உடனடிச்செய்திகள்

Latest Post

Thursday, November 20, 2025

ஆளுநர் அதிகாரம் குறித்து வெளிச்சம் காட்ட வேண்டிய உச்ச நீதிமன்றம் இருட்டில் தள்ளிவிட்டது! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

ஆளுநர் அதிகாரம் குறித்து வெளிச்சம் காட்ட வேண்டிய

உச்ச நீதிமன்றம் இருட்டில் தள்ளிவிட்டது!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

 

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்படாத சில பகுதிகளின் மீது வெளிச்சம் பாய்ச்ச வேண்டிய உச்ச நீதிமன்றம், மீண்டும் இருளுக்குள் தள்ளி விட்டது!

 

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகார வரம்பு குறித்து, கடந்த 2025 ஏப்ரலில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா – ஆர். மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பின் மீது, குடியரசுத் தலைவர் வழியாக இந்திய அரசு எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமளித்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆயம் இன்று (20.11.2025) வழங்கிய கருத்துரை, இதுவரை இருந்த தெளிவுகளையும் குழப்பி மீண்டும் தொடங்கிய இடத்திற்கே தள்ளிவிட்டுள்ளது.

 

ஏற்கெனவே, சம்சேர் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு, மாரூராம் எதிர் இந்திய ஒன்றியம் உள்ளிட்ட அரசமைப்பு ஆயங்கள் "அமைச்சரவை முடிவுக்கு மாநில ஆளுநர் கட்டுப்பட்டவர், அவர் அமைச்சரவைக் கருத்தின் சுருக்கெழுத்து வடிவமே தவிர தனிப்பட்ட விருப்பு அதிகாரம் எதுவும் அவருக்கு இல்லை" என்று தீர்ப்புரைத்த பின்னும், அதே அளவுக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட பி.ஆர். கவாய் ஆயம், அதற்கு நேர் எதிரான வகையில் ஆளுநருக்கு வானளாவிய மேலதிகாரத்தை மீண்டும் வழங்குகிறது. 

 

அமைச்சரவையின் சட்டப் பரிந்துரையின் மீது ஆளுநர் கால வரம்பற்று கையெழுத்திடாமல் இருக்கக் கூடாது என்று கூறிக் கொண்டே, அவருக்கு ஆறு மாதம் கால வரம்பிடுவதும் கூடாது எனக் கூறுகிறது. இதன் மூலம், இந்தியா ஒரு குடியரசு என்பதையும் இது ஒரு கூட்டாட்சி என்பதையும் கேலிக் கூத்தாகுகிறது. பர்திவாலா – மகாதேவன் அமர்வு, ஆளுநர் அமைச்சரவையின் சட்டப் பரிந்துரையின் மீது ஆறு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என காலவரம்பிடுவதை "நீதிமன்றத்தின் அத்துமீறல்" எனக் கண்டிப்பதன் வழியாக, ஆளுநரின் அத்துமீறலுக்கு கவாய் ஆயம், பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.

 

ஆறு மாதமல்ல, எந்தக் கால வரம்பையும் ஆளுநர் மீதோ, குடியரசுத் தலைவர் மீதோ விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தைத் தள்ளி வைப்பதன் வழியாக, இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கூறாகக் கூறப்படும் கூட்டாட்சி முறைமை கவிழ்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் அதிகம்போனால், "நியாயமான காலவரம்புக்குள் ஒப்புதல் அளிக்க முன்வர வேண்டும்" என்று ஆளுநரைக் கேட்டுக் கொள்ளலாமே தவிர, கால வரம்பைத் தீர்மானிக்க முடியாது எனக் கருத்துரைப்பதன் வழியாக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையே கவாய் ஆயம் பெருமளவு வெட்டிச் சுருக்கிவிட்டது!

 

அரிதான சூழலில், "முழு நீதி வழங்குவதற்காக (For doing complete Justice)" அரசமைப்பு உறுப்பு 142இன் படி உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு நிர்வாக ஆணையின் அதிகாரமுடையது என்பதையே ஒன்றுமில்லாமல் ஆக்கி, இந்திய அரசின் கேள்வி முறையற்ற ஆதிக்கத்திற்கு வழி திறந்துவிட்டுள்ளது.

 

இந்திய அரசமைப்பு செயல்படத் தொடங்கிய 1950லிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மீது இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநரின் மேலதிகாரம் சனநாயகத்தையே முடக்கிப் போட்டதன் விளைவாகத்தான் அவ்வப்போது, உச்ச நீதிமன்றம் தலையிட்டு  அரசமைப்புச் சட்ட உறுப்புகள் 142, 143, 200, 201, 361 போன்ற உறுப்புகள் மீது தெளிவுகள் வழங்கித் தீர்ப்புரைத்திருக்கின்றன. ஆனால், பி.ஆர். கவாய் ஆயத்தின் இந்தக் கருத்துரைத் தீர்ப்பு கடந்த 75 ஆண்டுகளின் சட்ட வளர்ச்சி நிலையையே கவிழ்த்துப் போட்டு, மீண்டும் 1950ஆம் ஆண்டின் நிலைக்கே திருப்பியிருக்கிறது.

 

இது உடனடியாக பர்திவாலா – மகாதேவன் தீர்ப்பை தள்ளுபடி செய்கிற மேல் முறையீட்டுத் தீர்ப்பு அல்ல என்ற போதிலும், இது கருத்துரைத் தீர்ப்புதான் என்ற நிலையிலும், இது நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா, ஏ.எஸ். சந்துர்க்கர் ஆகிய ஐந்து நீதிபதிகளின் ஒத்தக் கருத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற கருத்துரை என்பதால், விரைவான எதிர்காலத்தில் தமிழ்நாடு ஆளுநர் வழக்குத் தீர்ப்பு உள்ளிட்ட இதற்கு முந்தைய தீர்ப்புகள் அனைத்தையும் வருங்கால வழக்குகளில் இரத்து செய்வதற்கு வழிகாட்டும் வலுவுள்ளது.

 

"இந்தியாவை முழுக் கூட்டரசாக்குக!" என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது!

 

இந்தியாவை முழுக் கூட்டரசாக திருத்தியமைப்பதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும், கூட்டரசு முறைமையின் மீதும் தேசிய இன உரிமைகள் மீதும் அக்கறையுள்ள கட்சிகளும் இயக்கங்களும் உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய தேவையையே பி.ஆர். கவாய் ஆயத்தின் கருத்துரைத் தீர்ப்பு முன்னிறுத்துகிறது.

 

தமிழ்நாடு அரசும், இன உரிமையில் அக்கறையுள்ளோரும் கூட்டரசுக் கோரிக்கையை நோக்கி, உடனடியாக அணிதிரள வேண்டும்!


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================


Monday, November 17, 2025

மேக்கேத்தாட்டுஅணைத் திட்ட அறிக்கைதயாரிக்கதடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பு நகலைஎரித்து - தஞ்சையில் காவிரி உரிமைமீட்புக்குழுவினர் எழுச்சியுடன் போராட்டம்!

மேக்கேத்தாட்டு அணைத் திட்ட அறிக்கை

தயாரிக்க தடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்

தீர்ப்பு நகலை எரித்து - தஞ்சையில் காவிரி உரிமை

மீட்புக் குழுவினர் எழுச்சியுடன் போராட்டம்!

 

தமிழ்நாட்டுக்கு வெள்ளக் காலத்தில் வரும் நீரைக் கூட தரக் கூடாது என்ற நோக்கில் கர்நாடகம் மேற்கொள்ளும் மேக்கேத்தாட்டு அணைக்கான முழுமையான திட்ட அறிக்கையைத் தயாரிக்கத் தடையில்லை என கடந்த 13.11.2025 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அத்தீர்ப்பின் நகலை எரித்து, தஞ்சையில் இன்று (17.11.2025) காலை - காவிரி உரிமை மீட்புக் குழுவினர் எழுச்சியுடன் நடத்திய போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட உழவர்களும், உணர்வாளர்களும் பங்கேற்றனர். 50 பேரைக் காவல்துறை கைது செய்தனர்.

 

தஞ்சையிலுள்ள இந்தியத் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று (நவம்பர் 17) காலை, காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் திரு. த. மணிமொழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. க. செகதீசன், தமிழர் தேசியக் களம் அமைப்பாளர் திரு. ஆரூர் ச. கலைசெல்வம், தோழர் இரா. மன்னை இராசசேகரன், காவிரி உரிமை மீட்புக் குழு செயற்குழு தோழர் வெள்ளாம்பெரம்பூர் துரை. இரமேசு, பொறியாளர் செந்தில்வேலன், அள்ளூர் சாமி. கரிகாலன், வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் ஐயா சுந்தரராசன், த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், க. விடுதலைச்சுடர், பி. தென்னவன், வே.க. இலக்குவன், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, இரா.சு. முனியாண்டி, பொதுக்குழு தோழர் க. தீந்தமிழன், குடந்தை செழியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், உழவர்களும் பங்கேற்று, தீர்ப்பு நகலை முழக்கங்களுடன் கொளுத்தினர்.

 

காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

 

========================

செய்தித் தொடர்பகம்,

காவிரி உரிமை மீட்புக் குழு

==========================

பேச: 98419 49462, 94432 74002

==========================

Fb.com/KaveriUrimai

#SaveMotherCauvery

www.kaveriurimai.com

==========================

 

Friday, November 14, 2025

மேக்கேத்தாட்டு அணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி! மக்கள் போராட்டமே தீர்வு! - காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்!

மேக்கேத்தாட்டு அணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

மக்கள் போராட்டமே தீர்வு!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்!

  

தமிழ்நாட்டின் எல்லைக்கருகில் கர்நாடக அரசு, தனது எல்லையான மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே, 67.16 ஆ.மி.க. (டி.எம்.சி.) கொள்ளளவில், மிகப்பெரிய புதிய அணை கட்டுவதற்கான திட்டம் உச்ச நீதிமன்றக் காவிரித் தீர்ப்பிற்கு எதிரானது என்று கூறித் தடை கோரி – தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கை அப்போதைய அண்ணா தி.மு.க. ஆட்சி தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் இதை விசாரிக்காமல் நிரந்தரமாகக் கிடப்பில் போட்டது.

 

இப்போதுள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பூஷன் இராமகிருஷ்ணா கவாய் (பி.ஆர். கவாய்) வரும் 23.11.2025 அன்று பணி ஓய்வு பெறும் நிலையில், அவசரமாக எடுத்து, விசாரித்து, கர்நாடகம் மேக்கேதாட்டில் 67.16 ஆ.மி.க. கொள்ளளவு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report – DPR) அளிக்கவும், அதை இந்திய அரசின் நீர்வளத்துறை அனுமதிக்கு அனுப்பவும் தடை இல்லை என்று கூறி, தமிழ்நாடு அரசு 2018இல் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா ஆகியோரைக் கொண்ட அமர்வு இது!

 

இதற்கு முன் இதே தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் அமர்வு – முல்லைப் பெரியாறு அணையை முடக்கக் கோரிய கேரளத்தின் வழக்கை எடுத்து, 13.10.2025 அன்று விசாரித்து, "முல்லைப் பெரியாறு அணை மிகமிகப் பழைய அணைகளில் ஒன்று. புதிய அணை கட்டுவது பற்றியும் ஆய்வு செய்வோம்" என்று தீர்ப்பளித்தது. அதாவது, கேரளக் காப்புப் படையணி (Save Kerala Brigade) மற்றும் கேரள அரசு கூறிய வாதத்தை அப்படியே ஏற்றுத் தீர்ப்பளித்தது.

 

இப்போது காவிரிச் சிக்கலில், 2018இல் போடப்பட்ட வழக்கைப் பணி ஓய்வுக்கு முன் அவசரமாக எடுத்து, விசாரித்து, மேக்கேதாட்டு அணைக்கான தொடக்கப் பணிகளுக்குத் தடை இல்லை என்று பி.ஆர். கவாய் அமர்வு தீர்ப்பளித்து, தடை கோரிய தமிழ்நாடு அரசு வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

 

வழக்கம்போல், தமிழ்நாடு அரசின் நீராற்றல் துறை அமைச்சர் துரைமுருகன், "உச்ச நீதிமன்றம் மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதித்தவிட்டதாகக் கூறுவது தவறு, மத்திய நீர்வளத்துறையிலும், காவிரி மேலாண்மை ஆணையத்திலும் தனது வலுவான வாதங்களைத் தமிழ்நாடு அரசு முன் வைக்கும்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இந்திய நீர்வளத்துறையும், காவிரி மேலாண்மை ஆணையமும் ஏற்கெனவே கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான அறிக்கையை (DPR) ஏற்றுக் கொண்டு விட்டன என்ற உண்மையை மறைக்கிறார் துரைமுருகன்!

 

இந்திய நீராற்றல் (ஜல்சக்தி) துறையின் தலைமை அதிகாரியாக எஸ்.கே. ஹல்தர் இருந்தபோது, அவரே கர்நாடக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை (DPR) அளிக்குமாறு விரும்பிக் கேட்டுப் பெற்றார். அதன் பிறகு, அதை ஏற்க வலியுறுத்தி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் அனுப்பி வைத்தார். அந்த நிலையில், அவர் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுபெற்ற அவரை, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வேண்டுமென்றே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 5 ஆண்டுகளுக்குத் தலைவர் ஆக்கினார்.

 

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் மேற்படி ஹல்தர் தலைமையில் 01.02.2024 அன்று நடந்தபோது, கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கேட்டார். தமிழ்நாடு, புதுச்சேரி அதிகாரிகள் எதிர்த்து வாக்களித்தனர். மொத்தம் 9 பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இதில் 5 பேர் இந்திய அரசு அதிகாரிகள். எனவே, மிகப் பெரும்பான்மை ஆதரவுடன் மேக்கேதாட்டு அணை விரிவான திட்ட அறிக்கை காவிரி மேலாண்மை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக – இந்திய அரசின் நீராற்றல் (ஜல்சக்தி) துறைக்கு அனுப்பப்பட்டது.

 

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் துரைமுருகன், மேக்கேத்தாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் எந்த முயற்சியையும் முளையிலேயே தமிழ்நாடு அரசு கிள்ளி எறியும் என்று நெஞ்சாரப் பொய் சொல்கிறார்.

 

ஆனால், கர்நாடக அரசு வனப்பகுதிகளில் இந்த அணையைக் கட்டுவதற்கான தளம் அமைத்தால் போன்ற அடிப்படைப் பணிகளுக்காக மட்டும் இதுவரை சற்றொப்ப 1000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா! அணைக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 14 ஆயிரம் கோடி ரூபாய்!

 

கலைஞர் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராகவும், பின்னர் முதலமைச்சராகவும் இருந்த காலத்தில்தான் இந்திய அரசின் ஒப்புதல் பெறாமலும், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறியும் காவிரி நீர் வரத்துகளின் குறுக்கே ஏமாவதி, ஏரங்கி, கபிணி அணைகளைக் கட்டி முடித்தது கர்நாடகம்!

 

இப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தடவைக் கூட செயல்படுத்தி ஆண்டிற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்குக் காவிரியில் திறந்துவிட்டதில்லை!

 

பருவமழைப் பிறழ்ச்சிகளால் கடந்த சில ஆண்டுகளாகப் பெருமழை பெய்து, கர்நாடகத்தால் தேக்க முடியாத மிகை வெள்ளம் மேட்டூர் அணையை நிரப்பி வருகிறது. விதிமுறைப்படி ஒருதடவை கூடக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையமும் அதைத் தட்டிக் கேட்பதில்லை!

 

எனவே, தமிழ்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினால் தான் காவிரி உரிமையைப் பாதுகாக்க முடியும், அதற்கான களப் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

Saturday, November 1, 2025

சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுக்கு எதிராகப் புதுச்சேரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!

சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுக்கு எதிராகப்

புதுச்சேரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!

 

இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தின் வழியே இந்திக்காரர்கள் திணிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் இன்று (01.11.2025) தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு நடத்தியது.

 

வரும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னெடுக்கவுள்ள இந்த சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டம் (SIR), செயற்கையான முறையில் இந்தி உள்ளிட்ட அயல் மாநில வாக்காளர்களை புதுச்சேரியின் வாக்காளர் பட்டியலில் சேர்த்து, புதுச்சேரியின் அரசியலில் செயற்கையான குறுக்கீடாக அமைந்து குழப்பம் விளைவிக்கும்! பீகாரில் தகுதியான வாக்காளர்களை நீக்கியதன் மூலம் பா.ச.க.வுக்கு பணியாற்றிய தேர்தல் ஆணையம், இங்கு வெளி மாநிலத்தவரை சேர்ப்பதன் வழியாக அதே பணியை செய்யும்.

 

ஏற்கெனவே பீகாரில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின்படி 42 இலட்சம் பேர் வெளி மாநிலங்களில் குடியேறி விட்டதால் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதும், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 7 இலட்சம் பீகாரிகள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டமிட்டதும் இந்த ஆபத்தை உணர்த்தும்! புதுச்சேரியில் பெருமளவில் இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் குடியேறியுள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது வெளி மாநில வாக்காளர்களை புதுச்சேரியின் குடிமக்களாக நிரந்தரப்படுத்தும் சூழ்ச்சியான ஏற்பாடாகும்!

 

எனவே, இதனைக் கண்டித்து, இன்று (01.11.2025) புதுச்சேரி இராசா திரையரங்கம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், த.தே.பே. வடக்கு கிளைச் செயலாளர் தே. சத்தியமூர்த்தி, தொரவி செயலாளர் அ. முருகன், பாகூர் கிளைச் செயலாளர் கே. அன்பு நிலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

"திணிக்காதே! திணிக்காதே! வெளி மாநில வாக்காளர்களைத் திணிக்காதே!", "சீராய்வு என்ற பெயரில் நாடகம் நடத்தாதே!", "புதுச்சேரி தமிழர் தாயகம் காப்போம்!" என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

தமிழ்த்தேசியப் பேரியக்கப் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, கண்டன முழக்கங்களை எழுப்பி இத்திட்டத்தின் ஆபத்து குறித்து உரையாற்றினார். நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலத் தலைவர் திரு. செ. ஞானப்பிரகாசம், தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் திரு. கோ. அழகர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் திரு. வெங்கடேசன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை செயலாளர் திரு. ஆ. பாவாடைராயன், தோழர் த. இரமேசு (நா.த.க.), புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் ஐயா புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி படைப்பாளர் இயக்க நிறுவனர் ஐயா ஆறு செல்வம், புதுச்சேரி தமிழ்ச் சிறகம் செயலாளர் இரா. சுகுமாரன், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா சிவ. மு. இராசாராம், ஐவேலி த.தே.பே. செயலாளர் தோழர் பா. குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

 

நாம் தமிழர் கட்சி மா.செ. இளங்கோவன், வேலவன், மகளிர் ஆயம் தோழர்கள் பிரியா, உமா நந்தினி, கௌசல்யா, கற்பகம், சந்தரலேகா, சித்ரா, பேரியக்கத் தோழர்கள் ஐயா அரங்கதுரை பெருமாள், ஐயா ஆறுமுகம், மதியழகன், இராமச்சந்திரன், ஈட்டன் பாசுகர், மோகன்தாசு, செயக்குமார், அருண்மொழிச் சோழன், மனோஜ்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

 

இந்தியத் தேர்தல் ஆணையமே!

சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வு என்ற பெயரில் புதுச்சேரியில்

இந்திக்காரர்களை வாக்காளர்களாகத் திணிக்காதே!

 

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Thursday, October 30, 2025

இந்தியத் தேர்தல் ஆணையமே! வெளி மாநில வாக்காளரைத் திணிக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தை (SIR) நிறுத்து! புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்தியத் தேர்தல் ஆணையமே!
வெளி மாநில வாக்காளரைத் திணிக்கும்
சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தை (SIR) நிறுத்து!
 புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 

வரும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னெடுக்கவுள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டம் (SIR), செயற்கையான முறையில் இந்தி உள்ளிட்ட அயல் மாநில வாக்காளர்களை புதுச்சேரியின் வாக்காளர் பட்டியலில் சேர்த்து, புதுச்சேரியின் அரசியலில் செயற்கையான குறுக்கீடாக அமைந்து குழப்பம் விளைவிக்கும்! பீகாரில் தகுதியான வாக்காளர்களை நீக்கியதன் மூலம் பா...வுக்கு பணியாற்றிய தேர்தல் ஆணையம், இங்கு வெளி மாநிலத்தவரை சேர்ப்பதன் வழியாக அதே பணியை செய்யும்.

 

ஏற்கெனவே பீகாரில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின்படி 42 இலட்சம் பேர் வெளி மாநிலங்களில் குடியேறி விட்டதால் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதும், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 7 இலட்சம் பீகாரிகள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டமிட்டதும் இந்த ஆபத்தை உணர்த்தும்! புதுச்சேரியில் பெருமளவில் இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் குடியேறியுள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது வெளி மாநில வாக்காளர்களை புதுச்சேரியின் குடிமக்களாக நிரந்தரப்படுத்தும் சூழ்ச்சியான ஏற்பாடாகும்!

 

எனவே, சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தை (SIR) நிறுத்தக் கோரி, வரும் 01.11.2025 காரி (சனி) காலை 10.30 மணிக்கு, புதுச்சேரி - இராசா திரையரங்கம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது! பல்வேறு தோழமை அமைப்பினர் இதில் பங்கேற்கின்றனர்!

 

புதுச்சேரியின் அரசியல் கட்சியினர், பொது மக்கள், குடியுரிமைச் செயல்பாட்டாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்திய அரசின் இந்த சூழ்ச்சித் திட்டத்தை முறியடிக்க அணிதிரள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறது! எக்காரணம் கொண்டும், வெளி மாநிலத்தவருக்கு புதுச்சேரியில் வாக்குரிமை வழங்கக் கூடாது என அனைவரும் ஒன்றுபட வேண்டும்!


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT