உடனடிச்செய்திகள்

Saturday, March 31, 2018

தஞ்சை பெரிய கோவில் சமற்கிருதப் பெயர்ப்பலகை நீக்கப்பட்டது!

தஞ்சை பெரிய கோவில் சமற்கிருதப் பெயர்ப்பலகை நீக்கப்பட்டது!
கடந்த 2017 மார்ச் மாதம், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை - தமிழ்ப்பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலுக்கு “பிரகதீஸ்வரர் ஆலயம்” என சமற்கிருதத்தில் பெயர்ப் பலகை வைத்தது. இது, தமிழின உணர்வாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது குறித்து, 18.03.2017 நாளிட்ட “தமிழக அரசியல்” வார ஏட்டில் தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் கடும் கண்டனம் தெரிவித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

“இவ்வளவு நாட்களாக இல்லாமல் திடீரென பிரகதீஸ்வரர் ஆலயம் என்று சம்ஸ்கிருதப் பெயர் வைக்க என் காரணம்? தமிழ் மன்னன் கட்டிய கோயிலுக்கு ஏன் சமஸ்கிருதப் பெயரை வைக்க வேண்டும்?

பிரகதீஸ்வார் என்ற பெயர் சோழர் ஆட்சிக்கு பிறகு வந்த மராட்டியர்கள் ஆட்சியில்தான் நடைமுறைக்கு வந்துள்ளது. கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் எந்த இடத்திலும் பிரகதிஸ்வரர் என்ற பெயர் ஒரு இடத்தில்கூட இல்லை. சிலர் மட்டும்தான் பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைப்பார்கள்.

தமிழக மக்கள் அனைவரும் தஞ்சை பெரிய கோவில் என்றும் பெருவுடையார் ஆலயம் என்றும்தான் அழைத்து வந்தோம். அப்படி இருக்கும்போது, திடீரென சமஸ்கிருத பெயரை தாங்கிய பலகையை வைக்க வேண்டும். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் செயல்பாடா இல்லை திறமையற்ற தமிழக அரசின் வெளிப்பாடா என்பது ஒன்றும் புரியவில்லை.

அதிகாரிகளிடம் கேட்டால், அனைவரும் புரிந்து கொள்வதற்காக இப்படி மாற்றி இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன், காசியில் இருக்கும் விஸ்வநாதர் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து பலர் செல்கிறார்கள். அதனால் காசி விஸ்வநாதரை காசி பேரருவான் கோயில் என்று மாற்றி விடுவார்களா? இல்லை! அனைவரும் புரிந்து கொள்ள தஞ்சை கோயிலில் என்ன சந்தை வியாபாரமா நடக்கிறதா?

இவையெல்லாம் இந்திய அரசின் சமற்கிருதத் திணிப்பின் ஒரு அங்கம்தான்! தமிழர்களின் புகழையும் வரலாற்றையும் மறைக்க வேண்டும் மழுங்கடிக்க வேண்டும் என்பதுதான்!

தமிழகத்தில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோயில் போலவும், தஞ்சை பெரிய கோவிலைப் போலவும் உயர்ந்த கோபுரம் கொண்ட கட்டிட கலையை பறைசாற்றும் உதாரணத்தை வடக்கில் ஒன்று சொல்ல முடியுமா? இது போன்ற சிறந்த தமிழர்களை - தமிழ்க் கலைகளை அழித்து நாம் என் வேண்டுமானாலும் செய்யலாம் - எதை வேண்டுமானாலும் செய்யலாம் - எதையும் யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள், கேட்க ஆளுமில்லை என்ற நினைப்புதான்!

ஏற்கெனவே தமிழ் மன்னன் கட்டிய கோயிலுக்க மராத்திய வம்சத்தைச் சேர்ந்த ராஜா பான்ஸ்லேவை அறங்காவலராக நியமித்து, அவர் பலவற்றை ஆக்கிரமித்து சுருட்டி வருகிறார். அவர் நியமனத்த எதிர்த்துப் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இப்போது இது வேறு!

இந்தப் பலகை வைத்ததை கடுமையாக எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை என அனைவருக்கும் எதிர்ப்பு மனு முறையாகக் கொடுத்து இருக்கிறோம். அவர்கள் வாங்கி வைத்துக் கொண்டு ஆய்வு செய்கிறொம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சில நாட்கள்தான் பொறுத்து இருப்போம். அதற்கு மேல் பொறுக்க மாட்டோம். அந்தப் பலகை இருந்த இடம் தெரியாமல் போகும்!”

என அப்பேட்டையில் தோழர் பெ. மணியரசன் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது தஞ்சை பெரிய கோவில் வாயிலில் வைக்கப்பட்டிருந்த சமற்கிருதப் பெயர்ப் பலகை நீக்கப்பட்டு, “தஞ்சை பெரிய கோவில்” என்று தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வரலாறு - கல்வெட்டுச் சான்றுகளின்படி அதை “தஞ்சை பெருவுடையார் கோவில்” என்றே வைக்க வேண்டுமென அரசிடம் மீண்டும் தமிழின உணர்வாளர்கள் வலியுறுத்தவுள்ளோம்.

இதற்காகக் குரல் கொடுத்த தமிழின உணர்வாளர்கள் அனைவருக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் நெஞ்சு நிறைந்த நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது!

தமிழ் மண்ணில், சமற்கிருத ஆதிக்கத்திற்கு இடமில்லை என முழங்குவோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Tuesday, March 20, 2018

"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அடித்தளமாக நிலைத்தவர் ம. நடராசன்" தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!

"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அடித்தளமாக நிலைத்தவர் ம. நடராசன்" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!
1965 மொழிப் போர் தலைவர்களில் ஒருவரும் 'புதிய பார்வை' ஆசிரியருமான திரு. ம. நடராசன் அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த உலகத்தில் ஒப்புமை காட்ட முடியாத வரலாற்றுச் சிறப்புமிக்க மொழிப் போரின் மாணவத் தலைவர்களில் திரு. நடராசனும் ஒருவர்.

நான் அப்போது திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தேன். எங்கள் பள்ளியின் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செயலாளராக நான் இருந்தேன்.

1965 சனவரி 25 அன்று இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் நடந்த மாணவர் பேரணிகளில் ஒன்றாக, அன்று தஞ்சை நகரில் மாபெரும் மாணவர் பேரணி நடந்தது. அப்பேரணி ஏற்பாட்டாளர்களில் நடராசன் ஒருவர்! நான் அந்த பேரணியில் கலந்து கொண்டேன்.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் அ.வ.அ. ( ஏ.வி.சி. ) கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்த மாணவர் சாரங்கபாணி, இந்தித் திணிப்பை எதிர்த்து கல்லூரி வாயிலில் தீக்குளித்து இறந்தார். அவருக்கு வீரவணக்கம் செலுத்தவும் அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்யவும் தஞ்சை திலகர் திடலில் மாபெரும் மாணவர் கூட்டம் நடந்தது.

சாரங்கபாணி குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்வதற்கு திருக்காட்டுப்பள்ளி மாணவர்கள் திரட்டிய ஒரு சிறு தொகையை நான் கொண்டு வந்து திரு. நடராசன் அவர்களிடம் கொடுத்தேன். அப்போது அவர் பச்சை மையில் எழுதி கையெழுத்துப் போட்டு அதற்கான ரசீதை என்னிடம் கொடுத்தார்.

திரு. நடராசன் அவர்கள் பல தமிழ்ப் பணிகள் ஆற்றினார். அவருடைய மிகப்பெரும் தமிழினப் பணியாக - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைக் குறிப்பிடலாம்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணையுடன் சிங்கள பெளத்த இனவெறி அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை நடத்தியது. அதில் உயிரிழந்த ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலைக் களத்தில் போராடி ஈகியரான விடுதலைப்புலிகள் ஆகியோர்க்கான மிகச்சிறந்த நினைவகம் - தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்களின் பெரு முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் வந்து பார்க்கவும் வணங்கவுமான தமிழர் அடையாளச் சின்னமாய் விளங்குகிறது.

இந்த நினைவகத்தின் அடித்தளமாக திரு. ம. நடராசன் அவர்கள் இருக்கிறார்கள். அவர் அன்பளிப்பாக கொடுத்த நிலத்தில்தான் நினைவகம் அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி அங்குள்ள ஒவ்வொரு கட்டுமானத்திலும் ம. நடராசன் பங்களிப்பு இருக்கிறது. ஆண்டுதோறும் பொங்கல் நாளில் தஞ்சையில் 3 நாள் தொடர்ந்து தமிழர் பண்பாட்டு விழா நடத்தி வந்தார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னும் நன்கு இயங்கி வந்த நடராசன் அவர்கள், திடிரென்று நோய்வாய்ப்பட்டு காலமான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

ஐயா நடராசன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

Sunday, March 18, 2018

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! ஏழுநாள் பரப்புரை மற்றும் வேண்டுகோள் போராட்டம் ! தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! ஏழுநாள் பரப்புரை மற்றும் வேண்டுகோள் போராட்டம் ! தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!
 தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம், தஞ்சாவூரில், 2018 மார்ச் 17 – 18 ஆகிய நாட்களில், பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.
பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா. வைகறை, பழ. இராசேந்திரன், குடந்தை விடுதலைச்சுடர், பெண்ணாடம் க. முருகன், ஓசூர் கோ. மாரிமுத்து, மதுரை இரெ. இராசு, சென்னை க. அருணபாரதி, தஞ்சை ம. இலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் திருச்செந்தூர் மு. தமிழ்மணி, திருநெல்வேலி க. பாண்டியன், சிதம்பரம் ஆ. குபேரன், தருமபுரி க. விசயன், திருத்துறைப்பூண்டி தை. செயபால், மதுரை பே. மேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

1. தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – ஏழுநாள் பரப்புரை இயக்கம் மற்றும் வேண்டுகோள் போராட்டம்

தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாத உயிரினம் அழிந்துவிடும் என்பது உயிரியல் கோட்பாடு. தற்காக்கும் தகுதியுடையது மட்டுமே தங்கும் என்றார் டார்வின் (Survival of the Fittest). தற்காப்பு ஆற்றலை இழந்த டைனோசர், அன்னப்பறவை போன்றவை அழிந்தன.

தமிழ்நாடு – தமிழர்களின் தாயகமாக நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரைமுறையின்றி அயல்நாட்டுத் தொழில் நிறுவனங்கள், வெளி மாநில முதலாளிகளின் தொழிலகங்கள், வணிக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பெருகி வருகின்றன. இதனால், தமிழர்களின் தொழில்களும், வணிகங்களும் நசுக்கப்படுகின்றன.

அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய்த் தமிழ்நாட்டில் வந்து குவிகின்றனர். இதனால் சொந்த மண்ணில் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் வெளியாரால் பறிக்கப்படுகின்றன. அத்துடன் தமிழ்நாட்டில் தமிழர்களின் மக்கள் தொகையை விஞ்சும் அளவிற்கு அயலார் மக்கள் தொகை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

அந்த நிலை ஏற்பட்டால் தமிழ்நாடு என்ற பெயர், தமிழ் ஆட்சி மொழி தமிழர் ஆட்சி என்பதெல்லாம் காணாமல் போய்விடும். கலப்பின மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவிடும். இந்திய அரசமைப்புச் சட்டப்படி தமிழர்களின் மொழி தமிழ்நாடு 1956 நவம்பர் 1-இல் அமைக்கப்பட்டது. இது மாற்றப்பட்டு விடும்!

தமிழ்நாட்டை இப்படி மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்திய அரசு, தமிழ்நாட்டில் உள்ள தனது அலுவலகங்கள், தொடர்வண்டித் துறை, துறைமுகம், வானூர்தி நிலையம் உள்ளிட்ட தொழிலகங்கள் அனைத்திலும் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு வெளி மாநிலத்தவர்களை 80 முதல் 100 விழுக்காடு வரை வேலையில் சேர்க்கிறது.

இதற்காக நடத்தப்படும் அனைத்திந்திய அளவிலான தேர்வுகள் மோசடியாக நடத்தப்படுகின்றன. பல மோசடிகள் அம்பலமாகியுள்ளன. தமிழ்நாட்டை வெளி மாநிலத்தார் வேட்டைக்காடாக்குவது என்பது காங்கிரசு ஆட்சிக்கும், பா.ச.க. ஆட்சிக்கும் பொது வேலைத் திட்டமாக உள்ளது.

இந்த அநீதியைத் தமிழ்நாட்டில் தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகள் தடுக்கவில்லை!

அதுமட்டுமல்ல, இப்போது தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களும், நேப்பாளம், பூட்டான் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பாக்கித்தான், வங்காளத்தேசம், திபெத், மியான்மர் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோரும் சேரலாம் என்று அ.இ.அ.தி.மு.க. அரசு 2016-இல் சட்டத்திருத்தம் செய்துள்ளது.





*தமிழர் தற்காப்புக் கோரிக்கைகள்*

1. வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்குக் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை வழங்கக் கூடாது.

2. தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களையும் வெளி நாட்டினரையும் அனுமதிக்கக் கூடாது. மராட்டியம், கர்நாடகம், குசராத், சத்தீசுகட் மாநிலங்களில் உள்ளது போல் மண்ணின் மக்கள் வேலை உறுதிக்கான சட்டம் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

3. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான சட்டம் வேண்டும்.
நடுவணரசு நிறுவனங்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்.

4. நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருப்பதுபோல், வெளி மாநிலத்தவர் குடியேற்றத்தை மாநில அரசு கட்டுப்படுத்தும் உள் அனுமதி (Inner Line Permit) சட்டம், தமிழ்நாட்டிற்கும் இயற்ற வேண்டும்.

5. தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நிலம் உள்ளிட்ட சொத்துகள் வாங்கத் தடை விதிக்க வேண்டும்.

*மக்கள் இயக்கம்*

சட்டப்படியான இந்த ஐந்து கோரிக்கைகளையும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் செயல்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு தழுவிய மக்கள் இயக்கம் நடைபெற வேண்டும். 

இதற்காகத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் – ஏப்ரல் 17 முதல் 23 வரை ஏழு நாள் பரப்புரை இயக்கம் நடத்துகிறது.

அதன்பிறகு, இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வலியுறுத்தி, திருச்சி பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (Workshop) வாயில் முன் - மே 7 - ௮ன்று வேண்டுகோள் போராட்டம் நடைபெறும்!

தமிழர்களே, தற்காப்பு உணர்ச்சியுடன் இப்பரப்புரைகளில் அனைவரும் பங்கு கொள்ளுங்கள்!
2. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட நடுவண் அரசை வலியுறுத்தும் வகையில், ஒரு வார காலம் நடுவண் அரசு அலுவலகங்களை முடக்கும் போராட்டம் நடத்த வேண்டும்!

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு சமநீதி வழங்காமல், அநீதி இழைத்துள்ளபோதிலும், அதையும் செயல்படுத்த வழக்கம்போல் கர்நாடக அரசு அடாவடித்தனம் செய்கிறது. அந்த அடாவடித்தனத்தை நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலுள்ள இந்திய அரசு பாராட்டும் வகையில், கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மறுத்துவிட்டது.

கடந்த 09.02.2018 அன்று நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதன்முடிவில், நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி கோரவில்லை என்றும், “ஏதோவொரு செயல்திட்டம் அமைக்கலாம்” என்றும் கூறியுள்ளது, எனவே “ஏதோவொரு செயல்திட்டம்” அமைப்போம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என்று கூறிவிட்டார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 403ஆவது பத்தியில், “ஒரு செயல்திட்டம்” அமைக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. அதேவேளை, காவிரித் தீர்ப்பாயம் கூறியுள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தேவையில்லை என்று கூறவில்லை. ஆனால் இதில் நடுவண் அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்ற நிலைபாட்டை தேர்வு செய்து, தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.

தொடர்ந்து, 1991லிருந்து இடைக்காலத் தீர்ப்பு, இடையிடையே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு ஆகியவற்றை இந்திய ஆட்சியாளர்கள் (காங்கிரசு மற்றும் பா.ச.க.வினர்) செயல்படுத்த மறுத்துவந்ததைப் போலவே, இப்போது பா.ச.க. ஆட்சி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கிறது.

இந்நிலையில், காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 12 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் தமிழர்களின் உயிர் நீரோட்டமாக இருக்கும் காவிரி உரிமையை மீட்க, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் போராட வேண்டிய தேவை இருக்கிறது.

நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஒரு வார காலம் தமிழ்நாட்டில் நடுவண் அரசு அலுவலகங்களை முடக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும். இது குறித்து காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் தோழமை இயக்கங்கள், கட்சிகள், வேளாண் அமைப்புகள் ஆகியவற்றோடு கலந்து பேசி, விரிவான போராட்டத்திற்குத் திட்டமிடுவது என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு முடிவு செய்கிறது.
3. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வேண்டும்!

கடந்த ஆண்டு(2017), தமிழ்நாட்டில் நடந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, சமூக நீதியை மறுப்பதாகவும், தமிழ்நாட்டு உரிமையை மறுப்பதாகவும் இருந்ததை அனுபவத்தில் பார்த்தோம். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், கடந்த ஆண்டு - கிராமப்புற மாணவர்கள் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.

தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி, மிக அதிக மதிப்பெண் பெற்றவர்கள் கூட, “நீட்” தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். இந்த அநீதிக்கு தமிழினம், பலிகொடுத்த மாணவிதான் அரியலூர் அனிதா!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்து, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில், மிக அதிகப்பெண் வாங்கித் தேறியவர்களில் ஐந்து பேர் மட்டுமே, கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிக்குப் போனார்கள் என்ற அவலம் நெஞ்சைப் பிளக்கும்
செய்தியாகும்!

எனவே, இவ்வாண்டிலிருந்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு முழு விலக்குக் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டங்களுக்கும் இந்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு இந்திய ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கிறது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Monday, March 12, 2018

இலஞ்சம் பெறும் நோக்கில் பொது மக்களை அலைக்கழிக்கும் - பல்லாவரம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர் அதிகாரிகளிடம் முறையீட்டுக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!

இலஞ்சம் பெறும் நோக்கில் பொது மக்களை அலைக்கழிக்கும் - பல்லாவரம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர் அதிகாரிகளிடம் முறையீட்டுக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை!
அரசின் விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், இலஞ்சம் பெறும் நோக்கில் - சட்டவிரோத நடைமுறைகளின் வழியே பொது மக்களை அலைக்கழித்ததோடு, அதைத் தட்டிக் கேட்ட சக தாசில்தார் ஒருவரை – தனது அலுவலகத்தில் வைத்து இரும்பு ராடால் தாக்கியுள்ள பல்லாவரம் தாசில்தார் வில்பிரட் கிச்சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவரால் அலைக்கழிக்கப்பட்டு வரும் பொது மக்களுக்கு சட்ட விதிமுறைகளின்படி உடனடியாக ஆவணங்களை வழங்க வேண்டுமென்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில், தமிழ்நாடு அரசு – வருவாய்த் துறை ஆணையர் திரு. சத்தியகோபால் இ.ஆ.ப.(ஐ.ஏ.எஸ்.), அவர்களையும், இணை ஆணையர் திருமதி. இலட்சுமி இ.ஆ.ப., அவர்களையும் நேரில் சந்தித்து இது குறித்து முறையிட்ட பிறகு, இன்று (12.03.2018) காலை, சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், மருது மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துப்பாண்டி, தமிழ்நாடு மாணவர் முன்னணித் தலைவர் திரு. சே. இளையராசா ஆகியோர் இதனை தெரிவித்தனர்.
குரோம்பேட்டையைச் சேர்ந்த திருமதி. ரஃபீக்கா என்ற முதியவரின் கணவர் திரு. முகமது தவ்பீக் என்பவர் கடந்த 01.06.2015 அன்று இறந்து விட்ட நிலையில், தனக்கு வாரிசுரிமைச் சான்று கோரி பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை விண்ணப்பம் அளித்தார். அரசு விதிமுறைகளின்படி பதினைந்து நாட்களுக்குள் அளிக்க வேண்டிய வாரிசுச் சான்றை, உரிய சான்றுகள் வைத்திருந்தும் - பல மாதங்கள் கழித்த நிலையிலும், திருமதி. ரஃபீக்கா அவர்களால் பெறமுடியவில்லை! தள்ளாத அகவையிலும், திருமதி. ரஃபீக்கா பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நடையாய் நடந்து கொண்டிருந்தார்.

வாரிசுரிமைச் சான்றிதழ் பெற பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதைக் கணக்கில் கொண்டு கடந்த 2017இல் (09.08.2017), தமிழ்நாடு அரசு – வருவாய் துறை ஆணையம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், வாரிசுரிமை கோருபவர் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் (Point No 5) மற்றும் பிற வாரிசுதாரர்களின் விவரங்களைக் குறிப்பிட்டு சுய உறுதிமொழியும் (Self Declaration) அளித்தால் போதும் (Point No 5 - 1) என்று தெளிவுபட கூறியிருந்தது. இந்த நடைமுறைதான் சென்னை மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது.

ஆனால், பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மட்டும் ஒரு புது நடைமுறை செயலில் உள்ளது. அங்கு வட்டாட்சியராக உள்ள திரு. வில்பிரட் கிச்சிங் என்பவர், வாரிசுரிமை கோருபவர் மட்டுமின்றி, இறந்தவரின் அனைத்து வாரிசுதாரர்களும் ஆளுக்கொரு சுய உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும் என்று, சட்டத்தில் இல்லாத ஒரு புது நடைமுறையைக் கடைபிடித்து வருகிறார்.

இதற்காக “இதர வாரிசுதாரர் சுய உறுதிமொழிப் படிவம்” என்ற தனி படிவத்தை, அலுவலகத்திற்கு வெளியே ஒருவர் விற்பனை செய்து கொண்டுள்ளார். அதைக் காசு கொடுத்து வாங்கி, அதை நிரப்பிக் கொண்டு போய் திரு. வில்பிரட் அவர்களிடம் கொடுக்க வேண்டுமாம்!

அடுத்து, அந்த படிவங்களை இதர வாரிசுதாரர்கள் அனைவரும் நேரில் வந்துதான் கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார் திரு. வில்பிரட்! இதன் காரணமாக, பலர் தங்கள் வேலைகளைவிட்டு நேரில் வந்து நிற்கின்றனர். வெளிநாடுகளில் பணிபுரிவோர், வெளியூர்களில் பணிபுரிவோர் பல இலட்சம் செலவு செய்து ஊருக்கு வந்து, திரு. வில்பிரட் அவர்கள் முன் நேர் நிற்கின்றனர். இதை சாக்காக வைத்துக் கொண்டு, திரு. வில்பிரட் அலுவலக ஊழியர்கள் நேரில் வந்து நிற்க முடியாதவர்களுக்கு விலக்கு அளிக்க 5,000 முதல் 25,000 ரூபாய் வரை இலஞ்சப் பணம் கேட்கின்றனர். பலர் இவ்வாறு பணம் அளித்து, வாரிசுரிமைச் சான்று பெறுகின்றனர்.

இதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத திருமதி. ரஃபீக்கா அவர்கள், தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் வேளச்சேரி வட்ட வருவாய் தாசில்தார் திரு. குமரன் என்பவரிடம், தான் அலைக்கழிக்கப்படுவது குறித்து கூறினார். கடந்த 08.03.2018 அன்று, காலை 9.15 மணிக்கு, திரு. குமரன் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, திரு. ரஃப்பீகா அவர்களைத் தள்ளாத வயதிலும் இப்படி இரண்டாண்டுகளாக அலைய விடுவது சரியல்ல என்றும், உங்கள் புதிய நடைமுறை தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கைக்கு எதிரானது என்றும் திரு. வில்பிரட் அவர்களிடம் முறையிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த திரு. வில்பிரட், தனது அலுவலகத்திற்கு வந்து தனது நடைமுறையையே கேள்வி எழுப்புவதா என நியாயம் கேட்டு வந்த தாசில்தார் குமரனைத் தாக்கினார். திரு. வில்பிரட்டுக்கு உதவியாக இருந்த திரு. சுரேஷ் என்பவரும் சேர்ந்து கொண்டு, திரு. குமரனை அங்கிருந்த நில அளவை இரும்புக் கம்பியால் அடித்தனர். மேலும், திரு. குமரனை அலுவலகத்திற்குள்ளேயே வைத்துப் பூட்டினர். நிகழ்வை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், திரு. குமரனை மீட்டுள்ளனர்.
இப்போது, திரு. வில்பிரட் மற்றும் திரு. சுரேஷ் ஆகியோர் மீது, இந்தியத் தண்டனைச் சட்டம் 294(b) – (தவறான வார்த்தைப் பிராயோகம்), 342 (சட்ட விரோதச் சிறை வைப்பு), 324 (ஆயுதத்தால் தாக்குதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு (வழக்கு எண் 187/2018) செய்யப்பட்டுள்ளது. இதில், இன்னொரு வேடிக்கை என்னவெனில், பல்லாவரம் வட்டாட்சியர் தனது பணியை ஏன் செய்யவில்லை என்று ஞாயம் கேட்கச் சென்று – காயம்பட்டுள்ள தாசில்தார் குமரன் மீது, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்த (இ.த.ச. 332) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது, காவல்துறை!

சட்டப்படி அனைத்து ஆவணங்கள் வைத்திருந்தும், சட்டத்தில் இல்லாத புதிய நடைமுறைகளைக் கூறி பொது மக்களை அலைக்கழித்து வரும் பல்லாவரம் வட்டாட்சியர் திரு. வில்பிரட் மீது, தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இலஞ்சம் பெறும் நோக்கில் அவர் தடுத்து வைத்துள்ள வாரிசுரிமை மனுதாரர்கள் அனைவருக்கும், முறைப்படி விசாரணை செய்து உடனடியாக வாரிசுரிமைச் சான்று வழங்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (12.03.2018) காலை 10.30 மணிக்கு, சென்னை எழிலகத்திலுள்ள தமிழ்நாடு அரசு வருவாய் ஆணையர் திரு. சத்தியகோபால் ஐ.ஏ.எஸ், அவர்களிடமும், இணை ஆணையர் திரு. இலட்சுமி ஐ.ஏ.எஸ்., அவர்களிடமும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரில் சென்று மனு அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்து, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.


செய்தியாளர் சந்திப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் வெற்றிதமிழன், தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் இளங்குமரன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் உடனிருந்தனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

Wednesday, March 7, 2018

வன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் எச். இராசாவை தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

வன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் எச். இராசாவை தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் அசல் முகத்தை மறைத்துக் கொள்ளாமல் அப்படியே வெளிப்படுத்தும் நபர்கள் எச். இராசா மற்றும் சுப்பிரமணிய சாமி போன்ற கயவர்கள். திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், ஜெர்மனியில் நாஜி குண்டர்கள் செய்த வேலைகளைத் தொடங்கியுள்ளார்கள். அதில், ஒரு பகுதிதான் வரலாற்று நாயகர் மாமேதை லெனின் சிலையை அவர்கள் திரிபுராவில் உடைத்தது!

உடனடியாக எச். இராசா என்பவர், தமிழ்நாட்டில் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டுமென்று தமது சுட்டுரையில் கூறி, தமது ஆரியத்துவா வெறியை வெளிப்படுத்தினார். சிரியாவில் மக்கள் படுகொலை செய்யப்படும் கொடுமையை எதிர்த்து நேற்று (06.03.2018) ஆர்ப்பாட்டம் நடத்தி ஐ.நா. பிரிவு ஒன்றின் அலுவலகத்தில் மனு கொடுக்கும் நிகழ்ச்சியில், தோழமை அமைப்புகளோடு நானும் கலந்து கொண்டிருந்தபோது, சன் தொலைக்காட்சியில், இது குறித்து எனது கருத்தையும் கேட்டார்கள்.

நான் உடனடியாக, பெரியார் சிலை உடைத்திட செய்தி வெளியிட்ட எச். இராசாவின் ஆரியத்துவா வெறியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும், தமிழ்நாட்டில் ஆரியத்துவா பா.ச.க.வில் தமிழர்கள் உறுப்பு வகிப்பது பற்றி மறு சிந்தனை செய்ய வேண்டும் என்றும் கூறினேன்.

பெரியார் மீது ஆரியத்துவாவாதிகளின் சினத்திற்குக் காரணமென்ன? அவர் தொடர்ந்து பார்ப்பன ஆதிக்கத்தை, ஆரியத்தை, வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்து பரப்புரையும், போராட்டமும் நடத்தியதுதான் பார்ப்பனிய மற்றும் ஆரியத்துவா ஆற்றல்கள் அவர் மீது தீராத சினம் கொண்டு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கி வருகின்றன.

தமிழர் அடையாளங்களை ஒழித்தல், தமிழினத்தை ஆரியத்துக்கு அடிமை இனமாக மாற்றுதல் என்ற ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் ஆரிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதிதான் பெரியார் சிலை உடைப்புக் கோரிக்கை என்பதைத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை அண்மையில் இழிவுபடுத்தியதையும் நாடறியும்!

பெரியார் சிலை உடைக்கும் கருத்துகளை வெளியிட்டு, வன்முறையைத் தூண்டியுள்ள எச். இராசா மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பொழுது மட்டுமல்ல ஏற்கெனவே, வைகோ உயிரோடு வீடு திரும்ப மாட்டார் என்று கூறியும், கவிஞர் வைரமுத்துவின் தலையை வெட்டி உருட்டியிருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பேசி வன்முறையைத் தூண்டி வருகின்ற ஆரியக் குண்டர் எச். இராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் பொறுப்பு! இதைத் தமிழ்நாடு அரசு தட்டிக் கழிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

Tuesday, March 6, 2018

“விழுப்புரம் வெள்ளம்புதூரில் வன்முறையில் ஈடுபட்டோரை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்!”

“விழுப்புரம் வெள்ளம்புதூரில் வன்முறையில் ஈடுபட்டோரை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்!”
கடந்த 22.02.2018 அன்று நள்ளிரவில், விழுப்புரம் மாவட்டம் - திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள வெள்ளம்புதூர் கிராமத்தில் கொடூரத் தாக்குதலுக்கும், பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகி தனது இளைய மகனைப் பறிகொடுத்து தன்நினைவு இழந்து புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தாய் ஆறாயி, மகள் தனம் ஆகியோரை தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி, உலகத் தமிழ்க் கழகம் புதுச்சேரி அமைப்பாளர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க செயலாளர் தோழர் இரமேசு, தமிழ் தமிழர் இயக்கப் பொறுப்பாளர் தோழர் மகேசு உள்ளிட்ட தோழர்கள் நேற்று (05.03.2018) மாலை குழுவாக மருத்துவமனைக்குச் சென்று, அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
எட்டாம் படிப்பு படித்து வரும் 13 அகவைச் சிறுமி தனம், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, உடலெங்கும் 12 தையல்கள் போடும் அளவிற்கு மிகக்கொடுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவன் என்றும் பாராமல் நான்காம் வகுப்பு படிக்கும் 9 அகவை மாணவனான சமயனையும், ஆறாயியையும் கொலைகாரர்கள் வெட்டி வீழ்த்திய செயல், மனிதநேயமுள்ள அனைவரையும் நொறுங்கச் செய்துள்ளது.

தற்போது ஆராயியும், தனமும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவர்களைப் உடனிருந்து பார்த்துக் கொள்ளும் மகன் சரத்குமாரை சந்தித்து, நம் குழுவினர் உரையாடியதுடன், மனத்தேறுதல் பெற நம்பிக்கை வார்த்தைகள் அளித்தனர். வெள்ளம்புதூர் கிராமத்தில், இதே போன்று நான்கு நிகழ்வுகள் இதற்கு முன்பு நடந்துள்ளதாக மருத்துவமனையிலிருந்த அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் வரை குவிந்து கொண்டுள்ள வட மாநிலத்தவரால் இக்குற்றம் நடந்திருக்குமோ என்ற ஐயத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர். ஏனெனில், கடந்த சில நாட்களுக்கு முன்புகூட (02.03.2018), சென்னை அடையாறில், தனியாக இருந்த மாணவியை பாலியல் தொந்தரவு கொடுத்து, சுவற்றில் தலையை மோதிக் காயப்படுத்திய வடமாநிலத்தைச் சேர்ந்த நிர்பவ் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். தலையில் காயம்பட்ட அந்த மாணவி, சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

குற்றம் நடந்து 9 நாளாகியும் காவல்துறையினர் குற்றவாளிகளை இதுவரை பிடிக்கவில்லை. நேற்று மாலை, விழுப்புரம் காவல்துறையினர் குற்றவாளிகள் குறித்து பொது மக்கள் தகவல் தருவேண்டுமென அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். எனவே, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உடனடியாக இவ்வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட ஆறாயி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். ஆறாயி குடும்பத்தினர்க்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
காரைக்கால் வினோதினி, தூத்துக்குடி புனிதா, சென்னை ஆசினி என சிறுமியர்க்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு இவ்வன்கொடுமைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Monday, March 5, 2018

“நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்!” சென்னையில் உலகத் தமிழ் அமைப்பு நடத்திய ஊடகச்சந்திப்பு!

“நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்!” சென்னையில் உலகத் தமிழ் அமைப்பு நடத்திய ஊடகச்சந்திப்பு!
நீட் - “தேசிய தகுதி-நுழைவுத் தேர்வு” (NEET) முறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என, சென்னையில் இன்று (05.03.2018) காலை “உலகத் தமிழ் அமைப்பு” நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்நாட்டின் அரசியல் செயல்பாட்டாளர்கள் இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
“இந்திய அரசால் திணிக்கப்படும் "நீட்" தேர்வானது வருங்காலத் தமிழர் தலைமுறையினருக்கு மிகப்பெரும் அழிவுகளை விளைவிக்கும். எனவே, தமிழ்நாட்டுச் சட்டமன்றம் பிப்ரவரி, 01 2017- அன்று ஒருமனதாக நிறைவேற்றிய இரண்டு சட்ட முன்வரைவுகளுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும். மேற்குறிப்பிட்டச் சட்டமுன்வரைவுகளைச் சட்டமாக்க ஆவனச் செய்ய வேண்டும்” என இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் சந்திப்புக்கு, உலகத் தமிழ் அமைப்பு (வட அமெரிக்கா) தலைவர் முனைவர் வை.க. தேவ் அவர்கள் தலைமை தாங்கினார்.
சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. து. அரிபரந்தாமன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் ஜி. ஆர். இரவீந்திரநாத், திராவிடர் கழக வழக்குரைஞர் அருள்மொழி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வே. பாரதி, தமிழ்த்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, தன்னாட்சித் தமிழகம் நெறியாளர் திரு. ஆழி செந்தில்நாதன், தமிழர் பன்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பாளர் திரு. இராச்குமார் பழனிசாமி, திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் உமாபதி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை வடக்கு மண்டல அமைப்பாளர் தோழர் மாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் தோழர் ஆளூர் சானவாசு, ம.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் திரு. அந்தரிதாஸ், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வினோத் களிகை, தமிழ்நாடு மாணவர் முன்னணித் தோழர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். திரைப்பட இயக்குநர் திரு. வ. கவுதமன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
#TNagainstNEET 
#ApproveTNBillToExemptNEET 
#NoNEETforTamilNadu

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Friday, March 2, 2018

சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடந்த தமிழ்த்தேசிய நாள் - சிறப்புக்கூட்டம்!

சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடந்த தமிழ்த்தேசிய நாள் - சிறப்புக்கூட்டம்!
 இன்றைக்குப் பலராலும் பேசப்படும் “தமிழ்த்தேசியம்” என்ற அரசியல் முழக்கம், 1990 பிப்ரவரி 25 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்து நடத்திய “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாட்டில்” தெளிவான வரையறுப்புகளோடு முன்வைக்கப்பட்டது. அம்மாநாடு, தமிழ்நாட்டு அரசியலில் புதிய திசைவழியைக் காட்டியது! அந்நாளை “தமிழ்த் தேசிய நாள்” என ஒவ்வொரு ஆண்டும் பேரியக்கக் கொடியேற்றம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்வுகளின் வழியே கடைபிடித்து வருகின்றோம்.

  இன்று, தமிழ்நாட்டு அடிப்படை அரசியலின் நிகழ்ச்சி நிரலை முன் வைப்பதாக “தமிழ்த்தேசியம்” வளர்ந்து வரும் சூழலில், 2018 பிப்ரவரி 25 - தமிழ்த்தேசிய நாளையொட்டி “தமிழர் தற்காப்பு அரசியல்” என்ற தலைப்பில், தமிழ்நாடெங்கும் சிறப்புக் கூட்டங்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கக் கொடியேற்ற நிகழ்வுகளும் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.
 அதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 28 அன்று, மாலை சிதம்பரத்தில் தமிழ்த்தேசிய நாள் கொடியேற்றம் மற்றும் தமிழர் தற்காப்பு அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
 சிதம்பரம் போல் நாராயனன் தெருவில் நடைபெற்ற “தமிழர் தற்காப்பு அரசியல்” – சிறப்புக் கூட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி சிறப்புரையாற்றினார். மூத்த தோழர் பா. பிரபாகரன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் தோழர் இரா. எல்லாளன் வரவேற்றார். பேரியக்க மூத்த தோழர் ச. மணிவண்ணன், தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி தோழர் க. வேந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழர் தேசிய முன்னணி மாணவரணி அமைப்பாளர் தொழர் செ. செயப்பிரகாசு, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ. குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்ரமணிய சிவா ஆகியோர் உரையாற்றினர். தோழர் அ. கலைச்செல்வன் நன்றி கூறினார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT