உடனடிச்செய்திகள்
Showing posts with label தலைமைச் செயற்குழு தீர்மானங்கள். Show all posts
Showing posts with label தலைமைச் செயற்குழு தீர்மானங்கள். Show all posts

Friday, December 29, 2017

"தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே! வெளி மாநிலத்தவருக்கு அல்ல!" பிப்ரவரி 3 அன்று சென்னையில் மாநாடு!

"தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே! வெளி மாநிலத்தவருக்கு அல்ல!" பிப்ரவரி 3 அன்று சென்னையில் மாநாடு! சிதம்பரத்தில் நடந்த தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், நேற்று (28.12.2017) - சிதம்பரம் – வணிகர் சங்கக் கட்டடத்தில் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், நா. வைகறை, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், ம. இலட்சுமி அம்மாள், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, ஒக்கிப் புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கும், தமிழ்த்தேசியப் போராளியும் - புலவர் கலியபெருமாள் அவர்களின் மூத்த மகனுமான தோழர் வள்ளுவன் அவர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து, அமைதி வணக்கம் செய்யப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன :

தீர்மானம் - 1

“தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை – வெளி மாநிலத்தவருக்கு அல்ல!” - தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வலியுறுத்தி – பிப்ரவரி 3இல் சென்னையில் மாபெரும் மாநாடு
தமிழ்நாட்டில் மிகப்பெரும் அளவில் வெளி மாநிலத்தவர் குடியேறி வருகின்றனர். நிலங்களையும், மனைகளையும் கட்டடங்களையும் வாங்கிக் குவிக்கின்றனர். வணிகத்தையும், தொழிலையும் கைப்பற்றி இருக்கின்றனர். தொகைத் தொகையாக வந்து தமிழ்நாட்டில் குடியேறும் வடநாட்டவர் மற்றும் பிற மாநிலத்தவருக்கு “ஸ்மார்டு கார்டு” திட்டம், வரைமுறையற்று உள்ளே நுழைவதற்கும், தமிழ்நாட்டில் வழங்கல் (ரேசன்) அட்டை, வாக்காளர் அட்டைப் பெற்று நிலைபெறுவதற்கும் வாய்ப்பளிக்கிறது.

நேரடியாகவும், பல்வேறு முறைகேடுகள் – மோசடிகள் வழியாகவும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் வெளி மாநிலத்தவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு வந்தார்கள். இதுபோதாதென்று, தற்போது தமிழ்நாடு அரசுப் பணிகளிலேயே வெளி மாநிலத்தவரைப் பணியமர்த்தும் அபாயகரமான புதியப் போக்கு தீவிரம் பெற்றுள்ளது.

கடந்த 07.11.2017 அன்று வெளியான, தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி –விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில், வெளி மாநிலத்தவர்கள் பெருமளவில் இடம்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள விவரம் வெளியாகக் கூடாது என்பதற்காக, “ஆசிரியர் தேர்வு வாரியம்” திட்டமிட்டே அவர்களின் பெயர்களை மறைத்து, வழக்கத்திற்கு மாறாக பதிவு எண்களுடன் தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.

வெளி மாநிலத்தவர்கள் பலரும் பொதுப்பிரிவில் வந்து இடங்களைக் கைப்பற்றியதோடு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அட்டவணைப் பிரிவினர் மற்றும் பழங்குடியினர் - பிற்படுத்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர்க்கு உரிய பிரிவுகளின் கீழும் பல வெளி மாநிலத்தவர்கள் தேர்வாகியிருந்தனர். அதன் காரணமாக, இப்பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்களுக்குரிய இடங்கள் அயலாரால் தட்டிப் பறிக்கப்பட்டன.

இவ்வாறு தேர்வாகியுள்ள வெளி மாநிலத்தவருக்கு 23.11.2017 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தவிருந்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்தது. இதனையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு இரத்து செய்யப்பட்டது. இப்போது, மோசடியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, அத்தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியமே திரும்பப் பெற்றுள்ளது.

இந்நிலையில், 14.11.2017 அன்று தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), நான்காம் பணிப்பிரிவில் - 9,351 வேலைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், இப்பணிகளுக்கு தமிழ்நாட்டவர் மட்டுமின்றி – வெளி மாநிலத்தவரும், நேப்பாளம், பூட்டான் போன்ற வெளிநாட்டினரும், பாக்கித்தான், திபெத், மியான்மர் நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் மேற்கண்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்றும் தமிழ்நாடு அரசு சலுகை அளித்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசுப் பணிகளுக்குத் தேர்வு ஆவதற்கு தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற வரம்பாவது இருந்தது. கடந்த 2016 செப்டம்பர் 1 அன்று, செயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அன்றைய நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து நிறைவேற்றிய “தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் - 2016” என்ற புதிய சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிகளில், தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பதற்காக 07.11.2016 அன்று திருத்தங்கள் செய்யப்பட்டது.

இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் கடந்த 16.11.2017 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டு அம்பலப்படுத்தினார். இதனையடுத்து, பல கட்சிகளும் இது குறித்து அறிக்கை வெளியிட்டு தமிழ்நாடு அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்!

மகாராட்டிரம், கர்நாடகம், குசராத், மேற்கு வங்கம், சத்தீஸ்கட் போன்ற பல மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை உரிமை சட்டமாக்கப்பட்டுள்ளது. அம்மாநிலங்களின் அரசுப் பணியில், தமிழ்நாட்டில் நடப்பது போல் வெளி மாநிலத்தவர்களையும், வெளி நாட்டினரையும் பணிக்கு அமர்த்த முடியாது!

எனவே, தமிழ்நாடு அரசு – அரசுப் பணிகளில் 100 விழுக்காட்டு இடங்களையும், தனியார் மற்றும் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டு இடங்களையும் தமிழர்களுக்கே வழங்கிட சட்டமியற்றக் கோரி, வரும் பிப்ரவரி 3 – காரி(சனி)க் கிழமை அன்று, சென்னையில் - தோழமை அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்படத்துறையினர், பல்துறை வல்லுநர்களைக் கொண்டு - காலை முதல் மாலை வரை முழுநாள் மாநாட்டை நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது!

இம்மாநாட்டில், மண்ணின் மக்கள் உரிமையில் அக்கறை கொண்டோரும், தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தீர்மானம் - 2

கடலூர் - நாகை கிராமங்களை அழித்துக் கொண்டு வரப்படும் பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும்!
கதிர்வீச்சு அபாய அணு உலைகள், காற்று மண்டலத்தையும் உயிர் வாழும் சூழலையும் நாசப்படுத்தும் அனல் மின் நிலையங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக்கும் பெட்ரோல், எரிவளி (மீத்தேன்) எடுப்பு முயற்சிகள், நியூட்ரினோ ஆய்வகம், வேளாண் நிலங்களை அழிக்கும் கெயில் குழாய்த் திட்டம் என இந்திய அரசால் தமிழ்நாட்டின் மீது தொடர்ச்சியாகத் திணிக்கப்பட்டு வரும் அழிவுத் திட்டங்களில் ஒன்றாக, கடலூர் - நாகை மாவட்டத்தில் எரிமவேதிப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் - நாகை மாவட்டங்களின் 45 கிராமங்களில் சற்றொப்ப 57,345 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த முதலீட்டு மண்டலத்தில், நச்சுக்காற்றையும், மனித உயிருக்குக் கேடு விளைவிக்கும் வேதிப் பொருட்களையும் உற்பத்தி செய்யும் பெரும் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய புதிய நகரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த எரிவேதி மண்டலத் திட்டம் கடலூர், புவனகிரி, சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள 45 கிராமங்களை தனியார் நிறுவன வளாகமாக மாற்றி, இலட்சக்கணக்கான குடும்பங்களை காலங்காலமாக வாழ்ந்த மண்ணிலிருந்து வெளியேற்றும்.

ஏற்கெனவே சிப்காட் தொழிற்சாலைகளால் கடும் மாசுபாடுகளாலும், நிலத்துக்குள் கடல் நீர் புகுவதும் அதிகரித்துள்ள கடலூர் - நாகை மாவட்டங்களில், இந்த புதிய முதலீட்டு மண்டலம் நிலைமையைத் தீவிரமாக்கி, மக்களை நிரந்தர நோயாளிகளாக்கி விடும்.

இந்த எரிவேதி மண்டலத் திட்டம் என்பது ஏற்கெனவே மேற்கு வங்கத்தாலும், கேரளாவாலும் தங்கள் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட திட்டமாகும். அதைத் தமிழ்நாட்டின் மீது திணிப்பது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

எனவே உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு இந்திய - தமிழ்நாடு அரசுகளைக் கோருகிறது! இத்திட்டத்தை எதிர்த்து, இக்கிராம மக்களைத் திரட்டி மண்ணுரிமை காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பது என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முடிவு செய்துள்ளது!

தீர்மானம் - 3

தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா.கி. நகர் இடைத்தேர்தல் காட்டுகிறது!
சென்னை இரா.கி. (இராதாகிருட்டிணன்) நகர் இடைத்தேர்தலில், பணம் வெற்றி பெற்றது என்று பலரும் சொல்கிறார்கள். தேர்தல் சனநாயகத்தை பணச் சூதாட்டமாகவும், பங்குச் சீரழிவாகவும் மாற்றப்பட்டிருப்பது இன்று வந்த நோயல்ல! இந்த நோயை உருவாக்கித் தொற்ற வைத்தவர்கள் தி.மு.க., அ.இஅ.தி.மு.க. தலைவர்கள்!

தன்மானம், சமூகநீதி, முற்போக்கு சிந்தனைகள் ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் தழைக்க வைத்தவர்கள் திராவிட இயக்கத்தார் என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள். இந்தியாவிலேயே மிக அதிக விலைக்கு வாக்குரிமையை விற்று வாங்கும் ஊழல் பண்டமாக மாற்றியது திராவிட அரசியல்தான்! அந்தச் சீரழிவின் அதலபாதாளம்தான் இரா.கி. நகர் தேர்தல் முடிவுகள்!

இப்பொழுது, அதை தினகரன் அறுவடை செய்திருக்கிறார். அடுத்தடுத்த தேர்தல்களில் இந்த ஊழல் பந்தையத்தில் யார் முந்தப்போகிறார்கள் என்பது இப்பொழுது சொல்ல முடியாது!

தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பத்து கோடியிலிருந்து இருபது கோடி ரூபாய் வரை செலவு செய்தால்தான் போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இந்த நிலையில், தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் சமூக மாற்றத்தை, சமூக முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லை!

தமிழ்நாட்டில் பெரும் பெரும் தேர்தல் கட்சிகளுக்கு அப்பால்தான், மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டுள்ளார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, நெடுவாசல் – கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி. எதிர்ப்பு, மணல் கொள்ளைத் தடுப்பு, இனயம் துறைமுக எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி, அதில் மக்கள் முன்னேற்றமும் கண்டு வருகிறார்கள். தங்கள் வாழ்வுரிமையை சுற்றுச்சூழலை அவர்கள்தான் போராடிப் பாதுகாக்கிறார்கள் - கட்சிகள் அல்ல!

ஊழல் அரசியலை எதிர்க்கின்ற, தமிழ்நாட்டு மக்கள் உரிமைக்குக் குரல் கொடுக்கின்ற இளைஞர்களும் மக்களும் இந்தக் காலத்தில், தேர்தல் அரசியலுக்கு வெளியேதான் மக்கள் இயக்கங்களை நடத்தி – சரியான மாற்று அரசியலை வளர்க்க வேண்டிய தேவையுள்ளது. எனவே, உண்மையாகவே மக்கள் வாழ்வுரிமைக்காக செயல்பட விரும்புகின்ற இயக்கங்களும், மக்களும், தனி நபர்களும் தேர்தலுக்கு வெளியே உள்ள மாற்று சனநாயகப் பாதையில் பயணித்து செயல்படுவதுதான் இன்றைக்குள்ள வரலாற்றுத் தேவையாகும்!

தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகளை புறக்கணித்து, மாற்றாக புதிய கதாநாயகர்களை திரைத் துறையிலிருந்தோ – வெளியிலிருந்தோ தேடுவது வேறு பெயரில் தி.மு.க. – அ.தி.மு.க. ஊழல் அரசியலை – பண்பாட்டுச் சீரழிவை வளர்ப்பதாகவே முடியும்!

இரா.கி. நகரில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்று விமர்சிப்பதுமட்டும் ஊழல் தடுப்பு நடவடிக்கையாக அமையாது. மக்களின் விழிப்புணர்ச்சியை சனநாயக உணர்வை – தன்மான உணர்வை வளர்ப்பதன் மூலம்தான் இந்த ஊழல் அரசியலை ஓரங்கட்ட முடியும்.

ஊழலும் சந்தர்ப்பவாத அரசியலும் திருவிழா கொண்டாடிய போதிலும், இரா.கி. நகர் தேர்தலில் பாரதிய சனதாக் கட்சி 1,400 வாக்குகள் மட்டும்தான் வாங்க முடிந்தது என்பது ஆறுதலாக உள்ளது. தமிழ்நாட்டில் தாங்கள் மட்டுமே கொட்டமடிக்க வேண்டுமென்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஆரியத்துவா அரசியல் அமைப்பான பா.ச.க.வை முற்றிலும் புறக்கணித்த, இரா.கி. நகர் தொகுதி மக்களைப் பாராட்டுவோம்!


எனவே, தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்கள் உரிமை - மக்கள் நலன் சார்ந்த சனநாயக அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை அமைப்பு வழியில் வளர்த்திட சமூக அக்கறையுள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, November 30, 2017

"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா.கி. நகர் இடைத்தேர்தல் காட்டுகிறது!"

"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா.கி. நகர் இடைத்தேர்தல் காட்டுகிறது!"
கடந்த 28.12.2017 அன்று, சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் - 3

"தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா.கி. நகர் இடைத்தேர்தல் காட்டுகிறது!"

சென்னை இரா.கி. (இராதாகிருட்டிணன்) நகர் இடைத்தேர்தலில், பணம் வெற்றி பெற்றது என்று பலரும் சொல்கிறார்கள். தேர்தல் சனநாயகத்தை பணச் சூதாட்டமாகவும், பங்குச் சீரழிவாகவும் மாற்றப்பட்டிருப்பது இன்று வந்த நோயல்ல! இந்த நோயை உருவாக்கித் தொற்ற வைத்தவர்கள் தி.மு.க., அ.இஅ.தி.மு.க. தலைவர்கள்!

தன்மானம், சமூகநீதி, முற்போக்கு சிந்தனைகள் ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் தழைக்க வைத்தவர்கள் திராவிட இயக்கத்தார் என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள். இந்தியாவிலேயே மிக அதிக விலைக்கு வாக்குரிமையை விற்று வாங்கும் ஊழல் பண்டமாக மாற்றியது திராவிட அரசியல்தான்! அந்தச் சீரழிவின் அதலபாதாளம்தான் இரா.கி. நகர் தேர்தல் முடிவுகள்!

இப்பொழுது, அதை தினகரன் அறுவடை செய்திருக்கிறார். அடுத்தடுத்த தேர்தல்களில் இந்த ஊழல் பந்தையத்தில் யார் முந்தப்போகிறார்கள் என்பது இப்பொழுது சொல்ல முடியாது!

தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பத்து கோடியிலிருந்து இருபது கோடி ரூபாய் வரை செலவு செய்தால்தான் போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இந்த நிலையில், தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் சமூக மாற்றத்தை, சமூக முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லை!

தமிழ்நாட்டில் பெரும் பெரும் தேர்தல் கட்சிகளுக்கு அப்பால்தான், மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டுள்ளார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, நெடுவாசல் – கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி. எதிர்ப்பு, மணல் கொள்ளைத் தடுப்பு, இனயம் துறைமுக எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி, அதில் மக்கள் முன்னேற்றமும் கண்டு வருகிறார்கள். தங்கள் வாழ்வுரிமையை சுற்றுச்சூழலை அவர்கள்தான் போராடிப் பாதுகாக்கிறார்கள் - கட்சிகள் அல்ல!

ஊழல் அரசியலை எதிர்க்கின்ற, தமிழ்நாட்டு மக்கள் உரிமைக்குக் குரல் கொடுக்கின்ற இளைஞர்களும் மக்களும் இந்தக் காலத்தில், தேர்தல் அரசியலுக்கு வெளியேதான் மக்கள் இயக்கங்களை நடத்தி – சரியான மாற்று அரசியலை வளர்க்க வேண்டிய தேவையுள்ளது. எனவே, உண்மையாகவே மக்கள் வாழ்வுரிமைக்காக செயல்பட விரும்புகின்ற இயக்கங்களும், மக்களும், தனி நபர்களும் தேர்தலுக்கு வெளியே உள்ள மாற்று சனநாயகப் பாதையில் பயணித்து செயல்படுவதுதான் இன்றைக்குள்ள வரலாற்றுத் தேவையாகும்!

தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகளை புறக்கணித்து, மாற்றாக புதிய கதாநாயகர்களை திரைத் துறையிலிருந்தோ – வெளியிலிருந்தோ தேடுவது வேறு பெயரில் தி.மு.க. – அ.தி.மு.க. ஊழல் அரசியலை – பண்பாட்டுச் சீரழிவை வளர்ப்பதாகவே முடியும்!

இரா.கி. நகரில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்று விமர்சிப்பதுமட்டும் ஊழல் தடுப்பு நடவடிக்கையாக அமையாது. மக்களின் விழிப்புணர்ச்சியை சனநாயக உணர்வை – தன்மான உணர்வை வளர்ப்பதன் மூலம்தான் இந்த ஊழல் அரசியலை ஓரங்கட்ட முடியும்.

ஊழலும் சந்தர்ப்பவாத அரசியலும் திருவிழா கொண்டாடிய போதிலும், இரா.கி. நகர் தேர்தலில் பாரதிய சனதாக் கட்சி 1,400 வாக்குகள் மட்டும்தான் வாங்க முடிந்தது என்பது ஆறுதலாக உள்ளது. தமிழ்நாட்டில் தாங்கள் மட்டுமே கொட்டமடிக்க வேண்டுமென்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஆரியத்துவா அரசியல் அமைப்பான பா.ச.க.வை முற்றிலும் புறக்கணித்த, இரா.கி. நகர் தொகுதி மக்களைப் பாராட்டுவோம்! 

எனவே, தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்கள் உரிமை - மக்கள் நலன் சார்ந்த சனநாயக அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை அமைப்பு வழியில் வளர்த்திட சமூக அக்கறையுள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Wednesday, November 15, 2017

சான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்துவோம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவிப்பு!

சான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்துவோம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவிப்பு!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், தஞ்சை த.தே.பே. அலுவலகத்தில் 14.11.2017 காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க. அருணபாரதி, பழ. இராசேந்திரன், கோ. மாரிமுத்து, நா. வைகறை, குழ. பால்ராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், இரெ. இராசு, ம. இலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்க மூத்த தோழர்கள் அரியமங்கலம் திரு. இரெ.சு. மணி, காதாட்டிப்பட்டி சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை தமிழின உணர்வாளர் திரு. இராம. இளங்காவன், எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, தமிழறிஞர் – பேராசிரியர் மா. நன்னன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 :

தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவரை பணியமர்த்தும் தேர்வு முடிவைக் கைவிடாவிட்டால் சென்னையில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்!

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில், தொடர்ந்து தமிழர்களைப் புறக்கணித்து வெளி மாநிலத்தவர்களையே பெரும்பான்மையாக வேலைக்கு அமர்த்தும் நிலையில், இப்போது தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள பல்தொழில்நுட்பக் (Polytechnic) கல்லூரிகளில் உள்ள 1058 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு “ஆசிரியர் தேர்வு வாரியம்” (Teachers Recruitment Board) நடத்திய தேர்வின் முடிவுகள், கடந்த 07.11.2017 அன்று இணையதளத்தில் வெளியாகின. இதில் வெளி மாநிலத்தவர்கள் பெருமளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) துறைக்கு 219 விரிவுரையாளர்கள் தேவை என்ற நிலையில், அதில் பொதுப்பட்டியலுக்கான 67 இடங்களில் 46 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதாவது, 68 விழுக்காட்டு இடங்கள் வெளி மாநிலத்தவர்க்கு தாரை வார்க்கப் பட்டுள்ளன. அதேபோல், மின்னணு தொடர்பியல் (ECE) துறைக்குத் தேவைப்படும் 118 இடங்களில், பொதுப்பிரிவுக்கான 36 இடங்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர். இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறைக்கு எடுக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் வெளி மாநிலத்தவர்! இதுபோல் ஒவ்வொரு துறையிலும் வெளி மாநிலத்தவர்கள் நிறைந்துள்ளனர்.

இவ்வாறு தேர்வாகியுள்ள வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களின் இடங்களை தட்டிப் பறித்துள்ளனர். இந்த இடங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அட்டவணை வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டின்படியான இடங்களிலும் வெளி மாநிலத்தவர் ஆங்காங்கு உள்ளனர். அதையும் கணக்கிட்டால், இந்த விகிதம் இன்னும் அதிகமாகும்! வழக்கமாக இதுபோன்ற தேர்வுகளில் அதிகபட்சமாக தமிழ்நாட்டு மாணவர்கள் 120 முதல் 130 மதிப்பெண் வரை மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால், 140லிருந்து 154 வரை வெளி மாநிலத்தவர் மதிப்பெண் பெற்றுள்ளது, இத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது.

பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருப்பினும், பாடங்கள் தமிழில் தான் நடத்தப்படுகின்றன. தமிழ்வழிக் கல்வியில் பயின்றுவிட்டு சேரும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வின்போது அவர்கள் தமிழிலும் எழுதலாம் என்ற நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.

தமிழேத் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் விரிவுரையாளர்களாகப் பணியமர்த்தப்படுவதால், இந்த உரிமை அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும்! தமிழில் நடத்தப்படும் பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படும். ஆங்கிலமும் பேசத் தெரியாத வெளி மாநிலத்தவர் இருப்பின், அந்த வகுப்பு மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறிதான்! எனவே, இந்த நியமனங்கள் காரணமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும்! பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் வினாக்குறியாகும்!

தமிழ்நாட்டின் மீது இந்திய அரசு திணித்த நீட் தேர்வால், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி இடங்கள் வெளி மாநிலத்தவருக்குத் தாரை வார்க்கப்பட்ட நிலையில், இப்போது தமிழ்நாடு அரசின் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாநில அரசே வெளி மாநிலத்தவரைப் பணியில் அமர்த்த முயலும் செயல் கடும் கண்டனத்திற்குரியது!

மகாராட்டிரத்தில் 1968லிருந்தும், கர்நாடகாவில் 1986லிருந்தும், குசராத்தில் 1995லிருந்தும், மேற்கு வங்கத்தில் 1999லிருந்தும் என - தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் பல மாநிலங்களிலும் மண்ணின் மக்களுக்கே வேலை என சட்டமியற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்திய அரசுப் பணிகளில் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுவது மண்ணின் மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியும், துரோகமும் ஆகும்! மொழிவழி மாநிலமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டதின் நோக்கத்தை சிதைத்து மண்ணின் மக்களான தமிழர்கள் உரிமையைப் பறிப்பதாகும்.

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளைச் செய்யும்போது, தமிழ்நாட்டு மரபு வழியில் தமிழ்நாட்டுக் குடிமக்களாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான காலவரம்புடன் கூடிய இருப்பிடச் சான்று, தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல, மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் தனிச்சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக பல்தொழில்நுட்பக் கல்லூரிப் பணித்தேர்வு பட்டியலிலிருந்து வெளி மாநில மாணவர்களை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கிய பிறகு, தமிழ்நாட்டு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த வேண்டும்! இல்லையெனில், வரும் 23.11.2017 அன்று சென்னை தரமணி நடுவண் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்வைத் தடுத்து நிறுத்தும் அறப்போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்துவது என தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது!

தீர்மானம் 2 :

ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துகளை பாரபட்சமின்றி பறிமுதல் செய்ய வேண்டும்!

சனநாயகத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெறுவது, அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பது என்பதை வழக்கமாக்கிவிட்ட அரசியல் திருடர்கள் இந்தியா முழுவதும் பெருகியுள்ளார்கள். இந்தியாவிலேயே மிக அதிகமாக அரசியல் கொள்ளை நடைபெறும் மாநிலம், தமிழ்நாடு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இப்பொழுது, ஒரு பிரிவு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள், பினாமி தொழில்கள் என்று சற்றொப்ப 200 இடங்களில் வருமான வரிச் சோதனை நடந்துள்ளது. இந்த வருமானவரிச் சோதனை என்பது, நரேந்திர மோடி அரசால் அரசியல் உள்நோக்கத்துடன், தனக்கு ஆகாத பிரிவினர் மீது தொடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை! அதாவது, நரேந்திர மோடி அரசுக்கு ஊழல் ஒழிப்பிலும், சனநாயகக் கொள்ளையர்களைத் (Decoit of Democracy) தண்டிப்பதிலும் உண்மையான அக்கறையில்லை!

ஆனால், பிடிபடாத திருடர்களை சுட்டிக்காட்டி பிடிபட்ட திருடர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது என்று பேசுவது தூய்மை நெறியும் அன்று; நீதியும் அன்று! ஒரு சாரார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை வரவேற்று, மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோருவதே அறத்தின் பாற்பட்டது!

எனவே, இப்பொழுது தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் மீது நடைபெறும் வருமானவரி சோதனைகளை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரவேற்கிறது! இதையும், குற்றவியல் அழுத்தம் கொடுத்து அ.இ.அ.தி.மு.க.வின் அப்பிரிவை தன்னோடு கூட்டணி சேர்த்துக் கொள்ளும் அரசியல் தந்திரமாக பயன்படுத்தக் கூடாது என்று மோடி அரசைத் தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது!

அரசியல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, முதல் நிலை ஆதாரங்கள் கிடைத்தால் அவர்களின் சொத்துகள் அனைத்தையும் உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும். அச்சொத்துகளை இழந்தோர், நீதிமன்றத்தை நாடி நீதி பெற்றுக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு இருப்பதால், சொத்துகளைப் பறிமுதல் செய்வது அநீதியாகாது என்பதை இந்திய அரசுக்கு கோரிக்கையாகத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு வைக்கிறது!

தீர்மானம் 3 :

தமிழ்நாடு ஆளுநர் செல்லுமிடமெல்லாம் கருப்புக் கொடி காட்ட வேண்டும்!

தமிழ்நாடு ஆளுநர் புரோகித் பன்வாரிலால் இப்பொழுது புதுச்சேரியின் கிரண் பேடி போல, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைப் பறிக்கும் தில்லியின் கைத்தடியாக செயல்படுவதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!

இன்றைக்குள்ள அரசமைப்புச் சட்டம், மாநில அமைச்சரவைக்கு முழுமையான அதிகாரம் தரவில்லை என்றாலும், அந்த அமைச்சரவையின் ஒப்புதலின்றி நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கவில்லை. கோவை மாநகராட்சி அலுவலகம் சென்று, இன்று (14.11.2017) ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டம் செயல்படுகிறதா என்று பேருந்து நிலையக் கழிவறைகளைப் போய் பார்த்திருக்கிறார். தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் நேரடிப் பொறுப்பு தமிழ்நாடு அமைச்சரவையிடம் இருக்கிறது. அடுத்தடுத்து இதுபோல் தமிழ்நாடு அமைச்சரவைப் பணிகளில் தலையிட்டு தனிக் கட்டளைகள் பிறப்பிக்கும் திட்டத்தையும் ஆளுநர் புரோகித் வைத்துள்ளார் என்று தெரிகிறது.

இந்த அதிகார ஆக்கிரமிப்பை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டிக்க வேண்டும்! தலைமையமைச்சர் நரேந்திர மோடி தலையிட்டு, புரோகித்தின் அதிகார அத்துமீறல்களைத் தடுக்க வேண்டும்! ஆளுநர் தமது அதிகார அடாவடித்தனங்களை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், அவர் செல்லுமிடமெங்கும் தமிழர்கள் கருப்புக் கொடி காட்டி “திரும்பிப் போ!” என்று முழங்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு, தமிழ்நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 4 :

தஞ்சையில் ஊழல் செய்து ஓட்டை மேம்பாலம் கட்டிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும்!

தஞ்சை மேரிஸ் கார்னர் – சாந்தப்பிள்ளை கேட் அருகில் புதிதாகக் கட்டி, பொது மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் திறக்கப்படாத மேம்பாலத்தில் விழுந்த ஓட்டைகள் வழியே, தமிழ்நாடு ஆட்சியாளர்களின் ஊழல் முகமே வெளிப்பட்டுள்ளது.

“சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம் மக்கள் சீரமைப்புக் குழு”வினர், மேம்பாலத்திலுள்ள விரிசலை ஊடகங்களில் வெளிச்சமிட்டுக் காட்டியபிறகு, அந்த விரிசல்களை அடைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

பொது மக்கள் பயன்படுத்தும் சாலைகள், மேம்பாலங்கள், கட்டடங்கள் போன்றவற்றில் நடைபெறும் ஊழல்களால், அவை தரமற்று இருப்பதோடு மட்டுமின்றி, அவை மிகப்பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் மரணக் கட்டுமானங்களாகவும் அமைகின்றன.

ஊழல்கள் காரணமாக தரமற்ற நிலையிலுள்ள இந்த மேம்பாலத்தை முழுவதுமாக இடித்துத் தள்ளிவிட்டு, தரமான புதிய மேம்பாலம் கட்ட வேண்டும். ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் – ஆட்சியாளர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் மேம்பாலச் செலவுத் தொகை முழுவதையும் வசூலிக்க வேண்டும். இது குறித்து விசாரிக்க நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.)யின் விசாரணை வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது!

தீர்மானம் 5 :

இந்தியக் கடலோரக் காவல்படையினரைக் கைது செய்ய வேண்டும்!

தமிழகக் கடலோரத்திற்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்கள் மீது, இந்தியக் கடலோரக் காவல்படையினர் 13.11.2017 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிகழ்வு, தமிழ்நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்தியக் கடலோரக் காவல்படையினர் நடத்திய, இத்துப்பாக்கிச் சூட்டில் படகில் இருந்த மீனவர்கள் பிச்சை ஆரோக்கியதாஸ், ஜான்சன் ஆகியோருக்கு குண்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். தமிழில் பேசியதற்காகவும், இந்தியில் பேசத் தெரியாது என சொன்னதற்காகவும் மீனவர்களை கடலோரக் காவல்படையினர் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டை இந்தியக் கடலோர காவல் படையினர் மறுத்தநிலையில், தாக்குதலுக்கு உள்ளான படகிலிருந்து துப்பாக்கிக் குண்டினை மீனவர்கள் தமிழகக் காவல்துறையினரிடம் அளித்து அவர்களின் பொய்க்கூற்றை உடைத்தெறிந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு (29.03.2017), நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் தாக்குதல் நடத்திய செய்தி, தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இப்போது நடைபெற்றுள்ள துப்பாக்கிச் சூடு நிகழ்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சிங்களக் கப்பல்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதற்கு இந்தியக் கடலோரக் காவல்படை, இதுவரை மறைமுக உதவி செய்து வந்துள்ளது. இப்போது, சிங்களப் படை போல இந்தியப் படையும் தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. சிங்களர்கள் பங்காளிகள் – தமிழர்கள் பகையாளிகள் என்ற உறவு முறையைத்தான் இந்திய அரசு கொண்டுள்ளது என்பது இப்போது மேலும் தெளிவாகியுள்ளது.

இந்நிலையில், மீனவர் சங்கங்களின் போராட்டத்திற்குப் பிறகு இந்தியக் கடலோரக் காவல்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும், வெறும் வழக்குப்பதிவோடு நிற்காமல், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இந்தியக் காவல்படையினரைக் கைது செய்து அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்!
 
செய்தியாளர் சந்திப்பு

மேற்கண்ட தீர்மானங்களை விளக்கி, இன்று (15.11.2017) தஞ்சை த.தே.பே. அலுவலகத்தில், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினர். டி.ஆர்.பி. தேர்வில் வெளி மாநிலத்தவர்களால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதைக் கூறினர். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இடம் : தஞ்சை
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Sunday, May 28, 2017

மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்!

மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் இன்று (28.05.2017) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, பாவலர் நா. காமராசன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன :

தீர்மானம் : 1 
--------------------
மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்!

இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு தேசிய இன மக்களின் – பல்வேறு சமய மக்களின் தனித்தன்மையை அழித்து, ஒற்றை மொழி – ஒற்றைப் பண்பாடு என ஆரியமயப்படுத்தும் திட்டத்தில் நடுவண் பா.ச.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில், பசு, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பா.ச.க. அரசின் இத்தடையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒவ்வொருவரையும் பிறப்பு அடிப்படையில் மேல் கீழாக வைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு நீதி வழங்கும் வர்ணாசிரம அதர்மக் கொள்கையைப் போல், விலங்குகளிடமும் பேதம் காட்டும் முயற்சியே பா.ச.க. அரசின் இத்தடைச் சட்டமாகும்.

வள்ளுவர் முதல் வள்ளலார் வரை தமிழர் ஆன்மீக மரபில் புலால் மறுப்போர்கூட இறைச்சி உண்ணத் தடை கோரியதில்லை. ஆனால், ஆரிய ஆன்மீகம் ஒற்றைத் தன்மையைத் திணிக்கும் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்டது.

மேலும், இந்தியத் துணைக் கண்டத்தில் பரந்து விரிந்து வாழும் கிராமப்புற வேளாண் மக்களின் பொருளியலை இத்தடைச்சட்டம் கடுமையாக பாதிக்கும். பெருமளவில் வேளாண் பணிகளுக்கு உழுகருவி இயந்திரங்கள் பயன்பட்டு வரும் நிலையில், காளைகள் இனப்பெருக்கத்திற்கும், இறைச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இறைச்சிக்காக காளைகளை விற்கக் கூடாது என இந்திய அரசு தடை விதிப்பதன் மூலம், இறைச்சிக்காகவும் விற்கமுடியாத சுமை பொருளாகக் காளைகளை மாற்றி, அதன் வழியே காளைக் கன்றுகளை ஈன்று தராத பன்னாட்டு நிறுவனப் இறக்குமதி பசுக்களையும், சினை ஊசிகளையும் ஊக்குவிக்கப்படுகின்றன. இன்னொருபுறத்தில், பன்னாட்டு நிறுவனங்கள் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து, கொள்ளை இலாபம் ஈட்டவும் வழிதிறந்துவிடப் படுகின்றது.

இந்தப் பொருளியல் காரணங்கள் மட்டுமின்றி, கால்நடைகளை தங்கள் கடவுள்களுக்கு பலியிட்டு வணங்கும் தெய்வ வழிபாடுகளை நசுக்குதல், இசுலாமியர் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் சமயச் சடங்குகளில் தலையிடுதல் என ஆரியமயப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கிறது இந்திய அரசு!

எனவே, பல்வேறு சமய மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த வேளாண் மக்களுக்கும் எதிரான இச்சட்டத்தை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோருகிறது.

தீர்மானம் : 2
--------------------
சீரமைக்கப்படும் புதிய பாடத்திட்டத்தில், மொழிப் போர் வரலாற்றை தமிழ்நாடு அரசு சேர்க்க வேண்டும்!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறையை இரத்து செய்தும், பதினோறாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முறை அறிவித்தும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரவேற்கிறது.

மதிப்பெண் தரவரிசை முறையை வைத்து கல்வி வணிகத்தில் ஈடுபட்டு வந்த தனியார் தன்னல ஆதிக்க ஆற்றல்களுக்கு, இம்மாற்றங்கள் அதிர்ச்சியளித்துள்ளன. இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை அளித்துள்ள இந்த மாற்றங்களை இத்தன்னல ஆற்றல்கள் எதிர்ப்பதை சுட்டிக்காட்டி, அவற்றைக் கைவிட வேண்டுமென்று சில அரசியல் கட்சிகள் கோரிக்கைகள் முன்வைப்பதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு, இம்மாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தற்போது சீரமைக்கப்பட்டு வரும் புதிய பாடத்திட்டத்தில், 1938லும் 1965லும் நடைபெற்ற தமிழர்களின் வீரஞ்செறிந்த தமிழ்மொழிக் காப்பு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களையும், மறைக்கப்பட்ட தமிழறிஞர்களின் வரலாறுகளையும் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் புதிதாக எழுந்து வரும் சூழலியல் பாதுகாப்புணர்வை அங்கீகரிக்கும் வகையில், சூழலியல் பாதுகாப்பு – சட்ட விழிப்புணர்வு ஆகியவற்றையும் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை முன்வைக்கிறது.

தீர்மானம் : 3
--------------------
நடிகர் இரசினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ் மக்கள் அவரைப் புறக்கணிக்க வேண்டும்!

திரைப்பட நடிகர் இரசினிகாந்த், தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட்டு முதல்வராகப் போவதாகவும், அதற்காக அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் தமது இரசிகர்களிடம் பூடகமாகத் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டும், ஊடகவியலாளர் கருத்துகளைக் கேட்டும் வருகிறார்.

நடிகர் இரசினிகாந்த் மராட்டியத்தில் பிறந்து, கன்னட இனப்பற்றுடன் கர்நாடகாவில் வளர்ந்தவர். நாற்பது ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் வாழ்வதாக அவரே கூறுகிறார். எனினும், தன்னை “பச்சைத்தமிழன்” என்று வேடம் புனைந்து கொண்டு, தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதிக்க முயல்கிறார்.

மராட்டியத்திலோ, கர்நாடகாவிலோ மண்ணின் மைந்தனாக இல்லாத ஒருவர், அ்மாநிலத்தின் முதல்வர் பதவியைக் கைப்பற்ற, இவ்வளவு பகட்டாக திட்டங்கள் தீட்ட முடியாது. அம்மாநில மக்கள் தங்கள் சொந்தத் தாயகத்தைக் காக்க விழிப்புணர்வோடு செயலாற்றுகிறார்கள். 

அம்மாநிலங்களில், அதிகபட்சமாக சட்டப்பேரவை உறுப்பினராகவோ, அல்லது நகரசபை உறுப்பினராகவோ வேண்டுமெனில் அயல் இனத்தார் – சிறுபான்மை மொழியின மக்களின் பிரதிநிதியாக ஒன்றிரண்டு இடங்களைப் பெற்றாலே அது பெரும் சாதனையாகும்.

காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை உள்ளிட்ட தமிழர் உரிமைகள் எதற்கும் குரல் கொடுக்காத இரசினிகாந்த், ஒட்டு மொத்தத் தமிழினத்தின் பிரிதியாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட நினைப்பது, தமிழினத்தில் போதிய அரசியல் விழிப்புணர்வு இல்லையோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது. எனவே, நடிகர் இரசினிகாந்த் அரசியலில் ஈடுபட்டால், அவரை அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டுமென, தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

இடம் : சென்னை -78.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT