உடனடிச்செய்திகள்

Monday, January 30, 2012

தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடந்த மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்!

தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடந்த மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்!

 

தமிழீழ மக்கள் மீது இந்திய - சிங்கள அரசுகளால் திணிக்கப்பட்ட 2009 முள்ளிவாய்க்கால் போரை நிறுத்தக்கோரி சனவரி 29 அன்று மாவீரன் முத்துக்குமார், சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகமான சாஸ்திரி பவனில் தீக்குளித்து உயிரீகம் செய்தார். அவரைத் தொடர்ந்து, 18 தீந்தமிழர்கள் போர் நிறுத்தம் கோரி தன்னுயிரை ஈகம் செய்தனர். ஈகியர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நேற்று தமிழகமெங்கும் பல்வேறு அமைப்பினரால் சிறப்பாக நினைவுகூறப்பட்டது.

 

சென்னை

ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில்சென்னை கொளத்தூரில் எழுப்பப்பட்டிருந்த மலர் தூணுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. அதியமான், காஞ்சி மக்கள் மன்றம் ஒருங்கிணைப்பாளர் ஜெர்சி, தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் அருண்சோரி, சதிசுகுமார், ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் வ.கவுதமன், காரை மைந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. திருச்சி சவுந்திரராசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, சேவ் தமிழ் இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில், தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் புலவர் சி.பா.அருட்கண்ணனார்,  உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்களும் அணி அணியாக வந்து வீரவணக்கம் செலுத்தினர்.

 

மாவீரன் முத்துக்குமார் உயிர் நீத்த, சென்னை இந்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு முத்துக்குமாரின் பெயரை வைக்க வேண்டுமென வலியுறுத்தி, தமிழர் எழுச்சி இயக்கத்ன் ஒருங்கிணைப்பாளர் தோழர் வேலுமணி தலைமையில் சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் இரண்டாம் ஆண்டாக இவ்வாண்டும் நடந்தது. காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட 30 தோழர்களை கைது செய்து மாலை விடுவித்தது.

 

நேற்று மாலை சென்னை திரு.வி.க. நகரில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பெ.தி.க. தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர் தோழர் சி.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றினர்.

 

தஞ்சை

தஞ்சை செங்கிப்பட்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரால் நிறுவப்பட்டுள்ள மாவீரன் முத்துக்குமார் சிலைக்கு நாள் முழுவதும், தஞ்சை, திருச்சி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்த வந்த த.தே.பொ.க. மற்றும் தோழமை அமைப்புத் தோழர்களும், உணர்வாளர்களும் மலர் மாலைகள் அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், முத்துக்குமார் சிலை அமைக்க தனது நிலத்தை இலவசமாக வழங்கி நின்ற புலவர் இரத்தினவேலவர் முன்னின்று மேற்கொண்டார். பங்கேற்றத் தோழர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. மாலையில் எழுச்சியான கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.

 

ஓசூர்

ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் வீரவணக்க சுடரோட்டமும், நினைவேந்தல் பொதுக்கூட்டம் சிறப்பாக நடந்தேறியது. தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய சுடரோட்ட நிகழ்வில், தோழர் ஸ்டாலின் சுடரேந்திவர, திரளான த.தே.பொ.க. தோழர்களும், நிகரன், மெய்யறிவு, அகஸ்டின், வெண்ணிலா உள்ளிட்ட குழந்தைகளும் அவரைப் பின் தொடர்ந்தனர்.

 

சுட்ரோட்டத்தை தோழர் இரவீந்தரன் தொடக்கி வைத்தார். மகளிர் ஆயம் செயலாளர் தோழர் கண்மணி உள்ளிட்ட பெண் தோழர்கள் முன்னிலை வகித்தனர். முழக்கங்கள் எழுப்பியவாறு சற்றொப்ப 9 கிலோ மீட்டர் தொலைவு நடைபெற்ற இச்சுடரோட்ட நிகழ்வு ஓசூர் நகரில் முத்துக்குமாரின் ஈகம் குறித்த விரிவான பரப்புரையாக அமைந்தது. ராம் நகரில் நிறைவடைந்த சுடரோட்ட சுடரை தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் செயலாளர் திரு. இராம்குமார் பெற்றுக் கொண்டார். அங்கு நடந்த நினைவேந்தல் பொதுக் கூட்டத்திற்கு, ஓசூர் த.தே.பொ.க. நகரச் செயலாளார் தோழர் இரமேசு தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தோழர் பழனி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். நிறைவில், தோழர் முருகப்பெருமாள் நன்றி நவின்றார்.

 

குடந்தை 

குடந்தையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இன்று காலை குடந்தை மேலக்காவிரி அருகில் நடைபெற்ற இந்நிகழ்வில், .தே.பொ.க. குடந்தை நகரச் செயலாளர் தோழர் விடுதலைச் சுடர், குடந்தைத் தமிழ்க் கழக அமைப்பாளர் தோழர் பேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

 

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஈரோடு வெ.இளங்கோவன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். தோழர் பார்த்திபராசன் தலைமை தாங்கினார். தோழர் தமிழ் வரவேற்புரையாற்றினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துக்குமார் நிழற்படத்திற்கு தோழர்கள் மலர் மாலை அணிவித்து, வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இராசையா, தோழர் தீரன் ஆகியோர் ஈகியரை நினைவுகூர்ந்து வீரவணக்க உரையாற்றினார்.

 

பவானி - ஒருச்சேரி

பவானி நகரம் ஒருச்சேரியில், தமிழக இளைஞர் முன்னணி சார்பில் மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் ம.பழனிச்சாமி முன்னிலையில், தோழர் சின்னராசு தலைமையேற்க ஈழவிடுதலைக்காக சிறை சென்ற தமிழச்சி தாயம்மா மலர் தூவி ஈகியருக்கு மரியாதை செலுத்தினார். இலக்கியத் தளம் அமைப்பின் தோழர் பகலவன் சிறப்புரையாற்றினார். நிறைவில் தோழர் சேகர் நன்றி கூறினார். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஊர் பொது மக்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.

 

மதுரை

மதுரை செல்லூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்க நிகழ்வு நிடைபெற்றது. த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார்.

 

திருச்செந்தூர்

திருச்செந்தூரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் நடக்கும் வீரவணக்கக் கூட்டத்தில் கட்சித் தலைவர் இயக்குநர் சீமான் வீரவணக்க உரை நிகழ்த்தினார்.

 

காட்டுமன்னார்கோயில்

காட்டுமன்னார் கோயில் பேருந்து நிலையம் அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இன்று மாலை ஈகியருக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. த.தே.பொ.க. செயலாளர் தோர் சிவ.அருளமுதன் உள்ளிட்டோர் இதில் உரையாற்றுகின்றனர்.

 

இதே போன்று, தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகள் பல்வேறு பகுதிகளிலும் வீரவணக்க நிகழ்வுகள் எழுச்சியுடன் நடந்தன. ஈழத்தமிழர்களுக்காக உயிரீகம் செய்த அம்மாவீரர்களின் ஈகம் வீண்போகாது என்பதையே இது உணர்த்தகின்றது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT