உடனடிச்செய்திகள்

Monday, December 25, 2006

தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு சென்னையில் இரங்கல் கூட்டம்

தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு சென்னையில் இரங்கல் கூட்டம் PDF Print E-mail
Wednesday, 20 December 2006
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு இரங்கல் தெரிவித்து சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெற்றது.

தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் "தேசத்தின் குரல்" மறைவு குறித்த இரங்கல் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உலகத்தமிழர் பேரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமான பழ.நெடுமாறன் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது: 

சுதந்திரத்துக்காக போராடும் இந்த இயக்கத்தை உலகம் அறியச் செய்தவர் அன்ரன் பாலசிங்கம். தம்பி பிரபாகரனும், அவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு ஈருடல் ஓருயிராக வாழ்ந்தனர். பிரபாகரனுக்கு சர்வதேச அந்தஸ்து கிடைப்பதற்கு அவர் காரணமாக இருந்தார்.





அவரை கொலை செய்தால் பிரபாகரனின் வலது கையை முறித்தது போல் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் கொலை செய்ய முயற்சி செய்த போது எதிரிகளிடம் இருந்து அன்ரன் பாலசிங்கம் பலமுறை உயிர் தப்பிப் பிழைத்தார்.

பாலசிங்கம் ஒருமுறை உடல்நலன் குறைந்த போது அவரால் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதற்காக இலங்கையில் இருந்து செல்ல முடியவில்லை. அப்போது சந்திரிகா ஆட்சி நடைபெற்றது. அன்ரன் பாலசிங்கத்தை கடல் மார்க்கமாக பிரபாகரன் அனுப்பி வைத்தார்.





பாலசிங்கம் வெளிநாடு சென்று சேர்ந்த தகவல் கிடைக்கும் வரை அதே கடற்கரையில் ஒருநாள் முழுவதும் பிரபாகரன் காத்திருந்தார். தனது உயிருக்கு ஆபத்து இருக்கும் என்று தெரிந்தும் பிரபாகரன் அங்கே காத்திருந்தது அவர்களுக்கு இடையேயான நட்பின் ஆழத்தை காட்டுகிறது.

தமிழீழம் அமைந்ததும் முக்கிய பொறுப்புக்கு அன்ரன் பாலசிங்கம் வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கான வாய்ப்பு அருகில் இருந்தாலும் நம்மை விட்டு பிரிந்த அவருக்கு வீர வணக்கங்கள் என்றார் அவர்.





தமிழ்த் தேச பொது உடமை கட்சியைச் சேர்ந்த மணியரசன், புத்தக வெளியீட்டாளர் சச்சிதானந்தம், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், கவிஞர் காசியானந்தன் மற்றும் பலர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் ஓவியர் சந்தானம், எழுத்தாளர் ஜெயபிரகாசம், தமிழக மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த குணசீலன், சட்டத்தரணி தமித்த லட்சுமி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பத்திரிகையாளர் பகவான்சிங், வணிகர் சங்கத்தைச் சேர்ந்த சந்திரேசன் ஆகியோரும் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தைப் புகழ்ந்து உரையாற்றினர். ஓவியர் புகழேந்தி நன்றி தெரிவித்தார்.



நிகழ்வின் இறுதியில், "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தைப் பற்றி காசியானந்தன் எழுதிய பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

முன்னதாக தேசத்தின் குரலின் உருவப்படத்தை பழ.நெடுமாறன் திறந்து வைத்தார்.

Sunday, December 24, 2006

கொள்கை விளக்க பாடல்

தமிழ் தேசப் பொதுவுடைமை இயக்கத்தின்
கொள்கை விளக்க பாடல்.

பாடல் இயற்றியவர்
தோழர் கவிபாஸ்கர்

இசையமைத்தவர்
தோழர் ம.ச.சரவணன்

படத்தொகுப்பு-இயக்கம்
தோழர் க.அருணபாரதி

Monday, December 18, 2006

ஆன்டன் பாலசிங்கம் காலமானார்

புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் காலமானார்

புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் (68), வியாழக்கிழமை லண்டனில் காலமானார். சிறிது காலமாக பித்தக் குழாய்ப் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். கல்லீரலில் இருந்து சிறுகுடலுக்கு ஜீரணநீரைக் கொண்டு செல்வது பித்தக் குழாய். அதில் ஏற்பட்ட புற்றுநோய் முற்றி, கல்லீரல், நுரையீரல், அடிவயிறு மற்றும் எலும்புக்கும் பரவியது. அதற்காக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவரது உடல்நிலை, நவம்பர் இறுதியில் மோசமடைந்தது. சிகிச்சை பயன் தராமல், அவர் வியாழக்கிழமை காலமானார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக புலிகள் அமைப்பில் செயல்பட்டு வந்தவர் பாலசிங்கம். பூட்டான் தலைநகர் திம்புவில் 1985-ல் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் தொடங்கி, இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடந்துள்ள அனைத்து சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் புலிகள் சார்பில் பங்கேற்றவர் பாலசிங்கம். புலிகள் இயக்கத்தின் சிந்தாந்தவாதியான அவர், அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்தான் உடல்நலக் குறைவு காரணமாகப் பங்கேற்கவில்லை.

இலங்கையில் வெளியாகும் "வீரகேசரி' என்னும் தமிழ் நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் பாலசிங்கம். "விடுதலை' என்னும் நூலையும் அவர் எழுதியுள்ளார். அவரது இயற்பெயர் ஸ்தனிஸ்லாஸ். அவரது மனைவி அடேல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். 35 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர் பாலசிங்கம். 1990-களின் இறுதியில் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. அதையடுத்து, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். பல்வேறு நோய்களுடன் போராடிவந்த அவரை அவரது மனைவி அடேல்தான் அருகில் இருந்து கவனித்துவந்தார்.

""எனக்கு ஏற்பட்டுள்ள நோய், துரதிருஷ்டவசமான தனிப்பட்ட துயரம். எனது மக்கள் (தமிழர்கள்) அனுபவித்துவரும் துயரங்களுடன் ஒப்பிட்டால், எனது நோய் ஒரு சிறு துரும்பு. கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி, பெரும் துன்பங்களை அனுபவித்துவரும் மக்களைக் காக்க குறிப்பிடத் தக்க வகையில் பங்காற்ற முடியாமல், வியாதி என்னை முடக்கிவிட்டதே என நினைக்கும் பொழுதுதான் எனக்குப் பெரும் வேதனை ஏற்படுகிறது'' என்று 3 வாரங்களுக்கு முன்புதான் வருத்தப்பட்டிருந்தார் பாலசிங்கம்.

அவரது மறைவிற்கு தமிழ்த் தேச பொதுவடைமைக் கட்சி மற்றும்
அதன் தோழமை அமைப்புகள் தனது
ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

மொழிவழித் தாயகம் பிறந்த 50ஆம் வருட பொன்னாள் !

மொழிவழித் தாயகம் பிறந்த 50ஆம் வருட பொன்னாள் !

தமிழக பெருவிழாக் கொண்டாட்டம்

7-12-2006

தமிழகம் பிறந்த ஐம்பதாம் ஆண்டு பெருவிழா சென்னை தியாகராய நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 7-12-2006 அன்று தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேனிசை செல்லாப்பாவின் தமிழிசைக் கச்சேரியும் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களின் உரைவீச்சும் நடந்தது.  தமிழ் தேசியக் கவிஞர்களின் பாவீச்சு நடைபெற்றது. தமிழர் கண்ணேட்டத்தின் வெளியீட்டாளரும் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினருமான தோழர் அ.பத்மநாபன் அவர்கள் தலைமை தாங்கினார். வடக்கெல்லை போராட்டம் பற்றி தோழர் நெய்வேலி பாலு அவர்கள் உரைவீச்சு நடத்தினார். விழாவில் சென்னை மாநிலக் கல்லூரியின் முனைவர் யோகீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு பேசி சிறப்பித்தார். தமிழகம் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன் உரைநிகழ்த்தினார். தமிழக எல்லை போராட்டங்களில் கலந்து கொண்டு போராடிய தலைவர்களை நினைவுகூர்ந்து விழா சிறப்பிக்கப்பட்டது


முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு
போராட்டம் வெடித்தது
பொதுச் செயலாளர் மணியரசன் உட்பட
பொங்கி எழுந்த தமிழ் உழவர்கள்
ஆயிரக்கணக்கானோர் கைது
 

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் தமிழக-கேரள எல்லையில் கம்பம், செங்கோட்டை, கோவை ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலம் செல்லும் பொருட்கள் முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டன. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கைதுசெய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் அதை ஏற்று செயல்பட பிடிவாதமாக மறுத்துவரும் கேரள அரசுக்கு எதிராக ஒருநாள் பொருளாதாரத் தடை மறியல் போராட்டம் நடத்தப்பெறும் என பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஏற்று 15 அரசியல் கட்சிகள் 32 விவசாயிகள் சங்கங்கள் 50க்கு மேற்பட்ட தமிழ்த் தேசிய அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டன.

கம்பம்

தேனி மாவட்டம் கம்பம் மெட்டுச்சாலை சந்திப்பில் காலை 6.30 மணி முதல் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னால் பல்லாயிரக்கணக்கானவர் திரண்டு ஊர்வலமாக மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்தனர். மறியலுக்குக் கீழ்க்கண்டவர்கள் தலைமை தாங்கினார்கள். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், இந்திய தேசிய லீக் தலைவர் பஷிர் அகமது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் மணியரசன், உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தலைவர் ச. மெல்கியோர், பா.ம.க. மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் பொன். காட்சிக்கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் மாநில துணைச் செயலாளர் தமிழ்வாணன், மேலூர் ஒருபோக சாகுபடி விவசாயிகள் சங்கத் தலைவர் சீமான், இருபோக சாகுபடி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் புத்தி சிகாமணி, தேனி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் தேவராஜ், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ், இரத்தினசாமி, குழந்தை, புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த இளங்கோ, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த நிலவழகன், தமிழக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த அ.குழந்தை வேலன், தமிழக மாணவர் இளைஞர் இயக்கத்தைச் சேர்ந்த புலிப்பாண்டியன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் ஜான்மோசஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜன், பொன்னிறைவன், நகைமுகன், அபு அபுதாகிர், அரப்பா, தி. அழகிரிசாமி, எம்.ஆர். மாணிக்கம், கா. பரந்தாமன், ஜி.எஸ். வீரப்பன், பிச்சைக்கணபதி, வே.ந. கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆயிரக்கணக்கான தோழர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
காலை 10.30 மணி வரை மறியல் போராட்டம் கட்டுப்பாடாகவும் அமைதி யாகவும் நடைபெற்றது. இதன் விளைவாக சுமார் 4 மணிநேரத்திற்கு மேல் தமிழக கேரள எல்லையில் அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. கேரள மாநிலத்திற்கு உணவுப் பொருட்கள் காய்கறிகள், பால் ஆகியவற்றை எடுத்துச்சென்ற சரக்குந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கேரளாவிலிருந்து தமிழகம் வரும் அரசுப் பேருந்துகள் இரத்து செய்யப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து கேரளம் செல்லும் அரசுப் பேருந்துகளும் தடுத்து நிறுத்தப்பட்டன.

மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்துசெல்லும்படி காவல்துறை அதிகாரிகள் வற்புறுத்தினார்கள். அதை ஏற்க மறுக்கவே அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். திருமண மண்டபம் ஒன்றில் அவர்கள் காவலில் வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட தோழர்கள் அனைவருக்கும் கம்பம் ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இராமகிருட்டிணன் சார்பில் உணவு வழங்கப்பட்டது. முதல் நாள் இரவில் கம்பம் வருகை தந்த மறியல் வீரர்கள் அனைவரும் தங்குவதற்கு தனது திருமணமண்டபத்தினையும் அவர் அளித்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கோவை

கோவை கந்தே கவுண்டன் சாவடியில் பொருளாதார தடை மறியல் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கீழ்கண்டவர்கள் தலைமை தாங்கினார்கள். பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் தணிக்கையாளர் பாலசுப்பிரமணியம், தமிழர் தேசிய இயக்க மாவட்டத் தலைவர் ஆர். காந்தி, தமிழர் உரிமைக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கி.த. பச்சையப்பன், விடுதலை சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுசி. கலையரசன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் பொழிலன், தமிழர் கழகத் தலைவர் இரா. பாவாணன், தமிழக மனித உரிமை கழகத் தலைவர் அரங்க. குணசேகரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த மணிபாரதி, தமிழக இளைஞர் இயக்கத்தின் செயலாளர் தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் லோகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வே. ஆறுச்சாமி, மா.ரெ. இராசகுமார், ந. பிரகாசு, வே. கோபால், சா. கதிரவன், கா.சு. நாகராசன், நா. பன்னீர், கராத்தே இராசேந்திரன், மணிகண்டன், தனசேகரன், பாவேந்தன், சிவசாமித் தமிழன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்கள்.
மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்து திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இப்போராட்டத்தின் விளைவாக கோவை-பாலக்காடு இடையே போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.

செங்கோட்டை

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலை அருகில் முல்லைப் பெரியாறு அணை மீட்புக்குழுவின் சார்பாக பொருளாதாரத் தடை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் குறிஞ்சிக் கபிலன், தமிழர் தேசிய இயக்கத் தைச் சேர்ந்த துரை. அரிமா, புலவர் தமிழ்மாறன், பசும்பொன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தமிழ்மணி பாண்டியன், விடுதலை வேந்தன், அ. பரமசிவன், தமிழ்தேசியன், தேவதாசு, பொன் இளங்கோ, மாரிமுத்து உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அனைவரும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே கேரளத்தில் இருந்து செங்கோட்டை வழியாக தமிழ்நாட்டுக்கு வரும் அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.


போராட்ட வீரர்களுக்குப் பாராட்டு

காவலில் வைக்கப்பட்டிருந்தபோது போராட்டக்குழுத் தலைவர் பழ. நெடுமாறனுடன் பா.ம.க. நிறுவனர் மரு. இராமதாசு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் திருமாவளவன் ஆகியோர் தொலைபேசி மூலம் பேசி போராட்ட வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஜீவா நேரில் வந்து மாலை அணிவித்துப் போராட்ட வீரர்களைப் பாராட்டினார்.

நன்றி : தென் ஆசிய செய்தி


வேலைக் கொடு அல்லது வாழ்வூதியம் வழங்கு-பரப்புரை பிரச்சார நிகழ்ச்சி

தமிழக இளைஞர் முன்னனி

சார்பில்

வேலைக் கொடு அல்லது வாழ்வூதியம் வழங்கு

பரப்புரை பிரச்சார நிகழ்ச்சி

3-12-2006

தமிழக இளைஞர் முன்னனியின் செங்குன்றம் கிளை சார்பில் 3-12-2006 அன்று செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் வேலை கொடு அல்லது வாழ்வூதியம் வழங்கு பரப்புரை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. நிகழ்சிக்கு தோழர் முத்தெழிலன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் திலீபன் அவர்கள் தலைமைத் தாங்கினார். தோழர்கள் சம்பத்ராசு,  அருணபாரதி, பாலமுரளி, சிந்தனைச்செல்வன், தமிழர் கண்ணோட்டம் வெளியீட்டாளர் அ.பத்மனாபன் ஆகியோர் உரைவீச்சு நிகழ்தினர். நிகழ்ச்சியின் போது வேலை கொடு அல்லது வாழ்வூதியம் வழங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன.

மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி

தமிழ்க் கலை இலக்கிய பேரவையின் சார்பில்

மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின்

நினைவேந்தல் நிகழ்ச்சி

09-12-2006

தமிழ்க் கலை இலக்கிய பேரவையின் சார்பில் மூத்த எழுத்தாளரும் மனித நேய பண்பாளருமான வல்லிக்கண்ணன் அவர்களின் மறைவையொட்டி நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை தேவநேய பாவாணர் நூலகத்தில் 9-12-2006 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தோழர் உதயன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் நெய்வேலி பாலு அவர்கள் தரைமைத் தாங்கினார். முகம் மாமணி, களந்தை பீர் முகம்மது, கவிஞர் சுவர்ணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றினர். இறுதியாக தோழர் கவிபாஸ்கர் நன்றியுரை நிகழ்த்தினார்.   

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT