உடனடிச்செய்திகள்

Sunday, April 29, 2018

பெண் ஊடகத்தாரின் தன்மானத்தைத் தாக்கிய எஸ்.வி. சேகரை இன்னும் ஏன் கைதுசெய்யவில்லை? சனநாயக வெளிப்பாடாக ஆர்ப்பாட்டம் செய்த ஊடகத்தார் மீது போட்ட வழக்கைக் கைவிட வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

பெண் ஊடகத்தாரின் தன்மானத்தைத் தாக்கிய எஸ்.வி. சேகரை இன்னும் ஏன் கைதுசெய்யவில்லை? சனநாயக வெளிப்பாடாக ஆர்ப்பாட்டம் செய்த ஊடகத்தார் மீது போட்ட வழக்கைக் கைவிட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
நிர்மலாதேவி என்ற கல்லூரிப் பேராசிரியர் மீது பாலியல் தரகராகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் வழக்குப் பதிந்து சிறைப்படுத்தப்பட்ட பின்னணியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது அவ்வழக்கு தொடர்பான ஐயப்பாடுகள் பேசப்பட்டன. அதற்காக அவசரம் அவசரமாக ஆளுநர் புரோகித் செய்தியாளர் கூட்டம் நடத்தித் தன்னிலை விளக்கம் தந்தார்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் செய்தியாளர் கேள்வி கேட்டபோது, அச்செய்தியாளரின் கன்னத்தைத் தடவிப் பேசினார் புரோகித்! “எனது அனுமதியில்லாமல் என்னைத் தொட்டது, அருவருப்பைத் தந்தது!” என்று அப்பெண் செய்தியாளர் சுட்டுரையில் கண்டனம் வெளியிட்டார். உடனே ஆளுநர் புரோகித் வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட்டார்.

இந்நிலையில், பா.ச.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் பெண் செய்தியாளர்கள் பாலியல் பரிமாற்றம் செய்துதான் பதவி உயர்வு பெறுகிறார்கள் என்று தமது வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஊடகத்துறையில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் எஸ்.வி. சேகர் வீட்டின் முன் 20.04.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்பொழுது ஒரு சிலர் வீட்டின் மீது கல்லெறிருந்திருக்கிறார்கள். இந்த கல்லெறி நிகழ்வை நாம் ஆதரிக்கவில்லை!

ஆனால், அந்த ஒரு செயலைப் பயன்படுத்திக் கொண்டு காவல்துறை அவர்கள் மீது கொலை மிரட்டல், கலவரத்தைத் தூண்டுதல், தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்தல் என கற்பனையாகக் குற்றச்சாட்டுகளைப் புனைந்து ஐந்து பிரிவுகளில் வழக்குப் போட்டுள்ளார்கள். அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவர்களில் தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றுவோர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வெளியேற்ற வேண்டும் என்ற அரசியல் நெருக்குதலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பொதுவாகவே, பா.ச.க.வினர் ஊடகங்களைக் கட்டுப்படுத்த ஒளிவு மறைவின்றி செயல்படுகிறார்கள். தாலி தேவையா என்ற விவாதம் நடந்தபோது, “புதிய தலைமுறை” தொலைக்காட்சி நிலையத்தின் மீது “டிபன்பாக்ஸ்” வெடிகுண்டு வீசினார்கள். ஆரியத்துவா மதவெறி பற்றி தொலைக்காட்சிகளில் விவாதம் நடந்தால், பா.ச.க. அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அத்தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது.

பா.ச.க.வைச் சேர்ந்த எஸ்.வி. சேகர் ஒரு தீவிரமான ஆரியத்துவாவாதி! ஆண் – பெண் சமத்துவத்திற்கும், சாதி ஆதிக்கமற்ற சமூக சமத்துவத்திற்கும் எதிரானவர். அவர் ஊடகத்தில் பணியாற்றும் பெண்களை இழிவுபடுத்திப் பேசியதற்கு எதிராகக் காவல்துறை தானே முன் வந்து வழக்குப் பதிவு செய்யவில்லை! அவர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்த ஊடகத்துறையினரைக் கைது செய்து, வழக்குப் போட்ட பின், “எஸ்.வி. சேகர் மீது ஏன் வழக்குப் போடவில்லை” என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டது. அதன்பிறகுதான், எஸ்.வி. சேகர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனால், அவரை உடனடியாகத் தளைப்படுத்த காவல்துறை முனையவில்லை!

அவர் முன் பிணை கேட்டார். சென்னை உயர் நீதிமன்றம் முன் பிணை கொடுக்க மறுத்துவிட்டது. இந்நிலையில், இவ்வறிக்கை வெளியிடும் இத்தருணம் வரை எஸ்.வி. சேகர் கைது செய்யப்படவில்லை. இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் பாதுகாப்பில் அவர் கைதாகாமல் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

பெண்களை பாலியல் அடிப்படையில் இழிவுபடுத்தி, முகநூலில் செய்தி வெளியிட்ட எஸ்.வி. சேகர் மீது பா.ச.க. நடவடிக்கை எடுக்குமென்று அதன் தமிழ்நாடு தலைவர் தமிழிசை சௌந்திரராசன் சொன்னாதே, அது என்னாயிற்று? பா.ச.க.விற்கு அரசியல் ஒழுக்கமும் இல்லை, ஆன்மிக ஒழுக்கமும் இல்லை.

தமிழ்நாடு அரசு, உடனடியாக எஸ்.வி. சேகரைக் கைது செய்ய வேண்டும். அதேவேளை, சனநாயக வெளிப்பாடாக - தன்மானம் காக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊடகத்துறையினர் மீது போட்டுள்ள வழக்கைக் கைவிட்டு ஊடகத்துறையினருடன் இணக்கப் போக்கைக் கடைபிடிக்க முன் வர வேண்டுமென்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

மெரினாவில் திரள்வோம்!

மெரினாவில் திரள்வோம்!
இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்று திரண்டு ஏறுதழுவல் உரிமையை மீட்ட புரட்சிக் களமான மெரினா கடற்கரையில், காவிரி உரிமைக்காக இன்று (ஏப்ரல் 29) மீண்டும் ஒன்று கூடல் நடைபெறுகின்றது.

சென்னை மெரினா கடற்கரை - உழைப்பாளர் சிலை அருகில் மதியம் 2 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஒன்றுகூடலை தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்துள்ளது.

இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது! தமிழின உணர்வாளர்களும், தமிழ்த்தேசிய ஆற்றல்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறது!

வாருங்கள் தமிழர்களே! 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com




Sunday, April 22, 2018

ஏப்ரல் 27 - கல்லணையில் கூடுவோம்!

ஏப்ரல் 27 - கல்லணையில் கூடுவோம்!
காவிரி உரிமையை மீட்க - உறுதி ஏற்பு ஒன்று கூடலை, வரும் ஏப்ரல் 27 அன்று கல்லணையில் - காவிரி உரிமை மீட்புக் குழு நடத்துகிறது.

இந்திய அரசே! - காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு, தமிழ்நாடு அரசே - காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய், காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்ப் பேரரசன் கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணையில் ஏப்ரல் 27 வெள்ளி காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த ஒன்றுகூடலில் - தமிழின உணர்வாளர்களும், உழவர் பெருமக்களும் பெருந்திரளாக வர வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு அன்புரிமையுடன் அழைக்கிறது!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

Thursday, April 19, 2018

இன்று மதியம் - சென்னையில் தொடங்குகிறது நீட் தேர்வு நிரந்தர விலக்கு - மாநாடு!

இன்று மதியம் - சென்னையில் தொடங்குகிறது நீட் தேர்வு நிரந்தர விலக்கு - மாநாடு!
உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க, தமிழ்நாடு - புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள் - இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கான நீட் தேர்வு நிரந்தர விலக்க மாநாடு, இன்று (19.04.2018) சென்னையில் நடைபெறுகின்றது. 

சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரை நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி - இயக்கத் தலைவர்கள் பங்கேற்று வெவ்வேறு அமர்வுகளில் நீட் தேர்வு குறித்த கருத்துரை வழங்குகின்றனர். மாநாட்டை, இயக்குநர் வ. கௌதமன் ஒருங்கிணைக்கிறார். 

நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு தமிழின உணர்வாளர்களும் பங்கேற்கின்றனர். அனைவரும் வருக! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

Tuesday, April 17, 2018

காசுமீர் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு - மதுரையில் மகளிர் ஆயம் ஆர்ப்பாட்டம்!

காசுமீர் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு - மதுரையில் மகளிர் ஆயம் ஆர்ப்பாட்டம்!

அனைவரும் வருக.!

மகளிர் ஆயம்
தொடர்புக்கு 9486686845, 9486958282, 9486107087

Thursday, April 12, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது முயற்சி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது முயற்சி.
தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழு, தமிழர் கலை இலக்கிய பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டக்காரர்களை கைது செய்த போலீசார், அவர்களை பல்லாவரத்தில் உள்ள கிருஷ்ணா திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய அதிவிரைவு படையினர் மண்டபத்திற்கு வந்துள்ளனர். அப்போது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை தவிர, மற்றவர்களை வெளியேற்ற போலீசார் மிரட்டி வருகின்றனர்.
சீமானை கைது செய்யவிட மாட்டோம் என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு, தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் அமைப்பாளர் மருத்துவர் பாரதிச்செல்வன் உள்ளிட்டோர் மண்டபத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறையின் வன்மம்!

காவல்துறையின் வன்மம்!
 காவிரி உரிமை மறுக்கப்பட்டு ஒட்டுமொத்தத் தமிழ்நாடே வேதனையிலும், கொந்தளிப்பிலும் உள்ள சூழலில் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (11.04.2018) சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழகக் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

இயக்குநர் வெற்றிமாறன் காவல்துறையினரால் தாக்கப்படுவதைத் தடுக்கப் போன இடத்தில், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியமும், அவரது அமைப்பின் கரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் இரமேசும் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை கண்மூடித்தனமாக அடித்ததில், தோழர் களஞ்சியத்துக்கு கைவிரல் உடைந்துள்ளது. இதயப்பகுதி அருகிலும், நெஞ்சிலும் காவலர்களின் லட்டி அடித்து, இரத்தம் கட்டிக் கொண்டுள்ளது. தோழர் இரமேசுக்கு விலா எலும்பு உடைந்து, நுரையீரலில் காற்று புகுந்து மிகவும் ஆபத்தான சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.

தற்போது, சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இருவரையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள், இன்று (12.04.2018) பிற்பகலில் நேரில் சென்று பார்த்து, அவர்களது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தோழர் இளவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

மண்ணின் உரிமைக்காகப் போராடும் மண்ணின் மைந்தர்களுக்கு எதிராகத் தமிழ்நாடு காவல்துறையின் ஒடுக்குமுறைக்கு வன்மையான கண்டனங்கள்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: tamizhthesiyam.com 

Sunday, April 8, 2018

விழுப்புரம் மாவட்டம் - தொரவியில் இன்று மாலை சிறப்புப் பொதுக்கூட்டம்! தோழர் பெ. மணியரசன் சிறப்புரை!

விழுப்புரம் மாவட்டம் - தொரவியில் இன்று மாலை சிறப்புப் பொதுக்கூட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புரை!
“தமிழர் தற்காப்பு அரசியல்” என்ற தலைப்பில், விழுப்புரம் மாவட்டம் - தொரவியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (08.04.2018) மாலை சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

விக்கிரவண்டி அருகிலுள்ள தொரவி கிராமத்தின் விளையாட்டுத் திடலில் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கக் கிளைச் செயலாளர் தோழர் சிவக்குமார் தலைமை தாங்குகிறார்.

நிகழ்வின் தொடக்கத்தில், பெண்ணாடம் தென்றல் கலைக் குழுவினரின் எழுச்சி இசை நிகழ்ச்சியும், பாகூர் கரிகால்சோழன் வீரவிளையாட்டுக் குழுவிரின் தமிழர் வீரவிளையாட்டுக் கலை நிகழ்வும் நடைபெறுகின்றது.

இதனையடுத்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புரையாற்றுகிறார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா, புதுச்சேரி த.தே.பே. செயலாளர் தோழர் இரா. வேல்சாமி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, April 6, 2018

சூரப்பாவையும் பன்வாரிலாலையும் திரும்பப் பெற வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

சூரப்பாவையும் பன்வாரிலாலையும் திரும்பப் பெற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாடு அரசின் உயர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கன்னடரான எம்.கே. சூரப்பா என்பவரை துணைவேந்தராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 05.04.2018 அன்று அமர்த்திய செயல், இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தமிழர்களுக்கு உரிமை இல்லை என்ற பா.ச.க.வின் ஆரியத்துவா கருத்தை நிலைநாட்டுவதாகவே உள்ளது. 

ஏற்கெனவே தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரி என்பவரை 22.03.2018 அன்று துணை வேந்தராக பன்வாரிலால் அமர்த்தினார். அதற்கு முன், தமிழ்நாடு இசைப் பல்கலைக் கழகத்திற்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா என்பவரை துணை வேந்தராக்கினார், பன்வாரிலால்! பணியமர்த்தப்பட்ட எல்லோருக்கும் உள்ள “கூடுதல்” தகுதி, இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். - ஆரியத்துவ ஆதரவாளர்கள் என்பதே! 

தமிழ்நாட்டில் உள்ள 10 அரசுப் பொறியியல் கல்லூரிகள், 17 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 554 தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆகியவை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்குகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்திற்குத் தகுதியான கல்வியாளர் தமிழினத்தில் கிடைக்கவில்லையா? தகுதியான கல்வியாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், தமிழர்களுக்கு அந்த உரிமை மற்றும் அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு, அயல் இனத்தாரை தொடர்ந்து துணை வேந்தர்களாக பா.ச.க. ஆட்சி அமர்த்துகிறது. 

துணை வேந்தராக வெளி மாநிலத்தவரை பணியமர்த்தினால், அதன் வழியாக பல்கலைக் கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள், விரிவுரையாளகள், அலுவலகப் பணியாளர்கள் தொடங்கி மாணவர்கள் வரை - வெளி மாநிலத்தவரைச் சேர்க்கும் அபாயம் இருக்கிறது என்பதையும் தமிழர்கள் உணர வேண்டும். 

இந்த அதிகாரப் பறிப்புக்கு – உரிமைப் பறிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முதலமைச்சர் எடப்பாடி அரசுக்கு அக்கறையும் இல்லை; ஆற்றலும் இல்லை! இந்தியாவில் தமிழ்நாடு – இன அடிப்படையில் ஒதுக்கப்பட்ட - உரிமைப் பறிக்கப்பட்ட (Apartheid) மாநிலமாக வைக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கூறி வருகிறது. 

இக்கூற்றுக்கு இன்னொரு சாட்சியமாகத்தான் எம்.கே. சூரப்பா என்ற கன்னடரை பா.ச.க. ஆளுநர் பன்வாரிலால், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தர் ஆக்கியிருக்கிறார். 

தமிழ்நாட்டு பொறியியல் அறிஞர்களிடம், பேராசிரியர்களிடம் இல்லாத திறமைகள், கல்விப் புலமைகள், சூரப்பாவிடம் இருக்கின்றனவா? இல்லை! ஏற்கெனவே பணியாற்றிய இடங்களில் அலுவலகத்திற்கு முறையாக வராதவர் என கண்டிக்கப்பட்டவர் இவர். பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்குப் புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கியபோது, ஐந்து ஆண்டுகளாக அதைக் கிடப்பில் போட்டதன் காரணமாக கட்டுமானச் செலவு பல மடங்கு அதிகரிக்க இவரே காரணம் என இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரால் குற்றம்சாட்டப்பட்டவர் சூரப்பா!

தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மறுத்து கன்னட இனவெறியோடு செயல்படும் கர்நாடகத்திற்கு பரிசளிப்பதுபோல், தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் எம்.கே. சூரப்பாவை தமிழ்நாட்டில் துணை வேந்தர் ஆக்கியிருக்கிறார் பன்வாரிலால்! 

சூரப்பாவை துணை வேந்தர் பணியிலிருந்து விடுவித்து திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென்றும், பல்வேறு கண்டனங்களுக்கு அன்றாடம் உள்ளாகிவரும் தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலாலைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இக்கோரிக்கை நிறைவேறும் வகையில், தமிழர்கள் தன்மான அடிப்படையில் தாயக உரிமை காக்கும் முறையில் சனநாயகப் போராட்டங்களை நடத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Sunday, April 1, 2018

காவிரி உரிமைப் பறிக்கும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம்! முதல் கட்டமாக நெய்வேலி முற்றுகைப்போர் ! காவிரி உரிமை மீட்புக் குழு போராட்ட அறிவிப்பு! தமிழரைப் புறக்கணிக்கும் இந்தியா! அன்றே சொன்னது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..!

காவிரி உரிமைப் பறிக்கும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம்! முதல் கட்டமாக நெய்வேலி முற்றுகைப்போர் ! காவிரி உரிமை மீட்புக் குழு போராட்ட அறிவிப்பு! தமிழரைப் புறக்கணிக்கும் இந்தியா! அன்றே சொன்னது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..!

#TamilsBoycottGovtOfIndia
#IndiaBetraysTamilnadu

தமிழர்களை தொடர்ந்து இந்தியா புறக்கணிக்கிறது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் குற்றம்சாட்டி வந்துள்ளது.

இப்போது, 
காவிரிப் போராட்டத்தில், 
மீனவர் போராட்டத்தில், 
ஸ்டெர்லைட் போராட்டத்தில்,
நியூட்ரினோ போராட்டத்தில்,
ஐட்ரோகார்பன் போராட்டத்தில்..
என இது எதிரொலித்து வருகிறது!

இந்திய அரசே, 
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT