உடனடிச்செய்திகள்

Monday, May 23, 2011

சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது மாணவர்களுக்குக் கேடு பயக்கும் :: பெ.மணியரசன் அறிக்கை!

சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது மாணவர்களுக்குக் கேடு பயக்கும்

கட்டணக்கொள்ளைக்கு வழி வகுக்கும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர்

பெ.மணியரசன் அறிக்கை

23.05.2011, சென்னை-17.

 

முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் குழு பரிந்துரைத்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் 20 விழுக்காட்டளவிற்கு உள்ளவற்றை மட்டுமே கருணாநிதி செயல் படுத்தினார். அதையும் நிறுத்தி வைக்க தமிழக முதல்வர் செயலலிதா முடிவு செய்த்தது பெறும் பின்னடைவாகும்.

 

தமிழக அரசுப் பள்ளிகளுக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் என்ற ஒன்றைத் தவிர மற்றவற்றை முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல் படுத்த வில்லை.

 

அரை குறையாகக் கட்டண ஒழுங்கமைப்பைக் கொண்டு வந்தார் கருணாநிதி. இவற்றை ஏற்க விரும்பாத மெட்ரிக் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்வியை எதிர்த்துப் பல வடிவங்களில் போராடினார்கள். உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வியை ஆதரித்துத் தீர்ப்பளித்த பின் ஒருவாறு ஓய்ந்தனர் கல்வி முதலாளிகள்.

 

இப்போது என்ன மாயம் நடந்ததோ, வந்ததும் வராததுமாக செயலலிதா சமச்சீர் கல்வியை ஓராண்டிற்கு நிறுத்தி வைத்து விட்டார். அவர் அமைக்கும் வல்லுநர் குழுவின் பரிந்துரைபடி அடுத்த ஆண்டு செயல்படுவாராம்!

 

சமச்சீர் திட்டப்படி 216 கோடி ரூபாய் செலவில் 9 கோடி நூல்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் வீண்! இனி பழைய பாடத்திட்டப்படி பாட நூல்கள் அச்சிட 110 கோடி செலவாகுமாம். மக்கள் வரிப்பணத்தை துச்சமாக விரையம் செய்வதில் முதல்வர் செயலலிதாவிற்குக் கொஞ்சம் கூட மன நெருடல் இல்லையா?.

 

சூன் 1-ஆம் நாள் திறக்க வேண்டிய பள்ளிகளை சூன் 15-ஆம் நாள் திறக்கும் படி தள்ளி வைத்துள்ளார் செயலலிதா. இந்த நாள்களைப் பின்னர் மே மாத வெயிலில் ஈடுகட்டுவார்களா? எல்லாத் தொல்லையும் மாணவ்ர்கள் தலையில் விடியப் போகிறது.

 

 பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலில் செம்மொழி என்ற பாடத்தில் கடைசி ஒரு பத்தியில் மட்டுமே கருணாநிதி குறிப்பிடப்பட்டுள்ளார். சங்கத்தமிழ் குறித்து கருணாநிதி எழுதிய பாடம் ஒன்றும் உள்ளது. கருணாநிதி குறித்த பாடத்தை நீக்க வேண்டுமானால் அப்பக்கங்களை மட்டுமே நீக்கிவிட்டு நூல்களை வழங்கலாம்.

 

1996-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதற்கு முன் செயலலிதா பற்றி 12 பக்கம் இருந்த பாடத்தை மட்டும் நீக்கி விட்டு பழைய ஆட்சி அச்சிட்டிருந்த பாட நூல்களை மாணவர்களுக்கு வழங்கியது. சமச்சீர் பாட நூல்களில் குறையிருந்தால் அவற்றை மட்டும் சரி செய்யலாம். அவ்வாறின்றி ஒட்டு மொத்தத் திட்டத்தைக் கடைசி நேரத்தில் நிறுத்தி வைப்பது

 

 

மாணவர்களுக்குக் கேடு பயப்பதாகும். பாட நூல் மாற்றத்தோடு நில்லாமல் பழையபடி கட்டணக்கொள்ளைக்கு வழி வகுக்கும்.

 

ஏற்கெனவே, கல்வித்துறை, உயிரோடு இருக்கும் தலைவர்கள் குறித்து பாடங்களைப் பாட நூல்களில் வைப்பதில்லை என்ற நடைமுறை வைத்திருந்தது. அந்த நடை முறையை மாற்றியவர்கள் கழக ஆட்சியினர்தாம்.

 

சமச்சீர் கல்விப்பாட நூல்கள் தரமாக இல்லை என்று மெட்ரிக் பள்ளி முதலாளிகள் கூறிய அதே குற்றச்சாட்டைத்தான் செயலலிதாவும் தமது முடிவுக்குக் காரணமாகக் கூறியுள்ளார். இருக்கும் சில குறைகளை நீக்கி இப்போது அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் பாட நூல்களை வழங்குவதே  கல்வி வளர்ச்சியின் மீது அக்கறை கொண்ட செயலாகும்.

 

எனவே தமிழக முதல்வர் செல்வி செயலலிதா தமது முடிவை மறு ஆய்வு செய்து சம்ச்சீர் கல்வித் திட்டத்தை வரும்  சூன் மாதம் செயல்படுத்துமாறு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


தோழமையுடன்,

பெ.மணியரசன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT