உடனடிச்செய்திகள்
Showing posts with label கோரிக்கை. Show all posts
Showing posts with label கோரிக்கை. Show all posts

Saturday, July 13, 2019

புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்! ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை!

புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை!


புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுப்பதை தடை செய்து புதுச்சேரி அரசு தனி ஆணை பிறப்பிக்க வேண்டும்! என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான ஐயா பெ. மணியரசன் அவர்கள் புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.


ஐட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்த வல்லுனர்களின் கருத்துக்கள் அடங்கிய ஆய்வறிக்கையையும் புதுச்சேரி முதல்வரிடம் ஐயா பெ மணியரசன் அவர்கள் நேரில் வழங்கி விளக்கினார்.


காவிரி உரிமை மீட்புக்குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா. வேல்சாமி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி, நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கத் தலைவர் தோழர் த. இரமேசு, இலக்கியப் போக்கில் இலக்கிய மன்றத் தலைவர் திரு பராங்குசம், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் கௌரி, தமிழர் களம் தலைவர் தோழர் கோ. அழகர், உலகத் தமிழ் கழகம் புதுச்சேரி தலைவர் திரு. கோ. தமிழலகன், நா.த.க. அரியாங்குப்பம் செயலாளர் திரு. செ. இளங்கோவன், உ.த.க. திரு. புதுவை வேலா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உடனிருந்தனர்.




செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

Tuesday, April 16, 2019

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்! பல்கலைப் பதிவாளரிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி கோரிக்கை!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்! பல்கலைப் பதிவாளரிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி கோரிக்கை!
புதுச்சேரி பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு காலாப்பட்டு பகுதியில் 870 ஏக்கர் வேளாண் விளை நிலங்கள் மீது அமைக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்காக சற்றோப்ப 870 ஏக்கரில் நடைபெற்று வந்த விவசாயம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

இப்பல்கலைக்கழகம் புதுச்சேரியில் அமைக்கப்படுவதற்கான நோக்கத்தை அப்போதே தெளிவுபடுத்தினார்கள். புதுச்சேரி மக்கள் தங்களுடைய கல்வி - வேலைவாய்ப்பு ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் தான் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக அன்றைய இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி வாக்குறுதி அளித்தார். அதன் பெயரிலேயே வேளாண் விளை நிலங்களின் மீது இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த நோக்கங்கள் இன்றைக்கு சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை!
புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளி மாநில மாணவர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் மிக மிகக் குறைவு! புதுச்சேரி மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஏற்கெனவே புதுதில்லியில் அம்மாநில அரசு மத்திய பல்கலைக் கழகமாக உள்ள தில்லி பல்கலைக்கழகத்தில் அந்த மண்ணின் மக்களுக்கு 85 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 2017ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மத்திய பல்கலைக்கழக இருந்தாலும் கூட அந்த மண்ணின் மக்கள் டெல்லியில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

ஆந்திராவில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் 1978ஆம் ஆண்டிலிருந்து இந்திய குடியரசுத் தலைவர் தனி ஆணையின் பேரில் 85 விழுக்காடு அந்த மண்ணின் மக்களுக்கே என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் தேர்வு ஆந்திராவில் மட்டும் பொருந்தாது என்ற நிலை இருக்கிறது.

எனவே இந்த நடைமுறைகளை பின்பற்றி புதுச்சேரியிலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 90 விழுக்காடு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக மாணவர் முன்னணி சார்பில் பல்கலைக்கழக பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

பல்கலைக்கழகப் பதிவாளர் திருமதி. சித்ரா அவர்களிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி தோழர்கள் உதயச்சங்கர், கணேசமூர்த்தி, தினேஷ், பவித்திரன்,
தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் இம்மனுவை இன்று (16.04.2019) காலை நேரில் கையளித்தனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 25 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென தாம் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக பதிவாளர் திருமதி. சித்ரா தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த நம் தோழர்கள் 25 விழுக்காட்டு இடங்கள் போதாது எனவும், 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், எவ்வித முன்னறிவிப்புமின்றி புதுச்சேரி பல்கலைகழகத்தின் கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது ஏழை எளிய மாணவர்களை கடுமையாக பாதிக்கக்கூடிய நடவடிக்கை எனக் குறிப்பிட்டு, இக் கல்வி கட்டண உயர்வைத் திரும்பப் பெற்று பழைய கல்வி கட்டண விகிதம் தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி பல்கலைக் கழக நிர்வாகத்தை வலியுறுத்தி வேண்டுகோள் விடப்பட்டது.

#வெளியார்

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, February 9, 2019

"தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும்!" வள்ளலார் பெருவிழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!

"தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வேண்டும்!" வள்ளலார் பெருவிழாவில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!
“சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற புதுமையான நெறியை முன்னிறுத்தும் தமிழர் ஆன்மிகத்தின் முகமாகவும், தமிழினத்தின் மறுமலர்ச்சி முகமாகவும் விளங்கும் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், “தமிழர் மறுமலர்ச்சி மூலவர் - வள்ளலார் பெருவிழா” 2019 பிப்ரவரி 9 அன்று மாலை சிதம்பரத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் விழா நிறைவுப் பேருரை ஆற்றினார்.

“வள்ளலார் வழி தமிழர் இறைநெறி”என்ற தலைப்பில் திரு. இறைநெறி இமயவன் அவர்களும், “வள்ளலார் வழி தமிழர் மருத்துவம்” என்ற தலைப்பில் மருத்துவர் தி. தெட்சிணாமூர்த்திஅவர்களும் சிறப்புரையாற்றினர்.

தமிழ்ச் சான்றோர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டப்பட்டது. தொடர்ந்து வள்ளலார் நெறி பரப்பி வரும் காட்டுமன்னார்கோயில் வள்ளலார் வழிபாட்டு மன்றத் தலைவர் திரு. சிவ.சிவ. ரெங்கநாதன் அவர்களுக்கு “வள்ளலார் திருத்தொண்டர்” விருதும், திருக்குறள் ஒப்புவித்தலில் சாதனை படைத்து வரும் அரியலூர் மாணவி செல்வி கு. பத்மபிரியா அவர்களுக்கு “இளம் சாதனையாளர்” விருதும், நாட்டியக்கலைக்குத் தொண்டாற்றி வரும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை திரு. சக்தி இரா. நடராஜன் அவர்களுக்கு “நாட்டியாஞ்சலி செம்மல்” விருதும் வழங்கப்பட்டது.

பேரியக்க சிதம்பரம் நகரச் செயலாளர் இரா. எல்லாளன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே. சுப்ரமணிய சிவா, ரோட். ச. மணிவண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் “மல்லர் கம்பம்” வீர விளையாட்டுக் கலைகளை அரங்கேற்றினர். செல்வன் தி.ரா. அறன் திருவருட்பா ஓதினார். மாணவி மோனிகா திருவருட்பா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார்.

தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிறைவில், த.தே.பே. தோழர் சிவ. அருளமுதன் நன்றி கூறினார்.

இந்த “வள்ளலார் பெருவிழா”வில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள்
அமைக்க வேண்டும்!

“சமரச சுத்த சன்மார்க்கம்” என்ற புதுமையான நெறியை முன்வைத்துப் பரப்பிய வள்ளலார் இராமலிங்க அடிகள் தமிழர் மறுமலர்ச்சியின் மூலவர் ஆவார். மெய்யியல், மொழியியல், மருத்துவம், வாழ்வியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆழமான புதிய கருத்துகளை முன்வைத்தவர் வள்ளலார் ஆவார்.

வள்ளலார் சிந்தனைகள் மனிதகுலத்திற்கு முன் எப்போதையும்விட இப்போது தேவை என்பதை உலக நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

வள்ளலாரின் பல துறைச் சிந்தனைகளை ஆய்வு செய்து, பரப்புவதற்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் “வள்ளலார் இராமலிங்க அடிகளார் உயராய்வு மையங்கள்” அமைக்க வேண்டும் என “வள்ளலார் பெருவிழா”வின் வழியாக தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது”.

தீர்மானத்தை வரவேற்று அனைவரும் எழுந்து நின்று கைதட்டி நிறைவேற்றினர்.

நிகழ்வில் தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, January 27, 2019

அடக்குமுறைகளைக் கைவிட்டு அரசு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துக! தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

அடக்குமுறைகளைக் கைவிட்டு அரசு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துக! தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 2019 சனவரி 22 முதல் வேலை நிறுத்தம் – மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுத்துறைத் தொழிலாளர்கள் உள்ளிட்டு அனைத்துத் பிரிவுத் தொழிலாளர்களும் 2004 முதல் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் செயல்படுத்தி வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றார்கள்.

தமிழ்நாடு அரசு 20 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அக்கம்பக்கத்து பள்ளிகளில் சேர்த்துவிடுவது என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனை ஆசிரியர் இயக்கங்களும், கல்வியாளர்களும் எதிர்த்து வருகிறார்கள்.

இப்போது நடைபெற்று வரும் அரசு ஊழியர் – ஆசிரியர் போராட்டத்தில் ஒன்பது கோரிக்கைகளில் முதன்மையான கோரிக்கைகள் இவை இரண்டும் ஆகும்!

தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் டி. செயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசின் நிதிச்சுமையைக் காரணம் காட்டி, பழைய பென்சன் திட்டத்திற்கு செல்ல முடியாது என்று அறிவித்திருக்கிறார்.

புதிய ஓய்வூதியத் திட்டமென்பது, உலக வங்கியின் ஆலோசனைப்படி அமர்த்தப்பட்ட பட்டாச்சார்யா குழுவின் பரிந்துரைப்படி அறிவிக்கப்பட்ட திட்டமாகும். ஊழியர்களின் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரால் 2004-இல் அறிவிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம், ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு முற்றிலும் விலகிக் கொள்ளும் அறிவிப்பாக அமைந்தது.

ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் ஊதியத்திலிருந்து 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு நிகரான அளவு அரசும் பங்களிப்பு வழங்கி, ஓய்வூதிய நிதி உருவாக்கப்படும் என்றும், இந்த ஓய்வூதிய நிதி தனியார் நிதி நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு பங்குச்சந்தையில் சுழலவிடப்படும் என்று இப்புதிய ஓய்வூதியத் திட்டம் கூறுகிறது.

உலக வங்கியின் அறிவுரைப்படி இதே போன்ற ஓய்வூதியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நாடுகளிலெல்லாம் உழைப்பாளர்களின் ஓய்வூதிய நிதி பங்குச்சந்தை சூதாட்டத்தில் காணாமல் போய், தனியார் ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாமல் கைவிரித்த நிலையை உலகின் பல நாடுகள் கண்டன.

தமிழ்நாட்டில் செயல்படும் இத்திட்டத்தின்படி ஜப்பான், குவைத் போன்ற நாடுகளைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனங்கள் ஓய்வூதிய நிதியைக் கையாளுகின்றன. இந்நிறுவனங்கள் நுழைவுக் கட்டணம், நிர்வாகக் கட்டணம், குறைந்தபட்ச இலாபம் என்ற பெயரால் ஒவ்வொரு ஊழியரின் ஓய்வூதிய நிதியிலிருந்து 50 விழுக்காடு வரையிலும் எடுத்துக் கொண்டு விடுகின்றன. இதற்கு மேலுமுள்ள ஓய்வூதிய நிதி பங்குச்சந்தையில் விடப்பட்டு அதில் இழப்பு ஏற்பட்டால், அதை முழுவதும் ஓய்வூதியதாரர்களே சுமக்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் என்பது, உழைப்பாளர்களின் உழைப்புத் திறன் தேய்மானத்திற்காக (Labour power Depreciation) வழங்கப்படும் நிதியாகும். இது அவர்கள் ஊதியத்தின் ஒருபகுதிதான்! இந்தக் கோட்பாட்டைக் கைவிடுவதுதான் புதிய ஓய்வூதியத் திட்டம்!

அநீதியான இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று போராடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கோருவது முற்றிலும் ஞாயமானது!

அடுத்து, அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி கூடுதல் ஆசிரியர்களை அமர்த்தி, அவற்றை வலுப்படுத்த வேண்டிய அரசு அப்பொறுப்பிலிருந்து விலகுவதால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வது குறைகிறது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு மாறாக, அதன் கட்டமைப்புகளையும், ஆசிரியர் எண்ணிக்கையையும் சீர்குலைப்பதிலேயே தமிழ்நாடு அரசு குறியாக இருக்கிறது. இதுபோதாதென்று, இப்போது அரசுப் பள்ளிகளில் புதிதாகத் தொடங்கப்படும் ஆங்கில வழி எல்.கே.ஜி. – யூ.கே.ஜி. வகுப்புகளுக்குப் புதிதாக ஆசிரியர்கள் அமர்த்தப்பட மாட்டார்கள், இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டே அவை நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

தானே சீர்குலைத்துவிட்டு அதையே காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை மூட முயல்வது தமிழ்நாடு அரசின் அப்பட்டமான கல்வி மறுப்பு நடவடிக்கையாகும். போராடும் ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கை முற்றிலும் ஞாயமானது!

இதற்கு முன்னர் பல போராட்டங்ள் நடத்தியும், தமிழ்நாடு அரசு செவி சாய்க்காத நிலையில்தான் இப்போதைய போராட்டம் நடக்கிறது.

போராடும் ஆசிரியர் – அரசு ஊழியர்கள் கூட்டமைப்புத் தலைவர்களை அழைத்துப் பேசித் தீர்க்கும் வழிமுறை காண்பதற்கு மாறாக, அவ்வமைப்புகளின் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், பணியிடை நீக்கம் செய்வதும் கொடும் அச்சுறுத்தலில் ஈடுபடுவதும் சனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

தமிழ்நாடு அரசு, தனது அடக்குமுறைகளையும் பேச்சு வார்த்தை மறுப்புப் போக்கையும் கைவிட்டு, போராடும் கூட்டமைப்புகளுடன் உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு கண்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Tuesday, January 8, 2019

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் ஆணை: ஸ்டெர்லைட் ஆலையை மூட அவசரமாக சிறப்புச்சட்டம் இயற்றுக! தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் ஆணை: ஸ்டெர்லைட் ஆலையை மூட அவசரமாக சிறப்புச்சட்டம் இயற்றுக! தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடையில்லை என இன்று (08.01.2019) உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

உயிர்க்கொல்லி ஆலையாக விளங்கி, தூத்துக்குடி மக்களின் உயிரைப் பறித்து வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 மே மாதம் நடைபெற்ற எழுச்சிமிக்கப் போராட்டத்தின்போது, 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதித்து ஆணைப் பிறப்பித்தது. இத்தடையை நீக்கக் கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி ஆதர்ஸ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, கடந்த 15.12.2018 அன்று ஆலையைத் தொடர்ந்து இயக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையைத் திறக்க ஏற்பாடுகள் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பேராசிரியர் பாத்திமாபாபு தலைமையிலான ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கத்தினர் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, 2019 சனவரி 21 வரை ஆலையைத் திறக்கக் கூடாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இம்மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று (08.01.2019) காலை தில்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க 2019 சனவரி 21 வரை தடை விதித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை நீக்கியும் ஆணையிட்டுள்ளது.

செம்பு தயாரிப்பதற்கு உயர் வெப்பத்தில் சால்க்கோசைட், சால்க்கோ பைரைட் போன்ற செம்புத் தாதுக்களை உருக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் ஆலைகளை தடை செய்வது என்ற கொள்கை முடிவெடுத்து, சட்டம் இயற்றினால்தான் தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் ஆலையைத் திறக்க நிரந்தரத் தடை விதிக்க முடியும்! இதற்கேற்ப, தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்து, ஸ்டெர்லைட் ஆலையையும் அதன் தொழில்நுட்பத்தையும் அபாயகரமானவை எனப் பட்டியலிட வேண்டியது தமிழ்நாடு அரசின் அவசர – அவசியக் கடமையாகும்!

ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை 2018 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் நீக்கி ஆணையிட்ட போது, அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து அதற்கு எதிராகக் குரல் கொடுத்தன. அதன் விளைவாக, இந்திய அரசு தானே ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியது.

அதுபோல், தற்போது தமிழ்நாட்டு மக்களும் கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாதென ஓரணியில் நின்று வலியுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக கொள்கை முடிவெடுத்து, நடைபெற்றுக் கொண்டுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சிறப்புச்சட்டம் பிறப்பிக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, September 17, 2018

தமிழ்நாடு அரசே! எச். இராசாவைக் கைது செய்! வர்ணாசிரமவாதிகளின் கலவரத்துக்குத் துணை போகாதே! தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

தமிழ்நாடு அரசே! எச். இராசாவைக் கைது செய்! வர்ணாசிரமவாதிகளின் கலவரத்துக்குத் துணை போகாதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
 
கடந்த 15.09.2018 அன்று புதுக்கோட்டை மாவட்டம் – மெய்யபுரம் கிராமத்தில் பிள்ளையார் ஊர்வலத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் கட்டளைக்குப் புறம்பாக, தடைசெய்யப்பட்ட தெருக்கள் வழியாக அழைத்துச் செல்லக்கூடாது என்று காவல்துறையினர் கூறியபோது, அங்கிருந்த பா.ச.க. செயலாளர் எச். இராசா உயர்நீதிமன்றத்தை மிகவும் கேவலமான சொற்களால் கொச்சைப்படுத்தி பேசியது காணொலியாக ஓடிக் கொண்டுள்ளது.
 
காவல்துறையினர் அனைவரும் கிறித்துவர்களிடமும் முசுலிம்களிடமும் கையூட்டு (இலஞ்சம்) வாங்குபவர்கள், நான் உங்களுக்கு இலஞ்சம் தருகிறேன் கேளுங்கள் என்று இழிவுபடுத்திப் பேசிவிட்டு, காவல்துறையினர் கட்டளையை மீறி, தடை செய்யப்பட்ட தெருவில் பிள்ளையார் ஊர்வலத்தை அழைத்துச் சென்றுள்ளார்.
 
எச். இராசாவின் இந்தக் குற்றச்செயல்களுக்கு காணொலிக் காட்சிகள் சாட்சியமாக உள்ளன. காவல்துறையினரிடமும் இக்காணொலிப் பதிவு இருக்கும்.
 
அன்று இரவே எச். இராசா தளைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என்று நாகரிகச் சமூகம் எதிர்பார்த்தது. ஆனால், எச். இராசா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி அமைச்சர் செயகுமார், சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆராய்வோம் என்று 16.09.2018 அன்று ஊடகங்களிடம் கூறியது பேரதிர்ச்சியை உண்டாக்கியது.
 
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மக்கள் மீது அக்கறையுள்ள தமிழ்நாட்டுத் தலைவர்கள் தூத்துக்குடி சென்றால் கைது, எட்டுவழிச் சாலை பகுதியில் உழவர்களைச் சந்தித்தால் கைது, பொதுக்கூட்டம் – ஊர்வலம் – ஆர்ப்பாட்டம் அனைத்துக்கும் தடை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளைப் பறித்து, எதேச்சாதிகாரத்தை செயல்படுத்தி வருகிறது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு! ஆனால், எச். இராசா காவல்துறை அதிகாரிகளைக் கையால் தள்ளிவிட்டு, சொல்லால் குத்திக் கிழித்துவிட்டு, உயர் நீதிமன்றத்தையும் கீழ்த்தரமாக இழிவுபடுத்திவிட்டு, தடை செய்யப்பட்ட பாதையில் ஊர்வலம் நடத்திய குற்றச்செயல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதில் சட்ட வல்லுநர்களைக் கலந்து “ஆராய்ச்சி” செய்ய வேண்டிய அளவிற்கு சட்டச்சிக்கல் உள்ளதா அல்லது வர்ணாசிரம மேலாதிக்கச் சிக்கல் இருக்கிறதா அல்லது எடப்பாடி அரசின் இருப்புக்கான சிக்கல் இருக்கிறதா?
 
உயர் நீதிமன்றம் தானே முன்வந்து. எச். இராசா மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அமைச்சர் செயகுமார் கூறினார். சிக்கலை உயர் நீதிமன்றத்தின் பக்கம் தள்ளிவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க. அரசு கருதுவது தெரிகிறது.
 
எடப்பாடி அரசு தமிழ் மக்களின் சனநாயக உரிமைகளைப் பறித்து பா.ச.க. தலைமைக்குத் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி வந்தது. அடுத்தகட்டமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பை எச். இராசாவின் காலடியில் வீழ்த்தியும், தனது சொந்தக் காவல்துறையின் சட்டப்படியான அதிகாரத்தையும் தன்மானத்தையும் எச். இராசாவின் ஆரியத்துவாவுக்குக் கீழ்ப்படுத்தியும் தனது விசுவாசத்தை வெளிக் காட்டியுள்ளது.
 
கடைசியாக சில பிரிவுகளில் எச். இராசா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. இது “சட்ட வல்லுநர்களின்” ஆலோசனைப்படி நடந்திருக்கும். ஆனால், “இலஞ்சம் கொடுக்கிறேன், வாங்கிக் கொள்” என்று காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய குற்றத்துக்கு எச். இராசா மீது குற்றப்பிரிவு போடப்படவில்லை!
 
உயர் நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் எச். இராசா பேசியது போல் யார் பேசினாலும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! ஒரு வாதத்திற்காக இப்படிக் கற்பனை செய்து பாருங்கள். தமிழின உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிற்காகப் போராடும் தலைவர்கள் எச். இராசா போல் பேசியிருந்தால், தடையை மீறியிருந்தால் எடப்பாடி அரசு என்னெ்னன செய்திருக்கும்!
 
ஏற்கெனவே பா.ச.க.வைச் சேர்ந்த எஸ்.வி. சேகர் மீது நீதிமன்றப் பிடி ஆணை இருந்தும், அவரைத் தளைப்படுத்த மறுத்தது எடப்பாடி அரசு!
 
எடப்பாடி ஆட்சி காட்டும் விசுவாசத்தினால் துணிச்சல் பெற்ற ஆரியத்துவா – வர்ணாசிரம வகுப்புவாதிகள் மேலும் துணிச்சல் பெற்று, இன்று பெரியார் சிலையை சென்னையிலும் திருப்பூரிலும் அவமரியாதை செய்திருக்கிறார்கள். பெரியார் மீது தமிழ்த்தேசியர்கள் வைக்கும் திறனாய்வு நமது உள் விவகாரம்! ஆரியத்துவா வர்ணாசிரம வகுப்புவாதிகள் பெரியாரை இழிவுபடுத்துவதை தமிழ்த்தேசியர்கள் அனுமதிக்க மாட்டோம்!
 
வர்ணாசிரம வகுப்புவாதிகள் தமிழ்நாட்டைக் கலவர மண்ணாக மாற்றி, குருதி குடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று புரிகிறது. இந்து மதத்தில் உள்ள தமிழர்கள் இந்த வர்ணாசிரம வகுப்புவாதிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகக் கூடாது.
 
தமிழை அர்ச்சனை மொழியாக்கிடத் தடை போடுகின்ற – அனைத்துச் சாதித் தமிழர்களும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்கின்ற – சிவன் கோவில் கருவறை முன் தேவாரம், திருவாசகம் பாடுவதை எதிர்க்கின்ற - ஈழத்தின் இந்துக் கோயில்கள் சிங்கள பௌத்த வெறியர்களால் இடிக்கப்படும்போதெல்லாம் கண்டிக்காத இந்த வர்ணாசிரமவாதிகளின் தூண்டுதலுக்கு தமிழ் மக்கள் பலியாகக் கூடாது!
 
பா.ச.க.வுக்கு விசுவாசம் காட்டுவது மட்டுமே தனது ஆட்சிக்கான பாதுகாப்பு என்று எடப்பாடி அமைச்சரவை கருதினால், பா.ச.க.வினர் திட்டமிடும் பெரும் கலகத்தில் உங்கள் ஆட்சி வீழ்ந்துவிடும்; தமிழர்கள் பேரழிவிற்கு உள்ளாவார்கள் என்ற உண்மையை உணர்ந்து உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் எச். இராசாவை சிறையிலடைக்க வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. திட்டமிடும் கலகத்தைத் தடுத்து நிறுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சரை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, July 6, 2018

தோழர் முகிலனைத் தனிமைச் சிறையில் அடைக்காதீர்! அடிப்படை வசதிகள் செய்து தருக! தமிழக சிறைத்துறை அமைச்சருக்கு... தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

தோழர் முகிலனைத் தனிமைச் சிறையில் அடைக்காதீர்! அடிப்படை வசதிகள் செய்து தருக! தமிழக சிறைத்துறை அமைச்சருக்கு... தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
சட்டவிரோத மணல் வணிகம் மற்றும் மணல் கொள்ளை ஆகியவற்றைத் தடுப்பதில் மக்கள் திரள் போராட்டங்கள் நடத்தி வருபவர் தோழர் முகிலன். அதற்கு முன் கூடங்குளம் அணு உலை அபாயத்தைத் தடுக்க மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றவர்.

கூடங்குளம் போராட்டம் தொடர்பாக தோழர் சுப. உதயகுமார், தோழர் முகிலன் மற்றும் அப்பகுதி மக்கள் மீது ஏராளமான வழக்குகளைக் காவல்துறை போட்டுள்ளது. கூடங்குளம் வழக்கில் வாய்தாவுக்கு நீதிமன்றம் போகவில்லை என்பதற்காகத் தோழர் முகிலன் மீது வள்ளியூர் நீதிமன்றம் பிடி ஆணை (வாரண்ட்) பிறப்பித்திருந்தது. ஆனால் தோழர் முகிலன் தலைமறைவாக இல்லை. வெளிப்படையாக இயங்கி வந்தார். போராட்டங்களில் கலந்து வந்தார்.

அந்த பிடி ஆணைக்காகக் காவல்துறையினர் தோழர் முகிலனைத் தளைப்படுத்தி வள்ளியூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தினர். நீதிமன்றம் அவரை சிறையில் அடைத்தது. ஆனால் தோழர் முகிலன் பிணையில் வெளிவர மறுத்து, சற்றொப்ப 300 நாட்களாக சிறையில் உள்ளார். வழக்கை விரைந்து நடத்த நீதிமன்றத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
அவரை அண்மையில் பாளையங்கோட்டை சிறையிலிருந்து மதுரை சிறைக்கு மாற்றி இருக்கிறார்கள். மதுரை சிறையில் தூய்மை அற்ற பாழடைந்த தனி அறையில் சாக்கடைக் கழிவுகளுக்கு அருகில் தோழர் முகிலனைத் தனியே அடைத்து வைத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
தோழர் முகிலனுடன் வழக்குத் தொடர்பாக கலந்து பேச வரும் வழக்குரைஞர்களுக்கு நேரம் குறைக்கப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். இதுவும் அவருக்கான நீதியை மறுப்பதாகும்!

குற்றஞ்சாட்டப்பட்டவரை சிறையில் தூய்மையான அறையில், உரிய வசதிகளுடன் வைத்திருப்பது சிறைச் சட்டமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவருக்குரிய குற்றவியல் நீதிச் சட்டங்கள் (Criminal Justice Rules) இருக்கின்றன. அவற்றிற்குப் புறம்பாக யாரையும் சிறையில் நடத்தக் கூடாது!

தமிழ்நாடு சிறைத்துறை அமைச்சர் அவர்களும், சிறைத்துறை மேலதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, மதுரை நடுவண் சிறையில் தோழர் முகிலனுக்குரிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருமாறும் தனிமைப்படுத்தி சிறை வைப்பதைக் கைவிடுமாறும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Friday, June 15, 2018

அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!
உச்ச நீதிமன்ற கெடு முடியும் தருவாயில், இந்திய அரசு - குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் வழியாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை நிராகரித்துள்ளது.

2014இல், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 435 (1)இன்படி, தனது ஏழு தமிழர் விடுதலை முடிவு குறித்து இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்டது. 

இந்திய அரசின் வழக்கைத் தொடர்ந்து, அது அரசமைப்புச் சட்ட ஆயத்திற்குச் சென்று அதன் பிறகு இவர்கள் விடுதலை பற்றி விசாரித்து வந்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன்னால் நின்றது. நான்காண்டுகளாக இவ்வழக்கை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை! இந்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை! 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்து ஒன்றிய அரசு தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய பிறகு, இப்போது இந்திய உள்துறை அமைச்சகம் “தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதுபோல், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டாம்” என முடிவு செய்து, அதனை இந்தியக் குடியரசுத் தலைவர் வழியாக வெளியிட்டிருக்கிறது. 

குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடப்பட்டுள்ள இந்திய அரசின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டமீறலாகும்! 

ஏனெனில், இவ்வழக்கை புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உயர் அதிகாரி தியாகராசன் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில், முக்கியமானப் பிழையைத் தான் செய்ததாக ஒத்துக் கொண்டு, இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்விலேயே தனது உறுதியுரையை (பிரமாண வாக்குமூலம்) அளித்துள்ளார். 

இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ், தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

கொலையுண்ட இராசீவ் காந்தியின் மகன் இராகுல் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், இவர்களை விடுதலை செய்வதில் தமக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்து விட்டனர்! 

இராசீவ் காந்தி கொலையில் பன்னாட்டு சதித் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, தொடர முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறது! 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு தமிழர் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது! இந்திய அரசோ, ஏழு தமிழர் விடுதலையை ஏற்க முடியாது என குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது. 

இச்சூழலில், முன்னாள் முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனதான தீர்மானத்திற்கும், அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் மதிப்பளிப்பதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! 

அது அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 ஆகும்! 

மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில், குடியரசுத் தலைவர் அதிகாரமும், மாநில ஆளுநரின் அதிகாரமும் சம வலு கொண்டவை. அவை ஒரே நேரத்தில் செயல்படவும் முடியும்! அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலும் மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தண்டனைக் குறைப்பு வழங்க முடியும் - அந்த அதிகாரம் கட்டற்றது!

ஆளுநர் முடிவு என்பது, தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில் அரசமைப்புச் சட்டப்படி அது அமைச்சரவையின் முடிவே ஆகும்! 

குடியரசுத் தலைவர் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நமது அனைவரின் நேசத்திற்கும் உரிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனை வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே வைத்திருப்பதைவிட கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்கக் கேட்பது – மனச்சான்று உள்ள அனைவரையும் உலுக்கியெடுத்துள்ளது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தனது அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதாக தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, March 12, 2018

இலஞ்சம் பெறும் நோக்கில் பொது மக்களை அலைக்கழிக்கும் - பல்லாவரம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர் அதிகாரிகளிடம் முறையீட்டுக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!

இலஞ்சம் பெறும் நோக்கில் பொது மக்களை அலைக்கழிக்கும் - பல்லாவரம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர் அதிகாரிகளிடம் முறையீட்டுக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!
அரசின் விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், இலஞ்சம் பெறும் நோக்கில் - சட்டவிரோத நடைமுறைகளின் வழியே பொது மக்களை அலைக்கழித்ததோடு, அதைத் தட்டிக் கேட்ட சக தாசில்தார் ஒருவரை – தனது அலுவலகத்தில் வைத்து இரும்பு ராடால் தாக்கியுள்ள பல்லாவரம் தாசில்தார் வில்பிரட் கிச்சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவரால் அலைக்கழிக்கப்பட்டு வரும் பொது மக்களுக்கு சட்ட விதிமுறைகளின்படி உடனடியாக ஆவணங்களை வழங்க வேண்டுமென்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில், தமிழ்நாடு அரசு – வருவாய்த் துறை ஆணையர் திரு. சத்தியகோபால் இ.ஆ.ப.(ஐ.ஏ.எஸ்.), அவர்களையும், இணை ஆணையர் திருமதி. இலட்சுமி இ.ஆ.ப., அவர்களையும் நேரில் சந்தித்து இது குறித்து முறையிட்ட பிறகு, இன்று (12.03.2018) காலை, சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், மருது மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துப்பாண்டி, தமிழ்நாடு மாணவர் முன்னணித் தலைவர் திரு. சே. இளையராசா ஆகியோர் இதனை தெரிவித்தனர்.
குரோம்பேட்டையைச் சேர்ந்த திருமதி. ரஃபீக்கா என்ற முதியவரின் கணவர் திரு. முகமது தவ்பீக் என்பவர் கடந்த 01.06.2015 அன்று இறந்து விட்ட நிலையில், தனக்கு வாரிசுரிமைச் சான்று கோரி பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை விண்ணப்பம் அளித்தார். அரசு விதிமுறைகளின்படி பதினைந்து நாட்களுக்குள் அளிக்க வேண்டிய வாரிசுச் சான்றை, உரிய சான்றுகள் வைத்திருந்தும் - பல மாதங்கள் கழித்த நிலையிலும், திருமதி. ரஃபீக்கா அவர்களால் பெறமுடியவில்லை! தள்ளாத அகவையிலும், திருமதி. ரஃபீக்கா பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நடையாய் நடந்து கொண்டிருந்தார்.

வாரிசுரிமைச் சான்றிதழ் பெற பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதைக் கணக்கில் கொண்டு கடந்த 2017இல் (09.08.2017), தமிழ்நாடு அரசு – வருவாய் துறை ஆணையம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், வாரிசுரிமை கோருபவர் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் (Point No 5) மற்றும் பிற வாரிசுதாரர்களின் விவரங்களைக் குறிப்பிட்டு சுய உறுதிமொழியும் (Self Declaration) அளித்தால் போதும் (Point No 5 - 1) என்று தெளிவுபட கூறியிருந்தது. இந்த நடைமுறைதான் சென்னை மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது.

ஆனால், பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டும் ஒரு புது நடைமுறை செயலில் உள்ளது. அங்கு வட்டாட்சியராக உள்ள திரு. வில்பிரட் கிச்சிங் என்பவர், வாரிசுரிமை கோருபவர் மட்டுமின்றி, இறந்தவரின் அனைத்து வாரிசுதாரர்களும் ஆளுக்கொரு சுய உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும் என்று, சட்டத்தில் இல்லாத ஒரு புது நடைமுறையைக் கடைபிடித்து வருகிறார்.

இதற்காக “இதர வாரிசுதாரர் சுய உறுதிமொழிப் படிவம்” என்ற தனி படிவத்தை, அலுவலகத்திற்கு வெளியே ஒருவர் விற்பனை செய்து கொண்டுள்ளார். அதைக் காசு கொடுத்து வாங்கி, அதை நிரப்பிக் கொண்டு போய் திரு. வில்பிரட் அவர்களிடம் கொடுக்க வேண்டுமாம்!

அடுத்து, அந்த படிவங்களை இதர வாரிசுதாரர்கள் அனைவரும் நேரில் வந்துதான் கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார் திரு. வில்பிரட்! இதன் காரணமாக, பலர் தங்கள் வேலைகளைவிட்டு நேரில் வந்து நிற்கின்றனர். வெளிநாடுகளில் பணிபுரிவோர், வெளியூர்களில் பணிபுரிவோர் பல இலட்சம் செலவு செய்து ஊருக்கு வந்து, திரு. வில்பிரட் அவர்கள் முன் நேர் நிற்கின்றனர். இதை சாக்காக வைத்துக் கொண்டு, திரு. வில்பிரட் அலுவலக ஊழியர்கள் நேரில் வந்து நிற்க முடியாதவர்களுக்கு விலக்கு அளிக்க 5,000 முதல் 25,000 ரூபாய் வரை இலஞ்சப் பணம் கேட்கின்றனர். பலர் இவ்வாறு பணம் அளித்து, வாரிசுரிமைச் சான்று பெறுகின்றனர்.

இதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத திருமதி. ரஃபீக்கா அவர்கள், தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் வேளச்சேரி வட்ட வருவாய் தாசில்தார் திரு. குமரன் என்பவரிடம், தான் அலைக்கழிக்கப்படுவது குறித்து கூறினார். கடந்த 08.03.2018 அன்று, காலை 9.15 மணிக்கு, திரு. குமரன் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, திரு. ரஃப்பீகா அவர்களைத் தள்ளாத வயதிலும் இப்படி இரண்டாண்டுகளாக அலைய விடுவது சரியல்ல என்றும், உங்கள் புதிய நடைமுறை தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கைக்கு எதிரானது என்றும் திரு. வில்பிரட் அவர்களிடம் முறையிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த திரு. வில்பிரட், தனது அலுவலகத்திற்கு வந்து தனது நடைமுறையையே கேள்வி எழுப்புவதா என நியாயம் கேட்டு வந்த தாசில்தார் குமரனைத் தாக்கினார். திரு. வில்பிரட்டுக்கு உதவியாக இருந்த திரு. சுரேஷ் என்பவரும் சேர்ந்து கொண்டு, திரு. குமரனை அங்கிருந்த நில அளவை இரும்புக் கம்பியால் அடித்தனர். மேலும், திரு. குமரனை அலுவலகத்திற்குள்ளேயே வைத்துப் பூட்டினர். நிகழ்வை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், திரு. குமரனை மீட்டுள்ளனர்.
இப்போது, திரு. வில்பிரட் மற்றும் திரு. சுரேஷ் ஆகியோர் மீது, இந்தியத் தண்டனைச் சட்டம் 294(b) – (தவறான வார்த்தைப் பிராயோகம்), 342 (சட்ட விரோதச் சிறை வைப்பு), 324 (ஆயுதத்தால் தாக்குதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு (வழக்கு எண் 187/2018) செய்யப்பட்டுள்ளது. இதில், இன்னொரு வேடிக்கை என்னவெனில், பல்லாவரம் வட்டாட்சியர் தனது பணியை ஏன் செய்யவில்லை என்று ஞாயம் கேட்கச் சென்று – காயம்பட்டுள்ள தாசில்தார் குமரன் மீது, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்த (இ.த.ச. 332) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது, காவல்துறை!

சட்டப்படி அனைத்து ஆவணங்கள் வைத்திருந்தும், சட்டத்தில் இல்லாத புதிய நடைமுறைகளைக் கூறி பொது மக்களை அலைக்கழித்து வரும் பல்லாவரம் வட்டாட்சியர் திரு. வில்பிரட் மீது, தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இலஞ்சம் பெறும் நோக்கில் அவர் தடுத்து வைத்துள்ள வாரிசுரிமை மனுதாரர்கள் அனைவருக்கும், முறைப்படி விசாரணை செய்து உடனடியாக வாரிசுரிமைச் சான்று வழங்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (12.03.2018) காலை 10.30 மணிக்கு, சென்னை எழிலகத்திலுள்ள தமிழ்நாடு அரசு வருவாய் ஆணையர் திரு. சத்தியகோபால் ஐ.ஏ.எஸ், அவர்களிடமும், இணை ஆணையர் திரு. இலட்சுமி ஐ.ஏ.எஸ்., அவர்களிடமும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரில் சென்று மனு அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்து, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.


செய்தியாளர் சந்திப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் வெற்றிதமிழன், தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் இளங்குமரன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் உடனிருந்தனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

Wednesday, February 14, 2018

தமிழ்நாட்டுத் தேர்வர்களை வஞ்சிக்கும் வகையில் அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

தமிழ்நாட்டுத் தேர்வர்களை வஞ்சிக்கும் வகையில் அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
அனைத்திந்திய அளவில் நடைபெறும் வேலை வாய்ப்புத் தேர்வுகளில் வடநாட்டை மையப்படுத்தி வினாக்கள் இருக்கும். அவற்றில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படும். ஆனால் தமிழ்நாடு அரசு நடத்திய 4ஆம் பிரிவுக்கான 9,351 பணி இடங்களுக்கான தேர்வில் தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு, மரபு, நிலம், நிகழ்ச்சி கள் புறக்கணிக்கப்பட்டு வடநாட்டை மையப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டுக் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை எழுத்தர்கள் போன்ற பணிகளில் சேர்வோர்க்கு, வடநாட்டு வரலாறு, பண்பாடு, நிலம், நிகழ்ச்சிகள் பற்றி வினாக்கள் கேட்பது எதற்காக?

“இந்தியா - மாலத்தீவு இடையிலான ஒத்திகைக்கு என்ன பெயர்?”, “இந்திய விமானப் படையிலிருந்து கழற்றி விடப்பட்ட ஊர்தியின் பெயர் என்ன?”, “2017 அக்டோபரில் டெல்லியில் தொடங்கப்பட்ட நிறுவனம் எது?”, “மத்திய அரசு அறிவித்த பல்வேறு யோஜனாக்கள் தொடங்கப்பட்ட ஆண்டுகள் என்ன?”, “இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தேதி எது?” (இக்கேள்விக்குக் கட்டங்களில் கொடுக்கப்பட்டிருந்த விடைகள் அனைத்துமே தவறு என்பது வேறு செய்தி!).

தமிழ்நாடு அரசு, விடைத்தாள்கள் அணியம் செய்யும் பொறுப்பை யாரிடம் விட்டது? அதற்கு என்ன வழி காட்டியது? தமிழ்நாட்டுத் தேர்வர்களின் எதிர்காலத்தையே சிக்கலாக்கிவிட்ட இந்தக் கேள்வித்தாள்கள் தயாரிப்புக்கான பொறுப்பானவர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சிறப்புப் புலனாய்வுக் குழுவை தமிழ்நாடு அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

அடுத்து, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எந்தெந்த மையத்தில் எவ்வளவு பேர் தேர்வு எழுதினார்கள் என்ற செய்தி மர்மமாக இருக்கிறது. இராமேசுவரம் தங்கச்சிமடம் தேர்வு மையத்தில் மட்டும் மத்தியப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் தேர்வெழுதியதாகத் தமிழ் நாட்டுத் தேர்வர்கள் கூறுகிறார்கள். கோவை உள்ளிட்ட பல இடங்களில் மலையாளிகள் தேர்வெழுதியதாகக் கூறுகிறார்கள். மொத்த மையங்களில் வெளி மாநிலத்தவர் தேர்வெழுதிய விவரத்தைத் தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

மராட்டியம், கர்நாடகம், குசராத் மாநிலங்களில் உள்ளதுபோல் தமிழ்நாட்டிலும், மாநில அரசுப் பணி களில் 100 விகிதம் தமிழர்கள் மட்டுமே தேர்வெழுதவும், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசுப் பணிகளில் 90 விழுக்காடு பேர் தமிழர்களாக இருக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும். அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும், மக்களும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும். இக்கோரிக்கையை முன்வைத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் 03.02.2018 அன்று சென்னையில் எழுச்சிமிகு மாநாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

Thursday, January 4, 2018

பட்டுக்கோட்டையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சேதப்படுத்திய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும்! அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்! தோழர் நா. வைகறை கோரிக்கை!

பட்டுக்கோட்டையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சேதப்படுத்திய அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும்! அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை கோரிக்கை!
 பட்டுக்கோட்டை அருகில் ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்கள் வசித்து வரும் வீதியில், 60 வீடுகள் உள்ளன. கடந்த 2017 திசம்பர் 31 இரவு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், பகுதி இளைஞர்கள் ஒலிபெருக்கி வைத்து கொண்டாடியுள்ளனர்.



தெற்கு குடிகாடு பகுதியிலிருந்து சற்றொப்ப மூன்று கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள வடக்கு ஆம்பலாப்பட்டு பகுதியில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் சிலர், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு இரு சக்கர ஊர்திகளில் வந்துள்ளனர். அங்கு கட்டப்பட்டிருந்த பலூன்களை உடைத்துவிட்டு, சாதிப் பெயரை சொல்லி “உங்களுக்கு ஏண்டா புத்தாண்டு?” என்று, அங்கிருந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். கைகலப்பும் ஏற்பட்டது.
உடனே, அங்கிருந்து சென்ற வடக்கு ஆம்பலாப்பட்டு இளைஞர்கள் சிறிது நேரத்தில் ஊர்திகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கையில் இரும்புக் குழாய், உருட்டுக் கட்டைகள் எடுத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் தெருவுக்கு வந்துள்ளனர். அவர்கள் தெரு விளக்கின் சுவிட்ச் பலகையை அடித்து நொறுக்கியதால், தெருவிலே இருட்டாகிவிட்டது. தெருவின், இரண்டு புறமும் உள்ள சற்றொப்ப 30 வீடுகளில் கண்ணாடி சன்னல்களை, ஒடுகளை, தொலைக்காட்சிப் பெட்டிகளை, நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர ஊர்திகள் முதலியவற்றை வெறி கொண்டு தாக்கியுள்ளனர்.


உயிருக்கு பயந்து கையில் குழந்தைகளுடன் இருட்டில் பெண்கள் ஓடி, பின்பக்கம் தோப்பில் ஒளிந்துள்ளனர். பூட்டிய வீடுகளின் முன்பு நின்று கொண்டு வந்தவர்கள் கூறிய ஆபாச வார்த்தைகள், கொலை வெறித் தாக்குதல்கள் – ஒடுக்கப்பட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
 புத்தாண்டு நாளுக்காக கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி, நாற்காலிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். சற்றொப்ப 15 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியுள்ளன.

 தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தோழர் மா. இராமதாசு ஆகிய நாங்கள் குழுவாகச் சென்று, இன்று (04.01.2017) காலை, ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளில் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட்டோம். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.

பாதிக்கப்பட்ட மக்களிடையே, குறிப்பாக பெண்களிடத்தில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் முதன்மையான பணி!


எனவே, வீடுகளைத் தாக்கிய அனைவர் மீதும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவர்களைக் கைது செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக, அரசு சார்பில் துயர் துடைப்பு நிதி வழங்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் மீது எந்தவித பொய் வழக்கும் போடக்கூடாது. அனைத்து சாதி மக்களையும் இணக்கப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
இன்னணம்,
நா. வைகறை
தஞ்சை மாவட்டச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, March 25, 2017

கீழடி அகழாய்வுத் தலைவர் திரு. அமர்நாத் அவர்களின் இடமாற்றத்தைக் கைவிட்டு மீண்டும் கீழடியிலேயே பணியமர்த்துக! பெ. மணியரசன் கோரிக்கை!

கீழடி அகழாய்வுத் தலைவர் திரு. அமர்நாத் அவர்களின் இடமாற்றத்தைக் கைவிட்டு மீண்டும் கீழடியிலேயே பணியமர்த்துக! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றாக கிடைத்திருப்பது சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு. இதற்கு முன் தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதற்கு குடியிருப்புகள், இடுகாட்டுத் தாழிகள் போன்றவை கிடைத்தன. ஆனால் கீழடியில்தான் பண்டைய தமிழர்களின் தொழிற்கூடங்கள் கிடைத்துள்ளன.

இந்த அகழாய்வைத் தொடர்வதற்குத் தொடர்ந்து இந்திய அரசு முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டே வந்தது. முதல் கட்ட அகழாய்வு 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட அகழாய்வு 2016 ஆம் ஆண்டு தொடர்ந்தது. ஆனால் அது முடிந்த பின் மூன்றாம் கட்ட அகழாய்வை இயல்பாகத் தொடங்காமல் இந்தியத் தொல்லியல் துறை தடுத்து வைத்திருந்தது. பல்வேறு தமிழ் அறிஞர்களும், தமிழின அமைப்புகளும் குரல் கொடுத்தபின் மூன்று மாதம் தாமதித்து மூன்றாம் கட்ட அகழ்வாய்வைத் தொடங்கியுள்ளது. அதற்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி!

இந்நிலையில் கீழடி அகழாய்வுக்கு இன்னொரு சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அகழாய்வில் தொடர்ச்சியாக தமிழ் ஆர்வத்துடன் ஆய்வுப்பணி செய்து வந்தவர் திரு. அமர்நாத் அவர்கள். அவர் கீழடி அகழாய்வுப் பிரிவுத் தலைவராகவும், இந்தியத் தொல்லியல் துறையின் பெங்களுர் மையக் கண்கானிப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இப்பொழுது திரு. அமர்நாத் அவர்களை அசாம் தலைநகர் கவுகாத்திக்கு மாற்றியுள்ளார்கள்.

கீழடி அகழாய்வில் அக்கறை, அர்ப்பணிப்பு, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வந்த திரு. அமர்நாத் அவர்களின் பணியை கீழடி இழப்பது அந்த ஆராய்ச்சித் தொடர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ் உணர்வாளர்கள் ஐயுறுகிறோம்; அச்சப்படுகிறோம்.

எனவே, இந்தியத் தொல்லியல் துறை தலைமையானது திரு. அமர்நாத் அவர்களின் பணிமாற்ற ஆணையை மறு ஆய்வு செய்து கீழடியிலேயே அவரை மீண்டும் அதே பணியில் அமர்த்துமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Wednesday, April 20, 2016

அரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ் உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்நாடு அரசுக்கு தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை!



அரசமைப்பு உறுப்பு 161-இன்கீழ்

உடனடியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்க!



தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை!



பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, இந்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பது இன்னொரு தமிழினப் பகை நடவடிக்கையாகும்.


இராசீவ் காந்தி வழக்கில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என தமிழ்நாடு அரசு செய்த முடிவு, ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வை ஏற்றுக் கொண்ட நடவடிக்கையாகும். தமிழ்நாட்டு பாரதிய சனதாக் கட்சி, காங்கிரசுக் கட்சி, பிற அனைத்திந்தியக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஏழு தமிழர் விடுதலைக்கு ஆதரவாக கருத்துக் கூறியிருக்கின்றனர். அதற்கு முன்னர், தமிழ்நாடு சட்டப் பேரவையில் இது குறித்து அனைத்துக் கட்சியினரின் ஆதரவோடு ஒருமனதான தீர்மானமும் நிறைவேறியிருக்கிறது.

இவ்வாறு ஒட்டு மொத்தத் தமிழர்களும், தமிழ்நாடு அரசும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என செய்துள்ள ஞாயமான முடிவை இந்திய அரசு ஏற்க மறுத்திருப்பது, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435 வழங்கும் அதிகாரத்தை, தமிழினத்திற்கு எதிராகப் பயன்படுத்தும் இனப்பகைச் செயலாகும்.

இது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் ஆயத்தில் நிலுவையில் இருப்பதால்தான், இவ்வாறான முடிவெடுத்திருப்பதாக இந்திய அரசு கூறுவது பொய்யான சாக்குப் போக்கே ஆகும். 19.04.2016 நாளிட்ட அதே கடிதத்தில், தமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கூடாது என அறிவித்திருப்பதே இந்திய அரசின் உண்மையான உள்ளக் கிடக்கையை எடுத்துக் காட்டுகிறது.

கடந்த 2015 திசம்பர் 2 அன்று, உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆயம் வழங்கியுள்ள தீர்ப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு உள்ள ஒரே மாற்று வழியை எடுத்துக் காட்டுகிறது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ், தமிழ்நாடு அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநர் வழியாக பேரறி ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம். உறுப்பு 161 மாநில அரசுக்கு வழங்கும் மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது, நீதிமன்றத் தலையீட்டுக்கு அப்பாற்பட்டது என இத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

விதி 435-இன் கீழ், இந்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்ட பிறகு, தமிழ்நாடு அரசுக்கு இருக்கிற ஓரே வழி அரசமைப்புச் சட்ட உறுப்ப 161 தான்.

இது தேர்தல் நடத்தை விதிகளால் கட்டுப்படுத்தப்படக் கூடிய அதிகாரமும் அல்ல. எனவே, உறுப்பு 161-இன்படியான ஏழு தமிழர் விடுதலை முடிவுக்கு, தேர்தல் நடத்தை விதி குறுக்கே வருமோ என தமிழ்நாடு அரசு தயங்க வேண்டியதில்லை. ஏழு தமிழரையும் உடனே விடுதலை செய்யலாம்.

இச்சிக்கலில் ஏற்கெனவே ஒரே கருத்தில் இருக்கிற அனைத்துக் கட்சிகளும், இந்தக் எகோதரிக்கையை வலியுறுத்தி, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கோரிக்கைதான் இது என்று மீண்டும் வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில், ஏழு தமிழர் விடுதலை என்பது தேர்தல் போட்டி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒட்டு மொத்தத் தமிழினத்தின் இன மானச் சிக்கலாகும்.

இதற்கிடையில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு நீண்டகால சிறை விடுப்பு (பரோல்) வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் ஒரே முடிவில் நின்று மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
  

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT