உடனடிச்செய்திகள்

Thursday, April 29, 2021

"மக்கள் போராட்டமா? அரசியல் அதிகாரமா? எது வெல்லும்?" 'ழகரம்' ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"மக்கள் போராட்டமா? அரசியல்

 அதிகாரமா? எது வெல்லும்?"



'ழகரம்' ஊடகத்துக்கு.. 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, April 26, 2021

ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்காதீர்! தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!



ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்காதீர்! 

எட்டுக்கட்சி கூட்ட முடிவுக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கப்  பொதுச்செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


இன்று (26.04.2021) நடந்த எட்டுக் கட்சிக் கூட்டத்தில் கோவிட் தொற்று ஆக்சிஜன் தேவைக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி அலகை நான்கு மாதங்களுக்கு இயங்க அனுமதிப்பது என்றும், நோய்த் தொற்று தேவைக்கேற்ப அதன் காலத்தை நீட்டிப்பது என்றும் எடுக்கப்பட்டுள்ள முடிவு அதிர்ச்சியளிக்கிறது. 

இந்திய அரசின் பி.எச்.இ.எல். தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு மாற்று நிறுவனங்களின் வழியாக தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கும்போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிப்பது தீய உள்நோக்கம் கொண்டதாகும். 

ஸ்டெர்லைட் ஆலையில் அமைந்துள்ள ஆக்சிஜன் தயாரிப்பு அலகுதான் தேவை என்றால், உடனடியாக அவசர சட்டம் நிறைவேற்றி தமிழ்நாடு அரசு அந்த ஆலையைக் கையகப்படுத்தி, இதை செய்திருக்க முடியும். மாறாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் குழுவினர் கண்காணிப்பில் வேதாந்தா நிறுவனமே மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கலாம் என அனுமதிப்பது நாளைக்கு நிரந்தரமாக அந்த ஆலையைத் திறந்துவைக்க வாய்ப்பு ஏற்படுத்தும். 

ஒருவேளை, ஸ்டெர்லைட்டிலுள்ள பொறியாளர்கள்தான் இதை இயக்கத் தேவை என்றால், தமிழ்நாடு அரசே தனது பொறுப்பில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும்போது, அந்த நாட்களுக்கு அந்த குறிப்பிட்ட வல்லுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

இந்த வழிகள் எதையும் கருதிப் பார்க்காமல், வேதாந்தாவின் நிர்வாகத்திலேயே ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் அலகை இயக்குவது, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான முன்னோட்டம் என ஐயப்பட இடமிருக்கிறது! 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய எட்டுக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று கூறிய கருத்தை கூட ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, தி.மு.க. பேராளர் கனிமொழி, அனில் அகர்வாலின் வேதாந்தாவின் பொறுப்பில் ஸ்டெர்லைட் ஆலையை அப்படியே வைத்துக் கொண்டு, ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் மின்சாரம் தரலாம் என்று கூறிய ஆலோசனை அரசாலும் ஏற்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னால், ஸ்டெர்லைட் ஆலையை இயங்க வைக்கும் உள்நோக்கம் இருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்கள் பேராளர்களையும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெறச் செய்யலாம் என்பது கண்துடைப்பு வேலை! மேலும், இந்தக் குழுவில் இடம்பெறுவது என்ற முடிவை ஏற்காத மக்கள் இயக்கங்களும், பிறரும் பிளவுபடும் ஆபத்திருக்கிறது. வேதாந்தாவின் பொறுப்பில் ஆலை இருக்கும்போது  பொதுமக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது நடைமுறைச் சாத்தியமற்றது. 

மொத்தத்தில், மருத்துவ ஆக்சிஜன் தேவைக்கு மாற்று வழிகளைக் கருதிப் பார்க்காமல் ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் அலகை இயங்க வைப்பது என்ற முடிவு தூத்துக்குடி மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்! 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைப் போலவே, இதே வேதாந்தா குழுவினருக்குச் சொந்தமான ஆலைகள் இராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் (Hindustan Zinc Limited - HZL), சத்தீசுகட் மற்றும் ஒடிசா (Bharat Aluminium Company - BALCO), அரியானா (Cairn Oil & Gas), ஜார்கண்ட் (ESL Steel Limited), கோவா மற்றும் கர்நாடகா (Sesa Goa Iron Ore) ஆகியவை இயங்குகின்றன. இந்த உருக்கு ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்திக்கான வாய்ப்பு இருக்கிறபோது தமிழ்நாட்டின் ஸ்டெர்லைட் ஆலையில் மட்டும் கவனம் செலுத்துவது ஆக்சிஜன் தயாரிக்கிற நோக்கத்தோடா? தமிழர்களை பலிகொடுத்து அனில் அகர்வாலுக்கு உதவி செய்யும் உள்நோக்கத்தோடா என்ற ஐயம் வலுவாக எழுகிறது! 

எனவே, தமிழ்நாடு அரசு இம்முடிவைக் கைவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது என்றும், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு மாற்று வழிகளைக் காண வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 


"தமிழ்நாடு இந்தியாவின் வேட்டைக்காடா? 'ழகரம்'ஊடகத்துக்கு..ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"தமிழ்நாடு இந்தியாவின் வேட்டைக்காடா?


'ழகரம்'ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
 ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Sunday, April 25, 2021

உச்ச நீதிமன்றத்தின் உயரம் குறைகிறதா? - ஐயா பெ. மணியரசன்,



உச்ச நீதிமன்றத்தின் உயரம் குறைகிறதா?

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்


உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக ஆந்திரத்தைச் சேர்ந்த என்.வி. இரமணா 24.04.2021 அன்று பதவி ஏற்றுள்ளார். 47ஆவது தலைமை நீதிபதியாக இருந்த சரத் ஏ. பொப்டே கடந்த 23.04.2021 அன்று பணி ஓய்வு பெற்றார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 சனவரி 26இல் செயலுக்கு வந்த போதே அது முழுமையான ஒரு கூட்டாட்சிக் கட்டமைப்பையோ, முழுமையான மதச்சார்பின்மையையோ கொண்டிருக்கவில்லை. முழுக்க முழுக்க மக்கள் உரிமை, சமத்துவப் பொருளியல் சார்ந்ததோ இல்லை. ஆனால் அதற்குள் நின்று கொண்டு அதனை மேம்படுத்தியவர்கள் வழக்கறிஞர்கள் சிலரும் நீதிபதிகள் சிலரும் ஆவர். அவர்கள் மக்களுக்குப் பெரும் கடமை ஆற்றியுள்ளார்கள்.

அரசமைப்புச் சட்டத்திற்கு முற்போக்கான விளக்கவுரைகள் வழங்கி அதை வளர்த்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பாராட்டிற்குரியவர்கள். 1970களிலும் அதற்குப் பின்னரும் இருந்த நீதிபதிகளில் சிலர் பெயர் என் நினைவில் நிற்கிறது. தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி, நீதிபதி வி.ஆர். கிருஷ்ணயர், நீதிபதி எச்.ஆர். கண்ணா, நீதிபதி ஓ. சின்னப்ப ரெட்டி இப்படி இன்னும் சிலர்.

வழக்கறிஞர்களில் நானி பால்கிவாலா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியவர். இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமைக்கும் நான்கு அடிப்படைக் கட்டமைப்புகள் இருக்கின்றன. இந்த நான்கு தூண்களில் தான் அரசமைப்புச் சட்டம் நிற்கிறது. இவற்றை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற வாதத்தை ஒரு வழக்கில் நானி பால்கிவாலா முன்வைத்தார். இதனாலேயே இவ்வழக்கு புகழ் பெற்றது. கேசவானந்த பாரதி ஸ்ரீபாதகல்வாரு எதிர் கேரள அரசு (1973) என்ற வழக்கே அவ்வழக்கு! 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி தலைமையில் மொத்தம் 13 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய அரசமைப்பு ஆயம் அவ்வழக்கை விசாரித்தது. கேரளத்தில் ஒரு மடத்தின் தலைவரான கேசவானந்த பாரதிக்காக மூத்த வழக்கறிஞர் நானி பால்கிவாலா வாதாடினார்.

தீர்ப்பு வெளிவந்தது; பதின்மூன்று நீதிபதிகளில் தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி உட்பட ஏழு நீதிபதிகள் பெரும்பான்மைத் தீர்ப்பை வழங்கினர். ஆறு நீதிபதிகள் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தனர். அந்த ஏழு நீதிபதிகளும் நானி பால்கிவாலா முன்வைத்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளாக உள்ள நான்கு கூறுகளை மாற்றிட, திருத்திட நாடாளுமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கினர். அந்த நீதிபதிகள் பால்கி வாலாவைப் பாராட்டினர். ஆட்சியாளர்கள் தங்களுக்குள்ள நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பறித்து, புதிய சட்டத்திருத்தங்களைக் கொண்டுவராமல் தடுக்கும் நோக்கம் கொண்டது பால்கி வாலாவும் ஏழு நீதிபதிகளும் கொண்டு வந்த அரசமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டுமானக் கோட்பாடு!

உச்ச நீதிமன்றத்தின் அக்காலத் தரத்திற்கு இப்போதுள்ள நிலையை ஒப்பிட முடியுமா? பணி ஓய்வு பெறும் நீதிபதி பொப்டேயையும் பதவி ஏற்கும் என்.வி. இரமணாவையும் ஒப்பிட முடியுமா?

சம்மு காசுமீருக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 வழங்கிய சிறப்புரிமையை 2019இல் நீக்கி, அதன் மாநிலத் தகுதியையும் அழித்து, இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக மாற்றியது மோடி ஆட்சி. இந்த அநீதியை எதிர்த்தும் மேற்படி திருத்தத்தை செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  தலைவர்களையும் தொண்டர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் 100 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அப்போதையத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் அப்படியே காலவரம்பின்றிக் கிடப்பில் போட்டார். அதேவேளை, இரபேல் போர் வானூர்தி ஊழல் வழக்கிலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் பா.ச.க. ஆட்சியினர்க்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கினார். பணி ஓய்வு பெற்ற உடனேயே பா.ச.க.வினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டார் ரஞ்சன் கோகோய்!

அடுத்துத் தலைமை நீதிபதியான சரத் ஏ.பொப்டே சம்மு காசுமீர் கலைப்புத் தொடர்பான 100 மனுக்களையும் அவர் பதவிக்காலமான 18 மாதமும் விசாரணைக்கு எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, ஓய்வு பெற்றுள்ளார். அதேபோல் மிக மோசமான குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டுப் பணி ஓய்வு பெற்றுள்ளார் பொப்டே!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் எவ்வளவு பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடந்தன! தில்லியில் ஆரியத்துவா பயங்கரவாதிகளால் பலர் கொலை செய்யப்பட்டனர். தில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் முதலியவற்றில் காவல்துறையின் கண் முன்னே பா.ச.க.வின் வன்முறைப் பிரிவினர் உள்ளே புகுந்து மாணவர்களையும் பேராசிரியர்களையும் தாக்கினர். இந்தியாவே மாதக்கணக்கில் கொந்தளிப்பில் போராடிக் கொண்டிருந்தது. ஆனால் தலைமை நீதிபதி பொப்டே, CAA தொடர்பான மனுக்களைக் கடைசி வரை விசாரணைக்கு எடுக்கவே இல்லை!

மியான்மரில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு, புத்த மதவெறியர்களால் ரோகிங்கியா முசுலிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். உயிர் காக்க எல்லையோர நாடான இந்தியாவுக்குள் ஓடி வந்தார்கள் ரோகிங்கியா மக்கள். அவர்களை அனுமதிக்க மறுத்து - திருப்பி விரட்டியது பா.ச.க ஆட்சி! அந்த மனிதநேயமற்றச் செயலை தடுக்கக் கோரி பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி பொப்டே கடைசி வரை விசாரணைக்கு எடுக்காமல் கிடப்பில் போட்டார்.

ரோகிங்கியா ஏதிலியரைச் சிறைப் பிடிக்க தடுக்கக் கோரிய அவசர மனுவைத் தள்ளுபடி செய்தார் பொப்டே!

பெருங்குழும நிறுவனங்கள் தேர்தல் காலத்தில் கட்சிகளுக்குக் கொடுக்கும் நிதிப் பத்திரங்கள் (Electoral Bonds) மற்றும் நிதியளிப்புப் பற்றி வெளியே தெரிவிக்க வேண்டியதில்லை, கணக்கும் காட்டவேண்டியதில்லை என்று பா.ச.க ஆட்சி கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர்கள் – பெரியோர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்கள். அம்மனுக்களை விசாரணைக்கு எடுக்காமல் காலம் கடத்தி பின்னர், அம்மனுக்களைத் தள்ளுபடி செய்தது பொப்டே தலைமையிலான உச்ச நீதிமன்றம்.

பொப்டே போய்விட்டார்; புதிய தலைமை நீதிபதியாக என்.வி. இரமணா வந்துள்ளார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து கொண்டு அந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆந்திர உயர் நீதிமன்றத்தை ஆந்திர முதலமைச்சர் செகன் மோகன் ரெட்டிக்கு எதிராகச் செயல்பட வைத்துள்ளார்.

ஆந்திரத்தின் முதலமைச்சராக இருந்தபோது சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கான புதிய தலைநகரமாக அமராவதியை உருவாக்குகிறார். அதில் ஏராளமான ஊழல்கள் என்று பின்னர் வந்த முதல்வர் செகன்மோகன் கூறுகிறார். அரசின் சிறப்புக் காவல் படை சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்கிறது. அவ்வழக்கை ஆந்திர உயர் நீதிமன்றத்தின் மூலம் முடக்குகிறார் என்.வி. இரமணா. இவர் மாணவப் பருவத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் செயல்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

ஆந்திர உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மகேசுவரி 2019 செப்டம்பர் 15 அன்று  அவசரம் அவசரமாக இரவில் உயர் நீதிமன்றத்தைக் கூட்டி சந்திரபாபு நாயுடு மேல் சிறப்புக் காவல்படை பதிவு செய்த வழக்கைப் பற்றிய தகவலை எந்த ஊடகமும் சமூக வலைத்தளங்களும் வெளியிடக்கூடாது என்று ஆணை இடுகிறார்.

அடுத்து சந்திரபாபு நாயுடு மீது பதியப்பட்ட ஊழல் வழக்கிற்கான முதல் தகவல் அறிக்கையையும், அவ்வழக்கிற்குப் பரிந்துரைத்த அமைச்சரவைத் துணைக்குழுவின் அறிக்கையையும் இரத்துச் செய்ய வேண்டும் என்று ஆந்திர உயர் நீதிமன்றத்தில் இருவர் வழக்குத் தொடுக்கின்றனர். அவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சோமயாசுலு, சந்திரபாபு நாயுடு மீதான சிறப்புக் காவல் படையின் முதல் தகவல் அறிக்கைக்கும் (FIR) அமைச்சரவைத் துணைக்குழுவின் பரிந்துரை அறிக்கைக்கும் இடைக்காலத் தடை விதிக்கிறார்.

ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்தத் தடையை எதிர்த்து, ஆந்திர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது. நான்கு வாரங்களைக் கடந்தும் உச்ச நீதிமன்றம் இந்த மேல் முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 2020 அக்டோபர் 1ஆம் நாள் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு “ஆந்திரத்தில் அரசமைப்புச் சட்டம் சீர்குலைந்து இருக்கிறது; இது தொடர்பாக ஆணை இடப்படும், எனவே அடுத்த விசாரணைக்கு ஆந்திர அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) இந்நீதிமன்றம் வரவேண்டும்” என்று ஆணை இட்டது.

அப்போது விழித்துகொண்ட செகன் மோகன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பொப்டே அவர்களுக்கு ஒரு புகார் மனு அனுப்பினார். ஊடகங்களிலும் அதை வரச் செய்தார்.

இந்திய அரசமைப்பு சட்ட உறுப்பு 356 ஐப் பயன்படுத்தி, செகன்மோகன் ஆட்சியைக் கலைக்க ஆணையிடும் அளவிற்கு ஆந்திர உயர் நீதிமன்றம் செல்வதற்கு – அதனை இயக்கியவர் உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. இரமணா என்பது செகன்மோகன் கடிதம் மூலம் வெட்ட வெளிச்சமானது. அதன் பிறகு உச்ச நீதிமன்றமும் என்.வி. இரமணா முயற்சிகளைக் கட்டுப்படுத்தியதாக நம்பலாம்.

இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த காலங்களில் அடைந்திருந்த உயரம் அதிகம். ஆனால் அண்மைக் காலமாக அதற்கேற்பட்ட சரிவுகள் – அதன் மதிப்பைக் குறைந்தன என்று பார்க்கக் கூடாது; மக்களின் சனநாயக உரிமைகள், மாநில உரிமைகள் முதலியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்றே பார்க்க வேண்டும்.

நீதிபதிகள் தேர்வில் சமூக நீதி
---------------------------------------- 
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

சாதிப் பன்மையும் மதப் பன்மையும் சமூகச் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கும் இந்தியாவில் அடிப்படை அரசு ஊழியரிலிருந்து அதிகாரி வரை இட ஒதுக்கீடு செயல்படுகிறது. அது தேவை! மாவட்ட நீதிபதி வரை இட ஒதுக்கீடு செயல்படுகிறது. ஆனால் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நீதிபதிகள் தேர்வுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பது முரண்பாடான விதியாகும்.

உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34. இதில் இப்பொழுது 27 பேர் பணியில் இருக்கிறார்கள். ஏழு இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த 27 நீதிபதிகளில் சற்றொப்ப 18 பேர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை என்கிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், கிறித்துவர் இசுலாமியர் ஒருவர் நீதிபதியாக இருக்கிறார்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார்; அவரும் பிராமணர்!

தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் தேர்விற்கு இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டிருந்தால் ஒடுக்கப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு இன்னும் கூடுதல் நீதிபதிகள் கிடைத்திருப்பர். பெரும்பாலும் ஒருவர் சமூகத்தில் வசிக்கும் படிநிலை அவர் கருத்துகளில் வெளிப்படும். முழுமையாக இல்லை என்றாலும் ஓரளவாவது வெளிப்படும். வழக்குகளை அணுகும்போது சமூக அமைப்புத் தேவைகள் – நீதிகள் அவர்கள் உளவியலில் செயல்பட வாய்ப்பளிக்கும். எனவே, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இட ஒதுக்கீடு  அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும்.

பணி ஓய்விற்குப் பிறகு அரசு, தனியார்
வேலைக்கு போகத் தடை வேண்டும்!
-----------------------------------------------------
இந்தியாவில் நீதித்துறை தற்சார்பானது. நீதிபதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. மாவட்ட நீதிபதி வரை உள்ள கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மீது அந்தந்த மாநில உயர் நீதிமன்றம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. இந்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க முடியாது.

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி – அதன் வழியாக மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

அவ்வாறான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கு மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அவையில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அதில் பெரும்பான்மை பெற்றால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு நடவடிக்கை எடுப்பது மிக மிக அரிது.

ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் கட்சிகளுக்கும் கட்டுப்படாமல் தற்சார்பாக, தன்னாட்சி உரிமையுடன் நீதித்துறை செயல்படவேண்டியது. மிக மிகத் தேவை. அதற்காகவே நீதித்துறைக்கு இவ்வாறான தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதிலும் ஆளுங்கட்சியின் அடியொற்றிச் செல்லும் போக்குகள் இருந்ததை இக்கட்டுரையின் முற்பகுதியில் பார்த்தோம்.

நீதிபதிகள் நீதி தவறும் போது, நீதி காக்கும் தனி நபரின் சட்ட வழிப்பட்ட தலையீடுகள், மக்களின் விழிப்புணர்ச்சி, எழுச்சி முதலியவையே நீதித்துறையை சரியான தடத்தில் செல்ல வைக்கும்.

நீதித்துறை தற்சார்புடன் – நீதியின் பக்கம் நின்று செயல்படுவதற்கு மேலும் ஒரு நிபந்தனையைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல ஆண்டுகளாகக் கூறிவருகிறது.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணி ஓய்வுக்குப்பின் வேறு எந்தத் தனியார் பணிக்கும் அரசுப் பணிக்கும் போகத் தடை விதிக்க வேண்டும். அவர்களை எந்த விசாரணை ஆணையத்திற்கும் தலைவராகப் போடத் தடைவிதிக்க வேண்டும். நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிடத் தடை விதிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் ஈடுகட்டும் வகையில் அவர்களின் ஓய்வு அகவையைச் சற்றுக் கூடுதலாக்கலாம். சம்பளம், ஓய்வுதியம் ஆகியவற்றைத் தனிவகைப் படுத்திக் கூடுதலாக்கலாம். இவ்வாறான திறனாய்வுகளையும் மாற்றுத் திட்டங்களையும் இத்தருணத்தில் சிந்திப்போம்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


Saturday, April 24, 2021

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்கக் கூடாது! ஸ்டெர்லைட் நிலம் – கட்டுமானம் அனைத்தையும் தமிழ்நாடு அரசு கையகப்படுத்த வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!



ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்கக் கூடாது! ஸ்டெர்லைட் நிலம் – கட்டுமானம் அனைத்தையும் தமிழ்நாடு அரசு கையகப்படுத்த வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


கொரோனா நோயாளிகளுக்கு வட இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதைப் பயன்படுத்தி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை குறுக்குவழியில் திறப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் துணையை நாடியிருக்கிறது வேதாந்தா நிறுவனம்!

வடஇந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யாமல் காலங்கடத்திவிட்டு, தமிழினத்தை பலி கொடுத்து ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்க இந்திய அரசு சதி செய்கிறது. 

வேதாந்தா என்ற பேரழிவு முதலாளிய நிறுவனத்திற்கு துணை செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்று வாதுரை செய்கிறார். 

அதைவிட நேற்றோடு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பாப்டே தனது கடைசி வேலை நாளில், இந்த வழக்கை விசாரிக்கிறார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என்று வாதாடிய தமிழ்நாடு அரசு வழக்குரைஞரை நோக்கிக் கடும் கோபம் கொட்டுகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறந்தால், மீண்டும் உயிர்ப்பலி தொடரும், உயிர்க்கொல்லி நோய்கள் தீவிரப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் கூறியதை தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் எடுத்துக்காட்டினார். அதற்குத்தான் தலைமை நீதிபதி பாப்டே, தமிழ்நாடு அரசின் மீது சீறுகிறார். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததே ஆக்சிஜன் உற்பத்தி செய்துத் தர தாங்கள் தயார் என்று வேதாந்தா நிறுவனம் கூறியதால் அல்ல! வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை அதனுடைய வருடாந்தர பராமரிப்புப் பணிக்காகத் திறக்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த விசாரணையின் போதுதான் நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தனது ஆலையைத் திறப்பதற்கான குறுக்குவழியாகப் பயன்படுத்த வேதாந்தா நிறுவனம் மனு செய்தது. 

ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு வேதாந்தா நிறுவனமும், மோடி அரசும் சேர்ந்து சதி செய்கின்றன. இதுகுறித்து கவனம் செலுத்தாமல், தலைமை நீதிபதி பாப்டே திறக்க அனுமதித்தால் என்ன எனக் கேட்கிறார். இந்திய அரசு வட இந்திய மாநிலங்களில் ஏன் ஆக்சிஜன் உற்பத்தியில் கவனம் செலுத்தவில்லை, குறைந்தது கொரோனா ஏற்பட்ட கடந்த ஓராண்டுக்குள்ளாவது போர்க்கால வேகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஏன் ஏற்பாடு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேட்க முன்வரவில்லை! 

மாறாக, ஆக்சிஜன் உற்பத்தி தமிழ்நாட்டில் உபரியாக இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய கூடாது என்கிறீர்களா எனத் தலைமை நீதிபதி எதிர்க்கேள்வி கேட்கிறார். ஸ்டெர்லைட் ஆலையில் தமிழ்நாடு அரசு ஆக்சிஜன் உற்பத்தி செய்தால் என்ன என்று கேட்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாடு அரசால் மூடி முத்திரை வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அதன் உரிமை தமிழ்நாடு அரசுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுவிடவில்லை. இவ்வாறான சூழலில், அந்த ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை மட்டும் தமிழ்நாடு அரசு செய்தால் என்ன எனக் கேட்பது – சட்ட முரண்பாடானது என்பதுகூட தலைமை நீதிபதிக்குப் புரியாத ஒன்றா? 

மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் பலமுறை ஆட்சி செய்த பா.ச.க. உயிர்காக்கும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்காதது ஏன்? மத்தியப்பிரதேசம் போன்ற பெரிய மக்கள் தொகை உள்ள மாநிலங்களில் கூட ஒரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய ஏற்பாடோ, இரண்டு – மூன்று மாவட்டத்திற்கு ஒரு ஆக்சிஜன் உற்பத்தி ஆலையோ கூட திறக்காமல் இருந்து, மக்கள் உயிர்ப்பலியாகக் காரணமான இந்திய அரசு, தனது கையாலாகாத்தனத்தை மறைக்கப் பார்க்கிறது. தனது குற்றத்தை மறைத்துத் திசை திருப்புவதற்காக தமிழ்நாட்டு மக்களை பலி கொடுத்து ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கொல்லைப்புற வழியைத் தேடுகிறது. 

தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்கள் யாரும் இதை ஏற்க மாட்டார்கள். தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை இடித்துவிட்டு, அந்த ஆலை அமைந்துள்ள நிலத்தைக் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆலையை அப்படியே வைத்துக் கொண்டு மூடிமட்டும் வைத்திருப்பது மீண்டும் மீண்டும் அந்த ஆபத்துத் தலைதூக்க வழி ஏற்படுத்துகிறது. 

எனவே, தமிழ்நாடு அரசு ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், உடனடியாக அந்த ஆலையின் நிலம் – கட்டுமானம் ஆகியவற்றை கையகப்படுத்த அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அனில் அகர்வாலின் வேதாந்தா குழுவினரை வெளியேற்ற வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, April 19, 2021

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரித்துத் தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கருத்துக்கு - தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!



தமிழ்நாட்டை மூன்றாகப் பிரித்துத் தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கருத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு கருத்துத் தெரிவித்திருக்கிறார். தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் இந்தக் கருத்து முற்றிலும் தமிழினத்திற்கும், தமிழர் உரிமைக்கும் எதிரானது! 

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் கோரிக்கையாக இருந்து வந்தது. அண்ணல் காந்தியடிகள் தலைமையிலான காங்கிரசுக் கட்சிக் கோரிக்கையாகவும் அது அப்போது இருந்தது. 

இதற்கு முன்னோட்டமாகத்தான், சென்னை மாகாணமாக இருந்த காலத்திலேயே 1920களில் காங்கிரசுக் கமிட்டி, மொழிவழி தேசிய இன அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி என்று சீரமைக்கப்பட்டது. 

“மாநிலம்” என்பது வெறும் நிர்வாக அலகு (Administrative Unit) அல்ல – ஆட்சிப்பகுதி (Teritory) அல்ல என்பதை அப்போதே காந்தியடிகள் தெளிவுபடுத்தினார். மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப் படும் என்று இரண்டாம் உலகப்போர் காலத்திலேயே காங்கிரசுத் தலைமை உறுதி கூறியது. ஆயினும், சுதந்திரத்திற்குப் பின்னால் அந்த வாக்குறுதியை மீறியதால், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்டு பல்வேறு தேசிய இனப் பகுதிகளில் கடும் போராட்டங்கள் எழுந்தன. அவற்றின் விளைவாக மாநிலச் சீரமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. 

இந்த மாநிலச் சீரமைப்புக் குழு மாநிலத்தை உருவாக்குவதற்கான அடிப்படைக் கோட்பாடு வளப் பகிர்வா, வளர்ச்சிப் பகிர்வா, மொழிவழி தேசிய இனத் தாயக ஏற்பா என்பது குறித்தெல்லாம் விவாதித்து, மொழிவழி தேசிய இனத் தாயகம் என்பதுதான் மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்கு அடிப்படைக் கோட்பாடாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதடினடிப்படையில் மாநிலங்களை உருவாக்கப் பரிந்துரைத்தது. 

அதனடிப்படையிலேயே 1956 நவம்பர் 1 அன்று மொழிவழி தேசிய இன மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டது; பல்வேறு மாநிலங்களும் உருவாக்கப்பட்டன. 

அன்றைக்கே கூட ஆர்.எஸ்.எஸ்.சும், அன்றைய இந்து மகா சபையும் மொழிவழி மாநிலங்கள் கூடாது, இந்தியா முழுவதையும் “ஜன்பத்” என்ற பெயரால் பல்வேறு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியது.
ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தைத்தான் தன்னுடைய சொற்களில் மருத்துவர் இராமதாசு கூறுகிறார். 

அவ்வாறு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது தீர்க்கப்படாத மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்த பல்வேறு மொழிவழி தேசிய இனங்களும், இனக்குழு மக்களும் தங்களுடைய தாயகம் தனி மாநிலமாக ஏற்கப்பட வேண்டும் என்று போராடி வருகிறார்கள். 

தமிழ்நாட்டை மூன்றாகக் கூறுபோடலாம் என்ற தனது கோரிக்கைக்கு ஆதாரவாக மருத்துவர் இராமதாசு முன்வைப்பதெல்லாம் இவ்வாறான மொழிவழி தேசிய இனங்கள் மற்றும் இனக்குழு மக்களின் கோரிக்கைகள்தான்! 

எடுத்துக்காட்டாக, உத்திரப்பிரதேசத்தில் ஆவத்பிரதேசம், புந்தல்கண்ட் போன்ற கோரிக்கைகள் இருப்பதைக் குறிப்பிடுகிறார். அவத்தி மொழி, அந்த மொழி பயிலும் மக்களின் தாயகம் ஆகியவை தனித்தன்மையானவை. அந்த அவத்தி மொழியை இந்தி மொழி என்று கபளீகரம் செய்து, உத்திரப்பிரதேசத்தில் இணைத்தபோது அவத்தி மொழி பேசும் சற்றொப்ப நான்கரை கோடி மக்கள் தங்களுடைய மொழித் தாயகம் “ஆவத்பிரதேசம்” எனத் தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என்று கோரினர். இன்றும் கோரி வருகின்றனர். இந்தி மொழி இராமாயணம் என்று சொல்லப்படும் துளசிதாசர் இராமாயணமே் அவத்தி மொழியில் எழுதப்பட்டதாகும். அது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டதால், அதை இந்தி என்று சொல்லி விழுங்கிவிட்டார்கள் என்பது அம்மக்களின் ஆவேசக் குரலாக இருக்கிறது. 

அதேபோல், புந்தல்காண்ட் என்பது உத்திரப்பிரதேசத்தில் ஆறு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசத்தில் ஏழு மாவட்டங்கள் அடங்கிய தனித்த இனக்குழு மக்களின் தாயகமாகும். மாநிலச் சீரமைப்பு நடந்த காலத்திலேயே புந்தல்காண்ட் தனி மாநிலமாக உருவாக்குவது பற்றி பரிவோடு பரிசீலிக்கலாம் என்று அண்ணல் அம்பேத்கர் அவர்களே கூறியிருக்கிறார். 

அதேபோல், பீகாரில் மைதிலி மொழி பேசக்கூடிய சற்றொப்ப 3 கோடியே 80 இலட்சம் மக்கள் தங்களுக்கு மிதிலை மாநிலம் தனியாக உருவாக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார்கள். போஜ்புரி மொழி பேசும் சற்றொப்ப 5 கோடி மக்கள், தங்கள் மொழிக்கு அங்கீகாரத்தையும், தங்கள் தேசிய இனத்திற்குரிய போஜ்புரி மாநிலத்தையும் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள். போஜ்புரி மொழிக்கு சாகித்திய அகாதெமியில் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, அவர்களுடைய தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த சிறிய வெற்றியாகும்! 

மருத்துவர் இராமதாசு கூறும் போடோலோந்து கோரிக்கையும் இவ்வாறு இனத்தாயகம் சார்ந்த கோரிக்கையாகும். போடோலாந்து மக்கள் தனிநாடு கோரி போராடி, அது கிடைக்கவில்லை என்ற நிலையில், அசாமிலிருந்து தனி போடோலாந்து மாநிலம் வேண்டுமென்று போராடு கிறார்கள். 

ஏற்கெனவே மருத்துவர் இராமதாசு கூறும் சார்க்கண்ட், உத்தரகண்ட், சத்தீசுகார் ஆகிய மாநில உருவாக்கங்களும் தனித்த பண்பாடு – வரலாறு கொண்ட இனக்குழு மக்களின் தாயக ஏற்பாகும். அதுபோல், தெலங்கானாவும் தனித்த மொழி உச்சரிப்பும், பண்பாடும், வரலாறும் கொண்ட அம்மக்களின் தொடர் போராட்டத்தால் உருவானதாகும். 

இவ்வாறு மருத்துவர் இராமதாசு அவர்கள் எடுத்துக்காட்டியுள்ள அனைத்து வரலாற்று நிகழ்வுகளும் மொழிவழி தேசிய இனங்கள் – இனக்குழுக்கள் தாயகம் படைப்பதற்குத்தான் எடுத்துக்காட்டுகளே தவிர, தாயகத்தைக் கூறுபோடுவதற்கான எடுத்துக்காட்டுகள் அல்ல! 

அவர் கூறுவதுபோல் தமிழர் தாயகமான தமிழ்நாட்டைக் கூறுபோட்டுத் தனித்தனி மாநிலம் ஆக்கினால், வரலாற்றவர்களாக – தாயகம் அற்றவர்களாக தமிழர்கள் மாற்றப்படுவார்கள். அவ்வாறு கூறுபோடப்படும் மூன்று மாநிலங்களிலுமே மிக விரைவில் தமிழர்கள் சிறுபான்மை யினராக மாறிப் போவார்கள். இந்திக்காரர்களும், மார்வாடிகளும், பிற மாநிலத்தவரும் ஆதிக்கம் செய்யும் ஆட்சிப்பகுதியில் உரிமையற்ற கொத்தடிமைகளாக அனைத்துச் சாதி தமிழர்களும் ஒடுக்கப்படுவார்கள். 

மதத்தைக் காட்டி காசுமீரிகளின் வரலாற்றுத் தாயகமான சம்மு காசுமீரை இரண்டு ஒன்றிய ஆட்சிப் பகுதியாக மோடி அரசு சிதைத்தது. மருத்துவர் இராமதாசு, சாதியை முதன்மைக் காரணியாகக் கொண்டு, தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தை மூன்றாகக் கூறுபோடுவதற்கு வழி ஏற்படுத்த முயல்கிறார். இதற்கு நிர்வாகச் சீரமைப்பு, வளர்ச்சிப் பங்கீடு என்று பட்டாடைப் போர்த்தப் பார்க்கிறார். 

மொழிவழி தேசிய இனத் தாயகங்கள் என்ற நிலையில் இருக்கும்வரை தான் அந்தந்த மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தவாவது முடியும். அது இல்லையென்றால், பா.ச.க.வின் ஒற்றை இந்தியா என்ற டாங்கிகளின் பல் சக்கரத்தில் சிக்கி தமிழ்நாடு அழிந்து போகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! 

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டுமென்ற மருத்துவர் இராமதாசு அவர்களின் தமிழினப் பகைக் கருத்துக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.    
    

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 


"ஆர்‌.எஸ்.எஸ். நினைப்பதை இராமதாஸ் பேசுகிறார்!" - 'லிபர்ட்டி தமிழ்' ஊடகத்துக்கு.. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"ஆர்‌.எஸ்.எஸ். நினைப்பதை 

இராமதாஸ் பேசுகிறார்!"


'லிபர்ட்டி தமிழ்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
 ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

"உயிரே போனாலும் ஒரு அடி கூட பின்வாங்க மாட்டேன்" 'ராவணா' ஊடகத்துக்கு.. -ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"உயிரே போனாலும் 

ஒரு அடி கூட பின்வாங்க மாட்டேன்"


'ராவணா' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, April 17, 2021

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயலும் ஜக்கி வாசுதேவின் ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! - தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயலும் ஜக்கி வாசுதேவின் ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவராகவும், பேரியக்கம் உறுப்பு வகிக்கும் தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படும் தோழர் பெ. மணியரசன் அவர்களை தாக்கும் நோக்கத்தோடு, கடந்த மூன்று நாட்களாக ஈஷா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவின் ஆட்கள் முகநூல், ட்விட்டர் ஆகியவற்றில் மிரட்டல் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். 

ஈஷா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவ், தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறையைக் கலைத்துவிட்டு, அதன் பொறுப்பிலுள்ள வரலாற்றுப் புகழ் வாய்ந்த 40,000க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று பரப்புரை செய்து வருகிறார். 

தெய்வத் தமிழ்ப் பேரவையின் பொறுப்பாளர்கள் கூட்டம் 13.04.2021 அன்று காலை சென்னையில் கூடி, ஜக்கி வாசுதேவின் பரப்புரை குறித்து ஆய்வு செய்தது. 

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் உள்ள சில குறைபாடுகளை களைவதற்கு முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அறநிலையத்துறையையே கலைப்பது - தமிழ்நாட்டுக் கோயில்களை தனியாரிடம் ஒப்படைப்பது என்ற ஜக்கி வாசுதேவின் பரப்புரை, சைவம் – வைணவம் – குல தெய்வ வழிபாடு உள்ளிட்ட தமிழர் ஆன்மிகத்திற்கு எதிரான கெட்ட உள்நோக்கம் கொண்டது என இக்கூட்டம் முடிவு செய்தது. 

மாறாக, சைவ சமய ஆகமங்களுக்கு எதிராக தியான லிங்கத்தை அமைத்து, ஆதியோகி என்ற பெயரால் சைவ நெறிக்கு மாறான சிவன் சிலையை நிறுவி, தலைவர் சிலை திறப்பது போல திறப்பு விழா நடத்தியதையும் தெய்வத் தமிழ்ப் பேரவைக் கூட்டம் கண்டித்தது. சைவ சமய நெறிகளுக்கு எதிராகவும், சட்ட மீறல்களிலும் ஈடுபட்டு வரும் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசு ஏற்று நடத்துமாறு வலியுறுத்துவது என்றும் அக்கூட்டம் முடிவு செய்தது. சட்ட மீறல்களில் ஈடுபட்ட ஜக்கி வாசுதேவின் மீது தமிழ்நாடு அரசு குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் இக்கூட்டம் கோரியது. 

இக்கூட்டத்தின் முடிவுகளை விளக்கி, கடந்த 13.04.2021 காலையில் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தோழர் பெ. மணியரசன் பேசினார். 

இதில் ஆத்திரமடைந்த ஜக்கி வாசுதேவின் ஆட்கள் - தோழர் பெ. மணியரசன் அவர்களை தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுப்பது, முகநூல் – ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பொய்ப் பரப்புரை செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். 

அவரது தஞ்சை இல்லத்தைக் குறிப்பிட்டு அவரை வீடு புகுந்துத் தாக்கத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பி வருகிறார்கள். 

மரபுவழிபட்ட இந்து மதத்தைச் சேர்ந்த தோழர் மணியரசன் அவர்களை, டேவிட் என்றும் கிறித்துவர் என்றும் பொய்யுரைகளை வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள். அவர் பிறந்த ஊரையும், அவரது அரசியல் பயணங்களையும் குறிப்பிடத்தெரிந்த அந்த நபர்கள், இவர் கிறித்துவர் அல்லர் - இவர் பெயர் டேவிட் அல்ல என்பது மட்டும் தெரியாமல் இருக்கிறார்கள் என நம்புவதற்கில்லை! 

ஒருவர் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்னால், அவர் மீது தீவிரமான பொய் பரப்புரை மேற்கொள்வது என்ற ஆரியத்துவப் பாசிஸ்ட்டுகளின் வழக்கமான உத்தியைத் தான் இவர்களும் கடைபிடிக்கிறார்கள். 

தோழர் பெ. மணியரசன் கிறித்துவர், நகர்ப்புற நக்சலைட், மதவிரோதி என்பன போன்ற கட்டுக் கதைகளைப் பரப்புவது இதேவகை உத்தியைச் சேர்ந்ததுதான்! 

இவ்வாறு பொய்யுரை பரப்பி இந்து சமூகத்திலிருந்து அவரைத் தனிப்படுத்துவது, அவரது தலைமையிலான தெய்வத் தமிழ்ப் பேரவையின் மீது அவதூறு பரப்புவது என கெட்ட நோக்கத்தோடு ஜக்கி வாசுதேவின் ஆட்கள் இவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள். 

அன்றாடம் மக்கள் நலம் காக்க பொதுவெளியில் வெளிப்படையாக செயல்பட்டு வரும் எங்கள் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் அவர்களுக்கு வந்துள்ள இந்த கொலை மிரட்டல்களை – அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்தி, அவருக்குப் பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

இதுகுறித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் மீது தமிழ்நாடு காவல்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

ஆயினும், இந்தக் கொலை மிரட்டல்கள் – அச்சுறுத்தல்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு எப்போதும் போல் சனநாயக வழியில் தலைவர் பெ. மணியரசன் அவர்களும், அவரது தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரியக்கமும் தொடர்ந்து செயல்படும் என்பதையும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.  


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 


 


Friday, April 16, 2021

"ஈஷா மையத்தை அரசுடைமையாக்குவது சாத்தியமா?" 'ழகரம்' ஊடகத்துக்கு..ஐயா கி. வெங்கட்ராமன் அவர்கள் நேர்காணல்!

"ஈஷா மையத்தை அரசுடைமையாக்குவது சாத்தியமா?"


'ழகரம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் அவர்கள் நேர்காணல்!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, April 15, 2021

"தமிழன்னு சொன்ன தேசவிரோதியா?" ”ழகரம்'' இணைய ஊடகத்துக்கு - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தமிழன்னு சொன்ன தேசவிரோதியா?"


”ழகரம்'' இணைய ஊடகத்துக்கு

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, April 12, 2021

தமிழ்த்தேசிய முன்னோடி தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ - ஐயா பெ. மணியரசன் கட்டுரை!



தமிழ்த்தேசிய முன்னோடி
தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கட்டுரை!

தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ அவர்களை இளந் தமிழ்த்தேசியர்கள் அறிந்து கொள்வது மிகமிகத் தேவை. தமிழ்த்தேசியத்தின் முன்னோடிச் சான்றோர்களில் அண்ணல்தங்கோ அவர்கள் குறிப்பிடத் தக்கவர்.

நம்முடைய தமிழ்ச் சமூகத்தில் சரியான சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் தோன்றினும் அவர்கள் மக்கள் தலைவர்களாக வளர்ச்சியடையாமற் போனது அவர்களுக்கான இழப்பன்று. தமிழினத்தின் இழப்பு!

பிறமொழிக் கலப்பின்றி தனித்தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அண்ணல் தங்கோ! தமிழ்நாடு விடுதலை அடையவேண்டும் என்று முழங்கியவர்.

இன்று (12.04.2020) அண்ணல்தங்கோ அவர்களின் பிறந்தநாள். அவர் 1904-ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். அவர் 1974 ஆம் ஆண்டு சனவரி 4-ஆம் நாள் இறந்த போது, அவர் பெருமையை அறிஞர் பெருமக்களும் தமிழுணர்வுப் பெரியோர்களும் தெரிவித்த இரங்கல் செய்திகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் அப்போது (04.01.1974) எழுதிய இரங்கல் பா:

அண்ணல்தங்கோ அண்ணல்தங்கோ
சேயவன் வழுத்தொடு செந்தமிழ் பேணித்
தூய தமிழ்க்கா வலனெனத் தோன்றித்
தேயப் பிரிவைத் தீர்க்கத் துணிந்த
அண்ணல்தங்கோ அண்ணல்தங்கோ
தன்முயற் சியினால் தன்னை உயர்த்தி
மன்னியல் விடுதலை மாண்ட மறவ
உள்ளுவ தெல்லாம் உயர்வே யுள்ளித்
தெள்ளிய கொள்கை திறம்பாச் சான்றோய்
நீயெமை மறப்பினும் நினைமற வேமே
சேயரும் கேளிரும் நேயரும் ஆயேம்
மாயிரு ஞாலம் மன்னிய காலே!

“தெள்ளிய கொள்கை திறம்பாச் சான்றோய்” என்று பாவாணர் பாராட்டினார். மிகச்சரியான தெளிவான கொள்கைகள் கொண்ட அண்ணல்தங்கோ, கொள்கையை விட்டு விலகாத இலட்சியத் தமிழர் என்று பாவாணர் பாராட்டுகிறார்.

அண்ணல்தங்கோவின் தெளிவான, சரியான கொள்கைகள் யாவை? தனித்தமிழ், தனித்தமிழ்நாடு, எண்ணு வதெல்லாம் உயர்வாய் எண்ணும் பண்பு போன்றவை!

“தூய தமிழ்க் காவலன்”, தேயப் பிரிவைத் (தேசப் பிரிவை) தீர்க்கத் துணிந்த – மன்னியல் விடுதலை மறவன்” என்றெல்லாம் பாவாணர் போற்றுகிறார்.

1974-இல் அண்ணல்தங்கோ காலாமான போது, மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர்  டி.ஆர்.சுந்தரம் பிள்ளை அவர்கள் அண்ணல் தங்கோ இல்லத்திற்கு எழுதிய இரங்கல் கடிதம் மிகவும் குறிப்பிடத் தக்கது.

“ அருமைச் சகோதரர் அண்ணல்தங்கோ அவர்கள் இறந்து விட்டார் என்ற தபாலை பார்த்ததும் திடீர் அதிர்ச்சியடைந்தேன். கண்ணீர் வடித்தேன். உடம்பு சிலிர்த்தது. நடுக்கம் கொண்டேன். இந்தக் கடிதம் எழுத்து எழுத்தாகக் கூட்டி எழுதுகிறேன்” என்று கூறியுள்ளார் டி.ஆர்.சுந்தரம் அவர்கள்.

அண்ணல்தங்கோ அவர்கள், டி.ஆர்.சுந்தரம், ஜி.டி.நாயுடு உள்ளிட்ட முகாமையானவர்களிடம் கலந்து பேசிய ஒரு செய்தியை டி.ஆர்.சுந்தரம் மறை பொருளாகத் தமது இரங்கல் கடிதத்தில் குறிப்பிடுகிறார்:

“இங்கு வந்து தன் இயக்கத்தைப் பற்றிக் கோவையில் பேச வேண்டும், பொதுக்கூட்டம் நடத்த வேண்டும், மேன்மையுற்ற ஜி.டி.நாயுடு அவர்களைக் கண்டு எல்லாம் நடத்த வேண்டும் என்று ஒரு மாதத்திற்கு முன் எழுதியிருந்தார்.”

டி.ஆர்.எஸ், ஜி.டி.நாயுடு போன்றவர்களிடம் அண்ணல்தங்கோ நேரடியாகவும் கடிதம் வாயிலாகவும் பேசிய முகாமையான செய்தி, தமிழ்நாடு விடுதலைக்கான இயக்கம் தொடங்க வேண்டும் என்பதுதான். இதனை இத்தனை உறுதியாக நான் கூறுவதற்குக் காரணம் ஜி.டி.நாயுடு  அவர்கட்கும் அண்ணல்தங்கோ அவர்கட்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தை அண்ணல் தங்கோ பெயரன் அருட்செல்வன் வழியாக அறிந்ததுதான்! அண்ணல் தங்கோ அவர்கட்கு ஜி.டி.நாயுடு அர்கள் எழுதிய நீண்ட கடிதத்தைப் பார்த்தேன். அதில் தனித்தமிழ்நாடுக் கோரிக்கையை இருவரும் ஒத்த கருத்துடன் பகிர்ந்து கொண்ட செய்தி உள்ளது.

தனித் தமிழ்நாடு கோரிக்கைக்காக பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஜி.டி.நாயுடு அவர்களின் உதவியை நாடியதும், ஜி.டி.நாயுடு அவர்கள் உதவி செய்ய ஒப்புக் கொண்டதும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் எழுத்துகள் வழி ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான்.

அண்ணல்தங்கோ அவர்கள் வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் காலமான அதே 04.01.1974 அன்று தான் கோவையில் ஜி.டி.நாயுடு அவர்களும் காலமானார்! என்னே துயரம்!

அண்ணல்தங்கோ அவர்கள் பெயரை நான் முதல் முதலாக அறிந்து கொண்டது பாவாணர் அவர்கள் வழியாகத் தான். பாவாணர் – பாவலரேறு ஆகியோர் தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்க் கழகத்தில் நான் செயல்பட்ட போது, திருச்சி அசோகா விடுதியில் பாவாணர் தலைமையில் உ.த.க.வின் செயல்பாட்டாளர் பேரவை நடந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது அண்ணல்தங்கோ அவர்களின் தனித்தமிழ், தனித்தமிழ்நாடு இலட்சியம், அவர் பட்டாள மிடுக்குடன் வணக்கம் சொல்லும் முறை முதலியவற்றைப் பாராட்டிப் பேசினார் பாவாணர்.

தனித்தமிழ் ஆர்வம்

அண்ணல்தங்கோவுக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுவாமிநாதன், தந்தையார் பெயர் முருகப்பனார். தாயார் பெயர் மாணிக்கம் அம்மாள். அவர் ஊர் குடியாத்தம். சுவாமிநாதன் என்ற பெயரை அண்ணல் தங்கோ என்று தனித்தமிழில் மாற்றிக் கொண்டார். தம் பெயரை மாற்றியது மட்டுமின்றி மற்றும் பலர்க்கும் தமிழில் பெயர் மாற்றினார். அவர்களில் சிலர்:

தி.மு.க. தலைர்களில் ஒருவரான அரங்கசாமிக்கு அரங்கண்ணல்; தி.க. தலைவராகப் பின்னால் வந்த காந்திமதிக்கு - மணியம்மை; தி.மு.க தலைவர்களில் ஒருவரான சி.பி.சின்ராஜ் – சி.பி.சிற்றரசு; திருச்சி குளித்தலை தனபாக்கியம் – பொற்செல்வி (தி.மு.க.)…. இவ்வாறு பல பேருக்கு அண்ணல் தங்கோ மாற்றிய தமிழ்ப் பெயர்கள் நிலைத்துவிட்டன.

நிலைக்காமல் போன பல பெயர்கள் உண்டு. மு.கருணாநிதிக்கு - அருட்செல்வன், சி.பா.ஆதித்தனார்க்கு – சி.பா.பகலவனார், கிருபானந்த வாரியார்க்கு – அருளின்பக்கடலார்.

ஆரிய எதிர்ப்பு

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரசுப் போராளியாக அரசியலில் நுழைந்தவர் அண்ணல் தங்கோ. பல கட்டங்களில் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு மொத்தம் 5½ ஆண்டுகள் சிறையில் இருந்தார். காங்கிரசுக்காரராக இருந்தபோதிலும் 1927-இல் தமது திருமணத்தில் பிராமணப் புரோகிதரையும் சமற்கிருதத்தையும் விலக்கி, தாமே தலைமை தாங்கி சிவமணி அம்மையாரை மணம் முடித்தார்.
தமது கடித அட்டைத் தலைப்பில் “உள்ளுவம் வள்ளுவம் தள்ளுவம் ஆரியம்” என்று அச்சிட்டுக் கொண்டார்
.
பெரியார், அண்ணா ஆகியோரோடு சேர்ந்து தன்மதிப்பு இயக்கத்திலும் செயல்பட்டிருக்கிறார். பெரியாரின் “திராவிட” இனவாதத்தை மறுத்து அவரிடமிருந்து வெளியேறிவிட்டார்.

“தமிழ்நிலம்” என்ற திங்கள் இதழை இலக்கிய ஏடாக, இனவிடுதலைத் தாளிகையாகத் தொடங்கினார். பின்னர் அவ்விதழைக் கிழமை(வார) ஏடாக மாற்றினார்.
பராசக்தி, பெற்ற மனம், பசியின் கொடுமை, கோமதியின் காதலன் ஆகிய திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள நூல்களில் சில:

1. அறிவுப் பா 
2. தமிழ் மகள் தந்த செய்தி அல்லது சிறையில் நான் கண்ட கனவு 
3. அண்ணல் முத்தம்மாள் பாட்டு 
4. மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா? 

தமிழர் திருநாள்

தைப் பொங்கல் நாளைத் தமிழர் திருநாள் என்ற பெயரில் இலக்கிய அரங்குகள் நடத்திக் கொண்டாடினார். வேலூரில் அண்ணல்தங்கோ நடத்திய தமிழர் திருநாள் விழாக்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார், பாவாணர், மு.வ, க.அப்பாத்துரையார், கலைஞர் மு.கருணாநிதி, கி.ஆ.பெ.விசுவநாதம், சதாசிவப் பண்டாரத்தார், திருக்குறளார் முனுசாமி முதலிய அறிஞர்கள் உரையாற்றினர்.

தமிழ்த்தேசியத்தின் மூலவர்கள்

முறையான கல்வி நிலையங்களில் கற்காமல் தன் முயற்சியில் கற்றறிந்த தமிழ்ச் சான்றோராக விளங்கினார் குடியாத்தம் முருகப்பனார் அண்ணல்தங்கோ! தமிழறிஞர்களுடனும் நல்ல உறவு; தமிழ், தமிழ்நாட்டுத் தனிஉரிமையில் அக்கறையுள்ள ஜி.டி.நாயுடு, மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர் சுந்தரம் போன்றவர்களுடனும் கொள்கை வழிப்பட்டு நல்ல நட்பு! துல்லியமான தமிழ்த் தேசிய வரையறுப்பு!

இப்படிப்பட்ட அண்ணல்தங்கோ அவர்களை இன்றையத் தலைமுறைத் தமிழர்கள் எத்தனை பேர் அறிந்து வைத்திருப்பார்கள்? 1916-இல் தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக விளங்கி, தன் குடும்பத்தினரை சிறைக்கனுப்பி, தமிழ்நாடு தமிழர்க்கே தீர்மானத்தை முன் மொழிந்த தமிழ்த்தேசியர் மறைமலை அடிகளாரை எவ்வளவு பேர் அறிவர்? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தது மட்டுமின்றி, சரியான மொழிக் கொள்கை உள்ள தமிழ்த்தேசியராக விளங்கிய நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுநாதம், 1965 இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் பாதுகாப்பு சட்டத்தில் சிறை சென்ற வரும், தமிழினக் கொள்கையில் ஊன்றி நின்றவருமான பேராசிரியர் சி.இலக்குவனார்  போன்றோரை எத்தனை பேர் அறிவர்? 

இவர்களையும் இவர்களைப் போன்றவர்களையும் இளந்தலைமுறைத் தமிழர்கள் அறிய வேண்டும். இவர்கள் தங்களின் இலட்சியம் நிறைவேறாமல் மனக் காயத்துடன் மாண்டார்கள்! இவர்களின் இந்த மனக் காயத்தை ஒவ்வொரு இளந்தமிழனும் தமிழச்சியும் தங்கள் நெஞ்சில் பட்ட காயமாக ஏந்த வேண்டும்! காயம் பட்ட புலிக்கு ஏற்படும் சினமும் சீற்றமும் உங்களுக்கு உருவாக வேண்டும்!

நம் முன்னோர்களின் இலட்சியத்தை நாம் நம் காலத்தில் நிறைவேற்றுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதி ஏற்கவேண்டும். இவ்வுறுதியேற்பே அண்ணல்தங்கோ போன்ற தமிழ்த்தேசிய முன்னோடிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்!
 

கண்ணோட்டம் இணைய இதழ்


 


Wednesday, April 7, 2021

"தேர்தல் மோகம்!" கட்டுரை



"தேர்தல் மோகம்!"

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


வாக்குரிமை உள்ள மக்கள் நாயகமே உயர்ந்த உரிமை வடிவம் என்று மொட்டையாக நம்பிவிடக் கூடாது. வாக்கெடுப்பு யாருக்கிடையே நடக்கிறது, எப்படி நடக்கிறது என்பதை வைத்துதான் அதன் பொருத்தப்பாட்டைக் கணிக்க முடியும்! 

ஒரு தேசிய இனத்தின் ஆட்சிக்கு, அந்தத் தேசிய இனத்திற்குள் வாக்கெடுப்பு நடந்தால், அது சனநாயகம்! அந்தத் தேசிய இன அதிகாரத்திற்கு அயல் இனத்தாரும் வாக்களிக்க வேண்டும் என்றால் அது மக்கள் நாயகம் அன்று; மக்கள் நாயகம் போல் மயக்கும் ஏகாதிபத்திய நாயகம்! 

தமிழ்த்தேசிய இனத்தின் உயர் அதிகாரம் - இறுதி அதிகாரம் 1947 வரை இலண்டனில் இருந்தது. 1947க்குப் பின் அந்த அதிகாரம் புதுதில்லிக்கு வந்தது. புதுதில்லி நாடாளுமன்றம்தான் தமிழ்நாட்டின் வரி வருமானத்தைக் கையாளும்; தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதில் அதிகாரம் இல்லை! புதுதில்லி நாடாளுமன்றம்தான் தமிழ்நாட்டின் கல்வி, நிலம், வேளாண்மை, தொழிற்சாலை, மருத்துவம், மின்சாரம் அனைத்தையும் தீர்மானிக்கும்; செயல்படுத்தும்! இத்துறைகளில் இந்திய அரசுக்கு முகவராக இருந்து தமிழ்நாடு அரசு செயல்படும்! 

மூடி மறைத்துச் சொன்னால், தமிழ்நாடு அரசு புதுதில்லியின் முகவர்; நேரடியாகச் சொன்னால், கங்காணி! தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைக் கங்காணி! 

தலைமைக் கங்காணி பதவியை அடைந்திட எவ்வளவு மோகம் - எத்தனை போட்டி! கங்காணி முதலமைச்சர், அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியின் மீது இத்தனை மோகம் வரக் காரணம் என்ன? இவர்கள், தங்களை ஓர் இனத்தின் பிரதிநிதியாய்க் கருதாமல் தனிநபராய் - தன் குடும்ப உறுப்பினராய் சுருக்கிப் பார்த்து, தனக்கு இந்தப் பதவி வாழ்வில் கிடைக்க முடியாத “வரம்” என்று கருதுகிறார்கள்.

இரவு பகலாக உழைக்கிறார்கள்! மக்கள் வாழ்வுரிமைக்கு, உரிமைப் பாதுகாப்பிற்கு இவ்வாறு இத்தலைவர்களும், இவர்களின் தொண்டர்களும் இரவு பகலாக உழைத்ததுண்டா? இல்லை! 

செய்திக்கு வருவோம். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரங்கள் அனைத்தும் புதுதில்லி நாடாளுமன்றத்தில் குவிக்கப்பட்டுள்ளன. அதன் மக்களவையில் 543 உறுப்பினர்கள். அதில் தமிழ்நாட்டிற்கு 39 பேர் - புதுவைக்கு ஒருவர்! ஆக மொத்தம் 40 பேர். 543இல் 40 என்பது மிகவும் அற்பமான சிறுபான்மை! (Insignificant Minority). நாடாளுமன்றத்தில் நம்மால் ஒரு மாற்றமும் ஒரு உரிமை மீட்பும் கொண்டு வர முடியாது. நம் உரிமைகளைப் பலி கொள்ளும் பீடம் அது! 

நாம் அற்பச் சிறுபான்மை ஆக்கப்பட்டது எப்படி? பீரங்கிக் கொலைகளால், மரங்களில் தொங்கவிடப்பட்ட தூக்குக் கயிறுகளால், இந்த மண்ணிலும், அந்தமானில் கட்டப்பட்ட சிறைகளால் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு இனங்களை - பல்வேறு நாடுகளை அடிமைச் சங்கிலிகளால் பிணைத்துப் பிரித்தானியர் உருவாக்கியது இந்தியா! இந்தியாவின் உண்மையான தந்தைமார் இராபர்ட் கிளைவ்களே! 

தொடர்பில்லாத தொலைதூரத் தேசங்களுடன், இனங்களுடன் தமிழர்களை - தமிழ்நாட்டைப் பிணைத்து விட்டார்கள். அவர்களோடு நம்மைச் சேர்த்துக் கணக்கிடும்போது நாம் அற்பச் சிறுபான்மை! நம் மக்கள் தொகை இப்போது 8 கோடி! பிரிட்டன், பிரான்சு மக்கள் தொகையைவிட அதிகம்! ஆனால், செயற்கையாகச் சிறுபான்மை ஆக்கப்பட்டு விட்டோம். 

இரண்டு கோடிக்கும் குறைவாக உள்ள சிங்களர்கட்கு ஐ.நா. மன்றத்தில் இடம் உள்ளது. ஒரு கோடிக்குக் கீழே மக்கள் தொகை கொண்ட நாடுகள் நூற்றுக்கும் மேலே! அவையெல்லாம் ஐ.நா. மன்றத்தில் வீற்றிருக்கின்றன. 

நாடாளுமன்ற மக்களவையில் இந்திக்காரர்களுக்கு 250 உறுப்பினர்கள்; இந்தி மாநிலங்கள் 10 இருக்கின்றன. இந்திய நடுவண் அரசின் அதிகாரங்கள் சாரத்தில் இந்தி மாநிலங்களின் அதிகாரங்களே! 

இந்தி மாநிலங்களோடு ஒத்துப்போகும் மாநிலங்கள் இருக்கின்றன. ஆனால், அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகியவை தமிழ்நாட்டுடன் இணங்கிப் போவதில்லை. முடிந்தவரை தமிழ்நாட்டிற்கு எதிராகவே செயல்படுகின்றன. 

நாடாளுமன்றத்தின் - பெரும்பான்மைச் சனநாயகம் என்பது - தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எப்போதும் கிடைக்காது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு சனநாயகம் என்பது தமிழர்களின் உரிமைகளுக்கான - “சனநாயகத் தூக்குக் கயிறு”! நாடாளுமன்றம் என்பது, தமிழர்களுக்கு சனநாயகச் சிறைச்சாலை! 

நாடாளுமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட எந்தப் பொருள் மீதும் தமிழ்நாடு சட்டப்பேரவை சட்டம் இயற்ற முடியாது. 

தமிழ்நாடு சட்டமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்து, மாநில உரிமைகளை மீட்க முடியுமா? 

நடுவண் அரசு பறித்துக் கொண்ட மாநில உரிமைகளை மீட்பதற்கு சட்டமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது! தீர்மானங்கள் நிறைவேற்றலாம். அவை தில்லிச் சுல்தான்களின் மேசை அருகே உள்ள குப்பைக் கூடைக்குப் போகும். 

234 சோதாக்கள் கைதூக்கி மசோதாக்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று தில்லிச் சுல்தான்கள் கேலிச்சிரிப்பு சிரிப்பார்கள். 

கொள்கை உறுதியுள்ள ஒரு கட்சி ஆளுங்கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சட்டப்பேரவையை - தமிழ்நாடு அரசை உரிமை மீட்புப் போராட்டக் கருவியாக மாற்றக் கூடாதா? அப்படிப் போராட்டக் களமாக சட்டப்பேரவையைத் தொடர்ந்து மாற்றினால், அந்த ஆட்சியை இந்திய அரசு கலைக்கும்! 

கங்காணி ஆட்சியை இழக்கக் கட்சித் தலைவர்களும், அவர்களின் தளபதிகளும், உறுப்பினர்களும் விரும்ப மாட்டார்கள்! மக்களுக்கு இலவசங்கள் கொடுத்தோம், இன்னும் கொடுப்போம் என்று கூறி, கங்காணிப் பதவியில் ஒட்டிக் கொள்ளவே விரும்புவார்கள்! அடிமை அதிகாரத்திற்கு, தமிழ்நாட்டுக் கட்சிகளிடையே போட்டி! இதுவே மக்கள் நாயகத்தின் மாண்பு என்று கயிறு திரிப்பார்கள். 

மாநகராட்சி மேயர் அளவிற்குக் குறைக்கப்பட்டாலும் அந்த முதலமைச்சர் பதவி தனக்கு வேண்டும் என்பதே கங்காணி உளவியல்! இனப்பெருமிதம், இன உரிமை ஆகியவற்றிற்கு  மாறாக, தனிநபர் ஆதாயம், தனிநபர் பிரபலம் என்பதே கங்காணிகளின் உளவியல்! 

அடைந்தால் திராவிடநாடு; இல்லையேல் சுடுகாடு என்று முழங்கிய தி.மு.க. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டது மட்டுமின்றி, இந்திய ஏகாதிபத்தியக் கட்சிகளான காங்கிரசு மற்றும் பா.ச.க.வுடன் மாறிமாறிக் கூட்டணி வைத்து நடுவண் அமைச்சரவையிலும் சேர்ந்து தமிழின உரிமைகளைக் காட்டிக் கொடுத்தது. காவு கொடுத்தது. தி.மு.க.விலிருந்து பிரிந்த அ.இ.அ.தி.மு.க. மேலும் தீவிரமாகத் தமிழின உரிமைகளைப் பலி கொடுத்ததைப் பார்த்தோம்! 

சம்மு காசுமீரில், இனத் தன்னுரிமைப் போராளியாய் விளங்கிய சேக் அப்துல்லா கடைசியில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து, ஆட்சி அமைத்துக் காலியாகிப் போனதை அறிவோம். இப்போது சம்மு காசுமீரின் மாநில உரிமையும் பறிக்கப்பட்டு விட்டது. இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக இந்திய ஏகாதிபத்தியம் மாற்றிவிட்டது. 

மிசோரம் விடுதலைக்குப் போர்ப்படை உருவாக்கியப் போராடிய லால் டெங்கா காங்கிரசுடன் கைகோத்து கூட்டணி ஆட்சி அமைத்து, காலியாகி சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்து ஓய்ந்து ஒதுங்கிப் போனார். 

மக்களைக் கெடுத்து விட்டார்கள்
---------------------------------------------
தமிழ்நாட்டு மக்களின் கணிசமானவர்களைத் தற்சார்பற்றவர்களாக - போர்க்குணம் அற்றவர்களாக - இலவசங்களை எதிர்பார்க்கும் கையேந்திகளாகத் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அவற்றின் கையடக்கக் கட்சிகளும் மாற்றிவிட்டன! அடையாளப் போராட்டங்கள் நடத்தி அரசியல் நடத்தும் நாடகக் கம்பெனிகள் அவை! நோகாமல் நொங்கு எடுக்கும் வாய்வீச்சப் பாசறைகள்! 

இந்திய ஏகாதிபத்தியச் சட்டகம் மாநிலத் தேர்தல் கட்சிகளைத் தனது ஆதிக்கத்திற்குக் கீழ்ப்பட்ட கங்காணிகளாகக் கட்டமைத்துக் கொள்கின்றது. 

அடுத்து, தேர்தல் கட்சிகள் பெருங்குழுமங்களாக (கார்ப்பரேட்டுகளாக) மாறி விட்டன! மக்களின் வரிப் பணத்தைக் கொள்ளையடித்து, பெரும்பெரும் முதலாளிகளாக - கட்சித் தலைவர்கள் வலம் வருகிறார்கள். இலவசங்கள் வழங்குவது, வாக்குகளுக்குப் பணம் கொடுப்பது போன்றவற்றின் மூலம் மக்களை ஊழல்வாதிகளாக மாற்றுவதே தங்கள் கொள்ளைக்கும் தலைமைக்கும் பாதுகாப்பு என்பது இத்தலைவர்களின் உளவியல் கண்டுபிடிப்பு! 

தமிழர்களே, நமது தேசிய இன உரிமைகளை மீட்கத் தேவைப்படுவது தி.மு.க. - அ.தி.மு.க. அல்ல; அவற்றின் மறுவடிங்களும் அல்ல. இறையாண்மை மீட்பு வெகுமக்கள் எழுச்சி இயக்கம்! 

நமக்குத் தேவை தி.மு.க. - அ.தி.மு.க. தலைவர்களின் மறுபிறவிகள் அல்ல! ஆயுதம் ஏந்தாத பிரபாகரன்கள்; தமிழ்த்தேசியக் காந்திகள்; தமிழ்த்தேசிய மண்டேலாக்கள்!

( தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் –  2021 ஏப்ரல் மாத இதழின் ஆசிரியவுரை இது!)


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT