றி, இறந்தவரின் அனைத்து வாரிசுதாரர்களும் ஆளுக்கொரு சுய உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும் என்று, சட்டத்தில் இல்லாத ஒரு புது நடைமுறையைக் கடைபிடித்து வருகிறார்.

இதற்காக “இதர வாரிசுதாரர் சுய உறுதிமொழிப் படிவம்” என்ற தனி படிவத்தை, அலுவலகத்திற்கு வெளியே ஒருவர் விற்பனை செய்து கொண்டுள்ளார். அதைக் காசு கொடுத்து வாங்கி, அதை நிரப்பிக் கொண்டு போய் திரு. வில்பிரட் அவர்களிடம் கொடுக்க வேண்டுமாம்!

அடுத்து, அந்த படிவங்களை இதர வாரிசுதாரர்கள் அனைவரும் நேரில் வந்துதான் கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார் திரு. வில்பிரட்! இதன் காரணமாக, பலர் தங்கள் வேலைகளைவிட்டு நேரில் வந்து நிற்கின்றனர். வெளிநாடுகளில் பணிபுரிவோர், வெளியூர்களில் பணிபுரிவோர் பல இலட்சம் செலவு செய்து ஊருக்கு வந்து, திரு. வில்பிரட் அவர்கள் முன் நேர் நிற்கின்றனர். இதை சாக்காக வைத்துக் கொண்டு, திரு. வில்பிரட் அலுவலக ஊழியர்கள் நேரில் வந்து நிற்க முடியாதவர்களுக்கு விலக்கு அளிக்க 5,000 முதல் 25,000 ரூபாய் வரை இலஞ்சப் பணம் கேட்கின்றனர். பலர் இவ்வாறு பணம் அளித்து, வாரிசுரிமைச் சான்று பெறுகின்றனர்.

இதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத திருமதி. ரஃபீக்கா அவர்கள், தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் வேளச்சேரி வட்ட வருவாய் தாசில்தார் திரு. குமரன் என்பவரிடம், தான் அலைக்கழிக்கப்படுவது குறித்து கூறினார். கடந்த 08.03.2018 அன்று, காலை 9.15 மணிக்கு, திரு. குமரன் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, திரு. ரஃப்பீகா அவர்களைத் தள்ளாத வயதிலும் இப்படி இரண்டாண்டுகளாக அலைய விடுவது சரியல்ல என்றும், உங்கள் புதிய நடைமுறை தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கைக்கு எதிரானது என்றும் திரு. வில்பிரட் அவர்களிடம் முறையிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த திரு. வில்பிரட், தனது அலுவலகத்திற்கு வந்து தனது நடைமுறையையே கேள்வி எழுப்புவதா என நியாயம் கேட்டு வந்த தாசில்தார் குமரனைத் தாக்கினார். திரு. வில்பிரட்டுக்கு உதவியாக இருந்த திரு. சுரேஷ் என்பவரும் சேர்ந்து கொண்டு, திரு. குமரனை அங்கிருந்த நில அளவை இரும்புக் கம்பியால் அடித்தனர். மேலும், திரு. குமரனை அலுவலகத்திற்குள்ளேயே வைத்துப் பூட்டினர். நிகழ்வை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், திரு. குமரனை மீட்டுள்ளனர்.
இப்போது, திரு. வில்பிரட் மற்றும் திரு. சுரேஷ் ஆகியோர் மீது, இந்தியத் தண்டனைச் சட்டம் 294(b) – (தவறான வார்த்தைப் பிராயோகம்), 342 (சட்ட விரோதச் சிறை வைப்பு), 324 (ஆயுதத்தால் தாக்குதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு (வழக்கு எண் 187/2018) செய்யப்பட்டுள்ளது. இதில், இன்னொரு வேடிக்கை என்னவெனில், பல்லாவரம் வட்டாட்சியர் தனது பணியை ஏன் செய்யவில்லை என்று ஞாயம் கேட்கச் சென்று – காயம்பட்டுள்ள தாசில்தார் குமரன் மீது, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்த (இ.த.ச. 332) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது, காவல்துறை!

சட்டப்படி அனைத்து ஆவணங்கள் வைத்திருந்தும், சட்டத்தில் இல்லாத புதிய நடைமுறைகளைக் கூறி பொது மக்களை அலைக்கழித்து வரும் பல்லாவரம் வட்டாட்சியர் திரு. வில்பிரட் மீது, தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இலஞ்சம் பெறும் நோக்கில் அவர் தடுத்து வைத்துள்ள வாரிசுரிமை மனுதாரர்கள் அனைவருக்கும், முறைப்படி விசாரணை செய்து உடனடியாக வாரிசுரிமைச் சான்று வழங்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (12.03.2018) காலை 10.30 மணிக்கு, சென்னை எழிலகத்திலுள்ள தமிழ்நாடு அரசு வருவாய் ஆணையர் திரு. சத்தியகோபால் ஐ.ஏ.எஸ், அவர்களிடமும், இணை ஆணையர் திரு. இலட்சுமி ஐ.ஏ.எஸ்., அவர்களிடமும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரில் சென்று மனு அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்து, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.


செய்தியாளர் சந்திப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் வெற்றிதமிழன், தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் இளங்குமரன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் உடனிருந்தனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT