உடனடிச்செய்திகள்

Latest Post

Wednesday, October 8, 2025

உச்ச நீதிமன்றத் தலைமைநீதிநாயகம்பி.ஆர். கவாய் மீதுதாக்குதல் தொடுத்த நபரைக்கைது செய்து வழக்கு நடத்த வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகம்

பி.ஆர். கவாய் மீது தாக்குதல் தொடுத்த நபரைக்

கைது செய்து வழக்கு நடத்த வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

 

புதுதில்லியில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிநாயகம் உயர்திரு. பி.ஆர். கவாய் அவர்கள் மீது 06.10.2025 அன்று முற்பகல், இந்துத்துவா வெறியர் ஒருவர் தனது காலணியைக் கழற்றி வீசியுள்ள இழிசெயல் கடுமையான கண்டனத்திற்குரியது.

 

நேற்று முன்தினம் (06.10.2025) முற்பகல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகம் பி.ஆர். கவாய்நீதிநாயகம் கே. வினோத் சந்திரன் அமர்வு, வழக்குகளை விசாரிக்கத் தொடங்கிய நிலையில், தில்லியைச் சேர்ந்த 71 அகவை வழக்குரைஞரான ராகேஷ் கிஷோர் என்பவர், தலைமை நீதிபதியை நோக்கித் தனது காலணியை வீசியுள்ளார். நீதிபதிகள் தங்கள் தலையை சாய்த்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்கள். மற்றவர்கள் அந்நபரைத் தடுத்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை விசாரித்துவிட்டு, அந்நபரை விடுவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

அந்த ராகேஷ் கிஷோர் என்ற நபர், மத்தியப்பிரதேசத்தில் உலக மரபுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் கஜூராகோ கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ள ஜவாரி கோயிலில், விஷ்ணு சாமி சிலையை நிறுவக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குத் தொடுத்துள்ளார். அதை விசாரித்த தலைமை நீதிநாயகம் பி.ஆர். கவாய் அவர்கள், அவ்வழக்கின் தன்மையை விசாரித்துப் புரிந்து கொண்டு, அதைத் தள்ளுபடி செய்துள்ளார்.

 

அவ்வழக்கின் செயற்கைத் தன்மையை உணர்ந்து கொண்ட கவாய், "இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு; இச்சிக்கலைத் தீர்க்க நீங்கள் வாதாடும் கடவுளிடம் கோரிக்கை வையுங்கள்!" என்று அப்போது கூறியுள்ளார். இதற்குப் பழிவாங்க மேற்படி இந்துத்துவா வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், இழிசெயலில் ஈடுபட்டுள்ளார்.

 

இந்துத்துவா அரசியலுக்கு ஆத்திச்சூடி எழுதிய சாவர்க்கரைத் துதிப்போரின் ஆட்சி இந்தியாவில் நடப்பதால், ஆரியத்துவா ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகவே கொண்டாட துணிந்து விட்டார்கள். இப்போது, உச்ச நீதிமன்றத்தின் தற்சார்பைவர்ணாசிரமத்திற்கு உட்பட வலியுறுத்தும் நோக்கத்துடன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகம் மீது தாக்குதல் நடந்திருக்கிறது.

 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிநாயகத்தை அவமானப்படுத்திய ராகேஷ் கிஷோர் மீது உரிய வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

Tuesday, October 7, 2025

புதிய தலைமுறை ஊடகத் தடையை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும்! - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

புதிய தலைமுறை ஊடகத் தடையை

தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

 

தமிழ்நாடு அரசு, தனது அரசுக் கேபிள் பட்டியலில் இருந்து புதிய தலைமுறைத் தொலைக்காட்சியை நீக்கியிருப்பது, சனநாயக விரோத – சர்வாதிகாரப் போக்காகும். ஒருவேளை, புதிய தலைமுறை தமிழ்நாட்டின் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்க்கட்சி செயல்பாடுகளை வெளியிட்டால், அது அந்தத் தொலைக்காட்சியின் சனநாயக உரிமையாகும்.

 

ஆளும்கட்சியான தி.மு.க.வின் செய்திகளை மிக அதிகமாக மட்டுமின்றி – ஒருதலைச் சார்பாகவும் வெளியிடும் தொலைக்காட்சிகளை அனுமதித்துள்ளீர்கள். ஆட்சியாளர்கள் விரும்பும் அளவிற்கு செய்திகள் வெளியிடவில்லை என்பது ஒரு குற்றமல்ல!

 

தமிழ்நாடு அரசு உடனடியாக மறு ஆய்வு செய்து, தனது கேபிள் பட்டியலில் மீண்டும் புதிய தலைமுறையைச் சேர்க்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசைக்  கேட்டுக் கொள்கிறேன்.


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================



Monday, September 22, 2025

மலேசியாவில் இந்தியரா? தமிழரா? நேரில் சந்தித்த நிலைமைகள்!

*மலேசியாவில் இந்தியரா? தமிழரா? நேரில் சந்தித்த நிலைமைகள்!*
=====================================
_தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா_ *பெ. மணியரசன்*
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
=====================================
*தமிழர் கண்ணோட்டம் - வலையொளி*
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
*பன்மைவெளி நூல்கள்*
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
=====================
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
=====================
இணையத்தில்...
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் ஏவுவது  திராவிட மாடல் பாசிசமாகும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப்பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை!

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் ஏவுவது  

திராவிட மாடல் பாசிசமாகும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை!

 

கடந்த 14.09.2025 அன்று, புரட்சித் தமிழகம் – பறையர் பேரவையின் தலைவர் ஏர்போர்ட் த. மூர்த்தி அவர்களை தமிழ்நாடு அரசு, குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தி இருப்பதை,  தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

 

சனநாயகப் பாதையில் எப்போதும் தமிழர் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருவதுடன், தி.மு.க. ஆட்சியின் தவறுகளையும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வந்தவர் தோழர் மூர்த்தி. அப்பிரச்சினைகளை வெளிப்படையாகச் சொன்னதே அவரது "குற்றம்" என தி.மு.க. ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

 

கடந்த வாரம், சென்னையில் காவல்துறை தலைமையகம் முன்பு, தோழர் ஏர்போர்ட் மூர்த்தி செய்தி ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்க முற்பட்டபோது, வி.சி.க.வினர் சிலர் அவர்மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தினர். அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மூர்த்தி அவர்களும் திருப்பித் தாக்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதும், தோழர் திருமாவளவன் மீதும், ஏர்போர்ட் மூர்த்தி விமர்சனங்கள் முன்வைத்தார் என்பதற்காகவே அத்தாக்குதலை வி.சி.க.வினர் மேற்கொண்டனர்.  

 

இந்நிகழ்வின் போது, தாக்குதல் நடத்திய வி.சி.க.வினர் "கூட்டணிக் கட்சியினர்" என்பதால் காவல்துறை அவர்களை ஒன்றுமே செய்யாமல் வேடிக்கைப் பார்த்து, அவர்கள் தப்பித்துச் செல்வதற்கும் உதவியது. எல்லாம் ஊடகங்களில் பதிவாகி வெளியான உண்மை. இந்நிகழ்வுக்குப் பிறகு, அத்தாக்குதலில் இலக்கான மூர்த்தியைத் தான் தமிழ்நாடு காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்ததே தவிர, வலிந்து வந்து தாக்கிய வி.சி.க.வினரைக் காவல்துறைக் கைது செய்யவில்லை!

 

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்று வரும் அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து தோழர் மூர்த்தி பேசி வந்தார். பஞ்சமி நில மீட்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட நிதி எனப் பல்வேறு சிக்கல்களில் தி.மு.க.வை கேள்விக்குட்படுத்தி வந்தார். வாக்கு அரசியலுக்காக திராவிடக் கட்சியினர் தமிழ்ச் சாதிகளிடையே சமூகப் பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றனர் எனக் கூறி, பல்வேறு மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினருடன் பிற சாதியினர் நட்புறவு பாராட்ட வேண்டுமெனக் கூறி நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். 

 

இவையெல்லாம் தான், தோழர் மூர்த்தி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அளவிற்கு, தி.மு.க. ஆட்சியாளர்களை உந்தித் தள்ளியிருக்கிறது. ஏர்போர்ட் மூர்த்தி மீது வேறு வழக்குகள் இருப்பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர் பேசிய கருத்துகளுக்காக அவரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது!

 

விமர்சனங்களை எதிர்கொள்ளா முடியாமல், உலகறிந்த ஊடகவியலாளர்களை – செயல்பாட்டாளர்களை பல்வேறு வழக்குகள் போட்டு சிறைப்படுத்தி வரும் ஆரியத்துவ பா.ச.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு சற்றும் குறைவில்லாமல், திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.

 

ஏர்போர்ட் மூர்த்தியின் கைது, தமிழின உரிமைக்குக் குரல் கொடுப்போரை அச்சுறுத்தும் பாசிச நடவடிக்கையின் தொடக்கமாகும். தி.மு.க. அரசு, உடனடியாக அவரை விடுதலை செய்து, அவர் மீதான பொய் வழக்கைக் கைவிட வேண்டும் எனத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

Sunday, May 11, 2025

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டத் தீர்ப்பை "மகளிர்ஆயம்" வரவேற்கிறது! மகளிர் ஆயம் தலைவர் அருணா அறிக்கை!



பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்
குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டத் தீர்ப்பை
"மகளிர்ஆயம்" வரவேற்கிறது!


மகளிர் ஆயம் தலைவர் அருணா அறிக்கை!




2019இல் தமிழ்நாட்டையே உலுக்கிய 'பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை' வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது கோவை மகளிர் நீதிமன்றம். இத் தீர்ப்பை மகளிர்ஆயம் வரவேற்கிறது!
அரசியல் கட்சிப் பிரமுகர்களின் வாரிசுகளால் பல நாட்களாக நடந்தேறிய இக் கொடுமையை சமூக வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அந்த மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்!
இதனைத் தொடர்ந்து தங்கள் மீது பாலியல் வன்கொடுமை நடத்தியவர்களை அடையாளம்காட்டி இறுதிவரை துணிவுடன் நின்ற 8 இளம்பெண்களுக்கும் வாழ்த்துகள்! பெண்களின் உடலை புனிதமாகவும் பண்டமாகவும் 'கற்பு' என்ற பெயரில் கட்டிவைத்திருக்கும் இச்சமூகக் கட்டுகளைத் தகர்த்து 'எம் உடல் மாண்புடைய மனித உடல்' என்று இறுதிவரை தெறிப்புடன் நின்ற இவர்கள் தமிழ்நாட்டு மகளிர் அனைவருக்கும் 'செயல் மாதிரி' (Role model)!
இவ்வழக்கை நேர்மையாக நடத்தித் தீர்ப்பளித்த நீதிபதி நந்தினி தேவிக்கும் வாழ்த்துகள்!
தீர்ப்பு வெளியானதும் அன்றும் இன்றும் ஆளும்கட்சிகள் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இதனைத் தங்கள் கட்சி ஆட்சியின் சாதனையாக வாய்ச்சவடால் அடிக்கின்றன. இவர்களை மகளிர் ஆயம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்நீதி ஆளும் கட்சிகளால் கிடைத்ததல்ல! மாறாக இக்கொடுமை கண்டு வெகுண்டெழுந்த மக்கள் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், மனித உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் கிடைத்தது. இவ் வன்கொடுமைக்கு எதிராக மகளிர் ஆயமும் களம் கண்டது.
இதுபோன்று தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பல பாலியல் வன்கொடுமைகள் பெண்கள் மீது நடந்தேறியுள்ளன. இவை அனைத்திற்கும் சட்டத்தின் முன் நியாயம் கிடைக்க மகளிர் ஆயம் விழைகின்றது.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

 

“இந்தியாவை உண்மையான கூட்டரசாக மாற்றுக!” தஞ்சையில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற “கூட்டரசுக் கோட்பாடு” சிறப்பு மாநாட்டில் தீர்மானம்!



            
 







“இந்தியாவை உண்மையான கூட்டரசாக மாற்றுக!”


தஞ்சையில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற
“கூட்டரசுக் கோட்பாடு” சிறப்பு மாநாட்டில் தீர்மானம்!





“இந்தியாவை உண்மையான கூட்டரசாக மாற்ற வேண்டும்!” என தமிழ்த்தேசியப் பேரியக்கம் தஞ்சையில் நேற்று (10.05.2025) பேரெழுச்சியுடன் நடத்திய “கூட்டரசுக் கோட்பாடு” – சிறப்பு மாநாட்டில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் தொடர்ச்சியான தாக்குதலில் தமிழ்நாடு சிக்கித் தவிக்கும் நிலையில், இந்தியாவை முழுமையான கூட்டாட்சியாக அறிவிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, அதற்கான கூறுகளை விவாதிக்கும் வகையில், தஞ்சையில், நேற்று (மே 10 – 2025) சனிக்கிழமையன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் “கூட்டரசுக் கோட்பாடு” - சிறப்பு மாநாடு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்போடு முழுநாள் நிகழ்வாக பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சி
--------------------------
காலை 9 மணியளவில், முருகன்குடி திருவள்ளுவர் கலைக்குழுவினரின் எழுச்சிமிகு நாட்டுப்புற இசை நிகழ்வுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. இதனையடுத்து, பிள்ளையார்பட்டி சகோதரிகள் சீ. பாரதி - சீ. யுவசிறீ ஆகியோர் பாவேந்தரின் “வாழ்வினில் செம்மையை” - தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அழகுறப் பாடினர். இதனையடுத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை அவர்கள் மாநாட்டிற்கு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்தோரை வரவேற்று, வரவேற்புரையாற்றினார். இதனையடுத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கக் கொடியை, த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
கண்காட்சிகள்
--------------------
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முகாமையான போராட்டங்களைக் காட்சிப்படுத்தும் வகையிலான பேரியக்க வரலாற்றுக் கண்காட்சியை, த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர் வெ. இளங்கோவன் அவர்கள் முன்னிலையில், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் அவர்கள் திறந்து வைத்தார். தமிழர் தொன்மையை விளக்கும் தமிழர் வரலாற்று கண்காட்சியை, பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பல்வில்திரையன், கரூர் தினேசு ஆகியோர் முன்னிலையில் காவிரி உரிமை மீட்புக் குழு செயற்குழு உறுப்பினர் திரு. சாமி. கரிகாலன் அவர்கள் திறந்து வைத்தார். ஏராளமானனோர் இக்கண்காட்சிகளைப் பார்வையிட்டு செய்திகளை உள்வாங்கினர்.
மாநாட்டின் நோக்கங்கள் குறித்து, த.தே.பே. தலைமைச் செயற்குழு தோழர் கோ. மாரிமுத்து அவர்கள் உரையாற்றினார். இந்தியாவை முழுமையானக் கூட்டரசாக மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளதை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
மாநாட்டுப் பாடல் வெளியீடு
--------------------------------------
“கூட்டரசுக் கோட்பாடு” மாநாட்டின் நோக்கங்களை விளக்கும் வகையில், பாவலர் நா. இராசாரகுநாதன் அவர்கள் எழுதி, திருச்சி பொறியாளர் முத்துக்குமாரசாமி அவர்கள் பாடி – இசையமைத்த மாநாட்டின் பாடல் காணொலியை இயக்குநர் மு. களஞ்சியம் அவர்கள் மாநாட்டு அரங்கில் வெளியிட, ஊடவியலாளர் அருள்மொழிவர்மன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர் முன்னிலை வகித்தார். திரையிடப்பட்ட அப்பாடலை பலத்த கையொலி எழுப்பி பார்வையாளர்கள் வரவேற்றனர்.
தீர்மானங்கள்
-------------------
”தேசிய இனத் தாயகங்களின் முழுமையான கூட்டரசாக இந்திய ஒன்றியத்தை மாற்றியமைக்க வேண்டும். நாட்டுப் பாதுகாப்பு, நாணய அச்சடிப்பு, வெளியுறவு, அனைத்திந்திய தன்மை வாய்ந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை குறித்த அதிகாரம் மட்டுமே கூட்டாட்சி அரசுக்கு வழங்கப்பட வேண்டும். இனத் தாயகங்களுக்கு வகுக்கப்படும் அதிகாரத்தில் கூட்டாட்சி அரசு குறுக்கிடும் அதிகாரம் கூடாது. அந்தந்த அதிகார மட்டத்தில், அந்தந்த அரசமைப்பு உறுப்பும் இறைமை கொண்டதாக இருக்க வேண்டும். கூட்டாட்சி அரசுக்கும் இனத்தாயக அரசுக்கும் பொது அதிகாரம் எனக் கூறும் ஒத்திசைவு அதிகாரப்பட்டியல் இருக்கவே கூடாது” என்ற மாநாட்டின் முதன்மைத் தீர்மானத்தை, த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன் முன்மொழிய, பலத்த கையொலி எழுப்பி அனைவரும் வரவேற்றனர்.
இந்தியாவை “பாரதம்” என்று சமற்கிருத புராணப் பெயரால் அழைப்பதோ, தேசிய இனத் தாயகங்களை “மாநிலங்கள்” என்று குறுக்கி அழைப்பதோ கூடாது, இந்தியாவை அதன் புவி அரசியல் பெயரால் “இந்தியா” எனபதாக மட்டுமே அழைக்க வேண்டும், மாநிலங்களை இனத் தாயகங்கள் என வரையறுக்க வேண்டும், ஆளுநர் பதவி கூடாது, வரி அதிகாரம் அனைத்தும் இனத் தாயக அரசுகளுக்கே வேண்டும் என்பன உள்ளிட்ட “கூட்டரசு”த் தீர்மானங்களை பேரியக்கத் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு தோழர்கள் முன்வைத்தனர்.
“தமிழர் வரலாற்று வளம்!” - கருத்தரங்கம்
--------------------------------------------------------
இதனையடுத்து, மாநாட்டின் முதல் கருத்தரங்காக “தமிழர் வரலாற்று வளம்!” கருத்தரங்கு நடைபெற்றது. சேலம் – தமிழ்வேத ஆகமப் பாடசாலை மற்றும் அரசயோகி கருவூறார் தமிழின குருபீடத்தின் நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்கள் முன்னிலை வகித்துப் பேசினார். ”தமிழ் மன்னர்களின் நிலதான அறமும் அவதூறும்” என்ற தலைப்பில், தமிழிய வரலாற்று ஆய்வாளர் திரு. இரா. மன்னர்மன்னன் அவர்களும், ”தமிழர் ஆன்மிக மொழி தமிழே!” என்ற தலைப்பில், குச்சனூர் இராசயோக சித்தர் பீடம் வடகுரு மடாதிபதி ஐயா குச்சனூர் கிழார் அவர்களும், “தமிழர் தொன்மையும் வன்மையும்” என்ற தலைப்பில், பேராசிரியர் – முனைவர் கோ. தெய்வநாயகம் அவர்களும், ”தமிழ் – தமிழர் மறுமலர்ச்சியில் மதுரை – கரந்தை தமிழ்ச் சங்கங்கள்” என்ற தலைப்பில், பேராசிரியர் – முனைவர் மு. இளமுருகன் அவர்களும், இக்கருத்தரங்கில் சிறப்புடன் உரையாற்றினர்.
சிலம்பாட்டம்
------------------
இதனையடுத்து, செங்கிப்பட்டி கருப்பசாமியின் “கலைப்புயல்” சிலம்பாட்டக் குழுவினரின் சிலம்பாட்டம் மாநாட்டு அரங்கை அதிரச் செய்தது.
பாவரங்கம்
----------------
இதனையடுத்து, “தமிழ் மேல் ஆணை”என்ற தலைப்பில், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர் அவர்கள் தலைமையில் பாவரங்கம் நடைபெற்றது. பாவலர்கள் மூ.த. கவித்துவன், நா. இராசாரகுநாதன், முழுநிலவன், ஏ. பிரகாசுபாரதி ஆகியோர் பாவீச்சு நிகழ்த்தி, அரங்கில் அதிர்வலைகளை உண்டாக்கினர்.
மல்லர் கம்பம்
-------------------
இதனையடுத்து, சிதம்பரம் – தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் எழுச்சிமிகு மல்லர் கம்பம் நிகழ்வு, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
“பஃறுளி முதல் சிந்து வரை”- ஆய்வுநூல் வெளியீடு
இதனைத் தொடர்ந்து, திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., எழுதியுள்ள “சிந்து முதல் வைகை வரை” நூலுக்கு மறுப்பாக தமிழ் இன - மொழி ஆய்வாளர் தக்கார் ம.சோ. விக்டர் அவர்கள் எழுதியுள்ள “பஃறுளி முதல் சிந்து வரை”ஆய்வு நூலின் வெளியீட்டு நிகழ்வு நடந்தேறியது. பன்மைவெளி வெளியீட்டகப் பொறுப்பாளர் தோழர் வெற்றித்தமிழன் முன்னிலையில், மூத்த ஊடகவியலாளர் பா. ஏகலைவன் (ராவணா வலைக்காட்சி) அவர்கள் இந்நூலை வெளியிட தமிழிய ஆய்வாளர் ஐயா இரா. சிங்காரவேலு, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி. செந்தில், காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசியக் களம் தலைவர் திரு. ச. கலைச்செல்வம், மகளிர் ஆயம் துணைத் தலைவர் திரு. க. செம்மலர், வள்ளலார் பணியகம் ஒருங்கிணைப்பாளர் திரு. மு. சுந்தரராசன், புதுச்சேரி தமிழர் களம் செயலாளர் திரு. கோ. அழகர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. புதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி படைப்பாளர் இயக்கத் தலைவர் திரு. ஆறுச்செல்வன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஐயா பெ. மணியரசன், இந்நூலின் அவசியம் குறித்துப் பேசினார்.
“கூட்டரசு” – கருத்தரங்கம்
-----------------------------------
இதனையடுத்து, “கூட்டரசு” என்ற தலைப்பில் நடைபெற்றக் கருத்தரங்கில், “வரி விதித்து வசூலித்தல்” என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி அவர்களும், “ஆட்சிமொழி” என்ற தலைப்பில், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. இடும்பாவனம் கார்த்திக் அவர்களும், “உள்ளாட்சியில் தன்னாட்சி” என்ற தலைப்பில், தன்னாட்சி அமைப்பின் துணைத் தலைவர் திரு. நந்தகுமார் சிவா அவர்களும், “கூட்டரசில் ஆளுநர் பதவி உண்டா?” என்ற தலைப்பில், மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மு. செந்தமிழ்ச்செல்வி அவர்களும் கருத்தாழமிக்க உரை நிகழ்த்தினர். த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி. தென்னவன் அவர்கள் இக்கருத்தரங்கை நெறிப்படுத்தினார்.
நிறைவரங்கம்
--------------------
மாநாட்டின் நிறைவரங்கில், பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்து, தில்லியிலிருந்து மனித உரிமைச் செயல்பாட்டாளரும், உலக சீககியர் செய்திகள் (The World Sikh News – WSN) ஆசிரியருமான பேராசிரியர் ஜக்மோகன் சிங் அவர்களும், நாகாலாந்திலிருந்து மனித உரிமைகளுக்கான நாகா மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் நியூங்குலோ குரோமே அவர்களும், மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் வங்காள இன உணர்வு அமைப்பான “பங்களா போக்ரோ” அமைப்பின் பொதுச் செயலாளர் கார்கா சேட்டர்ஜி அவர்களும், அசாமில் செயல்பட்டு வரும் அசாம் ஜாட்டியதபாடி யுப பரிசத் (Asom Jatiyatabadi Yuba Parishad – AJYP) அமைப்பின் பொதுச் செயலாளர் உதயன் குமார் கோகாய் அவர்களும் எழுதியிருந்த கடிதங்களைப் படித்து, அதன் தமிழாக்கத்தை எடுத்துரைத்தபோது, மாநாட்டு அரங்கிலிருந்தோர் பலத்த கையொலி எழுப்பி அதனை வரவேற்றனர். இதனையடுத்து சிறப்புரையாற்றிய தோழர் கி.வெ., “கூட்டரசுக் கோட்பாடு” மாநாட்டின் முதன்மைத் தீர்மானத்தை விளக்கியும், உலகெங்கும் கூட்டரசுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்கள், மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்று சிறப்புரையாற்றினார். தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த திரு. சீமான், ஐயா பெ.ம.வின் வாழ்விணையர் இலட்சுமி அம்மாள் அவர்களை மேடையேற்றி பிறந்தநாள் பரிசு வழங்கிப் பாராட்டினார். அதன்பிறகு சிறப்புரையாற்றிய திரு. சீமான், “இந்தியாவைக் கூட்டரசாக மாற்றும் இக்கோரிக்கை, தமிழினத்தின் கோரிக்கை மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்குமான முகாமையான கோரிக்கை. இதை வென்றெடுக்க நாங்கள் உறுதியெடுக்கிறோம்” என உணர்வெழுச்சியுடன் பேசி, அதற்கான ஞாயங்களை எளிய மொழியில் எடுத்துரைத்தார்.
நிறைவாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் மாநாட்டு நிறைவுப் பேருரையாற்றினார். “இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்ற வேண்டும் என்பது ஒரு இயக்கத்தின் கோரிக்கையல்ல – இந்த இனத்தின் கோரிக்கை! இறையாண்மையுள்ள தேசிய இனங்களின் தாயகக் கூட்டரசாக இந்தியாவை மாற்றினால் மட்டும்தான் இந்தியா நிலைக்க முடியுமே தவிர, வெறும் இராணுவத்தை வைத்து, சட்டங்களை வைத்தெல்லாம் இந்தியாவை பாதுகாத்துவிட முடியாது. இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருப்பதா அல்லது அவரவரை பிரிந்து போக விடுவதா என்பது, ஆளும் இந்தி ஏகாதிபத்தியவாதிகளின் கைகளிலே இருக்கிறது. அந்தந்த தேசிய இனங்களை மதித்து இறையாண்மை கொடுத்தால், அவர்களும் இந்த இந்தியக் கூட்டரசில் இருப்பார்கள். அதெல்லாம் முடியாதென்றால், அவரவரும் தனிப் பாதை தேடிக் கொள்வார்கள். தமிழினமும் தனிப் பாதை தேடிக் கொள்ளும்” எனத் தலைவர் பெ.ம. பேசியபோது, பலத்த கையொலி எழுப்பி அனைவரும் வரவேற்றனர். த.தே.பே. தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி அவர்கள் நன்றியுரைறாற்றினார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊர்திகளில் வந்து ஆண்களும், பெண்களுமாகப் பங்கேற்ற பேரியக்கச் செயல்பாட்டாளர்களும், தமிழின உணர்வாளர்களும் மாநாட்டு அரங்கை நிரப்பினர். மாநாட்டையொட்டி, #MakeIndiaFullFederation என்ற சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று மாநாட்டு நோக்கங்களை முன்வைத்துப் பரப்புரையில் ஈடுபட்டனர். தமிழர் கண்ணோட்டம், தாய்த்தமிழ் ஊடகம், ராவணா உள்ளிட்ட பல்வேறு வலையொளிகளின் நேரலை ஒளிபரப்பு வழியே மாநாட்டை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் கொண்டு சென்றனர்.
மாநாட்டு நேரலையைக் காண
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================


 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT