உடனடிச்செய்திகள்

Wednesday, June 22, 2011

PRESS RELEASE[22.06.2011]:“சமச்சீர் கல்விக் குழுவை கலைக்க வேண்டும்” – பெ.மணியரசன் பேச்சு!

"சமச்சீர் கல்விக் குழுவை கலைக்க வேண்டும்" பெ.மணியரசன் பேச்சு!

22.06.2011, சென்னை- 17.

 

"தமிழக அரசு நியமித்துள்ள சமச்சீர் கல்விக் குழுவை கலைத்து விட்டு புதிய குழுவை அமைக்க வேண்டும். சமச்சீர் கல்விக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடந்துள்ள மேல்முறையீட்டு வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்" என சென்னை சைதாப்பேட்டையில் இன்று(22.06.2011) மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.

 

சமச்சீர் கல்வியை தடை செய்யாதே! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இன்று மாலை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஓவியர் வீரசந்தானம், பேராசிரியர் யோகீசுவரன், புலவர் அருட்கண்ணனார், திரை இயக்குநர் தங்கர் பச்சான், த.தே.பொ.க. கட்சியின் தாம்பரம் கிளைச் செயலாளர் தமிழ்க்கனல், பொதுக்குழு உறுப்பினர் க.அருணபாரதி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

 

திரளாக திரண்டிருந்த தோழர்களால், "சமச்சீர் கல்வியை தடை செய்யாதே, கட்டணக்கொள்ளையை தடுத்து நிறுத்து, உச்சநீதிமன்ற வழக்கைத் திரும்பப் பெறு" உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், "சமச்சீர் கல்வியை தடை செய்வதில் தமிழக முதல்வருக்கு உள்நோக்கம் இருக்கிறது. துக்ளக் சோ அய்யர், 'சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டால் ஒரு சிலர் உயர் கல்வி பெறுவது தடைபடும்' என்று அவரது பத்திரிக்கையில் எழுதுகிறார். அவர் கூறும் 'ஒரு சிலர்' என்பது யார் என்பது அவர் கூறுவதிலிருந்தே தெரிகிறது. இப்படிப்பட்டவர்களுக்காக சமச்சீர் கல்வியை நிறுத்த முயற்சிக்கும் தமிழக அரசு, மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கும் மேட்டுக்குடியினருக்கும் ஆதரவு அளிப்பது தெளிவாகப் புரிகிறது.

 

சமச்சீர் கல்விக்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழக அரசு அமைத்துள்ள குழுவில், சோ இராமசாமியும் இந்து முன்னணி இராமகேபாலனும் தான் சேர்க்கப்படவில்லை. அந்தளவிற்கு அக்குழு கட்டணக் கொள்ளையர்களையும், சமச்சீர் கல்வி அமைவதை விரும்பாத தமிழக அரசின் சொல்படி நடக்கும் அதிகாரிகளையும் உள்ளடக்கி இருக்கிறது. அரசு ஆசிரியர்களோ, மாநிலக் கல்வி வாரியத்தின் ஒரு பிரதிநிதியோ நியமிக்கப்படாதது கண்டனத்திற்குரியது.

 

எனவே, இக்குழுவை கலைத்துவிட்டு, நடுநிலையாளர்களை உள்ளடக்கிய புதிய குழுவை அமைக்க வேண்டும். சமச்சீர் கல்விக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்" என்று பேசினார்.

 

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று குடந்தையிலும், நேற்று மதுரையில் த.தே.பொ.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இருகூட்டங்களிலும், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார்.

 

குடந்தையில் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு, ஆதி.கலியபெருமாள் (த.தே.பொ.க.) தலைமை தாங்கினார். தோழர்கள் விஷ்ணுபுரம் சரவணன், ஆவூர் கோபால் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். தோழர்  விடுதலைச்சுடர் நன்றியுரையாற்றினர்.

 

மதுரை செல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் முன்னிலை வகித்தனர். மகளிர் ஆயம் தமிழக அமைப்பாளர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், சித்திரை வீதி தானி ஓட்டுநர் நலச்சங்கத் தலைவர் பா.இராசேந்திரன், ஹக்கீம்(தமிழக இளைஞர் முன்னணி), தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மதுரைக் கிளை செயலாளர் கதிர்நிலவன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

 

 

 

Tuesday, June 21, 2011

PRESS RELEASE[21.06.2011]:: சமச்சீர் கல்விக்கு தடை கூடாது! - சென்னையில் நாளை(22.06.2011) த.தே.பொ.க.ஆர்ப்பாட்டம்!

"சமச்சீர் கல்வியை தடை செய்யாதே!

கல்விக் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து!"

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

சென்னையில் நாளை(22.06.2011) ஆர்ப்பாட்டம்!

பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் நிறைவுரை!

 

தமிழ்நாட்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு நான்கு வகையான பாடத் திட்டங்கள் இருந்தன. தமிழக அரசு அமைத்த முனைவர் ச.முத்துக்குமரன் குழு நீண்ட காலம் ஆய்வு செய்து, பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தி, ஒரே வகை பாடத்திட்டத்தை பரிந்துரைத்தது. ஆங்கிலத்தை மொழிப்பாடமாகக் கற்றுக் கொண்டு, மற்ற பாடங்களை தமிழ்வழியில் படிக்கவும் பரிந்துரைத்தது இன்னும் பல நல்ல பரிந்துரைகளை அக்குழு வழங்கியது. இதற்கு சமச்சீர்க் கல்வித் திட்டம் என்று பெயர்.

 

கொள்ளை லாபம் தரும் வணிகமாக மெட்ரிக்குலேசன் பள்ளிகளை நடத்தி வரும் வலுவான கல்வி முதலாளிகள் இத்திட்டத்தை எதிர்த்தனர். அதே போல் சமூகத்தில் வர்ண சாதி ஆதிக்கம் நீடிக்க வேண்டும் என்று விரும்பும் பிற்போக்காளர்களும் சமச்சீர்க் கல்வியை எதிர்த்தனர்.

 

அரசு பள்ளிகளை விட தங்கள் பள்ளிகளில் மிக உயர்ந்த தரத்துடன் பாடத் திட்டம் உள்ளது என்று கூறிக்கொண்டுதான் மெட்ரிக் பள்ளி முதலாளிகள் தங்கள் வணிகத்தை நடத்துகின்றனர். இந்த பூடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மெட்ரிக் பள்ளி பாடத்திட்டத்தைவிட தரத்தில் கூடுதலாக உள்ள சமச்சீர் பாடத்திட்டம் அனைவருக்கும் பொதுவாக வந்தவுடன் அவர்கள் தரம் பற்றி பேசி, பெற்றோர்களிடம் பீதி கிளப்புகிறார்கள்.

 

சென்னை உயர்நீதிமன்றம் 10.6.2011 அன்று அளித்த தீர்ப்பில் சமச்சீர் கல்வியை செயல்படுத்திக்கொண்டே, தேவைப்படும் தர மேம்பாட்டை செய்து கொள்ளலாம் என்று கூறியதை போலவே நீக்க வேண்டிய பாடங்கள் இருந்தால் அதை மட்டும் நீக்கிக் கொள்ளலாம் என்று கூறியது.

 

இந்த அடிப்படையில் சமச்சீர்க் கல்வியை செயல்படுத்துவதற்கு மாறாக அத்திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு உச்சநீதிமன்றம் சென்று அத்திட்டத்தை நீக்கக் கோரியது செல்வி செயலலிதா அரசு.

 

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் வல்லுநர் குழு அமைத்து சமச்சீர் கல்வி பற்றி அதனிடம் பரிந்துரை பெற்று, அதை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி செயல்படவேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் 15.6.2011 அன்று தீர்ப்பளித்தது.

 

தமிழக முதல்வர் செயலலிதா அமைத்துள்ள வல்லுநர் குழுவில் சமச்சீர்க் கல்வியைத் தொடர்ந்து எதிர்த்து வரும், சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகி விஜயலட்சுமி சீனிவாசன், சென்னை டி.ஏ.வி மெட்ரிகுலேசன் பள்ளிகள் முதலாளி சி.ஜெயதேவ், சென்னை பத்மா சேசாத்ரி பாலபவன் பள்ளிகள் முதலாளி இராஜ லெட்சுமி பார்த்த சாரதி ஆகியோரை சேர்த்துள்ளார். நடுவண் கல்வித்துறை சார்ந்த இருவரைத் தவிர மற்ற உறுப்பினர்கள் தமிழக அரசின் அதிகாரிகள். தமிழக அரசு நடத்தும் பள்ளிகளிலிருந்து ஒருவரைக் கூட இக்குழுவில் சேர்க்கவில்லை.

 

 

 

 

 

10 பேர் கொண்ட இந்தக் குழு எப்படி பரிந்துரை செய்யும் என்பது இப்போதே புரிகிறது. சமச்சீர்க் கல்விக்கு எதிராகப் பரிந்துரை வர வேண்டும் என்ற திட்டத்துடன் தான் இந்த குழுவை முதலைமைச்சர் அமைத்துள்ளார்.

 

சமச்சீர் கல்வி என்பது சமூக நீதியில் ஒரு முக்கிய கூறாகும். அனைவர்க்கும் சம வாய்ப்பு தரும் திட்டமாகும். அதே போல் மெட்ரிகுலேசன் முதலாளிகளின் கட்டணக்கொள்ளைக்கும் இது ஒரு வேகத்தடையாகும்.

 

இப்பொழுது நீதிபதி இரவிராஜா பாண்டியன், நீதிபதி கோவிந்தரசான் குழு வரையறுத்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் நிர்ணயத்துள்ளார். அவர் நிர்ணயத்த தொகையையும் தாண்டி பல பள்ளிகள் கூடுதலாக வசூல் வேட்டை நடத்துகின்றன.

 

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கைத் திரும்பப் பெற்று சமச்சீர்க் கல்வியை செயல்படுத்த வலியுறுத்தியும், முதலமைச்சர் தலையிட்டு கல்விக் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

நாளை மாலை 4 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு நடைபெறும் இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் க.அருணபாரதி, தாம்பரம் த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.

 

அனைவருக்கும் சமமான பொதுக்கல்வியை விரும்பும் ஆர்வலர்களும் தமிழ் உணர்வாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.


இவண்,

வெளியீட்டுப் பிரிவு,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

 

நாள் : 21.06.2011,

இடம்  : சென்னை-17


தொடர்புக்கு: tamizhdesiyam@gmail.com 

இணையம்: http://tamizhdesiyam.blogspot.com

Saturday, June 18, 2011

சமச்சீர்க் கல்விக்கு எதிரான குழுவை கலைத்துவிட்டு புதிய குழுவை அமைக்க வேண்டும் ! - பெ.மணியரசன் அறிக்கை!

சமச்சீர்க் கல்விக்கு எதிரான குழுவை கலைத்துவிட்டு

புதிய குழுவை அமைக்க வேண்டும் !

  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி  பொதுச்செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை


 


ஆட்சிக்கு வந்தவுடனேயே சமச்சீர்க்கல்வித் திட்டத்தைக் கைகழுவ முனைப்புக் காட்டினார் முதல்வர் செயலலிதா. தி.மு.க ஆட்சியில் சமச்சீர்க் கல்வியைச் செயல்படுத்த சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைச் செல்லாததாக்கும் வகையில், சட்டப்பேரவையில் புதிய திருத்தம் ஒன்றை நிறைவேற்றினார். அத்திருத்ததிற்கு இடைக்காலத் தடை வழங்கி, சமச்சீர்க் கல்வித் திட்டத்தை இவ்வாண்டு செயல்படுத்துமாறு 10.6.2011 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது.

 

அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் செயலலிதா. உச்ச நீதிமன்றம் 14.6.2011 அன்று அளித்த இடைக்கால ஆணையில் தமிழக அரசுத் தலைமைச் செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்து, அக்குழுவின் பரிந்துரையை சென்னை உயர் நீதி மன்றத்தில் அளிக்குமாறும், அதன் பிறகு உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி செயல்படுமாறும் கூறியிருந்தது.

 

இதற்காக 17.6.2011 அன்று செல்வி செயலலிதா தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி  தலைமையில் அமைத்த குழுவில் மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகிகளான சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த விசயலட்சுமி சீனிவாசன், சென்னை டி.ஏ.வி. மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த சி. ஜெயதேவ் ஆகியோரைச் சேர்த்துள்ளார். அத்துடன் சமச்சீர்க் கல்வியில் எவ்வகைத் தொடர்புமில்லாத சி.பி.எஸ்.இ. பிரிவைச் சேர்ந்த சென்னை பத்மா சேசாத்திரி பள்ளிகளின் நிர்வாகியான இராஜேஸ்வரி பார்த்தசாரதியை இக்குழுவில் சேர்த்துள்ளார்.

 

மற்றொருவர் நடுவண் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) முன்னாள் இயக்குநர் ஜி. பாலசுப்பிரமணியன் ஆவார். இன்னும் இருவர் நடுவண் அரசின் உயர் கல்விக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் பி. திரிபாதி, அனில் சேத்தி ஆகியோர். அடுத்தவர் தமிழகப்பள்ளிக் கல்வி செயலாளர் டி. சபீதா. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வசுந்தரா தேவி குழுவின் உறுப்பினர் செயலாளர் ஆவார். சாரங்கி உள்ளிட்ட இம் மூவரும் செயலலிதாவின் கீழ் பணியாற்றுவோர் ஆவர்.

 

இக்குழுவில் தமிழக அரசின் பள்ளிகள் சார்பாக ஆசிரியர் யாரும் சேர்க்கப்படவில்லை.

 

சமச்சீர்க் கல்விக்கு எதிராகப் பரிந்துரை பெறுவதற்காகத் திட்டமிட்டு இக்குழுவை அமைத்துள்ளார் செயலலிதா.

 

தமிழகக் கல்வி வளர்ச்சியிலும், மாணவ்ர் நலனிலும், சமூக நீதியிலும் அக்கறையுள்ள மக்கள் இக்குழுவை ஏற்க மாட்டார்கள்.

 

தமிழக முதல்வர் இக்குழுவைக் கலைத்து விட்டு, இலாப நோக்கில்லாத கல்வியாளர் களையும், தமிழக அரசுப் பள்ளிகள் சார்பாக பிதிநிதிகளையும் சேர்த்து புதிதாகக் குழு அமைக்குமாறு தமித் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

 

தோழமையுடன்>

                                                                    பெ.மணியரசன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

 

இடம்  : சென்னை-17.

நாள்  : 18.06.2011 

 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT