உடனடிச்செய்திகள்

Tuesday, April 23, 2013

தமிழ்த் தேசியம் கலவைக் கொள்கையல்ல தனித்துவமான கருத்தியல் – தோழர் பெ.மணியரசன் பேச்சு!



”தமிழ்த் தேசியம் கலவைக் கொள்கையல்ல தனித்துவமான கருத்தியல்”
வழக்கறிஞர் பாவேந்தன் இல்லத் திருமண விழாவில்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேச்சு!


தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பாவேந்தன் – திருவாட்டி சாந்தி ஆகியோரின் மகன் செல்வன் பாரிக்கும், ஈரோடு மாவட்டம், குன்றத்தூர், பொறியாளர் கி. நடராசன் – திருவாட்டி சாரதா ஆகியோரின் மகள் செல்வி சிந்துவர்சாவுக்கும் சொல்லாய்வறிஞர் ப. அருளியார் அவர்கள் தலைமையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் 21.4.2013 அன்று திருமணம் நடைபெற்றது.

அத்திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது பேச்சின் சுருக்கமான எழுத்து வடிவம்:

“இங்கு வாழ்த்துரை வழங்கிய வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்கள் ஒரு சிறந்த கருத்துச் சொன்னார். தமிழ்த் தேசியமும் தமிழ்த் தேச விடுதலையும் தேவையென்றார். வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். மக்களுக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் போராடி சிறை செல்பவர்களுக்கு கட்டணமின்றி வழக்கு நடத்துபவர். வழக்குகளில் விடுதலை வாங்கித் தருவார். அவரை நான் போராட்டக் காவலன் என்று அழைப்பதுண்டு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள வழக்கறிஞர் தமிழ்த் தேசியம் குறித்து இவ்வளவு சிறப்பாகவும் அழுத்தமாகவும் பேசியது கால மாற்றத்தின் அறிகுறியாகும். தமிழ்ச்சமூகத்திற்குள் இன்று உருவாகி வரும் ஒரு மாற்றத்தை, பெரிய பாய்ச்சலுக்கான ஓர் உள்இயக்கத்தை அறிவிக்கும் வெளிப்பாடாக அவரது பேச்சை நான் கருதுகிறேன்.
மார்க்சியம், பெரியாரியமும், அம்பேத்கரியம் ஆகிய கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு செயல்பட வேண்டு மென்றார்.

தமிழ்த் தேசியம் என்பது இன்று ஒரு தனித்துவமான சித்தாந்தமாக – கருத்தியலாக வளர்ந்து வருகிறது. ஏற்கெனவே தமிழ்மொழி சார்ந்து, தமிழ் இனம் சார்ந்து அமைப்புகள் செயல்பட்டிருக்கின்றன. போராட்டங்கங்கள் நடந்திருக்கின்றன. பெருமளவுக்கு தியாகங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அப் பொழுதெல்லாம். தமிழ்த்தேசியம் என்ற ஒரு சித்தாந்தம் முன் வைக்கப்படவில்லை, வளர்க்கப்படவில்லை. இப்பொழுதுதான் தமிழ்த்தேசியம் என்ற சித்தாந்தத்தை முன் வைத்து அதனை வளர்த்து வருகிறோம்.

தமிழ்த் தேசியம் தனக்குத் தேவையானதை மார்க்சியத்திடமிருந்தும் பெரியாரியத்திலிருந்தும் அம்பேத்கரியத்திடமிருந்தும் எடுத்துக்கொள்ளும். ஆனால் தமிழ்த்தேசியம் என்பது மார்க்சியம், பெரியாரியமும், அம்பேத்கரியம் ஆகியவற்றின் கலவையல்ல. தமிழ்த் தேசியம் தனித்துவமானது. அது தமிழர் அறம் என்ற மெய்யியலின் மேல் நிற்கிறது. தமிழர்களுக்கென்று இன அரசியல், மொழி அரசியல் இருக்கிறது. தமிழர்களுக்கென்று சக மனிதர்களோடு சமத்துவமாக வாழ்வதற்கான அறக்கோட்பாடு இருக்கிறது. இவற்றை மேலும் வளப்படுத்த புதிய கருத்தியல்களை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் எப்பொழுதும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் இருந்து வந்திருக்கிறது. அந்த புரிதலோடுதான் தமிழ்த் தேசியம் ஒரு தனி சித்தாந்தம் என்று நான் சொல்கிறேன்.

சங்கக் காலத்தில் கணவன் மனைவியை சமத்துவ நோக்கில் தலைவன் – தலைவி என்றே அழைத்தார்கள். பிற்காலத்தில் தமிழினத்தில் பெண்ணடிமைக் கருத்துகள் ஏற்பட்டன. பெண்ணடிமைத்தனத்தை நம் சமூகத்திலிருந்து நாம் நீக்கியாக வேண்டும். மணமக்கள் பாரி – சிந்து திருமணம்; காதல் திருமணம் என்றார்கள். சாதி மறுப்புத் திருமணம் என்றார்கள். மணமக்களுக்கும், மணமகள் பெற்றோர்க்கும் நெஞ்சு நிறைந்தப் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் பதவிகளுக்கு சாதியைப் பயன்படுத்த முனைவோர் சிலர், காதல் திருமணம் கூடாதென்கிறார்கள். நாடகக் காதல் என்கிறார்கள். சாதி ஒழிந்து விடுமோ என்று கிலி பிடித்துக் கிடக்கிறார்கள். அவர்கள் காதல் திருமணத்தை எதிர்ப்பதை பார்த்தால் சொந்த சாதிக்குள் கூட காதல் திருமணம் நடக்கக் கூடாது என்று கவலைப்படுவது போல் தெரிகிறது. இந்த தடைகளையெல்லாம் உடைத்து சாதி மறுப்புக் காதல் திருமணங்கள் பெருக்கத்தான் போகின்றன.

மணமக்களுக்கு ஒரே கருத்தை மட்டும் சொல்லி விடைபெறுகிறேன். காதல் திருமணம் செய்து கொண்டாலும், பிணக்குகள் வரத்தான் செய்யும். பிணக்கு இருக்கத்தான் வேண்டும். அது உப்பைப் போல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் கணவன் மனைவி வாழ்க்கையில் சுவை இருக்கும் என்று நம்முடைய பெரியவர் திருவள்ளுவர் சொன்னார். உப்பு இல்லாவிட்டால் உணவு சப்பென்று இருக்கும், உப்பு அதிகமாகி விட்டால் சாப்பிடமுடியாமல் கரிக்கும். உப்பைப் போல் அளவோடு பிணக்கு இருக்கட்டும் என்றார்.

இன்னொன்றையும் பெரியவர் சொன்னார். கணவன் மனைவியிடையே பிணக்கு வந்தால் நாள்கணக்கில் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்து விடக்கூடாது. கணவனோ அல்லது மனைவியோ வலிந்து போய் பேசினால் தோற்றுப் போனதாகும் என்று கெளரவம் பார்க்கக் கூடாது. ஊடல் என்ற பிணக்கில் வலிந்து போய் முதலில் பேசி பிணக்குத் தீர்ப்பவர்தான் வெற்றிப் பெற்றவர் ஆவார். அந்த வெற்றி இருவரின் வெற்றி. பின்னர் அவர்கள் மகிழ்ந்திருக்கும் போது அதன் பெருமை தெரியும் என்றார் அவர்.

பாரிக்கும் சிந்துவுக்கும் பிணக்கு வந்தால் உங்கள் தாத்தாவான திருவள்ளுவர் சொன்ன திருக்குறளை நினைத்து செயல்படுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.


ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலில் கணப் படும். – குறள்

Monday, April 22, 2013

பேராசிரியர் புல்லரை விடுவிக்க வேண்டும்!

 பேராசிரியர் புல்லரை விடுவிக்க வேண்டும்!
பஞ்சாப்பில் சீக்கிய இன உரிமைகளுக்காகப் போராடிய குடும்பத்தைச் சேர்ந்தபேராசிரியர் புல்லார் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி தூக்கிலிடமுனைந்துள்ள இந்திய அரசைக் கண்டித்தும்பேராசிரியர் புல்லாரை விடுவிக்கக் கோரியும் நேற்று(21.04.2013) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை,சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்மரணதண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில்உண்ணாப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தைபேராசிரியர் சரசுவதி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணிபொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திருகுணங்குடி அனீபா.தி.மு.வெளியீட்டுப்பிரிவுச் செயலாளர் திருவந்தியத்தேவன்நாம் தமிழர் கட்சியின் தோழர் ராஜன்இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமியர் இயக்க ஒருங்கிணைப்பாளர்வழக்கறிஞர் உமர்கயான்மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திருஅதியமான்உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கிப் பேசினர்.






தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் அருணபாரதி போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்துரைவழங்கினார்சென்னை சீக்கிய இளைஞர்கள் அமைப்பைச் சேர்ந்த திருபேஜ்தீப் சிங் உள்ளிட்ட சீக்கிய இனத் தலைவர்களும்இளைஞர்களும் இதில்பங்கேற்றனர்.

மாலைவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருதொல்.திருமாவளவன் பழரசம் அளித்து உண்ணாப் போராட்டத்தை முடித்து வைத்தார்நிகழ்வைமரணதண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருசெல்வராஜ் முருகையன்தோழர் ஹரிஹரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.




இப்போராட்டத்தில்தமிழின உணர்வாளர்களும்மனித நேயர் ஆர்வலர்களும் மட்டுமின்றிசீக்கிய இன இளைஞர்களும் பங்கேற்றனர்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)

Friday, April 12, 2013

புல்லார் வழக்குத் தீர்ப்பு மூன்று தமிழரையும் பாதிக்கும் பேரறிவாளன் முருகன் சாந்தன் மரண தண்டனையை அரசமைப்பு விதி 161 ன் படி தமிழக அரசே இரத்து செய்க ! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை !



புல்லார் வழக்குத் தீர்ப்பு மூன்று தமிழரையும் பாதிக்கும்
பேரறிவாளன் முருகன் சாந்தன் மரண தண்டனையை
அரசமைப்பு விதி 161 ன் படி தமிழக அரசே இரத்து  செய்க !
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை !

 தேவேந்திர பால் சிங் புல்லார் வழக்கில் அவரது கருணை மனு நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்க்வி, எஸ்.ஜெ. முகபாத்தியாயா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றப் பிரிவு 12-04-2013 அன்று அளித்துள்ள இத்தீர்ப்பு சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமையையும் குறித்து அக்கறைப்படு வோரிடையே  பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத் தீர்ப்பு பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவர் கருணை மனு நிராகரிப்பு குறித்த வழக்கில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராசிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர் தொடர்பான கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்து 11-08-2011 அன்று ஆணையிட்டார். இம் மூவரைத் தூக்கிலிடுவதற்கான நாளும் குறிக்கப்பட்டது. இந்நிலையில் இம் மூன்று தமிழர் உயிர் காக்க தமிழகமே போர்க் கோலம்பூண்டது. குமரி முதல் கும்முடிப்பூண்டி வரை பேரெழுச்சியான போராட்டங்கள் நடை பெற்றன.  இப் போராட்டங்களின் உச்சமாக காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங்கொடி 28-08-2011 அன்று தீக்குளித்து உயிரீகம் செய்தார்.

இச் சூழலில் 30-08-2011 அன்று இது குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இத்தடை ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் தமிழக முதலமைச்சர் முன்மொழிய, தமிழக சட்ட மன்றம் இம் மூவர் தூக்கு தண்டணையை இரத்து செய்ய வலியுறுத்தி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்றை இயற்றியது.

 ஆனால், இவ்வழக்கில் எவ்விதத் தொடர்புமில்லாத எல்.கே.வெங்கட் என்பவர் அளித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இம் மூவர் மரணதண்டனைகுறித்த வழக்கை தன் விருப்பமாக(suo mato) உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றிக் கொண்டது.

அரசமைப்புச் சட்ட விதி 139 (A) (1) க்குப் பொருந்தாதக் காரணங்களைக் குறிப்பிட்டு நீதிபதிகள் சிங்க்வி , முகப்பாத்தியாயா ஆகியோர் இவ்வழக்கை தங்கள் விசாரணைக்கு மாற்றிக் கொண்டனர்.

“கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அதனைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்டவிரோதமானது என்ற நிலைப்பாட்டை தேவேந்திர பால் சிங்புல்லார் வழக்கிலும், மகேந்திரநாத் தாஸ் வழக்கிலும் முன் வைத்தது போலவே இவ்வழக்கிலும் சென்னை யர் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. பெரிதும் ஒத்தத் தன்மையுள் சிக்கல்கள் விவாதிக்கப்படுவதால் இவற்றை ஒன்றிணைத்து விசாரித்து முடிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இந் நீதிமன்றம் கருதுகிறது “என இம் முடிவுக்கு காரணமும் கூறப்பட்டது.

ந்நிலையில் புல்லார் வழக்கில் "கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அதனைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்டவிரோதமானது'' என்ற வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றப் பிரிவு புல்லார் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துவிட்டது.

புல்லார் வழக்கும் பேரறிவாளன் முருகன் சாந்தன் வழக்கும், பெரிதும் ஒத்தத் தன்மையானவை என இதே  நீதிமன்றம் வரையறுத்துவிட்டதால் புல்லார் வழக்கில் தீர்ப்புரைத்தது போலவே மூன்று தமிழர் வழக்கிலும் மரணதண்டனையை உறுதிசெய்து தீர்ப்புரைக்கும் ஆபத்து உண்டு.

ந்நிலையில் இம் மூன்றுதமிழர் உயிர் காக்க இப்போது இருக்கிற முதன்மையான வாய்ப்பு தமிழக அரசின் கைகளில்தான் இருக்கிறது. அரசமைப்புச் சட்டவிதி 161-ன்படி தமிழக அமைச்சரவை முடிவு செய்து மாநில ஆளுனர் வழியாக பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரது தூக்குதண்டனையை இரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

30-08-2012 அன்று தமிழக  சட்ட மன்றத்தில் முதலைமைச்சர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா அவர்கள் முன் மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மூன்றுத் தமிழர் உயிர் காக்கும் தீர்மானத்துக்கு உயிர் கொடுப்பதாகவும் இது அமையும் என சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய தீர்ப்புரையோ, அரசமைப்புச் சட்டவிதி 257 (1) ன் படியான இந்திய அரசின் ஆணைகளோ குறுக்கிட வாய்ப்பில்லாத அதிகாரமே 161-ன் படியான ஆளுரின் அதிகாரம் ஆகும்.

அரசமைப்புச் சட்ட விதி 257 இந்திய ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையில் உள்ள நிர்வாக உறவுகளைப்பற்றிப் பேசுகிறது. இதற்கும் விதி 161 ன் படியான ஆளுநரின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்திற்கும் தொடர்பேதும் கிடையாது. 161 என்பது தனித்த அதிகாரமுள்ள விதியாகும்.

மன்னிப்பு வழங்கும் ஆளுரின் இந்த அதிகாரமோ, இந்திய தண்டனை சட்டவிதி 54 மற்றும் குற்றவியல் நடைமுறை சட்ட விதி 433 ஆகியவற்றின் படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரமோ, கட்டற்றவை ஆகும். 

எனவே, தமிழக முதலைமைச்சர் அரசமைப்புச் சட்ட விதி 161 ன் படி பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் துக்குதண்டனையை இரத்து செய்து ஆணை பிறப்பித்து தமிழ் நாட்டுமக்களின் பெருவிருப்பத்தை நிறைவேற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                                                          தோழமையுடன்,
கி. வெங்கட்ராமன்,
 பொதுச்செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Thursday, April 11, 2013

இலங்கை அரசு ஓர் அரம்பர் அரசு (rowdies state) என்று உலக நாடுகள் அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்




“இலங்கை அரசு ஓர் அரம்பர் அரசு (rowdies state) என்று
உலக நாடுகள் அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்

ஈழத் தமிழர்களுக்கெதிராக 2008-2009 ஆம் ஆண்டுகளில் சிங்கள இராணுவம் நடத்திய போரில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததும் உலகின் கவனத்திற்கு வந்து, ஐ.நா. மனித உரிமை மன்றமும் அவை பற்றி புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.

இந்நிலையில் சிங்கள இராணுவ தலைமைத் தளபதி ஜெகத் செயசூரியா இராணுவ நீதிமன்றம் அமைத்து அதன் மூலம் போர்க்குற்றம் நடந்ததா என்று கண்டறிய ஆணையிட்டாராம். அந்த இராணுவ நீதி மன்றம், நடந்து முடிந்த போரில் குடி மக்களில் ஒருவர் கூட இராணுவத்தால் கொல்லப்படவில்லை என்று தீர்ப்பளித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் முதல் பாகத்தை இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய இராசபட் சேயிடம் செய சூரியா கொடுத்துள்ளார்.

சிங்கள அரசின் அதிகாரத்திலுள்ள ஆட்சியாளர்கள், இராணுவ நீதிமன்றத் துறையினர், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் எந்த அளவு சொந்த மனச்சான்றை கொலை செய்யக்கூடியவர் என்பதும், இலங்கையில் எழுதப்பட்டுள்ள சட்டத் திட்டங் களுக்கும், பன்னாட்டு மனித உரிமை சட்டத் திட்டங்களுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் கட்டுப்படாத அரம்பர்கள் (rowdies) என்பது இந்த இராணுவ நீதி மன்றத்தின் தீர்ப்பின் மூலம் மீண்டும் மெய்பிக்கப்பட்டுள்ளது.

பான்கீ மூன் அமைத்த மூவர் குழு போரின் கடைசி நாட்களில் 40 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் சிங்கள இராணுவம் செய்த போர்க் குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றும் கூறியுள்ளது.  இராசபட்சே அமர்த்திய கற்றுக்கொண்ட பாடங் களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணையம் கூட கீழ் நிலை இராணுவ அதிகாரிகள் போர்க் குற்றம் புரிந்துள்ளார்கள் என்று அறிக்கை வெளியிட்டது.

மனிதர்கள் உள்ளிட்ட மற்ற விலங்குகளை முழுமையாக விழுங்கும் முதலையைப் போல  சிங்கள இராணுவ நீதிமன்றம் குடிமக்களில் ஒருவர் கூட கொல்லப் படவில்லை. (zero civilian casualty) என்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசு ஓர் அரம்பர் அரசு (rowdies state) என்பது உண்மையாகுகிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கை அரசுடன் தூரதரக உறவை துண்டித்துக் கொண்டு அதன் மீது இனப்படுகொலை குற்ற விசாரணை நடத்த பன்னாட்டு புலனாய்வு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இலங்கை அரசு தனது குற்றச்செயல்களை நேர்மையாக விசாரித்து நடவடிக்கை எடுத்துக் கொள்ளும் என்று நம்புவதற்கு எள்ளளவும் இனி இடமில்லை என்பதை உலக நாடுகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இங்ஙனம்,
 பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Monday, April 1, 2013

தமிழர் தவிர்த்த இந்தியரும், சிங்களரும் ஒரே இனம் என்று இலங்கைத்தூதர் கூறியது உண்மையே! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை




தமிழர் தவிர்த்த இந்தியரும், சிங்களரும் ஒரே இனம் என்று
இலங்கைத்தூதர் கூறியது உண்மையே!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை

இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் சிங்களர்கள் இந்தியாவின் ஒரிசா, வங்காளம் ஆகிய பகுதிகளிலிருந்து இலங்கையில் குடியேறியவர்கள், தமிழர்களைத் தவிர்த்த இந்தியர்களும் சிங்களர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்,சமற்கிருதம், வங்காளி, இந்தி ஆகிய மொழிகள் வழியாக உருவானது தான் சிங்களமொழி, எனவே இந்தியர்கள் சிங்களர்களை எதிர்க்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு கரியவாசம் கூறியது தவறான கருத்து என்றும், இந்தியர்களை பிளவுபடுத்தும் உள்நோக்கம் கொண்டது  என்றும்  தமிழகத் தலைவர்கள் மறுப்புக் கூறிவருகிறார்கள்.

ஆனால், கரியசம் கருத்து பற்றி இந்திய அரசு சார்பில் யாரும் மறுப்புக் கூறவில்லை; வட இந்தியத் தலைவர்களும், தென்மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் மறுப்புக் கூறவில்லை.

தமிழர்களைத் தனிமைப்படுத்தி, சிங்களத் தூதர் கருத்து கூறும் போது, அதை மறுக்க வேண்டும் என்ற முனைப்பு இந்திய ஆட்சியாளர்களுக்கும், வடஇந்தியத்தலைவர்களுக்கும் ஏற்படாதது ஏன்?

கரியசம் ஒரு வரலாற்று உண்மையைத் தான் கூறியுள்ளார் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கருதுகிறது.

சிங்களர்கள் ஆரிய மரபினத்தைச் சேர்ந்தவர்கள்; தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவர்கள். இலங்கைக் குடியரசுத் தலைவராகஇருந்த ஜெயவர்த்தனே, 1980களில் தமிழின அழிப்புப் போரைத் தொடங்கிய காலத்தில், "இந்தியர்களும் ஆரியர்கள், சிங்களர்களும் ஆரியர்கள். யாருக்கேனும் இதில் சந்தேகம் ஏற்பட்டால் என் மூக்கையும், இந்திரா காந்தி மூக்கையும் ஒப்பிட்டுப் பாருங்கள்" என்றார்.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று ஒரு தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.. கோரிய போது, அதற்காக மக்களவைத் தலைவர் மீராக்குமார், 20.03.2013 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டினார். அக்கூட்டத்தில் கலந்து கொண்ட, பா..., சி.பி.எம்., சி.பி.., சமாஜ்வாதிக் கட்சி, பகுசன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய சனதாதளம், காங்கிரசு என அனைத்துக் கட்சிகளும் இலங்கையில் நடந்ததுஇனப்படுகொலைப் போர் என்று தீர்மானம் நிறைவேற்ற முடியாது, இலங்கை நமது நட்பு நாடு என்று கூறி மறுப்புத் தெரிவித்துவிட்டன.

அனைத்துக் கட்சிகளின் இம்மறுப்பு எதைக் காட்டுகிறது? மிகவும் பிரபலமாக உள்ள வடநாட்டு மனித உரிமை அமைப்புத் தலைவர்கள் இந்த இனப்படுகொலை மீது, இராசபக்சே கும்பலுக்கு எதிராக பன்னாட்டு புலனாய்வு கோரி இயக்கம் எதுவும் நடத்தாததும், வலுவானக் கோரிக்கை வைக்காததும் எதைக் காட்டுகிறது?

சேனல் – 4 தெலைக்காட்சியும், மனித உரிமைக் கண்காணிப்பாகமும்(Human Rights Watch -US) ஈழத்தில் அப்பாவித தமிழ் மக்க்களும், போர் முடிந்த பிறகு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதையும் வெளியிட்டு உலக மனச்சான்றை தப்பி எழுப்பியுள்ளனர். தமிழக ஊடகங்கள் பலவும் அவற்றை வெளிப்படுத்தி, இலங்கையில் நடந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், வடநாட்டு ஊடகங்கள் இந்த இனப்படுகொலை சாட்சிகளையும், செய்திகளையும் உரியவாறு வெளியிடாத்து ஏன்?

இந்தியர்களும், சிங்களர்களும் ஒரே இனம் என்று கரிய வாசம் கூறியதைத் தானே மெய்ப்பிக்கிறது.

2008-2009இல் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களுக்காக எங்களிடம் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் மட்டுமல்ல, ஒருகண்டனத்தைக் கூட எதிர்பார்க்காதீர்கள் என்று தமிழர்களை நோக்கி கூறியதாகத்தானே இம்மறுப்பு அமைகிறது?

இந்திக்காரர்களோ, மலையாளிகளோ, வேறு வடநாட்டவர்களோ எங்காவது ஒரு நாட்டில் ஒரு நூறு பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தால், இந்த வடநாட்டுஅரசியல் கட்சிகளும், தமிழகம் தவிர்த்த தென்னாட்டு அரசியல் தலைமைகளும், இப்படி நடந்து கொண்டிருப்பார்களா?

இலங்கைத் தூதர் கரியசம், தமிழரைத் தவிர்த்த அனைத்து இந்தியர்களும், சிங்களர்களும் ஒரே இனம் என்பது தானே நடைமுறை உண்மையாக இருக்கிறது.

சிங்கள வீரர்களையும் உள்ளடக்கிய .பி.எல். கிரிக்கெட் அணி சென்னையில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதலமைச்சர் செயலலிதாஅறிவித்தார். உடனடியாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி, சிங்களர் அடங்கிய விளையாட்டுக் குழுவை கேரளத்தில் அனுமதிக்கத் தயார், அந்த அணி இங்குவந்து விளையாடினால் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம் என்று அறிவித்தார்.

தமிழர்களும், மலையாளிகளும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தோ, அல்லது இந்தியர் என்ற ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தோ உம்மன்சாண்டிக்கு இருந்தால், அவர் இப்படிச் சொல்வாரா?

எந்த ஒரு நாட்டு அரசுக்கும், ஓர் இனச்சார்பு இருக்கும். அந்த இனத்தின் பண்பாட்டுச் சார்பு இருக்கும். இந்தியா, ஆரிய இனச்சார்பும், ஆரிய பண்பாட்டுச் சார்பும்கொண்டது. இலங்கையும் அப்படிப்பட்டதே.

தமிழர்களைத் தவிர்த்த, காசுமீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர்த்த, இதர வடநாட்டு தேசிய இனங்கள் அனைத்தும் தங்களின் முன்னோர்களாக ஆரியர்களை பெருமையுடன் கருதிக் கொள்கிறார்கள். தமிழகத்தைத் தவிர்த்த இதர தென்னாட்டு தேசிய இனங்கள், ஆரியக் கலப்பினால் உருவானவை.ஆரியச்சார்பிலும், சமற்கிருத மொழி கலப்பிலும் பெருமிதம் கொள்பவை தான் இந்த வடநாட்டு - தென்னாட்டு தேசிய இனங்கள்.

வரலாறெங்கும் ஆரியம் தமிழினத்திற்கு பகை சக்தியாகவே செயல்பட்டிருக்கிறது. இனம், பண்பாடு, மொழி ஆகிய துறைகளில் இன்றும் ஆரியர் - தமிழர் மோதல்நடந்து கொண்டுள்ளது. இந்த மோதலின் வெளிப்பாடு தான் இந்திய - சிங்கள அரசியலில் ஒரு பக்கமாகவும், தமிழர் அரசியல் எதிர் பக்கமாகவும் மோதிக்கொள்ளும் போக்கு. தமிழர்களைப் பொறுத்தவரை சம உரிமை என்பதைத் தான் நாடுகிறோமே தவிர, யாரையும் ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை;முனையவில்லை.

ஆனால், ஆரியம் என்பது தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, தமிழர்களின் இன, மொழி, அடையாளங்களை அழிப்பதிலும் தமிழர்கள் மீது அரசியல் ஆதிக்கம்செலுத்துவதிலுமே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பல வடிவங்களில்  போர் நடத்துகிறது. இந்த உண்மை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து ஈழத்தமிழர்களைஅழிப்பதில் பளிச்சென தெரியவந்துள்ளது. 600 தமிழக மீனவர்களை சிங்களர்கள் சுட்டுக் கொல்வதற்கு இந்தியா பக்கபலமாக இருப்பது, மேலும் இந்தஇனமோதலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

காவிரி, முல்லைப் பெரியாறு அணை போன்ற தமிழர்களின் மரபு உரிமைகளைப் பறிக்கும் கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும் இந்தியா துணை நிற்கிறது.இவற்றில் சட்ட ஆட்சியை செயல்படுத்த, இந்தியா விரும்பவில்லை. இவையெல்லாம் ஆரிய இந்தியாவின் தமிழின பகைப் போக்கின் அடையாளங்கள்.

இனியும் தமிழர்களை இந்தியர் என்ற அடிமை வளையத்திற்குள் சிக்க வைக்க தமிழகத் தலைவர்கள் முயலக்கூடாது. ஏதோ சிறப்பாக செயல்படுகின்றஇந்தியர்ஒற்றுமையை சீர்குலைக்க, சிங்களக் கரியசம் புதிதாக முனைந்து விட்டதைப் போல் கண்டனம் எழுப்புவதில் பொருளில்லை.

இந்தியரும் சிங்களரும் ஒரே இனம் தான். இவ்விருவரின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் தமிழர்கள் ஒரு சேரப் போராடும் போது தான் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT