உடனடிச்செய்திகள்

Wednesday, April 29, 2020

ஊரடங்கைப் பயன்படுத்தி காவிரி உரிமையைப் பறிக்கிறது மோடி ஆட்சி! புதிய விதித் திருத்தத்தைக் கைவிட வேண்டும்! கி. வெங்கட்ராமன் அறிக்கை!


ஊரடங்கைப் பயன்படுத்தி

காவிரி உரிமையைப் பறிக்கிறது மோடி ஆட்சி!

புதிய விதித் திருத்தத்தைக் கைவிட வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!



கொரோனா நெருக்கடியில் அனைவரது கவனமும் இருக்கும் சூழலைப் பயன்படுத்தி, தனது ஆரியத்துவ சர்வாதிகார நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக நரேந்திர மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அரைகுறை தற்சார்ப்புத் தன்மையையும் முற்றிலும் குழி தோண்டிப் புதைக்கும் சட்ட விரோத ஆணையை இப்போது பிறப்பித்துள்ளது.

இந்திய அரசின் நிர்வாகப் பணிகள் ஒதுக்கீட்டு விதிகள் - 1961-க்கு, திருத்தங்கள் செய்வது என்ற பெயரில் இந்திய அரசின் நீர்வளத்துறை தொடர்பான திருத்த விதிகளை 27.04.2020 நாளிட்ட இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணையின் (S.O. 1371(E), 24.04.2020) வழியே அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்தத் திருத்த விதிகள் வழியாக, காவிரி மேலாண்மை ஆணையம் இந்திய அரசின் நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனமாக மாற்றப்படுகிறது. இதற்கென 33E என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.

ஏற்கெனவே இருந்த பணிகள் ஒதுக்கீட்டு விதியில், மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இப்போது புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிற பதிவு 33E–இன் வழியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்திய நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஏற்றாற்போல் பிற மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

ஏற்கெனவே உள்ள பணி ஒதுக்கீட்டு விதி 1961இல் பிரிவு IV – இந்திய நீர்வளத்துறை அமைச்சகம் நிர்வாகம் செய்ய வேண்டிய சட்டங்களைக் குறிக்கிறது. அவற்றுள் பதிவு 32 – மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் 1956-ஐக் குறிக்கிறது. அதாவது, 1956ஆம் ஆண்டு தண்ணீர் தகராறு சட்டத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு நீர்வளத்துறைக்கு இருக்கிறதென்று பொருள். ஆயினும், அந்தப் பொறுப்பு அதிகாரம், 1956 சட்டத்திற்கு இசைய அமைய வேண்டும் எனக் குறிக்கிறது. தண்ணீர் தகராறு சட்டம் – 1956இன் வரம்புக்குட்பட்ட வகையில்தான், நீர்வளத்துறை அதில் செயல்பட முடியும் என்று பொருள்.

இப்போதைய திருத்த விதி, இந்தப் பதிவு 32–ஐ விதியிலிருந்தே நீக்கி விடுகிறது. (Entry 32 omitted).

பதிவு 33 – ஆற்று வாரியச் சட்டம் 1956ஐக் (River Board Act, 1956) குறிக்கிறது. 1956ஆம் ஆண்டின் ஆற்று வாரியச் சட்டம், அதற்குக் கீழ் 33A முதல் 33E வரை புதிய பதிவுகள் இணைக்கப்படுகின்றன. அதில், 33E – காவிரி மேலாண்மை ஆணையமும் நீர்வளத்துறை அதிகாரத்தின் கீழ் வருவதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்றாற்போல், 7A என்ற புதிய பதிவு சேர்க்கப்படுகிறது.

இதுவரை இந்திய நீர்வளத்துறை கங்கை நிதி மேலாண்மை மற்றும் தூய்மையாக்கல் குறித்த அதிகாரத்தைத்தான் பெற்றிருந்தது.

இப்போது, 7A – இந்தியாவிலுள்ள அனைத்து ஆறுகளையும் பாதுகாப்பது, மேம்படுத்துவது, மேலாண்மை செய்வது மற்றும் தூய்மை சீர்கேட்டை தடுப்பது ஆகிய அதிகாரங்களை இந்திய நீர்வளத்துறைக்கு அளிக்கிறது. அந்தந்த மாநில அரசுகளின் ஆற்று நீர் மேலாண்மை தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் ஓசையில்லாமல் இந்திய அரசு பறித்துக் கொள்ள இந்நிர்வாக விதி சீர்திருத்தத்தின் வழியாகவே சட்ட விரோத ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தப் பதிவு 7A-வுடன் 33E-ஐ இணைத்துப் படித்தால்தான், இது எவ்வளவு பெரிய சர்வாதிகாரத்தனமான சட்டமீறல் என்பது புரியும்.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16இல் வழங்கிய இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்குமாறு தீர்ப்பு கூறியது. பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இத்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதாக இந்திய அரசு 2018 சூன் 1ஆம் நாளிட்ட ஆணையின் வழியாக அரசிதழில் வெளியிட்டது.

அந்த அறிவிப்பிலேயே காவிரி மேலாண்மை ஆணையம் தற்சார்பான கூட்டுரு நிறுவனம் (Body Corporate) எனத் தெளிவாக அறிவித்தது. (The Cauvery Water Management Authority shall be a body corporate having perpetual succession and a common seal and shall sue and be sued). இந்த ஆணையத்தின் தலைவரையும், 2 நிரந்தர உறுப்பினர்களையும் வாக்களிக்கும் உரிமை இல்லாத செயலாளரையும் பணியமர்த்துவது இந்திய அரசின் உரிமை. தொடர்புடைய ஒவ்வொரு மாநிலமும் தங்கள் சார்பாக இரண்டு இரண்டு பகுதி நேர உறுப்பினர்களை இந்த ஆணையத்திற்கு அமர்த்த வேண்டும் என்று இந்த அறிவிப்பு கூறுகிறது. இவ்வாறு ஆணையத்தை அமர்த்தப்பட்டதற்குப் பிறகு, அதன் நிகழ்ச்சி நிரலையும், மற்ற பணிகளையும் முடிவு செய்து கொண்டு இயங்கும் தற்சார்பு அதிகாரம் ஆணையத்திற்கே உண்டு என்பதையும் 2018 சூன் 1 அறிவிக்கை தெளிவுபடக் கூறுகிறது.

இந்த ஆணையம் செயல்படுவதற்கு முன் தொகையாக 2 கோடி ரூபாய் இந்திய அரசு வழங்கினாலும், அதன் தொடர் செயல்பாட்டுக்கான நிதிப் பொறுப்புக்கு தற்சார்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு 40%, கர்நாடகம் 40%, கேரளம் 15%, புதுச்சேரி 5% என்ற வகையில் பிரித்துக் கொள்ள வேண்டுமென்றும், தங்கள் தங்கள் மாநிலம் தொடர்பான ஆணைய உறுப்பினர்களின் செலவுகளை அந்தந்த மாநிலமே ஏற்க வேண்டும் என விதிகள் உருவாக்கப்பட்டன.

ஆணையத்தின் தலைவராக அமர்த்தப்படக்கூடியவரின் கல்வி மற்றும் பணித் தகுதிகளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியாக வரையறுத்தது. அதன்படி 2018 சூன் ஆணையும் வரையப்பட்டது. ஆனால், இப்போது, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பதிவு 33E-இன் வழியாக, இந்தத் தற்சார்பு முற்றிலும் குடை சாய்க்கப்படுகிறது.
இதற்கு மாநிலங்களிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் – 1956, வரம்பு விதிக்கும் என்பதால் அதைக் குறித்தப் பதிவு 32 (Entry 32) இப்போது நீக்கப்படுகிறது.

அதற்குப் பதிலாக, எல்லா ஆறுகளின் மீதும் முற்றதிகாரம் செலுத்தும் வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய பதிவு 7A சேர்க்கப்படுகிறது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 77 (3)-இன்படி, இந்தப் பணி ஒதுக்கீட்டு விதித் திருத்தம் செய்யப்படுவதாக இந்த அறிவிக்கைக் கூறுகிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்திலோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையோ மீறுவதற்கு இந்த 77 (3) குடியரசுத் தலைவருக்கு, அதாவது இந்திய அமைச்சரவைக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கிவிடவில்லை.

அரசமைப்புச் சட்டம் பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் அதிகாரச் சமநிலையை நிலை நிறுத்தும் நோக்கம் கொண்டது. எடுத்துக்காட்டாக, தலைமைத் தேர்தல் ஆணையரை உரிய சட்ட வழிமுறைப்படி இந்திய அரசுதான் அமர்த்திக் கொள்ள வேண்டும். பணியமர்த்தும் அதிகாரம் இந்திய அரசுக்கு இருந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தற்சார்பு அதிகாரத்தில் அரசு குறுக்கிட முடியாது. அரசமைப்புச் சட்டம் அதை அனுமதிக்காது. அதேபோலத்தான், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வெளியிடப்பட்ட அரசு அறிவிக்கை உறுதிப்படுத்திய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்சார்புத்தன்மையை ஒரு நிர்வாக விதித் திருத்தத்தின் மூலம் மாற்றியமைத்துவிட முடியாது.

பல்வேறு அமைச்சகங்களுக்கிடையில், பணி எளிமைக்காக (For the more convenient transaction of the business of the Government of India) பணி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தைத்தான் 77 (3) வழங்குகிறது. இதை முற்றிலும் தவறாகப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மீறுவதற்கான இந்த ஏற்பாடு, குடியரசுத் தலைவரின் வழியாக நரேந்திர மோடி ஆட்சி நிகழ்த்துகிற சட்டக்கவிழ்ப்பாகும்.

எல்லோரின் கவனமும், கவலையும் கொரோனா நெருக்கடியில் குவிந்திருக்கும்போது, நரேந்திர மோடி அரசு செய்திருக்கும் இந்த சர்வாதிகார நடவடிக்கை முற்றிலும் கோழைத்தனமானது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு எஞ்சியுள்ள மிகக் குறைந்த உரிமையையும் தட்டிப் பறிக்கும் இனப்பகை செயலாகும்! இதனை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!

இந்தியக் குடியரசுத் தலைவரின் அறிவிக்கை (S.O. 1371(E), 24.04.2020) வழியாக செய்யப்பட்டுள்ள பணி ஒதுக்கீடு விதித் திருத்தங்களை முற்றிலும் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நரேந்திர மோடி அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


Friday, April 24, 2020

செயல் மறவர் ந. மதியழகனுக்கு வீரவணக்கம்! பெ. மணியரசன் இரங்கல்!


செயல் மறவர் ந. மதியழகனுக்கு வீரவணக்கம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!


திருச்சி துவாகுடி ஜி.பி. இன்ஜினியரிங் தொழிற்சாலையின் தொழிற்சங்கச் செயலாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முன்னணிச் செயல் வீரருமான தோழர் ந. மதியழகன் நேற்று (23.04.2020) இரவு ஈரோடு மருத்துவமனையில் காலமான செய்தி பேரதிர்ச்சியைத் தருகிறது.
அஞ்சா நெஞ்சன், அறிவார்ந்த செயல்வீரன், பழகுதற்கு இனிய பண்பாளன் என்று தோழர் மதியின் குணநலன்களை அடுக்கலாம்.
இளம் அகவைதான்! இரண்டு மாதங்களுக்கு முன்பே உடல் நலம் குன்றிட தஞ்சைத் தனியார் மருத்துவமனையில் அவர் அண்ணன் வழக்கறிஞர் ந. துரைராசு கவனிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.
உடல் நலம் ஓரளவு குணமாகி திருச்சி பெல் நகரிலுள்ள தமது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். மறுபடியும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் மாமனார் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தோழர் மதி, ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு காலமாகிவிட்டார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு ஒரு செயல் வீரர் இழப்பு; சக தொழிலாளிகளுக்கு, வேலை இழந்த சோதனையான காலத்தில் வழிகாட்டிச் செயல்பட்ட தலைமைத் தோழர் இழப்பு; எல்லாவற்றிற்கும் மேலாகத் தோழர் ந. மதியழகனின் இளம் மனைவிக்கும் படித்துக் கொண்டிருக்கும் மகளுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!
இரண்டாண்டுகளுக்கு மேலாக, நிர்வாகக் கோளாறால் ஜி.பி. ஆலை மூடப்பட்ட நிலையில் தொழிலாளர்களின் சம்பள பாக்கி, மாற்று வேலை மற்றும் சட்டப்போராட்டம் என எல்லாவற்றிலும் முன்னணிப் பொறுப்பேற்று செயல்பட்டதுடன், தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய தமிழர் இன உரிமைப் போராட்டங்களிலும், மது ஒழிப்புப் போராட்டங்களிலும் - தான் ஈடுபட்டதுடன் தன் குடும்பத்தினரையும் ஈடுபட செய்த தோழர் மதிக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதியின் குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, April 23, 2020

உடதமிழ்நாட்டிலுள்ள புலம் பெயர் தொழிலாளிகளை அவரவர் மாநிலத்திற்குனே அனுப்புக! காணொலி வழியில் நடைபெற்ற.. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!



 உடதமிழ்நாட்டிலுள்ள புலம் பெயர் தொழிலாளிகளை

அவரவர் மாநிலத்திற்குனே அனுப்புக!


காணொலி வழியில் நடைபெற்ற..
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச்
செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், இன்று (22.04.2020) காலை - காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க. அருணபாரதி, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ .மாரிமுத்து, க. முருகன், இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி, தை. செயபால், மு. தமிழ்மணி, முழுநிலவன் ஆகியோரும், சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழு தோழர்கள் மூ.த. கவித்துவன், வே.க. இலக்குவன், பூதலூர் தென்னவன், தருமபுரி விசயன் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1
---------------------
இந்திய அரசே, தமிழ்நாடு அரசே! பேரிடர் துயர்
துடைப்புப் பணிகளை முழுமையாகச் செயல்படுத்துக!

கொரோனா நச்சுயிரி பெருந்தொற்று காரணமாக உலகையே உலுக்கிவரும் கோவிட் – 19 நோய், அன்றாடம் அதிர வைக்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக, கடந்த ஒரு மாதமாக மக்கள் முற்றிலும் முடங்கியிருக்கிறார்கள். இந்த முழு முடக்கம் 2020 மே 3 வரை தொடர வேண்டிய நிலை இருக்கிறதென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த நீண்டகால முடக்கம் மக்களின் சமூக – பொருளியல் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது. உழைப்பாளர்கள், உழவர்கள், சிறுதொழில் முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையும் இந்த முடக்கத்திற்குப் பிறகு புது தொடக்கம் காண வேண்டிய நிலை இருக்கிறது. பெருமளவு அரசு நிதி உதவி இல்லையென்றால், இவர்களை மீட்க முடியாது. ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், இந்தியாவும் முடங்க நேரிடும்!

எனவே, இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் கீழ்வரும் வகையில் மீட்பு செயல்பாட்டில் இறங்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது!

1. குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 10,000 ரூபாய் என்ற வகையில் ஏப்ரல், மே, சூன் ஆகிய மூன்று மாதங்களுக்கும் வழங்க வேண்டும். இத்தொகையினை குடும்பங்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு அவரவர் நியாய விலைக் கடைகளின் வழியாக வழங்கலாம். வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் ஆணையம் வழியே அவர்கள் இல்லத்திற்கே சென்று உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. தமிழ்நாடு அரசு ஏப்ரல் - மே மாதங்களுக்கு அரசி, பருப்பு உள்ளிட்ட இன்றியமையாப் பொருள்களை விலையில்லாமல் வழங்குவது பாராட்டுக்குரியது. வரும் சூன் மாதத்தில் மானிய விலையில் இன்றியமையாப் பொருட்கள் அனைத்தும் ரேசன் கடைகளின் வழியாக வழங்க வேண்டும்.

3. உழவர்கள் தங்கள் வேளாண் பணிகளைச் செய்வதற்கு ஆள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு, சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்வோரை, உழவர்களின் வேளாண் பணிகளுக்கும் ஈடுபடுத்தலாம். அவர்களுக்கு அரசு தரும் நாள் ஊதியம் 256 ரூபாயுடன், நில உரிமையாளர் ஒரு நாளைக்கு 100 ரூபாய் சேர்த்துத் தரும் ஏற்பாட்டைச் செய்யலாம். வேளாண் வேலைகளுக்கு உண்டாகும் ஆள் தட்டுப்பாட்டை இவ்வகையில் தீர்க்கலாம்.

4. வேளாண் விளை பொருட்களுக்கு இந்த நெருக்கடி காலத்தைக் கணக்கில் கொண்டு, எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படி சாகுபடிச் செலவுக்கு மேல் 50 விழுக்காடு சேர்த்து, குறைந்தபட்ச இலாப விலை வழங்கவும், வேளாண் விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யவும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

5. உழவர்களின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும் தாராளமாக வேளாண் கடன்கள் வழங்க ஆணைகள் பிறப்பிக்க வேண்டும்.

6. இந்திய உணவுக்கழகக் கிடங்குகளில் ஏறத்தாழ 52 இலட்சம் மெட்ரிக் டன் நெல், கோதுமை ஆகிய உணவு தானியங்கள் தேங்கிக் கிடக்கின்றன. கோடை காலத்து இருப்பு போக குறைந்தது, 32 இலட்சம் டன் அரிசி, கோதுமை ஆகியவை மிகை உபரியாக தேங்கியிருக்கின்றன. இவற்றை மாநில அரசுகளுக்கு இந்த நெருக்கடி காலத்தில் தாராளமாக வழங்காமல், அவற்றைக் கொண்டு, கிருமி நீக்கம் (Sanitizer) தயாரிப்பதற்கு வேண்டிய எத்தனால் தயாரிக்கப் போவதாக இந்திய அரசு அறிவித்திருப்பது கொடுமையானது!

எத்தனால் தயாரிக்க எவ்வளவோ வழிகள் இருக்கும்போது, இன்றைய நிலையில் உணவு தானியங்களை அதற்கு திருப்பிவிடுவதை இந்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, மிகை உபரி தானியக் கையிருப்பு அனைத்தையும் மக்களுக்குப் பயன்படும் வகையில் விலையில்லாமல் – போக்குவரத்துக் கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, மாநிலங்களுக்கு வழங்கிவிட வேண்டும்.

7. முறைசாரா தொழிலாளர் நல வாரியங்கள் வழியே வழங்கப்படும் கொரோனா துயர்துடைப்பு நிதி, அதில் உறுப்பினர் அட்டை பெற்றிராத முறைசாராத் தொழிலாளர்களுக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. குறு, சிறு நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பெற்றுள்ள தொழில் கடன்களுக்கு வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்துவிட்டு, 4% வட்டியில் தேவையான கடன் வழங்க வேண்டும்.

9. இந்திய அரசின் நிதியமைச்சர் சிறுதொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி தருவதாக அறிவித்திருப்பது முற்றிலும் செயலுக்கு வர முடியாத நிபந்தனைகளுடன் இருக்கிறது. 100 தொழிலாளர்களுக்கும் கீழே பணியாற்றும் சிறு தொழில்களுக்கு ஊதியம் வழங்குவது சரிதான். ஆனால், அந்நிறுவனத்தில் பணியாற்றும் 90 விழுக்காட்டிற்கு மேல் எண்ணிக்கையில் 15,000 மும், அதற்குக் குறைவான மாத ஊதியம் பெறுபவர்களும் இருந்தால்தான் இந்த ஊதிய நிதி கிடைக்கும் என்ற நிபந்தனை ஒரு கையால் கொடுப்பதை மறு கையால் தட்டி விடும் செயலாக இருக்கிறது.

எனவே, ஜி.எஸ்.டி. கணக்கில் வரக்கூடிய அனைத்து சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கும் அவர்களுடன் பணியாற்றும் தொழிலாளர்களில் 15,000 ரூபாயும் அதற்குக் கீழும் மாத ஊதியம் பெறும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இந்த ஊதிய நிதி கிடைக்க தொழிலாளர் துறையின் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவை அனைத்திற்கும் ஏறத்தாழ 6 இலட்சம் கோடி நிதி தேவைப்படக் கூடும். பன்னாட்டுச் சந்தையில் வரலாறு காணாத வகையில் எண்ணெய் விலை வீழ்ந்துள்ள இச்சூழலில், இந்திய அரசுக்குக் குறைந்தது 3 இலட்சம் கோடி நிதி இதன் மூலம் கிடைத்திருக்கும். எனவே, இப்போதைய நிதித் தேவையை எதிர்கொள்வது இந்திய அரசுக்கு எளிதானதுதான். தேவைப்படும் 6 இலட்சம் கோடி ரூபாயில் குறைந்தது 5 இலட்சம் கோடி ரூபாயை இந்திய அரசு வழங்க வேண்டும். மீதித் தொகையை மாநில அரசுகள் வழங்கலாம்.

10. எதிர்பாராத நிலையில், வரலாறு காணாத முறையில் தமிழ்நாடு அரசுக்கும், மற்ற சில மாநில அரசுகளுக்கும் கொரோனா தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான நலவாழ்வுத்துறை (Health) செலவினங்கள் பெரிதும் அதிகரித்துவிட்டன. இதை ஈடுகட்ட வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். இச்சூழலில், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 9,000 கோடி ரூபாய் இடர்நீக்க நிதியை இந்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத் தொகையான 12,253 கோடி ரூபாயை தராமல் சாக்குபோக்கு சொல்லிக் கொண்டு இழுத்தடித்துக் கொண்டிருப்பது, நிதி வகையில் தமிழ்நாடு அரசை நிலைகுலையச் செய்யும் சட்டப்புறம்பான நடவடிக்கையாகும். உடனடியாக எந்தத் தாமதமும் இன்றி, தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி. வரி பங்குத் தொகையை இந்திய அரசு வழங்க வேண்டும்.

11. தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களும், அவற்றின் ஊழியர்களும் தமிழ்நாடு அரசிடமே கொரோனா துயர் துடைப்புப் பணிக்கான துயர் துடைப்பு நிதியை வழங்க வேண்டும். கொரோனா துயர் துடைப்புக்காக தமிழ்நாட்டிலுள்ள பெருநிறுவனங்கள் தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் நன்கொடை நிதி, பெருநிறுவன சமூகப் பொறுப்பு (Corporate Social Responsibiilty - CSR) செலவினங்களில் வராது என்ற இந்திய அரசின் அறிவிப்பு, கொரோனாவுக்கு எதிரான போரில் நேரடியாகக் களமாடி வரும் மாநில அரசுகளுக்கு நிதி சேரக் கூடாது என்ற உள்நோக்கத்திலான அறிவிப்பாகும். இந்த அறிவிப்பை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் முன்னுரிமை அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு நிதி அளித்து, கொரோனா துயர்துடைப்புப் பணியில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

தீர்மானம் - 2
---------------------
சித்த மருத்துவம் உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து கொரோனாவுக்கு
சிகிச்சை அளிக்க வேண்டும்!

கொரோனா நச்சுயிரிக் கொள்ளை நோய்க்கு இதுவரை அலோபதியில் மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. நோய் எதிர்ப்பாற்றலை ஊக்கப்படுத்துவதற்காக மலேரியாக் காய்ச்சலுக்கு ஏற்கெனவே கொடுக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோக்யூன், அசிட்ரோமைசின் மருந்துகளைக் கொடுக்குமாறு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமாக இம்மருந்துகளைக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு சித்த மருத்துவம் உள்ளிட்ட மாற்று மருத்துவங்களையும் இணைத்து கொரோனா நோயிலிருந்து பாதுகாக்க மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். அலோபதியை மட்டும் நம்பியிருத்தல் கூடாது! தமிழ்நாட்டு மாற்று மருத்துவ முறை ஆய்வாளர்களும், மரபு மருத்துவர்களும் இதற்கான வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்க வேண்டும்.

சீனாவில் அலோபதியை மட்டும் நம்பியிருக்காமல், அவர்களது மரபு மருத்துவத்தையும் இணைத்து ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளித்து, கொரோனா நோயிலிருந்து தங்கள் மக்களைப் பாதுகாத்துள்ளார்கள். இந்தியாவிற்குள் கேரளாவில் அதுபோலவே, மண்ணின் மருத்துவத்தை இணைத்து ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளித்து முன்னேற்றம் கண்டுள்ளாகள். எனவே, சித்த மருத்துவம், ஆயுர் வேத மருத்துவம் உள்ளிட்ட மரபான மருத்துவங்களையும் இணைத்து கொரோனாவுக்கு ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

சிக்குன் குனியாவுக்கு நிலவேம்பு சாறு அளித்தும், டெங்குக் காய்ச்சலுக்கு பப்பாளி இலைச்சாறு வழங்கியும் நாம் கடந்த சில ஆண்டுகளில் வெற்றி கண்டுள்ளோம் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு மருத்துவ முறைகளுக்கு உரிய மதிப்பளித்து, தகுதியான சித்த மருத்துவர்களின் ஆய்வுக் கருத்துகளைக் கேட்டு கொரோனாத் தொற்று நோய்க்கு முன் தடுப்பு மருந்தும், நோய் தீர்க்கும் மருந்தும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது!

தீர்மானம் - 3
---------------------
தமிழ்நாடு அரசு வெளி மாநிலத் தொழிலாளர்களை
அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்!

வெளி மாநிலத் தொழிலாளர்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக, இங்கேயே மண்டபங்களில் அடைத்து வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும். நோய்த் தொற்று போன்ற பெருந்துயர் காலங்களில் அவரவரும் சொந்தக் குடும்பத்தோடு சொந்த ஊரில் இருக்க விரும்புவது இயல்பானது; அது அடிப்படையான உளவியல் தேவையும் ஆகும்.

கொரோனா பெருந்தொற்று வெளிநாட்டினர் வழியாகவும், வெளி மாநிலத்தவர் வழியாகவும் தான் அதிகம் வருகிறது என்ற இன்றைய நிலையிலாவது, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டுத் தொழிலகங்களிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பணியாற்றக்கூடிய வெளி மாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.

எனவே, தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் பேசி தொலைதூர சிறப்புத் தொடர்வண்டிகளை ஏற்பாடு செய்து, வெளி மாநிலத் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்ப உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து எல்லையோர மாவட்டங்களுக்கு வந்திருக்கிற வெளி மாநிலத் தொழிலாளிகளுக்கு சிறப்புப் பேருந்து வசதிகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் தொடர்வண்டி மற்றும் பேருந்து பயணங்களின்போது, கொரோனா பெருந்தொற்றைத் தவிர்ப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன்படி அனுப்பலாம்.

அதேபோல், வெளி மாநிலங்களில் சிக்கியிருக்கிற தமிழ்த் தொழிலாளர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர இதே போன்ற சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிற்குள்ளேயே பிற மாவட்டங்களில் வேலை பார்க்கும் தமிழர்கள் அங்கங்கே சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க, அதற்குரிய போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

தீர்மானம் - 4
---------------------
கொரோனா நோய்த்தடுப்பில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும்
உரிய மதிப்பு வழங்க வேண்டும்!

கொரோனா நச்சுயிரி நோய்த் தடுப்புப் போரில் முன் வரிசைப் படைபோல நிற்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர், அந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த செய்தி வேதனையைத் தருகிறது. அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது!

கொரோனா நோயால் இறந்த மருத்துவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய, சில இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியைத் தருகிறது. அவர்கள் வன்முறையில் இறங்கியதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இறந்தவரால் கொரோனா நச்சுயிரியைப் பரப்ப முடியாது என உலக பொதுநல நிறுவனமே (WHO) அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையாததால் இதுபோன்ற வருந்தத்தக்க நிகழ்வுகள் நடக்கின்றன.

தமிழ்நாடு அரசு, பொது மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியதை உணர வேண்டும். மக்களிடையே உள்ள தேவையற்ற அச்சத்தைக் களையும் வகையில், கொரோனாவில் இறந்த மருத்துவர்கள் உடலை அரசே உரிய முறையில் மதிப்பளித்து தகனம் / அடக்கம் செய்ய வேண்டும். அதேபோல், அறியாமையால் விழிப்புணர்வின்றி இறந்தவர் உடலைப் புதைக்கக் கூடாதெனப் போராடும் மக்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு சரியல்ல. அப்போக்கைக் கைவிட வேண்டும்.

கொரோனா நோய்த் தடுப்பு வீரர்களாகப் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நமக்காகத்தான் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டு பணி செய்கிறார்கள் என்ற மெய்நடப்பை உணர்ந்து கொண்டு, அவர்களையும் நம் உறவினர்களாகக் கருதி, பொது மக்கள் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் - 4
---------------------
கொரோனா கெடுபிடி காலத்திலும்
மோடி அரசின் தொடரும் அடக்குமுறை!

அரசின் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, கொரோனா பெருந்தொற்றிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டிய பெரும் கடமை உள்ள சூழலிலும், மோடி அரசு தனது அதிகாரக்குவிப்பு அடக்குமுறை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு இந்தியா முழுவதுக்குமான முழு முடக்கத்தை தலைமையமைச்சர் நரேந்திர மோடி கடந்த 2020 மார்ச்சு 24 இரவு 8 மணிக்கு அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்புக்குப் பிறகு 2 மணி நேரம் கழித்தும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி இராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா நடத்திய பொறுப்பற்ற செயலை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டிய “தி வயர்” (The Wire) – இணைய இதழின் ஆசிரியர் – புகழ்பெற்ற ஊடகவியலாளர் சித்தார்த் வரதராஜன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் – 505 (2)இன் கீழ் சமூக மோதலை உண்டாக்க முயற்சித்தாக குற்றவியல் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

விசாரணைக் கைதிகளையும், சிறு குற்றங்களுக்காக சிறையிலுள்ள கைதிகளையும் பிணையிலோ, முன் விடுதலையிலோ சிறையிலிருந்து வெளிவர ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, முன் விடுதலை – பிணை விடுதலை ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

இதற்கு நேர்மாறாக நரேந்திர மோடி அரசு, பீமா கொரேகான் வழக்கில் மனித உரிமைச் செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே மற்றும் கல்வியாளர் பேராசிரியர் கவுதம் நவலாக்கா ஆகியோரை கைது செய்திருக்கிறது. இதே வழக்கில் மக்கள் கவிஞர் வரவரராவ், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், அருண் ஃபரைரா, கோன்சல்வஸ் உள்ளிட்ட மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிணை கிடைக்காமல் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் மீதும் கொடிய சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) பாய்ந்திருக்கிறது.

அதேபோல், ஊடகவியலாளர் என்ற வகையில் செய்தி வழங்கும் தனது கடமையைச் செய்த இந்து செய்தியாளர் அஷிக், ஒளிப்பட ஊடகவியலாளர் ஜாஸ்ரா ஆகியோர் சம்மு காசுமீர் மாநிலத்தில் இதே UAPA சட்டத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தங்கள் வளாகத்திற்குள்ளேயே போராடிய தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும், இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டு, கைது செய்யப்படுகின்றனர்.

முகநூல் பதிவுகளுக்காக பல பேர் மீதும் அன்றாடம் கொடிய வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. மக்கள் கவனம் கொரோனா நெருக்கடியில் இருக்கும்போது, நாடு முழுவதும் முழு முடக்கத்தில் இருக்கும்போது, எந்த வகை சனநாயக வழிப்பட்ட எதிர்ப் போராட்டங்களையும் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.

இந்த சூழலைப் பயன்படுத்தி, நரேந்திர மோடி அரசும், மாநில அரசுகளும் அடக்குமுறை நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தனது ஆரியத்துவ அடக்குமுறைப் பயணத்தில் நரேந்திர மோடி இன்னும் தீவிரமாகச் செயல்படுவார் என்பதன் அறிகுறியாகவே இந்தக் கைதுகள் உள்ளன.

இந்திய அரசு இந்த வழக்குகள் அனைத்தையும் கைவிட்டு, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் - 5
---------------------
இந்திய அரசு மின்சார சட்டத் திருத்தத்தை
திரும்பப் பெற வேண்டும்!

இந்திய அரசு நடப்பிலுள்ள மின்சார சட்டம் – 2003இல் திருத்தங்கள் செய்வதாகக் கூறி, முற்றிலும் புதிய சட்டமாக “மின்சாரத் திருத்தச் சட்ட வரைவு – 2020” (Electricity (Amendment) Bill, 2020) முன்வைத்திருக்கிறது.

ஏற்கெனவே, மின்சார உற்பத்தி பெருமளவு தனியார்மயமாகிவிட்டது. அதிக விலை கொடுத்தும், உற்பத்தியும் வழங்கலும் நடக்காத காலங்களிலேயே தக்க வைப்புக் கட்டணம் (Retaining Charge) என்ற பெயரில் அரசுப் பணத்தை வாரி வழங்கியும் தனியார் நிறுவனங்கள் ஊதிப் பெருக்க வைக்கப்பட்டுள்ளன. ஆயினும், இதுவரை பெருமளவு மின்சார வழங்கல் என்பது அரசு நிறுவனங்களின் வழியாகவே நடந்து வருகிறது.

இந்தப் புதிய வரைவு இதையும் தனியாருக்கு வழங்க ஏற்பாடு செய்கிறது. வீடுகளுக்கும், தெருக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மின்சாரம் வழங்குவதை தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகாலக் குத்தகைக்கு விட இத்திருத்தச் சட்டம் வழி ஏற்படுத்துகிறது.

வீடுகளுக்கு மானியக் கட்டணத்திலும், வேளாண்மைக்கும் குடிசை வீடுகளுக்கும் கட்டணமின்றியும் மின்சாரம் வழங்கும் மானிய முறையை (Cross Subsidy) முற்றிலும் கைவிட வேண்டுமெனவும் நுகர்வோரிடம் முழுச் செலவையும் கட்டணமாக வசூலித்துவிட வேண்டுமென்றும் இத்திருத்தச் சட்டம் ஆணையிடுகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக மின்சார உற்பத்தி – வழங்கல் அனைத்தையும் மாநில அதிகாரத்திலிருந்துப் பறித்து, இந்திய அரசின் கைகளுக்குக் கொண்டு செல்கிறது.

“தேசியக் கல்விக் கொள்கை” வழியாக செய்திருப்பது போலவே, அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே மாநில அதிகாரத்திலுள்ள மின்சாரம் என்பதை முற்றிலும் இந்திய அரசின் அதிகாரத்திற்குப் பறித்துக் கொடுப்பதை இத்திருத்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனவே, மாநில அதிகாரத்தைப் பறிக்கிற - மக்களுக்கு மானிய விலையில் மின்சாரம் கிடைப்பதைத் தட்டிப் பறிக்கிற – மின்சார உற்பத்தியையும், வழங்கலையும் முற்றிலும் தனியார்மயமாக்குகிற இப்புதிய வரைவு மின்சார சட்டத்திருத்தம் 2020-ஐ இந்திய அரசு கைவிட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு இதை முற்றிலும் எதிர்க்க வேண்டுமெனவும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது!

தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் அனைத்தும் மின்சார சட்டத்திருத்தம் – 2020-ஐ எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்!

தீர்மானம் - 6
---------------------
டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுக!

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் டாஸ்மாக் கடைகளை மூடியதனால், குடிப்பழக்கத்திலிருந்த பெரும்பாலோர் குடியைக் கைவிட்டு இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை மீண்டும் குடிகாரர்களாக மாற்றவும், இளைஞர்களை புதிய குடிகாரர்களாக உருவாக்க வாய்ப்பளிக்கக் கூடிய வகையிலும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது!

அதேபோல், தமிழ்நாட்டிலுள்ள சாராய உற்பத்தித் தொழிற்சாலைகள் அனைத்தையும் இப்போது மூடியுள்ளதுபோல் நிரந்தரமாக மூடிவிட ஆணையிட வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, April 13, 2020

கொரோனாவிலும் தில்லியின் இன ஒதுக்கல் அரசியல்! சென்னையில் இன இரண்டக அரசியல்! பெ. மணியரசன்.


கொரோனாவிலும் தில்லியின் இன ஒதுக்கல்

அரசியல்! சென்னையில் இன இரண்டக அரசியல்!



ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


கூரைக்குக் கீழே மனித வாழ்க்கை குறுகிக் கிடக்கும் கொரோனாக் கொடூர காலத்திலும் வழக்கம்போல் அ.தி.மு.க. – தி.மு.க. வாய்மோதல் இலாவணி அரசியல் நடத்துவது வேதனை தருகிறது.

எல்லா வகையிலும் தமிழ்நாட்டைக் காலி செய்து கொண்டிருக்கும் இந்திய ஆட்சியாளர்கள் கொரோனாக் காலத்திலும் இனப்பாகுபாட்டுடன் தமிழர்களைப் புறக்கணிக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டின் கண்டனமும் இப்போது தில்லியின் பக்கமல்லவா திரும்ப வேண்டும்!

எசமானரின் வாயசைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அ.தி.மு.க. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எதிர்க்கட்சியான தி.மு.க.வோ, இக்கட்டில் மாட்டிக் கொண்டதா ஆளுங்கட்சி என்று எள்ளி மகிழ்கிறது!

தமிழ்நாட்டில் கொரோனா பரவும் வேகமோ மக்களைக் குலை நடுங்கச் செய்கிறது. நேற்று (12.04.2020) ஒரு நாளில் மட்டும், தமிழ்நாட்டில் புதிதாக 106 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள். வீட்டுக் கண்காணிப்பில் மட்டும் தமிழ்நாட்டில் 39 ஆயிரம் பேர் இருக்கிறார்களாம்.

ஒருவருக்கு வந்திருக்கும் நோய் கொரோனோவா இல்லையா என்று கண்டறிய இப்போது 14 நாட்களுக்கு மேல் ஆகிறது. அதற்கான ஆய்வகங்களும் சில இடங்களில் மட்டுமே இருக்கின்றன. அரை மணி நேரத்தில் கொரோனாவைக் கண்டறியும் கருவியை சீனா உற்பத்தி செய்வதாக அறிந்து, தமிழ்நாடு அரசு 4 இலட்சம் மிகு விரைவு சோதனைக் கருவிகள் (Rapid Testing Kits) சீனாவில் விலைக்கு வாங்கக் கொள்முதல் ஆணை (Order) கொடுத்துள்ளது.

இந்த சோதனைக் கருவி மட்டுமின்றி, வெண்டிலேட்டர் உள்ளிட்ட எந்த மருத்துவக் கருவிகளையும் மாநில அரசுகள் நேரடியாக வெளிநாடுகளிலிருந்து வாங்க அனுமதி இல்லை என்று நரேந்திர மோடி அரசின் பொதுநலம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தாக்கீது அனுப்பிவிட்டது.

தமிழ்நாட்டிற்கு சீனாவிலிருந்து வந்து கொண்டுள்ள மிகு விரைவு சோதனைக் கருவிகளை இந்திய அரசு எடுத்துக் கொள்ளும் என்றும், அது எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் என்றும் கூறப்படுகிறது. நேரடியாக இப்படிச் சொல்லாவிட்டாலும் இதைத் தமிழ்நாடு அரசின் பொது நலத்துறையைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர் சொன்னதாக இந்து ஆங்கில நாளிதழ் நேற்று (12.04.2020) செய்தி வெளியிட்டிருந்தது.

“மிகு விரைவு சோதனைக் கருவிகள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.. மிகு விரைவுக் கருவிகள் எங்களுக்கு வந்து சேருவதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது… தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (Tamilnadu Medical Services Corporation) 4 இலட்சம் மிகு விரைவு சோதனைக் கருவிகள் வாங்கிட கேட்பாணைகள் (Orders) கொடுத்துள்ளது”.

பெயர் குறிப்பிடாத தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 11.04.2020 அன்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் காணொலிக் கருத்தரங்கில் பேசிய போது, “மிகு விரைவு சோதனைக் கருவிகளை விரைவாகத் தருவிக்க (Provide) ஏற்பாடு செய்யுமாறு” வேண்டுகோள் விடுத்ததாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பே கூறுகிறது. (The Hindu, 12.04.2020).

சீனாவிலிருந்து தமிழ்நாடு அரசு தருவித்த மிகுவிரைவு சோதனைக் கருவிகள் தமிழ்நாட்டிற்குக் கிடைக்காமல் தடுத்தது அரசமைப்புச் சட்டப்படியும் தவறு, மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசர அறத்தின்படியும் தவறு என்பதை சுட்டிக்காட்டி, அக்கருவிகள் உடனடியாக தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் வெளிப்படையாக ஏன் அறிக்கை வெளியிடக் கூடாது?

அவ்வாறு சீனாவிடம் தமிழ்நாடு அரசு அக்கருவிகளை வாங்க கேட்பாணை கொடுக்கவில்லை, இந்திய அரசும் தடுக்கவில்லை என்றால், அதையாவது தமிழ்நாடு முதல்வர் தெளிவுபடுத்தலாம். இதுபற்றிய விவாதம் சமூக வலைத்தளங்களில் அல்லோலகல்லோலப்படுகிறது. சீனாவிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மிகு விரைவு சோதனைக் கருவிகளை இந்திய அரசு தடுக்கிறது என்று நான் கொடுத்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுள்ளது. #IndiaBetraysTamils என தமிழ்நாட்டு இளையோர் அதை தன்னெழுச்சியாக டிரெண்டிங் செய்துள்ளனர்.

எதிர்க்கட்சியான தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த மிகு விரைவு சோதனைக் கருவிகள் வருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விளக்கமாக ஏன் பேசவில்லை? ஏதோ மர்மம் நடப்பதாக சொல்லி ஒதுங்கிக் கொள்வது ஏன்? கொரோனா மருத்துவத்திற்குத் தேவைப்படும் மருத்துவக் கருவிகள், N95 முகக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள் முதலியவற்றை மாநில அரசுகள் நேரடியாகக் கொள்முதல் செய்யக்கூடாது; நடுவணரசின் பொதுநலத்துறை கொள்முதல் செய்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் என்று இந்திய அரசின் பொதுநலத்துறை 02.04.2020 நாளிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அச்சுற்றறிக்கையை மு.க. ஸ்டாலின் ஏன் எதிர்க்கவில்லை?

நிதி அளிப்பதில் இனப்பாகுபாடு
-------------------------------------------------
கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்களுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் தேசியப் பேரிடர் நிதியிலிருந்து தருமாறு மோடி அரசை தமிழ்நாடு முதல்வர் கேட்டார். மோடி அரசு கொடுத்தது 870 கோடி ரூபாய் மட்டுமே!

இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் மராட்டியம்; இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு! மராட்டியத்திற்கு 1650 கோடி ரூபாய் தரும்போது, தமிழ்நாட்டிற்கு 1200 கோடி ரூபாயாவது தந்திருக்க வேண்டாமா? வெறும் 870 கோடிதான் கொடுத்திருக்கிறது மோடி அரசு. தமிழ்நாட்டின் அளவிற்குக் கொரோனா பாதிப்பில்லாத உ.பி.க்கு 966 கோடி ரூபாய்! மத்தியப் பிரதேசத்திற்கு 910 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது இதே மோடி அரசு!

தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது, மிக மிகக் குறைந்த அளவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உ.பி., ம.பி., பீகார் மாநிலங்களுக்குத் தமிழ்நாட்டை விட மிகக் கூடுதலாக நிதி அளித்தது ஏன்? இதுதான் பா.ச.க. – ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தமிழர்களுக்கு எதிராகக் கடைபிடிக்கும் இன ஒதுக்கல் கொள்கை! தமிழர்கள் உயிர் அவ்வளவு மலிவானது!

மராட்டியத்திற்கு அடுத்த நிலையில், இந்திய அரசுக்கு வரிகள் மூலமும், தொழிற்சாலைகள் மூலமும் அதிக வருமானம் தருவது தமிழ்நாடு! கொரோனா நிதி தருவதில் மோடி அரசு இனப்பாகுபாடு காட்டுகிறது என்று சொல்லி இடித்துரைக்கும் கொள்கையும் துணிச்சலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இல்லை! இந்த அநீதியை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போர்க்குரல் எழுப்பியிருக்க வேண்டாமா? தமது அறிக்கையில் போகிற போக்கில் குறைவான தொகை என சுட்டிக் காட்டுகிறார்.

ஜி.எஸ்.டி. வரியில் இந்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பாக்கித் தொகை 12,200 கோடி ரூபாய்! அறவிக்கப்பட்ட மானியங்களில் தர வேண்டிய பாக்கித் தொகை சற்றொப்ப 10 ஆயிரம் கோடி ரூபாய்! வெள்ளைக்காரனின் கிழக்கிந்தியக் கம்பெனி தமிழ்நாட்டிலிருந்து அள்ளிக் கொண்டு போனதை விட பல நூறு மடங்கு கூடுதலாக நிதியை அள்ளிக் கொண்டு போகிறது புதுதில்லி! ஆனால் சட்டப்படி தர வேண்டிய தொகைகளைக் கூடத் தராமல் கிள்ளிப் போடுகிறது. கெஞ்சுவதைக் கூட வெளிப்படையாகக் கெஞ்ச அஞ்சுகிறது அ.தி.மு.க. அரசு. தமிழர்களுக்கு வந்துள்ள இந்த இழப்புகளையும், நெருக்கடிகளையும் ஆளுங்கட்சிக்கு வந்த நெருக்கடிகளாகக் கருதி இரசிக்கிறது எதிர்க்கட்சியான தி.மு.க.!

மோடியுடன் காணொலியில் கலந்துரையாடிய போது, ஓர் உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார் எடப்பாடியார். பேரிடர் இழப்பீடு நிதி வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கு 120.33 விழுக்காடு உயர்த்தியுள்ளீர்கள்; தமிழ்நாட்டிற்கு 64.65 விழுக்காடு மட்டுமே உயர்த்தியுள்ளீர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்!

தமிழர்களே, இப்பொழுதாவது புரிகிறதா? இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் (Apparthied) கொள்கையைக் கடைபிடிக்கிறது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்பி வருகிறதே, அது உண்மைதான் என்பதைத் தமிழர்களே இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்!

இந்தப் பாகுபாட்டை எடுத்துச் சொன்ன முதல்வர் பழனிச்சாமி, தமிழ்நாட்டிற்குரிய பங்கு நிதியைக் கொடுங்கள் என்று ஓங்கிக் குரல் கொடுத்தாரா? இல்லை! கூடுதலாகக் கடன் வாங்குவதற்கு மோடியிடம் அனுமதி கோரினார்! மாநில அரசின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டுத் தொகையில் (ஜி.டி.பி.) 3 விழுக்காடு பற்றாக்குறை வரும் அளவிற்கு மட்டுமே திட்டங்கள் தீட்ட வேண்டும் என்ற வரம்பை 4.5 விழுக்காடு வரை பற்றாக்குறை விழுவதை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

இதன் பொருள் என்ன? இப்பொழுது மாநிலத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள வரம்பைத் தாண்டி 4.5% பற்றாக்குறை வரும் அளவிற்குக் கடன் வாங்க அனுமதிக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்!

இப்பொழுதே தமிழ்நாடு அரசுக்கு 5 இலட்சம் கோடி அளவிற்குக் கடன் உள்ளது. இன்னும் அது அதிகரிக்க வேண்டுமாம்! தமிழர்களின் பொருளாதார நிலை என்னாவது?

இந்திய அரசே, நீ தமிழ்நாட்டின் உரிமைகளை எவ்வளவுப் பறித்துக் கொண்டாலும், தமிழ்நாட்டு நிதி வளத்தை எவ்வளவு சூறையாடிக் கொண்டாலும், உன்னை எதிர்த்துப் போர்க்குரல் கொடுக்க மாட்டோம்; எவ்வளவு அதிகாரத்தைக் குறைத்துக் கொண்டாலும் தமிழ்நாடு முதலமைச்சர் பதவி எங்களுககு வேண்டும் – இது எங்கள் ஒரே இலட்சியம் என்ற அளவில்தான் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் செயல்படுகின்றன.

தமிழின உணர்வாளர்களே, அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளின் இன இரண்டகத் தன்னல அரசியலை அடையாளம் காண வேண்டியது தேவை! ஆனால், அது மட்டுமே நம் வேலையல்ல; நம் வாரிசுகள் பிச்சை ஓடு ஏந்தாமல், தாயகம் இழந்து ஏதிலிகளாய் அலையாமல் தடுக்க வேண்டுமானால், இலட்சியத் தமிழ்த்தேசியத்தைப் பெரும்பாலான தமிழர்கள் ஏற்கும்படிச் செய்ய வேண்டும்! அது மட்டுமல்ல, 24 மணி நேரமும் விழிப்போடிருந்து கொரோனாக் கொடூரத்திலிருந்து விடுபட அரசு செய்ய வேண்டிய பணிகளைச் செய்யுமாறு குரல் கொடுக்க வேண்டும். அழுத்தம் தர வேண்டும். நம் மக்களைக் காக்க வேண்டும்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, April 11, 2020

தமிழ்நாட்டுக்கு வந்த சீனாவின் கொரோனா சோதனைக் கருவிகளை இந்திய அரசு தடுத்திருப்பது மனிதகுலத்திற்கு எதிரான அநீதி! பெ. மணியரசன் அறிக்கை!


தமிழ்நாட்டுக்கு வந்த சீனாவின் கொரோனா
சோதனைக் கருவிகளை இந்திய அரசு தடுத்திருப்பது
மனிதகுலத்திற்கு எதிரான அநீதி!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


கொரோனா கொடுநோயை எதிர்த்துப் போரிடுவதில் முதல் தடையாக இருப்பது, அதை உடனடியாகக் கண்டறிய முடியாத சிக்கல்தான். 14 நாட்களுக்கு மேல் பாதுகாப்பில் வைத்து ஆய்வு செய்தால்தான் கொரோனா கொள்ளை நோய் இருக்கிறதா, இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் நிலை இருக்கிறது.
கொரோனாவுக்கு முதலில் பலியான சீன நாடு, அந்தத் தடையை உடைக்கும் வகையில், புதுக்கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. அரை மணி நேரத்தில் சோதனை செய்து கொரோனா நோயா இல்லையா எனத் தெரிவிக்கக் கூடிய மிகு விரைவுக் கருவி (Rapid Testing Kit) அது.
தமிழ்நாடு அரசு சீனாவிடமிருந்து 4 இலட்சம் மிகு விரைவு சோதனைக் கருவிகளை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தது. அவை ஏப்ரல் 9 அன்று தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏப்ரல் 10 அன்று முழுமையான மக்கள் பயன்பாட்டிற்கும் அவை கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால், இந்திய அரசு இடைமறித்து இக்கருவிகளை தமிழ்நாடு அரசு நேரடியாக வாங்குவதற்கு தடை விதித்துள்ள கொடிய செய்தி, குத்தீட்டியாய் நெஞ்சைத் தாக்குகிறது. இந்திய நலவாழ்வுத் துறை செயலாளர், மாநில அரசுகளின் நேரடிக் கொள்முதலுக்குத் தடை விதித்து அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
மனித குலத்தையே அழிக்கும் கொரோனா போன்ற கொடிய நோய்த் தாக்குதல் தீவிரமாக இருக்கும் நிலையில், மக்கள் உயிர் காக்கும் போர்க் கால நடவடிக்கையாக மாநில அரசு வெளிநாடுகளிலிருந்து சிகிச்சைக் கருவிகளை வாங்குவதற்கு அதிகாரமில்லை, உரிமையில்லை என்று நடுவண் அரசு தடுத்திருப்பது மனித குலத்திற்கே எதிரான கொடிய செயலாக உள்ளது.
தமிழ்நாடு அரசு வாங்கிய கருவிகளை இந்திய அரசு கைப்பற்றி, அதை அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மகாராட்டிரத்தை அடுத்து, இந்தியாவிலேயே மிகக்கடுமையாக கொரோனா நோயால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள தமிழ்நாட்டுக்கு கொரோனா துயர் துடைப்பு நிதியாக - வெறும் 314 கோடி ரூபாயை ஒதுக்கியும், தமிழ்நாட்டை விட குறைவான பாதிப்பை சந்தித்துள்ள இந்தி மாநிலங்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியும் இந்திய அரசு இனப்பாகுபாட்டுடன் நடந்து கொண்டு வருகிறது.
இந்நிலையில், இப்போது மருத்துவத் துணைக் கருவிகளை, இந்திய அரசு தானே கொள்முதல் செய்து பகிர்ந்தளிக்கப் போவதாக தெரிவித்துள்ள செய்தி, இதிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் என்ற அச்சத்தைத் தருகிறது. தொடர்ச்சியாக தமிழ்நாட்டை இன அடிப்படையில் வஞ்சித்து வரும் இந்திய அரசு, இந்த அவசரகால சூழலிலும் இவ்வாறு செய்வது தமிழர்களின் உயிரோடு விளையாடும் மிகக்கொடிய செயலாகும்!
இந்திய மக்களைப் பாதுகாப்பதற்காக இரவும் பகலும் அயறாது பாடுபடுவதாகத் தலைமை யமைச்சர் நரேந்திர மோடி அவர்களைப் பற்றி செய்திகள் வந்து கொண்டுள்ளன. ஆனால், எவ்வளவு பெரிய மனிதப் பேரழிவு வந்தாலும், அந்த நிலையிலும் மாநில உரிமைகளைப் பறித்து டெல்லியில் அதிகாரங்களைக் குவிப்பதில்தான் முதன்மைக் கவனம் ஆட்சியாளர் களுக்கு இருக்கும் என்றால், இக்கொடுமையை என்னவென்று சொல்வது?
இந்நேரத்தில், வட அமெரிக்காவில் கலிபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப் ஆட்சியின் செயலற்ற தன்மையை எதிர்த்து, தனிநாட்டுப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். கொரோனா கொள்ளை நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையான மருத்துவக் கருவிகளையும், மருந்துகளையும் உடனுக்குடன் கிடைக்கச் செய்வதற்கு டிரம்ப் நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை என்று குற்றம்சாட்டி, கலிபோர்னியா இனி தனி அரசு என்றும் நேரடியாக வெளிநாடுகளிலிருந்து மருந்துகளையும், கருவிகளையும் கலிபோர்னியா இறக்குமதி செய்து கொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா கொள்ளை நோயிலிருந்து மனிதர்களைப் பாதுகாப்பது எல்லாவற்றையும் விட உடனடித் தேவையாகும். எனவே, மாநில அரசுகள் நேரடியாக மற்ற நாடுகளிலிருந்து மருந்துவக் கருவிகள் வாங்குவதற்கு விதித்திருக்கும் தடையை இந்திய அரசு முழுமையாக நீக்க வேண்டும்.
தமிழ்நாடு முதல்வர் கேட்ட 9,000 கோடி ரூபாய் கொரோனா நிதியை உடனடியாக இந்திய அரசு அளிக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேவையற்ற குறுக்கீடுகளை இந்திய அரசு செய்ய வேண்டியதில்லை.
சீன நாட்டிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு வந்து கொண்டிருக்கும் மிகு விரைவு சோதனைக் கருவிகளை தமிழ்நாடு அரசு எடுத்துப் பயன்படுத்த வழிவிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு எதிராக கடைபிடிக்கும் இனப்பாகுபாட்டு அணுகுமுறையை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT