உடனடிச்செய்திகள்

Sunday, May 4, 2025

*சாதிக் கொலைகள் !* *நோய் நாடி நோய்முதல்நாடி!* பெ.மணியரசன்

 



*சாதிக் கொலைகள் !*
*நோய் நாடி நோய்முதல்நாடி!*

பெ.மணியரசன்



பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=============================================
கூலிக்கொலைகள் ,சாதிக்கொலைகள், குடும்பக் கொலைகள் மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
பள்ளி ,கல்லூரி மாணவர்களின் புத்தகப் பைக்குள் வீச்சரிவாளும் வெட்டுக்கத்தியும் இருக்கின்றனவா என்று சோதித்து மாணவர்களை கல்வி நிலையத்துக்குள் அனுமதிக்கும் அவலம் இன்று தமிழ்நாட்டில் நிலவுகிறது.
கடந்த 29 .04.2025 நாளேடுகளில் ஒரு சாதிக் கொலை செய்தி வந்தது. நிகழ்வு பழையது .
உச்ச நீதிமன்றம் சாதி கொலைகாரர்களின் வாழ்நாள் சிறைத் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பு வந்திருந்தது .
தினத்தந்தி நாளேடு( 29 .4 .2025) மிகவும் விரிவாக அக்கொலை நிகழ்ந்த முறையை எழுதியிருந்தது.
தொலைக்காட்சிகளும் விரிவாக மேற்படி சாதிக்கொலைகளை விவரித்தன.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள புதுகூரைப்பேட்டையைச் சேர்ந்த பட்டியல் வகுப்புப் பொறியாளர் (அகவை 25 ) முருகேசனும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கண்ணகியும்( அகவை 22 )காதலித்து- பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு வெளியூரில் குடும்பம் நடத்தினர் .
அவர்களை ஏற்றுக் கொள்வதாகப் பொய்கூறி ஏமாற்றி அழைத்து வந்து கண்ணகியின் பெற்றோரும் உற்றார் உறவினரும் ஊர் மக்கள் முன்னிலையில்( 8 .7. 2003) அன்று கண்ணகியையும் முருகேசனையும் நிறுத்தி இருவர் -ஆடைகளை களைந்து சாணி போன்ற கழிவுகளைக் கரைத்து ஊற்றி இருவர் முகத்திலும் காரித் துப்பி உயிர் கொல்லி நஞ்சுக் கரைசலை இருவர் மூக்குக்குள்ளும் காதுகளுக்குள்ளும் கொட்டி துடிக்கத் துடிக்க சாகடித்தார்கள்! இரசித்தவர்கள் இரசித்தார்கள்; துக்கப்பட்டவர்கள் வெளிக்காட்டாமல் மனதிற்குள் வேதனைப்பட்டார்கள். துக்கத்தை வெளிப்படுத்தினால் சாதிய வெறியர்களின் அடி உதை பரிசாக கிடைத்திருக்கும்.
இந்த இரட்டை படுகொலை விருத்தாசலம் காவல்துறையினருக்குத் தெரிந்திருக்கிறது .மேல் சாதி ஆதிக்க வெறியில்இருந்த விருத்தாசலம் ஆய்வாளர் செல்லமுத்து உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் இருவரும் இக்கொலை குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வில்லை .எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .
பத்து நாட்கள் கழித்து இப் படுகொலைகள் நாளேடுகளில் வந்துள்ளன . அதன் பிறகு காவல்துறையினர் ஒப்புக்கு கண்ணகி உறவினர்கள் 4 பேர் -முருகேசன் உறவினர் 4 பேர் என "சம நீதி- வழங்கி வழக்குப் பதிந்து சமூகநீதி காத்து " கைது செய்கின்றனர்.
தன்னார்வ அமைப்புகள் நடந்த உண்மைகளைப் போட்டு உடைக்கின்றன. மனச்சான்றுள்ள மனிதர்கள் அனைவரிடமும் ஆத்திரம் பொங்குகிறது .
2004 ஆம் ஆண்டு இவ்வழக்கு இந்திய அரசின் காவல்துறை (சிபிஐ) விசாரணைக்கு மாற்றப்படுகிறது.
இதில் முக்கிய மிக கொடிய குற்றவாளியான- கண்ணகியின் அண்ணன் மருது பாண்டியனுக்குத் தூக்கு தண்டனையும்- கண்ணகியின் தந்தை துரைசாமிக்கும் மற்றும் 9 பேருக்கும் தலா 3 வாழ்நாள் தண்டனையும்- ஆய்வாளர் செல்லமுத்து உதவியாளர் தமிழ்மாறன் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
அண்மையில் தஞ்சை மாவட்டம் நடுக்காவேரி காவல்நிலையப் பெண் ஆய்வாளர் சாதியப் பாகுபாட்டுடன் நடந்து கொண்டதால் படித்த பட்டியல் வகுப்புப் பெண் காவல் நிலையம் முன்பாகவே நஞ்சருந்தி இறந்தார். என்ன கொடுமை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் கண்ணகி முருகேசன் கொலை வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை வாழ்நாள் தண்டனையாக குறைத்தது .காவல் உதவி ஆய்வாளர் தமிழ் மாறனின் வாழ்நாள் தண்டனையை இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையாகப் குறைத்தது .மற்றவர்களின் வாழ்நாள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேலும் முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான் ஷீ துலியா ,பிரசாந்த் குமார் அமர்வு 28.04.2025 அன்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. மிகக் கடுமையாக காவல்துறை அதிகாரி செல்லமுத்துவையும் சாதி ஆதிக்க வெறியர்களான கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்களையும் சாடி உள்ளது உச்சநீதிமன்றம் .
இதற்கு முன் தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டகை பகுதியில் இதேபோன்று பிற்படுத்தப்பட்ட பெண்ணுக்கும் -பட்டியல் வகுப்பு இளவரசன் ஆணுக்கும் காதல் ஏற்பட்டதால் பட்டியல் வகுப்பாரின் மூன்று வீதிகளில் வீடுகளை முழுமையாக மேல் சாதியார் எரித்து சாம்பல் ஆக்கினர். உடுமலைப்பேட்டை கடைத்தெருவில் சங்கர் என்ற பட்டியல் வகுப்பு இளைஞரை சாதிவெறியர்கள் வெட்டிப் படுகொலை செய்தார்கள் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்ததுதான் சங்கர் செய்த குற்றம்! அதற்கு முன் சேலம் ஓமலூர் பட்டியல் வகுப்பு பொறியியல் பட்டதாரி கோல் ராஜ் படுகொலை செய்யப்பட்டார். பிறப்படுத்தபட்ட பட்டதாரி பெண்னை காதல் செய்த குற்றம்!
கடந்த ஆண்டு நாங்குநேரியில் பட்டியல் வகுப்பு மாணவன் தன்னோடு படிக்கும் மேல் சாதி மாணவர்களுக்கு பீடி, சிகரெட் ,தின்பண்டங்கள் ,வாங்கித் தர மறுத்ததற்காக அம்மாணவனையும் அவன் சகோதரியையும் வெட்டி காயப்படுத்தினர் மேல் சாதிஆதிக்க வாத மாணவர்கள் . அதே மாணவன் மீண்டும் அதே சாதி வெறியர்களால் அண்மையில் தாக்கப்பட்டுள்ளார் .
பள்ளி ,கல்லூரி மாணவர்களின் இடையே பொதுவான நட்புமும் பழக்கமும் இருந்த காலம் மலையேறிவிட்டது. அவர்கள் தங்கள் -தங்கள் சாதிகளுக்கு என்று தனி அடையாளமுள்ள கயிறுகளைக் கைகளில் கட்டிக் கொண்டு சாதி அடிப்படையில் மட்டுமே நட்புக் கொள்கிறார்கள். சாதி முகாம்களாகவே பள்ளிப் பிள்ளைகள் பிரிந்து படிக்கிறார்கள் என்ற கொடுமையைக் கேட்கும் போதே காதுகளில் வலி -நெஞ்சில் சூடு ஏறுகிறது !
தினமணி நாளேட்டில் 28.04 2025 அன்று ஒரு சிறப்புக் கட்டுரை! அதில் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் போடுவதில்
மாணவர்கள் காட்டிய சாதி ஆணவங்கள்- வெறிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் பழிக்குப்பழி வாங்கும் உறுமல்களுடன் சாதி மோதல்களை தூண்டும் ரீல்ஸ்கள் ஏராளம் !
இதனால் காவல்துறை 464 பக்கங்களை சமூக ஊடகங்களில் மூடி உள்ளது.
தமிழ்ச் சமூகம் பண்பாட்டுத்துறையில் வளர்ச்சி அடையாமல் கடந்த காலத்தை விடவும் கொடுமையாகவும் ,சாதி வெறி உணர்வுகளுடன் - சாதி படுகொலைகளுடன் பின்னோக்கிப் போவது ஏன் ?
இது என்ன சமூக இயங்கியல் ?
எந்திர வளர்ச்சியின் பயன்கள் எல்லோருக்கும் கிடைக்கின்றன. கொலம்பியாவில் உள்ள பேரக் குழந்தைகளை குற்றாலத்தில் உள்ள தாத்தாவும் பாட்டியும் கைபேசியில் நேருக்கு நேர் பார்த்து கொஞ்சிக் கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட வளர்ச்சிகள் எல்லா சாதிகளுக்கும் கிடைக்கின்றன !
கல்வி வசதியும் அப்படியே அனைத்து சாதியினருக்கும் கிடைக்கின்றது .
ஆனால் சாதி உயர்வு தாழ்வு மனித மனத்தில் பேயாட்டம் போடுவது ஏன் ?
"யாதும் ஊரே யாவரும் கேளிர் (உறவினர் )"என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழ் முன்னோர்கள் சொன்னார்கள் என்று பெருமைப்பட்டுகொள்கிறோம் .
பிறப்பால் அனைவரும் சமம் என்று ஆசான் திருவள்ளுவப் பெருந்தகை சொன்னார் என்கிறோம்.
அவர்கள் வழிவந்த இந்த தமிழ்ச் சமூகம் இன்னும் திருந்தவில்லையே!
சாதி தீவிரவாதத்தில் இறங்கிச் சீரழிகிறதே! ஏன் ?
*சாதிகள் இல்லையடி பாப்பா!* *குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"* என்றார் பாரதியார்"
*"இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே "* என்று சாடினார் பாவேந்தர் பாரதிதாசன்!
இங்கு ஏன் இன்றும் சாதி வெறி?
காந்தியடிகளும் காங்கிரசாரும் சமத்துவம் பேசி, சகோதரத்துவம் வளர்த்த நாடு இது என்று பெருமை பேசுகிறார்கள்!
இங்கு ஏன் இவ்வளவு கொடிய சாதி வெறித் தாண்டவம் !அதுவும் உழைக்கும் பட்டியல் வகுப்பு மக்களுக்கு எதிராக!
தென் ஆப்ரிக்காவில் வெள்ளை இன ஆதிக்க வெறியர்கள் நம்மைப் போல் பிறப்பு உயர்வு தாழ்வில் இவ்வளவு கொலை வெறியோடு நடந்து கொண்டிருப்பார்களா? ஐயமே !
ஈவேராவும் திராவிடமும் சமூக நீதியை நிலைநாட்டி - உலகிற்கே சமத்துவ ஒளி வீசி வழிகாட்டிக் கொண்டிருக்கிறது திராவிடம் என்கிறார்களே !இங்கு ஏன் இவ்வளவு கொடிய சாதிப் படுகொலைகள்! சாதிப் பகையாட்டம்?
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதைக் கைவிட்டு -தமிழர்களைப் பிடித்தாட்டும் சாதி உளவியல் நோயை களைய வழி என்ன என்று சிந்திப்போம் !
*நோய் நாடி* *-நோய்முதல் நாடி!*
நம்முடைய பேராசான் திருவள்ளுவப் பெருந்தகை கூறியது போல் இக்காலத்திலும் இச்சாதி நோய் பரவியதற்கான மூல காரணத்தை ஆராய்வோம்!
இப்போது பிறப்பு அடிப்படையில் உழைப்புப் பிரிவினை இல்லை!
சாதி அடிப்படையில் தொழில் பிரிவினை இல்லை!
எல்லா சாதியினரும் அதிகமாகக்
கற்றிருக்கிறார்கள்.
கிராம நிர்வாக அலுவலர் முதல் தலைமைச் செயலாளர் வரை எல்லாப் பதவிகளிலும் சாதித் தடை இன்றி எல்லோருமே இருக்கிறோம் .
தொழிற்சாலைகளில்- அலுவலகங்களில் எல்லா சாதியினரும் பணிபுரிகிறோம் !
உணவகங்களில் சாதிஒதுக்கீடில்லாமல் எல்லோரும் எல்லா இருக்கைகளிலும் உட்கார்ந்து உண்ணுகிறோம் !
ஆனால் பள்ளிக்கூடங்களில் சாதிக் கயிறு கட்டிக் கொண்டு மாணவர்கள் தனித்தனித் தொகுப்பாக உட்கார்வது ஏன் ?
வர வர சாதிப் பிரிவுகளில் அகலம் - ஏற்ற இறக்கம் குறைவதற்கு மாறாக அதிகமாவது ஏன்? சாதி அரசியல் கட்சிகள் பெருகியது ஏன் ?
அனைத்து சாதியினருக்குமான பொதுக் கட்சிகள் போல் தோற்றம் அளிப்பவை அனைத்தும் சாதி வாக்கு வங்கிகளைச் சார்ந்திருப்பது ஏன் -அவற்றை ஊக்கப்படுத்துவது ஏன் ?
சாதி அடிப்படையிலேயே பொதுக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் அமர்த்தப்படுவது அல்லது தேர்வு செய்யப்படுவது ஏன்?
இப்படிப்பட்ட உள்முகச் சாதிவாதம் காங்கிரசு, திமுக ,அதிமுக, போன்ற பல கட்சிகளில் பளிச்சென்று தெரிகிறது. ஆனால் சிபிஜ, சிபிஎம் போன்ற கம்யூனிஸ்டுக் கட்சிகளிலும் இந்தச் சாதிவாதம் தொற்றிக் கொண்டது எப்படி!
தமிழ்த் தேசிய அமைப்புகளையும் இந்த "சாதிவாதம்" விட்டு வைக்காது!
இன்னொரு அதிர்ச்சிச் செய்தியும் இருக்கிறது .சாதிவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பட்டியல் வகுப்பு சாதிப் பிரிவுகளுக்கிடையே கடுமையான சாதி உயர்வு தாழ்வு நிலவுகிறது !அவர்களுக்கு இடையேயும் ஒற்றுமை இல்லையே ஏன் !
இவற்றுக்கெல்லாம் தீர்வு என்ன? தமிழர்களிடையே சமத்துவமும் ஒற்றுமையும் வளர வழி என்ன?
தேடுவோம்! (தொடரும்)
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
======================================

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT