உடனடிச்செய்திகள்

Latest Post

Wednesday, April 30, 2025

திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழிலேயே நடத்தக் கோரி மாபெரும் மக்கள் இயக்கம்! தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுவில் தீர்மானம்!



 



திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் குடமுழுக்கைத்
தமிழிலேயே நடத்தக் கோரி மாபெரும் மக்கள் இயக்கம்!


தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுவில் தீர்மானம்!


===========================================
தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், சேலம் ஆர்.பி. மகாலில் 29.04.2025 அன்று, ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் ஐயா சித்தர் மூங்கிலடியார், ஐயா குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம், குச்சனூர், தேனி மாவட்டம்), சிம்மம் சத்தியபாமா அம்மையார் (நிறுவனர் – தமிழ்வேத ஆகமப் பாடசாலை, மேச்சேரி, சேலம்), திருவில்லிப்புத்தூர் - தெய்வத்தமிழ்த் திருமுறை வழிபாட்டு இயக்கத் தலைவர் ஐயா சிவ.வெ. மோகனசுந்தரம், ஆசீவக சமய நடுவத் தலைவர் முனைவர் ஆசீவக சுடரொளி, செந்தமிழ் ஆகம அந்தணர் ஐயா சிவ. வடிவேலன், வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் ஐயா மு. சுந்தரராசன், கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப்பிரமணிய சிவா, தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஓசூர் கோ. மாரிமுத்து உள்ளிட்டோரும், ஆன்மிக மெய்யன்பர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் – 1
------------------
திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கைத்
தமிழில் நடத்தக் கோரி மாபெரும் பரப்புரை இயக்கம்!
==========================================
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு திருச்செந்தூரில் அமையப் பெற்றுள்ள திருக்கோயிலுக்கு வரும் சூலை மாதம் (7.7.2025) நடைபெறவுள்ள நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழிலேயே நடத்த வேண்டுமெனக் கோரி, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் திருச்செந்தூரில் தொடர் பரப்புரை இயக்கத்தை முன்னெடுப்பது என தெய்வத் தமிழ்ப் பேரவையின் இச்செயற்குழுக் கூட்டம், ஒருமனமாகத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் – 2
------------------
தமிழ்க் குடமுழுக்குத் தீர்ப்புகளைப் புறக்கணித்து
ஆரியத்திற்குத் துணை போகும் திராவிட மாடல் அரசுக்குக் கண்டனம்!
=======================================
தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் குடமுழுக்கின் போது (05.02.2020), தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் மற்றும் பிற அன்பர்களும் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த ஆணை (மனு எண் W.P. (MD) No. 1644 of 2020), அதன்பிறகு அதே ஆண்டு (2020) திசம்பரில், கரூர் ஆநிலையப்பர் (பசுபதீசுவரர்) திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்தக் கோரி, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், பதினெண் சித்தர் பீடத்தின் தலைவருமான சித்தர் மூங்கிலடியார் அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழங்கிய தீர்ப்பு (WP(MD)/0017750/2020), கடந்த செப்டம்பர் (2024) மாதம், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனருமான சத்தியபாமா அம்மையார் அவர்கள் சேலம் மாவட்டம், கஞ்சமலை - அருள்மிகு சித்தேசுவரசாமி திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்திடக் கோரி தொடர்ந்த வழக்கில் (Writ Petition No: 27340 / 2024) வழங்கிய தீர்ப்பு (நாள் : 12.09.2024) ஆகிய தீர்ப்புகள் தமிழ்நாட்டுத் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாக்களில், சமற்கிருதத்திற்கு இணையாக கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் ஆகிய மூன்று நிலைகளிலும் தமிழ் மந்திரங்கள் கூறி நடத்த வேண்டும் என்று தெளிவாகக் கூறுகின்றன.
சமூகநீதி என்றும், ஆரிய எதிர்ப்பு என்றும் போலி நாடகம் போட்டு, 2021இல் ஆட்சிக்கு வந்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான “திராவிட” மாடல் அரசு, இன்றைக்கு வரை இத்தீர்ப்புகளை ஒரு கோயிலில்கூட முழுமையாகக் கடைபிடிக்காமல் கருவறைத் தீண்டாமையைக் கடைபிடித்து வருகிறது. சென்னை வடபழனி திருக்கோயில் குடமுழுக்கு தொடங்கி, பழனி முருகன் கோயில், பேரூர் பட்டீசுவரம் கோயில், வயலூர் முருகன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மருதமலை முருகர் கோயில், திருவெறும்பூர் எறும்பீசுவர் கோயில் எனப் பழமை வாய்ந்த அனைத்துத் திருக்கோயில் குடமுழுக்குகளிலும் இதுதான் நிலைமை!
இவ்வாறு, நீதிமன்றத் தீர்ப்புகளைக் குப்பையில் வீசிவிட்டு, மக்களை ஏமாற்றி, ஆரியத்துக்குத் துணை போய்க் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் இக்கொடுஞ்செயலை தெய்வத் தமிழ்ப் பேரவையின் இச்செயற்குழுக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாட்டு ஆன்மிகச் சான்றோர்களும், மெய்யன்பர்களும் உலகின் மூத்த செம்மொழியாகவும், ஆனமிக மெய்யியல் களஞ்சியங்களைக் கொண்ட மொழியாகவும், திருமந்திர மொழியாகவும் விளங்கக்கூடிய தமிழ், “திராவிட” ஆட்சிகளில் புறக்கணித்து, இழிவுபடுத்தப்படுவதை வெளிப்படையாகக் கண்டிக்க முன்வர வேண்டும். தமிழ் மொழியில் கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் ஆகிய இடங்களில் எப்பொழுதும் அர்ச்சனை வழிபாடு நடத்துமாறு கோர வேண்டும். அத்துடன், தமிழ் மொழிப் புறக்கணிப்பு மட்டுமல்ல, தகுதியுள்ள தமிழ் இன அர்ச்சகர் களையும் புறக்கணித்து, “திராவிட” ஆட்சிகள் அவமானப்படுத்துவதையும் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டுமென்று இச்செயற்குழு உரிமையோடு கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 3
------------------
தமிழ்க் குடமுழுக்கை ஏற்காத நன்கொடையாளர்களிடம்
நன்கொடை வசூலித்தல் கூடாது!
அரசே நிதி தந்து தமிழில் நடப்பதை
ஊக்குவிக்க வேண்டும்!
============================
திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாக்களைத் தமிழில் நடத்த வேண்டுமெனக் கோரிக்கை வைக்கும் போதெல்லாம், குடமுழுக்குப் பணிகளுக்காக நன்கொடை தரும் கொடையாளர்கள் சமற்கிருதத்தில் தான் நடத்த வேண்டுமென்றும், பிராமண அர்ச்சகர்களைக் கொண்டு நடத்த வேண்டுமென்றும் நிபந்தனைகள் வைப்பதாகவும், அதனை ஏற்றே முழுக்க முழுக்க சமற்கிருதத்தில் பிராமணர்களைக் கொண்டு குடமுழுக்கு நடைபெறுகிறது என்றும் பல்வேறு திருக்கோயில்களில் பதில்கள் கிடைத்தன. இதனை ஏற்க முடியாது!
இச்சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்க் குடமுழுக்கை ஏற்பவர்களிடம் மட்டுமே திருக்கோயில் குடமுழுக்கு விழாக்களுக்கு நன்கொடை வசூலிக்கும் நடைமுறையைக் கடைபிடிக்க வேண்டும். போதிய தொகை நன்கொடையாகக் கிடைக்கப் பெறாவிடின், இந்து சமய அறநிலையத்துறை அதற்காக தொகை செலவிட்டு, தமிழில் குடமுழுக்கு நடைபெறுவதை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, சமற்கிருத சடங்கு – பிராமண புரோகித ஆதிக்கம் ஆகியவற்றுக்கு இடம் கொடுக்கக் கூடாது என தெய்வத் தமிழ்ப் பேரவையின் சார்பில் வலியுறுத்திக் கூறுகிறோம்!
அதேபோல், சமற்கிருத பூசை மேற்கொள்வோருக்கு அதிகளவு தொகை வழங்கப்படுவதும், தமிழில் பூசை மேற்கொள்வோருக்கு மிகமிகக் குறைவான ஊதியம் வழங்கும் நடைமுறையும் ஒழிக்கப்பட வேண்டும். மொழியை வைத்துப் பாகுபாடு காட்டாமல், சம ஊதியத்தையே சமற்கிருதம் மற்றும் தமிழ் மந்திர பூசை செய்வோருக்கு வழங்கிட வேண்டும் என்றும் தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்துகிறது.
தீர்மானம் – 4
------------------
தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற்றோரை
தமிழ்க் குடமுழுக்குகளில் பயன்படுத்துக!
================================
நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்க் குடமுழுக்குகளை நடத்த வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை, தமிழில் கிரியைகள் செய்வதற்கு தகுதியானவர்கள் இன்றித் தவிப்பதும் நடக்கிறது. தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இன்னும் பணி அமர்த்தல் ஆணை வழங்கப்படாத அர்ச்சக மாணவர்களை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது பயிற்சி பெற்றுவரும் மாணவர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தெய்வத் தமிழ்ப் பேரவையில் உறுப்பு வகிக்கும் தமிழ்ச் சிவநெறி, திருமால் நெறி, சித்தர் நெறி வழிபாட்டாளர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு தனியார் திருக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு உள்ளிட்ட விழாக்களை நடத்தி வருகின்றனர்.
பேரூர் ஐயா சாந்தலிங்க அடிகளார், ஐயா சத்தியவேல் முருகனார் போன்றோர்களும், பதிணென் சித்தர் பீடம் ஐயா சித்தர் மூங்கிலடியார், தேனி மாவட்டம் – குச்சனூர் இராசயோக சித்தர் பீடம் வடகுரு மடாதிபதி ஐயா குச்சனூர் கிழார், சேலம் மேச்சேரி - தமிழ்வேத ஆகமப் பாடசாலை நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார், திருவில்லிப்புத்தூர் - தெய்வத்தமிழ்த் திருமுறை வழிபாட்டு இயக்கத் தலைவர் ஐயா சிவ.வெ. மோகனசுந்தரம், ஆசீவக சமய நடுவத் தலைவர் முனைவர் ஆசீவக சுடரொளி, செந்தமிழ் ஆகம அந்தணர் ஐயா சிவ. வடிவேலன், வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் ஐயா மு. சுந்தரராசன் போன்றோர், அவரவர் ஆன்மிக நெறிப்படி சாதி வேறுபாடின்றி அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த அன்பர்களுக்கும் தமிழ் வழிபாடு மற்றும் கிரியைகள் நடத்துவதற்குரியப் பயிற்சிகள் கொடுத்து, தீட்சை வழங்கி பல்லாயிரக்கணக்கான தமிழ் பூசகர்களை உருவாக்கி வருகின்றனர். தமிழ்நாடெங்கும் பல்வேறு தனியார் திருக்கோயில்களில் குடமுழுக்கு உள்ளிட்ட வழிபாடுகளை தமிழில் முறைப்படி நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு, இவர்களைக் கொண்டும், தமிழ்க் குடமுழுக்குகளை நடத்திட நடவடிக்கை எடுக்கலாம் என்பதையும், அதற்கு தெய்வத் தமிழ்ப் பேரவை எல்லா வகையிலும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மானம் – 5
------------------
வள்ளலார் பன்னாட்டு மையத்தை
பெருவெளியில் கட்டாதே!
===========================
வடலூரில் வள்ளலார் உருவாக்கியுள்ள சத்திய ஞானப் பெருவெளியில், தமிழ்நாடு அரசு பன்னாட்டு மையக் கட்டடங்களை எழுப்பக் கூடாது என தெய்வத் தமிழ்ப் பேரவை தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இம்முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவையின் வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் ஐயா மு. சுந்தர்ராசன் அவர்களும் மற்றவர்களும் இதற்காக வழக்குத் தொடுத்துள்ளனர்.
அடுத்த விசாரணைகளுக்குப் பிறகு, தற்போது இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நீதிமன்ற ஆணைக்குக் காத்திராமல், தமிழ்நாடு அரசு தானே முன்வந்து, பெருவெளியில் கட்டடங்களைக் கட்டக் கூடாது எனப் போராடி வரும் வள்ளலார் அன்பர்களின் கோரிக்கையை ஏற்று, இத்திட்டத்தைக் கைவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவையின் இச்செயற்குழு தீர்மானிக்கிறது!
தீர்மானம் – 6
------------------
தமிழ் வழிபாட்டுரிமைக்காக
பெருவேள்வி பூசை மாநாடு
=======================
தமிழ் அர்ச்சனை மற்றும் குடமுழுக்கை நடப்பதைத் தடுக்கும் தமிழினப் பகைவர்கள் அழிந்து போக இறை ஆற்றலை வேண்டியும், மக்கள் நலனுக்காக வேண்டுதல் செய்யவும் பெருந்திரள் மக்களைக் கொண்டு, மாபெரும் பெருவேள்வி மற்றும் பூசைகளோடு தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் பெருவேள்விகள் நடத்தவும், இந்நிகழ்வின்போது பலவகைக் கருத்தரங்குகள் நடத்தவும் இச்செயற்குழுக் கூட்டம் ஒருமனமாகத் தீர்மானிக்கிறது. மாநாடு நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 98419 49462, 94439 18095
================================


 

Monday, April 28, 2025

2025-2026 கல்வியாண்டில் மருத்துவம் - பொறியியல் கல்வி அனைத்துப் பிரிவுகளும் தமிழ்வழியில் வேண்டும்! சித்த மருத்துவம் தமிழில்தான் வேண்டும்! பெ. மணியரசன்


2025-2026 கல்வியாண்டில்
மருத்துவம் - பொறியியல் கல்வி அனைத்துப் பிரிவுகளும்
தமிழ்வழியில் வேண்டும்!
சித்த மருத்துவம் தமிழில்தான் வேண்டும்!


பெ. மணியரசன்


பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==========================
தமிழ் மொழிக் கல்வி, தமிழ்வழிக் கல்வி (Thamizh Medium) என்ற இரண்டும், ஆங்கிலேயர் ஆட்சியிலும், அடுத்து காங்கிரசின் மாநில ஆட்சியிலும் பெற்றிருந்த இடத்தை, பின்னர் இழந்து விட்டன. ஒன்றாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பு வரை (அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி) அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் மொழிப்பாடமாகவும் மற்ற பாடங்களுக்கான பயிற்று மொழியாகவும் தமிழ் இருந்தது.
ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் மழலையர் பள்ளி, தொடக்க மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் +2 வரை ஆங்கிலம் கட்டாய மொழிப்பாடமாகவும், முழுமையான பயிற்று மொழியாகவும் உள்ளது. அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும், அதே நிலை! இவையன்றி, இந்திய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் செயல்படும் பல்லாயிரக் கணக்கான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி, சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் பாடத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் சமற்கிருதத்திற்கு மாற்றாக தமிழ் மொழிப்பாடம் இருக்கலாம், இல்லாமலும் சமற்கிருதம், பிரஞ்சு போன்ற வேறு மொழிப்பாடம் இருக்கலாம். தனியார் மழலையர் பள்ளிகளில் தமிழ் வாடை அடித்தால் தரக்குறைவு என்று முழுவதும் ஆங்கில - இந்தி மயமாகிவிட்ட பள்ளிகள் ஏராளம்! இப்பள்ளிகள் பலவற்றில் தமிழில் பேசினால் - ஆசிரியர் கேட்ட வினாவுக்குத் தமிழில் விடை அளித்தால், மாணர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
இந்தி, சமற்கிருத ஆதிக்கங்களை எதிர்த்து, தமிழ் மொழிப் பெருமையைப் பேசி, எழுதி வளர்ந்த தி.மு.க. அதிலிருந்து பிரிந்த அ.தி.மு.க. - கட்சிகளின் மாநில ஆட்சிகளில் தமிழ் இவ்வாறு வீழ்த்தப்பட்டது - புறந்தள்ளப்பட்டது ஏன்?
அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த பா.ச.க. ஆட்சியின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வியை ஏன் செயல்படுத்தவில்லை என்று தி.மு.க. ஆட்சியைப் பார்த்து வினா எழுப்பினார்கள். தீவிர இந்தித் திணிப்பாளர்களான அவர்கள் இப்படிக் கேட்கிறார்கள்! இதற்குரிய விடையை தி.மு.க. ஆட்சி அளிக்கவில்லை.
மகாராஷ்டிரத்தின் பா.ச.க. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், வரும் கல்வியாண்டில் இருந்து அம்மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மராத்தி மொழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தாய்மொழிப் பற்றும் தாய் மொழிக் கல்வியும் உயர்ந்துவரும் நிலையில் தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழ் சீரழிகிறது.
தமிழ்நாட்டு மக்களில் மிகப் பெரும் பாலோர்க்குத் தமிழ்நாட்டில் உரியவாறு நிரந்தர வேலைவாய்ப்புகள் பெருக்கப்படாத அவலம் தொடர்வதால், அந்தப் பீதியில் ஆங்கிலம் படித்து அயல் மாநிலங்களில், அயல் நாடுகளில், தமிழ்நாட்டுத் தனியார் துறைகளிலாவது வேலை கிடைக்க வேண்டும் என்ற பதற்றத்தில் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி வகுப்புகளில் சேர்க்கிறார்கள் பெற்றோர்கள்! அதேபோல், இந்தி கற்பித்திட சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகளில் கொள்ளைக் கட்டணம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள்.
இதே அயல்மொழி அடிமை மோகத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு - ஆண்-பெண் அனைவர்க்கும் சமற்கிருத, இந்திப் பெயர்களைச் சூட்டுகிறார்கள் பெற்றோர்கள். தமிழர் தாய்மொழியும், தமிழ் இனமும் ஒரே நேரத்தில் சீரழியும் அவலம் தொடர்கிறது.
தமிழ் அறிஞர்கள் - தமிழ்ச் சான்றோர்கள் பலர் - தமிழுக்கும் தமிழர்க்கும் ஏற்பட்டுள்ள சீரழிவுகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் தவிக்கிறார்கள். தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு மீணடும்மீண்டும் அற வழியில் - அன்பு வழியில் கோரிக்கை வைக்கிறார்கள்.
அண்மையில், தஞ்சை மாவட்டம் புட்பம் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா. இறையரசன் ஐயா அவர்கள் தலைமையில் தமிழறிஞர்களும், சான்றோர்களும் தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் மாண்புமிகு கோவி. செழியன் அவர்களைச் சந்தித்து, தமிழ் வழிக் கல்விக்காக கோரிக்கை விண்ணப்பம் கொடுத்துள்ளார்கள். “தமிழ் எழுச்சிப் பேரவை” என்ற பொது அமைப்பின் சார்பில் கொடுத்துள்ளார்கள்.
அக்கோரிக்கைகள்:
2025-2026 கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். இப்போது, ஆங்கில வழியில் இவ்விரு படிப்புகளிலும் உள்ள பிரிவுகள் அனைத்தும் தமிழ் வழியிலும் இருக்க வேண்டும்.
மேற்படி தமிழ் வழி மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்வதில் 50 விழுக்காடு இடங்கள் மேல் நிலைப் பள்ளி வரை, தமிழ் வழியில் படித்த மாணவ - மாணவியர்க்கு ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.
தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் படிக்க முன்வரும் மாணவ - மாணவியர்க்கு 50 விழுக்காடு கட்டணச் சலுகை வழங்கவேண்டும். தனியார் கல்லூரிகளில் இக்கட்டணச் சலுகையை அரசு தன் பொறுப்பில் ஏற்றாவது வழங்க வேண்டும்.
அரசு வேலைகளில் 50 விழுக்காடு வேலைகள் தமிழ்வழியில் மருத்துவம் பொறியியல் படித்த மாணவ - மாணவியர்க்கு ஒதுக்க வேண்டும்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், கனடா உள்ளிட்ட தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் உள்ள நாடுகளில் தமிழ்நாட்டில் தமிழ்வழியில் பயின்ற மருத்தவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்புகளை, - அந்நாடுகளின் அரசுகளுடன் தமிழ்நாடு அரசு பேசி, இந்திய அரசின் ஒப்புதலையும் பெற்று - உருவாக்க வேண்டும்.
இந்தியாவில், தமிழ்நாட்டில் தமிழர்கள் நடத்தும் தனியார் நிறுவனங்களிலும் தமிழ்வழியில் கற்றோர்க்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை வேலையில் சேர்க்க வேண்டும்.
தமிழ் சித்த மருத்துவத்தை ஆங்கில வழியில் கற்பித்து ஆயுஷ் - ஆயுர் வேதம் என்ற சமற்கிருத மயமாக்கலை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
தமிழ் சித்த மருத்துவத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தனி பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்.
தமிழ் சான்றோர்களின் மேற்கண்ட கோரிக்கைகள், தமிழ்நாட்டில் அனைத்துப் பிரிவு தமிழ்த்தேசியர்கள், தமிழ்மொழி, இன உணர்வாளர்கள், மண்ணின் மக்கள் அனைவரின் கோரிக்கைகளும் ஆகும்!
தி.மு.க. ஆட்சி தனது ஐந்தாண்டை நிறைவு செய்யும் நிலையில், 2025-26 ஆண்டில், இக்கோரிகைகளை நிறைவேற்றி, தமிழ் - தமிழர் - தமிழ்நாடு காப்புக்குத் தக்க பணிகளை நிறைவேற்றித் தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பெ. மணியரசன்
தஞ்சாவூர்,
==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
======================================

Saturday, April 26, 2025

காஞ்சி சங்கர மடத்தின் இளம் பீடாதிபதியாக, தெலுங்கு திராவிட பிராமணர் கணேச சர்மா திராவிட் நியமனம்!ஐயா பெ. மணியரசன்



காஞ்சி சங்கர மடத்தின் இளம் பீடாதிபதியாக,
தெலுங்கு திராவிட பிராமணர்
கணேச சர்மா திராவிட் நியமனம்!

பல் இளிக்கிறது பகுத்தறிவுத் திராவிடம்!

ஐயா பெ. மணியரசன்


ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
====================================
“தமிழன் என்றால்” எனக்கும் தாய்மொழி தமிழ்தான் என்று கூறிக்கொண்டு பிராமணர்களும் தங்களைத் தமிழர்கள் என்று நம்மோடு சேர்ந்து நம்மைக் குழப்பிவிடுவார்கள். ஆனால், “திராவிடர்” என்றால் பிராமணர்கள் அந்த இனப் பெயரை ஏற்க மாட்டார்கள். எனவே, தன்மானமுள்ளவர்கள் தங்களைத் திராவிடர்கள்” என்று கூறிக் கொள்ள வேண்டும், தமிழர் என்று கூறிக் கொள்ளக் கூடாது!”
மேற்கண்ட இனக் கண்டுபிடிப்பைச் செய்தவர் ஈ.வெ.இராமசாமி அவர்கள். தமிழர்களாகிய நாம் என்றைக்குமே நம்மைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டதில்லை. பிராமணர்கள்தாம் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வர்.
பல சான்றுகளுடன் ஈ.வெ.ரா. வின் திராவிடத் திணிப்பை மறுத்தோம். உடனே மாநிட இயல் ஆராய்ச்சி - இன - மொழியியல் ஆராய்ச்சிகளில் உலக வல்லுநர்களில் முக்கியமானவர்களாகத் “திகழும்” ஈ.வெ.ரா. வின் தமிழ்நாட்டுத் திராவிடர்கள் நம்மைப் பார்ப்பன முகவர்கள் என்று பரிகசித்தார்கள்.
நாங்கள் `மட்டைப் பந்து வீரர் - ராகுல் திராவிட் பிராமணர்தான்; மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரிப் பேராசிரியர் மணி திராவிட் பிராமணர்தாம்; 20-ஆம் நூற்றாண்டுக்கு முன் எந்தத் தமிழன் பெயரிலும் “திராவிட” ஒட்டுண்ணி ஒட்டி இருக்காது` என்று எல்வளவோ தருக்கம் செய்தோம்! ஈ.வெ.ரா. - கருணாநிதி பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்களோ நம்மைத்தான் கேலி செய்தார்கள். ஒரு காலத்தில், திராவிட இனவாதத்தை மறுத்த பேராசிரியர் த. செயராமன் அவர்கள் எமது தமிழர் கண்ணோட்டம் இதழில் பிரித்தானியக் கலைக் களஞ்சியத்திலிருந்து எடுத்து, “தென்னிந்தியப் பிராமணர்கள்தாம் “திராவிடர்கள்”; இப்போது மற்றவர்களும் சூட்டிக் கொள்ளும் அவலம் வந்துள்ளது” என்று கூறிய பகுதியையும் எடுத்துப் போட்டு விவாதம் செய்தோம்!
ஈ.வெ.ரா.வாதிகள் புகழும் பேரா. தொ. பரமசிவன் அவர்கள் ஒரு கட்டுரையில் “தென்னாடு வந்து குடியேறிய பிராமணர்களுக்குப் “பஞ்ச திராவிடர்கள்” என்று பெயர் எனக் கூறி இருந்ததை எடுத்துப் போட்டோம். ஆனால், ஈ.வெ.ரா - கருணாநிதி உயராய்வு மைய இரசிகர்கள் எதையும் சட்டை செய்யவில்லை! மயிலாப்பூர் பிராமணர் எஸ்.வி. சேகர், தி.மு.க. மேடையிலேயே ஏறி, நானும் பிராமணர்தான், நானும் திராவிடன்தான் என்று வெளிப்படையாகக் கூறினார். அப்போதும் இவர்களுக்கு உரைக்கவில்லை!
இன்று (26.4.2025) “இந்து தமிழ்திசை” நாளேடு போட்டுள்ள செய்தியைப் பாருங்கள்!
“காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீகணேச சர்மா திராவிட் நியமனம்!”
உள்ளே படித்தால்தான் கணேச சர்மா திராவிடர், ஆந்திர - தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று தெரிகிறது.
ஈ.வெ.ரா. - கருணாநிதி சூட்சுமம் புரிகிறதா, தமிழர்களே?
தமிழ்நாட்டில் வாழும் பலகோடி தமிழர்களாகிய மண்ணின் மக்கள் உளவியல் அளவில் தங்களை இரண்டாம் தரக் குடிமக்களாக உணர வேண்டும். தமிழ்நாட்டில் கர்நாடகத்திலிருந்தும் ஆந்திரத்திலிருந்தும் குடியேறிய கன்னட தெலுங்கர்களின் வாரிசுகள் தமிழ் மண்ணின் முதல்தரக் குடிமக்களாக உளவியல் ஊக்கம் பெற வேண்டும். இதுதான் ஈ.வெ.ரா. - கருணாநிதியின் சூழ்ச்சி!
இதுதான் இன்றும் திராவிடத்தை வலியுறுத்தும் தலைவர்களின் இனச் சூழ்ச்சி! உலகின் முதல் செம்மொழியான தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களே, உங்கள் தாய் மண்ணிலேயே உங்கள் இனத்தை இழிவுபடுத்தி, திராவிடத்தை உங்கள் தலையில் கட்டும் சூழ்ச்சியாளர்களை அடையாளம் காணுங்கள்! அசல் தமிழ் இனத்தில் பிறந்து ஆந்திர-கர்நாடக- மலையாளத் திராவிடத்திற்குக் காவல்காரர்களாகப் பணிபுரியும் கருங்காலிகளையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள்!
இதையும் படியுங்கள்!
வரலாற்று வழியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் தெலுங்கு, கன்னடம், மராத்தி, சௌராட்டிரம், உருது முதலியவற்றைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மக்களை நமது தமிழ்த்தேசியம் அயலாராகக் கருதவில்லை. மண்ணின் மக்களாக ஏற்கிறோம்; மதிக்கிறோம்! மரபுவழியில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு உள்ள உரிமை அவர்களுக்கும் உண்டு!
அதே வேளை, தமிழ்நாட்டின் ஆட்சி மொழி - கல்வி மொழி தமிழ் மட்டுமே! இரண்டாவது மொழிப் பாடமாக மட்டும் ஆங்கிலம் நீடிக்கலாம். தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளைக் கற்க விரும்புவோர்கள் கற்க வசதிசெய்து தரப்படும். ஆனால், அவை தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக - கல்வி மொழியாக ஆக முடியாது. ஆந்திர, கர்நாடக, கேரள மாநில மாநிலங்களில் காலம் காலமாக கோடிக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அங்கெல்லாம் தாய்மொழி உரிமை எதுவும் இல்லை!
பேரன்புடையீர்!
காஞ்சி சங்கரமடத்தின் வாரிசாகத் தெலுங்கு பிராமணர் அமர்த்தப்படப் போகும் அறிவிப்பில், அவர் பெயருடன் திராவிடம் ஒட்டி இருப்பதை நேற்றே தம் முகநூலில் வெளிப்படுத்தினார் நம் மதுரைத் தோழர் கதிர்நிலவன்.
ஆரியரின் அடுத்த வீட்டுப் பங்காளிகள் “திராவிடர்கள்” என நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அது உண்மைதான் என்பதற்கு காஞ்சி சங்கர மடமும் ஒரு சான்று!
நாள் : 26.04.2025
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================

 

Monday, April 21, 2025

அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!கி. வெங்கட்ராமன்




அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை
பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என். இரவி!


கி. வெங்கட்ராமன்



தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=========================================
ஆளுநரின் அத்துமீறலுக்குக் கடிவாளம் போட்டு, அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி, வரும் ஏப்ரல் 25 அன்று, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களின் கூட்டத்தைக் கூட்டி இருப்பதும், அதில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கல்விக்கான பல்கலைக்கழகத்தை அதிகாரப் போட்டிக் களமாக மாற்றி, தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்பைப பாழாக்குவது அப்பட்டமான மனிதப் பகைச் செயலாகும்!
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை அறிவித்து, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த்தானது, அரசமைப்புச் சட்ட உறுப்பு 200க்கு எதிரானது; கூட்டாட்சி முறைமைக்குப் பொருத்தமற்றது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தது. ஆளுநர் ஆர்.என். இரவியின் செயல் தனது பதவிக்கான விருப்பதிகாரத்தை தன் சொந்த விருப்பு வெறுப்புக்கும், தான் பின்பற்றும் தத்துவத்திற்கும் ஏற்ப வளைத்ததாகும் என்றும் உச்ச நீதிமன்றம் சாடியது.
உச்ச நீதிமன்றம் உறுப்பு 142இன் படியான தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்கலைக்கழக வேந்தர் பதவி தொடர்பான 10 சட்ட முன்வரைவுகளை ஆளுநர் கையெழுத்திட்டு நிறைவேறியதாகக் கருத வேண்டும் என்று தீர்ப்புரைத்து விட்டது. அதன் பொருள், இனி ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் இல்லையென உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு விட்டது என்பதாகும்!
இதற்கென்று தனி சட்டம் இயற்றி அறிவிப்பதென்பது சட்ட சடங்கே தவிர, அதற்கு மேல் ஒன்றுமில்லை! தமிழ்நாடு அரசும், அந்த 10 மசோதாக்கள் சட்டமாக இயற்றப்பட்டதாக அரசிதழில் அறிவித்துவிட்டது.
ஆரியத்துவ நெறியைத் தவிர, அரசமைப்புச் சட்ட நெறிமுறை எதற்கும் தான் கட்டுப்பட்டவர் அல்ல என்பதை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிற ஆளுநர் ஆர்.என். இரவி, இப்போது உச்ச நீதிமன்றம் தலையில் குட்டிய பிறகும் திருந்துவதாகத் தெரியவில்லை!
ஆர்.என். இரவியின் சட்டமீறலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் தங்கர் வலுசேர்க்கிறார். அவரும் தனது அரசமைப்புச் சட்ட பொறுப்பிலிருந்து மீறுவதைப் பற்றிச் சற்றும் கவலைப்படவில்லை.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களைத் தனது அதிகாரப் போட்டிக் களமாக ஆளுநர் மாற்றுவதால், யார் ஆணைக்குக் கட்டுப்படுவது என அறியாமல் துணைவேந்தர்கள் இக்கட்டில் வைக்கப்படுகிறார்கள். ஏற்கெனவே நிதி நெருக்கடி, ஊழல் முறைகேடுகள் போன்றவற்றால், நிலைகுலைந்துள்ள பல்கலைக்கழகங்கள் முற்றிலும் செயலற்றுப் போவதற்கே ஆளுநரின் இந்தச் சட்டமீறல் இட்டுச் செல்லும்.
பல்கலைக்கழகம் மற்றும் அவற்றில் இணைந்துள்ள கல்லூரி மாணவர்களின் கல்வி பாழாவதைப் பற்றி, சற்றும் கவலைப்படாமல், பாதிக்கப்படுவது பெரிதும் தமிழ்நாட்டு மாணவர்கள் தானே என்ற வன்மத்தோடு ஆர்.என். இரவி நடந்து கொள்கிறார். ஏற்கெனவே பட்டமளிப்பு விழாவுக்கு நாள் கொடுக்காமல், ஆண்டுக்கணக்கில் காலம் தாழ்த்தி பல்லாயிரக் கணக்கான மாணவர்கள், உரிய காலத்தில் பட்டச் சான்றிதழ் பெற முடியாமல், அதனால் வெளிநாட்டுப் பணி வாய்ப்பையும், மேல் படிப்பு வாய்ப்பையும் இழந்ததையும், பற்றி கொஞ்சமும் கருதிப் பார்க்காமல் கடந்து சென்றவர்தான் ஆர்.என். இரவி!
சட்டப்புறம்பாக ஆளுநர் ஆர்.என். இரவி கூட்டியுள்ள கூட்டத்தை, பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆளுநரின் இந்தச் சட்டமீறலுக்கு எதிரான அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என். இரவி அப்பட்டமான இந்தச் சட்டமீறல் கூட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துகிறேன்.
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT