உடனடிச்செய்திகள்

Latest Post

Monday, November 17, 2025

மேக்கேத்தாட்டுஅணைத் திட்ட அறிக்கைதயாரிக்கதடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பு நகலைஎரித்து - தஞ்சையில் காவிரி உரிமைமீட்புக்குழுவினர் எழுச்சியுடன் போராட்டம்!

மேக்கேத்தாட்டு அணைத் திட்ட அறிக்கை

தயாரிக்க தடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்

தீர்ப்பு நகலை எரித்து - தஞ்சையில் காவிரி உரிமை

மீட்புக் குழுவினர் எழுச்சியுடன் போராட்டம்!

 

தமிழ்நாட்டுக்கு வெள்ளக் காலத்தில் வரும் நீரைக் கூட தரக் கூடாது என்ற நோக்கில் கர்நாடகம் மேற்கொள்ளும் மேக்கேத்தாட்டு அணைக்கான முழுமையான திட்ட அறிக்கையைத் தயாரிக்கத் தடையில்லை என கடந்த 13.11.2025 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அத்தீர்ப்பின் நகலை எரித்து, தஞ்சையில் இன்று (17.11.2025) காலை - காவிரி உரிமை மீட்புக் குழுவினர் எழுச்சியுடன் நடத்திய போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட உழவர்களும், உணர்வாளர்களும் பங்கேற்றனர். 50 பேரைக் காவல்துறை கைது செய்தனர்.

 

தஞ்சையிலுள்ள இந்தியத் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று (நவம்பர் 17) காலை, காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் திரு. த. மணிமொழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. க. செகதீசன், தமிழர் தேசியக் களம் அமைப்பாளர் திரு. ஆரூர் ச. கலைசெல்வம், தோழர் இரா. மன்னை இராசசேகரன், காவிரி உரிமை மீட்புக் குழு செயற்குழு தோழர் வெள்ளாம்பெரம்பூர் துரை. இரமேசு, பொறியாளர் செந்தில்வேலன், அள்ளூர் சாமி. கரிகாலன், வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் ஐயா சுந்தரராசன், த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், க. விடுதலைச்சுடர், பி. தென்னவன், வே.க. இலக்குவன், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, இரா.சு. முனியாண்டி, பொதுக்குழு தோழர் க. தீந்தமிழன், குடந்தை செழியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், உழவர்களும் பங்கேற்று, தீர்ப்பு நகலை முழக்கங்களுடன் கொளுத்தினர்.

 

காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

 

========================

செய்தித் தொடர்பகம்,

காவிரி உரிமை மீட்புக் குழு

==========================

பேச: 98419 49462, 94432 74002

==========================

Fb.com/KaveriUrimai

#SaveMotherCauvery

www.kaveriurimai.com

==========================

 

Friday, November 14, 2025

மேக்கேத்தாட்டு அணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி! மக்கள் போராட்டமே தீர்வு! - காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்!

மேக்கேத்தாட்டு அணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

மக்கள் போராட்டமே தீர்வு!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்!

  

தமிழ்நாட்டின் எல்லைக்கருகில் கர்நாடக அரசு, தனது எல்லையான மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே, 67.16 ஆ.மி.க. (டி.எம்.சி.) கொள்ளளவில், மிகப்பெரிய புதிய அணை கட்டுவதற்கான திட்டம் உச்ச நீதிமன்றக் காவிரித் தீர்ப்பிற்கு எதிரானது என்று கூறித் தடை கோரி – தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கை அப்போதைய அண்ணா தி.மு.க. ஆட்சி தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் இதை விசாரிக்காமல் நிரந்தரமாகக் கிடப்பில் போட்டது.

 

இப்போதுள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பூஷன் இராமகிருஷ்ணா கவாய் (பி.ஆர். கவாய்) வரும் 23.11.2025 அன்று பணி ஓய்வு பெறும் நிலையில், அவசரமாக எடுத்து, விசாரித்து, கர்நாடகம் மேக்கேதாட்டில் 67.16 ஆ.மி.க. கொள்ளளவு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report – DPR) அளிக்கவும், அதை இந்திய அரசின் நீர்வளத்துறை அனுமதிக்கு அனுப்பவும் தடை இல்லை என்று கூறி, தமிழ்நாடு அரசு 2018இல் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா ஆகியோரைக் கொண்ட அமர்வு இது!

 

இதற்கு முன் இதே தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் அமர்வு – முல்லைப் பெரியாறு அணையை முடக்கக் கோரிய கேரளத்தின் வழக்கை எடுத்து, 13.10.2025 அன்று விசாரித்து, "முல்லைப் பெரியாறு அணை மிகமிகப் பழைய அணைகளில் ஒன்று. புதிய அணை கட்டுவது பற்றியும் ஆய்வு செய்வோம்" என்று தீர்ப்பளித்தது. அதாவது, கேரளக் காப்புப் படையணி (Save Kerala Brigade) மற்றும் கேரள அரசு கூறிய வாதத்தை அப்படியே ஏற்றுத் தீர்ப்பளித்தது.

 

இப்போது காவிரிச் சிக்கலில், 2018இல் போடப்பட்ட வழக்கைப் பணி ஓய்வுக்கு முன் அவசரமாக எடுத்து, விசாரித்து, மேக்கேதாட்டு அணைக்கான தொடக்கப் பணிகளுக்குத் தடை இல்லை என்று பி.ஆர். கவாய் அமர்வு தீர்ப்பளித்து, தடை கோரிய தமிழ்நாடு அரசு வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

 

வழக்கம்போல், தமிழ்நாடு அரசின் நீராற்றல் துறை அமைச்சர் துரைமுருகன், "உச்ச நீதிமன்றம் மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதித்தவிட்டதாகக் கூறுவது தவறு, மத்திய நீர்வளத்துறையிலும், காவிரி மேலாண்மை ஆணையத்திலும் தனது வலுவான வாதங்களைத் தமிழ்நாடு அரசு முன் வைக்கும்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இந்திய நீர்வளத்துறையும், காவிரி மேலாண்மை ஆணையமும் ஏற்கெனவே கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான அறிக்கையை (DPR) ஏற்றுக் கொண்டு விட்டன என்ற உண்மையை மறைக்கிறார் துரைமுருகன்!

 

இந்திய நீராற்றல் (ஜல்சக்தி) துறையின் தலைமை அதிகாரியாக எஸ்.கே. ஹல்தர் இருந்தபோது, அவரே கர்நாடக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை (DPR) அளிக்குமாறு விரும்பிக் கேட்டுப் பெற்றார். அதன் பிறகு, அதை ஏற்க வலியுறுத்தி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் அனுப்பி வைத்தார். அந்த நிலையில், அவர் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுபெற்ற அவரை, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வேண்டுமென்றே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 5 ஆண்டுகளுக்குத் தலைவர் ஆக்கினார்.

 

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் மேற்படி ஹல்தர் தலைமையில் 01.02.2024 அன்று நடந்தபோது, கர்நாடக அரசின் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கேட்டார். தமிழ்நாடு, புதுச்சேரி அதிகாரிகள் எதிர்த்து வாக்களித்தனர். மொத்தம் 9 பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இதில் 5 பேர் இந்திய அரசு அதிகாரிகள். எனவே, மிகப் பெரும்பான்மை ஆதரவுடன் மேக்கேதாட்டு அணை விரிவான திட்ட அறிக்கை காவிரி மேலாண்மை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக – இந்திய அரசின் நீராற்றல் (ஜல்சக்தி) துறைக்கு அனுப்பப்பட்டது.

 

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் துரைமுருகன், மேக்கேத்தாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் எந்த முயற்சியையும் முளையிலேயே தமிழ்நாடு அரசு கிள்ளி எறியும் என்று நெஞ்சாரப் பொய் சொல்கிறார்.

 

ஆனால், கர்நாடக அரசு வனப்பகுதிகளில் இந்த அணையைக் கட்டுவதற்கான தளம் அமைத்தால் போன்ற அடிப்படைப் பணிகளுக்காக மட்டும் இதுவரை சற்றொப்ப 1000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா! அணைக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 14 ஆயிரம் கோடி ரூபாய்!

 

கலைஞர் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராகவும், பின்னர் முதலமைச்சராகவும் இருந்த காலத்தில்தான் இந்திய அரசின் ஒப்புதல் பெறாமலும், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறியும் காவிரி நீர் வரத்துகளின் குறுக்கே ஏமாவதி, ஏரங்கி, கபிணி அணைகளைக் கட்டி முடித்தது கர்நாடகம்!

 

இப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தடவைக் கூட செயல்படுத்தி ஆண்டிற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்குக் காவிரியில் திறந்துவிட்டதில்லை!

 

பருவமழைப் பிறழ்ச்சிகளால் கடந்த சில ஆண்டுகளாகப் பெருமழை பெய்து, கர்நாடகத்தால் தேக்க முடியாத மிகை வெள்ளம் மேட்டூர் அணையை நிரப்பி வருகிறது. விதிமுறைப்படி ஒருதடவை கூடக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையமும் அதைத் தட்டிக் கேட்பதில்லை!

 

எனவே, தமிழ்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினால் தான் காவிரி உரிமையைப் பாதுகாக்க முடியும், அதற்கான களப் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

Saturday, November 1, 2025

சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுக்கு எதிராகப் புதுச்சேரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!

சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுக்கு எதிராகப்

புதுச்சேரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!

 

இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தின் வழியே இந்திக்காரர்கள் திணிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் இன்று (01.11.2025) தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு நடத்தியது.

 

வரும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னெடுக்கவுள்ள இந்த சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டம் (SIR), செயற்கையான முறையில் இந்தி உள்ளிட்ட அயல் மாநில வாக்காளர்களை புதுச்சேரியின் வாக்காளர் பட்டியலில் சேர்த்து, புதுச்சேரியின் அரசியலில் செயற்கையான குறுக்கீடாக அமைந்து குழப்பம் விளைவிக்கும்! பீகாரில் தகுதியான வாக்காளர்களை நீக்கியதன் மூலம் பா.ச.க.வுக்கு பணியாற்றிய தேர்தல் ஆணையம், இங்கு வெளி மாநிலத்தவரை சேர்ப்பதன் வழியாக அதே பணியை செய்யும்.

 

ஏற்கெனவே பீகாரில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின்படி 42 இலட்சம் பேர் வெளி மாநிலங்களில் குடியேறி விட்டதால் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதும், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 7 இலட்சம் பீகாரிகள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டமிட்டதும் இந்த ஆபத்தை உணர்த்தும்! புதுச்சேரியில் பெருமளவில் இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் குடியேறியுள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது வெளி மாநில வாக்காளர்களை புதுச்சேரியின் குடிமக்களாக நிரந்தரப்படுத்தும் சூழ்ச்சியான ஏற்பாடாகும்!

 

எனவே, இதனைக் கண்டித்து, இன்று (01.11.2025) புதுச்சேரி இராசா திரையரங்கம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், த.தே.பே. வடக்கு கிளைச் செயலாளர் தே. சத்தியமூர்த்தி, தொரவி செயலாளர் அ. முருகன், பாகூர் கிளைச் செயலாளர் கே. அன்பு நிலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

"திணிக்காதே! திணிக்காதே! வெளி மாநில வாக்காளர்களைத் திணிக்காதே!", "சீராய்வு என்ற பெயரில் நாடகம் நடத்தாதே!", "புதுச்சேரி தமிழர் தாயகம் காப்போம்!" என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

தமிழ்த்தேசியப் பேரியக்கப் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, கண்டன முழக்கங்களை எழுப்பி இத்திட்டத்தின் ஆபத்து குறித்து உரையாற்றினார். நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலத் தலைவர் திரு. செ. ஞானப்பிரகாசம், தமிழர் களம் புதுச்சேரி செயலாளர் திரு. கோ. அழகர், மக்கள் வாழ்வுரிமை இயக்கம் திரு. வெங்கடேசன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை செயலாளர் திரு. ஆ. பாவாடைராயன், தோழர் த. இரமேசு (நா.த.க.), புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் ஐயா புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி படைப்பாளர் இயக்க நிறுவனர் ஐயா ஆறு செல்வம், புதுச்சேரி தமிழ்ச் சிறகம் செயலாளர் இரா. சுகுமாரன், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா சிவ. மு. இராசாராம், ஐவேலி த.தே.பே. செயலாளர் தோழர் பா. குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

 

நாம் தமிழர் கட்சி மா.செ. இளங்கோவன், வேலவன், மகளிர் ஆயம் தோழர்கள் பிரியா, உமா நந்தினி, கௌசல்யா, கற்பகம், சந்தரலேகா, சித்ரா, பேரியக்கத் தோழர்கள் ஐயா அரங்கதுரை பெருமாள், ஐயா ஆறுமுகம், மதியழகன், இராமச்சந்திரன், ஈட்டன் பாசுகர், மோகன்தாசு, செயக்குமார், அருண்மொழிச் சோழன், மனோஜ்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

 

இந்தியத் தேர்தல் ஆணையமே!

சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வு என்ற பெயரில் புதுச்சேரியில்

இந்திக்காரர்களை வாக்காளர்களாகத் திணிக்காதே!

 

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Thursday, October 30, 2025

இந்தியத் தேர்தல் ஆணையமே! வெளி மாநில வாக்காளரைத் திணிக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தை (SIR) நிறுத்து! புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்தியத் தேர்தல் ஆணையமே!
வெளி மாநில வாக்காளரைத் திணிக்கும்
சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தை (SIR) நிறுத்து!
 புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 

வரும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னெடுக்கவுள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டம் (SIR), செயற்கையான முறையில் இந்தி உள்ளிட்ட அயல் மாநில வாக்காளர்களை புதுச்சேரியின் வாக்காளர் பட்டியலில் சேர்த்து, புதுச்சேரியின் அரசியலில் செயற்கையான குறுக்கீடாக அமைந்து குழப்பம் விளைவிக்கும்! பீகாரில் தகுதியான வாக்காளர்களை நீக்கியதன் மூலம் பா...வுக்கு பணியாற்றிய தேர்தல் ஆணையம், இங்கு வெளி மாநிலத்தவரை சேர்ப்பதன் வழியாக அதே பணியை செய்யும்.

 

ஏற்கெனவே பீகாரில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின்படி 42 இலட்சம் பேர் வெளி மாநிலங்களில் குடியேறி விட்டதால் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதும், அதே நேரத்தில் தமிழ்நாட்டில் 7 இலட்சம் பீகாரிகள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டமிட்டதும் இந்த ஆபத்தை உணர்த்தும்! புதுச்சேரியில் பெருமளவில் இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் குடியேறியுள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது வெளி மாநில வாக்காளர்களை புதுச்சேரியின் குடிமக்களாக நிரந்தரப்படுத்தும் சூழ்ச்சியான ஏற்பாடாகும்!

 

எனவே, சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தை (SIR) நிறுத்தக் கோரி, வரும் 01.11.2025 காரி (சனி) காலை 10.30 மணிக்கு, புதுச்சேரி - இராசா திரையரங்கம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது! பல்வேறு தோழமை அமைப்பினர் இதில் பங்கேற்கின்றனர்!

 

புதுச்சேரியின் அரசியல் கட்சியினர், பொது மக்கள், குடியுரிமைச் செயல்பாட்டாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்திய அரசின் இந்த சூழ்ச்சித் திட்டத்தை முறியடிக்க அணிதிரள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறது! எக்காரணம் கொண்டும், வெளி மாநிலத்தவருக்கு புதுச்சேரியில் வாக்குரிமை வழங்கக் கூடாது என அனைவரும் ஒன்றுபட வேண்டும்!


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================



Saturday, October 18, 2025

உத்திரப்பிரதேசத்தில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலை! திராவிட மாடல் அரசு திருந்துவது எப்போது? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

உத்திரப்பிரதேசத்தில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலை!

திராவிட மாடல் அரசு திருந்துவது எப்போது?

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

 

தமிழ்நாட்டு வேலை, தொழில், வணிகம், கல்வி அனைத்தும் தமிழர்களுக்கே என்ற கோரிக்கை முழக்கத்தை முன்வைத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாகப் போராடி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்டங்களும் திட்டங்களும் இருக்கின்றன என்பதை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி விளக்கி இருக்கிறோம். அதற்கான வெளியீடுகளை வெளியிட்டு இருக்கிறோம்; கருத்தரங்கங்கள் மாநாடுகள் நடத்தி விளக்கி இருக்கிறோம். தமிழ்நாடு அரசு அதை இன்று வரையிலும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

 

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் - தனியார் வேலை வாய்ப்பு உட்பட - 75 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாலும், நான்கு ஆண்டுகள் கடந்த பின்னும், அவர்கள் அதைச் செயல்படுத்த முன்வரவில்லை. மாறாக, இந்திக்காரர்களுக்கும் இந்தி மாநிலத் தொழிலாளர்களுக்கும் இங்கே ஊக்குவிப்பு திட்டங்கள், குடியிருப்பு திட்டங்கள் ஏற்படுத்தி, அவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை வழங்கி, அவர்களை நிலைப்படுத்தி வருகிறார்கள்.

 

ஆனால், தீவிர இந்தியத்தேசியத்தை முன்வைத்து பா.ச.க. ஆளக்கூடிய உத்தரப் பிரதேசத்தில் மண்ணின் மக்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கு, பல சட்ட திட்டங்களை அங்கே நடக்கும் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வருகிறது.

 

இந்திய அரசின் திட்டமான உலகத் திறன் மேம்பாட்டு மையம் (Global Capability Center) எல்லா மாநிலங்களிலும் மாநில அரசின் வழியாகவே செயல்படுகிறது. தமிழ்நாட்டில் திறன் மேம்பாட்டு மையம் என்ற பெயரில் செயல்படுகிறது. அத்திட்டத்தை, உத்திரப்பிரதேச அரசு செயல்படுத்தும்போது, மண்ணின் மக்களுக்கான திட்டமாக மாற்றி அமைத்து, 2025 மே முதல் செயல்படுத்துகிறது. இதன்படி, திறன்வாய்ந்த உத்திரப் பிரதேச மண்ணின் மக்களைப் பணியில் அமர்த்திக் கொள்ளும் நிறுவனங்களுக்கு அவர்களது "நிலைமூலதனச்" (Fixed Capital) செலவில், 25 விழுக்காடு தொகை உ.பி. அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. பின் தங்கிய மாவட்டங்களில், மண்ணின் மக்களுக்கு வேலை வழங்க முன்வரும் நிறுவனங்களுக்குக் கூடுதல் மானியம் அறிவிக்கப் பட்டிருக்கிறது.

 

இது தவிர, தொழில் முனைவோரும், பணியாற்றக் கூடிய தொழிலாளர்களும், உத்திரப்பிரதேச மண்ணின் மக்களாக இருந்தால், அவர்களுக்கு இதே திட்டத்தில் கூடுதல் மானியங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

 

அதேபோல் மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ. 1 இலட்சம் வரையிலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மானியமாக வழங்க திட்டங்களை அறிவித்திருக்கிறார் உ.பி. முதலமைச்சர். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உள்ளூர் மக்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாக இருந்தால், மாதம் தோறும் ரூ. 3000 ஊக்கத்தொகை வழங்குவது என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

அது மட்டுமின்றி, குறிப்பாக ஒவ்வொரு தொழில் சார்ந்த உள்ளூர் வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்து, உத்தரபிரதேசம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

 

அந்த மாநிலத்தில் நூற்பாலைகள், துணி ஆலைகள், ஆயத்த ஆடை நிறுவனங்கள், பின்னலாடைகள் தொழில்கள் ஆகியவற்றில் 50 பேருக்கு மேல் உள்ள நிறுவனங்களில், முழுவதும் உள்ளூர் மக்களை வேலைக்கு வைத்துக் கொண்டால், அந்நிறுவனங்களுக்கு, தனித்த ஊக்குவிப்புத் தொகை வழங்குகிறார்கள்.

 

தமிழ்த்தேசியப் பேரியக்கம் மண்ணின் மக்களுக்கான வேலை வழங்கு வாரியம் என்ற திட்டத்தை முன்மொழிந்து பரப்புரைகளையும் போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.

இதே திட்டத்தை உத்திரப்பிரதேச அரசு 2022இல் இருந்து அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

 

வேலை வாய்ப்பு தேடும் உள்ளூர் மக்கள் தங்கள் பெயர்களைத் தங்களுடைய தொழில் திறன் கல்வி தகுதி ஆகியவற்றுடன் தங்களுடைய தொடர்பு முகவரியோடு பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே இணையதளத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று தேடக்கூடிய நிறுவனங்கள், என்னென்ன கல்வித் தகுதியில் / திறன்களில் தங்களுக்கு எவ்வளவு பேர் தேவை என்பதைப் பதிவு செய்து கொள்ளலாம். வேலை தேடுவோர் அந்த இணையத்தைப் பார்த்து தங்களுக்குப் பொருத்தமான வேலையில் சேர்ந்து கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கும்.

 

வேலைக்கு ஆட்களைத் தேடக்கூடிய நிறுவனங்கள் தங்களுக்குப் பொருத்தமான ஆட்களைத் தேர்வு செய்து கொள்வதற்கு அந்த இணையம் பயன்படும். இதுபோன்ற,  வேலை வழங்கு வாரியம், அதற்கான இணையம் என்பதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல ஆண்டுகளாகக் கூறி வருவதை, உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

 

மதவாதம் பீடித்த உத்தரப்பிரதேச அரசு கூட, தனது மண்ணின் மக்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்கு திட்டங்களை தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கான நிதி ஒதுங்குகிறது.

 

ஆனால் எல்லோருக்கும் எல்லாம் என்ற அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ச்சிப் பாதைக்கு நாங்கள் தான் உலகத்திற்கே வழிகாட்டி எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திராவிட மாடல் தி.மு.க. அரசு, எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பார்க்கிறோம். தொடர்ந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நாம் மண்ணின் மைந்தர்க்கே வேலை கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்சிகள் மண்ணின் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதனுடைய அழுத்தத்தின் காரணமாகத்தான் தி.மு.க.வே தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் அதை அறிவித்தது. ஆனால் அதைச் செயல்படுத்தாது, அதற்கு மாறாக எதிர் திசையில் இந்திக்காரர்களை இங்கே நிலைப்படுத்துவதற்கான முயற்சியில் தான் இறங்கி கொண்டிருக்கிறது.

 

உத்தரப்பிரதேசத்தைப் பார்த்தாவது திராவிட மாடல் அரசு திருந்தி, இனியாவது மண்ணின் மக்களுக்கான வேலை வழங்கும் சட்டங்களையும், திட்டங்களையும், ஊக்குவிப்பு மானிய அறிவிப்புகளையும் வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்பதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT