உடனடிச்செய்திகள்

Monday, April 21, 2025

அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!கி. வெங்கட்ராமன்




அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை
பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!


கி. வெங்கட்ராமன்



தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=========================================
ஆளுநரின் அத்துமீறலுக்குக் கடிவாளம் போட்டு, அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி, வரும் ஏப்ரல் 25 அன்று, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களின் கூட்டத்தைக் கூட்டி இருப்பதும், அதில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கல்விக்கான பல்கலைக்கழகத்தை அதிகாரப் போட்டிக் களமாக மாற்றி, தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்பைப பாழாக்குவது அப்பட்டமான மனிதப் பகைச் செயலாகும்!
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை அறிவித்து, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த்தானது, அரசமைப்புச் சட்ட உறுப்பு 200க்கு எதிரானது; கூட்டாட்சி முறைமைக்குப் பொருத்தமற்றது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தது. ஆளுநர் ஆர்.என். இரவியின் செயல் தனது பதவிக்கான விருப்பதிகாரத்தை தன் சொந்த விருப்பு வெறுப்புக்கும், தான் பின்பற்றும் தத்துவத்திற்கும் ஏற்ப வளைத்ததாகும் என்றும் உச்ச நீதிமன்றம் சாடியது.
உச்ச நீதிமன்றம் உறுப்பு 142இன் படியான தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்கலைக்கழக வேந்தர் பதவி தொடர்பான 10 சட்ட முன்வரைவுகளை ஆளுநர் கையெழுத்திட்டு நிறைவேறியதாகக் கருத வேண்டும் என்று தீர்ப்புரைத்து விட்டது. அதன் பொருள், இனி ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் இல்லையென உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு விட்டது என்பதாகும்!
இதற்கென்று தனி சட்டம் இயற்றி அறிவிப்பதென்பது சட்ட சடங்கே தவிர, அதற்கு மேல் ஒன்றுமில்லை! தமிழ்நாடு அரசும், அந்த 10 மசோதாக்கள் சட்டமாக இயற்றப்பட்டதாக அரசிதழில் அறிவித்துவிட்டது.
ஆரியத்துவ நெறியைத் தவிர, அரசமைப்புச் சட்ட நெறிமுறை எதற்கும் தான் கட்டுப்பட்டவர் அல்ல என்பதை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிற ஆளுநர் ஆர்.என். இரவி, இப்போது உச்ச நீதிமன்றம் தலையில் குட்டிய பிறகும் திருந்துவதாகத் தெரியவில்லை!
ஆர்.என். இரவியின் சட்டமீறலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் தங்கர் வலுசேர்க்கிறார். அவரும் தனது அரசமைப்புச் சட்ட பொறுப்பிலிருந்து மீறுவதைப் பற்றிச் சற்றும் கவலைப்படவில்லை.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களைத் தனது அதிகாரப் போட்டிக் களமாக ஆளுநர் மாற்றுவதால், யார் ஆணைக்குக் கட்டுப்படுவது என அறியாமல் துணைவேந்தர்கள் இக்கட்டில் வைக்கப்படுகிறார்கள். ஏற்கெனவே நிதி நெருக்கடி, ஊழல் முறைகேடுகள் போன்றவற்றால், நிலைகுலைந்துள்ள பல்கலைக்கழகங்கள் முற்றிலும் செயலற்றுப் போவதற்கே ஆளுநரின் இந்தச் சட்டமீறல் இட்டுச் செல்லும்.
பல்கலைக்கழகம் மற்றும் அவற்றில் இணைந்துள்ள கல்லூரி மாணவர்களின் கல்வி பாழாவதைப் பற்றி, சற்றும் கவலைப்படாமல், பாதிக்கப்படுவது பெரிதும் தமிழ்நாட்டு மாணவர்கள் தானே என்ற வன்மத்தோடு ஆர்.என். இரவி நடந்து கொள்கிறார். ஏற்கெனவே பட்டமளிப்பு விழாவுக்கு நாள் கொடுக்காமல், ஆண்டுக்கணக்கில் காலம் தாழ்த்தி பல்லாயிரக் கணக்கான மாணவர்கள், உரிய காலத்தில் பட்டச் சான்றிதழ் பெற முடியாமல், அதனால் வெளிநாட்டுப் பணி வாய்ப்பையும், மேல் படிப்பு வாய்ப்பையும் இழந்ததையும், பற்றி கொஞ்சமும் கருதிப் பார்க்காமல் கடந்து சென்றவர்தான் ஆர்.என். இரவி!
சட்டப்புறம்பாக ஆளுநர் ஆர்.என். இரவி கூட்டியுள்ள கூட்டத்தை, பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆளுநரின் இந்தச் சட்டமீறலுக்கு எதிரான அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என். இரவி அப்பட்டமான இந்தச் சட்டமீறல் கூட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துகிறேன்.
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================

 

Tuesday, April 15, 2025

தி.மு.க. ஆட்சியின் மாநில சுயாட்சி தீர்மானம் வெற்று ஆரவாரமே! கி. வெங்கட்ராமன் அறிக்கை!




தி.மு.க. ஆட்சியின் மாநில சுயாட்சி தீர்மானம்
வெற்று ஆரவாரமே!


கி. வெங்கட்ராமன்



தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!
=====================================
மாநில சுயாட்சி குறித்து முக்கியமான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழியப் போகிறார் என்ற அறிவிப்பு பல நாட்களுக்கு முன்பாகவே வந்து, பெரிய எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருந்த நிலையில், ஏமாற்றம் அளிக்கும் தீர்மானத்தையே மு.க. ஸ்டாலின் முன்மொழிந்து, அதையே சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டு மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம், அவர்கள் அரசியல் ஏமாளிகள் என தி.மு.க. தலைமை கருதுவதையே இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.
கருணாநிதி ஆட்சியில் 1971 லேயே மாநில உரிமைக்காக இராசமன்னார் குழு அமைத்தது குறித்து தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதலமைச்சர், அதனைச் செயல்படுத்த என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என உறுதியாகச் சொல்லமுடியவில்லை.
இராசமன்னார் குழு அறிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர்தான், எம்ஜிஆர் ஆட்சியை அரசமைப்பு உறுப்பு 356-இன்படி கலைப்பதற்கு இந்திராகாந்தி அரசை வலியுறுத்தினார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி.
மாநிலங்களின் காவல் துறை அதிகாரத்தை முற்றிலும் பறித்து மாநில அரசுக்குச் சொல்லாமலேயே புலனாய்வு செய்வதற்கும், மாவட்ட நீதிமன்றங்களை மாநில அரசின் இசைவு கேட்காமலேயே என்.ஐ.ஏ. நீதிமன்றங்களாக மாற்றுவதற்கும் வழிசெய்யும் என்.ஐ.ஏ. சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்த கட்சிதான் தி.மு.க.!
இன்று, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு பற்றி தீர்மான உரையின்போது, குறைபட்டுக் கொள்ளும் மு.க. ஸ்டாலினது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான், இன்றுள்ள வடிவிலேயே ஜி.எஸ்.டி. வரிமுறையை ஆதரித்து வாக்களித்தனர் என்பதை அரசியல் அறிவுள்ளவர்கள் மறந்துவிட மாட்டார்கள்.
தீர்மானத்தை முன்மொழிந்து பேசியபோதுகூட ஆளுநர் பதவி கூடாது என்றோ, இராசமன்னார் குழு பரிந்துரைத்தவாறு ஆட்சிக் கலைப்பு உறுப்பு 356 நீக்கப்படவேண்டுமென்றோ, இந்திய அரசு மும்மொழிக் கொள்கையை ஒரு நிர்வாக ஆணையாகப் பிறப்பித்து, அதனைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்த மறுத்தால் ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை நிறுவலாம் எனக் கூறும் உறுப்பு 365 - ஐ நீக்க வேண்டும் என்றோ, மு.க. ஸ்டாலின் பேசவில்லை. மோடி அரசின் கல்விக்கொள்கையைப் பள்ளிக் கல்வியிலும் பல்கலைக்கழகத்திலும் செயல்படுத்திக்கொண்டே, கல்வி அதிகாரம் மாநிலத்துக்கு மீண்டும் வரவேண்டும் என்று கூறுவது ஏமாற்றுவித்தை.
ஏற்கெனவே, இராசமன்னார் குழு அறிக்கை, அதன்மீது சட்ட மேலவையில் ம.பொ.சி. முன்வைத்த கூர்மையான திருத்தங்கள், இந்திய அரசு அமர்த்திய சர்க்காரியா ஆணைய அறிக்கை, நீதிபதி பூன்ஞ் குழு அறிக்கை என அடுக்கடுக்கான ஆவணங்கள் இருக்கும்போது, மாநிலத் தன்னாட்சிக்கான குறிப்பான கோரிக்கைளை வலியுறுத்தாமல், இன்னொரு ஆய்வுக்குழுவை அமர்த்தியிருக்கிறார்கள்.
ஆறு மாதத்தில் இடைக்கால அறிக்கை, இரண்டு ஆண்டுகளில் இறுதி அறிக்கை என்பதெல்லாம் இன்று தமிழ்நாட்டு இளையோரிடையே எழுந்து வரும் இன உரிமை உணர்வைத் திசைதிருப்பும் வெற்று முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.
இராசமன்னார் குழு அறிக்கைக்குப் பிறகும், தங்கள் பதவித் தேவைக்கு ஏற்ப இந்திய ஆட்சியாளர்களின் இன உரிமைப் பறிப்பில் துணைபோனவர்கள்தான் தி.மு.க.வினர். அந்தப்போக்கு, இனியும் தொடராது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.
இப்போது ஆரவாரத்தோடு பேசுகிற நாடாளுமன்றத் தொகுதி சீரமைப்பு குறித்த தீர்மானமும் இருக்கிற நிலை தொடர வேண்டும் என்று கூறியதே தவிர, தெளிவான மாற்றுத் திட்டம் எதையும் சொல்லவில்லை. ஏனெனில், காங்கிரசு உள்ளிட்ட இந்தி மாநிலக் கட்சிகள் வருத்தப்படக் கூடாது என்பதற்குத்தான்.
தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. அரசின் கண்துடைப்புத் தீர்மானங்களில் மயங்கிவிடாமல், தமிழின உரிமைக்கும், முழுமையான கூட்டரசுக்கும் உறுதியாகக் குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================


 

Sunday, April 13, 2025

பாவேந்தரைக் கொண்டாட மறந்ததேன்? பெ. மணியரசன்




பாவேந்தரைக் கொண்டாட மறந்ததேன்?

பெ. மணியரசன்



பெ. மணியரசன்
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================
“புரட்சிப் பாவலர்” என்று போற்றப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைத் தமிழர்கள் உரியவாறு கொண்டாடவில்லையே, ஏன்?
இப்போக்கு பாவேந்தர்க்கு மட்டும் நேர்ந்த விபத்தல்ல! தமிழர்களின் உளவியல் ஊனத்தின் ஒரு பகுதி இது!
ஜக்கி வாசுதேவின் சர்க்கஸ் ஆன்மிகத்தைத் தமிழர்கள் கொண்டாடுவார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்களின் முற்போக்கு – சமநிலை - தமிழர் ஆன்மிகத்தை அந்த அளவுக்குக் கொண்டாட மாட்டார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிராமணியத்தின் வர்ணாசிரமவாதத்தை மறுத்து, வேத – ஆகமங்களை மறுத்து, தற்சார்புச் சமநிலை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவி, அக்கொள்கையைப் பரப்பினார் வள்ளலார். ஆனால், வள்ளலாரை விட அதிகமாக சாயிபாபாக்களைக் கொண்டாடுகிறது தமிழ்நாடு!
பாரதியார் அளவிற்குப் பாவேந்தரைத் தமிழர்கள் கொண்டாடதது ஏன்? பார்ப்பன குலத்தில் பிறந்தாலும் பார்ப்பனியத்தை – கடுமையாகச் சாடியவர் பாரதியார்!
“இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்
இவர் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார்!
பேராசைக் காரணடா பார்ப்பான் – ஆனால்
பெரிய துரை எனில் வேர்ப்பான்
***
”பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே
வெள்ளை – பறங்கியைத் துரை என்ற காலமும் போச்சே”
என்றெல்லாம் பார்ப்பனரைக் கண்டனம் செய்து பாடினார். ஆனால், பாரதியார் “பாரத நாடு” தெய்வம் என்றதும், சமற்கிருத வேதங்களின் உயர்வைப் பாடியதும், எழுதியதும், ஆரிய மேன்மையை அதிகம் புகழ்ந்ததும், பிராமணர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. எனவே, பாரதியின் இந்த முகத்தை வெளிக்காட்டுவோம் என்று பிராமணர்களும், பிராமணிய ஊடகங்களும் பாரதியைக் கொண்டாடுகின்றனர். அவரின் பிறந்தநாளை திசம்பர் 11, நினைவு நாளான செப்டம்பர் 11 ஆகிய நாட்களில் பல்வேறு வடிவங்களில் தமிழ்நாடெங்கும் பாரதியார் விழாக்கள் நடக்கின்றன.
பிராமணர்களின் பொறுப்புகளில் உள்ள ஏடுகள், நாளேடுகள், பாரதியார் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. சிறப்புக் கட்டுரைகள் வெளியிடுகின்றன. ஆனால், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளான ஏப்ரல் 21, பிறந்த நாளான ஏப்ரல் 29 இரு நாட்களிலும் தமிழ்நாட்டில் பரவலாக பாவேந்தர் நிகழ்ச்சிகள் நடப்பதில்லை! நாளேடுகளும் ஏடுகளும் இதர ஊடகங்களும் பாவேந்தர் நினைவாக எந்தச் செய்தியும், படைப்பும் வெளியிடுவதில்லை!
பாவேந்தருக்கு மட்டுமல்ல, வ.உ.சி.க்கும் தமிழர்கள் வழங்கும் “சிறப்புகள்” இதேதான்! அதே செப்டம்பர் 5இல், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்கள் – பிறந்தநாள் என்பதால் அவர்க்கு நினைவேந்தல், நிகழ்வுகள் அதிகம்; கட்டுரைகள் – படைப்புகள் பலப்பல!
பாரதியாரையும் இராதாகிருஷ்ணன் அவர்களையும் கொண்டாடாதீர்கள் என்று நாம் கூறவில்லை! தமிழர்கள் பாவேந்தரையும் வ.உ.சி.யையும் அலட்சியப்படுத்துவது ஏன் என்றுதான் கேட்கிறோம்.
தமிழ்க் கவிதையை 20ஆம் நூற்றாண்டிற்கேற்ப வளர்த்தவர் பாரதியார். பாரதியாரின் தொடர்ச்சியாகப் பாவேந்தர், தமிழ்க் கவிதையை – பல்வேறு வடிவங்களில் மிகப்பெரும் பாய்ச்சலுடன் புதிய சிகரங்களுக்குக் கொண்டு போனவர் பாரதிதாசன்! பாரதிதாசன் பரம்பரை என்றே அடுத்தடுத்து தமிழ்க் கவிஞர் பட்டாளம் தமிழ்நாட்டில் எழுச்சி பெற்றது.
சாதி ஒழித்தல் ஒன்று – நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று – இதில்
ஒரு பாதியை நாடு மறந்தால்
மறுபாதி துலங்கு வதில்லையாம்!
***
பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டின்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே!
***
எல்லார்க்கும் எல்லாம் என்ற
இடம்நோக்கி நகர்கின்ற திந்த வையம்!
***
***
பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது
சிறுத்தையே வெளியே வா!
***
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
***
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
***
குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு போன்ற தனித் தொகுப்புகள் உளவியல் நுட்பமும், அழகியல் நுட்பமும் அணிவகுக்கப் புனையப்பட்ட பாவேந்தர் கவிதைப் படைப்புகள்! இப்படி எத்தனையோ!
ஏற்றமிகு இளந்தலைமுறையே, என் அன்புப் பெரியோரே, இப்போது நடப்பது தமிழ்த்தேசிய எழுச்சி யுகம்! அதிலும் 2025 தமிழ்த்தேசிய எழுச்சி ஆண்டாகத் தொடர்ந்து கொண்டுள்ளது.
இவ்வாண்டு (2025) ஏப்ரல் 21 – பாவேந்தர் நினைவுநாள்; ஏப்ரல் 29 பாவேந்தர் பிறந்தநாள்! வாய்ப்புள்ள நாளில், பாவேந்தர் நினைவுகளை பாவரங்கமாக – உரையரங்கமாக – மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியாக மற்றும் பல்வேறு வடிவங்களில் கடைபிடியுங்கள்!
தமிழ் இனத்தின் மீது படிந்துள்ள கறைகளைத் துடைத்துத் தூய்மையாக்குங்கள்! பாவேந்தர் நாளைக் கடைபிடிப்பது நன்றிக் கடன் மட்டுமல்ல – நம் தலைமுறையின் அடிமைத் தளைகளை அறுத்தெறிவதும் அதற்குள் உள்ளடக்கம்!
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================


 

Friday, April 11, 2025

பொன்முடி - துரைமுருகன் - ஆர்.எஸ். பாரதி இழி பேச்சுகள் - ஈ.வெ.ரா. பாணி! கண்ணியத்துடன் – துணிவுடன் கருத்துகளைப் பகிர்வது தமிழர் மரபு! பெ. மணியரசன்



பொன்முடி - துரைமுருகன் - ஆர்.எஸ். பாரதி
இழி பேச்சுகள் - ஈ.வெ.ரா. பாணி!
கண்ணியத்துடன் – துணிவுடன்
கருத்துகளைப் பகிர்வது தமிழர் மரபு!

பெ. மணியரசன்



பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================
நாள்: 11.4.2025
மு. க. ஸ்டாலின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக உள்ள முனைவர் பொன்முடி அவர்கள், பெரியார் திராவிடர் கழகக் கூட்டத்தில் உரையாற்றியபோது, சைவம், வைணவம் ஆகிய தமிழர்களின் இரு சமயப்பிரிவுகளையும் படுகேவலமாக இழிவுபடுத்திப் பேசியது ஊடகங்களில் அப்படியே வெளிவந்தது. அதில் அவர், கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை பாலியல் தொழிலுடன் ஒப்பிட்டுப் பேசி நையாண்டி செய்தது அம்பலமாகி உள்ளது. இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் வந்தவுடன், மு.க. ஸ்டாலின் பொன்முடியைத் தி.மு.க. வின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி, திருச்சி சிவா அவர்களை அப்பொறுப்பில் அமர்த்தியுள்ளார்.
பாலியல் தொழிலாளியின் இல்லத்திற்குச் சென்ற ஓர் ஆண், கட்டண விவரம் விசாரித்ததாகவும், அதற்கு அந்தப் பெண், “சைவம் என்றால் பத்து ரூபாய், வைணவம் என்றால் ஐந்து ரூபாய்” என்று சொன்னார். தான் பாலுறவு கொள்ளும் இரு வடிவங்களைச் சொல்லி - அதனதன் கட்டணத்தைக் கூறினாள்” என்று சொற்களாலும் கைச் சைகைகளாலும் பொதுக்கூட்டத்தில் விளக்கிய பொன்முடி, இவ்வளவுதான் சைவம், வைணவம் என்ற சமயங்கள் என்று இழிவாகச் சிரித்துப் பேசுவது வெளியாகி உள்ளது.
இதே நேரத்தில், மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சராகவும், தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் உள்ள துரைமுருகன், தி.மு.க. வை விமர்சித்த எதிர்க்கட்சியினருக்குப் பதிலடி கொடுக்கும்போது, “திமுகவினரை, நொண்டி, நொடம், கூன், குருடு என்று நினைக்கிறீர்களா? பதிலடி கொடுப்போம்” என்று நையாண்டியாகப் பேசியது அப்படியே ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
பொன்முடியும், துரைமுருகனும் மாணவப் பருவத்திலிருந்து திராவிடப் பாசறையில் பயிற்சி பெற்றவர்கள். ஈ.வெ.ரா. மற்றும் கருணாநிதியின் பக்தர்கள். பொன்முடி ஏற்கெனவே பெண்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகக் கண்டிக்கப்பட்டார்.
அதேபோல் துரைமுருகனும் பொது வெளியில் இழிவாகப் பேசியதற்காகக் கண்டிக்கப்பட்டவர். பட்டியல் வகுப்பு மக்களை இழிவுபடுத்திப் பேசியதற்காக தி.மு.க. வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஏற்கெனவே கண்டிக்கப்பட்டவர். அவர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் உச்சநீதிமன்ற நீதிபதியானது தி.மு.க. போட்ட பிச்சை என்று பேசி இழிவுபடுத்தினார்.
தி.மு.க. தலைவர்கள் இதுபோல் மக்களை இழிவுபடுத்தி, தங்களை அவர்களின் “நாட்டாமைகளாக”க் காட்டிக் கொள்வது தொடர்ந்து கொண்டே உள்ளன. காரணம் என்ன?
சுயமரியாதையை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதாகப் பேர் பண்ணிக்கொண்டு, ஆணவத்தினால் மக்களின் சுயமரியாதையை இழிவுபடுத்துபவர்கள் ஈ.வெ.ரா. வாதிகள்!
மக்களைப் பல்வேறு வடிவங்களில் இழிவுபடுத்தி, அவர்களை மீட்க வந்த நாட்டாமைகளாகக் காட்டிக் கொண்டவர்கள் ஈ.வெ.ரா. வும் கருணாநிதியும்! அவர்களின் கொச்சைச் சொற்களை ரசித்துக் கேட்டுக்கேட்டுப் பழக்கப்பட்ட பொன்முடி, துரைமுருகன், ஆர். எஸ். பாரதி போன்றோர் தங்களின் தலைவர்களின் பாணியில் பேசி பெருமைப்பட்ட பழக்கத்தினால் வந்து விழுந்த இழிசொற்கள் இவை!
“கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி, கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்” என்பவை ஈ.வெ.ரா. வின் பொன்மோழிகள்! அவற்றைத் தமிழ்நாடெங்கும் அவரின் தொண்டர்கள் எழுதி வைத்துள்ளார்கள்.
“குச்சுக்காரியைத் தேவதாசி என்று புகழ்வது போல” என்று ஓர் உவமை கூறியவர் ஈ.வெ.ரா. தி.மு.க. தலைவர் அண்ணாவையே “தாசிமகன்” என்று 1952-இல் அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சியில் போய் பொதுக்கூட்டத்தில் பேசியவர் ஈ.வெ.ரா! அந்தப் பாணியில்தான், பொன்முடியும், திருநீறு பூசிக்கொள்வதையும் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வதையும் பாலியல் தொழிலாளி கொள்ளும் இரு வடிவ உடலுறவு வகைகளுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியுள்ளார்.
இந்துமதம் பற்றிப் பேசிய கருணாநிதி, “இந்து என்றால் திருடன் என்று பொருள்” என்றார். இவ்வாறு அவர் கொச்சைப்படுத்தியது இளமைக்காலத்தில் அல்ல, அவரின் முதுமைக்காலத்தில்.
நமக்கான படிப்பினை:
கடவுள் ஏற்பும் - கடவுள் மறுப்பும் ஒருவரின் அடிப்படைக் கருத்துரிமை! அந்தந்தக் கருத்துகளைக் கண்ணியமாகப் பரப்புரை செய்ய அனைவர்க்கும் உரிமை உண்டு! ஆனால், இவ்விரண்டில் எதையும் இழிவுபடுத்தி கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
கடவுள் மறுப்பை அறிவியல் சார்ந்த இயங்கியல் வழியாக வெளிப்படுத்திய காரல் மார்க்சோ அல்லது லெனினோ, அவர்களின் வழிவந்தோரோ எங்கேயும் கடவுள் வழிபாட்டை, ஈ.வெ.ரா வையும் அவருடைய அமைப்பைச் சேர்ந்தவர்களையும் போல் இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்திப் பேசியது இல்லை - எழுதியதில்லை. தமிழ்நாட்டிலும் கம்யூனிஸ்ட்டுகள் அந்தப் பண்பைக் கடைபிடிக்கின்றனர்.
பண்பாடு, பக்குவம் இரண்டையும் சீரழித்த ஈ.வெ.ரா. வகையாறாக்கள்தான், தமிழ்நாட்டில் ஆன்மிகத்தை - ஆன்மிகர்களைக் கொச்சையாகப் பேசி குதூகலிக்கும் “பகுத்தறிவுப் பகலவன்கள்!”
தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பு - மூடநம்பிக்கை எதிர்ப்பு - பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு போன்றவற்றை முன்வைக்கும் இளந் தமிழர்கள், எந்த நிலையிலும் அடுத்தவரை இழிவுபடுத்தாமல், ஆணவத்தின் உச்சிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு மக்களுக்குக் கட்டளை இடும் எசமானர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளாமல், மக்களில் தானும் ஒருவன் என்ற பண்பாட்டுடன், தன்னடக்கத்துடன் அதே வேளை நெஞ்சுரத்துடன் கருத்துகளைச் சொல்லுங்கள், எழுதுங்கள்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT