உடனடிச்செய்திகள்

Tuesday, April 16, 2019

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்! பல்கலைப் பதிவாளரிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி கோரிக்கை!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்! பல்கலைப் பதிவாளரிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி கோரிக்கை!
புதுச்சேரி பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு காலாப்பட்டு பகுதியில் 870 ஏக்கர் வேளாண் விளை நிலங்கள் மீது அமைக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்காக சற்றோப்ப 870 ஏக்கரில் நடைபெற்று வந்த விவசாயம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

இப்பல்கலைக்கழகம் புதுச்சேரியில் அமைக்கப்படுவதற்கான நோக்கத்தை அப்போதே தெளிவுபடுத்தினார்கள். புதுச்சேரி மக்கள் தங்களுடைய கல்வி - வேலைவாய்ப்பு ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் தான் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக அன்றைய இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி வாக்குறுதி அளித்தார். அதன் பெயரிலேயே வேளாண் விளை நிலங்களின் மீது இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த நோக்கங்கள் இன்றைக்கு சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை!
புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளி மாநில மாணவர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் மிக மிகக் குறைவு! புதுச்சேரி மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஏற்கெனவே புதுதில்லியில் அம்மாநில அரசு மத்திய பல்கலைக் கழகமாக உள்ள தில்லி பல்கலைக்கழகத்தில் அந்த மண்ணின் மக்களுக்கு 85 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 2017ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மத்திய பல்கலைக்கழக இருந்தாலும் கூட அந்த மண்ணின் மக்கள் டெல்லியில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

ஆந்திராவில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் 1978ஆம் ஆண்டிலிருந்து இந்திய குடியரசுத் தலைவர் தனி ஆணையின் பேரில் 85 விழுக்காடு அந்த மண்ணின் மக்களுக்கே என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் தேர்வு ஆந்திராவில் மட்டும் பொருந்தாது என்ற நிலை இருக்கிறது.

எனவே இந்த நடைமுறைகளை பின்பற்றி புதுச்சேரியிலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 90 விழுக்காடு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக மாணவர் முன்னணி சார்பில் பல்கலைக்கழக பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

பல்கலைக்கழகப் பதிவாளர் திருமதி. சித்ரா அவர்களிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி தோழர்கள் உதயச்சங்கர், கணேசமூர்த்தி, தினேஷ், பவித்திரன்,
தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் இம்மனுவை இன்று (16.04.2019) காலை நேரில் கையளித்தனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 25 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென தாம் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக பதிவாளர் திருமதி. சித்ரா தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த நம் தோழர்கள் 25 விழுக்காட்டு இடங்கள் போதாது எனவும், 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், எவ்வித முன்னறிவிப்புமின்றி புதுச்சேரி பல்கலைகழகத்தின் கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது ஏழை எளிய மாணவர்களை கடுமையாக பாதிக்கக்கூடிய நடவடிக்கை எனக் குறிப்பிட்டு, இக் கல்வி கட்டண உயர்வைத் திரும்பப் பெற்று பழைய கல்வி கட்டண விகிதம் தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி பல்கலைக் கழக நிர்வாகத்தை வலியுறுத்தி வேண்டுகோள் விடப்பட்டது.

#வெளியார்

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT