உடனடிச்செய்திகள்

Latest Post

Wednesday, August 26, 2026

மேட்டூர் அணையை முதல்வரே திறக்கும் தன் விளம்பர மோகத்தைக் கைவிட்டு, வல்லுநர் குழு பரிந்துரை பெற்று திறக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானம்!

மேட்டூர் அணையை முதல்வரே திறக்கும்

தன் விளம்பர மோகத்தைக் கைவிட்டு,

வல்லுநர் குழு பரிந்துரை பெற்று திறக்க வேண்டும்!

 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானம்!

 

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் இன்று (26.08.2026) த            ஞ்சையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், துணைத் தலைவர் தோழர் க. முருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் தோழர் க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, பழ. இராசேந்திரன், பி. தென்னவன், க. விடுதலைச்சுடர், மா. மணிமாறன், க. செம்மலர், வெற்றித்தமிழன், இரா. வேல்சாமி, வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், க. தீந்தமிழன், கதிர்நிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானம் - 1

வல்லுநர் பரிந்துரை பெற்று மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும்!

 

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அணைகள் நிரம்பிய பின்னும் திறந்துவிட மறுக்கிறது கர்நாடக அரசு. கர்நாடக அரசைக் கண்டித்து, இந்திய அரசை வலியுறுத்தியும் காவிரி நீர் பெற துரும்பும் கூட அசைக்காத தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், நாளை மறுநாள் (28..08.2026) மேட்டூர் அணையை திறக்க செல்வதாக அறிவித்துள்ளார்.

 

இன்றைய நிலையில் 88 அடிதான் மேட்டூர் அணையில் தண்ணீர் இருக்கிறது. நீண்ட அனுபவம் உள்ள மூத்த பாசனப் பொறியாளர்கள் வேளாண் துறை வல்லுநர்கள் அறிவுரை பெறாமல் தன் விளம்பர மோகத்தோடு, மேட்டூர் அணையை 28.08.2026 அன்று திறக்க முடிவு செய்தது சரியான செயல்பாடு அல்ல!

 

தன் விளம்பர மோகத்தில் மூழ்கித் திளைத்து முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகை வெள்ளத்தால் நிரம்பிய மேட்டூர் அணையை ஆண்டுதோறும் தான் போய் திறந்து வைத்து தன் விளம்பரம் செய்து கொண்ட நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில் இப்போது உள்ள முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மேட்டூர் அணைத் திறப்பு உள்ளது.

 

முதலமைச்சர் அவர்கள் 28.08.2026 மேட்டூர் அணை திறக்கும் திட்டத்தைக் கைவிட்டு, வல்லுநர்கள் அறிவுரை பெற்று அதன்படி செயல்படுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

 

 

தீர்மானம் - 2

கர்நாடக எல்லையில் மூன்று தமிழர்கள் படுகொலை :

தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு நீதி பெற்றுத்தர வலியுறுத்தல்!

 

கடந்த 2026 ஆகத்து 15 அன்று, கர்நாடக வனப்பகுதியில் எல்லையோரத் தமிழர்களான அந்தோணி சாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (43), செபஸ்டின் டேவிட் குமார் (35) ஆகிய மூவர் அம்மாநில வனத்துறையினரால் கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை இத்தலைமைச் செயற்குழுக் கூட்டம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

 

இக்கொலை தொடர்பாகக் குற்றவாளிகளான வனத்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) முறையாகப் பதியப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். பதியப்படும் வழக்கு வெறும் கொலை வழக்காக மட்டுமின்றி, தமிழர்கள் மீதான இனரீதியான வன்முறை மற்றும் சித்திரவதைக்கான கடுமையான சட்டப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

 

1991இல் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற காவிரி கலவரத்தின்போது, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உடமைகளை இழந்து, இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி விரட்டியடிக்கப்பட்டனர். அத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட கன்னட வெறியர்கள் மீது கூட அம்மாநில அரசு முறையாக விசாரணை நடத்தி தண்டிக்கவில்லை. அண்மையில் 2016இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி.என். பேருந்துகளை பட்டப்பகலில் கொளுத்திய கன்னட இனவெறியர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 

எனவே, தமிழ்நாடு அரசு இப்போதாவது மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வில் உடனடியாகத் தலையிட்டு, மூத்த அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை கர்நாடகாவிற்கு அனுப்பி களநிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டும்; அவ்வழக்கை நேரடிக் கண்காணிப்பில் நடத்தி, குற்றமிழைத்த கன்னட அதிகாரிகளுக்கு உச்சபட்சத் தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா 1 கோடி ரூபாய்  இழப்பீடும் அரசுப் பணியும் பெற்றுத்தர வேண்டும் என இத்தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

 

தீர்மானம் - 3

வடலூர் வள்ளலார் பெருவெளி சிதைப்புத் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கிறோம்! பெருவெளியைப் பழைய நிலைக்குச் சீரமைக்க வேண்டும்!

 

வடலூரில் தமிழர் மறுமலர்ச்சி மூலவர் அருட்பிரகாச வள்ளலார் அமைத்த “வள்ளலார் பெருவெளி”  நிலத்தைச் சிதைக்கும் நோக்கில், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சற்றொப்ப 100 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் ‘பன்னாட்டு மையம் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் வணிகத்திற்கான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தை பெருவெளிக்குள் நடத்தாமல் வெளியே நடத்த வேண்டுமெனக் கோரியும், பெருவெளியைப் பாதுகாப்பதற்காகவும் பார்வதிபுரம் கிராம மக்களுடன் இணைந்து நமது வள்ளலார் பணியகமும், தெய்வத் தமிழ்ப் பேரவையும் தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தன.  

 

இந்நிலையில், மக்களின் இடைவிடாத போராட்டங்களின் தொடர்ச்சியாகவும், கடந்த தி.மு.க.  ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும், தற்போது அமையப்பெற்றுள்ள த.வெ.க. அரசு வடலூர் பன்னாட்டு மையக் கட்டுமானத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளதை இத்தலைமைச் செயற்குழுக் கூட்டம் முழுமனதாக வரவேற்கிறது.

·       ஆயினும், வள்ளலார் பெருவெளியின் எந்தப் பகுதியிலும் எவ்வித அரசு மற்றும் தனியார் கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதைச் சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.

 

·       பெருவெளியைப் பாதுகாக்க அறவழியில் போராடிய பார்வதிபுரம் மக்கள், வள்ளலார் பணியக  அன்பர்கள் மீது முந்தைய அரசால் போடப்பட்ட அனைத்துப் பொய் வழக்குகளையும் நிபந்தனையின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

 

·       கட்டுமானப் பணிகளுக்காகப் பெருவெளியில் தோண்டப்பட்ட ஆழமான குழிகள் அனைத்தையும் உடனடியாக மூடி, வள்ளலார் பெருவெளியை அதன் முழுமையான இயற்கை மற்றும் ஆன்மிகப் புனிதப் பழைய நிலைக்குச் சீரமைத்துத் தர வேண்டும்.

 

மேற்கண்ட கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என இத்தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

 

தீர்மானம் – 4

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்

திருக்குடமுழக்கை தமிழிலேயே நடத்த வேண்டும்!

 

சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த மதுரையில், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா வரும் 2026 செப்டம்பரில் (17.09.2026) நடைபெறுவது வரவேற்கத் தக்கது. அக்குடமுழுக்கு விழாவை, முழுக்க முழுக்கத் தமிழிலேயே நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில், ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், அதனைப் புறக்கணித்துவிட்டு கடந்த தி.மு.க. அரசின் வழியில், சமற்கிருத வழியிலேயே குடமுழக்கை நடத்திட த.வெ.க. அரசு முயல்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

 

ஏற்கெனவே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தமிழில் பாதி – சமற்கிருதம் மறுபாதி என குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டுமென பலமுறை தீர்ப்பளித்துள்ளது. அண்மையில், 21.04.2026 அன்று, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமெனக் கோரி கரூர் வழக்கறிஞர் இரா. இராசேந்திரன் தொடுத்த வழக்கில் (வழக்கு எண்:  W.P. (MD) No: 11386 of 2026) தீர்ப்பளித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி அவர்கள், கருவறை – வேள்விச் சாலை – கோபுரக் கலசம் ஆகிய முகாமையான மூன்று நிலைகளிலும் தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கை நடத்த வேண்டுமெனக் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

 

எனவே, தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை, இத்தீர்ப்பை ஏற்று, சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த மதுரையில், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட முன் வர வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒருமனதாக வலியுறுத்திக் கோருகிறது!


 ===============================

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================

Uploaded Image Uploaded Image

Tuesday, August 18, 2026

இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும்! சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை!

இனங்களின் கூட்டரசாக இந்தியாவை

மாற்றியமைக்க வேண்டும்!

சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய

எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை!

 

இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும் என சென்னையில் இன்று (18.08.2026) தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் பேரெழுச்சியோடு நடைபெற்றது.

 

இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும்தமிழ்நாட்டு மக்களுக்குக் குடியுரிமை கொடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டும், நாகாலாந்து - அருணாச்சலப்பிரதேசம் – மிசோரம் மணிப்பூர் மாநிலங்களில் இருப்பதுபோல் தமிழ்நாடு அரசுக்கும் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்க - மறுக்க உள்நுழைவு அனுமதி வழங்கும் அதிகாரம்” (Inner Line Permit) வேண்டும்இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநர் பதவியை நீக்க வேண்டும்வரி வசூல் அதிகாரம் முழுவதும் மாநில அரசிடமே இருக்க வேண்டும்கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் முதலிய கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், இன்று (18.08.2026) செவ்வாய் காலை 10 மணிக்குசென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தலைமையேற்றுப் பேசினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் நா. வைகறை, கோரிக்கை முழக்கங்களை எழுப்ப. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூடிநின்ற தோழர்கள், அதனை விண்ணதிர உணர்வோடு எதிராலித்தனர்.

 

"ஆரியத்துவ ஒற்றை ஆட்சி முறையினைத் திணிக்காதே!", “மொழி இன அடையாளத்தை அழிக்காதே!”, “இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றிடு!”, “தமிழருக்குத் தன்னரசு! இனங்களின் கூட்டரசு! தமிழ்நாட்டில் தன்னரசு! இந்தியாவில் கூட்டரசு! தமிழ்நாட்டுக்கு அதுவே தேவை!”, “படைத்துறை - தகவல் தொடர்பு - வெளிநாட்டுறவு - பண அச்சடிப்பு நான்கு துறை அதிகாரம் மட்டும் இந்திய அரசுக்கு போதும்! மற்ற அதிகாரங்கள் அனைத்துமே மாநில அரசுக்கு வேண்டும்! வேண்டும்! என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.  

 

அதனைத் தொடர்ந்து, பேரியக்கத் துணைத் தலைவர் திரு. க. முருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் தோழர் க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, மகளிர் ஆயம் துணைத் தலைவர் தோழர் செம்மலர்ச்செல்வி ஆகியோர் ஆர்ப்பாட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.

 

தமிழர் தன்னுரிமைக் கழகத் தலைவர் பாவலர் இராமச்சந்திரன், பாவலர் கீர்த்தி, தமிழின உணர்வாளர் திரு. அ. பத்மநாபன், அம்பத்தூர் தாய்த்தமிழ்ப் பள்ளித் தாளாளர் திரு. சிவ. செந்தமிழ்வாணன், புதுச்சேரி மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் திரு. கோ.அ. செகநாதன், ஆறாம் திணை மக்கள் இயக்கத் தலைவர் திரு. செகதீசன், உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி தலைவர் பாவலர் தமிழுலகன், திரு. வேலு சுபராசன் (உலகத் தமிழ் இயக்கம்) உள்ளிட்ட தோழமை அமைப்புத் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உடன் நின்றனர்.

 

பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர்கள் சென்னை வெற்றித்தமிழன், தஞ்சை பழ. இராசேந்திரன், திருச்செந்தூர் மு. தமிழ்மணி, திருச்சி வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், பூதலூர் பி. தென்னவன், புதுச்சேரி இரா. வேல்சாமி, குடந்தை க. விடுதலைச்சுடர், சாமிமலை க. தீந்தமிழன், மதுரை கதிர்நிலவன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா, பொதுக்குழு தோழர்கள் சிதம்பரம் வேந்தன் சுரேசு, கோவை பாலகுமரன், ஈரோடு குமரேசன், உடுமலைப்பேட்டை இராசேசு, தொரவி முருகன், சீர்காழி அரவிந்தன், சென்னை பழ.நல். ஆறுமுகம், அம்பத்தூர் செயலாளர் தோழர் அன்புகிட்டு, ஆவடி செயலாளர் தோழர் சுப்பிரமணியன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், சைதாப்பேட்டை செயலாளர் தோழர் முகிலன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் அமுதன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் பாவலர் முழுநிலவன்   உள்ளிட்ட தமிழ்நாடு – புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பேரியக்கத் தோழர்களும், நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் பேரெழுச்சியோடு பங்கேற்றனர்.

 

இந்திய அரசே!

இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்று!


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================

 


Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image

Monday, August 17, 2026

ஊடகவியலாளர்கள் அழைப்புக் கடிதம்

ஊடகவியலாளர்கள் அழைப்புக் கடிதம்

                                               

விடுநர்

       க. அருணபாரதி,

      துணைப் பொதுச் செயலாளர், த.தே.பே.,

      எண்: 12/6, “பன்மைவெளி”, முதல் தளம்,

நியூ பங்காரு காலனி முதல் தெரு,

கலைஞர் கருணாநிதி நகர் மேற்கு,

சென்னை - 600 078.

 

பெறுநர்

      உயர்திரு. செய்தி ஆசிரியர் அவர்கள்,

      அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள்,

      சென்னை, தமிழ்நாடு.

 

மதிப்பிற்குரிய ஐயா / அம்மா,

 

இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும், தமிழ்நாட்டு மக்களுக்குக் குடியுரிமை கொடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டும், நாகாலாந்து - அருணாச்சலப் பிரதேசம் மிசோரம் - மணிப்பூர் மாநிலங்களில் இருப்பதுபோல் தமிழ்நாடு அரசுக்கும் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்க - மறுக்க உள்நுழைவு அனுமதி வழங்கும் அதிகாரம்” (Inner Line Permit) வேண்டும், இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநர் பதவியை நீக்க வேண்டும், வரி வசூல் அதிகாரம் முழுவதும் மாநில அரசிடமே இருக்க வேண்டும், கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் முதலிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (18.08.2026) செவ்வாய் காலை 10 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில், மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

இந்நிகழ்வுக்கு, தங்கள் ஊடகத்தின் சார்பில் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை அனுப்பி செய்தி சேகரித்து துணை நிற்குமாறு, தங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

 

தோழமையுடன்,

. அருணபாரதி

துணைப் பொதுச்செயலாளர்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச - 98419 49462, 98408 48594

Uploaded Image Uploaded Image Uploaded Image

Friday, August 7, 2026

நிதிப்பகிர்வு குறித்த விஜய் அரசின் நாடகத்தீர்மானம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

நிதிப்பகிர்வு குறித்த விஜய் அரசின் நாடகத்தீர்மானம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்!

 

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

 

இன்று (7-8-2026) தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டுக்கான இந்திய அரசின் நிதிப் பகிர்வு குறித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் “பாலுக்கும் காவல், புனைக்கும் தோழன்” என்ற வகையில் அமைந்த “நாடகத் தீர்மானமாக” இருக்கிறது! தமிழ்நாடு அரசின் சார்பில் முன்மொழியப்பட்டு, அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

 

தமிழ்நாடு அரசின் சார்பில், நிதிஅமைச்சர் மரியவில்சன் முன்மொழிந்த தீர்மானம் எந்தக் குறிப்பான கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. “மத்திய அரசின் வரிவருவாய் பகிர்வானது சமநீதி, ஞாயம், மாநிலத்தின் நிதிதிரட்டும் திறன், ஆட்சி நிர்வாகத்தின் செயல்திறன், அம்மாநிலத்தின் வளர்ச்சித் தேவைகள் ஆகியவற்றை மனதில் கொண்டும், மக்கள் தொகைப் பெருக்கத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய, மற்றும் மனித வள மேம்பாட்டில் முன்னேறிய மாநிலங்களைப் பாதிப்பதாக இல்லாமலும் அமையவேண்டும். இதற்கு ஏற்ப மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வு ஏற்பாடுகள் அமையவேண்டும்” என்று பொதுப்படக் கூறிச்செல்கிறது.

 

இத்தீர்மானத்தின் மீது பேசிய தி.மு.க. உறுப்பினர் – முன்னாள் நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு, மொத்த வரிவருவாயில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதிப்பங்கு 16-ஆவது நிதி ஆணையம் அறிவித்துள்ள 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்படவேண்டும் என்ற திருத்தத்தை மட்டும் முன்வைத்தார். தமிழ்நாட்டிற்கு என்ன வேண்டும் என்று எதையும் கோரவில்லை.

 

இத் தீர்மானத்தின் மீது பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நிதி ஆணையத்தின் நிதிப்பகிர்வு முறைமை. தமிழ்நாடு போன்ற இயற்கை அமைப்பில் காடுகளின் பரப்பளவு குறைவாக இருக்கிற மாநிலத்தை, அதேபோல், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் திறனோடு செயல்பட்ட மாநிலத்தை வஞ்சிப்பதாக அமைந்துவிடக் கூடாது” என்றுதான் பேசினார்.

 

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “வழவழா“ தீர்மானம் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தேவையையும் நாட்டு முன்னேற்றத்தில் அதன் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு இந்திய அரசின் வரிவருவாய் பங்கீடு அமையவேண்டும் எனப் பொதுப்படப் புலம்பியது. வேறு எதுவும் உருப்படியாக இல்லை. குறிப்பான கோரிக்கை இல்லாத இந்தத் தீர்மானம், தமிழ்நாடு நிதிவகையில் இந்திய அரசால் புறக்கணிக்கப்படுவதைக் கவனத்தில் கொண்டு விழிப்போடு இருக்கிறோம் என மக்களுக்குப் படம் காட்டுகிறதே தவிர, பயன்தரத் தக்கதாக இல்லை. உரிமை கோருவதாகக் கொஞ்சமும் இல்லை.

 

நிதி உரிமை கோரியதாகவும் இருக்க வேண்டும், இந்திய அரசின் முகம் கொஞ்சமும் கோணக்கூடாது என்று அமைந்துள்ள வழக்கமான திராவிடபாணி தீர்மானமாக, த.வெ.க. அரசின் இத் தீர்மானம் இருக்கிறது.

 

வரிவிதித்து வசூலிக்கிற முழு அதிகாரமும் மாநிலத்திற்கே வேண்டும் என்ற அடிப்படையான கூட்டரசுக் கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கை. அது ஒரு புறமிருக்கட்டும். குறைந்தது, இந்திய அரசு தமிழ்நாட்டில் திரட்டுகிற வரிவருவாயில் 50 விழுக்காடு அளவு தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டும் என்ற குறைந்தபட்சக் கோரிக்கை கூட த.வெ.க. அரசும், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளும் இதில் முன்வைக்காதது, பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக் கட்சிளே தமிழ்நாட்டை வஞ்சிப்பது போல் உள்ளது.

 

இந்திய அரசு இப்பொழுது மாநிலங்களில் வசூலிக்கும் வரியில் 41 விழுக்காடு மாநிலங்களுக்குத் திருப்பித் தருவதாகச் சொல்கிறது. ஆனால், உண்மை என்ன? தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வசூலித்த வரியில் 41 விழுக்காட்டை எடுத்து, பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் போன்ற இந்தி மாநிலங்களுக்கும் மற்ற சில மாநிலங்களுக்கும் 50 லிருந்து 60 விழுக்காடு அளவுக்கு திருப்பிக் கொடுக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இந்திய அரசு வசூலித்த வரியில் 27 விழுக்காடு மட்டுமே தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது; 41 விழுக்காடு அல்ல.

 

இந்த நிலையில், இதை ஏன் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானத்தில் தெளிவாகக் குறிப்பிடவில்லை? இந்திய அரசு தமிழ்நாட்டில் வசூலித்த தொகையில் 41 விழுக்காடும் வந்துவிடுவது போலவும், இதை 50 விழுக்காடாக உயர்த்தவேண்டும் என்று கேட்பது போலவும் தோற்றம் அளிக்கிறது. எனவே, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே நிறைவேற்றி இருப்பது கண்டனத்துக்குரியது.

 

தமிழ்நாடு அரசு சார்பில் இதற்கொரு திருத்தமாவது சொல்லுங்கள். இந்திய அரசு தமிழ்நாட்டில் வசூலித்த மொத்த வரியில் 50 விழுக்காடு நிதி தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசைக் கோருவதாக ஒரு திருத்தத்தை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.           

 

பிரித்தானிய ஆட்சி இந்திய துணைக் கண்டத்தைக் கொள்ளை அடித்ததை விட இந்திய அரசு தமிழ்நாட்டில் அடிக்கிற வரிக் கொள்ளையும், வளக் கொள்ளையும் மிகமிக அதிகம். உண்மையில், காலனியச் சுரண்டலுக்கு உள்ளான மண்ணாக தமிழ்நாடு அல்லல்படுகிறது.

 

இந்த அவலச் சூழலில்கூட தமிழ்நாடு அரசோ, சட்டமன்றத்தில் அரசியல் கட்சிகளோ தமிழ் நாட்டின் உரிமைகளை உறுதியாக வலியுறுத்த முன்வரவில்லை என்பது கவலை அளிக்கிறது.

 

இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக விழிப்புணர்வுள்ள இளையோர், தமிழ்நாட்டின் நிதிஇறையாண்மையை வலியுறுத்தி, கட்சிகள் கடந்து ஒன்றுதிரள வேண்டும். தமிழ்நாடு மீள அது ஒன்றுதான் வழி எனத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது.  


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.X.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=============================== 

Uploaded Image

Wednesday, July 29, 2026

காவிரி உரிமையை தட்டிப் பறிக்க இந்திய அரசின் பச்சைக் கொடி! காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம் - கி. வெங்கட்ராமன் அறிக்கை!

காவிரி உரிமையை தட்டிப்பறிக்க

இந்திய அரசின் பச்சைக் கொடி!

காவிரி உரிமை மீட்புக்குழு கண்டனம்

கி. வெங்கட்ராமன் அறிக்கை!

 

இந்திய ஆட்சியில் அனாதையாக்கப்பட்ட இனம்தான் தமிழினம் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் மேகேதாது அணை குறித்து நாடாளுமன்றத்தில் இந்திய அரசு கருத்து வெளியிட்டிருக்கிறது.

 

மேகேதாது அணை குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் வினா எழுப்பிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசு “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கர்நாடகம் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவகை கட்டமைப்பை மேற்கொள்வதாக இருந்தாலும், தமிழ்நாடு கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா?“ எனக் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு விடை அளித்த இந்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜபூஷன் சௌத்திரி “காவிரியின் குறுக்கே எந்தவகைக் கட்டமைப்பையும் நிறுவிக் கொள்வதற்கு கர்நாடக மாநிலம், தமிழ்நாடு கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் எந்த மாநிலமும் தனது மாநில எல்லைக்குள் நீரைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கான அதன் உரிமை அதிகாரம் அல்லது ஆற்றலை குறைக்கவோ, பாதிக்கவோ கூடாது. இத் தீர்ப்பாயத்தின் உத்திரவுக்கு முரண்படாதவகையில் அந்த மாநில எல்லைக்குள் உள்ள நீரின் பயன்களை அனுபவிக்கும் அதன் உரிமையை அது பாதிக்கக் கூடாது என்றுதான் கூறுகிறது” என்றார்.

 

மேகேதாது அணை குறித்து தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், கர்நாடகம் தொடர்ந்து செயல்படலாம் என்று வெளிப்படையாக இதன் மூலம் இந்திய அரசு அறிவித்திருக்கிறது.

 

காவிரி சிக்கலைக் கூர்ந்து கவனித்தால், கர்நாடகம் மட்டுமின்றி இந்திய அரசு, தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம், அனைத்திந்தியக் கட்சிகள் ஆகிய அனைத்துமே சூழ்ந்து நின்று தமிழினத்தைத் தாக்கி வருவது தெளிவாகும்.

 

தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளும், அவர்களைப் பின்பற்றி ஆட்சி செய்யும் விஜயின் த.வெ.க. ஆட்சியும் காவிரி உரிமையைக் காட்டிக் கொடுப்பதில் துரோகப் போட்டி நடத்திவருவதை வரலாறு உறுதி செய்துள்ளது.

 

நர்மதை ஆற்றுநீர்ப் பகிர்வு சிக்கலிலோ, கிருஷ்ணா ஆற்று சிக்கலிலோ, துங்கபத்திரா நீர்ப் பகிர்வு சிக்கலிலோ இந்திய அரசு ஏதோ ஒரு மாநிலத்தின் பக்கமாகச் சாய்ந்து செயல்பட்டதில்லை. தீர்ப்பாயங்களும் உச்ச நீதிமன்றமும் அவ்வாறு நடந்து கொண்டதில்லை.

 

ஆனால், ஆரியத்துவ இந்திய அரசு காவிரி சிக்கலில் தொடர்ச்சியாக கர்நாடகத்தின் இனவெறி அடாவடிக்குப் பக்கத் துணையாக இருந்துவருகிறது.

 

மாநிலங்களுக்கிடையே ஆற்றுநீர்ப் பகிர்வு சிக்கல் தொடர்பான “மாநிலங்களிடை நீர் தகராறு சட்டம் 1956” இன் படி அமர்த்தப்படும் தீர்ப்பாயங்கள் மேற்சொன்ன எந்த ஆற்றுநீர்த் தகராறிலும் காவிரித் தீர்ப்பைப்போல படுமோசமான அநீதித் தீர்ப்பை வழங்கியதில்லை.

 

காவிரி ஆற்றில் ஒப்பந்தம் செயலுக்கு வந்ததிலிருந்து ஆண்டுதோறும் சராசரியாக 361 ஆ.மி.க. நீர் பங்கீடு பெற்றுவந்த தமிழ்நாட்டுக்கு காவிரி தீர்ப்பாயம் 205 ஆ.மி.க. என்று இடைக்காலத் தீர்ப்பில் தடாலடியாகக் குறைத்தது. இறுதித் தீர்ப்பில், 192 ஆ.மி.க என்று இன்னும் வெட்டியது. மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தன்பங்கிற்கு மேலும் குறைத்து 177.25 ஆ.மி.க. என்று அறிவித்தது. இந்தத் தீர்ப்பும் கூட 15 ஆண்டுகள்தான் உயிரோடு இருக்கும் . அதன் பிறகு மீளாய்வு செய்ய வேண்டும் என்று அறிவித்தது.

 

இந்த அநீதித் தீர்ப்புகள் ஒவ்வொரு முறை வந்தபோதும், தமிழ்த்தேசியப் பேரியக்கமும் காவிரி உரிமை மீட்புக் குழுவும் தீர்ப்பு நகல் எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தின.

 

இந்த அநீதித் தீர்ப்புகளிலும் கூட அவரவர் விருப்பத்திற்கு விளக்கமளித்துக் கொள்ளக் கூடிய வகையில் வழவழ வாக்கியங்களை வழங்கியது. அதனால்தான் இந்திய அரசு அன்றன்றைக்குத் தேவையான கர்நாடகத்தின் வாய்ப்புக்கு இணங்க அவ்வப்போது விளக்கம் அளிக்கிறது.

 

இதே அன்புமணி ராமதாசுக்கு 2015-இல் அன்றைய இந்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி எழுதிய கடிதத்தில் தீர்ப்பாய தீர்ப்பின் 13-ஆம் பத்தியைச் சுட்டிக்காட்டி,  கீழ்பாசன மாநிலத்தின் பாசன தேவை எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதே இந்திய அரசின் நிலைப்பாடு எனக் கூறியிருந்தார். தீர்ப்பாய தீர்ப்பின் பத்திகள் 11, 13, 18 ஆகியவற்றுக்கு இடையே உள்ள தன்முரண்பாட்டை கர்நாடகமும் அதற்கு ஆதரவான இந்திய அரசும் பயன்படுத்திக் கொள்கின்றன.

 

இணை அமைச்சர் சௌத்திரி எடுத்துக்காட்டும் பத்தி 18 கூட அவரவர் பங்கு நீரைப் பயன்படுத்திக் கொள்ள அவரவர் எல்லையில் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்றுதான் கூறுகிறது இந்த இறுதி தீர்ப்பே கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரை கர்நாடகம் தீர்ப்பின்படி எப்போதுமே திறந்து விட்டது இல்லை என்று கண்டிக்கிறது.

 

கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்தால் அந்த உபரி நீரைதான் கர்நாடகம் திறந்துவிட்டு வருகிறது. இது நாடறிந்த உண்மை. இப்போது அந்த உபரி நீரையும் தமது எல்லையிலேயே மடக்கிப் போடத்தான் மேக்கேதாட்டில் அணைகட்ட முயல்கிறது கர்நாடகம் தனக்குரிய பங்கு நீரை தாண்டி உபரி நீரை பயன்படுத்த கட்டமைப்பு எதையும் ஏற்படுத்த தீர்ப்பின் பத்தி 18 அனுமதி அளிக்கவில்லை அமைச்சர் செளத்திரி சொல்லும் விளக்கம் தீய உள்நோக்கம் உள்ளது.

 

முல்லைப் பெரியாறு உள்ளிட்ட எந்த ஆற்று நீர் வழக்கிலும் சொல்லாத வகையில் தீர்ப்புக்கு 15 ஆண்டுகள்தான் வாழ்நாள் என்று வரம்புகட்டியிருப்பதும் குழப்பமான சொற்களை திட்டமிட்டே பயன்படுத்தி இருப்பதும், இந்தியக் கட்டமைப்பே தமிழினப் பகை கட்டமைப்புதான் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

 

தொடக்கத்திலிருந்தே தமிழ்நாட்டின் தி.மு.க. அ.தி.மு.க. அரசுகள் காவிரி வழக்கை ஏனோதானோ என்று நடத்திய முறை இந்த இன ஆதிக்கத்திற்கு தோதாக அமைந்தது.

 

இப்போது கர்நாடகம் மேகேதாது அணை கட்டுவதில் தீவிர முனைப்புக் காட்டிவரும் நிலையில் அந்த அணை கட்ட கர்நாடகம் தமிழ்நாட்டின் இசைவைப் பெற வேண்டிய சட்டத்தேவை இல்லை என விளக்கமளிப்பது கர்நாடகத்தின் அடாவடிக்கு வெளிப்படையாகப் பச்சைக்கொடி காட்டுவதாகும்.

 

தமிழ்நாடு அரசு இந்திய  அரசின் இந்த வஞ்சகத்தை எதிர்த்து உறுதியாக நிற்க வேண்டும்.

 

தமிழர்கள், குறிப்பாக தமிழ்நாட்டு உழவர்களும் இளையோரும் காவிரி உரிமை மறுப்பு என்பது தமிழின அழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொண்டு களம் காண வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
========================
பேச: 98419 49462, 94432 74002
========================

========================
Uploaded Image

Friday, July 24, 2026

தர்மேந்திரப் பிரதான் நீக்கப்பட வேண்டும்! நீட் தேர்வைக் கைவிடவேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வற்புறுத்தல்!

தர்மேந்திரப் பிரதான் நீக்கப்பட வேண்டும்!

நீட் தேர்வைக் கைவிடவேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் வற்புறுத்தல்!

 

பல மொழி இனங்கள் வாழும் நாட்டில் அதிகாரம் மையப்படுவது அடிப்படையில் இன ஒடுக்குமுறை ஆகும். ஆயினும் காலப்போக்கில், இவ்வாறு மையப்பட்ட அதிகாரம் அதனால் பயனடைந்த ஆதிக்க மொழி இன மக்களின் கண்காணிப்பில் இருந்து விலகி, அவர்களிலும் பெரும்பாலோரை வஞ்சிப்பதாக சீரழிந்துவிடுகிறது. நீட் தேர்வில் நிகழ்ந்திருப்பது அதுதான்!

 

நீட் தேர்வுமுறையே  அறிவை ஆய்வு செய்வதற்கு மாறாக, வினாக்களுக்கு விடையளிக்கும் திறன்களை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதால் தனிப்பயிற்சி மையங்கள் (கோச்சிங் சென்டர்) முதன்மை பெற்றன. பத்து இலட்சம், இருபது இலட்சம் ரூபாய் கொட்டிக் கொடுத்தால் தான், நீட் பயிற்சி மையங்களுக்குள்ளேயே தலைகாட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்கள் புறந்தள்ளப்பட்டார்கள்.

 

பல கோடி ரூபாய் புரளும் சமூகவிரோத தொழிலாக தனிப்பயிற்சி மையங்கள் மாறிய நிலையில் தனியார் வணிகப் போட்டியில் மேற்கொள்ளப்படும் குறுக்கு வழிகள் இதிலும் கையாளப்பட்டன. அதன் அடுத்தகட்ட விளைவாக திட்டமிட்ட முறையில் பல இலட்சம் ரூபாய் கொடுப்பவர்களுக்கு வினாத்தாள்கள் கசியவிடப்பட்டன. தேர்வு மையங்களுக்கு வெளியில் எழுதித் தரப்படும் விடைத்தாள்கள் இணைக்கப்பட்டன.

 

இந்த ஊழல் வலைப் பின்னலின் தலைமை இடமாக இந்திய அரசின் உயர்கல்வித்துறை மாறிப்போனது.

 

நீட் தேர்வில் தொடங்கிய இந்த ஊழலும், கையூட்டும், முறைகேடுகளும் JEE, CBSE போன்ற கல்வித் தேர்வுகளுக்கும் அனைத்திந்திய வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கும் விரிவடைந்தது. படித்தால் தேற முடியாது. காசு கொடுத்தால்தான் தேர்வு பெற முடியும் என்பது எழுதப்படாத சட்டமாகியது. 

 

இந்தச் சூதாட்டத்தில் ஏமாற்றப்பட்ட மாணவர்கள் அனிதாவைப்போல உயிர்மாய்த்துக் கொள்வது அனைத்திந்திய அளவில் ஆண்டுக்கு ஆண்டு பெருகியது. இந்த ஆண்டில் மட்டும் 35 மாணவர்கள் தகுதியிருந்தும் வஞ்சிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள்.

 

இதில் வெடித்ததுதான் இன்று தில்லியே போர்க்களமாக மாறும் அளவுக்கு இளையோரின் கொந்தளிப்புக் களமாக மாறியிருக்கிறது.

 

திடீரென்று தோன்றிய கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (Cockroach Janata Party of India).  இந்த இளையோரின் கோபத்திற்கு வடிவம் கொடுக்கிற அமைப்பாக உருவானது. பல்வேறு இடதுசாரி மற்றும் பட்டியல் சமூக, இசுலாமிய மாணவர் அமைப்புகளும் இதில் இணைந்து போராட்டத்தின் அடித்தளத்தை உறுதிப்படுத்தினார்கள்.

 

அபிஜீத் திப்கே என்ற இக்கட்சியின் தலைவராக உள்ள இளைஞரின் அழைப்பை ஏற்று தில்லி ஜந்தர்மந்தரில் நாள்தோறும் பெருகிவரும் போர்க்குணமுள்ள இளையோரைப் பார்த்து உலகமே வியக்கிறது. லடாக்கைச் சேர்ந்த அறிவியலாளர் - மனித உரிமை செயல்பாட்டாளர் - சோனம் வான் சுக் இம்மாணவர்களோடு 26 நாட்கள் நடத்திவந்த உண்ணாநிலைப் போராட்டம் இதன் அற வலிமையை எடுத்துக்காட்டியது.

 

வான் சுக் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட சூழலில், நாடாளுமன்றம் நோக்கி இளையோர் பேரணி நடக்கும் என்று அபிஜீத் அறிவித்ததை ஏற்று, கடந்த 20.7.2026 அன்று நடைபெற்ற பேரணி தில்லி மாநகரத்தையே குலுங்கச் செய்தது. இணையம் முடக்கப்பட்ட நிலையிலும், பொதுப் போக்குவரத்துகள் முடக்கப்பட்ட நிலையிலும், அனைத்து திசைகளிலிருந்தும் ஆயிரம் பல்லாயிரமாய் இலட்சக்கணக்கில் இருபால் இளையோர் அணிதிரண்டார்கள்.

 

திரும்பிய பக்கமெல்லாம் நீட் வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது தலைமை அமைச்சர் மோடி தர்மேந்திரப் பிரதானை நீக்கவேண்டும் என்ற முதன்மைக் கோரிக்கையோடு, மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கை விண்ணதிரக் கிளம்பியது.

 

அமைதியான பேரணி நடத்திய மாணவர்கள் மீது மிகக் கொடிய காவல்துறை அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. சீருடை அணிந்த காவலர்கள், அடையாளத்தை மறைப்பதற்காக, அவர்களது பெயர்குறித்த அடையாள வில்லைகள் நீக்கப்பட்டன. அடையாளம் மறைக்கப்பட்ட காவல் துறையினர் மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ். அடியாட்களும் தடியேந்தி பேரணியில் பங்கேற்ற ஆண்களையும் பெண்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன. காவல்துறையின் ஒருபிரிவினர் பயன்படுத்திய தடியில் ஆணிகள் பொருத்தப்பட்டு, குருதி சொட்டச் சொட்ட இளையோர் தாக்கப்பட்டனர். கண்ணீர்ப்புகை குண்டுகளின் ஊடாக சிறிய ரவைகள் (பெல்லட் குண்டுகள்) வீசப்பட்டு படுகாயமடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டோர் உடலில் என்ன வகை காயங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையே வெளியிடக் கூடாது என்று மருத்துவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

 

இக் கொடுந்தாக்குதல் குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததோடு, அது குறித்த காணொலிகளைப் பார்த்து நேரத்தை வீணாக்க முடியாது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த் வன்மத்தோடு கூறியது நீதித்துறை எந்த அளவுக்கு பாசிச நிழல் படிந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

 

இத் தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும், சென்னையிலும் மதுரையிலும், அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக அடக்குமுறையை விஜய் அரசு கட்டவிழ்த்து விட்டது.

 

இந்திய மோடி அரசின் பாசிச அடக்குமுறையையும், விஜய் அரசின் கண்மூடித்தனமான காவல்துறை தாக்குதல்களையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தில்லியில் நடந்தது போலவே சென்னையிலும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் தங்கள் சட்டையில் தொங்கிய பெயர் வில்லைகளை எடுத்துவிட்டே தாக்கினார்கள். இது பா.ச.க. அரசைப் பின்பற்றியே விஜய் அரசு செயல்படும் என்பதற்கான முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.

 

கரப்பான் பூச்சி மக்கள் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கைகளைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முழுமையாக ஆதரிக்கிறது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு மாணவர்கள் நடத்துகிற உரிமைப் போராட்டத்தை ஆதரிக்கிறது.

 

அதே நேரம், நீட் தேர்விலும் பிற அனைத்திந்தியத் தேர்வுகளிலும் நடைபெற்றுள்ள முறைகேடுகளின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு நிற்காமல், நீட் தேர்வையும் பிற அனைத்திந்தியப் போட்டித் தேர்வுகளையும் இந்திய அரசு கைவிடவேண்டும் எனத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது. 

 

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
Uploaded Image

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT