உடனடிச்செய்திகள்

Wednesday, August 7, 2019

“பாலாற்றில் ஆந்திரத் தடுப்பணைகளால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது!” தோழர் க. அருணபாரதி செவ்வி!

“பாலாற்றில் ஆந்திரத் தடுப்பணைகளால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது!” புதிய தலைமுறை வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி செவ்வி!

“பாலாற்றில் ஆந்திரத் தடுப்பணைகளால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காது!” என புதிய தலைமுறை வார ஏட்டுக்கு அளித்துள்ள செவ்வியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச்செயற்குழு தோழர் க. அருணபாரதி தெரிவித்துள்ளார்.

பாலாற்றில் ஆந்திர அரசு தொடர்ந்து தடுப்பணைகள் கட்டி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுத்து வருவது குறித்து “தடுப்பணை உயரம் பாலாற்றுத் துயரம்!” என்ற தலைப்பில், 08.08.2019 நாளிட்ட “புதிய தலைமுறை” வார ஏடு செய்திக் கட்டுரை வரைந்துள்ளது. அதில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதியின் செவ்வி இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கூறுவதாவது :

“இதுபோல பல மாநிலங்கள் ஊடாக ஓடும் நதிகளில் தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். மேலும், எப்போது ஒரு அணை அல்லது தடுப்பணைகளில் கட்டுமான பணிகளைச் செய்தாலும் அதன் கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதே விதி. ஆனால் இதையெல்லாம் ஆந்திரா மதிப்பதே இல்லை. மத்திய அரசிடம் அனுமதி பெறாமலேயே இப்போது ஆந்திரா அரசு இந்த பணிகளைச் செய்கிறது. மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

ஏற்கெனவே இதுபோல ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே குப்பம் என்ற பகுதியில் ஆந்திரா அணைகட்ட முயன்றபோது அதனை நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்தினோம். அந்த வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. இதையெல்லாம் துளியும் மதிக்காமல் தடுப்பணைகளைக் கட்டுகிறது ஆந்திரம். தமிழக அரசு வழக்கம்போல இந்த விசயத்திலும் மவுனம் காத்து வருகிறது. இதனால், பாலாற்றில் நமது உரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னர் சீனிவாசபுரம் என்ற இடத்தில் அணையின் கட்டுமான பணிகளை ஆந்திரம் செய்தபோது மனமுடைந்த தமிழக விவசாயி ஒருவர் அந்த அணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பாலாற்றில் உள்ள தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தும் பட்சத்தில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. இதன் காரணமாக வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் பாலைவனமாகும். இங்குள்ள விவசாயிகளின் நிலைமை இன்னும் மோசமாகும்”.

இவ்வாறு தோழர் க. அருணபாரதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, உடனடியாகத் தலையிட்டு ஆந்திர அரசு கட்டி வரும் தடுப்பணைகளுக்கு எதிராக சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT